8.6.25

ஞாயிறு பட உலா – நெல்லைத் தமிழன் நான் சென்ற இடங்கள் – மெக்சிகோ - படங்களுடன் - 01

 


ரொம்ப வருடங்களாகவே நான் சென்ற, பார்த்த இடங்களைப் பற்றி படங்களுடன் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.  அவற்றைப் பற்றி எழுதுவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.  இனிமேல், எவற்றையெல்லாம் பகிரலாம் என்று நினைக்கிறேனோ, அவற்றைப் படங்களுடன் பகிர்கிறேன்.

கேஜிஜி சார் மாதிரி, என் வாழ்க்கைப் பயணம் என்று எழுத ஆசைதான்.  அதற்கான நேரம் வரவில்லை. எங்கோ சாதாரணமான நிலையில் இருந்த என்னை, காலம் எங்கெங்கோ இழுத்துச் சென்றது. ‘எழுதும் விதியின் கைகள், எழுதி எழுதி மேற் செல்லும்என்ற உமர் கய்யாம் வரிதான் எனக்குத் தோன்றுகிறது.  சில உயரங்களைத் தொட்டு, பிறகு பாதாளம் காட்டி, என்று வாழ்க்கை ஒரு அலையைப் போலச் செல்கிறது. இருக்கட்டும்.

கௌதமன் சார், அவர் சமீபத்தில் சென்றிருந்த பாண்டிச்சேரி ரிசார்ட் பற்றி எழுதிக்கொண்டு வருகிறார். அவர் எழுதுகிறார்நான் பட உலாவாக சிலவற்றை எழுத நினைக்கிறேன்.  நான் வெளிநாட்டுச் சுற்றுலா என்று ஒன்றும் சென்றதில்லை. சென்றதெல்லாம் அலுவலகப் பயணமாகத்தான். அதில் கிடைக்கும் வார இறுதிகளில், நான் வகித்துவந்த பொறுப்பினால் கொடுக்கப்பட்ட சில சலுகைகளை உபயோகித்துச் சில இடங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றை அவ்வப்போது பகிர்கிறேன்.

சோழ வரலாறு என்று தற்போது எழுதிக்கொண்டிருக்கிறேன் (தாராசுரம்,….. போன்ற கோயில்களில் உள்ள சிற்பப் படங்களுடன்) அது அயர்ச்சியைக் கொடுக்கக் கூடாது என்பதற்காக இடையிடையே இந்த மாதிரிப் பதிவுகள் வரும்.  நிறைய யாத்திரைத் தொடர் பதிவுகள் இன்னும் எழுதவேண்டியிருக்கிறது. உதாரணமாக கயா யாத்திரைத் தொடர்’, ‘பாண்டிய நாட்டு திவ்யதேசங்கள் மற்றும் மலைநாட்டு திவ்யதேசங்கள் யாத்திரை’, ‘பத்ரிநாத் யாத்திரைபோன்று. அவற்றிற்கான சந்தர்ப்பங்கள் அமையாமலா போகப்போகிறது?

இந்த வாரம் நான் எழுதப்போவது மெக்சிகோவில் நான் தங்கியிருந்த ரிசார்ட் பற்றி.  இந்தியா வந்த பிறகு எனக்கு விமானப் பயணத்தில் ஆர்வமே ஏற்படுவதில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. நான் சுமார் 200 தடவைகளுக்கு மேல் விமானத்தில் பயணம் செய்திருக்கிறேன்,  இரு வழியில். இது இன்னமும் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  நான் ஒரு பெரிய நிறுவனத்தில் கணிணி சம்பந்தமான துறைக்குத் தலைவனாக பதினைந்து வருடங்களுக்கு மேல் வேலை பார்த்தேன்.  எங்கள் நிறுவனம், பல தேசங்களில் இருந்தாலும்,  நான் ஏழு தேசங்களில் இருந்த எங்கள் Outlets/Restaurants/Offices/Warehouses போன்று பலவற்றிர்க்கும் கணிணி சம்பந்தமான முடிவு எடுக்கும் இடத்தில் இருந்தேன். அதனால் பல தேசங்களுக்கும் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவ்வளவு பெரிய நிறுவனத்தின் துறைத் தலைவராக இருந்தால் நெறி பிறழும் சந்தர்ப்பம் ஏராளமாக வரும், ஆனால் எவற்றிலும் சிக்காமல் நெறி பிறழாமல் கடைசி வரை என்னால் இருக்க முடிந்தது. அதுவும் தவிர, என்னுடைய சொந்த கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் எதையுமே நான் மாற்றிக்கொண்டதில்லை. பல சந்தர்ப்பங்கள் வரும் ஆனால் நான் மாறாமல் இருந்தேன். அதனால் எனக்கு எப்போதுமே ஒரு நிம்மதி உண்டு. சொந்தப் பிரதாபம் போதும் என்று நினைக்கிறேன்.

