சனி, 6 ஜூலை, 2024

திரும்ப வந்த 50,000 மற்றும் 'நான் படிச்ச கதை'

 


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


 நான் படிச்ச கதை (JKC)

இருளப்ப சாமியும் 21 கிடாயும் - வேல.இராமமூர்த்தி 

 

இவரைத் தெரிகிறதா? இரண்டாவது படம் மூலம் இவரை ஆதி குணசேகரன் (எதிர் நீச்சல் சன் டி வி) என்ற பாத்திரப்  பெயரால் அறிந்திருப்பீர்கள். கிரா, கோணங்கி, தமிழ்ச்செல்வன் பூமணி வரிசையில் இவரும் ஒரு கரிசல் காட்டு எழுத்தாளர்.   

எழுத்தாளராகக் கை கூப்பிச் சாதித்ததை விட, வில்லனாகச் சின்னத் திரை நடிகராகப் பாமர மக்களாலும்  அடையாளம் காணப்பட்டு வெற்றிகரமாக  விளங்கியவர் என்பதை இரண்டு படங்கள் மூலம் காட்டியிருக்கிறேன். 

வேல. இராமமூர்த்தி ராமாநாதபுரத்திற்கு அடுத்து உள்ள பெருநாழி என்ற கிராமத்தில் பிறந்தவர். பி யு சி வரை படித்துவிட்டு இராணுவத்தில் சேர்ந்து ரேடியோ ஆபரேட்டர் ஆக 5 ஆண்டுகள் பணி புரிந்து பின்னர் அஞ்சலகத் துறையில் பணி புரிந்து விருப்ப ஒய்வு பெற்றவர்.  

தற்போதைய வயது 72. இதுவரையிலும் ஆஸ்பத்திரியை எட்டிப்பார்த்தது கூடக் கிடையாது என்று பெருமை கொள்பவர். தினமும் உடற்பயிற்சி செய்யத் தவறுவதில்லை என்று கூறுகிறார்.

திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, பாலா போன்றோருடன் நல்ல பரிச்சயம் உண்டு. ஆகவே திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் சின்னத்திரைதான் இவரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது.  

குற்றப்பரம்பரை என்ற இவரது நாவல்  ஒரு காலத்தில் களவைத் தொழிலாகக் கொண்டிருந்த சமூகத்தின் வாழ்க்கை முறையை மையப்படுத்தி எழுதப்பட்ட அதியற்புதமான படைப்பாகும். குருதியாட்டம், பட்டத்து யானை, அரியநாச்சி என்பவை இவரது பிற நாவல்களாகும்.

முன்னுரை 

இந்தக்கதை சுதந்திரத்திற்கு முன் நடந்த ஒன்றாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. களவு என்பதும் ஒரு தொழில் என்ற நியாயம் கற்பித்துக் கொண்டு வாழும் ஒரு சமூகத்தின் மனப்பான்மையை சித்தரிக்கிறது. கதையின் முடிச்சு கதையின் கடைசி வரியில் இருக்கிறது. சிரிப்புத் தான் வரும். பிறவிக்குணம் மாறாது.  

கதை முழுதும் தரப்படவில்லை. சுருக்கம் மட்டுமே தரப்பட்டுள்ளது. கதையின் சுட்டி தந்திருக்கிறேன். சுட்டி இதோ

===>இருளப்ப சாமியும் 21 கிடாயும் வேல. இராமமூர்த்தி | அழியாச் சுடர்கள்<===

 இருளப்ப சாமியும் 21 கிடாயும் - கதைச் சுருக்கம்.


இருளாண்டித் தேவரை உப்பங்காற்று சிலு சிலுஎன உறக்காட்டியது. முளைக் கொட்டுத் திண்ணைக்கு என்று ஒரு உறக்கம் வரும். இருளாண்டித் தேவரின் இடதுகை மடங்கி தலைமாட்டில் பாந்தப்பட்டிருந்தது. இரண்டு தொடை இடுக்கிலும் வலது கையைக் கொடுத்திருந்தார். தொடை இடுக்கில் கிடந்த தழும்புகள் மேடு தட்டிக் கிடந்தன. கவுல்பட்டியில் ஆடு திருடப்போய் பிடிபட்டு பெருநாழி போலீஸார் கம்பியைக் காய வைத்து இழுத்தத் தழும்பு. 


