முன்னுரை :
நண்பர் பதிவர் பால கணேஷ், இந்த ஆண்டு தொடக்கத்தில் தன்னுடைய facebook பக்கத்தில் ஒரு படம் வெளியிட்டு அதற்கு கதைகள் அனுப்பி போட்டியில் பங்கு பெறும்படி facebook நண்பர்களைக் கேட்டிருந்தார்.
அந்தப் படம் :
இந்தப் படத்திற்கு நானும் ஒரு கதை எழுதி அனுப்பியிருந்தேன். பிறகு அதைப் பற்றி மறந்துவிட்டேன்.
மே 10 ஆம் தேதி, ஸ்ரீராம் என்னிடம், மேற்கண்ட போட்டிக்கு ஏற்கெனவே ஏப்ரல் மாதத்தில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன என்றும், அதில் என் பெயர் இல்லை என்றும் எனக்கு செய்தி அனுப்பினார்.
பிறகு facebook ல அந்த பதிவை தேடிப் பிடித்தேன். ஏப்ரல் 4 ஆம் தேதி பரிசுகள் அறிவித்திருந்தார்.
1 முதல், 2 இரண்டாம் பரிசு, 3 மூன்றாம் பரிசு, 4 ஆறுதல் பரிசுகள் அறிவித்திருந்தார்.
ஸ்ரீராம் சொன்னது போல என்னுடைய கதையோ அல்லது பெயரோ அந்தப் பத்தில் இல்லை.
எனவே, நான் அனுப்பியிருந்த கதையை நம் வலைப்பூ பக்கத்தில் நம் வாசகர்களுக்காக பகிர்கின்றேன்.
கதையின் நிறை குறைகள் பற்றி கருத்துரை அளிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
= = = = = = = = = =
கஞ்சா
நெஞ்சன்!
(எழுதியவர் : கே ஜி கௌதமன்)
கபாலி அமைச்சர் ஆகிவிட்டார். கோடிக் கணக்கில் பணம் புரளும் துறைக்கு அமைச்சர்! அதிர்ஷ்ட தேவதை அவர் பக்கத்தில் வந்தாயிற்று.
கட்சியில் பல வருடங்களாக பல பொறுப்புகளில் இருந்தவர். படிப்படியாக உயர்ந்து, சட்டசபை உறுப்பினாராகி, இரண்டே வருடங்களில், மந்திரி! அவரே எதிர்பார்க்கவில்லை இந்த திடீர் முன்னேற்றத்தை.
எம் எல் ஏ ஆனவுடனேயே, தன் வீட்டு அருகில் இருந்த காலி மனை ஒன்றை அடித்துப் பிடித்து அடிமாட்டு விலைக்கு வாங்கி, பெரிய பங்களா கட்டிக்கொண்டார்.
இனிமேல் அவருடைய பங்களா வாசலில் பாதுகாப்புக்காக இரண்டு போலீஸ்காரர்கள் எப்போதும் பணியில் இருப்பார்கள். இருபத்து நான்கு மணி நேரமும் பாதுகாப்பு.
வீட்டை விட்டு வெளியே அவர் போகும்போதும் வரும்போதும் அவர்கள் விறைப்பாக நின்று, அவருக்கு சல்யூட் அடிப்பார்கள்.
அவர் அவர்களை அலட்சியமாகப் பார்த்து லேசாக தலை அசைத்துவிட்டுச் செல்வார்.
வாசலில் காவல் காக்கும் போலீஸ்காரர்களைப் பார்க்கும்போதெல்லாம் அவருக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு சாதாரண போலீஸ்காரரால், தான் பட்ட அவமானம் நினைவுக்கு வரும்.
அப்படி என்ன நடந்தது அப்போது?
ஐந்து வருடங்களுக்கு முன் அவர் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தது. அவர் சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து சாதாரண ஆளாக இருந்தார்.
எதிர்க்கட்சி ஆளாக இருந்ததால் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அப்போதைய ஆளும் கட்சிக்கு எதிரான கிடுகிடு போராட்டங்களில் ஈடுபடுவார்.
கபாலி கொடுத்த குடைச்சல் அதிகமாக இருந்ததால், அவரை கஞ்சா கேஸில் புக் செய்து, உள்ளே தள்ளி மாவுக்கட்டு போட ஏற்பாடு செய்தது முந்தைய ஆளும் கட்சி மேலிடம்.
உள்ளூர் காவல்துறை ஆய்வாளருக்கு சிறப்புக் கட்டளை வாய் வார்த்தையாக இடப்பட்டது.
கபாலி வீடு இருக்கும் பகுதியின் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அப்போதைய ஆளும் கட்சியை திருப்திப்படுத்த, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.