ஒரு வார மெக்சிகோ பயணம் அது (ரிசார்ட்டில் 7 நாட்கள்). இதற்கான விமானப் பயணக் கட்டணம் மற்றும் செலவுகளை என் நிறுவனம் பார்த்துக்கொண்டது.  அங்கு தங்கும் செலவை அழைத்த நிறுவனம் ஏற்றுக்கொண்டது. 

நான் எங்கும் முழு சைவ உணவு (தமிழக அல்லது இந்திய) மாத்திரமே சாப்பிடுவேன். ஒரு சில பயணங்களில் அதற்கு வாய்ப்பு இருக்காது. அப்படிப்பட்ட நேரங்களின் நான் பழங்கள், English bread (ஹிஹி Egg சேர்க்காதது) போன்றவைகளை வைத்து சமாளித்துக்கொள்வேன். சென்ற அன்றே உணவுப் பிரச்சனை தலைதூக்கக் கூடாது என்பதற்காக நானே ஒரு நாளுக்குச் செய்து எடுத்துக்கொண்டு போவேன். இது தவிர ஒரு எலுமிச்சை ஊறுகாய் பாட்டிலும் (ஊறுகாயுடன்!) எடுத்துகொண்டு செல்வேன். ஒருவேளை பழங்கள் மாத்திரம் சாப்பிட்டு நாக்கிற்கு காரம் வேண்டும் என்று தோன்றும்போது ப்ரெட் ஸ்லைஸ் மற்றும் ஊறுகாய் உபயோகமாக இருக்கும்.

நான் வேலை பார்த்த நிறுவனத்திலேயே சில மாதங்களுக்கு ஒரு முறை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கான்ஃபரன்ஸ் வைப்பார்கள். அப்போதுதான் நிறுவனத்தின் ஒவ்வொரு துறைத் தலைவர்களும் மற்றும் எங்களுக்கு மேல் உள்ளவர்களும் (Finance Head & Board Members) நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அமையும்.  ஆரம்பத்தில் உணவின் போது நான் நேரடியாக பழங்கள் மற்றும் இனிப்புகள் எடுத்துக்கொள்வேன். மற்ற உணவுகளைச் சாப்பிடுவதில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெஜ் உணவையும் சிறிது எடுத்துக்கொள்வேன்.  பல நேரங்களில் எனக்கு மாத்திரம் சாதம், பருப்பு (Rice, Dhal) ஆர்டர் செய்வார்கள் (அப்போதுதான் எனக்குத் தெரிந்தது, நாம் கேட்கும் உணவை உடனே தயார் செய்து தருவார்கள் என்றுஇது பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். அது, எனக்காக, Chef team staff சிலருக்காகத் தயார் செய்த உப்புமாவை காலை உணவுக்குக் கொண்டுவந்து தந்த கதை). எழுத ஆரம்பித்தால் வள வளவென்று எழுதுவதே என் பழக்கமாகிவிட்டது.

