12.6.25

புதுசு வாங்கிட்டா பிரச்னை இல்லை - யாருக்கு?

 கல்யாணக் கதையளத்தலை கொஞ்சம் நிறுத்தி விட்டு இன்று ஒரு கணினிக் கதை.  

கணினிக் கதை என்றால் கணினி எழுதிய கதை இல்லை.  கணினியுடன் என் போராட்டம் பற்றிய கதை.  இன்னமும் கூட என் கணினியில் டிவிடி பிளேயர் வைத்துக் கொண்டிருக்கும் நபர் நான்.  பென் டிரைவில்  நான் விரும்பும் பாடல்களை நான் வைத்திருக்கும் 'சிடி'க்களிலிருந்து சேகரம் செய்ய.  

சில நாட்களாய் கணினி பாயைப் பிறாண்ட ஆரம்பித்தது.  பூட் ஆகி எழுந்திருந்து வராமல் கழுத்தறுக்க, என் கணினி மருத்துவர் 'டிவிடி டிரைவ் பிரைமரி பூட்டிங்கில் இருக்கிறது, அதை எடுத்து விடுவோம்' என்று சொல்லி மாற்றிவிட்டார்.

பிறகு சட்டென பூட் ஆனாலும், மெல்ல மெல்ல ஹேங் ஆக ஆரம்பித்தது.  எனக்குத் தெரிந்த பாட்டி வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தேன்.  ஊஹூம்.  யு டியூப் திறந்தால் கொஞ்ச நேரத்தில் பிளாக், பேஸ்புக் என்று எல்லாப் பக்கங்களும் ரீல் அறுந்த  தியேட்டர் ஸ்க்ரீன் போல வெண்திரையைக் காட்டத் தொடங்கின.இன்னும் கொஞ்ச நாள் போனதும் தினமலர், தினமணி, தினத்தந்தி செய்தித்தாள்களைத் திறந்தாலும் அதே நிலை.  அதிலும் தினமணி திறந்தால் உடனடி விளைவு.  நான் கொஞ்சநாள்  செய்திகளை மொபைலில் பார்த்து அங்கே காபி செய்து இங்கு சேர்த்துக் கொண்டிருந்தேன்.  என் மாமா KGJயைக் கேட்டபோது  C டிரைவை செக் செய்து Defragment பார்க்கச் சொன்னார்.  ரொம்பப் பழைய முறை.  நான் பார்த்தபோது Windows 10 இல் அந்த ஆப்ஷனே இல்லை என்று தெரிந்தது.அவர் சமீபத்தில்தான் பேஸ்புக்கில் அவர் கணினி செய்த பிரச்னைகள் பற்றியும் அவர் செய்த முயற்சிகள் பற்றியும் அதன் வெற்றிகள் பற்றியும் எழுதி இருந்தார்.  அந்த நேரமெல்லாம் என் கணினியிலும் அதே போல பிரச்னைகள் இருந்தன.

கணினி மருத்துவ இளைஞனை அடிக்கடி அழைத்தேன்.  அவர் வந்து ஒவ்வொன்றாக முயற்சி செய்தார்.  அடிக்கடி "சிஸ்டம் வாங்கி பழசாச்சு ஸார்..   புதுசு வாங்கிடுங்க" என்றே சொல்லத் தொடங்கினார்.  எனக்கும் சபலம் தோன்றியது.  விலை கேட்டேன்.  ஒரு கணக்கு பார்த்துவிட்டு அவர் விலை சொன்னதும் சபலம் மறைந்து விட்டது.

அவர் வந்து சிஸ்டம் ஆன் செய்யும் நேரங்களில் அது சமர்த்தாக வேலை பார்த்தது கடுப்பைக் கொடுத்தது.  ஹேங் ஆகும் நேரம் அவரை 'எனி டெஸ்க்' எடுக்கச் செய்ய நான் எடுத்த முயற்சிகள் நீண்ட நாட்கள் பயனளிக்கவில்லை.  ஒன்று அவர் பயணத்தில் இருப்பார்.  அல்லது அவர் கையில் அந்நேரம் லேப்டாப் இருக்காது.  அப்போதென்று பார்த்துதான் அவர் அக்கா குழந்தைக்கு ஆயுஷ்ஹோமம் வரும்.  அப்புறம் புதிதாகப் பிறந்திருந்த தன் குழந்தையைப் பார்க்க ஒரத்தநாடு சென்று விடுவார்.

வரவர மாமி கழுதை போல் ஆனாளாம் என்பது போல (இந்தப் பழமொழி ஏன் சொல்கிறார்கள், என்ன அர்த்தம் என்று கூட புதன் கேள்வியில் கேட்கலாமோ!) என் சிஸ்டம் ஆன் செய்த அரைமணியிலேயே ஹேங் ஆகி அதுவே அணையத் தொடங்கியது.  எமெர்ஜென்ஸி!  கணினி மருத்துவரை அழைத்தேன்.  வழக்கம்போல அவர் ஒரத்தநாட்டில் இருந்தார்.  அவர் வரும்வரை அவ்வப்போது ஆன் செய்து அரைமணி அரைமணி வேலை செய்தேன்.

பின்னர் வந்த க..ம. 'OS  Re Install' செய்கிறேன் என்றார்.  எனக்கும் அது தீர்வைத்தரும் என்று தோன்றியதால், அவசரமாக என் பாஸ்வேர்டுகளை தேடினேன்.  என்னவென்றே மறந்து போயிருந்தன.  சரி 'மறந்துவிட்டேன் கடவுச்சொல்' சொல்லலாம் என்று காத்திருந்தேன்.

அதற்குமுன் அவரிடம் நான் இந்த சூடு பிரச்னையைப் பார்க்கச் சொன்னேன்.  "ப்ராஸஸர் ஹீட் ஆகிறது என்று சொல்கிறாயே, அந்த சொல்யூஷன் காய்ந்து விட்டதா பார்..  மறுபடி போடணுமோ?" என்றேன்.

"இல்லை சார்.  பார்த்தேன்.  இருக்கிறது"  என்று சொன்னபடியே அந்த இடத்தை ஆராய்ந்தான்.  "ப்ப்பா...  செம சூடு" என்று கையை உதறினான்.  என்னையும் தொட்டுப் பார்கக்ச் சொல்லி சூடு வைத்தான்.

"என்ன செய்யப்போறே?" என்றேன்.

"சொல்யூஷனை துடைத்து விட்டு புதுசா போட்டுப் பார்க்கறேன்" என்றான்.

Fan னை எளிதாகக் கழற்ற வரவில்லை.  "சார்..  கேபினெட் பழசாயிடுச்சு..  எல்லா பார்ட்ஸும் துரு சேர்ந்து அதுவே பிரச்சனை ஆகிறது..  புதுசு வாங்கிடலாம்"  என்றான்.

"இதோ பார் இளா..  உனக்கு ரிப்பேர் பார்க்க நேரமாவுதுன்னு என்னை புதுசு வாங்கச் சொல்லாத..  எல்லா ரிப்பேரும் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும், பொறுமையும் இருக்கணும்" என்று கடித்தேன்.  இதை நான் அவனிடம் பல நாட்களாகச் சொல்லி வருகிறேன்.  ஏனென்றால் அவன் புதுசுக்கு சொன்ன விலையும் அப்படி!  கொஞ்சம் மாடலை மாற்றினால் இன்னும் ஒரு எட்டாயிரம் குறைக்கலாம் என்றும் சொல்லி இருந்தான்.    வேறு வழி இல்லை என்று நான் செலவு செய்ய மனதளவில் தயாராகிக் கொண்டிருந்தேன்..  புதிய சிஸ்டம்  பார்க்கப்போகிறோம் என்கிற சபலமும் மனதில்...

