திங்கள், 24 ஜூன், 2024

"திங்க"க்கிழமை   :தஞ்சாவூர் நெய் முறுக்கு - துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 தஞ்சாவூர் நெய்முறுக்கு

*** *** *** *** *** *** *** ***


பச்சரிசி ஒரு கிலோ
பொட்டுக் கடலை  500 கி
உளுத்தம் பருப்பு 150 கி
தேங்காய் ஒன்று
எள்/ சீரகம் /ஓமம் 2 தேக்கரண்டி
நெய் 4 ஸ்பூன்
கடலெண்ணெய் தேவையான அளவு
கல் உப்பு சுவைக்கேற்ப

முதலில் பச்சரிசியைக் கழுவி நல்ல வெயிலில் உலர்த்திக்  கொள்ளவும்.. 

பொட்டுக் கடலையை சுத்தம் செய்து வெயிலில் உலர்த்திக் கொள்ளவும்..
உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.. எல்லாவற்றையும்  ஒன்றாக அரவை இயந்திரத்தில் அரைத்துக் கொள்ளவும்..

வீட்டு மிக்ஸி என்றால் தனித்தனியாக அரைத்து
 எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து சல்லடையில் இட்டு சலித்துக் கொள்ளவும்.. இப்போது மாவு  ஒன்றுடன் ஒன்று சீராகக் கலந்திருக்கும்..
 
அடுத்ததாக இந்த மாவில் - கல் உப்புப் பொடியுடன்  எள், சீரகம்,  ஓமம் – இவற்றில்  ஏதாவதொன்று, அத்துடன் நெய்யும்  சேர்த்து  மாவை நன்கு கலந்து கொள்ளவும்.. 

பின்னர், தேங்காயைத் துருவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி  பால் பிழிந்து கொண்டு தேங்காய்ப் பாலை மாவுடன் சிறிது சிறிதாக சேர்த்து முறுக்கு பிழியும் பதத்திற்கு   பிசைத்துக் கொள்ளவும். 

பின்னர் ஒரு வாணலியில் கடலெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கின்ற மாவை முறுக்கு உரலில் இட்டு முறுக்காகப்  பிழிந்து இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்... 

முறுக்கு சற்று ஆறியதும் காற்றுப் புகாத கலனில் வைத்து அவ்வப்போது எடுத்துத் தின்று இன்புறவும்..
***
பச்சரிசியை - வாங்கி - கழுவி - காய வைத்து - அரைத்து ( ?!? ) - 

எதற்கு இத்தனை இம்சை?..
 
அரிசி மாவை அந்தக் கடையில் வாங்கிக் கொள்ளலாமே என்றால் எங்கள் கைப்பக்குவத்திற்கு கடை மாவுகள் ஒத்து வருவதில்லை.. ஏனெனில் அவை கடை மாவுகள்!..

இதில் ஆப்பச் சோடா, பெருங்காயத் தூள் சேர்க்க வில்லை...   ஆப்பச் சோடா வேண்டவே வேண்டாம்..

பெருங்காயத் தூள் எது தரம் என்று தெரியவில்லை.. உங்களுக்குத் தெரிந்திருப்பின் சேர்த்துக் கொள்ளலாம்..

நன்றி.. மகிழ்ச்சி..

***

34 கருத்துகள்:

  1. தாளாற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு..

    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்று சமையற் களத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. இக் குறிப்பினையும் ஏற்றுக் கொண்டு பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் தங்கள் செய்முறையாக தஞ்சாவூர் நெய் முறுக்கு நன்றாக உள்ளது. செய்முறை விபரங்கள் அருமை. நான் இதே பக்குவத்தில், எப்போதும் "தேன் குழல்" என்று தேங்காய் பாலில்லாமல் செய்வேன். தேங்காய் பால் விட்டு செய்யும் போது இதன் சுவை மிக நன்றாக அமையும். தங்கள் குறிப்புக்களை குறித்துக் கொண்டேன். இதே பக்குவம் பிரகாரம் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி..
      நன்றி...

      நீக்கு
  8. துரை அண்ணா சூப்பர் குறிப்பு! ரொம்பப் பிடிக்கும்.