லண்டன் ஹீத்ரூ சென்று, அங்கிருந்து கேட்விக் விமான நிலையம் சென்று மெக்சிகோ விமானத்தைப் பிடிக்கவேண்டும்.  (எல்லாம் பிரிட்டிஷ் ஏர்வேஸ்). மெக்சிகோ பயணத்தின்போதுதான் தெரியும், 6 மணி நேரப் பயணத்துக்குக் குறைவாக விமானப் பயணம் என்றால் முதலில் தந்த உணவிற்குப் பிறகு, விமானத்தின் பின்பக்கம் (கடைசி சீட் வரிசையைத் தாண்டிச் சென்றால் வரும்) சில பல ட்ரேக்களில் பிஸ்கட்ஸ், சாக்லேட்டுகள் போன்றவைகளை வைத்துவிடுவார்கள், பயணிகளே எப்போது தேவையோ அப்போது சென்று எடுத்துக்கொள்ளலாம் என்று. ஆனால் அதை நான் தெரிந்துகொண்டது பல மணி நேரங்கள் கழித்து. பரக்காவெட்டி மாதிரி அவர்களிடம் என்னைக் காண்பித்துக்கொள்ள முடியும என்ன? நான் கிளம்பும் இரவு, மி.பொடி தடவிய இட்லிகள் மற்றும் அரிசி உப்புமா செய்து எடுத்துக்கொண்டேன்.  கேட்விக் விமான நிலையத்திலிருந்து மெக்சிகோ கான்கன் விமான நிலையப் பயணம் சாதாரணமாக இருந்தது. ஆனால் வழியில் பார்த்த மேகக் கூட்டங்கள், கீழே பார்த்த வித்தியாசமான நிறத்தில் அமைந்த தீவுகள், பெர்முடா முக்கோணத்தைக் கடந்து விமானம் சென்றது போன்றவை எனக்கு ஆர்வத்தை உண்டுபண்ணியது.






கீழே விழுந்தா இந்த இலவம்பஞ்சைத் தாண்டி கீழே விழுவோமா இல்லை இவை நம்மைத் தாங்கிக்கொள்ளுமா?

நாங்களும் பெர்முடாவைத் தாண்டிட்டோமில்ல ! 

உதிர்ந்த இலவம்பஞ்சு மேகங்கள்

விமானத்தில் ஆட்களே இல்லை. ஒரு பத்து பேர்கள் இருந்திருப்போம்.

அட இது என்னப்பா அதிசயம்தீவுகளின் மேல் மாத்திரம் மேகக் கூட்டம்.

மாலை வடிவத்தில் தீவுகள்.  பேசாம அங்கேயே குடி போயிடலாமா?  ஒரு வேளை சுனாமி வந்தால் நம்மைத் தள்ளிக்கொண்டுபோய் அந்தப் பக்கம் உள்ள கடலில் தள்ளிவிடுமோ? எதுக்கு வம்பு?

தீவின் அருகாமைத் தோற்றம். இரண்டு தீவுகளுக்கு இடையில் கடல் பாய்கிறது.

சன்னலிலிருந்து பார்த்தால் விதவிதமான நிறங்களில் கடல், நிலம், வான்..

பஹாமாஸ் தாண்டிச் செல்கிறோமா?



அட இது என்ன! மிக அழகிய தீவு! 


இறங்க வேண்டிய இடம் வருகிறது போல் இருக்கிறது. பின்ன.. கடலைத் தாண்டி நிலத்துக்கு விமானம் வந்துவிட்டதே!

மெக்சிகோவின் தீபகற்பத்துக்கு வந்து சேர்ந்தேன். விமான நிலையத்தில் சிறிய வரிசைதான். என்னுடைய முறை வரும்போது நான் கொண்டுபோயிருந்த உணவு பாக்கெட்டுகளைப் பற்றிக் கேட்டார்கள். அவை எனக்கான உணவு என்று நான் சொன்னது அவர்களுக்கு எவ்வளவு புரிந்தது என்று தெரியவில்லை. பாவம்  முதல் முறை வந்திருக்கிறான், பார்த்தால் நல்லவன்போலத்தான் தெரிகிறான் என்று நினைத்தார்களோ என்னவோ.. அனுப்பிவிட்டார்கள்.

விமான நிலையத்திலிருந்து நான் செல்லவேண்டிய Jade Rivera Cancunக்கு ஒரு டாக்சியில் சென்றேன்.

சுமார் 30 கிமீ டாக்சியில் பயணம்.  அரைமணி நேரம் ஆகியது. இருந்தாலும் ஊருக்குப் புதுசு என்பதால் மனதுக்குள் லப்டப் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது.  நம்மூரில் அலையாத்திக் காடுகள் என்று சொல்வோமே, அப்படி இருந்த பாதை வழியே சென்றபோது (கடைசி ஐந்து நிமிடங்கள்), இவன் சரியாகத்தான் கூட்டிக்கொண்டு போகிறானா என்ற சந்தேகம் வந்தது.  நான் கூகுள் மேப், மற்றும் ரிசார்ட்டின் அட்ரஸ் Print செய்துகொண்டு போயிருந்தேன். அதையெல்லாம் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறானா என்று யோசித்தேன். கடைசியில் ரிசார்ட்டின் நுழைவாயிலை அடைந்ததும் நிம்மதி வந்தது.