அப்போதுதான் இளா அந்தத் தகவலைச் சொன்னார்.  "ஸார்..  Fan னோட ரெண்டு லெக் உடைஞ்சிருக்கு..."

"அதனால.."

"சரியா உட்காரலை"

"அதனால"

"அதை மாற்றினால் எல்லாம் சரியாகி விடும்"

கொஞ்ச நேரம் அமைதி.  பிறகு கேட்டேன்.

"கைல வச்சிருக்கியா?"

"இல்ல ஸார்.."

பிறகென்ன, அவன் இரண்டு நாள் நேரம் எடுத்துக்கொண்டு புதிய Fan கொண்டு வந்து மாட்டி இருக்கிறான்.  பயன் இருக்கிறதா என்று இனிவரும் நாட்களில் தெரியும்.  

"புதுசு புதுசு புதுசுன்னு புதுசு  வாங்க வைக்கறதுலயே இருந்தியே...  மெக்கானிக் என்றால் எந்த வித கோளாறையும் அலசி, நான்கு விதமா யோசிச்சு சரிபண்ணத்தெரிய வேண்டாமா?  எங்கள் KGS மாமா எப்படி எல்லாம் யோசிப்பார் தெரியுமா, நான் சொல்லிதான் நீ அந்த ப்ராசஸரை கழற்றினே...   இல்லாட்டா புதுசு வாங்க வச்சிருப்பே" என்றெல்லாம் கடித்ததை நான் இங்கு விவரிக்க விரும்பவில்லை!  

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இவரைத் தெரியுமோ?

தமயந்தி பிரபல எழுத்தாளர்.  இவர் விகடனில் எழுதிய கதை ஒன்றை நான் கூட எடுத்து நம் தளத்தில் விமர்சித்திருந்தேன்.  அந்தப் பதிவுக்கு அவரே வந்து பதில் சொல்லியிருந்த நினைவு   சும்மா அவரைப்பற்றி தெரிந்து கொள்ள...  விக்கியிலிருந்து...
தமயந்தியின் சொற்சிக்கனம் அலாதியானது, தமிழ்க் கதைப் பரப்பில், அவர் அளவுக்குக் குறைவான சொற்களால் பெரிய சித்திரம் தீட்டிக் காட்டும் எழுத்து வன்மை மிகவும் குறைவானவர்களுக்கே சாத்தியப்பட்டிருக்கிறது. பரீட்சார்த்தமான கதை சொல்லல் இந்தத் தொகுப்பில் உள்ளது. அது அந்நியப்பட்டுப் போகாமல், வாசகர்களுக்கு நெருக்கமாகவே இருக்கும்" என்று பிரபஞ்சன் குறிப்பிடுகிறார்.

தமயந்தி எழாம் வகுப்பில் இருக்கும்போது சிறு கவிதைகள் எழுதத் துவங்கினார். ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். முதலில் வெளிவந்த சிறுகதை 'பொழுது விடியுமென்று' (ஆனந்த விகடன்). 'நிழல்' தாய் இதழில் வெளிவந்தது. 'குளத்தங்கரைப் படிக்கட்டு', 'பொழுது விடியுமென்று' இரு சிறுகதைகளும் விகடன் ஜாக்பாட் பரிசைப் பெற்றன. தமயந்தி கல்லூரியில் படிக்கும் போது அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘தமயந்தியின் சிறுகதைகள்’ எழுத்தாளர் பிரபஞ்சனால் வெளியிடப்பட்டது. 2002-ல் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ‘அக்கக்கா குருவிகள்’ வெளியாகிப் பரவலாகப் பேசப்பட்டது. இதுவரை மொத்தம் 12-க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. கட்டுரைத் தொகுப்புகளும் வெளியாகி உள்ளன. '

தமயந்தியின் முதல் நாவல் 'நிழலிரவு' ,' சிறகுகள்'என்ற இதழில் வெளிவந்தது. இந்நாவலின் காலம் நெருக்கடி நிலை பிரகடனகாலம். கிறிஸ்துவர்கள், அவர்களுள் நாடார்கள் ஆதிக்கம், மதம் மாறிய கிறிஸ்தவர்கள், ஆங்கிலேயர்களின் வாரிசானவர்கள், இவர்களின் முரண்பாடுகளாய் விரிகிறது.

சரிகா ஷா, அருணா ஷான்பாக் போன்ற பல பெண்கள், அவர்கள் சந்திக்கும் அவலங்கள் அநீதிகளைக் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு 'இந்த நதி நனைவதற்கல்ல'.

தமயந்தியின் தேர்ந்தெடுத்த கவிதைகள் 'என பாதங்களில் படரும் நிழல்' என்ற தொகுப்பாக வெளிவந்தன.

மொழியாக்கம்  :  தமயந்தி சில்வியா பிளாத்தின் கவிதைகளை 'அதனினும் சிறப்பான உயிர்த்தெழுதல்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்தார்.

முதியவர்களின் நிலையைப் பேசும் தமயந்தியின் 'அனல்மின் மனங்கள்' சிறுகதை 'கழுவேற்றம்' என்ற குறும்படமாக உருவானது.

தமயந்தி இதுவரை 7 ஆவணப்படங்கள் இயக்கியுள்ளார். விழித்திரு' திரைப்படத்திற்கு மீரா கதிரவனுடம் இணைந்து வசனம் எழுதினார். தமயந்தி எழுதிய ‘தடயம்’ என்கிற சிறுகதையை அதே தலைப்பில் ஒரு மணி நேரப் படமாக உருவானது. ஒரேயொரு காட்சியிலேயே முழுப் படமும் படமாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ‘கிரவுட் ஃபண்டிங்’ தயாரிப்பில் சுயாதீன திரைப்படமாக உருவாகியது.

'காயல்’ திரைப்படம் தமயந்தியின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்தது.

"தமயந்தியின் 'நிழலிரவு' தேவாலய சபை அரசியல், ஆசிரியர் சமூக அரசியல், மதம்மாறி கிறிஸ்தவர்களை ஒதுக்கும் அரசியல் ஆகியவற்றின் மீதான் அதிகாரம் பற்றிய விமர்சனமாக விரிந்துள்ளது. கர்த்தரை கோவிலுக்குள் விற்பது பற்றிய விமர்சனம் வலுவாகவே வைக்கப்படுகிறது.கார்ல்மார்ஸ், ஏசுவின் சந்திப்புகளில் தொழிற்சங்க அரசியல் அதிகாரம், பொதுவுடமைக்கட்சிகளின் மீதான விமர்சனம் மேலிடுகிறது. கிறிஸ்துவ சபை அதிகாரத்தை கேள்விக்குறியாக்கும் தமயந்தி தொடர்ந்து காவல்துறை சார்ந்த அதிகாரத்தை கேள்விக்குறியாக்குவதை சமீபத்தில் வெளிவந்த 'கோட்டை காவல் நிலையம்' போன்ற நிறையக் கதைகளிலும், அவர் பங்கு பெறும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ' ரவுத்தரம் பழகு' போன்ற நிகழ்ச்சிகளிலும். புதிய தலைமுறை பத்திரிக்கையில் அவர் சமீபத்தில் எழுதி முடித்த “'இந்த நதி நனைவதற்கல்ல' தொடரிலும் காணலாம் ." என்று சுப்ரபாரதிமணியன் குறிப்பிடுகிறார்.

