செவ்வாய், 30 ஏப்ரல், 2024

சிறுகதை : இன்னார்க்கு இன்னார் என்று - ஜீவி

 இன்னாருக்கு இன்னார் என்று....

--  ஜீவி  --

விஜயா:

இன்னிக்கு எழுந்திருக்கும் போதே ஞாயிற்றுக்கிழமை தானேன்னு மனசில் ஒரு ஆசுவாசம் பரவியிருந்தது.  கணவன் -- மனைவி இரண்டு பேரும் வேலைக்குப் போகிற குடும்பங்கள்லே இந்த மன நிலைக்கு இன்னும் மதிப்பு ஜாஸ்தி.

"புதுப்படம்  ரிலீசாகியிருக்கு..போகலாமா?"ன்னு மத்தியானம் சாப்பிடும் பொழுது பாஸ்கர் கேட்டார்..  எனக்கு  சினிமாக்கெல்லாம் போய் மூணு மணி நேரம் சகிச்சிண்டு உட்கார்ந்து பார்த்துட்டு வர்றது ஏனோ அவ்வளவா பிடிக்காத விஷயம்.  'தினமும் தான் வெளிலே போறோம்; இன்னிக்கானும் வீட்லே'ங்கற நினைப்பும் கூட.  இது இவருக்கும் தெரியும். இருந்தாலும் எப்போவானும் இப்படி கேட்பதுண்டு.  நானும் தனியாப் போறது பிடிக்காதுன்னு தானே கேக்கறார்ன்னு அவருக்கு கம்பெனி கொடுக்கறதுக்காகப் போய் வர்றதுண்டு.

படத்தோட டைட்டில் 'வாழ்க்கை ஓடம்'ன்னு சொன்னார்.  படத்தோட பேரைக் கேக்கறச்சேயே அழுவாச்சி படமா இருக்குமோன்னு நினைத்தேன்.  "ஏங்க, பழைய பத்மினி கால படமாங்க?"ன்னு கேட்டேன்.

"இல்லே. இப்பதான் ரிலீசான புதுப்படம். ஒரு வாரம் தான் ஓடியிருக்கும்.." என்று சொல்லிச் சிரித்தார்.

பாஸ்கர் சிரிக்கறச்சே நீங்க பாக்கணுமே? அவ்வளவு அழகா இருக்கும்.  அந்த நேரத்திலே இவர் உதடுகள் ரோஜா இதழ்கள் மாதிரி விரியும்; கூடவே நாங்களும் இருக்கோம், தெரியுமான்னு கேக்கற மாதிரி இவரோட கண்களும் சேர்ந்து சிரிக்கும்.  

அந்த அழகை ரசிக்கறதுக்காகவே ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி அப்பாவியா முகத்தை வைச்சிண்டு அப்பப்போ இப்படி ஏதாவது இவரைக் கேக்கறதுண்டு.  இவரைக் கேட்டா, 'நா இப்படிக் கேட்கறச்சே என்னோட முகபாவம் குழந்தை கணக்கா ரொம்ப ஜோரா இருக்குமாம். அதுக்காகவே நீ அடிக்கடி இப்படி ஏதாவது கேட்க மாட்டையான்னு நினைப்பேன்' என்பார். 

யோசிச்சுப் பாத்தா இந்த விஷயத்லே நாங்க ரெண்டு பேருமே ஒரே மாதிரின்னு தானோன்னு தோண்றது.  கணவனும் மனைவியும் இப்படி ஒரே மாதிரி இருக்கிற கொடுப்பினையெல்லாம் எத்தனை பேருக்கு வாய்க்கும்ன்னு தெரிலே.

கல்யாணமான இந்த ஒரு வருடத்திலே இதுலே எக்கச்சக்க அனுபவம் எனக்கு.

வாஷிங் மெஷின்லே போடறது, மடிச்சு வைக்கறதுன்னு ஞாயிற்றுக்கிழமை வேலைல பலதை ஏற்கனவே முடிச்சிட்டேன்.
தியேட்டரும் பக்கம் தான். அதுனாலே ஐந்தரை மணிக்கு மேலே கிளம்பினா போதும்ன்னு பாஸ்கரும் சொல்லியிருந்தார்.  மாமியார் தான் வீட்டைப் பாத்துக்கறத்துக்கு. அவரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினோம்.

பாஸ்கர் எல்லா விஷயங்களிலும் கெட்டி.  எங்கிட்டே கூட சொல்லலே. ஏற்கனவே டிக்கெட் வாங்கி வைச்சிருந்ததாலே செளகரியமா போயிற்று.
இப்பலாம் ஒரு வார காலம் ஒரு படம் ஓடினாலே பெரிசு என்கிற மாதிரி பால்கனி வரிசை வெறிச்சோடிக் கிடந்தது.

"அப்படி 'லாஸ்ட் ரோ'லே உக்காந்துக்கலாமா?"ன்னு எங்கிட்டே கேட்டபடியே என் தோள் பற்றி கடைசி வரிசைக்கு அழைத்துப் போனார் பாஸ்கர்.

தியேட்டர் பெரிசு தான். வேடிக்கை பார்த்தபடியே அமர்ந்திருந்தோம்.
இருக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வருகையால் நிரம்பிக் கொண்டிருந்தன.  நாங்க ரெண்டு பேரும் உட்கார்ந்திருந்த வரிசை முனையிலே நின்றிருந்த ஒரு ஜோடியைப் பார்த்ததும் திடீர் பரபரப்பு பாஸ்கருக்கு.

"அதோ பார்.. அந்த அழகி எனக்குத் தெரிஞ்சவங்க தான்.. கூப்பிடட்டுமா?" என்று என் பக்கம் லேசா சாய்ந்து கிசுகிசுத்தார்.

"அடேடே! அந்த அழகர் கூட எனக்குத் தெரிஞ்சவர் தான். கூப்பிடுங்களேன்.." என்றேன், வாய் மூடி பீறிட்ட சிரிப்பை அடக்கிக் கொண்டு.

பாஸ்கர் என்னை முறைத்துப் பார்த்தவாறு, "அவங்களை வேறே கூப்பிட்டு நம்ம தனிமைக்கு இடைஞ்சலா..?" என்று இழுத்தபடி திடீர் ஞானோதயத்தில் பின்வாங்கினார்.

"அட! சும்மா சொன்னேங்க..  வேணும்ன்னா கூப்பிடுங்க" என்றேன், அவர் தொடையை அழுத்தி.

"Are you sure?" என்றார் நம்ப முடியாமல்.

"நெசமாத்தாங்க.. உங் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சிங்க.." என்று நாடகபாணியில் கை விரித்தேன். 

நான் சொன்னது என்னவோ மாதிரி இருந்திருக்கும் போல பாஸ்கருக்கு. "இதுலே மகிழ்ச்சின்னு ஒண்ணுமில்லே.. வெளி இடத்திலே தெரிஞ்சவங்களைப் பாத்ததாலே சொன்னேன்" என்றார்.