    ஆனா பொட்டுக்கடலை சேர்க்கும் போது கொஞ்சம் எண்ணை கூடுதலாகக் குடிக்கும் என்று என் அனுபவம்.

    ஆனால் சுவை அபாரமா இருக்கும் அதையும் சொல்லிவிடுகிறேன்!!!

    பச்சரிசியில் செய்வது என்றாலும் - வீட்டிலேயே அலசி கொஞ்சம் காய வைத்து பொடித்து சலித்து என்று -

    நான் புழுங்கரிசியிலும் செய்திருக்கிறேன். அதை கழுவி ஊற வைத்து அரைத்து அதோடு பொட்டுக்கடலை பொடித்தது, வறுத்த உளுத்தம் பருப்பு பொடி எல்லாம் கலந்து செய்ததுண்டு. கை முறுக்காவும், அச்சில் பிழிந்தும். பொ க போடுறப்ப வாயில் கரையும் ஆனால் எண்ணை கொஞ்சம் குடிக்கும்.

    எனக்கு ரொம்பப் பிடிக்கும் இந்த முறுக்கு. ஆனா இப்பலாம் செய்யறதே இல்லை, துரை அண்ணா. யாராச்சும் கேட்டா செய்து கொடுப்பதோடு சரி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முறுக்கு எண்ணெய் குடிக்கும் என்பது உண்மையே அதற்காகத் தான் வெண்ணெய் சேர்ப்பது!...

      அப்படியே எண்ணெய் குடிக்கும் என்றாலும் தரமான முதல் நிலை எண்ணெய் தானே... கண்ட கண்ட கழிவு
      கசண்டு எண்ணெய் அல்லவே...

      கடிபட்டாலும் தெருவில் திரிகின்ற சொறி நாயிடம் கடிபடாமல் வீட்டில் நாம் வளர்த்த நாயிடம் கடிபடுவதும் ஓரளவுக்கு நெகிழ்ச்சியே..

      நீக்கு
    2. அதுவும் சரிதான் கண்ட எண்ணை இல்லைதான்...துரை அண்ணா. நம்ம வீட்டுல செய்யறதுதான்...ஆனா இந்தக் கொழுப்பு இருக்கே!!!!!!! அது நம்ம வீட்டுல பெரியவருக்கு உண்டே! அப்படியே நா இனியவளாச்சே எனக்கும் வராம பார்த்துக்கதான்!!!!! என்ன செய்ய! பாருங்க ஒரு தடவை செஞ்சா திரும்ப திரும்பச் செய்யத் தோன்றும் அத்தனை சுவையா இருக்கும் இது. உங்க குறிப்பை பார்த்ததும் ஆஹா ரொம்ப நாளாச்சே செஞ்சுருவமான்னு கை துறு துறு....ஆனா மனசு என்னை நோக்கி விரல் நீட்டுது ...தேவையா உனக்கு யோசின்னு!!!

      கீதா

      நீக்கு
  9. இப்படியான பலகாரத்திற்கு ஆப்ப சோடா தேவையே இல்லை. நம் வீடுகளில் பலகாரத்திற்கு ஆப்பா சோடா சேர்ப்பது இல்லை. அது நல்லது அல்ல என்பதோடு இன்னும் எண்ணை குடிக்க வைக்கும்.

    பொ க மாவு சேர்த்தாலே கரகர என்று ஆகிவிடும்.

    பெருங்காயம் கண்டிப்பாக நான் சேர்ப்பதுண்டு.

    நம் வீடுகளில் பொட்டுக்கடலை மாவு சேர்க்காமல்தான் முறுக்கு தட்டை போன்றவை செய்வாங்க. அதாவது பெரியவங்க. அவங்க பொ க, பொ க மாவு வீட்டில் பயன்படுத்த மாட்டாங்க.

    ஆனால் நான் செய்வதுண்டு. இப்பதான் எதுவுமே எண்ணைப் பண்டங்கள் பொரிப்பதில்லை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொட்டுக் கடலை சேர்க்காமலும் செய்யலாம்...

      கொஞ்சம் கடமுடா என்று இருக்கும்...

      அவ்வளவு தான்..