படைப்புகள்

  • கொன்றோம் அரசியை - பனிக்குடம் பதிப்பகம்
  • ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் (சிறுகதை) - கருப்புப் பிரதிகள்
  • அக்கக்கா குருவிகள் (சிறுகதை) - போதி
  • சாம்பல் கிண்ணம் (சிறுகதை)- போதி
  • வாக்குமூலம்(சிறுகதை) - போதி
  • முற்பகல் ராஜ்ஜியம் (சிறுகதை) - கவிதா பப்ளிகேஷன்
  • தமயந்தியின் சிறுகதைகள் - சுப்ரஜா ஶ்ரீதரனின் பதிப்பகம்
  • மனம் என்னும் மாய கண்ணாடி - மின்னம்பலம்
  • முட்களின் மேல் சில பட்டாம்பூச்சிகள் - பேட்டிகள் மின்னம்பலம்
நாவல்  :  நிழல் இரவு
கவிதை  :  என் பாதங்களில் படரும் கடல்
கட்டுரைத் தொகுப்பு  :  இந்த நதி நனைவதில்லை,  வல்லமை தாராயோ - மின்னம்பலம் கட்டுரைகள்
ஆவணப்படங்கள்  :  கந்தக பூமி
திரைப்பாடல்கள்  :
  • விழித்திரு திரைப்படத்தில் வெள்ளை இரவே (song)
  • karichan kuruvi (Movie) - Naan Saami Pulla (song)
  • இதமா இதமா, கொல்லாதே -கொலைகாரன் ,
  • சிவப்பு பச்சை மஞ்ச- மைலாஞ்சி


========================================================================================================

FaceBook ல் பகிர்ந்தது..

ஏதாவது எழுதலாம் என்று உட்கார்நதால் 'அடடா..  நிறைய படிக்க இருக்கிறதே..  நாம் பாட்டுக்கு எழுதிக் கொண்டிருக்கிறோமே' என்று தோன்றுகிறது.  அப்படி என்ன கிழிக்கிறோம் என்பது ஒருபுறமிருக்க, 

சரி அரியர்ஸில் இருக்கும் புத்தகங்களில் எதைப் படிப்பது என்று குழம்பி ஒன்றை எடுத்து ஒருவழியாய் படிக்கப் போனால் 'ஹையோ எழுதுவதற்கு நிறைய இருக்கிறதே..  டைம் வேஸ்ட் செய்கிறோமோ..  எப்போது எழுதுவது' என்ற எண்ணம் ஓடுகிறது.  

ஆக,  மனம் எப்போதும் எதிலிருந்தும் எஸ்கேப் ஆகவே பரபரக்கிறது!  இதை தத்துவ சிநாதனையாக மனம் எல்லாவற்றிலிருந்தும் விடுதலை பெறவே முயற்சிக்கிறது.  ஒரு ஆழ்நிலை தியானத்தை நோக்கியே மனம் செல்கிறது!  

அதாங்க..  தூக்கம்!



====================================================================================================



மிஞ்சிய சோ(ற்)றினிலே
கொஞ்சமாய் நீரூற்றி
பானையிலே மூடிவைத்து
காலையிலே எடுத்து
சிறுவெங்காயம் பச்சை மிளகாய்த்
துணையுடனே
குடித்து வந்தால் 
அக்னியாவது நட்சத்திரமாவது..  
அரிப்பாவது சூடாவது...         🙂    2013

===================================================================================


கங்கை கொண்ட சோழபுரம்

யாரைச் சொல்லி இருக்கிறேன் என்று தெரிகிறதா?


இந்தச் செய்தி வினோதமாக இருந்தாலும் நல்ல விஷயம்தான்.


====================================================================================

இணையத்தில் ரசித்தது...


================




\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

காசா சுப்பாராவ் தெரியுமோ?



=
சுதந்திர போராட்டத்தில் உப்பு சத்தியாகிரகம் உட்பட பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர்  காசா சுப்பாராவ்.  சுதந்திரத்துக்குப்பின் நேரு அரசோடும், அதன் கொள்கைகளோடும் ஒத்துப்போக முடியவில்லை அவரால்.  காங்கிரசில் இருந்தவர், நேரு போன்றவர்களின் நடவடிக்கை பிடிக்காமல் ராஜாஜியின் 'ஸ்வதந்திரா' கட்சியில் சேர்ந்தவர், ஸ்வராஜ்யா இதழைத் தொடங்கி அதற்கு ஆசிரியர் ஆனார்.  அவர் எழுதி இருப்பது....

ராஜாஜியும் நானும் கடற்கரைக்கு உலாவ போனோம்.  என் முகம் வாடி இருந்தது.ராஜாஜி அதற்கு என்ன காரணம் என்று கேட்டார். நான் சொல்லவில்லை. ஆனால் அவரே யூகித்துக் கொண்டார். 

"எனக்குத் தெரியும். இந்த வாரம் ஸ்வராஜ்யாவில் இரண்டு அச்சுப் பிழைகள் நேர்ந்து இருக்கின்றன.ஆனால் அவற்றை கண்டுபிடிக்கும் போது எல்லா பிரதிகளும் அச்சாகி விட்டன. ஒன்றும் செய்ய முடியவில்லை. அதுதானே உன் வருத்தம்?"  என்று கேட்டார் நான் தலையை ஆட்டினேன்.

"நடந்து போன விஷயம் என்பது கொட்டிப் போன பாலை போல. இனிமேல் கவனத்துடன் இருக்க வேண்டுமே தவிர, நடந்ததையே எண்ணிக் கொண்டிருக்கக் கூடாது" என்றார் ராஜாஜி.  எனக்கு சற்று தெளிவு உண்டாயிற்று.ஆனால் ராஜாஜியின் முகம் இப்போது வேதனையில் சுருங்கிற்று.  

"பிறருக்கு புத்திமதி சொல்லலாம். அது மிகச் சுலபம். ஆனால் அதன்படி தானே நடப்பது என்பது மிகவும் சிரமம். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. என்னால் ன்றும் மறக்க முடியவில்லை  நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தது அது என் மனைவி கடுமையாக நோய்வாய் பட்டு இருந்தாள்.  நான் அவளை வெகு ஜாக்கிரதையாக கவனித்துக் கொண்டிருந்தேன் அவளால் பாயில் தலைவைத்துப் படுத்துக்கொள்ள கூட முடியவில்லை. அவளுடைய வேதனையை குறைப்பதற்காக அவளுடைய தலையை எடுத்து மடிமேல் வைத்துக் கொண்டேன் கொஞ்ச நேரத்துக்கு பின் கைகால் மரத்து போய், மெதுவாக அந்த தலையை இறக்கி படுக்கையில் வைத்தேன். அவளுக்கு தன் நிலை புரிந்து விட்டது. 

"நான் அவ்வளவு சுமையாகவா இருக்கிறேன் பாவம் எவ்வளவு நேரம் தான் என்னை உங்கள் மடியில் வைத்து சுமப்பீர்கள் உங்கள் அன்புக்கும் ஓர் எல்லை உண்டு என்று வேதனையுடன் சொல்லி பெருமூச்சு விட்டாள்.  பத்து நிமிடங்களில் அவள் உயிர் பிரிந்து விட்டது. பத்து நிமிடங்கள் நான் பொறுத்திருக்கக் கூடாதா என்னை அறியாமல் அவள் மனத்தை புண்படுத்தி விட்டேனே...  40 ஆண்டுகளாகியும் என்னால் இந்த தவறு தந்த வேதனையை மறக்க முடியவில்லை" என்றார் ராஜாஜி .


- காஸா சுப்பா ராவ்,  Sidelights On Rajaji என்னும் நூலில் 

===================================================================================================

ஜோக்ஸ்...  






கவாஸ்கர் செய்தி மட்டும் படிக்கவும்.


ஜெ பாணியில் மாயா 


படத்தை எடுத்து, அதில் தவறாக  ஆணவங்கள் என்று இருந்ததை ஆவணங்கள் என்று மாற்றி இருக்கிறேன்!