"அட, கூப்பிடுங்கன்னா.." என்று நான் சொல்லிக் கொண்டே இருக்கையில் அந்த அழகியே இவரைப் பார்த்துட்டாங்க போலிருக்கு.  தன் கணவன் கிட்டே சைகை காட்டி ஏதோ சொன்னதும் அவங்க ரெண்டு பேருமே நாங்க உட்கார்ந்திருந்த இருக்கை வரிசையில் நுழைந்து எங்களை நோக்கி வந்தாங்க.

வெளியிடத்தில் எங்களைப் பார்த்ததில் அந்த தம்பதிகளுக்கும் மகிழ்ச்சியாகத் தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

பக்கத்தில் வந்ததும்  அந்த அழகியின் கணவரை எங்கோ பார்த்த மாதிரி  நினைவு எனக்கு. ஒரு வேளை எங்க பாங்க் கஸ்டமரா இருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்திற்கு சரியா பிடிபடலே.

எங்களுக்கு பக்கத்து இருக்கைகள் காலியாகத் தான் இருந்தன.  பாஸ்கருக்குப் பக்கத்தில் அந்த ஆளும் என் பக்கத்தில் அந்த அழகியும் என்று அமர்ந்தனர்.

பாஸ்கர் அந்த அழகியை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்க,  அழகி எங்களுக்கு தன் கணவனை அறிமுகப் படுத்தினார்.

சொன்னால் நீங்க சிரிக்கக் கூடாது.  அவங்க பேரே அழகி தானாம். போஸ்டல் டிபார்ட்மெண்ட் சிறு சேமிப்புப் பத்திரங்கள், டெபாஸிட்டுகள் இதுக்கெல்லாம் ஆள் பிடித்து வர்ற வேலையை மிக வெற்றிகரமாகச் செய்பவராம்.  என் கணவர் பாஸ்கரும் தபால் இலாகா என்பதால் இருவருக்கும் நல்ல பழக்கமாம்.  அழகியின் கணவர் பெயர் அறிவழகன்.  கல்லூரி விரிவுரையாளராம்.  ஆக, அழகும் அறிவும் கலந்த காம்பினேஷன் அவங்க ரெண்டு பேரும்ன்னு நினைத்துக் கொண்டேன்.  சரியா?..

பாஸ்கர்:

தியேட்டரில் அழகியைப் பார்த்தவுடயே மனசு பூராவும் சந்தோஷம். எதுனாலேன்னு சொல்லத் தெரிலே.  அது எதுனாலே வேணாலும் இருக்கட்டும். அவளைப் பார்த்தாலே தனிப்பட்ட மகிழ்ச்சியில் மனம் சந்தோஷிக்கிறது என்பது மட்டும் உண்மை.
சொல்லப்போனா ஒரு ஆறு மாசத்திற்கு முன்னாலேதான் அழகி எனக்கு அறிமுகம்.  

தபாலாபீஸ் சேவிங்ஸ் பாங்கு பகுதி செக்‌ஷன் ஆபிஸர்ங்கறதாலே  கவுண்ட்டர்லே எனக்கு வேலையில்லை. கவுண்ட்டருக்குப் பின்னாலே டேபிள்-- சேர் போட்டு அமர்ந்திருப்பேன்.

பலதுக்கு என் கையெழுத்து வேணும். அதை அப்பப்போ கவுண்ட்டர் கிளார்க் உள்பக்கம் வந்து எங்கிட்டே வாங்கிண்டு சரிபார்த்து
வெளிலே நிக்கற சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் கொடுப்பார்.

"உள்ளே வந்து ஆபிஸரைப் பாருங்கம்மா.." என்று ஒரு நாள் கவுண்ட்டர் கிளார்க் யாரிடமோ சொல்லிக் கொண்டிருக்க உள் பக்கம் கை நிறைய காகிதங்களுடன் வந்து இந்த அழகி என்னைப் பார்த்தது தான் ஆரம்ப அறிமுகம்.  

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்குகள் என்பது வயதான மூத்த குடிமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.  வட்டி விகிதம் வங்கிகளை விடக் கொஞ்சம் ஜாஸ்தி. இந்த வகை டெபாஸிட்டுகளை திரட்டும் விஷயத்தில் அழகி எடுத்த முயற்சிகளைக் கண்டு எனக்கு பிரமிப்பாய் இருந்தது. 

எந்த வேலையையும் எடுத்துக் கொள்ளுங்களேன்,  செய்யற வேலைலே இருக்கற புரிந்து கொண்டத் தெளிவும் அந்த வேலையை தனக்குத் திருப்தியாய் செய்து முடிக்கிற அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட எவரையும் பாராட்டி ஊக்குவிக்க நான் தயங்க மாட்டேன்.  நான் கொடுக்கிற சில திருத்தங்களையும் மாற்று யோசனைகளையும் மனசார ஏற்று செயல்படுத்திய அழகியை எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

அழகி செக்கச்செவேல்  சிவப்பு என்றால் அறிவழகன் கொஞ்சம் கறுப்பு தான்.   இவளை விட உயரம் தான் என்றாலும் ஒட்டகச் சிவிங்கி உயரமில்லை. 

'அடேடே! அந்த அழகர் கூட எனக்குத் தெரிஞ்சவர் தான். கூப்பிடுங்களேன்' என்று அறிவழகனைப் பார்த்தவுடனேயே விஜயா விளையாட்டாய் சொன்னது எனக்கு இப்பவும் ஆச்சரியமா இருக்கு. நாம சொல்றது, நினைக்கறதெல்லாம் சில நேரங்களில் அடுத்த சில நிமிஷங்களிலேயே எப்படி உண்மைக்கு நெருக்கமா போய்டறது என்பது கூட  ஆச்சரியமாத்தான் இருக்கு. கல்லூரி விரிவுரையாளர் என்பது அவருக்கு அமைந்த பெயரைப் போலவே அறிவு சார்ந்த விஷயம்.  

மொத்தத்தில் எதிர்பாராமல் அழகியையும் அவள் கணவரையும் சினிமா  தியேட்டரில் பார்த்தது எதேச்சையாக ஏற்பட்டது தான்.  இருந்தாலும் அந்த நிகழ்வில் அந்த மாலைப் பொழுதே எனக்கு மிகவும் அர்த்தபூர்வமாக இருந்தது.


அறிவழகன்:

பாஸ்கரைப் பார்த்தா கொஞ்சம் அப்பாவி போலத்தான் தெரியறது.  பெண்டாட்டிக்கு அடங்கின ஆள்ன்னு மூஞ்சிலே எழுதி ஒட்டியிருக்கு. இல்லேனா எதுனாலும் எனக்கு தூசுங்கற மாதிரி பார்வைலேயே இந்த விடைப்பு அந்த லேடிக்கு இருக்க சான்ஸ் இல்லே.  தபால் ஆபிஸ்ன்னாலும் வாழ்க்கை வசதி வாய்ஸ்லே தெரியுது. மாசாமாசம் பெண்டாட்டி சம்பாத்தியம் வேறே தனியா..

