புதன், 12 ஜூன், 2024

சம்பவம் : பேப்பர் டாஸ்க்

 நெல்லைத்தமிழன்  :

கே :  தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கும் கட்சிக்கு/வேட்பாளருக்கு, அவர்கள் தோற்றாலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கடமை எப்படி இருக்கும்?

          # ப :  தேர்தலில் வெற்றி பெற்றால் இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்றுதானே வாக்குறுதிகள் கொடுக்கிறார்கள்?   தோற்றுவிட்டால் பிரச்சினையே இல்லை.  வென்றால் தான் சாக்கு போக்கு சொல்லி சமாளிக்க வேண்டும்.


பானுமதி வெங்கடேஸ்வரன்  :

1) கே :  யார் அந்த கமலா?  அவர் பெயரை(கமலா ஆரஞ்சு) ஏன் ஆரஞ்சிற்கு சூட்டினார்கள்?

          # ப :  சரியான காரணம் தெரிந்து கொள்ள வழியே இல்லை என்று நினைக்கிறேன்.  "முதலில் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்தது கமலா என்ற பெண்மணி அல்லது கமலாகரன் என்ற..." என்று சமாளிக்க வேண்டியதுதான்!!

           ப :  காரணம் இப்படி வேண்டுமானால் இருக்கலாம்...   ரொம்பத் தேடினால் இப்படி சொல்லக் கிடைக்கிறது!!  ஹிஹிஹி...

The name Kamala is a girl's name of Hindi origin meaning "lotus or pale red; or, a garden". A multicultural name that manages to sound soft and strong at the same time, Kamala is also another name for the Hindu goddess Lakshmi.

          இப்படி ஒன்று இருக்கிறது, தெரியுமோ...

The navel orange actually grows a second “twin” fruit opposite its stem. The second fruit remains underdeveloped, but from the outside, it resembles a human navel—hence the name. Navels are part of the winter citrus family. They're seedless, peel easily, and are thought to be one of the world's best-tasting oranges.


2) கே :  Latrine என்பது Toilet ஆனது, இப்போது wash room, rest room என்கிறார்கள். இந்த  பரிணாம மாற்றம் எப்படி,ஏன் நிகழ்ந்தது?

          # ப :  "க***ஸ்" என்று சொல்ல சங்கடப்பட்டு Latrine ஆக்கினோம்.  அதுவும் சரியில்லை என்று...   இவ்வாறாக ஒன்றன் பின் ஒன்றாக...

          * ஆங்கிலத்தில் Rest room என்று சொல்வது இருக்கட்டும்...  அதையே தமிழ்ப் படுத்தி 'ஒப்பனை அறை' என்று எழுதி வைக்கிறார்களே..  அதை என்ன சொல்ல..!


3) கே :  ஒரே பெற்றோருக்கு பிறந்து, ஒரே மாதிரி  சூழலில் வளர்ந்தாலும் உடன் பிறந்தவர்களின் இயல்பு ஒரே மாதிரி இருப்பதில்லையே?

          # ப :  அதுதான் " அவரவர் வாங்கி வந்த வரம் " என்று சொல்கிறோம்.  பிராரப்த சஞ்சித கர்மம் - காரண சரீரம் இவை நினைவுக்கு வருகின்றன.

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>


KGG பக்கம்  KGS பக்கம் 

"ஏழாவது St. Joseph High School ல படிச்சுக்கிட்டிருந்தேன்...   1956 ம் வருஷம்.  அப்பல்லாம் வெள்ளிக்கிழமை அன்னிக்கி ஒரு டாஸ்க் கொடுப்பாங்க...  பேப்பர் டாஸ்க்.  டெக்ஸ்ட் புக்கைப் பார்த்து தமிழ்ல ஒரு பக்கம், இங்கிலீஷிலே ஒரு பக்கம் எழுதிக்கிட்டு வரணும்.  அப்புறம் நாலு சின்ன கணக்கு கொடுப்பாங்க...   அத சால்வ் பண்ணிக்கிட்டு வரணும்,...  அப்புறம் ஒரு படம் வரைஞ்சு கொண்டு வரணும்..  முக்காவாசி எல்லா பசங்களும் மாம்பழம்தான் வரைஞ்சு கொண்டு வருவாங்க..  வரைய ஈஸி!