94 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. சரணம், சரணம்.  வாங்க செல்வாண்ணா..   வணக்கம்.

      நீக்கு
  2. இன்றைய பதிவின் முதல் பகுதி ரசனை

    பதிலளிநீக்கு
  3. ​கணிணிக்கதை எந்தக் கணினியில் எழுதப்பட்டது. விலையை பார்த்து கணினி வாங்கும் எண்ணத்தை கைவிட்டீர்கள். கணினி "எனக்கும் வயசாகி விட்டது, வேலை செய்ய முடியவில்லை" என்று சொல்கிறது. இதையே பாஸ்சும் சொல்லிக்கொண்டிருப்பார்.

    தமயந்தி உங்களுக்கு உறவா? செவ்வாய் கதை ஒன்று போடலாமே?

    அமர்ந்திருப்பவர் நெல்லையா?

    ஏற்கனவே இருக்கும் கட்டடத்தின் வழியாக இருப்பு பாதை போட்டார்களா? அல்லது பாதை போட்ட பின்பு கட்டடத்தை எழுப்பினார்களா?

    ஜோக்குகள் கடிக்கின்றன.

    கவாஸ்கர் பெரிய சுயநலவாதி. டீமைப் பற்றியோ, மற்றவர்களை பற்றியோ கவலைப் பட மாட்டார்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவு கணினி இருக்கிறது?  என் வழக்கமான மேஜைக்கணினியில்தான்.  எனக்கு லேப்டாப் பிடிக்காது!!!

      தமயந்தி உறவுதான்.  எழுத்தாளர் - வாசகர் என்கிற உறவு!!

      நெல்லை செல்லும்போது நானெங்கே அங்கே சென்றேன்?  

      இல்லை, ரயில் நிலையம் அமைக்கும்போதே அதற்கான அதாவது மாலுக்கான இடவசதியுடன் அமைக்கப் போகிறார்களாம்!

      கடிஜோக்ஸ்தானே!  

      கவாஸ்கர் சுயநலவாதி - உண்மை.  ஆனால் இப்போது நேர்முக வர்ணனைகளில் மற்றவர்களை பற்றி பேசும்போது பெரிய நியாயவான் போல பேசுகிறார்!!

      நன்றி JKC ஸார்.

      நீக்கு
  4. ஜீவி சார் கொஞ்ச நாட்களாக காணவில்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி ஸார் நலமாக இருக்கிறார்.  இரண்டு நாட்களுக்கு முன் நானும் கேட்டேன்.  வெவ்வேறு தளங்கள், இணையம் என படிப்பதிலேயே பொழுதுபோய் விடுகிறது என்றார்.

      நீக்கு
  5. இன்றைய கதம்பம் நன்றாக இருந்தது.

    மனதைத் தொட்டது, ராஜாஜியின் மனைவியின் கடைசி கணங்கள். அறுவையாகத் தோன்றியது எழுத்தாளர் தமயந்தி பற்றிய விக்கி காப்பி பேஸ்ட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  தமயந்தி விஷயம் எடிட் செய்து போட்டிருக்கலாம்.  அவரது படைப்புகள் பற்றியும் சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் காபி பேஸ்ட்.  இல்லை என்றால் யார் இவரைப்பற்றி பார்த்திருக்கப் போகிறீர்கள்!!  ராஜாஜி மனைவி விஷயம் என் நெஞ்சிலும் தங்கியதால் பகிர்ந்தேன்.

      நீக்கு
    2. இப்போது கொஞ்சம் எடிட் செய்திருக்கிறேன்.

      நீக்கு
  6. காவஸ்கரை எல்லோரும் சுயநலவாதி என்றே சொல்லுவார்கள். ஆனால் சுயநலத்தோடு ஒருவன் விளையாடுவது அணியின் ஸ்கோரை அதிகரிக்கச் செய்யும். அணியில் நீடித்திருப்பதற்கான வழி அது. நல்லவன், டீம் ஸ்ப்ரிட் உடையவன் என்பதற்காக ஒருவனை அணியில் சேர்ப்பார்களா என்ன? ஆனால் காவஸ்கரிடம் எனக்குப் பிடிக்காத விஷயம், அரசியல் செய்து திறமையான கபில்தேவை முடக்க முயன்றது, சில நேரங்களில் வெற்றிபெற்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது கங்குலி, தோனி கோலி ரோகித் என்று எப்போதுமே இருவருக்கிடையில் நடக்கும் போர்! 

      கவாஸ்கரை நான் அவர் ஆடிய காலங்களில் ரசித்திருக்கிறேன்.  அவர் லெக் திசையில் பந்தைத் தட்டி விட்டு ஓடும் அழகு...  எப்போதுமே தனது முதல் ஓட்டத்தை இப்படிதான் எடுப்பார் என்று அப்போது செய்தி போட்டிருந்தார்கள். 

      மேலும் தினேஷ் துணி விளம்பரங்களில் அழகாக இருப்பார்!!!

      நீக்கு
    2. நீங்கள் தினேஷ் கார்த்திக்கைக் குறிப்பிடுகிறீர்களா? குவைத்தில் இருந்து பின் இந்தியாவிற்காக விளையாடியவர். அவரை நினைத்தால் எனக்கு எப்போதுமே அனுதாப உணர்வும், முரளி விஜயின் கயமைத் தனமும் நினைவுக்கு வரும்.

      தோனி மாத்திரம் விதிவிலக்கா என்ன? எங்கே டென்டுல்கரை 200 ரன்கள் எட்டாமல் செய்துவிடுவாரோ என நம்ப வைத்தவர். யுவராஜ் சரியாகச் செயல்படாத்தால் அணியிலிருந்து விலக்கியவர். ஆனால் பாவம், தனக்கு என்று வரும்போது கறார் தன்மையைக் காட்டமுடியாமல் தவிக்கிறார்.

      நீக்கு
    3. தினேஷ் - விஜய் கதை எனக்கும் தெரியும்.  பாவம்.  ஆனால் நான் சொல்ல வந்தது தினேஷ் சூட்டிங் விளம்பரங்களில் கவாஸ்கர்.

      நீக்கு
  7. Sonத்தி கடி ஜோக் இங்கேயே வந்திருந்தது கோல் இருக்கிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா?  விடுங்க..  உங்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி.  அந்த இதயம் பேசுகிறது பைண்டிங் ஜோக்ஸ் முடிந்து விட்டது.  அதிலிருந்து சில கதைகள் எடுக்க வேண்டும்.  அலுப்பாகவும் இருக்கிறது.

      நீக்கு
  8. எந்த ஒரு எல்க்ட்ரானிக் பொருளையும் குறைந்த பட்சம் ஐந்து வருடங்களாவது உபயோகிக்கணும் என்பது என் எண்ணம். அது மொபைலோ கம்ப்யூட்டரோ. எப்போதுமே எளிதான ஆப்ஷன், தூக்கிப் போட்டுவிட்டு புதிதாக வாங்குவது.

    கணிணி பகுதியை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு பகுதி வரை அவர் என்றும் பிறகு அவன் என்றும், எழுதியிருப்பது இரண்டு வெவ்வேறு நேரத்தில் இந்தப் பகுதி எழுதப்பட்டிருக்கும் எனச் சொல்கிறது. நீங்களே மீண்டும் படிக்கவில்லை எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என் என் முந்தைய ஒன் ப்ளஸ் மொபைலை கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் வைத்திருந்தேன்.  பிறகுதான் சாம்ஸங்குக்கு மாறினேன்!

