7.6.25

ஷ்ரவன் சிங் என்ற 10 வயது சிறுவன், மற்றும் நான் படிச்ச கதை

 

வெயிலில் தவித்த வீரர்களுக்கு உதவிய பஞ்சாப் சிறுவன்: பரிசு கொடுத்து கவுரவித்த ராணுவம்

சண்டிகர்: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நாட்டை காத்த வீரர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக தண்ணீர், பால், லஸ்சி கொடுத்து உதவிய சிறுவனை, ராணுவ உயர் அதிகாரி நினைவுப்பரிசு கொடுத்து பாராட்டினார்.  'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையில், நமது ராணுவ வீரர்கள் இரவு பகல் பாராமல் பாதுகாத்து வந்தனர். அவர்களுக்கு, அப்பகுதி மக்கள் ஒத்துழைப்பு வழங்கி ஆதரவு அளித்தனர்.  பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூர் மாவட்டத்தின் தாரா வாலி என்ற கிராமத்திலும் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் ராணுவ வீரர்கள் நாட்டை பாதுகாத்து வந்தனர்.  அதனை பார்த்த அக்கிராமத்தை சேர்ந்த ஷ்ரவன் சிங் என்ற 10 வயது சிறுவனுக்கு, அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அந்தச் சிறுவனுக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது.  இதனால், பயப்படாமல் அவர்கள் அருகில் சென்ற அந்த சிறுவன், அவர்களுக்கு பால் , லஸ்சி, தண்ணீர் மற்றும் ஐஸ் கிரீம் உள்ளிட்டவற்றை அவர்களுக்கு வழங்கினார். அதனை வீரர்களும் சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டனர். இதனை ஒரு நாள் மட்டும் செய்யாமல் தொடர்ந்து செய்து வந்தான்.  இதனையறிந்த ராணுவத்தின் காலாட்படையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ரஞ்சித் சிங் மன்ரல் சிறுவனை அலுவலகத்திற்கு வரவழைத்து, நினைவுப்பரிசு வழங்கியதுடன், விருந்து அளித்து கவுரவித்தார். சிறுவனுக்கு விருப்பமான ஐஸ்கிரீமையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.  இதனையறிந்த சிறுவனின் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

====================================================================================================


==============================================================================================

நன்றி JKC ஸார்.

==============================================================================================


 

நான் படிச்ச கதை (JKC)

எண்டே பேரு சுந்தரப் பணிக்கர்

கதையாசிரியர்: 

 

ஒரு சின்ன சஸ்பென்ஸ். ஆசிரியரை ஊகியுங்கள். ஆசிரியர் பெயர் கதையில் வருகிறது.  ஊகம் சரியா என்று கடைசியில் பாருங்கள். கதை ஒரு வித்தியாசமான கதை.

 “காலமதில் கடியரவம் விடமும் ஏறா

கடுந்தீயின் சூடேறா சலமுங் கொல்லா

ஞாலமத்தில் சமாதிபெற மண்ணும் தின்னா

நடுவானவன் உன்னருகில் வரவே மாட்டான்”

“வேலனைய கத்திவாள் வெட்டுமேறா

விடந்தலை மேல் கொண்டவனும் விமலி

சீலமுடன் ஞானப் பால் தந்து காத்தே

ஈரெட்டாம் வயதுமெப் போதிருந்து வாழ்வாய்!”

– கோரக்கர்.

காலை மணி எட்டிருக்கும். காலிங் பெல் சத்தம், போய் திறந்து பார்த்தால் ஒரு யுவனும் யுவதியும் நின்றிருந்தார்கள். அந்த யுவன் கையில் ஒரு தோல் பேக்.