கார்லே வந்திருப்பாங்க போலிருக்கு. நமக்கு இந்த டூவீலர் நெலமை என்னிக்கு மாறும்ன்னு தெரிலே.  அழகியும் அந்த பொம்பளைகிட்டே தொணதொணன்னு ஏதோ பேசிகிட்டிருக்கற மாதிரி தான் தெரியுது.  ஆனா இவளுக்கு உபயோகமத்த பேச்சு அதிகம். கூட்டிக் கழிச்சு பார்த்தா ஒண்ணும் தேறாது. இன்னொருத்தரை உபயோகப்படுத்திக்கிட்டு அவங்க மாதிரி நம்ம வாழ்க்கை வசதிகளை எப்படிப் பெருக்கிக்கணும்ன்னு தெரியாது.

நல்ல படத்துக்கு வந்தோம், பார்! ஒரே போர்!.. வேறென்ன,
ஊரைத் திருத்தறோம்ன்னு  காட்டிக்கிட்டு பணம் பண்ண ஆளாளுக்குக் கிளம்பிட்டாங்க.

வெளிப்பக்கம் போய்ட்டு வந்திடலாம்னு நினைப்பு வந்திடுச்சு. வாசனை பாக்குப் பொட்டலம் வேறே தீர்ந்திடிச்சு போல இருக்கு. அதையும் ஞாபகமா வாங்கிக்கணும்.  இவங்க மாதிரி வீட்டை விட்டு வெளிலே போறச்சேலாம் செண்ட்டடிச்சிக்கக் கூட பழகிக்கணும்.  நாம வந்தாலே பெரிய மனுஷன் மாதிரி தோற்றம் கொடுக்கறது பல வேலைகள் ஈஸியா முடியறத்துக்கு இந்தக் காலத்லே முக்கியம். அப்பப்போ ஆங்கில வார்த்தைகளை யூஸ் பண்ணனும்.  நாமும் விஷயம் தெரிஞ்சவங்க தான். இருந்தாலும் இந்த மாதிரி வசதி படைச்ச ஆட்களோட பழகறச்சே தெரிஞ்சிக்க  ஏதோ இருக்கத்தான் செய்யறது. இப்போ மொதல்லே வெளியே போய் வந்திடலாம்.  அது முக்கியம்.


அழகி:

பாஸ்கர் சாரையும் அவர் எடுப்பான தோற்றத்திற்கு இணையான அவர் மனைவியையும் சேர்ந்து அதுவும் சினிமா தியேட்டரில் சந்திப்போம், அவங்களோடு சேர்ந்து படம் பார்ப்போம் என்று நான் நினைச்சுக் கூடப் பார்த்ததில்லை.  சாரோட மிஸஸ் பேர் விஜயான்னு தெரிஞ்சிண்டேன். என்னை விட ரெண்டு வயசு பெரியவங்களா இருப்பாங்க போலத் தெரியுது. பந்தா இல்லாம அவங்க என்னோட நெருக்கமா பழகறது அக்கா--தங்கை பாசம் போல எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. சொல்லப் போனா பெருமையா இருக்கு..

விஜயா அக்கா பாங்க்லே வேலை செய்யறாங்களாம்.  முகத்திலேயே படிச்ச களை தெரியறது.  என்னைப் பத்தி விசாரிச்சாங்க.  நான் பி.எஸ்ஸி., மேத்ஸ் படிச்சிருக்கேன்னு தெரிஞ்சதும் 'IBPS தேர்வு எழுதறயா'ன்னு கேட்டாங்க.

"அப்படீன்னா, என்ன அக்கா?"ன்னேன். அது வங்கி வேலைக்கான பரீட்சையாம். 'நேரம் கிடைட்சப்போ வீட்டுக்கு வா.. விவரமெல்லாம் சொல்றேன்'னு சொல்லியிருக்காங்க.. அவங்க சொன்னதைக் கேட்டதுமே பாங்க் வேலையே எனக்குக்.கிடைச்ச மாதிரி இருக்கு.  அட்ரெஸ்லாம் கேட்டுகிட்டு நாளைக்கு அவங்க வீட்டுக்குப் போகணும்.

பாக்க வந்த சினிமாவும் வாழற வாழ்க்கை போலத்தான் இருக்கு.
அறிவு சினிமாவைப் பார்த்ததாகவே தெரிலே. நாலஞ்சு தடவை எழுந்து வெளிப் பக்கம் சென்று வந்தார். அதைப் பார்த்து விஜயா அக்கா 'எங்கே போயிட்டு போயிட்டு வர்றாரு?.. சினிமான்னா அவருக்குப் பிடிக்காதா'ன்னு என்னைக் கேட்டாங்க. "பிடிக்காதுன்னு இல்லேக்கா.  ஸ்மோக் பண்ணிட்டு வர்றார்"ன்னேன்.  'ஓ, அப்படியா?'ன்னு கேட்டுட்டு கொஞ்ச நேரத்துக்கு எதுவும் பேசலே. 

அவுங்க ஏதாச்சும் நெனைச்சிக்கப் போறாங்கன்னு நான் தான் சொன்னேன்: " என்னோட தாத்தா சுருட்டு குடிப்பாராம். அம்மா தான் சொல்லியிருக்காங்க.  அப்பா சிகரெட் பத்த வைச்சிகிட்டே இருப்பாரு. பார்த்திருக்கேன். பர்க்லி சிகரெட்ன்னு அதோட பேரு கூட எனக்குத் தெரியும். அப்பா பழக்கம் தான் அண்ணனுக்கும் அப்படியே தொத்திகிடிச்சி.. அண்ணன் சிஸர்ஸ் சிக்ரெட் ஊதுவாரு. 'என்ன பாவம் பண்ணினோமோ தெரிலெ,  இந்தப் புகையிலைப் பழக்கம் நம்ம குடும்பத்தை விடாது போலிருக்கேன்னு எங்கம்மா தான் அடிக்கடி சலிச்சிப்பாங்கன்னா எனக்கு வாச்சவருக்கும் இந்தப் பழக்கம்..  எவ்வளவோ சொல்லிப் பார்த்திட்டேன். முன்னாடிலாம் வீட்டுக்குள்ளேயே பத்த வைப்பாரு. நான் சொல்லிச் சொல்லி இப்போ வெளிலே போயிடறாரு. அதான் வித்தியாசம்.  இதை நிறுத்தறத்துக்கு என்ன செய்யறதுன்னு தெரிலே அக்கா"ன்னு சொன்னேன். அக்கா எதுவுமே சொல்லலே.  'பாவம், இந்த சின்னப்பொண்ணு என்ன செய்வா?'ன்னு பரிதாபப் பட்டிருக்கலாம்.

விஜயா:

ஓரு வழியா சினிமா முடிஞ்சது. 

என்ன கதைன்னு கேட்டா எல்லாம் பழசையெல்லாம் தேய்ச்சுத் துடைத்து மெருகேத்தினது தான். பஞ்ச பாண்டவர்கள் மாதிரின்னு சொன்னா தப்பு.  மொத்தம் அஞ்சு பேர்.   ஒருத்தன் குடிகாரன். இன்னொருத்தன் பெண் பித்தன்.. மற்றொருத்தன் பிக்பாக்கெட் பேர்வழி. அப்புறம் மத்த ரெண்டு பேரும் திருடனும் அதிகார வர்க்கத்தினருக்கு லஞ்சம் வாங்கித் தர்ற ப்ரோக்கரும்.