      கணினி மருத்துவர் ஆரம்பத்தில் நெக்ஸ்பேஸ் என்னும் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.  அதை நடத்தி வந்த ஜெகன் கே ஜி எஸ்ஸின் ஆஸ்தான கணினிக்காரர்.  அவர்தான் ஜெகனை எனக்கு அறிமுகபப்டுத்தினார்.  அவருக்கு போன் செய்தால் அல்லது அவர் நிறெயவனத்துக்கு போன் செய்தால் யாரையாவது இப்படி அனுப்புவார்.  புதுப்புது பசங்க வருவார்கள்!

      அப்படி வந்தவன் இவன்.  ஓரிரு மாதங்களிலேயே முதலாளியுடன் அக்கருத்து வேறுபாடு ஏற்பட்டு புரிந்தவன், பின்னர் ஆறுமாதம் கழித்து சொந்தமாக தொழில் தொடங்க, முதலில் என்னை வந்து பார்த்து ஆதரவு கேட்டான்.  சரி என்றேன்.  அன்று முதல் அவன் என் ஆஸ்தான கம. அப்போது அவன் வயது 21 அல்லது 22 இருக்கும்.  எனக்குத் தெரிந்த பலருக்கும் அவனை அறிமுகபபடுத்தினேன்.  அவனும் அயராது உழைத்து இன்று மாதம் ஒரு லட்சத்துக்கு மேல் பார்க்கிறான்.  ஒரு பொது மரியாதையில் அவர் இவர் என்று ஆரம்பித்தாலும், என் கைகள் தானாகவே அவன் இவன் என்று அடிக்கத் தொடங்கி விட்டன!  ஒரே நாளில், நேற்று மாலை ஒரே ஷாட்டில் எழுதப்பட்டது இது!

      நீக்கு
  9. Missing Pieces சிற்பியின் கைவண்ணத்தை பெங்களூர் மாலில் கண்டிருக்கிறேன்.

    மீனின் முகம், மாட்டிக்கொண்டுவிட்டேனே என வருந்துவது போல இல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், மீனின் முகம் அச்சச்சோ என்கிறது!  அதை விடுவித்து யாராவது தண்ணியில் பட்டால் பரவாயில்லை!  ஒரு மீம்ஸ் ரீல்ஸ் பார்த்தேன்.  தண்ணீரை விட்டு வெளியே வந்த ஒரு மீனை ஒன்றில் நாயும், இன்னொன்றில் கொக்கும் நீரில் சேர்க்கின்றன.  கொக்காவது AI யாக இருக்கலாம்.  நாய் ஒரிஜினல்!  

      நீக்கு
  10. சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகள் இப்போது உயிருடன் மீண்டால் கொலையாளிகளாக ஆவார்களா இல்லை ஜோதியில் எக்கியமாகிவிடுவார்களா என்ற புதன் கேள்வி என் மனதில் எழுகிறது. ஏன் காமராஜரே இப்போது உயிருடன் வந்தால், அவருடைய உறவினர்களே கொலைகாண்டு ஆவதற்கான சூழலே இப்போது இருக்கிறது இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அப்படி தோன்றவில்லை.  அவரின் பாதிப்பால் இன்னும் பல நல்லவர்கள் உருவாகக்கூடும்!

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கம். பிரார்த்தனை செய்வோம்.

      நீக்கு
  12. ​டெஸ்க்டாப் எப்போதுமே நல்லது தான். ஆனால் இந்த விண்டோஸ் முழு ஆக்ரமிப்புடன் அதனை வேலை வாங்கும்போது பாவம் கணினி சோர்ந்து விடுகிறது. உதாரணமாக சாப்ட்வேர் அப்டேட், பேக்கப் ரெஸ்டோர் போன்ற பின்புலன்களில் இயங்கும் செயலிகள்.

    நான் விண்டோஸ் xp க்கு பிறகு விண்டோஸ் பக்கம் செல்லவில்லை. எல்லாமும் linux தான். காரணம் விண்டோஸ் இல்லாமல் கணினி வாங்கினால் சீப் ஆக வாங்கலாம். அல்லது அசெம்பிள் செய்யலாம்.

    தற்போது என்னுடைய டெஸ்க்டாப் அவுட். ஹார்ட் டிஸ்க் கெட்டு விட்டது. தூசி. தற்போது லெனோவா லேப்டாப் உபயோகிக்கிறேன். இரண்டு பார்டிசன் (உபுண்டு லினெக்ஸ், விண்டோஸ் 10)

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லினக்ஸ் நானும் பழகிப் பார்த்தேன்.  சரியாக வரவில்லை; பொறுமையும் இல்லை.  விண்டோஸ் உண்மையிலேயே உபயோகிப்பாளர்களின் நண்பன்.  கையாளுவது எளிது.  அலுவலகத்தில் கூட முதலில் லினக்ஸ் கொண்டு வந்தார்கள்.  பின்னர் என் ஒரு கணினியில் விண்டோஸ் ரகசியமாக ஏற்றுக் கொண்டேன்.  சில விஷயங்களுக்கு அது உபயோகப்பட்டது!  நம்ம கோ பிளாக்கர் எல்கே உபுண்டுவுக்கு வோட்டு போடுவார்.  பாதுகாப்பானது.

      நீக்கு
    2. எனக்கு மோனோபாலியாக இருக்கும் பிராண்டுகளைப் பிடிக்காது. உதாரணமா, ஆப்பிள். நீங்க சாதனம் வாங்கினால் 3-4 வருடத்துக்குள் மாற்றியே ஆகவேண்டும். அவனது ஆக்சசரீஸ் ஐந்து ரூபாய் பெறுமானத்தை நூறு ரூபாய்க்கு விற்பான். (ஒரு குவாலிட்டியும் கிடையாது, பம்மாத்து) எனக்கோ எதையும் ஆறு வருடங்களாவது உபயோகிக்கணும். அதனால் ஆப்பிள் சாதனங்களை ஆரம்பத்திலிருந்து உபயோகப்படுத்தியவன், 2021லிருந்து ஆன்ட்ராய்டுக்கு மாறிவிட்டேன். லினக்ஸ் வைத்து எங்கள் கம்பெனியில் வேலை செய்பவர்களைப் படுத்தியதை பிறகொரு சமயத்தில் எழுதுகிறேன்.

      நீக்கு
    3. ஆப்பிள் பக்கமே நான் தலை வைத்து படுத்ததில்லை.  உபயோகிப்பாளர்களை படுத்தும் மாடல்!

      நீக்கு
    4. லினெக்ஸ் ...போர். விண்டோஸ் மிக எளிது.

      கீதா

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் நிறைய செய்திகளை கொண்டு அலங்கரிக்கிறது. பாராட்டுக்கள்.

    கணினி பற்றிய செய்திகள் அருமை. எங்கள் வீட்டிலும் என் சின்ன மகனின் இந்த மேஜைகணினி இதே பிரச்சனைகளுடன் இருக்கிறது. எனக்கு இதைப்பற்றிய விபரங்கள் அவ்வளவாக தெரியாது. ஆனால், மகன் மொத்தமாக வந்த விலைக்கு விற்று விடலாம் என்கிறார். என்னவாகப் போகிறதோ..!

    காலையில் பழஞ்சோறு கவிதை அருமை.

    மீனின் படம் வேதனை தருகிறது. எப்படித்தான் இப்படிச் சென்று இசகு பிசகாக மாட்டிக் கொண்டதோ?( நாம் அனேக பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டிருப்பதைப் போல.. ) இன்னமும் பிறகு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினியை விற்கும்போது நம் ஹார்ட் டிஸ்க்கை எடுத்துக்கொண்டுவிட வேண்டும்.   Or பார்மேட் செய்து விட்டு கொடுக்கலாம்.  அதில் கூட பைல் ரெகவரி சாத்தியம் என்று பயமுறுத்தினார்கள்!