பெருநாழிக்கு மேற்கே நாலாவது மைலில் கவுல்பட்டி. தெலுங்கு பேசுகிற ரெட்டிமார் ஊரு. வண்ணான் குடிமகனைத் தவிர்த்து எல்லோரும் ரெட்டிமார்கள் தான். சம்சாரிகளுக்கான எல்லாக் கோப்புகளும் உள்ள ஊர். வீட்டு வீட்டுக்கு உழவு மாடு. கிடை கிடையாக ஆடு, ஊரைச் சுற்றி பெரும்பெரும் படப்புகள். வாய் அகன்ற மண்பானை போல் ஊரணி. மாட்டுக்கும் மனுசருக்கும் அதுதான் குடிதண்ணீர். யாரும் கால், முகம் கழுவக் கூடாது. கட்டு செட்டான ஊர். களவுக்கு இடங்கொடுக்காத ஊர்.

பத்து பேர் எதிர்த்து வந்தாலும் அடித்து விரட்டுகிற வீரன் இருளாண்டித்தேவர். அன்றைக்குக் கவுல்பட்டி களவுக்குப் போனவர்களில் யாரும் குறைந்த ஆளில்லை. முருகேசத் தேவர், ஒத்தையிலே நின்னு ஊரையே அடிக்கிற தாட்டியன். அதே மாதிரி கந்தையாத் தேவர், நாகுத்தேவர், கருப்பையாத் தேவர், முத்துத்தேவர், சுந்தரத்தேவர், குருசாமித் தேவர் எல்லாரும் வீரவான்கள். இத்தனை பேரும் கம்பு கட்டி நின்றால் எந்தப்படையும் பின்வாங்கும்.

அன்றைக்குச் சாமத்துக்கு மேலே எல்லாரும் கிளம்பி வைரவன் கோயில் பொட்டல் ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்தார்கள். பின் நிலாக் காலம். ராத்திரி ஒரு மணிக்கு மேலே தான் நிலா கிளம்பும். எல்லோர் கையிலும் வேல் கம்பு. கனத்த செருப்பு, கருப்புப் போர்வை, குத்துக்காலிட்டு காத்திருந்தார்கள். வெகுநேரம் கழித்து கீச்ச்....’ என்ற சத்தத்தோடு ஆந்தை வலமிருந்து இடம் பாய்ந்தது.

இருளாண்டித் தேவர் எழுந்தார்.

வைரவன் உத்தரவு கொடுத்துட்டாரு ஒரு குறையும் வராது. எல்லாரும் கெளம்புங்க”. கிளம்பினார்கள், பத்துப் பேருக்கு மேல் இருக்கும். நிலா கிளம்பி விட்டது. நாலு மைலும் வண்டிப்பாதை. ரெண்டு பக்கமும் முள்ளுக்காடு. இருளாண்டித்தேவர் முன்னால் போனார். பேச்சும் சிரிப்புமாக நடந்தார்கள்.

இடையிலே ரெண்டுமூணு ஓடைக்காடு. முழங்காலுக்கு வண்டல் இறக்கியது. செருப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடைகளைக் கடந்தார்கள்.

குளிருக்குக் குன்னிப் படுத்திருக்கும் அனாதைக் கிழவி மாதிரி ஊர் உறங்கிக் கொண்டிருந்தது. ஊரை தெற்கே விட்டு, ஊரணிக்கு வடக்காக நடந்தார்கள். ஆட்டுக்கிடை ஊருக்கு வெளியே மந்தைக் காடுகளில்தான் கெடக்கும்.

யோவ்.... குருசாமித் தேவரே.... எட்டி நடங்க...”

ஊரணிக்கு வடக்கே நாலு புஞ்சை கடப்புக்கு ஆட்டுச் சத்தம் கேட்டது.

இருளாண்டித்தேவர் வலது கையை லாத்தி காட்டினார். எல்லோரும் வடக்காக எட்டி நடந்தார்கள்.

 

எல்லா ஆடுகளும் படுத்துக்கிடந்தன. ஒரு ஆடு புர்ர்ர்ர்.... ர்....ர்...’ எனத் தும்மியது. தென்கோடியில் ஒரு கயிற்றுக்கட்டில். உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை தெரியாமல் போர்த்திக்கொண்டு கிடைக்காரன் படுத்திருந்தான். கட்டிலில் ஒரு வேல்கம்பு சாத்தி இருந்தது. கட்டிலுக்கடியில் நாய். சுருட்டிப்படுத்திருந்தது.

‘நாய் படுத்திருக்கு.”

அடுத்த புஞ்சைப் பொழியில் எல்லாரும் பதுங்கி உட்கார்ந்தார்கள். வேல் கம்புகளைக் கிடத்தி விட்டு போர்வைகளை இறுக்கிப் போர்த்தினார்கள். வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டார்கள்.