கபாலியின் வீட்டிற்கு இரண்டு காவலர்களுடன், கஞ்சா சகிதம் வந்து, அவரை கஞ்சா கேஸில் புக் செய்தார். அவர் கைகளுக்கு விலங்கு போட்டார். வீட்டிலிருந்து போலீஸ் ஸ்டேசன் வரை அவரை அந்த நிலையிலேயே ஊர் மக்களுக்கு முன் நடத்தி அழைத்துச் சென்றார்.
வழியில், பொதுமக்கள் தன்னை ஏளனமாகப் பார்த்தது, பேசியது எல்லாம் இன்றும் கபாலியின் மனதில் ஆழமான வடுவாக இருக்கிறது. .
“ என்ன சார் ஆச்சு?”
“ வீட்டில் கஞ்சா வைத்திருந்தாராம். போலீஸ்ல புடிச்சுக்கிட்டுப் போறாங்க!”
“ போகட்டும், போகட்டும். அடாவடியான ஆள்தான். இப்படி ஏதாவது செய்து உள்ளே போட்டாதான் கொஞ்சமாவது புத்தி வரும்.”
இப்படி பலவகை பேச்சுகளைக் கேட்டபடி நடந்தார் கைதி கபாலி.
அன்று ஒருநாள் முழுவதும் போலீஸ் ஸ்டேசன் லாக்அப்பில் கபாலி இருந்தார். நல்லவேளை மாவுக்கட்டு எதுவும் போடப்படவில்லை. டிஃபன், சாப்பாடு எல்லாம் அரசாங்க செலவில் நேரத்தில் கிடைத்தன. நாள் முழுவதும் விசாரணை என்ற பெயரில் ராஜேந்திரனின் கேலி, குத்தல் பேச்சுகள் எல்லாம் கிடைத்தன. எல்லாவற்றையும் எதிர்வினை இல்லாமல் பொறுத்துக்கொண்டார் கபாலி.
பிறகு கட்சி அனுப்பிய வழக்கறிஞர் உதவியால் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
ஆனாலும் அந்த ஒருநாள் அவமானம் அவர் மனதில் திரும்பத்திரும்ப வரும். பல்லைக் கடித்தபடி அந்த அவமான நிகழ்வுகளை நினைத்துக் கோபப்படுவார்.
********
தானும் தன் கட்சியும் வெற்றி பெற்ற நாளிலிருந்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு எப்படியாவது பதில் மரியாதை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தார் கபாலி.
மந்திரி ஆன பின் அவர் மனதில் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது.
இப்படி செய்தால் என்ன!
உடனே செயலில் இறங்கினார்.
ராஜேந்திரன் தற்சமயம் எங்கே பணியில் உள்ளார் என்று விசாரித்தார்.யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.
உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் செய்தார். ‘ அஞ்சு வருஷத்துக்கு முந்தி உங்க போலீஸ்
ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஆக இருந்த அந்த ராஜேந்திரனை அடுத்த வாரம் என் வீட்டுக்கு வரச்
சொல்லு. அவனிடம் கொஞ்சம்
பேசணும்' என்று சொன்னார்.
போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பேசியவர், “ அவர் இப்போ இந்த ஸ்டேஷன்ல டூட்டி இல்லை சார். மேலிடத்திற்கு விவரம் சொல்லியிருக்கோம். நீங்க கேட்டபடி உங்களை வந்து பார்ப்பார் சார். “
***** ***
கிட்டத் தட்ட பத்து நாட்கள் கழித்து ஒருநாள் அதிகாலையில் வந்தார் ராஜேந்திரன்.
“ வாய்யா வா! அஞ்சு வருஷத்துக்கு முந்தி என்னைக் கைது செய்து, கைவிலங்கு போட்டு, வீதியில இழுத்துப் போனியே – ஞாபகம் இருக்கா? “
“ சார் – அது வந்து .. “
“ வந்து --- போய் எல்லாம் வேணாம். அன்னிக்கி நீ என்னைப் படுத்திய பாடு, நான் பட்ட அவமானம் எல்லாம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. எப்புடி – எப்புடி ? நான் கஞ்சா வெச்சிருந்தேனா! இதோ இப்போ நிஜமாவே என்கிட்ட கஞ்சா இருக்கு. புடிச்சு இழுத்துகிட்டுப் போறியா ? “
“ சார் நான் சொல்ல வந்ததை .. “
“ அதான் வநதிட்டியே – இனிமே நீ ஒண்ணும் சொல்லவேணாம். நான் சொல்வதை கேட்டு அப்படியே செய். அன்னிக்கு நான் போட்டிருந்த அதே டிரஸ் தயாரா எடுத்து வெச்சிருக்கேன். அதை நான் போட்டுக்கிறேன். நீயும் உன் காக்கி டிரஸ் போட்டிருக்கே. அன்று போலவே இன்றும் போலீஸ் ஸ்டேஷன் போவோம். ஆனால் உன் கையைக் கட்டி நான் இழுத்துகிட்டுப் போகப்போறேன். இந்தா இந்த கஞ்சா பாக்கெட்டை உன் சட்டைப் பையில் போட்டுக்கோ. நட போலீஸ் ஸ்டேஷனுக்கு. “
வீட்டில் இருந்த உதவியாளர், “ அய்யா உங்க மொபைல் ஃபோன் .. “
“ அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். இன்னிக்கி ராத்திரி எட்டு மணி வரைக்கும் யாரும் என்னைத் தொந்தரவு செய்யாதீங்க. அதுவரைக்கும் இந்த ராஜேந்திரனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு அப்புறம் வரேன். முதலமைச்சர் வெளிநாடு போயிருக்கிறார். இப்போதைக்கு எனக்கு மேலிட அழைப்புகள் எதுவும் வராது.”
