சனி, 22 ஜூன், 2024

பி எஃப் முன் பணம், தங்கப் பதக்கம், டாக்டருக்கு கௌரவம், பறக்கும் கார் & நான் படிச்ச கதை

 

இந்த வார நம்பிக்கை செய்திகள் :

சென்னை: பி.எப்., அலுவலகத்துக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து, ஒரு லட்சம் ரூபாய் வரை முன் பணம் பெறும், புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் சந்தாதாரர்கள், தங்களது பி.எப்., கணக்கில் இருந்து குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காகவும், வீடு கட்டுமானம், மனை வாங்குதல் மற்றும் மருத்துவ செலவுகளுக்காக,முன் பணம் பெற்று வருகின்றனர்.

விண்ணப்பிக்கும் சந்தாதாரர்களுக்கு, தொகை விரைவாக கிடைக்கும் வகையில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளது.

சந்தாதாரர் விண்ணப்பிக்கும் தொகை ரூ.50 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால், ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், உடனே அப்ரூவல் கிடைத்து விடும். இப்போது இந்த நடைமுறை, மேலும் 'அப்கிரேட்' செய்யப்பட்டு, முன் பணம் கூடுதலாகவும், விரைவாகவும் கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, ஒரு லட்சம் ரூபாய் வரை, ஆன்லைனில் பரிசீலனை செய்து, இரண்டு அல்லது மூன்று நாட்களில், சந்தாதாரரின் வங்கி கணக்கில் பணம் வந்து விடும். இந்த புதிய நடைமுறையை, பி.எப்., சந்தாதாரர்கள் வரவேற்றுள்ளனர்.

= = = = = = = = =


துர்கூ: பாவோ நுர்மி தடகள போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

பின்லாந்தின் துர்கூவில் பாவோ நுர்மியில் சர்வதேச தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஈட்டி எறிதலில் இந்தியா, உள்ளிட்ட 8 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் 26 வயதுடைய நீரஜ் சோப்ரா, 85.97 மீ தூரம் எறிந்து தங்கம் வென்றார்.

= = = = = = =


லண்டன்: பிரபல மூளை நரம்பியல் நிபுணர் பிரிட்டனின் உயரிய விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.

இந்திய மருத்துவரான பிரபல மூளை நரம்பியலில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் டேவிட் கிருஷ்ண மேனன். இவர் பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் மயக்கவியல்துறை பேராசிரியராக உள்ளார்.

பிரிட்டனில் பல்வேறு துறைகளில் சிறந்தவர்களுக்கு அந்நாட்டு உயரிய விருதான சி.பி.ஐ., எனப்படும் ‛‛கமாண்டர் ஆப் தி ஆடர் ஆப் பிரிட்டிஷ் எம்பரர்'' என்ற விருது வழங்கப்படுகிறது.

இவ்விருதுக்கு டேவிட் கிருஷ்ணமேனன் தேர்வு பெற்றார். பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் தன் பிறந்த நாளன்று இவ்விருதை வழங்கி கௌரவிக்கிறார்.

= = = = = = =

பீஜிங்: உலகின் முதல் பறக்கும் காரை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.1.15 கோடி என்கின்றனர்.

இன்றைய சூழலில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வாகனத்தில் செல்வதற்குள் போதும்போதும் என்ற நிலைக்கு சென்றுவிடுகிறோம். காரணம், பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையால் நெரிசல் அதிகரித்து, பயணத்தை தாமதப்படுத்துவதுடன், சலிப்படைய செய்கிறது. பயணத்தை எளிதாக்கும் வகையில், பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.

அந்த போட்டியில் தற்போது சீனா முந்தியுள்ளது. சீனாவின் தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான 'எக்ஸ்பெங்', உலகிலேயே முதல் பறக்கும் பேட்டரி காரை தயாரித்துள்ளது.

இதற்கான சோதனை ஓட்டத்தை 2022ம் ஆண்டு துபாயில் நடத்தி வெற்றிப்பெற்றது. ஹெலிகாப்டரின் தொழில்நுட்பத்தில், கார் போன்ற வடிவத்தில் இந்த பறக்கும் இந்த காருக்கு எக்ஸ்பெங், 'எக்ஸ்2' என பெயரிடப்பட்டுள்ளது. 5.172 மீட்டர் நீளமும், 5.124 மீட்டர் அகலமும், 1.362 மீட்டர் உயரமும் கொண்ட இந்த கார், 680 கிலோ எடைக்கொண்டது. அதிகபட்சம் 160 கிலோகிராம் எடையை தாங்கி பறக்கக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.1.15 கோடி இருக்கும் என்கின்றனர்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