இவங்களையெல்லாம் அவங்களுக்கு அமைஞ்ச வாழ்க்கைத் துணைகள் எப்படி திருத்தி நல்வழிப் படுத்தறாங்கங்கறது தான் திரைக்கதை. பாட்டுக்களும் ம்யூஸிக்கும் பிரமாதம்ன்னு தான் சொல்லணும். குறிப்பா 'பாதைகள் மாறும்,  பழக்கங்கள் மாறுமா' என்ற பாட்டு.

அதான் படம் முடிஞ்சிருத்தே, இருக்கையை விட்டு எழுந்திருக்கலாமான்னு நினைக்கையில் தியேட்டரையே அதிர வைக்கிற உச்ச ஸ்தாயி பின்னணி இசையில் திரையில் 'சிகரெட் பிடிக்காதீர்கள்.. அது உடல் நலத்திற்கு கேடு' என்று எச்சரிக்கை ஸ்லைடு ஒன்றைப் போட்டார்கள்.

அதே வினாடி தியேட்டர் மொத்தமும் பளீரிட்ட மின்னொளி வெளிச்சத்தில் நான் சட்டென்று அறிவழகன் பக்கம் திரும்ப அந்த ஷணத்தில் தான் நான் அவரை முதன் முதலா எப்போப்  பார்த்தேன்னு  நினைவின் அடி ஆழத்தில் பளீரிட்டது.

கல்யாணத்திற்காக என்னைப் பெண் பார்க்கன்னு வந்தவங்க  ரெண்டு குடும்பத்தினர் தான்.

முதன் முதல் என் கல்யாணப் பேச்சை வீட்லே ஆரம்பிச்ச போது யாரோ சொல்லி என்னைப்  பெண் பார்க்க  வந்தவரல்லவா இவர் என்ற நினைவின் கீற்று மனசின் அடி ஆழத்தில் பளீரிட்டதும் ஆடிப்போய்ட்டேன்.  அந்தத் தருணத்திலேயே 'நல்லவேளை தப்பித்தோம்'ன்னு ஜபிக்கிற மாதிரி என் உதடுகள் அனிச்சையா முணுமுணுத்தன. 

என்னவோ தெரிலே, சட்டென்று பாஸ்கர் கை பற்றி விரல்களால் இறுக்கினேன். பாதுகாப்பு கவசத்தை தரித்த மாதிரி அந்த நிமிஷமே மனசு நிம்மதியில் ஆழ்ந்தது.


                     -------------

70 கருத்துகள்:

  1. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. வாழ்க.. வாங்க செல்வாண்ணா...  வணக்கம்.

    பதிலளிநீக்கு

  5. இப்போது காலை 5:29

    நேர்த்தியான கதை..
    மதிப்புக்குரிய கமலா ஹரிஹரன், மதிப்புக்குரிய கோமதி அரசு ஆகியோரைப் போல கருத்து சொல்லத் தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இங்கு என்னையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி சகோதரரே. ஆனால், உலகில் நடப்பனவற்றில் அறிவு சார்ந்த பல விஷயங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு சிறப்பாக அனைத்துப் பதிவுகளுக்கும் பல கருத்துக்களை தரும் உங்களைப் போல என்னால் கருத்துக்களை அளிக்க முடியுமா என்றால், அதற்கு விடை பூஜ்யந்தான். அந்த அளவிற்கு எனக்கு திறமைகள் கம்மி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி.

      இன்று உங்கள் பதிவாக உங்கள் வலைப்பூவில் ஒன்றும் காணவில்லையே? உடல் நலமாக உள்ளீர்களா? ஒருவேளை என் "நண்பர்கள் பதிவில்" தான் சரியாக காண்பிக்கவில்லையோ? உங்கள் வலைப்பூவிற்கு வந்து பார்க்கிறேன். நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. //நேர்த்தியான கதை//

      கதைகள் தாம் ஒரு பக்கம் என்றால் சொல்கின்ற கருத்தும்
      ஒரு வரியா?

      நீக்கு
  6. எபியில் எனதாக நூறு கதைகள் என்று நினைக்கின்றேன்..

    புகைப் பிரியத்துடன் எந்த ஒன்றும் கிடையாது..

    உற்சாகப் பிரிய கணவனை மனைவி துறப்பதாக ஒரு கதை..

    விருப்பம் இருந்தால் யாரும் தேடிக் கண்டு பிடித்துப் படிக்கலாம்...

    பதிலளிநீக்கு
  7. காலம் காட்டும் கண்ணாடியாக ஓவியப் பதுமை சிறப்பு..

    பதிலளிநீக்கு
  8. அருள் நேரம் என்றொரு நிகழ்ச்சி..

    அதற்குள்ளும் வந்து நெற்றிப் பொட்டு இல்லாமல் தலைவிரி கோலம்..

    அங்கே ஒருவர் முனகிக் கொண்டு இருக்கின்றார் -

    பெண்கள் தலை விரி கோலமாக இருக்கக் கூடாது என்று!...

    பதிலளிநீக்கு
  9. சித்திரச் செல்வருக்கு இளமை திரும்பி விட்டதோ!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகி பெயருக்கேற்ற
      அழகான படம். இது வரைந்த படங்க்ளிலிருந்து முக அழகு வித்தியாசப்பட்ட படம்.

      நீக்கு
  10. கதாபாத்திரங்களின் மனதின் வழியே கதை அமைந்திருப்பது வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கிறது.

    கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்பதை இயல்பாகச் சொல்கிறதோ?

    பதிலளிநீக்கு
  11. அவரவர் மனதில் நினைப்பதை வைத்தே அவரவர் குண நலன்களை நமக்குக் காட்டியுள்ளார்.

    குணநலத்திலும் பழக்க வழக்கத்திலும் தான் சுமார் என்பதை அறிவழகன் காட்டிவிடுகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்ப பின்னூட்டத்தை தாங்கள் உணர்ந்த வாறே எழுத்தில் வடித்துத் தந்திருப்பதற்கு நன்றி நெல்லை.

      நீக்கு
    2. ஆரம்ப பின்னூட்டத்தை தாங்கள் உணர்ந்த வாறே எழுத்தில் வடித்துத் தந்திருப்பதற்கு நன்றி நெல்லை.

      நீக்கு
  12. இந்த நாட்டில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட மசாலா பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்து உள்ளது..

    செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன...
    மாலத்தீவிலும் தடையாம்...

    இங்கே ரோட்டுக் கடைகளில் எல்லாம் தாராளம்.. அடித்துக் கொண்டு நிற்கின்றார்கள்..

    காயலான் கடைக்குப் போக வேண்டிய பேருந்து போல இப்போது நடைமுறை வாழ்க்கை..

    பதிலளிநீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. அந்தக் கடைசி வரி தான் கொஞ்சம் உதைக்கிறது. இந்திய மனைவியர் செயல்பாட்டிற்கு எதிராக பொது இடத்தில வேற்று ஆணின் கையை காதலுடன் பற்றுவது ஏற்கத்தக்கதல்ல என்று எனக்கு தோன்றுகிறது. ஆனால் அந்தக் கடைசி வரிதான் கதையின் முக்கிய கருவே!.
    ஆசிரியர் அமெரிக்காவில் நடந்ததாக எழுதியிருந்தால் ஏற்கத்தக்கதாக இருந்திருக்கும்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா முடிவு வரி சரியாகத்தானே இருக்கிறது. விஜயா தன் கணவனின் கையைத்தானே பற்றிக் கொள்கிறாள்! நல்லகாலம் அறிவழகன் தனக்கு அமையவில்லை என்று!

      கீதா

      நீக்கு
    2. ​தவறை சுட்டிக் காட்டியத்திற்கு நன்றி. நான் பாஸ்கர் அறிவழகன் இருவரையும் மாற்றி குழம்பி விட்டேன். முடிவு சரிதான். என்னுடையவர் என்று கைப்பற்றுவது சரிதான்.

      நீக்கு
  15. இந்திய மகளிர்/ மனைவியர் பொது இடத்தில வேற்று ஆணின் கையை காதலுடன் பற்றுவது !??...

    தமிழ்த்
    தொலைக்காட்சி பொது அரங்கத்தில் ஒருவரை ஒருவர் தழுவி வரவேற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கின்றனர்..

    பதிலளிநீக்கு
  16. கதை வாசித்து வாசித்த தங்கள் அனுபவத்தையும்
    புரிதலையும் பகிர்ந்து கொள்ளும் எபி வாசகர்களுக்கு அன்பான
    நன்றி.

    இந்தக் கதை இது வரை எபியில் வெளி வந்திராத புதுப் பாணியில் எழுதப்பட்ட கதை. இந்த மாதிரி வெவ்வேறு மாறுபட்ட எழுத்துப் பாணிகளுடான கதைகளை மட்டும் எபியில் எழுத எண்ணியுள்ளேன். எபிக்கும் சிறுகதை.காம் போன்ற தளங்களுக்கும் இதெல்லாம் புதுசே தவிர விகடன், குமுதம், சாவி, குங்குமம் போன்ற தமிழக வெகுஜனப் பத்திரிகைகளில் இந்த மாதிரியான எழுத்து முயற்சிகள் ஏற்கனவே வெளிவந்தவை தான். ஆக அந்தப் பத்திரிகை கதைகளை வாசித்திருக்கிற வாசகர்களுக்கும் பழக்கப்பட்ட பாணிகள் தாம் இவை.

    ஒரே மாதிரியான என்ற எந்தப் போக்கிலிருந்தும் அவ்வப்போது மாறுப்பட்ட ஒன்று என்பது எப்பொழுதுமே புதுமையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்றாலும் எபி வாசகர்களுக்கு அது எப்படி என்று தெரிந்து கொள்வதற்காகத் தான் இந்த மாதிரியான என் முயற்சிகள்.

    அதனால் முன்னால் மொழியப்பட்ட கருத்துக்களின் பாதிப்பு இல்லாமல் அவரவர் தம் சொந்த வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொண்டால் அது இனி வரப்போகிற மாறுபட்ட எழுத்து முதற்சிகளைத் தீர்மானிப்பதற்கு உதவியாக இருக்கும்.

    அதற்காகவே இந்த வேண்டுகோள். கருத்திட்டு ஒத்துழைப்பு நல்கும் வாசக உள்ளங்களுக்கு நன்றி.

    அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
  17. அன்பு என்றைக்கும்
    ஒரே மாதிரி தான்..

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. அவரவர் மனதில் தோன்றும் எண்ணங்களை கூறுவது போல அமைத்திருப்பது நன்றாக உள்ளது. அவர்களின் மன நிலைகளை இவ்விதம் வெளிப்படுத்திருப்பது சிறப்பாக உள்ளது.
    ஒரேயொரு சந்தேகம். ஏற்கனவே தன்னை பெண்பார்க்க வந்திருந்த அறிவழகனை, விஜயா நினைவுபடுத்திக் கொண்டு விட்டதைப் போல அறிவழகனுக்கும், அந்த நினைவு வராமலிருப்பது ஆச்சரியந்தான்..! ஒருவேளை அவரின் கெடுதலான பழக்க வழக்கங்கள் அந்த நினைவை மறக்கடித்து விட்டன போலும்.. மேலும், தன் மனைவி அழகியின் திறமைகளைப் பற்றி தவறுதலாக அவர் நினைக்கும் போது, அந்த மனைவியான அழகி தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காக விஜயாவின் நட்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைப்பது பாராட்டுக்குரியது. அது அவரின் நல்ல மனநிலையை காட்டுகிறது. இப்படித்தான் இறைவன் முன்னுக்குப் பின் முரணான குணமுடையவர்களை பெரும்பாலும் சேர்த்து வைக்கிறான்.

    இருவரில் ஒருவர் மற்றவர் கருத்தை ஆமோதித்து தம் மனப்பிணக்கை வெளிக்காட்டாமல் அனுசரித்து வாழ்ந்தால், வாழ்வின் முழுசிறப்பை பெற்று மகிழலாம். அதற்கும் இறைவனின் முழு கருணையும், அதனால் உண்டாகும் அதிர்ஷ்டங்களையும் பெற முற்பிறப்பில் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    இன்னாருக்கு இன்னாரென இறைவன் முடித்து விட்டதை யார்தான் மாற்ற முடியும்? நல்லவையும், நல்லது அல்லாதவையும், வாழ்வின் ஊழ்வினைபயன்கள்தாமே..! கதை நன்றாக உள்ளது. இதை எழுதி இங்கு பகிர்ந்த ஜீவி சகோதரருக்கு மனமுவந்த நன்றி.

    கதைக்கேற்றபடி அழகியின் ஓவியத்தை வரைந்து இங்கு பகிர்ந்த சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. //அறிவழகனுக்கும் அந்த நினைவு வராமலிருப்பது ஆச்சரியம் தான்..//

    சொந்தக் கணவனை வேற்று ஆள் என்று
    வேறுபடுத்திக் காட்டிய அவசர வாசிப்பு அல்ல இது

    அருமையான ஆழ்ந்த வாசிப்பின் வெளிப்பாடு.
    உண்மையில் இந்தக் கேள்வியை யாராவது கேட்க மாட்டார்களா என்று எதிர்பார்த்திருந்தேன். நீங்கள் கேட்டதில் மிகவும் சந்தோஷம்.

    கடைசியில் பதில் சொல்கிறேன்.

    கதையை விட எந்தக் கதையையும் எழுதிச் சொல்கிற விதம் தான் எனக்கு முக்கியமாகப் படுவதால்-----

    இந்த முக்கியமான கேள்வி. எழுத்து நடையில்
    கதை சொல்லலில் மாறுபட்ட இந்த மாதிரிக் கதை
    Presentation பாணிகள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, இந்த மாதிரி வெவ்வேறு முயற்சிகளான கதைகளை நான் இந்தத் தளத்தில் எழுதலாமா என்பதே.

    எபியின் வாசகர்களின் கருத்தை அறிந்து தீர்மானிக்க வேண்டி இருப்பதால் இந்தக் கேள்வி முக்கியமாகப் படுகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      உங்கள் பதிலை, அதன் விளக்கத்தை அறிய ஆவலாக உள்ளேன்.