“என் பேரு சுந்தராணு. சுந்தர பணிக்கர். இது எண்ட பார்யா. ” என்று பாதி மலையாளம் பாதி தமிழில் பேசிய அந்த இளைஞனை மேலும் கீழும் பார்த்தேன். பார்த்தாலே கேரளம் என்று தெரியும் படியான தலைமுடி, நிறம். ஆனால் ஆள் ரொம்ப மாடர்னாக ஆடை அணிந்திருந்தான். “வாங்க உள்ளே வந்து உக்காருங்க” என்று உள்ளே அழைத்தேன்.

உள்ளே வந்த அவர்கள் சற்று தயக்கத்துடன் உட்கார்ந்தார்கள். “ஏதும் காப்பி டீ” என்று இழுத்த என்னைப்பார்த்து “ஏய்ய் அதொன்னும் வேண்டாம்.” என்று சொன்னான் அந்த யுவன். அதன் பிறகான உரையாடல்கள் ஆங்கிலத்தில் நிகழ்ந்தாலும் இங்கு தமிழில் தருகிறேன்.

“நீங்கள் தானே வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன்? கூளிமுட்டம் கிருஷ்ண சாஸ்த்ரிகளோட பேரன்?"

என் வியப்புக்கு எல்லை இல்லாமல் போயிற்று. என்னை இந்தப் பெயரிட்டு அழைத்ததும் ஏதோ FB நட்பு என்று நினைத்தேன். ஆனால் என் தாத்தா பெயரைச் சொன்னது தான் எனக்கு வியப்பளித்தது. கிட்டத்தட்ட தர்பண நாட்கள் தவிர நானே மறந்திருந்த பெயர்.

கிருஷ்ண சாஸ்திரி என் தாத்தா. சொந்த கிராமம் பாலக்காடு அடுத்த ஒரு கிராமம். ஆனால் பல காலம் வாழ்ந்து மறைந்தது கோவை. அவர் ஒரு தேர்ந்த ஜோசியர் என்று என் பாட்டி சொல்லக் கேள்வி. மலையாளம் தவிர, சம்ஸ்க்ருதம், ஆங்கிலம் தமிழ் என்று மூன்று மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். கோவையின் பிரபல பணக்காரர்களுக்கு அவர்தான் ஜோசியர் என்று பாட்டி சொல்லியிருக்கிறாள்.

நாங்கள் கோவை விட்டு சென்னை வந்தது, பிறகு தில்லி சென்றது, நான் அங்கிருந்து லக்னோ கான்பூர் சென்றது, பின்னர் நாங்கள் எல்லாரும் திரும்பவும் சென்னை வந்து தாம்பரம் அருகில் செட்டில் ஆனது என்று ஒரு பெரிய பயணத்தில் தாத்தா பற்றி மறந்தே போயிருந்தது.

“ஆமாம். ஆனா உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும்?”

“அது ஒரு பெரிய கதை. உங்கள் கூளிமுட்டம் கிராமம் போய் அங்கிருந்த உங்க குலதெய்வம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும் பெரியவரிடம் விசாரித்து உங்கள் அண்ணா மற்றும் உங்கள் அட்ரஸ் கேட்டு வந்திருக்கோம்”

“சொல்லுங்க என்ன விஷயம்? “

“ஒண்ணும் இல்லை. உங்களுக்குச் சேர்ந்த ஒன்றை உங்ககிட்ட ஒப்படைக்க வந்திருக்கோம். உங்கள் தாத்தாவும் என் தாத்தாவும் பால்ய சிநேகிதர்கள். உங்கள் தாத்தா என் தாத்தாவுக்கு அந்தக் காலத்தில் ஒரு பெரிய உதவி செய்தாராம். பணமாக. சுமார் இருவதினாயிரம் ரூபாய். அதையும் சில புத்தகங்களையும் பழைய போட்டக்களையும் என் தாத்தா உங்களிடம் கொடுக்கச் சொன்னார். உங்கள் அண்ணாவிடம் தான் முதலில் சென்றோம். அவருக்கு ஏனோ என் மீது நம்பிக்கை வரவில்லை. அதனால் தான் உங்களிடம் வந்தோம். அன்றைய இருவதினாயிரம் ரூபாய் இன்றைக்கு பல லட்சம் பெறும். அதனால் இதில் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் இருக்கிறது. இது உங்கள் சொத்து. தயவு செய்து வாங்கிக்கொள்ள வேண்டும். அப்புறம் நீங்கள் விரும்பினால் உங்கள் அண்ணாவோடு ஷேர் செய்து கொள்ளுங்கள். ” என்று சொல்லி தன் கையில் வைத்திருந்த தோல் பையைக் கொடுத்தான்.