நான் படிச்ச கதை - பானுமதி வெங்கடேஸ்வரன் 

அந்நியர்கள் -  ஆர். சூடாமணி 


பெண் எழுத்தாள்ர்களில் வித்தியாசமானவர் ஆர்.சூடாமணி. மனித உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தக்கூடியவர். அவருடைய ‘அந்நியர்கள்’ என்னும் சிறுகதையை சமீபத்தில் படித்தேன். கொஞ்சம் சுருக்கி கீழே தந்திருக்கிறேன். முழுகதையை படிக்க விரும்புகிறவர்கள் ‘அழியாச்சுடர்கள்’ என்னும் தளத்திற்குச் சென்று படிக்கலாம்.

பம்பாயிலிருந்து ரத்த சோகைக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ள சென்னையிலிருக்கும் தன் அக்கா சவிதாவின் வீட்டுக்கு வருகிறாள் சௌமியா.

சென்ட்ரல் ஸ்டேஷனில் அவளை வரவேற்க வந்திருக்கும் அக்காவைப் பார்த்ததும், ஆச்சர்யமாக இருக்கிறது தங்கைக்கு. 

“என்னை இங்கே எதிர்பார்க்காவிட்டால் உன்னை மன்னிக்க முடியாது” என்கிறாள் சவிதா. 

“நீ இப்படி பேசுவதை கேட்கும்பொழுது என் வீட்டிற்கு வந்து விட்டதைப் போல் இருக்கிறது” என்கிறாள் சௌமியா. 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இரண்டு நிமிடங்கள் நிற்கிறார்கள். அர்த்தபூர்வமான, இதய பூர்வமான மௌனம்!

இருவரும் பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் சந்திக்கிறார்கள். கடைசியாக பார்த்தது அம்மாவின் மரணத்தின் பொழுது. அந்த சமயத்தில் அதிகம் பேசிக் கொள்ள முடியவில்லை. இப்போது அவர்கள் இருவருக்கும் பேசிப் பேசி மாளவில்லை. 

சவிதாவின் கணவனும்,குழந்தைகளும் கூட இவர்களை கேலி செய்கிறார்கள், ஆனால் சகோதரிகள் இருவரும் அசருவதாக இல்லை. 

பேச்சு என்றால் ஒரே விஷயத்தை தொடர்ந்து பேசுவது அல்ல, இரண்டு நாட்களுக்கு முன் பேசிய விஷயத்தைப் பற்றி, “நான் அதற்குத்தான் சொல்கிறேன்..” என்று ஒருத்தி சொன்னால், இன்னொருத்தி அவள் எதைச் சொல்கிறாள் என்பதை சரியாக புரிந்து கொண்டு தொடர்வாள். அப்படி ஒரு ஒத்துணர்வு!

இரண்டு பேருக்குமே காரமில்லாத சாம்பார்தான் பிடிக்கும், இருவருக்குமே காபியில் ஒரே அளவு சர்க்கரை போட வேண்டும், இருவருக்குமே அகலக்கரை போட்ட புடவைதான் பிடிக்கும். இருவருக்கும் மாலையில் வாக்கிங் செல்வதை விட, அதிகாலையில் நடக்கச் செல்வதுதான் பிடிக்கும்.

ஒரு நாள் மாலை வற்றலை தயிரில் ஊறப்போட்டு அதில் சர்க்கரை போட்டு “இது நம் வீட்டு சமையல், இங்கு யாருக்கும் பிடிக்காது. இப்போது நீ இருக்கிறாய், ஜோடியாக சாப்பிட” என்றபடி இருவருக்கும் இரு தட்டுகளில் கொண்டு வருகிறாள் சவிதா. 

அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, சவிதாவின் மூத்த மகன் எம்.எஸ்.ஸி. முதலாமாண்டு படிப்பவன், “அம்மா, நாளைக்கு எம்.எஸ்.ஸி. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு சென்ட்ஆஃப் பார்ட்டி இருக்கிறது, நான் இரவு வீட்டிற்கு வர மாட்டேன்” என்று கூற, சவிதா அதற்கு ஒப்புதல் அளிக்கிறாள். 

இது சௌமியாவிற்கு அதிர்ச்சி அளிக்கிறது. “என்ன சவி? இதையெல்லாம் அத்திம்பேர் அனுமதிக்கிறாரா? நீயும் மறுக்கவில்லை”

“ஏன் மறுக்கணும்?”