இந்தப் படங்களை அங்கு நுழையும்போது எடுக்கவில்லை. பிறகு நான் வெளியில் வந்து பாதை மற்றும் நுழைவாயில் படங்களை எடுத்தேன்.

அடுத்த பகுதியில் தொடர்வோம்.

 (தொடரும்) 

32 கருத்துகள்:

  1. ​மெக்ஸிகோ பயணக் கட்டுரை ஆரம்பம் ஜோர். நேரில் பேசுவது போல் அமைந்ததால் நீளம் சலிப்பு தட்டவில்லை. படங்கள் நன்றாக உள்ளன. காமெரா என்ன?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். இந்தப் பயணத்தின்போது பேனாசோனிக்கா இல்லை சோனியா என்று பார்க்கணும். என்னுடைய வேலை காரணமாக நான் பலவித கேமராக்கள் வாங்கியிருந்தேன் (கம்பெனி உபயத்தில். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதிய கேமரா).

      நீக்கு
  2. சுய கட்டுப்பாடு விவரங்கள் அருமை. பாராட்டுகள், இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் மனதை அலையவிடாமல் கட்டுப்பாட்டுடன் நா, நெறி காத்ததற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம். //மனதை அலையவிடாமல்// அப்படீல்லாம் இல்லை. சின்ன வயதில் வளர்ந்த சூழ்நிலை அப்படி. என் அலுவலக நண்பர்களிடம் முதலிலேயே சொல்லிவிடுவேன், எனக்கு யார் வீட்டுக்கும் வந்து எதையும் சாப்பிடப் பிடிக்காது என்று. அதிலும் நான் வெஜ்கார்ர்கள் என்றால் தண்ணீர் குடித்தாலே அதிகம். ஆனால் இந்த உணர்வு ஹோட்டல்களில் (வெஜ்) சாப்பிடும்போது ஏற்படுவதில்லை.

      இப்படி இருந்ததில் அலுவலக ரீதியாக எனக்கு ஒரு தடவை பெரிய பிரச்சனையைக் கொண்டுவந்து சேர்த்தது. (லண்டனில்) அது பிறிதொரு சமயம்.

      நீக்கு
  3. படங்களுக்கான கமெண்ட்ஸையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. ஆரம்பமே ஜோர்! மரக்கறி உண்பவர்களுக்கு வெளிநாட்டு பயணங்களில் சாப்பாடு கஷ்டம்தான். எங்கள் உறவினர்களில் ஒருவர் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் உணவு விடுதிகளில் நேராக தலைமை சமையல்காரரை சந்தித்து தனக்கு வேண்டிய சைவ உணவை எப்படி சமைப்பது என்று கூறி விடுவாராம். இது சாத்தியமா? என்று சந்தேகமாக இருந்தது.

    புகைப்படங்களும் அதற்கான கேப்ஷங்களும் ரசிக்கும்படி இருந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். ஐந்து நட்சத்திர விடுதிகளில் நமக்கு என்ன வேண்டும் என சிம்பிளான ஐட்டங்களைச் சொல்ல முடியும் (தால், ரைஸ், ரோட்டி, ஏதேனும் வெஜ் சப்ஜி என்பது போன்று). ஆனால் செய்முறை சொல்லி சமைக்கவைக்க இயலாது.

      தாஜ் செஃப் விகடனில் எழுதிய தொடரில், கோவா/மும்பை தாஜில் முன்பு ஒருவர் தயிர் சாதம் செய்துதரச் சொல்ல, அவர்கள் தாஜ் சென்னையை அழைத்து ரெசிப்பி ஃபேக்ஸ் பண்ணச் சொல்லி அதன்படி சமைத்துத் தந்தார்கள் என எழுதியிருந்தார்.