தெற்கயும் மேற்கயும் யாரும் போகாதீங்க. வடக்க பாதிப்பேரும் கிழக்கப் பாதிப்பேரும் போகணும். சுருக்கா முடியணும்.”

வேல்கம்பை கையில் எடுத்துக் கொண்டார்கள். இருளாண்டித் தேவரோடு சேர்ந்து பாதிப்பேர் கிழக்கேயும், முருகேசத் தேவரோடு பாதிப்பேர் வடக்கேயும் பிரிந்தார்கள்.

பச்சைப் பனை ஓலையைக் கிழித்ததுபோல் குட்டி ஆடுகள் சிணுங்கின. சின்னச் சின்ன சத்தங்களோடு ஆடுகள் கிடந்தன. கிடைக்காரனும், நாயும் அசையவில்லை. நல்ல தூக்கம். நிலா வெளிச்சத்தில் ஆடுகளின் நிறம் தெரியும் அளவுக்கு நெருங்கி விட்டார்கள். சுந்தரத்தேவர் மறுபடியும் இருமலை நெஞ்சுக்குள் அமுக்கினார்.

புர்ர்...ர்...ர்என்று ஒரு ஆடு தும்மியது. பத்தடி நெருக்கத்திலேயே நின்று அவரவருக்குத் தகுதியான ஆடுகளை இனம் குறித்தார்கள். கிடாயாக இருந்தால் கறி நல்லா இருக்கும். பெருத்த கிடாயாக இருந்தால் தோளில் போட்டுக் கொண்டு நாலு மைல் தூரம் ஓட வேண்டும். இருளாண்டித் தேவரின் சைகைக்காக காத்திருந்தார்கள். கட்டிலில் படுத்திருந்த கிடைக்காரன் புரண்டு படுத்தான். நாய் அசையவில்லை. கிழக்கே இருந்து இருளாண்டித் தேவர் துண்டை வீசினார்.

அவரவர் குறித்து வைத்திருந்த கிடாய்களை நெருங்கி இடது கையால் வாயை இறுக்கிப் பிடித்தார்கள். வலது கையால் குரல்வளையை கடக்என நெறித்து ஒதுக்கி விட்டார்கள். கிடாய்கள் கால்களை உதறிய சத்தந்தான் லேசாய் கேட்டது. கத்த முடியவில்லை. கைக்கு இரண்டு கால்களைப் பிடித்துத் தூக்கி, துண்டைப் போர்த்துவதைப் போல் தோளில் போட்டார்கள்.

கிடைக்காரனுக்கும், நாய்க்கும் நல்ல தூக்கம். இடது கையால் ஆட்டுக் கால்களையும் வலது கையில் வேல் கம்பையும் பிடித்துக் கொண்டு லொங்கு... லொங்குஎன ஓடக் கிளம்பினார்கள். மூன்றாவது புஞ்சைப் பொழியைக் கடந்தால்தான் வண்டிப்பாதை. முருகேசத் தேவர் முன்னால் ஓடிக் கொண்டிருந்தார். தோளில் கிடந்த ஆட்டின் சூடு, இந்தக் குளிர்ந்த நேரத்தில் எல்லோருக்கும் இதமாக இருந்தது. வண்டிப்பாதைக்கு வந்து விட்டார்கள். யாரும் வாய் திறக்கவில்லை. ஓட்டம் குறைந்து ஓட்டமும் நடையுமாகப் போனார்கள்.

முத்துத்தேவரின் கழுத்தில் கிடந்த கிடாயின் குரல்வளை சரியாக நெறிபடவில்லை. ‘ம்மே... ம்மேய்... ம்மேம்...’ என்று கத்தக் கிளம்பி விட்டது. முத்துத்தேவரின் பிடி தவறியது. கிடாய் துள்ளவும் பிடியை விட்டு விட்டார்.

கீழே குதித்த கிடாய், ‘ம்  மே... மே... மேம்... ய்..’ என்று கத்தித் தீர்த்து விட்டது.

முத்துத்தேவர் சுதாரித்து, கிடாயின் குரல்வளையை கடித்துத் துப்பினார். கிடாய் சத்தம் நின்றது.

லொள்... லொள்... லொள்...’

இராஜபாளையத்தைக் கோம்பை கிளம்பி விட்டது. கிடை ஆடுகள் எல்லாம் கத்த ஆரம்பித்தன.  கிடைகாரன் போர்வையைச் சுருட்டி வீசிவிட்டு வேல் கம்பை கையில் எடுத்துக் கொண்டு ஊரைப் பார்த்துக் கத்தினான்.