“இப்படியெல்லாம் வெளியில் தங்குவதால்தான் இந்தக் கால பையன்கள் குடி, சிகரெட், கஞ்சா என்று எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள்”

“உலகத்தில் எல்லாம் உண்டு என்று அவர்கள் தெரிந்து கொண்டுதான் வளர வேண்டும், அதற்கு மேல் ஒழுங்காக இருப்பதும், கெட்டுப் போவதும் அவர்கள் பாடு”

பெற்றோர்கள் கண்ட்ரோல் பண்ண வேண்டாமா?”

“கண்ட்ரோல் பண்ணினால் பிய்த்துக் கொண்டுதான் போகும்”

“பெற்றோர்கள் என்று எதற்கு இருக்கிறோம்?”

"எங்கள் அன்பு உங்களுக்கு எப்போதும் உண்டு என்று உணர்த்துவதுதான் பெற்றோர்களின் கடமை”

சரளமாக சென்று கொண்டிருந்த சகோதரிகளின் உறவில் வந்த முதல் இடறல் இது.

மறுநாள் சகோதரிகள் இருவரும் ஒரு ஹிந்தி சினிமாவுக்குச் சென்றார்கள். படம் சௌமியாவிற்கு பிடிக்கவில்லை, “எல்லாவற்றையும் பச்சையாக காண்பிப்பது இலக்கியம், சினிமா எல்லாவற்றிலும் இப்போது அதிகமாகி விட்டது”. என்று சௌமியா கூற, 

“நாம் அதில் உள்ள கலை நுட்பத்தை மட்டும் ரசிக்க வேண்டும் என்கிறாள் சவிதா.

தான் ஆங்கிலத்தில் எழுதி ஆங்கில சஞ்சிகையில் வெளியான இரு சிறுகதைகளை அக்காவிடம் காண்பித்து அதைப்பற்றிய அபிப்ராயம் கேட்டாள் சௌமியா. 

தங்கையின் எழுத்து நடையை பாராட்டிய சவிதா, “கதை நவீன ஃபேரி டேல்ஸ் மாதிரி இருக்கிறது” என்றாள்.

“நம்மைச் சுற்றி எல்லா இடத்திலும் வன்முறையும், ஆபாசமும் இருக்கிறதே, கதைகளிலாவது நல்லதை சொல்ல வேண்டும் என்பது என் இலட்சியம்” என்றாள் சௌமியா.

தங்களுக்குள் பிளவு ஏற்பட்டு விட்டதோ என்று லேசான மனக்கலக்கம் சவிதாவுக்குத் தோன்றுகிறது. ஆனால், அவள் கணவன் தங்கையை ஈராஸ் தியேட்டரில் ஓடும் எல்லா தமிழ்ப் படங்களுக்கும் அழைத்துச் செல்வதை கிண்டல் செய்தான், 

“அவளால் பம்பாயில் தமிழ் சினிமாக்கள் பார்க்க முடியாதே, அதனால்தான் அழைத்துச் செல்கிறேன், அவளுக்கும் அதில் இஷ்டம்தான், அப்படித்தானே சௌமி?” சவிதா கேட்டாள். 

சௌமியா, “ஓரா” என்கிறாள்.

சகோதரிகள் இருவரும் சிறு வயதில் அவர்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு பாஷையை உருவாக்கினார்கள். அதில் ஓரா என்றால் ஆமாம் என்பது பொருள். தன் தங்கை அதை மறக்காமல் இருந்ததும், குறிப்பிட்டதும் மகிழ்ச்சியூட்டுகிறது.

தான் உறுப்பினராக இருக்கும் லேடீஸ் கிளப்பிற்கு தங்கையை அழைத்துச் செல்கிறாள். அங்கு குடும்பத்தால் கை விடப்பட்ட, உடல் ஊனமுற்ற பையன் ஒருவனுக்கு உதவுவதற்காக நிதி வசூலிக்கிறார்கள். சவிதா பத்து ரூபாய் கொடுக்கிறாள்,சௌமியாவிடம் கேட்கும் பொழுது அவள் சற்று யோசித்து விட்டு ஐந்து ரூபாய் தருகிறாள்.

வீடு திரும்பும் வழியில் சவிதா, “ அந்தப் பையன் பாவம் இல்ல?" என்று கேட்க, சௌமியா, “பாவம்தான். ஆனால்..”

“என்ன ஆனால்?”

“இதையெல்லாம் பெரிய நிறுவனங்கள் செய்ய வேண்டும். தனி மனிதர்களால் என்ன செய்ய முடியும்? நம் நாட்டில் வறுமை என்பது அடி இல்லாத பள்ளம், எத்தனை போட்டாலும் ரொம்பாது, போட்டு என்ன பயன்?”

“எத்தனை போட்டாலும் ரொம்பாதுதான், நிரம்பும் வரை லாபம்தானே?” என்று சவிதா கூற, வீடு திரும்பும் வரை பேசாமல் இருவரும் மௌனமாக வருகிறார்கள்.