      /இந்த மாதிரி வெவ்வேறு முயற்சிகளான கதைகளை நான் இந்தத் தளத்தில் எழுதலாமா என்பதே./

      அவசியமாக எழுதுங்கள். உங்களின் அருமையான எழுத்துக்களை நாங்கள் அனைவரும் எப்போதும் விரும்பி படிப்போம். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  20. எல்லாருக்கும் வணக்கம். எல்லாரும் நலம்தானே?

    பணிகள் முடிந்து கொஞ்சம் ஆசுவாசம் என்றாலும் நான் முழுமையாக வலைப்பக்கம் வர இன்னும் சில நாட்கள் எடுக்கும். இன்று எபியில் கதை, கதைகள் வாசிக்கப் பிடிக்கும் என்பதால் வந்து கருத்திட்டு போய்டலாம் என்று . மற்ற நட்புகளின் பதிவுகளை வாசிக்கிறேன் இப்ப நட்புகளுக்கு ஸாரி சொல்லிக்கிறேன்.

    ஜீவி அண்ணாவின் இன்றைய கதை நன்று. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாயிலாகவும் மற்றவரைப் பற்றிய அவர்களின் அனுமானங்களையும், அதனால் ஏற்படும் எண்ணங்களையும் சொல்லிய விதம் நல்லாருக்கு.

    நால்வரில் பாஸ்கருக்கு ஏற்கனவே அழகியை அறிமுகம். பாஸ்கரின் மன வரிகளை வாசிக்கிறப்போ கயிற்றின் மீது நடப்பது போன்ற ஒரு உணர்வு தோன்றியது. பாஸ்கருக்கு அழகியின் மீது மையலோ என்பதாக. ஒரு பெண்ணை ரசிப்பதாலோ வர்ணிப்பதாலோ அதைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது என்றாலும், எல்லா மனைவிகளாலும் கணவரின் இந்த வரிகள் காதில் பட்டால் ஏற்க முடியுமா என்பது சந்தேகம்தான். நல்ல பக்குவப்பட்ட மனசும் கணவரிடம் அசைக்க முடியாத நம்பிக்கை/trust இருந்தால்தான் அதை சாதாரணமாக எடுத்துக்க முடியும்.

    அழகியின் மனது, அறிவழகன் நினைப்பது போன்று இல்லை. புத்திசாலியாக இருக்கவே விழைவதாகத் தோன்றுகிறது பாஸ்கரின் பார்வையில். அதனால்தான் விஜயாவிடம் வேலை பற்றி கேட்டுத் தெரிந்து கொள்கிறாள். விஜயா நல்ல புத்திசாலிப் பெண்ணாகத் தெரிகிறாள்.

    அறிவழகன், ஆசிரியராக இருந்தாலும் மனம் அதற்கு ஏற்ப இல்லை.

    ஒவ்வொருவரின் குணாதிசயங்களும் வெளிப்படுகின்றது சொன்ன விதம் மிக நன்றுஜீ வி அண்ணா.

    இவர்கள் நால்வரில் விஜயாவுக்கு அறிவழகன் ஒரு வேளை முந்தைய நட்பாகவோ இல்லை காதலனாகவோ இருந்திருப்பானா அப்படிக் அக்தை வந்துவிடுமோ என்று நினைத்து வரும் போது

    விஜயா அறிவழனை வெளிச்சத்தில் பார்த்ததும், கணவன் பாஸ்கரின் கையைப் பற்றிக் கொண்டதில் கதை முடிகிறது. அந்த வரியில் தான் கதையின் முடிவே. விஜயாவுக்குத் தன்னைப் பெண் பார்க்க வந்தவனை அங்கு கண்டதும், ஒரு படபடப்பு. பெண் பார்க்க வந்தவன்...கல்யாணம் கை கூடவில்லை அவ்வளவுதான் என்று காஷுவலாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு வேளை அமைந்திருந்தால் அவனின் புகைத்தால் வழக்கம அவளுக்கு ஒத்துவந்திருக்காது என்று தெரிகிறது. நல்ல காலம் அவளுடைய சுபாவத்துக்கு அமையவில்லை ஆசுவாசப்படுத்திக் கொள்ள பாஸ்கரின் கை கவசம். இன்னாருக்கு இன்னார்!!!

    சில திருமணங்களில் இந்த இன்னாருக்கு இன்னார் தோல்வி அடைகிறதோ? ஜீவி அண்ணா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி.. ஒரு வழியாக சகோதரி வந்தாச்சு. அதுவும் இந்த செவ்வாய்க்கு வந்து கதை வாசித்து
      களம் (!) கண்டாச்சு!..

      நீக்கு
    2. அழகியின் குடும்பத்தில் தாத்தா காலத்திலிருந்து தொடர்ந்து வரும்
      புகையிலைப். பழக்கத்தை... 'என்ன பாவம் பண்ணினோமோ
      தெரிலே.
      இந்தப் புகையிலை பழக்கம் நம்ம குடும்பத்தை விடாது போலிருக்கேன்னு அம்மா தான் அடிக்கடி சலிச்சிப்பாங்க....

      -- எழுதறது எதுவும்
      அநாவசியம் இல்லே.
      கற்பனையில் கதை தன்னைத் தானே எழுதிக்க அங்கங்கே சில விஷயங்களை அதுவேத் தூவி விட்டுக் கொள்ளும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து
      முழுமைப்படுத்திக் கொள்வது தான் வாசகருக்கு அவருக்கான கதையாகிறது.

      நீக்கு
    3. வணக்கம் கீதாரெங்கன் சகோதரி. நலமாக இருக்கிறீர்களா? உங்களை இன்று இங்கே கண்டதில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இனி பதிவுகளுக்கு தொடர்ந்து வாருங்கள் என வரவேற்கிறேன். நன்றி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  21. விஜயா அறிவழகனை கடைசியில் வெளிச்சத்தில் பார்ப்பதால், தெரிந்துகொள்கிறாள். அறிவழகன் அவளை இருட்டில் சரியாகக் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது. விஜ்யாவோடு கதை முடிகிறது. அதற்காகவே ஜீவி அண்ணா இப்படி அமைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. பார்த்திருந்தால் அவன் மனநிலை என்னவாக இருந்திருக்கும்?!! ஜீவி அண்ணாவுக்கு அடுத்த கதை இதிலிருந்து பிறக்கலாம் இல்லை வேறு யாருக்கேனும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருட்டு -- வெளிச்சம் வித்தியாசம் முக்கியமில்லை.
      ஆண் -- பெண்
      எதிர் எதிர் வித்தியாசம்.

      நீக்கு
  22. இந்த பாணியில் கதைகள் வந்திருக்கின்றனதான். இங்கு எபியில் இல்லை என்றே தோன்றுகிறது. சரியாகத் தெரியவில்லை.