சம்பவம் நடந்த அந்த குறிப்பிட்ட வாரம் எழுத என்னிடம் பேப்பர் எதுவுமே இல்லை.  என்னடான்னு பார்க்காதீங்க..   அதெல்லாம் வாங்க வீட்டுல வசதி கிடையாது.  என்னிடம் அப்பல்லாம் டெக்ஸ்ட் புக் கூட கிடையாது.  மொத்த வருஷத்துக்கும் ஒரு ரஃப் நோட்டு மட்டும்தான்.  இப்போ நேத்து ஒரு பங்க்ஷன்ல பழைய பிரெண்டு பாலுவைப் பார்த்தேன்.  என் பையன் கிட்ட சொல்லிக்கிட்டிருந்தான்.. "உங்கப்பா கிட்ட ஒரு பேனா மட்டும்தான்   இருக்கும்.அது போதும் அவனுக்கு..."

எங்க விட்டேன்...   ஆங்..   எழுத பேப்பர் இல்லையா?  என்ன பண்ணலாம்னு பார்த்துக்கிட்டிருந்தா வாசல்ல சினிமா விளம்பர வண்டி போகுது...  'சந்திரஹாரம்'னு ஒரு படம்...  அதுக்கு சின்ன சின்ன போஸ்டர் பேப்பர்களை வாரி இறைச்சுகிட்டே போறாங்க...  உங்களுக்குத்தான் தெரியுமே...  அப்போ அப்படிதான் செய்வாங்க...  ஒரு பக்கம் விளம்பரமும் மறுபக்கம் காலியாகவும் இருக்கும்.  சட்டுனு ஓடி அதை கலெக்ட் செய்து வைத்தேன்...அதிலேயே எழுதிட்டேன்.

[சந்திரஹாரம் படத்தை இயக்கியவர் ககமலாகர காமேஸ்வர ராவ்.  மேலே கேள்வி பதில்கள் செக்ஷன்ல கமலா ஆரஞ்சுக்கு சொல்லி இருக்கற கமலாகரர் இவர் இல்லையாம் ] 

திங்கக்கிழமை பேப்பர் டாஸ்க் வொர்க்கை கலெக்ட் செய்யும்போது நானும் இந்த பேப்பர்களைக் கொடுத்தேன்.  பூவராகன் ஸார் கரெக்ட்டா தப்பான பக்கத்தைப் பார்த்தார்.  எனக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம் என்பதை அவர் அறியார்!

"என்னடா...  சினிமா விளம்பரத்தை என்னிடம் கொடுக்கறே.." என்று பேப்பரை என் கையில் திணித்து "கிளாஸை விட்டு வெளில போ" என்றார்.

போயிட்டேன்.

வெளியே நின்று கொண்டிருந்தபோது ஹெட்மாஸ்டர் ரெவரென்ட் ஃபாதர் மரியதாஸ் அந்தப் பக்கம் வந்தார்.

"ஏன் வெளில நிக்கறே?"

நோட், பேப்பர் வாங்க வசதி இல்லாத நிலையையும், இப்போது இந்த பேப்பரின் ஒரு பக்கத்தில் எழுதி கொண்டு வந்தததையும் சொல்லி, கையில் வைத்திருந்த பேப்பர்களைக் காட்டினேன்.

வாங்கினார்.  பார்த்தார்...  படித்தார்.

அப்புறம்,

ஒரு வெள்ளை பேப்பரை எடுத்தார்.  

"உன் பெயர் என்ன?"

சொன்னேன்.

"Subramaniyam is exempted from writing paper task for rest of the year" என்று எழுதி கையெழுத்திட்டு கொடுத்து விட்டு சென்று விட்டார்..."

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()


எங்களிடமிருந்து ரண்டு கேள்வி...


ஒன்று, ஏதாவது ஒரு விஷயம் இப்போது இருக்கும் நிலையிலிருந்து மாறி 'இப்படி இருந்தால் நல்லாயிருக்குமே' என்று நினைப்பதுண்டா?  என்ன விஷயம்?  எப்படி இருப்பது, எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?


இரண்டு, 'ஒரே ஒரு கேள்விதான் உங்க கிட்ட கேட்கணும் என்று 'நிறம் மாறாத பூக்கள்' ராதிகா, சுதாகர் கிட்ட கேக்க நினைச்ச மாதிரி யார் கிட்டயாவது கேட்க ஒரு கேள்வி வைத்து வன்மத்துடன் / கோபத்துடன் காத்திருக்கிறீர்களா?  என்ன அது? 