ஆசை தீர ராஜேந்திரனை
ஒரு கைதியைப் போல தெருவில் இழுத்துச் சென்றார் கபாலி.
(இங்கே அந்தப் படம்!)
வழியில் பார்த்தவர்களிடம் எல்லாம் “ போலீஸ்காரனே கஞ்சா வெச்சிருக்கான்பா – இவனை எல்லாம் புடிச்சு உள்ளே போடாம விடலாமா!” என்று சொன்னார் கபாலி.
போலீஸ் ஸ்டேஷனில் இருந்த காவலர்கள் யாவரும் அமைச்சரையும் ராஜேந்திரனையும் பார்த்து, செய்வதறியாமல் திகைத்தார்கள்.
“ போ ராஜேந்திரா – நீயாக போய் லாக் அப்ல இருந்துக்கோ. நீ என்னை அன்னிக்கி எப்படி எல்லாம் நடத்தினாயோ அது எல்லாம் இன்னிக்கி உனக்கு இருக்கு. ஆனால் – நீ செய்தது போலயே எல்லா வேளைக்கும் சாப்பாடு உனக்கும் எனக்கும் வரவழைத்து சாப்பிடுவோம்.“
நடுநடுவே அமைச்சருக்கு போலீஸ் ஸ்டேஷன் போனில் அழைப்பு வந்தது. “ இதோ கூப்புடறேன் ஐயா “
“ யார் ஃபோன் செய்தாலும் இரவு எட்டு மணிக்கு என்னுடைய மொபைல் போனுக்கு பேசச் சொல்லு. இந்த நாளுக்காகத்தான் ரொம்ப நாளா திட்டம் போட்டிருந்தேன். இன்னிக்கி பழி வாங்கும் நாள். “
லாக் அப் அருகிலேயே தன்னுடைய நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தார் கபாலி.நாள் முழுவதும் கபாலி, ராஜேந்திரனை மாமூல் விஷயங்கள் பற்றி கேலி, கிண்டல் செய்வதிலேயே பொழுதைக் கழித்தார்.
ராஜேந்திரன் ஏதாவது சொல்ல வாயைத் திறந்தாலே, “ நீ பேச வேண்டியது, மன்னிப்பு கேட்பது எல்லாத்தையும் எட்டு மணிக்கு மேலே கேட்டுக்கறேன். இப்போ எதுவும் சொல்லாதே “ என்றார்.
**** ***** *****
ஆயிற்று – மணி இரவு எட்டு.
“ இன்னிக்கி நடந்ததை ஞாபகம் வெச்சிக்கோ – இனிமேல அதிகாரம் இருக்கு, ஆளும் கட்சி சொல்லிச்சுன்னு யாரையும் விலங்கு போட்டு வீதியிலே இழுத்து வந்து டார்ச்சர் பண்ணாதே “ என்று சொல்லிவிட்டு கிளம்பத் தயாரானார் கபாலி.
அப்போது ஸ்டேஷன் வாசலில் வந்து நின்ற ஒரு காரிலிருந்து இறங்கிய நான்கு பேர் உள்ளே வந்தார்கள்.