அதைத் திறந்து பார்த்தேன். உள்ளே இரண்டாயிரம் ரூபாய் கட்டுகள். உடன் சில புத்தகங்கள். சில போட்டோக்கள். அதில் என் தாத்தா! அவரோடு அவர் வயதொத்த ஒரு மனிதர்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்களா? ஆனால் ஒன்று மட்டும் சங்கேதமாகப் புரிந்தது. எனக்கு அன்றைய தேதியில் அதே தொகை தேவையாக இருந்தது. ஒரு மருத்துவச் செலவுக்காக. என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். இதோ கடவுள் அதைக் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

இருந்தாலும் இவ்வளவு பெரிய தொகையை என்ன ஏது என்று கேட்காமல் வாங்க மனம் இடம் கொடுக்கவில்லை.

“என் தாத்தாவுக்கும் உங்கள் தாத்தாவுக்கும் எப்படிப் பழக்கம்? ஏதாவது தெரியுமா?” என்றேன்.

“உங்கள் தாத்தா பெரிய ஜோசியர். என் தாத்தாவுக்கு ஜோசியம் சொல்லித் தந்தாராம். பிறகு மும்பை பக்கம் சென்று பிழைத்துக்கொள் என்று அந்தப் பணத்தையும் தந்தாராம். அதைக் கொடுக்கத் தான் வந்தோம்.”

நான் தயக்கத்தோடு அந்தப் பையைப் பார்த்தேன். ” கூச்சப்படாமல் எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு சில புத்தகங்களும் இருக்கு. உடல் நலம் காப்பதற்காக. உங்களுக்கு உபயோகப்படும் ” என்று புன்னகைத்தவன் “எங்களுக்கு நேரமாகிறது நாங்கள் வருகிறோம்” என்று எழுந்தான். அவன் மனைவியும் எழுந்தாள்.

அவன் என்னருகில் வந்து "என்னை நம்பி இதை வாங்கிக்கொண்டதற்கு நன்றி” என்று சொல்லி கை கொடுத்தான். நான் அவன் கையைக் குலுக்கிய போது தான் பார்த்தேன் அவனுக்கு வலது கையில் ஆறு விரல்கள். அதுவும் இரண்டு கட்டை விரல். நான் சட்டென்று நிமிர்ந்து பார்த்தேன். அவன் இடது காதின் கீழ் ஒரு பெரிய சதுர வடிவ மச்சம்.

கை கொடுத்தவன் சட்டென்று கிளம்பிப் போனான். நான் பிரமைப் பிடித்தவன் போல கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன்.

அப்புறம் அந்தப் பையைத் திறந்து பணத்தை எண்ணிப் பார்த்தேன். சரியாக ஐந்து லட்சம்! ஆண்டவா!

அப்புறம் அந்தப் போட்டோக்களை பார்த்தேன். முதல் போட்டோவில் என் தாத்தாவும் அவர் நண்பரும். இரண்டாவது போட்டோவில் அவர் நண்பரும் அவர் மனைவி(யாகத் தான் இருக்கவேண்டும்).

அவர் கைகளை தன் கால் முட்டிகள் மீது வைத்து உட்கார்ந்திருக்க அவர் மனைவி நின்றிருந்தார். என் பார்வை தன்னிச்சையாக அவர் கைகளைப் பார்த்தது.