      மற்ற பகுதிகளை ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  14. ஸ்ரீராம் உங்க கணினி அனுபவங்கள் கிட்டத்தட்ட "ஒரே படகு"!!!!!

    நானும் புதுசின் விலைக்குப் பயந்து, என் மகனிடம், உன் பழைய கணினியை தூர போட்டுடாத எனக்கு வேண்டும்னு சொல்லி வைச்சிருக்கேன்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என்ன பெரிய கணினி நிறுவனத்திலா வேலை பார்க்கிறேன், பெரிய அளவில் மாற்ற என்று நினைத்துக் கொண்டேன்! நமக்கு வேண்டியது எளிதாக திறந்து வேலை பார்க்கும் வண்ணம் இருந்தால் போதும்.

      நீக்கு
  15. வரவர மாமி கழுதை போல் ஆனாளாம் என்பது போல//

    ஸ்ரீராம் மாத்திப் போடுங்க....வர வர மாமா கழுதை போல் ஆனாராம்!!!! அப்படியும் சொல்லலாமே.

    வேற ஒன்னுமில்லை....ஒழுங்கா சமைச்சிட்டிருந்த மாமி, வீட்டைப் பார்த்திட்டிருந்த மாமி இப்பலாம் சரியா சமைக்கறதில்லை, பார்க்கறதில்லை.... ஏதாவது காரணம் சொல்லி ஓபி அடிக்கறாங்கன்னு....இருக்கும்!!!!! ஏதாச்சும் புதுசா சமைக்கறேன்னு இழுத்தடிக்கறான்னு...

    நான் சொல்லுவேன். முன்ன எல்லாம் ஒழுங்கா காய் வாங்கிட்டுவந்து கட் பண்ணிக் கொடுத்த மாமாக்கள், இப்பலாம் ய்ட்யூப் வீடியோக்களிலேயே ஆழ்ந்து போய்டாறாங்க....வர வர.....!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏங்க கீதா ரங்கன் க்கா... ஆண்கள் எப்போதுமே கொஞ்சம் மந்தம்தான். பெண்கள் நுண்ணறிவு படைத்தவர்கள். அதனால் பழமொழி சரிதான். மாத்தாதீங்க.

      நீக்கு
    2. கழுதை என்று வரக்கூடாதாம்.  கயிதை என்று வரவேண்டுமாம்.  ஊமத்தம்பூ!

      நீக்கு
    3. ஹாஹாஹா நெல்லை......

      கீதா

      நீக்கு
  16. க்டைசில நீங்க சொல்லியிருப்பதுதான், ஸ்ரீராம் நானும் இங்கு....வீட்டில் என்னென்ன இருக்கு, எதை வைச்சு எப்படி அட்ஜஸ்ட் செஞ்சு அதை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்னு ரொம்ப யோசிப்பேன். குறிப்பா அடுக்களையில்....(இதுவும் ஒரு எக்ஸ்க்யூஸ்!!! நான் எழுத தாமதமாவதற்கு!!! ஹிஹிஹி) சமீபகாலத்தில் இப்படி நிறைய வேலைகள் வீட்டில் செய்ய நேர்ந்தது. சில ரிப்பேர்களை கூகுளில் தெரிந்து கொண்டும் செய்தேன் ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​நான் எல்லாவற்றிலும் இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் இதில் இப்படி இருந்தேன்!

      நீக்கு
  17. தமயந்தி - அவர்களைப் பற்றி அறிந்திருக்கிறேன். தின்னவேலிக்காரர். இவரது கதைகள் வாசிக்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. இவரது பேட்டி ஆனந்தவிகடனில் (இணையத்தில்) வந்ததை வாசித்திருக்கிறேன். அவர் சொல்லியிருக்கும் கருத்துகள் பல நான் நினைப்பவை.

    இங்கு அப்பகுதியை வாசித்துவிட்டு வருகிறேன் .

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இவரது கதைகள் ஒன்றிரண்டு வாசித்திருக்கிறேன்.  அஷ்டே.  அதுகூட நினைவில் இல்லை!

      நீக்கு
  18. சொல்ல மறந்து போச்சே இவர் இயக்குநரும் கூட என்று அந்தப் பேட்டியில் வாசித்த நினைவு

    கீதா

    பதிலளிநீக்கு
  19. தமயந்தியைப் பற்றிய குறிப்புகள், அவரை வியந்து பார்க்க வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதனையாளர்கள் பலரும் நம்மை வியக்கவே வைக்கிறார்கள்.

      நீக்கு
  20. ஸ்ரீராம் (திருஇராமன்!!!! புரிந்ததா!!? ஆனா இதிலும் தமிழ் இல்லையாம்) உங்க முகநூல் பக்கத்துக்கு ஹைஃபைவ்!!!!!!! அதே நிலை ஆனா ஒன்றே ஒன்றுதான் வித்தியாசம். நான் தூங்கிடறது இல்லை.

    வாசிக்க எடுத்து வைச்சேன்...உடனே ஓ பதிவு பாதில இருக்கே எழுதி முடிக்கலையே....கடவுளே மிளகாய்ப்பொடி தீர்ந்துவிட்டது...பொடிக்கணுமெ, கஞ்சிப் பொடி திரிக்கணுமே, சாம்பார் பொடி திரிக்கணுமே.....கடைக்குப் போகணுமே....

    இதுக்குள்ள தங்கையிடமிருந்து மெசேஜ் வரும்....குட்டி, கஞ்சிப் பொடி திரிச்சியானா எனக்கும் ஒரு பார்சல்....உடனே போட்ட அளவை விட கூடுதல் போடணுமே....இப்படியே போய்க் கொண்டிருக்கிறது. இடையில் ப்ளாக் பார்க்கணும்...அப்படியாச்சும் கொஞ்சம் வாசிப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொத்தத்தில் எந்த ஒரு காரியத்திலும் முழுமை இல்லாமல், நிறைவு இல்லாமல் ஈடுபடுகிறோம்!

      நீக்கு
    2. அதேதான்....ஆனா பாருங்க ஸ்ரீராம், எனக்கு ஒரு இரண்டு மூன்று வருடங்கள் முன்பு வரை இருந்த அந்த மன நிலை இப்ப இல்லைன்றதுதான்...யோசித்துப் பார்க்கிறேன்.

      கீதா

      நீக்கு
    3. //உடனே போட்ட அளவை விட கூடுதல் போடணுமே....இப்படியே போய்க் கொண்டிருக்கிறது.// கீதா ரங்கன் க்கா... இந்த மாதிரி உதவும் விஷயத்தில் நீங்க அலாதிதான். கொஞ்சம்கூட சலிச்சுக்காம, எங்களுக்கு உடனே அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்து உதவுனீங்களே, அதுவும் தவிர எங்களுக்காக ஒரு பொடியும் தயார் செய்துகொண்டுவந்தீங்களே... மிக்க நன்றி. (ஆமாம் அந்த கஞ்சிப் பொடி சாம்பிள் அடுத்த முறை உங்களைப் பார்க்கும்போது வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்கணும் ஹிஹிஹி)

      நீக்கு

    4. ​கஞ்சிப்பொடி கர்கிடக கஞ்சி பொடியா? இங்கு சாந்திகிரி, மற்றும் ஒளஷதி கஞ்சி பொடிகள் பிரபலம்.

      Jayakumar

      நீக்கு
    5. ஆம் . முன்னர் இருந்த வேகமும் ஆர்வமும் கொஞ்சம் குறைவது இயற்கைதானே...

      நீக்கு
  21. பழைய வீட்டில் இருந்த பூனாச்சுவோ? அழகு!!