    புது விதமான புது பாணியில் புதிய கரு கொண்ட புதிய நடையில் கதைகள் அமைவதில் ஆர்வம் மேலிடுகிறது. உலகில் நடக்கும் சம்பவங்களின் எக்கருவையும் கொண்டு வித்தியாசமாக அமைவதும் நல்லதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையே.
      ஆனால் இது சாத்தியப்பட எபி எழுத்து வேள்வியில் பலர் ஈடுபட வேண்டும். :))

      நீக்கு
  23. 2019 அக்டோபரில் இதே தளத்தில் ஒரு சம்பவத்தை வைத்து -

    நான் நாகன் என்கிற.. என்றும்

    நான் கல்பனா.. - என்றும்,

    எழுதியிருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  24. சில நேரங்களில் சுய டமாரம் தேவைப்படுகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் செவ்வாய்க் கிழமை கதை பின்னூட்டங்களில் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி என்று முடித்துக் கொள்கிறீர்கள்.

      மாய்ந்து மாய்ந்து எழுதுகிறவனுக்கு தான் எழுதியது பற்றி எந்தக் கருத்தும் இருக்காதா என்ன?

      எழுதுகிறவனுக்கு என்று ஒரு கித்தாப்பு வேண்டும்.

      வாசகரோடு நிறைய பேசுங்கள். அது இரண்டு பகுதிகளிலும் ஒரு தெளிவை ஏற்படுத்த உதவியாக இருக்கும்.
      இரண்டு பக்கமும் நிறைய பேசி கதையை அலசிய உணர்வு ஏற்படும்.
      என் குரு ஜெயகாந்தனிடமிருந்து நான் கற்றுக் கொண்டது இது.

      நீக்கு
  25. கடந்த வியாழனன்று,
    ஜீவி அண்ணா அவர்கள் வைத்த பொடி விஷயத்துக்கு கதை ஒன்றும் கவிதை ஒன்றுமாக அப்போதே எழுதி அனுப்பி விட்டேன்..

    ஸ்ரீராம் அவர்கள் அவற்றை நேரம் அறிந்து வெளியிடுவார்..

    பதிலளிநீக்கு
  26. வில் வித்யை -

    துரோணாச்சார்யருக்கு அதில் என்ன பெருமை?!!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றி வில்லுக்குப் பெருமையோ?

      யாருக்காவது அல்லது எதற்காவது பெருமையைச் சேர்க்கத் துடிக்கும் மனதின் சேஷ்டை இது.

      இடையில் நம்ம திருவள்ளுவர் சொன்னதும் நினைவில்..

      'பெருமைக்கும் ஏனைய சிறுமைக்க.
      .......'

      நீக்கு
  27. ஜீவி அய்யா கடைசி வரியில் "சட்டென்று பாஸ்கர் கை பற்றி" என்பதற்கு பதில் "சட்டென்று கணவர் பாஸ்கர் கை பற்றி" என்று இருந்தால் குழப்பம் வந்திருக்காது.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
  28. சரியா போச்சு..
    சுஜாதாவைக் கேட்டால் அதெல்லாம் அமைச்சூர் எழுத்து என்பார். :))

    (ஹி..ஹி.. சுஜாதாவை வேறு எழுத்தாளர் சுஜாதான்னு அடையாளப்படுத்தி எழுதணுமோ?)

    பதிலளிநீக்கு
  29. மறுபடி ஒரு சந்தோஷ நிகழ்வு.  டிசம்பர் 2, 2023 ஆம் தேதி சனிக்கிழமை நான் படிச்ச கதையில் JKC Sir பகிர்ந்த கதையின் படைப்பாளி திரு எஸ்ஸார்சி வந்து பதில் அளித்திருக்கிறார்.  ஜீவி ஸார், கணேசன் சார் எல்லோரையும் அறிவேன் என்று சொல்லி இருக்கிறார்.

    https://engalblog.blogspot.com/2023/12/150-200.html

    பதிலளிநீக்கு
  30. எஸ்ஸார்ஸி என் நண்பர். தோழர். தொலைபேசி தொழிற்சங்க அமைப்பில் ஒன்றாய் களப்பணி ஆற்றியவர்கள். தொழிற்சங்க மாநாடுகளில் எங்கள் சந்திப்பு நிச்சயம். தோழர் கணேசன் நெய்வேலியில் பணியாற்றிய மூத்த தோழர். இலக்கிய பற்று கொண்டவர். எங்களுக்கெல்லாம் ஆசான் மாதிரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. களப்பணி களப்பணி என்கிறோமே...  எதெதை எல்லாம் களப்பணியாகக் கொள்ளலாம்?

      நீக்கு
  31. Field work. -- என்பது தான் தமிழில் களப்பணி ஆயிற்று.

    பதிலளிநீக்கு
  32. //அறிவழகனுக்கும் அந்த நினைவு வராமலிருப்பது
    ஆச்சரியம் தான். //
    --- சகோ. கமலா ஹரிஹரன்

    பொதுவாகவே ஆண்களுக்கு ஆயிரம் வாசல் இதயம். யாரோ வருவார்; யாரோ போவார்.
    வருவதும் போவதும் அவர்களுக்கே அவ்வளவு ஆழமாக நினைவில் படியாது. அனுதினமும் எதிர்ப்படும் எத்தனையோ பெண் முகங்கள் அவர்களுக்கு. :))

    அறிவழகனும்
    பெண் பார்க்கும் படலத்தில் அழகியை நிச்சயம் செய்வதற்கு முன் எத்தனை பெண்களைப் பார்த்திருப்பார் என்று தெரியாது.

    ஆனால் விஜயா திருமண விஷயத்தில் அவளைப் பார்த்தவர்கள் இரண்டே இரண்டு பேர் தான். முதலில் அறிவழகன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் பாஸ்கர்.

    'இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே.. பேங்க் கஸ்டமராக இருக்குமோ என்ற தேசலான நினைவு அவளுக்குத் தான் ஆரம்பத்திலேயே வந்ததே தவிர, அறிவழகனுக்கு
    அவளை ஏற்கனவே பார்த்திருக்கிற நினைவு மனசில் எழவே இல்லை.

    இதெல்லாம் ஆண் -- பெண் மனவியல் சம்பந்தப்பட்ட ஒன்று என்று கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சகோதரரே

      தங்கள் விளக்கமான பதிலை படித்தேன். விளக்கத்தை புரிந்து கொண்டேன்.

      /இதெல்லாம் ஆண் -- பெண் மனவியல் சம்பந்தப்பட்ட ஒன்று என்று கொள்ளலாம். /

      தாங்கள் கூறுவது உண்மைதான். ஆனாலும் ஒரு ஆண் தினசரியான தன் வாழ்வில் எத்தனையோ பெண்களை பார்க்க நேரிடினும், தன் வாழ்வியலில் நடைபெற இருக்கும் முக்கியமான அந்த திருமண பந்தத்திற்காக குறிப்பிட்ட ஒரு பெண்ணை பார்க்க வேண்டி உற்றாருடனோ, இல்லை தன் பெற்றோருடனோ சென்று பார்க்கும் போது, அந்த திருமணமே முடிந்த முடிவாகாமல் தடைகள் பல வந்தாலும், பின்னர் அந்தப் பெண்ணை எப்போதேனும் காணும் சந்தர்ப்பம் வரும் போது பழைய சம்பவங்களும் நினைவில் வருமென நினைத்தேன்.ஆண், பெண் இருவருக்குமே முதல் தடவையாக பெண் பார்க்கும் வைபவம் நடந்து அதுவே இருவர் மனதுக்கும் பிடித்தமாகி திருமணம் நடந்து விட்டால் பிரச்சனை ஏதுமில்லை.:)

      ஆண்களுக்கு ஆயிரம் வாசல் இதயம் என்றதும், "ஆயிரம் வாசல் இதயம். அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்" என்ற பாடல் நினைவுக்கு வந்து மனதுக்குள் ஒலித்துக் கொண்டேயுள்ளது.