நால்வரில் ஒருவர், ராஜேந்திரனைப் பார்த்து “ என்ன ராஜேந்திரன்! நீங்க எதுக்கு லாக் அப்ல இருக்கீங்க? இவரிடம் நீங்க எதுவும் சொல்லவில்லையா? “
“ அவர் என்னை ஒன்றும் சொல்லவிடவில்லை சார். ‘இன்னும் கொஞ்ச நேரத்தில் அமலாக்கத்துறை ஆட்கள் சோதனை செய்ய வருகிறார்கள். சோதனை முடியும்வரை வீட்டிலிருந்து ஆட்களோ, பொருட்களோ எதுவும் வெளியே செல்லக்கூடாது’ என்று சொல்லத்தான் போனேன். அவர் என்னை பேசவிடாமல் – இங்கே அழைத்து வந்துவிட்டார். “
“ அட! அதுவும் நல்லதுக்குத்தான்! இவருடைய குறுக்கீடு இல்லாமல் நாங்க சோதனை எல்லாத்தையும் முடிச்சுட்டோம்” என்றார் அந்த அதிகாரி.
மற்றொரு அமலாக்கத் துறை அதிகாரி கபாலியிடம் “சாரி சார். இன்று முழுவதும் உங்கள் வீட்டில் நாங்கள் நடத்திய சோதனையில், பல கோடி ரூபாய் பணம், கஞ்சா, டாகுமெண்ட்ஸ் மற்றும் தண்டனைக்குரிய குற்றங்களுக்கான ஆதாரங்கள் பல கிடைத்துள்ளன. உங்களை விசாரணை செய்வதற்காக கைது செய்து, எங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கிறோம்” என்று கூறினார்.
ஊடகங்களில் செய்தி:
“அமைச்சர் கபாலி வீட்டில் அமலாகத்துறை அதிகாரிகள் நாள் முழுவதும் சோதனை. கணக்கில் வராத பல கோடி ரூபாய்கள் மற்றும் ஆவணங்கள் சிக்கின. கபாலியைக் கைது செய்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் அமலாக்கத்துறை அதிகாரிகள்!”
= = = = == = = =
கதை ஓகே. இந்தப் படத்திற்கு ஒரு கதையை யோசித்து பிறகு எழுதாமலேயே விட்டுவிட்டேன். எங்கள் பிளாக்பிற்காக இப்போ எழுதினால் என்ன என்று இப்போது தோன்றுகிறது.
பதிலளிநீக்குஶ்ரீராம், இதுபோல படம் வெளியிட்டு அதற்கு கதை எழுதச் சொன்னால் என்ன?
எழுதுங்கள்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய செவ்வாயில் மலர்ந்துள்ள பரிசு போட்டி சிறுகதை நன்றாக உள்ளது. "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்ற பழமொழிக்கேற்ப காத்திருந்து பழி வாங்கும் தன் எண்ணங்களினால், தானே சோதனைக்குள் அகப்பட்டுக் கொண்டார் கபாலி. கதை படத்திற்கு பொருத்தமாக உள்ளது. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இதை ஏன் பரிசுக்காக தேர்வு செய்யப்படவில்லை என்ற வருத்தமும் வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுக்கு நன்றி.
நீக்குகற்பனை என்ற போர்வையில் கதை எங்கெங்கோ தாறுமாறாக பறக்கிறது. இருந்தாலும் நம்பக்கூடிய முறையில் எழுதியதை பாராட்டலாம்.
பதிலளிநீக்குJayakumar
:))) நன்றி.
நீக்குநல்ல கற்பனை!அருமையான நடை! பரிசு பெற்ற மற்ற கதைகள் எப்படி இருந்தன?
பதிலளிநீக்குஅது பற்றி தகவல்கள் கிடைக்கவில்லை. கணேஷ் அவரவர் கதைகளை அவரவர் தளங்களில் வெளியிட்டுக் கொள்ளலாம் என்றும், பரிசு பெற்ற கதைகளை புத்தகமாக வெளியிடும் உத்தேசம் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
நீக்குசெம்ம கற்பனை கௌ அண்ணா. கதை இப்படித்தான் போகப் போகுது..அதாவது கபாலி மாட்டப்போறான் என்று...நல்லா எழுதி இருக்கீங்க.பாராட்டுகள்... நடப்பதை அப்படியே...என்றாலும் ஒரே ஒரு இடம் ...கபாலி பேச விடலை ரைட்டு...ராஜேந்திரன் கேப்பில் சொல்லியிருக்கலாமோ ....நீங்க என்னை கைது செய்தாலும் ...அமலாக்கத்துறை வந்திட்டிருக்காங்கன்றதை சொல்லி....ஆனால் கபாலி..அதை மைண்ட் செய்யாமல்..ராஜேந்திரனை கொண்டு போனதாக...ஓரிரு உரையாடல்கள் வைத்திருக்கலாமோ
நீக்குகீதா
நல்ல யோசனை!
நீக்குகதை நன்றாக இருக்கிறது. அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று நடந்து கொண்டு இருப்பதை சொல்கிறது.
பதிலளிநீக்குபடத்திற்கு பொருத்தமான கதை.
பாராட்டுக்கள்.