    பூனைகளுக்குக் கம்ப்யூட்டர் ரொம்பப் பிடிக்கும் போல. அதுல தூங்கறாங்க இல்லைனா ஃப்ரிட்ஜ் மேல ஏறி. கதகதப்பு வேணும் போல!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அதேதான்.  அன்பான பூனாச்சு!

      நீக்கு
    2. ஐயோ..இந்த பூனை, நாய் இவர்களிடம் ரொம்ப அலாதியான பிரியம் வைத்திருக்கிறவங்களைக் கண்டா எனக்கு ஏனோ ஏலியன்களைப் பார்ப்பதுபோல இருக்கிறது.

      நீக்கு
    3. எதிர்பார்த்தேன்!

      நீக்கு
  22. அக்னியாவது நட்சத்திரமாவது..
    அரிப்பாவது சூடாவது..//

    ஹாஹாஹா இங்க இதெல்லாம் இல்லைனாலும், உங்க கவிதை நாவூற வைக்கிறது. ரொம்ப நாளாச்சேன்னு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் கூட நான் இங்கு முயற்சித்தேன்.  பழைய சுவை இல்லாததற்கு காரணம் அரிசியா, தண்ணீரா என்று யோசித்தபோது குக்கர் சாதம் என்பதால் என்று புரிந்தது!

      நீக்கு
  23. யாரைச் சொல்லி இருக்கிறேன் என்று தெரிகிறதா?//

    அங்க ரெண்டு பேர் உட்கார்ந்திருக்காங்களே நிழல் பகுதில மேல ஏறி!

    படம் ரொம்ப அழகா இருக்கு.

    சொத்துக்களை......// சரிதான். முழு செய்தியும் பார்த்தேன் ஸ்ரீராம்.

    எந்த அடுக்கு மாடி வணிக வளாகமோ?

    இங்கு மந்திரி ஸ்கொயர் மால் ஒட்டித்தான் மெட்ரோ ரயில். அதன் பெயர். இறங்கினால் மாலுக்குள் ....மாலின் பின் பக்க வாசலில் இருந்தே மெட்ரோவில் ஏறிக் கொள்ளலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இருவர் அங்கே அமர்ந்து சில்மிஷத்தில் இருந்தார்கள்!   சொத்துகள் விவரம் வரவேற்கக்கூடியதுதான்.   இங்கு ஸ்டேஷன் கட்டும்போது மாலும் வைக்கக் கூடிய அளவு கட்டப்போகிறார்களாம்.

      நீக்கு
  24. இணையப் படம் சூப்பர். ரசனையான படம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீன் முகத்தைப் பார்த்தா, ஐயோ என்னை காப்பாத்துங்கந்ற ஃபீலிங்க்

      கீதா

      நீக்கு
  25. ராஜாஜியின் மனைவியின் கடைசி தருணங்கள் மனதைத் தொட்டது. பாவம். ஒரு கணவராக ராஜாஜியைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. நல்ல மனசு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல வகையிலும் நல்ல மனிதர்.. அவர் 67 ல் செய்த தவறை மட்டும் மன்னிக்கவே முடியாது!!!!!

      நீக்கு
    2. //67 ல் செய்த தவறை மட்டும்// நல்லா இலைல அறுசுவை உணவு வைத்துவிட்டு, ஓரத்தில் ஒரு ஸ்பூன் நரகலை வைப்பது போல, அவர் செய்த செயல்

      நீக்கு
    3. 1967இல் நீங்கள் பள்ளிக்கூடத்திற்கு கூட போயிருக்க மாட்டீர்கள். அப்புறம் எப்படி தவறு, சரி என்பதை வரையறுக்க முடியும்.

      நீக்கு
    4. ஜெயகுமார் சார்.. நம் காலத்தில் நடப்பதை மாத்திரம் சரி தவறு என வரையறுக்க முடியுமா? கண்ணால் காண்பதே பொய் காதால் கேட்பதும் பொய் என்றிருக்கும் போது? அரசியல் பொறாமையால் விளைந்த அனர்த்தம் அது

      நீக்கு
    5. நடந்தது தவறா இல்லையா என்பது இத்தனை வருடங்களுக்குப் பிறகு சொல்வதுதானே சரியாக இருக்கும்?  ஒரு செயல் நடக்கும்போதே எப்படி  கணிக்க முடியும்  ?

      நீக்கு
  26. மாயவரம் வீதி அப்படி இருந்ததா? அப்போ அப்படி இருந்திருக்குமோ? இப்ப எப்படியோ!!
    இப்ப இந்த ஜோக் போட்டாங்கனா, துறவின்னு சொல்லாம காவிக் கட்சினு அரசியல் வரலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. சிரிப்பதற்கு மட்டுமே ஜோக் - வெண்டைக்காய் கூடுதலாகன்றதைப் பார்த்ததுமே ஜோக் எப்படிப் போகும் என்பது யூகிக்க முடிந்துவிட்டது!!!

    மசாலாவில் - டிஸ்னிலேன்ட் செய்தி கவர்ந்தது.

    கவாஸ்கரின் பேச்சில் அவர் சொன்ன விஷயம் பிடித்தது. இன்னாரின் மைத்துனன் என்று சொல்வதை விட....பெயரைச் சொல்வது - அவரது தனி அடையாளத்தைச் சொல்வது இல்லையா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரெக்டுதான்.  கவாஸ்கரின் சில கல்யாண குணங்களை அறிந்தவர்கள் அவரை எதற்கும் கொண்டாட மாட்டார்கள்!

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    "வரவர மாமி கழுதை போலானாளாம்." என்ற பழமொழிக்கு உண்மையான அர்த்தம் ஓரிடத்தில் படித்தேன். இதில் கழுதை என்ற இடத்தில் "கயிதை" என வர வேண்டுமாம். (சென்னையில் கூட இப்படி கழுதைக்கு "கயிதை" என்றுதான் குறிப்பிடுவார்கள்.கேட்டிருக்கிறேன். ) கயிதை என்றால் ஊமத்தம்பூ. இந்தப்பூ பூக்கும் போது மென்மையாக அழகானதாக பூத்து நாட்பட்ட, நாட்பட்ட அதன் காய் விஷமுள்ள முட்கள் அடங்கிய கடின தோற்றத்தை பெற்று விடும். அது போல மாமியார்கள் ஆரம்பத்தில் இந்த மென்மையான பூவைப் போல அன்பாக இருந்து, பின் வம்பாக பேசி, நாளடைவில் மருமகள்களுக்கு வேம்பாக அந்த ஊமத்தங்காயைப் போல கசந்து விடுவார்கள். அதனால்தான் இந்த "வரவர மாமியார் "பழமொழி உண்டாயிற்றாம். ( ஆனால், இறுதிவரை அன்பாகவே இருக்கும் மாமியார்களை வணங்கிக் மன்னிப்பும் கேட்டுக் கொள்வோம்.) ஏதோ படித்ததை பகிர்ந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கூகுள் செய்து பார்த்தேன் அக்கா.  மாலைமலர் பக்கம் ரொம்பப் படுத்தியது!

      நீக்கு
  29. ரொம்ப நாளைக்கப்புறமா எபி யின் வியாழனுக்குள் நுழைந்தேன். கணிணி, தமயந்தி (இவ்வளவா, இப்படியெல்லாமா எழுதியிருக்கிறார்..தமிழை நாம் சரியாகக் கவனிப்பதில்லையோ எனத் தோன்றுகிறது), கவாஸ்கர், கவிதை, ஜோக்குகள்.. என்றெல்லாம் கதம்பத்தை ஒரேயடியாக நீட்டிவிட்டீர்களோ எனத் தோன்றியது. இருந்தும் சுவாரஸ்யம்..