வீட்டிற்குள் நுழையும்பொழுது சவிதாவின் மகளும், இளைய மகனும் ஒரு வாராந்திரியை யார் முதலில் படிப்பது என்று போட்டுக் கொண்ட சண்டையில் அலமாரியில் வைத்திருந்த க்லாஸ்வேர் ஒன்றை உடைத்து விடுவார்கள் போலிருக்கிறது. 

அதை காப்பாற்றிய சவிதா,குழந்தைகளை கடிந்து கொண்டு தங்கையிடம், “இதை நம் அம்மா நமக்குத் தந்தது. அம்மா நினைவாக இதை பத்திரமாக வைத்துக் கொண்டிருக்கிறேன். நீயும் அப்படித்தானே வைத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்க, 

“இல்லை, மாடி வீட்டுப் பெண் அழகாக இருக்கிறது என்றாள், அவள் திருமணத்திற்கு பரிசாக கொடுத்து விட்டேன். அப்பா,அம்மாவை நினைவுபடுத்திக் கொள்ள நினைவுச் சின்னங்கள் தேவையா?” என்று சௌமியா கேட்க, மீண்டும் மௌனம். அதன் பிறகு அவர்கள் பேசும்பொழுது ஒரு ஜாக்கிரதை உணர்வு வந்து விடுகிறது.

இரண்டு மாதங்கள் ஓடி விடுகின்றன. சௌமியாவின் உடலும் தேறி விடுகிறது. சகோதரிகள் இருவரும் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து விட்டு, அவள் கணவன் “நீ ஊரிலிருந்து வரும்பொழுது நெற்றியில் ‘சௌமியா’ என்று எழுதி ஒட்டிக் கொண்டு வா, எனக்கு அடையாளம் தெரியாது போலிருக்கிறது” என்று கடிதம் எழுதியிருக்கிறான். 

கணவனும், குழந்தைகளும் மேலுக்கு தமாஷாக எழுதினாலும், உள்ளுக்குள் தன்னை மிஸ் பண்ணுகிறார்கள் என்பது சௌமியாவிற்கு புரிகிறது. ஊருக்கு திரும்ப முடிவு செய்கிறாள்.

“நிஜமாவே கிளம்பிட்டயா சௌமி?” என்று கேட்கும் பொழுதே மோவாய் நடுங்குகிறது சவிதாவிற்கு. தங்கைக்கு அகலக்கரை போட்ட கைத்தறி புடவை ஒன்றைத் தரும் சவிதா, தனக்கும் அதே போல ஒரு புடவை வாங்கிக் கொள்கிறாள். அடி நாதமாய் அன்பு. உள்ளுயிர்ப்பாக இருக்கும் அதுவே எத்தனை வேற்றுமையிலும் பிரிந்து விடாமல் காக்கிறது.

“நாம் அடிக்கடி சந்திக்க வேண்டும். நியூ இயர் ரெசெல்யூஷன் மாதிரி ஆகிவிடக் கூடாது” என்று சொல்லும் பொழுதே சௌமியாவின் கண்களில் நீர் திரளுகிறது.

“நான் எப்போது ஊருக்கு கிளம்பினாலும் சாமிக்கு நமஸ்காரம் செய்து விட்டுதான் கிளம்புவேன்..ஆனால் இங்கு சாமி படமே இல்லையே?” சௌமியா ஏக்கமாய் சொல்ல,

“படம் இல்லாவிட்டல் என்ன? மனசுக்குள் வேண்டிக்கொள்ளேன் உனக்கு நம்பிக்கை இருந்தால்” என்று சவிதா சொன்னது சௌமியாவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

என்ன இப்படி சொல்கிறாய்? உனக்கு நம்பிக்கை இருந்தாலா..? அப்படியென்றால் உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்று அக்காவை கேட்கிறாள் சௌமியா.

“எனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையானு நான் யோசிப்பதில்லை” என்று சவிதா கூற, சௌமியா அக்காவை வெறித்துப் பார்க்கிறாள். 

யார் இவள் என்று தோன்றுகிறது. இரண்டு பேரும் ஒன்றாகத்தானே வளர்ந்தோம்? அம்மா நம்மை எப்படி வளர்த்தாள்? தினமும் காலையும்,மாலையும் சாமிக்கும், துளசிக்கும் விளக்கேற்றச் சொல்லுவாள். வெள்ளிக்கிழமை என்றால் கோவிலுக்கு அழைத்துச் செல்லுவாள். ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுப்பாள். அப்படி வளர்ந்தவளுக்கு எப்படி கடவுள் நம்பிக்கை இல்லாமல் போகும்? என்று தோன்றுகிறது.