அவர் வலது கையில் ஆறு விரல். அதுவும் இரண்டு கட்டை விரல். உடனே அவர் முகத்தைப் பார்த்தேன். இடது காதின் கீழ் அந்த மச்சம் பாதி தெரிந்தது. குழம்பியபடியே அந்தப் பெண்மணியின் முகத்தைப் பார்த்தேன். அப்படியே உறைந்து போனேன். சற்று நேரம் முன்னர் என் எதிரில் உட்கார்ந்திருந்த அதே பெண்ணின் முகம்.

போட்டோவின் கீழே இருந்த பெயர்களைப் பார்த்தேன். 1950ஆம் வருஷத்து தேதி போட்டிருந்தது. அருகில் சுந்தர ராம பணிக்கர் – லலிதை என்று பிரிண்ட் ஆகியிருந்தது.

எனக்கு வேர்க்க ஆரம்பித்தது. ஒன்றும் புரியாத ஒரு கயிற்றரவ நிலையில் அந்தப் பையில் இருந்த புத்தகத்தை எடுத்தேன்.

அதில் கோரக்கர் காயகற்பம் என்று பெரிய எழுத்துக்களில் எழுதியிருந்தது.

பின்னுரை.

ஆசிரியர் யார் என்று sirukathaigal.com இல் சென்று பார்க்காதவர்களுக்கு:

ஆசிரியர் பெயர் : சி.ஆர்.வெங்கடேஷ்.

Coolimuttam Radhakrishnan Venkatesh (//“நீங்கள் தானே வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன்? கூளிமுட்டம் கிருஷ்ண சாஸ்த்ரிகளோட பேரன்?//)

இவரைப் பற்றிய விவரங்களுக்காக இணையத்தில் கூகிள் செய்தென். சி.ஆர்.வெங்கடேஷ் ஒரு தொழில் அதிபர். உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாட் காம் இன்ஃபோவேயை கட்டியெழுப்புவதில் அவர் மிகவும் பிரபலமானவர் என்று அறிமுகப்படுத்துகிறது. தொழில் அதிபர்களுக்கு சிறுகதை எழுத நேரமும் வாய்ப்பும் அமைவது கடினம்.. அதே சமயம் ஆர்.வெங்கடேஷ் ஒரு எழுத்தாளர் என்ற தகவலும் கிடைத்தது. இருவரும் ஒன்றா அல்லது வேறு வேறா, எற குழப்பத்தில் ஆசிரியர் பற்றிய குறிப்புகளை முன்னுரையில் தரவில்லை.

கதையின் அடிப்படை சித்தர்களின் புரியாப் பாடல்கள் மற்றும் புதிர்கள். ரசவாதம், காயகற்பம் போன்ற மனிதனின் பேராசைகள் கட்டுக்கடங்கா சித்தர் பாடல்களில் விடை தேடும் ஒன்று. இத்தகைய சித்து ஒன்று “ரசவாதம்” என்ற சமுத்திரம் எழுதிய கதையில் நாம் முன்பே கண்டிருக்கிறோம்.

“காயகற்பம்” இக்கதையின் கருப்பொருள். கதையின் கருத்தை எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். வந்தவர் சுந்தர பணிக்கர் தாத்தாவோ, அல்லது பேரனோ என்று அவரவர்க்கு தோன்றியபடி கற்பனை செய்து கொள்ளலாம்.

எனக்கு தோன்றிய முரண்பாடுகள் இரண்டு.

  1. காயகற்பம் என்பது உண்மை, வந்தவர்கள் காயகற்பம் எடுத்துக்கொண்டவர்கள் என்றால் அவர்களுடைய உறவினர்/நண்பர்களுக்கு காயகற்பம் பற்றி தெரியாமல் போக வாய்ப்பில்லை.
  2. தாத்தா, பேரன் பற்றிய விவரங்களுக்கு மேல் அப்பா, அம்மா பற்றிய விவரங்கள் ஏதும் ஆசிரியர் தரவில்லை. ஏன்?