      நீக்கு
    2. துரை அண்ணா நம்ம வீட்டு பெரியவங்க பொட்டுக் கடலை சேர்க்க மாட்டாங்க நீங்க சொல்லியிருக்காப்ல வெண்ணை போட்டுதான் செய்வோம். அப்ப கடமுடா ன்னு இருக்காது. இல்லைனா காய்ந்த எண்ணை கொஞ்சம் விட்டும் செய்வாங்க.

      கீதா

      நீக்கு
  10. இது தேங்காய்ப்பால் முறுக்கு இல்லையா துரை அண்ணா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீனவன் பிடித்ததற்கு அவன் வைப்பது தான் பெயர்...

      மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. தேங்காய்பால் நெய்முறுக்கு படங்களும், செய்முறை குறிப்பும் நன்றாக இருக்கிறது.
    சோடா உப்பு நாங்களும் பயன்படுத்த மாட்டோம்.
    முன்பு பலகாரங்களுக்கு போட பால் பெருங்காயம் என்று கிடைக்கும் அம்மா அதை தண்ணீரில் கரைத்து, தேன்குழல், கைமுறுக்கு, தட்டைக்கு பயன் படுத்துவார்கள். இப்போது கிடைப்பது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா கோமதிக்கா எங்க வீட்டிலும் இந்தப் பெருங்காயம் தான் பயன்படுத்தியதுண்டு. இப்பதான் பால் பெருங்காயம் தேடணுமா இருக்கு அதனால பொடி தான்.

      கீதா

      நீக்கு
    2. உண்மை தான்...

      பால் பெருங்காயம் இப்போது அரிதாகி விட்டது...

      ஆனாலும் மதுரையிக் கிடைப்பதாகக் கேள்வி..

      மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  13. இன்றைய தஞ்சாவூர் நெய்முறுக்கு செய்முறை அருமை.

    பொட்டுக்கடலை எண்ணெய் குடிக்க வைக்காதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடிக்கும் தான்...

      அதைத் தடுப்பதற்கே வெண்ணெய்...

      மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  14. தஞ்சாவூரில் எங்கு கிடைக்கும் இது? அங்கு வந்தால் (இரண்டு மாதங்களுக்குள் வருகிறேன்) வாங்கலாம். கடைகளில் வாங்குவதில் பிரச்சனை, அவங்க உபயோகிக்கும் எண்ணெய். கடலை எண்ணெயை உபயோகிப்பதில்லை. பாமாயிலை உபயோகித்துவிடுவாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா நெல்லை கடைகளில் வாங்குவதில் பிரச்சனைன்னு சொல்லிட்டு அப்புறம் எங்க கிடைக்கும்னு கேள்வி!!!!!!!! சிரித்துவிட்டேன்!!!

      இதுக்கு வீட்டிலேயே ஒரு கப் மாவு போட்டு அதுக்கு ஏத்த ப்ரப்போர்ஷன் மற்றவை போட்டு செஞ்சுடலாம் மிஞ்சிப் போனா 1/2 மணி நேரம் தான் ஆகும் ஒரு கப்பிற்கு சைஸைப் பொருத்து 12-15 வரும்.

      கீதா

      நீக்கு
    2. @ அன்பின் நெல்லை..

      தஞ்சாவூரில் இது கிடைக்குமோ கிடைக்காதோ தெரியாது...

      இது எங்கள் கைப்பக்குவம்...

      மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
    3. @ அன்பின் சகோ..

      //மிஞ்சிப் போனா 1/2 மணி நேரம் தான் ஆகும் ஒரு கப்பிற்கு சைஸைப் பொருத்து 12-15 வரும்.//

      உண்மை தான்...

      மகிழ்ச்சி..
      நன்றி...

      நீக்கு
  15. பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...
      மகிழ்ச்சி..
      நன்றி...

      நீக்கு
    2. பயனுள்ள பதிவு ஜி
      பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

      நீக்கு
    3. அன்பின் வருகைக்கு...
      மகிழ்ச்சி..
      நன்றி ஜி...

      நீக்கு
  16. @ அன்பின் நெல்லை

    /// தஞ்சாவூரில் எங்கு கிடைக்கும் இது?.. ///

    கடைகளில் கிடைப்பதாகத் தெரிய வில்லை..

    இது எங்கள் வீட்டின் கைப் பக்குவம்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  17. நல்ல முறுக்குக் குறிப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!