      நீக்கு
  5. //வழியில் பார்த்த மேகக் கூட்டங்கள், கீழே பார்த்த வித்தியாசமான நிறத்தில் அமைந்த தீவுகள், பெர்முடா முக்கோணத்தைக் கடந்து விமானம் சென்றது போன்றவை எனக்கு ஆர்வத்தை உண்டுபண்ணியது.// 'எனக்கு ஆர்வத்தை உண்டு பண்ணின' என்று இருக்க வேண்டாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எழுதியது போலத்தான் இருக்கணும். எழுதும்போது இத்தகைய தவறுகள் கவனப்பிசகாக அமைந்துவிடுகின்றன

      நீக்கு
  6. பெர்மூடா முக்கோணத்தை கடந்தீர்களா?? பயமாக இல்லை? அந்த பகுதிக்கு மேலே பறக்கும் பொழுதுதானே விமானங்கள் காணாமல் போகும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ஆர்வம்தான் இருந்தது. அது தவிர புதிய இடங்களில் அகாலத்தில் மனதில் பய உணர்வு தோன்றும். ஆனாலும் இறைவன் உதவியில் அவற்றைக் கடந்திருக்கிறேன். இயல்பாகவே அத்தகைய தருணங்களில் என் வாய் சகஸ்ரநாமத்தை உச்சரிக்க ஆரம்பித்துவிடும்.

      நீக்கு
  7. அட! பெர்முடா முக்கோணத்தைக் கடந்து சென்றதா!!!! அப்ப அது பத்திய தகவல்கள் எல்லாம் சும்மாவா? பயமுறுத்தறதுக்காக அப்படி எல்லாம் எழுதறாங்களா?

    படங்கள் எல்லாம் சூப்பர் சூப்பர். விமானத்திலிருந்து கீழே பஞ்சு பொதி வாவ்!

    என்ன இப்படிக் கூட்டமே இல்லாத பஸ் போல இருக்கு விமானம்! ஆச்சரியமா இருக்கு. 10 பேருக்காகக் கூட விமான சேவை எல்லாம் செய்யறாங்களா?

    இங்க நம்ம ஏரியா ஃபீடர் பஸ் இப்படித்தான் சிலப்போ யாருமே இல்லாம சுத்தி வரும். அரசுக்கு வேஸ்ட் னு தோணும் ஆனால் சில சமயங்களில் கூட்டம் அம்முது.

    முத்து, வெள்ளைப் பூ கோர்த்த மாலை போல அந்தத் தீவுகளின் மேல் பஞ்சு பொதி!! ரொம்ப அழகு அழகு.... ரசித்துப் பார்த்தேன். கொஞ்சம் தென்னக இந்தியா வரைபடம் போலவும் இருக்கிறது. மாலை போல இருக்கும் முதல் படம்...

    இரண்டாவது படம் பாருங்க விமானம் கடக்கும் போது வித்தியாசமாகிவிட்டது.

    அந்தத் தீவுகள் ரோடு போல இருக்கறதுனால அப்படியே நடைப் பயிற்சி செய்தால் இரு பக்கமும் கடல்!!! ஒன்றுக்கொன்று இணைந்துதான் இருப்பது போல இருக்கு....நாம நடந்தா அது மிதக்குமோ!!!! ஹிஹிஹிஹி....ஒரு இடத்தில் ரொம்ப குறுகி இருக்குப் பாருங்க அங்க நடந்தா எப்படி இருக்கும்....ஆஹா!!! ஆசையா இருக்கு இது முழுவதும் அப்படியே நடந்து பார்க்க...அந்தக் குறுகி இருக்கும் பகுதி க்ளோஸப்பில் அடுத்தாப்ல வருகிறதே....அங்கு கடல் இடையில்....அப்பகுதியை எட்டித் தாண்ட முடியுமா!!! ஹாஹாஹா என்னெல்லாம் கற்பனைல ஓடுது பாருங்க.

    விதம் விதமான கடல் நீலம் வான் அந்தப் படம் செமையா இருக்கு...இயற்கையின் வர்ண ஷேட்ஸ் சூரிய ஒளிக் கதிர்களில் எப்படி இருக்கு...ஒவ்வொரு நேரத்திலும் இந்த வர்ணம் மாறுபடலாஅம் ஒளிக்கதிர்களின் வீச்சினால்..

    (நானும் போன முறை தில்லி போய் வந்தப்ப எடுத்த படங்கள் இருக்கு....போடணும். வித்தியாசமான பஞ்சு பொதிகள்...க)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன்(க்கா).

      பெர்முடா முக்கோணத்தில் சில விபத்துகள் நடந்திருந்திருக்கலாம். மற்றபடி எல்லாம் உடான்ஸ் என்று தோன்றும்.

      ஒருவேளை மெக்சிகோவிலிருந்து நிறைய பேர் கேட்விக் வருவாங்களாக இருக்கும். ஆனால் எனக்கு விமானத்தின் பின் பகுதியில் சாக்லெட், பிஸ்கெட் டிரேக்கள் இருக்குன்னு முன்னமே தெரிந்திருந்தால், நிறைய எடுத்துக்கொண்டிருந்திருக்கலாம்.