ஏய்..... கள்ளன்... கள்ளன்.... ஓடியாங்க...”

இருளாண்டித் தேவரோடு சேர்ந்து எல்லோரும் வண்டிப்பாதையில் கெதியாய் ஓடினார்கள். முத்துத்தேவர் கடைசியாக வந்தார். வாயில் ஆட்டு ரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. முதல் புஞ்சைப் பொழியை நாய் தாண்டி விட்டது. ஊர் எழுந்து கொண்டது.

மணிப்பத்தா ஓடை வண்டலுக்குள் சதக்.. பொதக்.. என மிதித்து வெளியேறி ஓடினார்கள். நாய் ஒரு புஞ்சைக் கடப்பில் வந்து கொண்டிருந்தது. ஊர்ச்சனங்கள் கம்புகளோடும் ஆயுதங்களோடும் வண்டிப் பாதையில் திமு திமுஎன ஓடி வந்தனர்.

வேய் ரா.... வேய் ரா...”

நாய், வண்டலைக் கண்டதும் மலைத்து நின்று குரைத்தது. ஓடையின் தென்கரையில் கொஞ்ச தூரம் ஓடியது. வண்டல் மாறி தண்ணீர் தட்டுப்பட்டது. பாய்ந்து நீந்தி வடகரையில் ஏறிக் கிழக்கே வண்டிப் பாதையில் விரட்டி ஓடியது.

அதற்குள் முருகேசத் தேவர் கூட்டத்தினர் எட்டிப் போய்  விட்டார்கள். வைரவன் கோயில் பொட்டல் ஆலமரம்தான் இவர்களுக்குக் குறி. கெதியாக ஓடினால் ஒன்னுக்கு இருக்கும் நேரம்தான். எல்லையைத் தொட்டு விடலாம். அப்புறம் வெளியூரான் நெருங்க மாட்டான்.

நாய், நாலுகால் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது. கவுல்பட்டிச் சனம் மணிப்பத்தா ஓடையைக் கடந்து விட்டது.

வேய் ரா..... வேய் ரா....”

களவாணிப் பயலுகளை ஒரு தடவை ஊருக்குள் விட்டுவிட்டால் அப்புறம் ஒண்ணும் மிஞ்சாது. மனுஷன் குடியிருக்க நீதி இல்லாமல் போயிரும். இதுவரைக்கும் அக்கம்பக்கத்திலே, அடுத்த ஊரு மூணாவது ஊருலேதான் களவுபோனது. கவுல்பட்டிக்குக் களவாணிப்பயலுக வந்தது இதுதான் முதல் தடவை. அவிழ்ந்த தலைமயிரைக் கூட அள்ளி முடியாமல் பெண்கள் சேலையை ஏத்திச் செருகிக் கொண்டு ஓடி வந்தார்கள்.

வேய்  ரா... வேய்   ரா...”

கடைசியாகப் போய்க் கொண்டிருந்த முத்துத்தேவரை நாய் எட்டிக் கவ்வியது. வேட்டி பிடிபட்டது. முத்துத்தேவர் செருப்பை ஓங்கி நாயின் வாயில் அடித்தார். வேட்டியை விட்டுவிட்டது. போர்வையைக் கவ்வியது. பிடறியில் கிடந்த கிடாயை கீழே போட்டார். செருப்புக்களையும் கீழே போட்டார். போர்வையை உதறி விட்டார். வேல் கம்பு மட்டும் கையில் இருந்தது. நாய், நெஞ்சில் குதறியது. இடது கையால் நாயின் மூஞ்சியில் அடித்தார், வேல் கம்பை ஓங்கினார். வலது மணிக்கட்டை கவ்விக் கொண்டது. திமிர முடியவில்லை. வேல் கம்பு நழுவியது. இடது கையால் நாயின் மேல் வாயைப் பிடித்து, வாய்க்குள் மாட்டி இருந்த வலது கையை கீழே அமுக்கினார். நாய், பக்கத்து முள் வேலியில் விழுந்தது. குனிந்து வேல் கம்பை எடுப்பதற்குள் நாய் முதுகில் பாய்ந்தது. கீழே சாய்ந்தார்.

முன்னால் போனவர்கள் வெகு தூரம் போய்விட்டார்கள். பின்னால் ஊர் திரண்டு வந்து கொண்டிருந்தது.

வேய் ரா... வேய் ரா....”

நிலா வெளிச்சத்தில் சனம் வருவது தெரிந்தது.