“என்ன சவிதா இவ்வளவு அலட்சியமா சொல்ற? எவ்வளவு பெரிய விஷயம் இது? இதில் கூட உனக்கு தீர்மானமான எண்ணம் இல்லையா? கடவுள் நம்பிக்கை இல்லாமல் போகும் அளவிற்கு உனக்கு என்ன அனுபவம் நேர்ந்து விட்டது?”

“அனுபவம் என்றால் நமக்கு ஏற்படுவதுதானா? நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு நடப்பதை பார்க்கிறோமே?, கண்,காது,மனசு எல்லாவற்றையும் திறந்துதானே வைத்துக் கொண்டிருக்கிறோம்?” என்றாள் சவிதா. 

"ஊருக்கு கிளம்பும் நேரத்தில் என்ன விவாதம் சௌமி?” என்று கேட்டுவிட்டு, அதே நேரத்தில் “உங்கள் பேச்சிற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள், அடுத்த சந்திப்பில் தொடரலாம், இப்போ டாக்ஸி வந்து விட்டது” என்றபடி சவிதாவின் கணவன் வர, “இதோ வந்துட்டோம்” என்றபடி தங்கையின் கையை பிடித்து அழைத்துச் செல்கிறாள் தமக்கை, ஆனால் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. என்று முடிகிறது கதை.

ஒரே மாதிரி சூழலில் பிறந்து வளர்தாலும் அவரவர்க்கு நேரும் அனுபவங்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் மாற்றுகிறது. அதே நேரத்தில், அடியுணர்வாக இருக்கும் அன்பு எத்தனை வேற்றுமையிலும் பிரிந்து விடாமல் பிணைக்கிறது என்பதை மிக அழகாக விவரித்திருக்கும்,  படித்து அனுபவிக்க வேண்டிய கதை!

37 கருத்துகள்:

  1. சூடாமணி அவர்களின் கதை அருமையாக இருக்கும். பானுக்கா, கதையின் முதல் இரு பத்திகளில் பெயர்க்குழப்பம். கொஞ்சம்.பாருங்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. முதல் நான்கு...பத்திகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு குழப்பம் நீக்கி சரி செய்யப்பட்டது - உங்கள் உதவியுடன்!

      நீக்கு
  3. இப்போது நான் படிச்ச கதை சரி செய்யப்பட்டுள்ளது. தட்டச்சில் ஏற்பட்ட பெயர்க்குழப்பங்கள் வந்தவை எல்லாம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கதையின் சுட்டியையும் இணைத்தால் பலருக்கும் பயன்படும். அழியாச்சுடர்கள் தளத்திற்குச் சென்றும் அதைத் தேடி எடுத்து வாசிக்கலாம் தான். இருந்தாலும் சுட்டி கொடுத்தால் திரை மறைவில் வாசிப்பவர்கள் பலருக்கும் எளிதாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நம்பிக்கைச் செய்திகளில் முதல் செய்தி மிகவும் அனுகூலம்!

    இந்தியாவின் 26 வயதுடைய நீரஜ் சோப்ரா, 85.97 மீ தூரம் எறிந்து தங்கம் வென்றார்//

    வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கதையைப் பற்றிய விமரிசனம் விரிவாக சொல்லியிருக்கலாம். சூடாமணி பெண்களின் உணர்வுகளை நன்கு புரிந்து கொண்டவர். உளவியல் கதைகளை சிறப்பாக எழுதுபவர். அவருடைய இன்னொரு கதையான "இணைப்பறவைகள்" என்ற கதை இப்பகுதியில் முன்பே நான் விமரிசித்திருக்கிறேன். இந்தக் கதையும் வாசித்தது தான்.

    இக்கதையின் சிறப்பு துவக்கம் நடு முடிவு என்ற இலக்கணத்திற்கு உட்பட்டு இருப்பது. ஒத்த மனமுடைய இருவர் படிப்படியாக அவரவர் தனித்தன்மையை காண்பதும் அதனால் ஏற்படும் நட்பு விலகளும் எப்படி ஏற்படுகிறது என்பது தான். யதார்த்தமான கதை. கதை நீரொழுக்கு போல் சீராக செல்வது மிகவும் சிறப்பு.

    பா வே மேடத்தின் வரவு நல்வரவாகுக. பகுதியைத் தொடரக் கோருகிறேன்.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...  வணக்கங்கள் JKC ஸார்.