      விமானத்திலிருந்து பார்க்க சிறிய தீவுபோலத் தெரிந்தாலும், பல மைல் குறுக்களவு இருக்கும்.

      வானத்தின் வர்ணஜாலங்களை நானும் மிகவும் ரசித்தேன்

      நீக்கு
  8. மிக அழகிய தீவு - மேலருந்து பார்க்கறப்ப....இந்தக் கடல் பொங்கிச்சுனான்னு தோன்றுகிறது. ஆனால் அதுக்குள்ளயும் மக்கள் இருக்கத்தானே செய்யறாங்க வருஷக் கணக்கா...

    வரைந்த ஓவியம் போல இருக்கு அந்தப் படம். வெகு அழகு.

    பெயின்டிங் தீற்றல்கள் போல ஷேட்ஸ் அடிச்சது போல இருக்கு இறங்க வேண்டிய இடம் - படம்.

    //சுமார் 30 கிமீ டாக்சியில் பயணம். அரைமணி நேரம் ஆகியது. இருந்தாலும் ஊருக்குப் புதுசு என்பதால் மனதுக்குள் லப்டப் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. நம்மூரில் அலையாத்திக் காடுகள் என்று சொல்வோமே, அப்படி இருந்த பாதை வழியே சென்றபோது (கடைசி ஐந்து நிமிடங்கள்), இவன் சரியாகத்தான் கூட்டிக்கொண்டு போகிறானா என்ற சந்தேகம் வந்தது./

    வெளிநாட்டில் பொதுவாக அப்படி நேர்வதில்லை என்பது என் நினைப்பு.

    இங்கும் இப்ப கூகுள் மேப் சரியா இருந்தாலும் கூட, சிலர்....சரியா கூட்டிப் போறதில்லை. 95 பெர்சன்ட் பொதுப் போக்குவரத்தில் சென்று வரும் நான் ஒரு முறை இங்கிருந்து இந்திராநகர் பகுதியில் ஒரு வீட்டுக்குப் போனப்ப வேறு வழி இல்லாமல் அன்று ஓலா வைச்சுக்குவோம்னு வைச்சா. தப்பான டைரக்ஷன்ல போவது தெரிந்ததும், நான் சொல்லியும் ஓட்டுநருக்குப் புரியாம, தனக்கு கூகுள் இதைத்தான் காட்டியதுன்னு சொல்ல....நான் அங்கேயே இறங்கிக் கொண்டு வேறு ஆட்டோ பிடிச்சு.... போக வேண்டியதானது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சென்றபோது கூகுள் மேப் கிடையாது. (ஆபீஸிலிருந்து பிரிண்டவுட்தான் எடுத்துச் சென்றேன்).

      இருந்தாலும் மனதுக்குள் பயம் இருக்கும். தெரியாத நாடு, தெரியாத வாகனம், டிரைவர்.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    மெக்சிகோ பயணப் பதிவு அருமை. தங்களைப்பற்றிய சிறு குறிப்பு நன்று. உங்களது என்றும் மாறாத பழக்கவழக்கங்களை இன்று வரை கடைப்பிடிப்பது சிறப்பு. விமான பயணத்தின் போது எடுத்த அருமையான படங்கள் மிகவும் நன்றாக உள்ளது. அழகான மேக கூட்டங்களை நீங்கள் விவரித்த விதமும், ரசிக்கும்படி உள்ளது. பயணத்தில் சற்று ஆபத்தான பகுதிகளை கடப்பதென்பது மனதில் பயம் தரும் செயல்தான். முதன் முறையான பயணத்தில் தைரியமாக செயல்பட்டு இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    மேக கூட்டப் படங்கள் கண்களை கவருகின்றன. எனக்கும் அதில் ஏறி நடக்க, மிதக்க ஆசை வருகிறது. பஞ்சு பொதி மேகங்கள் மிக அழகு. தங்களின் அனுபவ பயணத்துடன் தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    இரண்டொரு நாட்களாக வீட்டின் முக்கியமான சில வேலைகள், அதன் காரணமாக வெளியில் அலைச்சல்கள் என வந்து விட்டதால் பதிவுகளுக்கு இயல்பாக வர இயலவில்லை அனைவரும் மன்னிக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். உங்களுக்கு நிறைய வேலைகள் வந்துவிடுகின்றன போலும்.