நாயைப் புரட்டினார். கால் நகத்தால் உடம்பைப் பிறாண்டியது. நாயோடு முள் வேலியில் புரண்டார். பாளம் பாளமாய் முள் குத்திக் கிழித்தது. மறு புரட்டில் வண்டிப் பாதைக்கு வந்தார். மேலே கிடந்த நாயின் வாயெல்லாம் ரத்தம் ஒழுகியது. இரண்டு கைகளையும் நாயின் வாய்க்குள் கொடுத்துக் கிழித்தார்.

பலமான சத்தத்தோடு நாய் மல்லாக்க சரிந்தது. முத்துத் தேவரின் வாய், கை, உடம்பெல்லாம் ரத்தம்.

வேய் ரா... வேய் ரா...”

சனம் நெருங்கிக் கொண்டிருந்தது.

முத்துத்தேவர் எழுந்து வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டினார். போர்வையைக் காயங்களின் மேலே போர்த்திக் கொண்டார். கிடாயைத் தூக்கி தோளில் போட்டு, வேல் கம்பு, செருப்புகளை வலது கையில் எடுத்துக் கொண்டு கெதியாய் ஓடினார். வைரவன் கோயில் பொட்டல் ஆலமரம் நெருங்கித் தெரிந்தது.

மறுநாள், பெருநாழி போலீஸ் நிலையத்தில் கவுல்பட்டி கிராமமே வந்து நின்றது.

முதல்நாள் ராத்திரி களவுக்குப் போனவங்க, போகாதவங்க எல்லா ஆம்பளைகளுக்கும், போலீஸார் கம்பியைக் காய வைத்து துடிக்கத் துடிக்க, கதறக்கதற சூடு போட்டார்கள். கன்னத்திலே, தொடையிலே, கையிலே, கழுத்திலே, வயிற்றிலே, முதுகிலே என்று பலமாதிரி சூடு. அன்றைக்கு இழுத்த சூடுதான், இருளாண்டித் தேவரின் தொடை இடுக்கில் தழும்பேறிக் கிடந்தது.

—----------------------------------------------------------------------------------------------------------------------------

ஏய்ய்... நம்ம மூத்தவர் மகன் சேது வந்திருக்குதாம்...”

எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். சீட்டாட்டம், ஆடு புலி, வெட்டுச் சீட்டு, தாயக்கட்டம் எல்லாவற்றையும் கலைத்தார்கள். உறங்கிக்கொண்டிருந்த இருளாண்டித் தேவரையும் கந்தையாத் தேவரையும் எழுப்பினார்கள்.

எல்லோரும் கிளம்பி மூத்தவர் வீட்டுக்கு நடந்தார்கள்.

சேது, கால், முகம் கழுவி துடைத்துவிட்டு அப்பாவுடைய போட்டோவுக்கு முன்னால் நின்றான். அய்யாவின் நெற்றியில் குங்குமம் இட்டிருந்தது. உச்சிநத்தம் காசிநாதன்செட்டி வீட்டில் கன்னம் போட்டு களவாடப் போனபோது அந்த ஊர்ச் சனங்களோடு நடந்த சண்டையில் வெட்டுப்பட்டு அய்யா இறந்து போனார். சேதுவுக்கு அருகில் அம்மா நின்றது. படத்தில் இருந்த கணவரையும் பக்கத்தில் நின்ற மகனையும் மாறி மாறிப்பார்த்து அம்மா அழுதது. சேதுவுக்குக் கண்கலங்கிப் பார்வையை மறைத்தது. வீட்டு வாசலில் ஆள் அரவாட்டம் தெரிந்ததும் சேது திரும்பி வாசலைப் பார்த்தான்.

மருமகனே”.. கூட்டத்துக்கு முன்னால் முருகேசத் தேவர் நின்றார். சேது வாசலுக்கு வந்தான்.

கும்பிடுறேன் மாமா.. கும்பிடுறேன் சின்னய்யா.. கும்பிடுறேன் மச்சான்.. வாங்க எல்லாரும் வாங்க...”

கண்டதும் சேது, கையெடுத்துக் கும்பிட்டதில் எல்லோருக்கும் சந்தோஷம் தாங்க முடியலே.

எப்போ வந்தீங்கப்பூ...?”

இப்போதான் மாமா.”

அம்மா திண்ணையில் பாய்களை விரித்தது. எல்லோரும் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்கள்.

டூட்டி ஒப்புக்கொண்டுட்டீங்களா?” - நாகுத்தேவரின் கன்னத்தில் தழும்பு கிடந்தது.

நாளைக்குப் போயி ஜாய்ன்ட் பண்றேன் மாமா.”

எங்கே டூட்டி?” - குருசாமித் தேவரின் வலது கையில் தழும்பு இருந்தது.