      உங்களின் நினைவு கூர்ந்த பதிலுக்கும் மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  33. கதை சிறப்பு. ஒரு டெக்னிகல் தவறு. சீனியர் சிட்டிசன் சலுகை அறுபதிலேயே கிடைக்கும். தவிரவும் சீனியர் சிட்டிசன் கணக்குகளுக்கு ஏஜண்ட் கமிஷன் இல்லை என்பதால் அவர்கள் அந்த வகை கணக்குகளில் அக்கறை காட்ட மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  34. போஸ்ட் ஆபிஸ் சேமிப்புக் கணக்கைப் பற்றிச் சொல்கிறீர்களா? அழகி தனக்கு வரும் ஏஜெண்ட் கமிஷன்களிலெல்லாம் அவ்வவு குறியாக இருப்பதில்லை, அதுவும் அதிக டெபாஸிட்டுகளைச் சேர்க்கும் அவள் வேலை சம்பந்தப் பட்ட வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாதா?

    கதைகளில் இப்பொழுதெல்லாம் இவ்வளவு accurate information--களைப் பார்ப்பதல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

    இப்படியான நுணுக்கமான விஷயங்களில் கவனம் போனால் கதை வாசித்த ரசனையா கிடைக்கும்?
    அல்லது இதையெல்லாம் பார்த்துப் பார்த்து எழுதுவதில் கவனம் போனால் எழுதற கதை கதையாகவா இருக்கும்?

    யோசிக்கவும். உங்களுக்கு உபயோகப்படக் கூடிய விஷயம் இது.

    பதிலளிநீக்கு
  35. ஒரு கதையின் பின்புலம் பற்றி அறிந்து எழுதுவது வரவேற்கத் தக்கது.மற்றபடி கதையின் மையக்கருவும் கதையும் நன்றாகவே எழுதப் பட்டுள்ளன.

    பதிலளிநீக்கு
  36. கறாராகச் சொல்லப் போனால் இது இந்தக் கதையின் பின்புலமே அல்ல.


    இதை ஒரு கதையின் பின்புலமாக்க வழி இருக்கிறது..

    ஏஜெண்ட்டுகளுக்குக் கொடுக்க வேண்டிய கமிஷனை மிச்சம் பிடித்து
    அதையே மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தருவது போல அரசு பாசாங்கு செய்வதாகக் கொள்ள இடமிருக்கிறது.

    தகுந்த கமிஷன் இல்லாததால்
    முகவர்களும் மூத்த குடிமக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வமில்லாது இருப்பதாகச் சொல்கிறீர்கள்.
    இதனால் மூத்த குடிமக்கள் அவர்கள் இருப்பிடம் வந்து சேவை
    செய்யும் ஏஜெண்ட்களின் சேவையையும் இழக்கிறார்கள் என்றாகிறது.

    தடியூன்றிய முதியவர் ஒருவர் தட்டுத் தடுமாறி
    போக்குவரத்து நெருக்கடிகளுக்கிடையே
    தபால் ஆபிஸ் வருவதாக உங்கள் கற்பனை விரிந்தால் கதை 'பண்ண'
    நல்ல கரு கிடைக்கும்.

    உங்கள் எண்ணத்தை ஒரு கதையின் பின்புலமாக்கியதும் நடக்கும்.

    சரியா?..

    பதிலளிநீக்கு
  37. ஜீவி சார் கதை நன்றாக இருக்கிறது.

    அவர் அவர் எண்ண ஓட்டத்தில் கதை களம்.

    'பாதைகள் மாறும், பழக்கங்கள் மாறுமா' என்ற பாட்டு.//

    எத்தனையோ வருடம் சிகரெட் குடித்தவ்ரகள் எல்லாம் பழக்கத்தை விட்டு இருக்கிறார்கள். தன் மனைவி, குழந்தைகளுக்காக.

    //சிகரெட் பிடிக்காதீர்கள்.. அது உடல் நலத்திற்கு கேடு' என்று எச்சரிக்கை ஸ்லைடு ஒன்றைப் போட்டார்கள்.//

    படம் ஆரம்பிக்கும் முன் போடுவார்கள், இப்போது படம் முடிந்த பின்னும் போடுகிறார்களா?


    //நல்லவேளை தப்பித்தோம்'ன்னு ஜபிக்கிற மாதிரி என் உதடுகள் அனிச்சையா முணுமுணுத்தன. //

    விஜயாதன் கணவர் குண நலன்களோடு , அறிவழகன் குணத்தை ஒப்பிட்டு
    பார்த்து கொள்வது இயல்புதான்.

    பதிலளிநீக்கு
  38. தியேட்டர் திரையில் சிகரெட் எச்சரிக்கை போடுவதிலிருந்து...
    அறிவழகன் பக்கம் விஜயா திரும்பிப் பார்ப்பது வரை ஒரு தொடர் நிகழ்வு. ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் கொண்டது. கதையின் கடைசிப் பகுதியில் இந்த நிகழ்வு வருவதால் சிகரெட் எச்சரிக்கையும் கதைக் கடைசிப் பகுதியில் வந்தது. அவ்வளவு தான்.

    தியேட்டரில் வெளிச்சம் பளீரிட்டதும் அறிவழகனை விஜயா திரும்பிப் பார்த்தாள்
    என்றிருந்தால் நன்றாய் இருக்காதல்லவா? அதற்காகத் தான் அந்த
    சிகரெட் எச்சரிக்கை.

    நான் தியேட்டருக்குப் போய் சினிமா பார்த்தே பல வருடங்களாகின்றன.
    கடைசியாகப் பார்த்தது
    'சுந்தரன் ஞானும், சுந்தரி நீயும்' பாடல் வரும் படம்.
    மதன காமராஜனா? பெயர் சட்டென்று ஞாபகத்திற்கு வரவுல்லை.

    யு.எஸ்ஸில் இருக்கிறீர்களா? எங்கிருந்தாலும் வந்து கருத்துச சொன்னமைக்கு நன்றி, சகோதரி.

    பதிலளிநீக்கு
  39. ஒரு படத்தை பார்க்க செலாலும் இடத்து , வித்தியாசமாக அவர்கள் அவர்கள் கூற்றாக கதை நகர்ந்து செல்வது அருமை.

    அழகியாக அனுஷ்காவை இவ்வளவு மெல்லியதாக காட்டும் படம் நன்று.

    பதிலளிநீக்கு
  40. அட! அது அனுஷ்காவா? யாருமே இது வரை முணுமுணுக்கக் கூட இல்லையே!..

    கதையை வாசித்து ரசித்தமையை சொன்னதற்கு நன்றி, சகோ.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!