      முன்னெல்லாம் தேவர்கள் அந்தப் பகுதியில் சஞ்சரித்து, பிறகு விமானங்களெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டபிறகு அவர்களெல்லாம் வேறு லெவலுக்குச் சென்றிருப்பார்களோ? உங்களுக்குத் தெரியுமா?

      நீக்கு
    2. நாம்( மனிதர்கள்.) ஆகாயத்தில் கடந்து செல்ல விமானங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டு பறக்காத காலத்திற்கு முன்பே இத்தகைய சக்தி வாய்ந்த தானியங்கி விமானங்கள் உள்ளதென்பதை, புராண கதைகளில், கின்னரர், தேவர்கள் என இத்தகைய புஷ்பக விமானங்களில் பயணம் செய்ததை பற்றி படித்திருக்கிறோம். மேலும், இராமாயணத்தில் ராவணனிடம் (ஒரு மனிதனிடம்) இத்தகைய விமானம் இருந்ததை படித்துள்ளோம்..

      இப்போது நாமும் அவர்களுக்கு போட்டியாக அதே இடத்தில் பறப்பதால், அவர்கள் இன்னமும் சற்று மேலேறி பறப்பார்களோ என்னவோ? நாம்தான் "உனக்கும் கீழே உள்ளவர் கோடியென" கீழே மட்டுந்தான் பார்த்துக் கொண்டிருக்கும் பழக்கப்பட்டவர்கள் ஆயிற்றே..!

      நீக்கு
    3. நான் ஶ்ரீஎம் என்ற இமயத்தில் அலைந்து திரிந்த யோகா மனிதரின் அனுபவங்களைப் படித்திருக்கிறேன். அவர் இமயமலையில் அவருடைய ஆசானுடன் தங்கியிருந்தபோது நாக லோகத்திலிருந்து ஒரு உருண்டையான விமானம் போன்ற அமைப்பில் அதன் தலைவர் வந்தார் என எழுதியிருக்கிறார். (இது 1950களில் நடந்தது). படிக்கவே வியப்பாக இருந்தது. அதுவும்தவுர அவர் கஷீரடியில் சாயிபாபாவின் வீட்டில் அவர் இறந்து பலப்பல வருடங்கள் கழிந்தபிறகு சந்தித்தேன் எனவும் எழுதியிருக்கிறார்.

      நீக்கு
    4. படித்த விஷயங்கள் (அதுவும் 1950ல்) ஆச்சரியப்பட வைக்கிறது. அது நாக லோகத்திலிருந்தான் வந்தது என் எப்படி அனுமானம் செய்தாரோ ? நாக ராஜாவா? தாங்கள் படித்த புத்தகம் விந்தைகள் பல கொண்டதுதான்.

      நீக்கு
    5. அந்தப் பகுதியை வரும் சனிக்கிழமை, ஶ்ரீராமின் அனுமதி இருந்தால் வெளியிடுகிறேன் கமலா ஹரிஹரன் மேடம். (ஏற்கனவே நா.ப.க பகுதி இருப்பதால்)

      நீக்கு
    6. கண்டிப்பாக நீங்கள் படித்த அந்த அதிசயங்களைப் பற்றி ஓர் நாளில் பகிருங்கள். நானே கேட்கலாம் என்றிருந்தேன். நீங்களே சொன்னதற்கு நன்றி

      நீக்கு
  10. பயணப் படங்கள் அழகாக உள்ளன.

    பெர்முடா முக்கோணத்தைக் கடந்து செல்வதை படம் காட்டியுள்ளீர்கள் அருமை.

    வானம்,கடல்தாண்டி, தீவு வருவது என கண்டு களித்தோம்.

    புதிய இடத்தில் காடுதாண்டி செல்வது மனம் அடித்துக் கொள்ளும்தான்.
    தொடர்கிறோம்....நன்றி.

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. பயணக்கட்டுரை படங்களுடன் நன்றாக இருக்கிறது
    உங்கள் விமான பயண படங்கள் நன்றாக இருக்கிறது அதற்கு நீங்கள் கொடுத்த வாசகங்கள் அருமை

    பதிலளிநீக்கு
  14. பஞ்சு பொதி மேகம், அழகான தீவு படங்கள் அருமை

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!