பழனி பக்கத்திலே மடத்தாகுளம் போலீஸ் ஸ்டேசன்லே

சப்-இன்ஸ்பெக்டருதானே?” - கந்தையாத் தேவருக்குப் பிடறியில் தழும்பு.

ஆமாம், சின்னய்யா, ஒரு வருசம் ட்ரெயினிங் முடிஞ்சு... முதல் போஸ்டிங்

திண்ணையின் மூலையில், ஓரத்தில் உட்கார்ந்து இருந்தவர்கள் எல்லாம் எம்பி எம்பி சேதுவைப் பார்த்தார்கள்.

உடுப்பு போட லாயக்கான ஆளு.’ எல்லோருக்கும் பெருமை தாங்கலே.

உங்க அண்ணனை எங்கே காணோம்?”

எனக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை கெடைச்சா.. இருளப்ப சாமிக்குக் கிடாவெட்டி பொங்கல் வைக்கணும்னு அம்மா நேர்த்திக் கடன் வச்சதாம். அதுக்கு ஒரு கிடாக் குட்டி வெலைக்கு வாங்க அண்ணன் வெளியே போனாரு.”

முருகேசத் தேவர் கன்னத்தில் கிடந்த தழும்பைத் தடவிக்கொண்டே என்னது..! கிடாக்குட்டியை வெலைக்கு வாங்கப்போனாரா? பைத்தியக்காரப் பிள்ளைக. நம்ம வீட்டுப் பிள்ளைக்கு சப்-இன்ஸ்பெக்டர் உத்தியோகம் கெடச்சிருக்கு. நம்ம சனமெல்லாம் சேர்ந்து கொண்டாட வேண்டாமா? நம்ம குலதெய்வம் இருளப்பனுக்கு நாளைக் காலையிலே ஒரு கிடாய் இல்லே.. இருபத்தியோரு கிடாய் வெட்டுப்படுது.” என்றவர் திண்ணையில் இருந்த எல்லோரையும் பார்த்து ஏய்...ய்... வீட்டு வீட்டுக்கு ஒரு கிடாயைப் பிடிச்சுக் கொண்டு வந்து இங்கே கட்டுங்கடாஎன்று உத்தரவிட்டார்.

எதுக்கு மாமா.. வேண்டாம்...” சேது மருகி மருகி எல்லோரையும் பார்த்தான்.

கள்ள ஆடு இல்லே மருமகனே.. எல்லாம் நம்ம சொந்த ஆடு.”

சேதுவின் கண்களில் குபுக் என நீர் அடைத்தது. காலமெல்லாம் காயம் பட்ட சனங்கள். “தம்பி சேதூ... இந்தப் பயலுகளுக்கு ஒரு ஆசை...”

என்ன மாமா சொல்லுங்க

நீங்க சப்-இன்ஸ்பெக்ட்டர் உடுப்பு மாட்டிக்கிட்டு வந்து, கொஞ்ச நேரம் எங்க எல்லாரோடயும் உக்கார்ந்து பேசிக்கிட்டிருக்கணும்.”

முருகேசத் தேவரின் கைகளைச் சேது பிடித்துக் கொண்டான்.

இதோ வர்றேன் மாமா.” வீட்டிற்குள் போனான். எல்லோரும் உள்வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிறிதுநேரத்தில் சேது சப்-இன்ஸ்பெக்டர் உடுப்போடு திண்ணைக்கு வந்தான். எல்லோரும் பதறியெழுந்து, தோளில் கிடந்த துண்டைக் கையில் எடுத்தபடி திண்ணையைவிட்டு இறங்கிக் கீழே நின்றார்கள்.

27 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

  2. கதையின் சுட்டி மேலே கொடுத்திருப்பது சரியில்லை. சரியான சுட்டி இதோ. கோப்பி பேஸ்ட் செய்து வாசிக்கலாம்.
    https://azhiyasudargal.blogspot.com/2010/08/21.html

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பொழுது சரி செய்துள்ளேன். மீண்டும் சோதித்து, சரியா என்று சொல்லவும்.