      நீக்கு
    2. நீங்கள் இந்தப் பகுதியில் ஒரு முத்திரை பதித்திருக்கிறீர்கள். உங்கள் அளவிற்கு என்னால் செய்ய முடியுமா? என்று தயக்கமாக இருந்தது. ஸ்ரீராம் கொடுத்த தைரியம்.

      நீக்கு
  7. பிரபல மூளை நரம்பியல் நிபுணர் பிரிட்டனின் உயரிய விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.//

    பாராட்டி வாழ்த்துவோம்! நம்மூர்!

    எனக்கு எப்பவும் எழும் எண்ணம்....வெளி நாடு சென்று சாதிக்கும் நம் அறிஞர்கள் இந்தியாவிலிருந்தே இப்படியான சாதனைகளைப் புரிவதற்கான ஆராய்ச்சித் துறைகள் வளம் பெற வேண்டும். அரசுகள் சும்மா நீ உசத்தியா நான் உசத்தியான்னு சண்டை போட்டுக் கொள்ளாமல், ஊழல் இல்லாம கல்வித் துறை வளம் பெற இப்படியான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்கு எப்பவும் எழும் எண்ணம்....வெளி நாடு சென்று சாதிக்கும் நம் அறிஞர்கள் இந்தியாவிலிருந்தே இப்படியான சாதனைகளைப் புரிவதற்கான ஆராய்ச்சித் துறைகள் வளம் பெற வேண்டும். //

      நீக்கு
  8. // ஒரே மாதிரி சூழலில் பிறந்து வளர்தாலும் அவரவர்க்கு நேரும் அனுபவங்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் மாற்றுகிறது. அதே நேரத்தில், அடியுணர்வாக இருக்கும் அன்பு எத்தனை வேற்றுமையிலும் பிரிந்து விடாமல் பிணைக்கிறது என்பதை மிக அழகாக விவரித்திருக்கும், படித்து அனுபவிக்க வேண்டிய கதை!//
    கதையின் கருத்தை சரியாக சொல்லியிலிருக்கிறீர்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாய் சொல்லி இருக்கிறார்.  இன்னும் கொஞ்சம் அலசி இருக்கலாம் என்றும் தோன்றியது! :-))

      நீக்கு
    2. @ ஜே.கே. சார்: நன்றி
      @ ஸ்ரீராம்: அலசி உணர்த்துவதெர்கெல்லாம் தனித் திறமை வேண்டும், தி.கீதா போல, எனக்கு அது இல்லை.

      நீக்கு
  9. பறக்கும் கார் - சீனா நம மதன் ஜோக்கை (பல பல வருஷங்களுக்கு முன்ன அவர் போட்டது!!) பார்த்திருப்பாங்க போல! ஹாஹாஹாஹா

    அது சரி 1.15 கோடிதானா ஜுஜுபி! (நமக்கில்ல!) நம்ம ஊர்ல பலரும் வாங்கிடுவாங்கன்னு நினைக்கிறேன்! ஹிஹிஹி அப்ப இதுக்கான எரிபொருள் மையமும் தொடங்குவாங்களோ?

    இப்படி பறக்கற காரை பார்த்துட்டே கீழ வண்டி ஓட்டினா என்னாகும்னு யோசிக்கறேன்...ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  10. சூடாமணி அவங்க எழுதின கதை அழியாச்சுடர்களிலும் இருக்கு சிறுகதைகள்.காம் லும் இருக்கு. அழியாச்சுடர்களை விட சிறுகதைகள்.காம் ல கொஞ்சம் எளிதா வாசிக்கலாம். வாசித்தேன். சுட்டி இதோ

    https://www.sirukathaigal.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

    சூடாமணி நுண்ணிய உணர்வுகளை, உளவியல் ரீதியாகவும் எழுதக் கூடிய எழுத்தாளர். அருமையான கதை.

    ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள் ஒற்றுமைகள் பல இருந்தாலும் சிந்தனைகளில் வித்தியாசம் வருவது அதுதான் காலப் போக்கில் ஒவ்வொருவர் அனுபவங்களில் கற்றுக் கொள்வதால் வருவதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். யதார்த்தம்

    அதை பானுக்காவும் சொல்லியிருக்காங்க. அதுதான் கதையின் சாராம்சம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. சவிதாவின் மகன் இரவு வெளியில் தங்குவது பற்றிய உரையாடலில் சவிதாவின் எண்ணமும் சௌமியாவின் எண்ணமும் மாறு படுவது அந்த இடம் - சரியான உளவியல் இடம் பெற்ற இடம் சவிதாவின் கருத்தின் மூலமும், சௌமியாவின் சிறு வயது மூளையில் பதிந்த மாறாத ஸ்க்ரிப்ட்டும், என்று.