72 கருத்துகள்:

  1. Navel Orange - நாம் பார்த்திருக்கும் சாத்துக்குடி வகைகளில் தோலை உரிப்பது கடினம். பழத்திலும் நிறைய கொட்டைகள் இருக்கும். ஆரஞ்சு வண்ணத் தோலுடன் கூடிய ஆரஞ்சு இந்தியாவின் பழம் கிடையாது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து இரு வகையான ஆரஞ்சுகள் வரும். அவற்றில் ஒரு வகைதான் இந்தியாவில் இப்போது கிடைப்பது.

    நான் கல்ஃபில் இருந்தபோது இரு வகை ஆரஞ்சுகளும் கிடைக்கும். அதிலும் கீழே ஆரஞ்சின் சிறிய உருவம் கொண்ட நேவல் ஆரஞ்சு, தோலை உரிப்பது எளிது, விதை கிடையாது, மிகவும் ருசி உடையது. சில ஆரஞ்சுகளில் வெளியே சிறிய ஆரஞ்சாக இருப்பது உள்ளேயும் கொஞ்சம் பெரிதாக வளர்ந்திருக்கும். அதாவது ஆரஞ்சுக்குள் அதன் கீழ்ப்பகுதியில் இன்னொரு ஆரஞ்சு.

    இதுபோல கொஞ்சம் பெரிய சைஸ் ப்ளம் (பெரிய கொய்யா) வெளித்தோல் மரூன் பச்சை கலந்த நிறம், உள்ளே கொஞ்சம் வயலட் சார்ந்த மெரூன் நிறப் பழம். இதுவும் மிகவும் ருசியானது. குறுகிய சீசனில்தான் கிடைக்கும்.

    அங்கெல்லாம் ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், மாம்பழம் போன்றவற்றை சுமார் பத்து கிலோ இருக்கும் கிரேட்டுகளாகத்தான் வாங்குவேன்.

    உங்கள் கேள்வி நினைவலைகளை எங்கோ இழுத்துச் சென்றுவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  Navel Orang ஐ நாம் தமன்னா ஆரஞ்ச் என்று அழைப்போம்.  கமலா ஆரஞ்சு இருக்கும்போது இது இருக்கக் கூடாதா என்ன!

      //சுமார் பத்து கிலோ இருக்கும் கிரேட்டுகளாகத்தான் வாங்குவேன்.//

      அவ்வளவு வாங்கி அழுகுவதற்கு முன் செலவாகி விடுமா?  நண்பர்களுக்கெல்லாம் கொடுப்பீர்களோ!  ப்ளம்ஸ் எனக்கு ;பிடிக்காது.  யார் கேட்டாங்கறீங்களா...!

      நீக்கு
    2. தமன்னாவுக்கு முற்பட்ட காலத்தில் Navel Orange இருந்ததா இல்லையா...

      நீக்கு
    3. செலவாயிடும் ஶ்ரீராம். நான் பழங்களாகச் சாப்பிட்ட காலம் உண்டு (அவ்வளவு பழம் சாப்பிட்டா எடை குறையாது, கூடவே செய்யும் என்பதை மறந்துவிட்டேன்). பெரும்பாலும் அழுகாது. ஒரு சில அழுக ஆரம்பித்தால் தூரப்போட்டு விடுவேன். பின்பு ஒரு சமயம் அந்த அனுபவங்களை எழுதறேன்.

      நீக்கு
    4. தொடர்ந்து ஒரே வகை பழத்தையே சில நாட்கள் சாப்பிடுவது அலுத்து விடாதா?

      நீக்கு
  2. சில பல உறவினர்கள் அவங்க வீட்டில் அசந்தர்பங்கள் (டைவர்ஸ் ஆவது, குழந்தையின்மை, வேற்று ஜாதித் திருமணம் போன்று) நிகழ்ந்துவிட்டால் பிறருடன் பேசுவதையோ இல்லை திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு வருவதையோ தவிர்த்துவிடுகிறார்களே.. அது ஏன்? நம் கையை மீறி நடக்கும் விஷயங்களுக்கு நாம் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்? என்பது என் மனதில் தோன்றும் கேள்வி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்றவர்கள் தம்மை ரதம் இறங்கிய தர்மர் போல் பார்க்கிறார்களோ என்கிற Feeling காய் இருக்கும்!