      நீக்கு
  3. ராம்ஜி.யாஹூ, மோகன்ஜி என்று
    பின்னூட்டத்தில் தேர்ந்த வாசகர்களின் பெயர்கள் பார்த்து ஆவலுடன் வாசிக்க முற்பட்டேன்.
    வேல. இராமமூர்த்தி ஏற்கனவே தெரிந்தவர் தான். இருந்தும் வாசிப்பில் மனம் படியவில்லை. 'ஜாதிகள் இல்லையடி, பாப்பா' என்று பாரதி சொன்னது
    குழந்தைகளுக்குத் தான்
    என்ற எண்ணம் பிற்கால எழுத்தாளர்கள் பலரின் மனத்தில் வேரூன்றியிருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் எடுத்துக் கொள்ளும் கதைச் சூழலும் விவரிக்கும் வாழ்க்கைப் போக்கும் தான் இதற்கெல்லாம் காரணம் என்று மனத்தை ஏமாற்ற முடியவில்லை.
    ஜாதி அடையாளங்கள் இல்லாமல் எழுதப்படும் எத்தனையோ கதை வாசிப்புகளில் வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஏதோ ஒரு இயல்புத்தன்மை
    இழைந்திருப்பதாகவே மனசுக்குப் படுகிறது.
    அந்த மாதிரி பல கதைகளின் கதை மாந்தர்களில் நம்மைப் பார்க்கலாம். இந்த மாதிரி கதை வாசிப்புகளில் அந்த மாதிரி உணர்வுகளை இழக்கிறோமோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி ஒரு சமூகம் சார்ந்த கதைகளில் இயல்பாக அமையும் கதை மாந்தர்களின் பெயர்தான் கதையின் நம்பகத் தன்மைக்கு அஸ்திவாரம். இவற்றில் நம்மைப் பொருத்திக்கொள்ளும் வாய்ப்பு இல்லை.

      பொதுவாக சமூகம் சார்ந்த, அவர்களுக்கே உரித்தான மொழி நடையோடு, சம்பவங்களோடு கதை எழுத அந்தச் சமூகத்தைச் சார்ந்தவர் அல்லது நெருங்கிப் பழகியவர்களால்தான் முடியும் என்பது என் கருத்து. இல்லையென்றால் திரைப்படத்தில் பார்ப்பதுபோல, ஏலேய் என்று விளித்தாலே திருநெவேலி ஸ்லாங்வந்துவிட்டதாக வெற்றுக் கற்பனை கொள்வதுபோல ஆகிவிடும்.

      நீக்கு
    2. கதைகள் பலவிதம். கதை சொல்லும் முறையை வைத்து உரையாடல், சரித்திரம், ஆராய்ச்சி, என்று பலவாறு வகைப்படுத்தலாம். இக்கதை ஒரு சினிமா நடிகரால் எழுதப்பட்டதால் அந்த சினிமாக் கண்ணோட்டம் கதை சொல்லலில் வெளிப்படுகிறது. காட்சிகள் ஒவ்வொரு ஷாட் ஆக விவரிக்கப்பட்டிருப்பதை காணலாம்.

      ஆக என் கடன் வாரம் ஒரு பதிவு. வெளியிட்டால் உண்டு, இல்லை என்றால் இல்லை. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    3. நெல்லையின் கருத்து சரியானது என்றாலும் சுஜாதா போன்ற பெரிய எழுத்தாளர்கள் எந்த வகை மனிதர்களாயினும் அதற்கேற்ப அவர்களுடைய மொழி, செயல் இவற்றை கதையில் சாதாரணமாக கையாள்வதை பார்க்கலாம்.

      நீக்கு
  4. ஒரு சமூகம் மாறிய வித்த்தை, கதைச் சுருக்கமே நன்றாகச் சொல்லிச் சென்றிருக்கிறது.

    கிரா வும் கோபல்லபுர கிராம்ம் கதையில் இதுபோன்ற திருடர்களைப் பற்றி எழுதியிருப்பார்.

    நல்ல கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்ட திட்டங்கள் மாறும்போது சமூகமும் அதற்கேற்ப மாறுவது இயல்பு. ஆனாலும் சில வழக்கங்கள் மறைமுகமாக கடைபிடிப்பதை அறியலாம். உதாரணம் கிடா வெட்டு இப்போதும் கிடா வெட்டு உண்டு.
      கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. ஆமா பழக்கவழக்கங்கள் மாறலை கிடா வெட்டுவது இப்போதும் உண்டுதான். கிடா வெட்டுவதற்கு தடை 1950 களில் இருந்தாலும் ஜெஜெ அந்தச் சட்டத்தை வலியுறுத்தச் சொல்லி கூடத் தடை போட்டாங்க. ஆனால் இது சில சமூகத்தினரின் செண்டிமென்ட்.

      இதைப் பற்றி எடின்பர்ஜ் பல்கலைக்கழகத்தில் நம்மூர் ஆள் ஒருவர் பேப்பர் கூடப் போட்டிருக்கிறார்.

      இந்தக் கதையை சிறுகதைகள்.காமில் முழுவதும் வாசித்தேன். அங்கும் இருக்கிறது. கொஞ்சம் தெளிவான ஃபார்மாட்டில்.