    அதே போன்று சௌமியா கிளம்பும் சமயம் சவிதாவின் வீட்டில் சாமிபடம் இல்லாதது.

    சவிதாவின் evolvement உம் சௌமியாவின் மாறாத ஸ்கிரிப்டும் வெளிப்படும் இடம். அருமையான இடங்கள்.

    ஸவிதா ஒரு கணம் தயங்கினாள். பிறகு, “நல்ல கதைதான், ஆனா… நவீன ஃபேரி டேல்ஸ் மாதிரி இருக்கு” என்றாள்//

    மிகவும் ரசித்த வரி. இதுவும் மேலே சொன்னதுக்கு ஒரு உதாரணம் இருவரின் எண்ண முதிர்ச்சியில்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. இரண்டில் மெலிதாயிருந்ததன் தலைப்பையும் ஆசிரியர் பெயரையும் கண்டதும், “ஓ இந்தப் புஸ்தகமா? நான் படிச்சிருக்கேன். ஸவி, நீ இதை அவசியம் படி. உனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

    ஸவிதா அப்புத்தகத்தைப் படித்து முடித்தபின் வெகுநேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். எவ்விதமான இலக்கியத் தரமோ மானிட ரீதியான வெளிச்சமோ இல்லாத வெறும் மஞ்சள் குப்பை அந்த நூல். இதையா அவளுக்குப் பிடிக்கும் என்றாள் ஸௌம்யா? அவள் சொன்னதிலிருந்தெல்லாம் ஸௌம்யா புரிந்து கொண்டது//

    எண்ணங்களில் முதிர்ச்சி வருபவர்களுக்கு, முதிர்ச்சி வராதவர்களுடன் பேசுவதும் பழகுவதும் கொஞ்சம் கடினமாக இருக்கும். சிலர் இதைக் கடந்து விடுவார்கள். இப்படியான முதிர்ச்சிக்கு வயது தடை இல்லை....அது போல சூழல் மட்டுமல்ல காரணம் அதை நாம் பார்க்கும் விதம் அதிலிருந்து கற்கும் விதம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. லேடீஸ் க்ளவி சம்பவம...அதன் பின்

    //சட்டென்று பேச்சு தொய்ந்தது. இருவரும் மௌனமாகவே வீடு வந்து சேர்ந்தனர். இப்போதெல்லாம் மௌனம் பேச்சின் மகுடமாக இல்லை.//

    அது போல அம்மா அப்பா கொடுத்த கிஃப்ட்

    //“அப்பா அம்மாவை நினைவு வச்சுக்க நினைவுச் சின்னங்கள் வேணுமா என்ன?”//

    சவீதா ரொம்பவும் உணர்வுபூர்வமாகவும், சௌமியா ஈசி கோயிங்க் ஒரு சில விஷயங்களில் ஆனால் ஒரு சிலதில் பழையபடியும் இருப்பது என்று வேறுபாடுகள் அவரவர் வெளியுலகைப் பார்க்கும் விதம் , அதில் கற்பவை அனுபவப் பாடங்கள் எண்ண முதிர்ச்சி என்று

    //பழைய நினைவுகளையோ இத்தனை வருஷக் கதைகளையோ பகிர்ந்து மகிழும்போது, சட்டென்று எழும்பிவிடக்கூடிய சுருதி பேதத்தைத் தவிர்க்க முனைந்து கொண்டே இருக்கும் ஒரு ஜாக்கிரதை.//

    சவீதாவுக்கு இந்த வித்தியாசம் கொஞ்சம் படுத்துகிறது.

    //“ஆனா இங்கே பூனை அறையே இல்லையே?” என்றாள் தொடர்ந்து.

    “இல்லாட்டா என்ன? மனசிலேயே வேண்டிக்கோயேன். நம்பிக்கை இருந்தால் அது போதாதா?”// (தளத்தில் தட்டச்சுப் பிழை பூஜை அறை பூனை அறை என்று வந்திருக்கு)

    பூஜை அறை இல்லை என்ற இடத்தில் வரும் வாக்கியம் ''இல்லாட்டா என்ன? மனசிலேயே வேண்டிக்கோயேன்" இந்த வாக்கியமும் இதற்கு முன்னே அம்மா அப்பாவின் கிஃப்டை சவிதா பத்திராமாய் வைத்திருப்பதும் சௌமியா அதைக் கொடுத்துவிட்டதற்கு அவள் சொல்லும் பதிலும்

    //“அப்பா அம்மாவை நினைவு வச்சுக்க நினைவுச் சின்னங்கள் வேணுமா என்ன?”//

    இரண்டையும் பார்த்தால் நமக்கு நிறைய புரியும் கதையில்!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. //ஒருவரையொருவர் தெரியும் புரியும் என்று சொல்வதெல்லாம் எத்தனை அறிவீனம்? எவ்வளவு நெருங்கிய உறவாயிருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தரையும் ஒரு புதிய இருப்பாகத்தான் கண்டு அறிமுகம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. காலம் கொண்டுவரும் மாற்றம் வெறும் நரை மட்டுமல்ல…//

    இதுதான் யதார்த்தம். அன்பு இருந்தால் போதும் யதார்த்தம் புரிந்துவிடும் போது எந்த உறவானாலும் இணக்கம் வந்துவிடும்.