    காஸா சுப்பாராவ் எனப் படித்ததும் Gaza-வா.. எனத் திடுக்கிட்டேன். நாம் வாழும் சூழல் அப்படி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்...  பதிவு நீளம் என்று தோன்றி கொஞ்சம் குறைத்தால் அடுத்த வாரம் இந்தப் பகுதியைக் காணோமே, அந்தப் பகுதியைக் காணோமேன்னு கேள்வி வருகிறது!  தவிர்க்க முடியவில்லை!  ஹிஹிஹி...  சுலபமாக அடுத்தவர்கள்மேல் பழி போடுவது சுலபம், சுவாரஸ்யம் இல்லை?

      நீக்கு
  30. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  31. எங்களுக்கும் கணினி பாலா என்ற ஒரு பையன் மாயவரத்தில் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்து தருவார்.
    குடும்ப மருத்துவர் போல குடும்ப கணினி வைத்தியர் என்று பேசிக் கொள்வோம்.

    //சிஸ்டம் வாங்கி பழசாச்சு ஸார்.. புதுசு வாங்கிடுங்க" என்றே சொல்லத் தொடங்கினார்//

    நல்ல மனிதர் போலவே! அவரை ரிப்பேருக்கு கூப்பிட முடியாதே
    அவருக்கு வருமானம் போகும் என்று கவலைபடவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நல்ல மனிதர் போலவே! அவரை ரிப்பேருக்கு கூப்பிட முடியாதே
      அவருக்கு வருமானம் போகும் என்று கவலைபடவில்லையே! //

      AMC காசு வாங்கி கொள்வார்.  புதுசு என்றால் 34 K  அல்லது 25 K .  அவருக்கு சுலபம்.  இப்போது பெரிய கஸ்டமர்கள் பிடித்து வைத்திருப்பதால் என்னிடமிருந்து வரும் தொல்லை அழைப்புகள் இல்லாதிருக்க விரும்புவார்!  ஆனால் நல்ல பையன்.  ரொம்ப நேர்மை, கொள்கை பிடிப்புள்ள பையன்!

      நீக்கு
  32. தமயந்தியின் சில கதைகள் வாசித்து இருக்கிறேன். உங்கள் பதிவு மூலம் மேலும் அவரைபற்றிய விவரங்கள் தெரிந்து கொண்டேன்.
    பூனையாருக்கு நல்ல சரித்திர நாவலில் தலை வைத்து படுத்தால்தான் தூக்கம் வருகிறது போல!

    //சரி அரியர்ஸில் இருக்கும் புத்தகங்களில் எதைப் படிப்பது என்று குழம்பி ஒன்றை எடுத்து ஒருவழியாய் படிக்கப் போனால் 'ஹையோ எழுதுவதற்கு நிறைய இருக்கிறதே.. டைம் வேஸ்ட் செய்கிறோமோ.. எப்போது எழுதுவது' என்ற எண்ணம் ஓடுகிறது. //

    என் பொழுதுகளும் இப்படித்தான் போகிறது எதையும் முடிக்க முடியாமல்.

    பகலில் தூங்க மாட்டேன், இரவு தூக்கம் வராதே பகலில் தூங்கி விட்டால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  நினைவு வைத்திருக்கும் அளவு தமயந்தி கதைகள் படித்திருக்கிறீர்களா? 
       
      எழுதவும் ஓடவில்லை, படிக்கவும் ஓடவில்லை.

      நான் பகலில் தூங்கத் தொடங்கி விட்டேன்...   வெட்கமாகத்தான் இருக்கிறது!

      நீக்கு
  33. பழைய சோறு கவிதை அருமை.
    இப்போது மருத்துவர்கள் உரக்க குரல் கொடுக்கும் பழைய சோறு, சாதம் வடித்த கஞ்சி பயன்கள் செய்திகள் நிறைய வலம் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய சோற்றை காசு கொடுத்து பெரிய ஹோட்டல்களிலிருந்து மண்பானை பேக்கிங்கில் வாங்குகிறார்கள்!

      நீக்கு
  34. யாரைச் சொல்லி இருக்கிறேன் என்று தெரிகிறதா?//

    தெரிகிறது கோயில் வாசல் மேல் படியில் அமர்ந்து இருப்பவர்களை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)) வெயிலுக்கு ஒதுங்கி இருக்கிறார்கள்!

      நீக்கு
  35. ராஜாஜியின் வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது.
    மற்ற பகுதிகளையும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா. ராஜாஜியின் வருத்தம் - சில வேதனைகள் வாழ்நாள் முழுவதும் கூட வரும்!

      நீக்கு
  36. வணக்கம் சகோதரரே

    பூனையின் துயில் அழகாக இருக்கிறது.அது இப்படித்தான் கண்மூடி விட்டு சிறு சப்தம் கேட்டாலும் விழித்துக் கொண்டு விடும்.

    /பிறருக்கு புத்திமதி சொல்லலாம். அது மிகச் சுலபம். ஆனால் அதன்படி தானே நடப்பது என்பது மிகவும் சிரமம்/

    ஆம்.. உண்மையை சொல்லியுள்ளார் திரு ராஜாஜி அவர்கள். அவரின் வேதனை மறக்க முடியாதது.

    ஜோக்ஸ் மற்றும் சிறுசிறு செய்திகள் நன்றாக உள்ளது. மூளை வளர்கிறது இல்லையோ, இப்போது மதிய உணவில், சாதத்தை இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொண்டு காய்கறிகள் தட்டுதட்டாக சாப்பிடச் சொல்கிறார்கள். இவர்கள் சொல்வதால் ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் இமயம் தொடுகிறது.

    ஜெ ஓவியம் போலவே உள்ளது மாயா அவர்களின் சித்திரமும்.

    கூட்டத்தில் காணமல் போன பெற்றோர்களை அப்படியே முதியோர் இல்லத்திற்கு போகட்டும் என்றில்லாமல் தேடி வந்து அழைத்துப் போகிறார்களா குழந்தைகள். பரவாயில்லையே..! (நீங்கள் படிக்க வேண்டாமென்றாலும் , கண்களில் பட்டு படித்தும் விட்டேன்.:))) ) அத்தனை செய்திகளும் வித்தியாசமாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  கவாஸ்கர் செய்தி மடங்கி வருவதால்  உடன் இருக்கும் அந்தப் பகுதியை கட் செய்ய முடியவில்லை.  டெலிட் செய்யவும் முடியவில்லை.  அதுதான் அப்படியே பகிர்ந்தேன்!  எப்படியும் ஒரு புதிய செய்தி.  இல்லையா?

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  37. கதம்பம் நன்றாக இருந்தது.

    பலவித செய்தித் தகவல்கள்.

    .கத்தரிவெய்யிலுக்கு பழம்சோறு அருமை :)

    ஜோக்ஸ் ரசனை.

    பதிலளிநீக்கு
  38. கணினி பிரச்சனைகளைக் கையாளுவது பெரிய சவால். முடிந்தவரை சமாளித்த பின் சமீபத்தில் புதிது வாங்கி விட்டேன்.

    எழுத்தாளர் தமயந்தியின் அனைத்துப் படைப்புகள் குறித்த தொகுப்பாக அமைந்திருக்கிறது உங்கள் பகிர்வு. எனக்கு பள்ளி மற்றும் கல்லூரியில் அவர் ஜூனியர். 90_களில் வெளியான அவரது சிறுகதைத் தொகுப்பின் பிரதியை, 2019_ல் முழுத் தொகுப்புக்காகத் தேவைப்பட்ட சமயத்தில் அனுப்பி வைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!