      கீதா

      நீக்கு
  5. ஓர் எழுத்தாளராக இந்த சமூகத்தில் பிரதிபலிப்பதைவிட, கூத்தாடனாக விரைவாக பிரபலமாகிவிட முடிகிறது இந்த அறியாமை சமூகத்தில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் கில்லர்ஜி இது சமீபகாலத்தில். வாசிப்பு குறைந்து வரும் நேரத்தில்.

      கீதா

      நீக்கு
    2. என்னது..சமீப காலத்திலா? ஓ இவங்களுக்கு இன்னும் 12 வயது தாண்டலை போலிருக்கு... எத்தனைபேருக்கு அகிலனையும் சாண்டில்யனையும் தெரியும்? அதைவிட பல லட்சம் மடங்கு எம்ஜிஆரையும் சிவாஜியையும், ஏன் அதற்கு முன்பு எம்.கே.டி.பாகவதரையும் தெரியும் (னு புத்தகங்களில் படித்திருக்கிறேன். ஏன்னா எனக்கு வயது 11 தானே. கீதா ரங்கன் அக்காவைவிட 1 வருடமாவது குறைவு)

      நீக்கு
  6. இரு செய்திகளும் நல்ல செய்திகள். போலீஸ் சம்பந்தப்பட்டிருக்கும் செய்தி. அதுவும் முதல் செய்தி நிஜமாகவே நல்ல செயல். அதுவரை அப்பெண்மணியின் உயிரும் இருந்திருக்கிறதே!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கதை முந்தைய காலகட்டத்தில் ஒரு சமூகத்தில் இருந்ததைச் சொல்லிச் செல்லும் கதை. பின்னர் எப்படி மாறுகிறார்கள் என்பதைச் சொல்கிறது. கடைசியில் குல தெய்வத்துக்கான ஆடு வெட்டலில் ஆடு திருடப்படாது என்பதைச் சொல்வதும், குறிப்பாக குடும்பத்து உறுப்பினர் சேது போலீஸாவதால்....அவன் போலீஸ் உடையில் வந்ததும் எல்லாரும் எழுந்து நிற்பதும்....சட்டம் ஒழுங்காக வலுவாக இருந்தால் குற்றங்கள் குறையும் என்பதையும் சொல்கிறது கதை என்பது என் புரிதல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இப்படியும் ஒரு சமூகம் இருந்திருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது. அதாவது திருடுவதே தொழில் என்பதாக!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் (கள்ளர் பிரிவு) இப்படி இருந்ததாகவும், பிறகு அவர்கள் சமூகத்துடன் ஒன்றியதாகவும், ஆங்கிலேயர் காலத்தில் அவர்களை 'குற்றப் பரம்பரையினர்' என்று அவமானமாக அழைத்துவந்ததாகவும் படித்ததுண்டு. ஒருவேளை பெரும்பகுதி மக்கள் (ஒரு இடத்தில்) செய்வதை வைத்து அந்தச் சமூகத்தையே அப்படிச் சொல்லிவிட்டார்களோ என்னவோ

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. மக்களுக்கு மனிதாபிமானத்தோடு உதவிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இன்றைய கதைப் பகிர்வும் நன்றாக உள்ளது. இந்தக்கதை இதுவரை படித்ததில்லை. ஆசிரியரின் ஆழமான எழுத்துக்களை படித்து ரசித்தேன். இவர் சின்னத்திரை நடிகர் என்பதையும் அறிந்து கொண்டேன். வாழ்த்துகள். கதையின் இறுதியில் முடிவும் நன்றாக உள்ளது. பகிர்ந்தமைக்கு சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. ஆபத்தில் உதவும் கரங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ஓர் சமூகத்தின் பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டுகிறது கதை.
    "எழூத்தாசிரியராக அறிமுகமில்லாது நடிப்புத்துறையில்
    பலராலும் அறியப்படுகிறார் ." நாடகம் , படம் பார்ப்பது என்பதுதான் வாழ்க்கை என்று பலரும் களிக்கும் காலம்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல செய்திகள் அனைத்தும் மனித நேயத்தை சொல்கிறது.
    அனைத்தும் அருமை. நல்ல மனிதர்கள் வாழ்க.

    பதிலளிநீக்கு
  12. கரிசல் காட்டு எழுத்தாளர், நடிகர், இராமமூர்த்தி எழுதிய கதை பகிர்வு அருமை, நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. இந்த வாரத்தின் நற்செய்திகள் - நன்று. அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!