    //அன்பு… அது அடியிழை, உள்ளுயிர்ப்பு. அது இருப்பதாலேயே, வேறுபாடுகளினால் அழிவு நேர்ந்துவிடாதிருக்கத் தான் அது இருக்கிறது.// டிட்டோ!!

    கைப்பிணைப்பு விலகவில்லை. ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.//

    அவர்களுக்குள் எண்ணங்கள் தான் மாறுபடுகின்றன ஆனால் அந்த அன்பின் உயிர்ப்பு அடியில் இருக்கிறது. அடுத்த சந்திப்பில் யதார்த்தம் புரிபட்டுவிடும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்தால் கூட இந்த வித்தியாசங்கள் அத்தனை புலப்பட்டிருக்காது...சௌமி யின் எண்ணம், சவியின் எண்ணம் என்று எடுத்துக்கொண்டிருப்பார்கள். 11 வருடங்களுக்குப் பிறகு சந்திப்பதால் இந்த மாற்றங்கள் பெரிதாகத் தெரிகிறது அவர்களுக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை சிறப்பாக அலசியிருக்கிறீர்கள் கீதா! நன்றி!

      நீக்கு
  16. இன்றைய பாசிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

    பானு பகிர்ந்த கதையும் நன்றாக இருக்கிறது.
    வீட்டில் இறைபக்தியோடு வளர்த்த குழந்தைகள் , வளர்ந்தவுடன் மாற்று கருத்துக்களை சொல்கிறார்கள்.

    //ஒரே மாதிரி சூழலில் பிறந்து வளர்தாலும் அவரவர்க்கு நேரும் அனுபவங்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் மாற்றுகிறது. அதே நேரத்தில், அடியுணர்வாக இருக்கும் அன்பு எத்தனை வேற்றுமையிலும் பிரிந்து விடாமல் பிணைக்கிறது என்பதை மிக அழகாக விவரித்திருக்கும், படித்து அனுபவிக்க வேண்டிய கதை!//

    உண்மை.

    ஒன்றாய் வளர்ந்தாலும் அவர்கள் விருப்பு, வெறுப்புகள் வேறு விதமாக இருக்கும் ஒரே மாதிரி சிலர் இருக்கலாம், ஆனால் பெரும்பாலும் வேறு வேறு குணநலன்களை உடையவர்களாக இருப்பார்கள்.
    கதை படிக்க ஆவலை தூண்டும் விதமாக பகிர்ந்து இருக்கிறீர்கள் பானு.

    பதிலளிநீக்கு
  17. தங்கம் வென்ற நீரஜ், நரம்பியல் நிபுணர் டேவிட் இருவருக்கும் பாராட்டுகள்.

    சீனா பறக்கும் கார் இனிமேல் பறக்கும் கார்களுக்கு இடையிலும் போட்டிதான்.

    நல்ல கதை பகிர்வு. இருவருடைய உணர்வுகளும் வேறு வேறாக இருந்தாலும் அன்பு பிணைந்துள்ளது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நல்ல கதை பகிர்வு. இருவருடைய உணர்வுகளும் வேறு வேறாக இருந்தாலும் அன்பு பிணைந்துள்ளது.// நன்றி மாதேவி.

      நீக்கு
  18. இன்றைய அவசர வாழ்க்கையில் பறக்கும் கார் மனிதர்களுக்கு பயனாக இருக்கும்.

    இதுவும் தாமதமாகிறது என்றபோது மனிதன் தனியாக பறக்கும் நிலையும் சாதாரண மக்களிடம் புலங்கி விடும்.

    பிறகு கார்கள் உபயோகமின்றி பேரீச்சம்பழம் வாங்க பயன்படும்.

    பதிலளிநீக்கு
  19. பறக்கும் கார்..! வான் வெளியில் ட்ராஃபிக் ஜாம் ஏற்படாமல் இருக்க வேண்டும் :))

    பதிலளிநீக்கு
  20. நம்பிக்கை தரும் செய்திகள் - சிறப்பு. சூடாமணி அவர்களின் கதைச் சுருக்கம் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!