முடிவில் ரசவாதம், காயகற்பம் போன்றவை கற்பனையே அன்றி வேறில்லை என்பதை தற்காலம் ஏற்றுக்கொள்ளலாம். எதிர்காலத்தில் ஏதாவது நடக்கலாம்.

கதையின் சுட்டி

சுந்தர-பணிக்கர்

இவருடைய இந்தக்கதையும் உங்களுக்கு பிடிக்கலாம். சுட்டி கீழே

தேடினேன்-கிடைத்தது

இந்த இரண்டு கதைகளும் ஸ்ரீராம் எழுதியது போல் இல்லை??

 

14 கருத்துகள்:

  1. பாசிடிவ் செய்திகள் நன்று. கதையும் நன்று.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. மூன்று செய்திகளுமே நல்ல செய்திகள்.

    பஞ்சாப் சிறுவன் செய்த செயல் மனதை நெகிழச் செய்தது. சமத்துக் குழந்தை.

    ஜாக்கிசான் செய்தியும் சூப்பர்.

    ஸ்ரீ லக்ஷ்மிக்கு வாழ்த்துகள். இதே போன்று வேறொரு செய்தியும் கூகுள் காட்டியது சில நாட்கள் முன்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கதை என் நோக்கில், அமானுஷ்ய கதை.

    கோரேக்கர் பாடல் சொல்லும் விதத்தில், கதையை நோக்கினால், காயகற்பம் என்பதெல்லாம் உட்படுத்தலாம் என்றாலும், எனக்கு இது ஒரு அமானுஷ்ய கதையாகத்தான் பார்க்க முடிகிறது.

    விரல் என்பதெல்லாம் மரபு ரீதியாக, அல்லது கருவுற்ற காலத்தில் நிகழ்கும் சிலதால் வருவது. எங்கள் குடும்பத்தில் இப்படி ஆறு விரல்கள் உள்ளவர்கள் தாத்தா பேரன், அப்பா மகன் என்றும் இருக்கிறார்கள். முக ஒற்றுமை கொஞ்சம் இருந்தாலும்.

    காயகற்பம் என்றால், ஜெ கே அண்ணாவின் கேள்வி எழுதுவது சரியே.

    ஆனால் கதையில் அப்படியே மனைவியும் வருவது போலச் சொல்லியிருப்பதால், அமானுஷ்யமாகத்தான் பார்க்க முடிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நல்ல செய்திகள். அவர்களுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. நம்ப இயலாத கதை என்றாலும், சுவாரஸ்யமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​அதனால் தான் தேர்ந்தெடுத்தேன். கருத்துரைக்கு நன்றி.

      Jayakumar

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. இராணுவ வீரர்களுக்கு சேவை செய்த சிறுவனுக்கு வாழ்த்துகள்.
    ஜாக்கிசான் செய்த நற்செயலுக்கு வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. கதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. ராணுவ வீரர்களுக்கு உதவிய சிறுவனின் செயல் அபாரம். கோடை காலத்தில் தெருவில் நின்று கஷ்டப்படுமி டிராஃபிக் கான்ஸ்டபில்களுக்கு உதவ தண்ணீர் அல்லது, ஜுஸ். அல்லது மோர் வாங்கித்தர வேண்டும் என்று தோன்றும், செய்ததில்லை.

    பதிலளிநீக்கு
  11. சிறப்பான, வித்தியாசமான கதை. அமானுஷ்யம் என்றுதான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இந்த வார பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    இன்றைய கதையும் நன்று. இறுதி வரை சுவாரஸ்யமாக இருந்தது. கதை
    வெங்கடேஷ் ராதாகிருஷ்ணனின் பணத்தேவைக்கு தெய்வம் நின்று உதவியுள்ளது. பகிர்ந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!