      நீக்கு
    2. சமூகம் அங்கீகரிக்காததை செய்து விட்ட குற்ற மனப்பான்மை. தற்போது சமூகம் இது போன்ற விஷயங்களை கண்டு கொள்வது இல்லை.

      நீக்கு
    3. இன்னமும் சில இடங்களில் இருக்கத்தான் இருக்கிறது...

      நீக்கு
    4. நெல்லை, அது நம்ம சமூகம் வகுத்திருக்கும் atrocious!! இப்பவும் சில இடங்களில் இருக்கு. சில வீடுகளில்...

      கீதா

      நீக்கு
  3. காங்கிரஸ் சார்பில் தலைவர் ராகுல் கையெழுத்துடன் கூடிய அட்டையில் ஜூன் 4லிலிருந்து மாதம் 8500 ரூ மற்றும் ஆண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் தரப்படும் என்று சொல்லி, அந்த அட்டையில் பயனாளிகளின் பெயர், போன், ஆதார் போன்றவற்றை எழுதி விநியோகித்திருக்கிறார்கள். அதுவே என் கேள்வியின் காரணம் (ஆர் கே நகர் இடைத் தேர்தலில் 20ரூ நோட்டில்்கையெழுத்திட்டுக் கொடுத்து தேர்தலுக்குப் பின் அதைக் காட்டி 2000 வாங்கிக்கொள்ளலாம் என டிடிவி செய்து வெற்றிபெற்றதைப்்போல)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த அநியாயத்தை எல்லாம் கேட்க வேண்டிய அதிகார மையமே மௌனம் காக்கிறது. என்ன செய்ய...

      நீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. /// The navel orange actually grows a second “twin” fruit opposite its stem. ///

    குவைத்தில் இருந்த போது பார்த்திருக்கின்றேன்...

    சாப்பிட்டிருக்கின்றேன்....

    அருமையாக இருக்கும்..

    பதிலளிநீக்கு
  7. /// அதையே தமிழ்ப்படுத்தி 'ஒப்பனை அறை' என்று///

    யாருக்கு ஒப்பனை?..
    எதற்கு ஒப்பனை?..

    யாரக் கேட்டு மாத்தினானுவோ?..

    கழுதைக்குப் பேரு முத்துமாலை ன்னு வெச்சாலும்

    கழ்டை - கழ்டை (கழுதை) தானே!..

    பதிலளிநீக்கு
  8. இத்தனைக்கும் கழுதைக்கு பஞ்ச கல்யாணி ன்னு பேர்..

    பதிலளிநீக்கு
  9. கொம்லா ஓரஞ் - என்பர் வங்காளிகள்..

    பதிலளிநீக்கு
  10. விமானத்தின் கழிப்பிடங்களில் கழுவுதற்குத் தண்ணீர் கிடையாது..

    யூடிகொலோன் ஸ்பிரேக்கள் இருக்கும்.. எடுத்து #%&#%& விளாசிக் கொள்ள வேண்டியது தான்..

    இதிலிருந்து வந்ததே ஒப்பனை அறை..

    பதிலளிநீக்கு
  11. KGS சாரின் பேப்பர் உபயோகம் என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களை நினைவூட்டியது. அப்பா ஆபீசில் டிஸ்போஸ் செய்யும் பைல்களை கொண்டு வருவார். அதில் ஒரு பக்கம் காலியாய் இருக்கும் காகிதங்களை எடுத்து கோர்த்து வைத்துக்கொண்டு உபயோகிப்பேன். சில பாடங்களின் ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள். அவர்களுடைய பாடங்களுக்கு மட்டும் நோட் போட்டுக்கொள்வேன்.

    பள்ளியில் 8 ஆங் க்ளாசில் படிக்கும்போது செகண்ட் ஹாண்ட் புக் வாங்க 6 ரூபாய் அலவன்ஸ். நோட் வாங்க 5 ரூபாய். இதுவே அழுதழுது வாங்க வேண்டும்.
    ஒரு GD நாயுடு பேனா அப்பா வாங்கி தருவார்.
    அதாவது படிப்புக்கு செல்வு செய்ய போலும் காசில்லாமல் எப்படியோ படித்தோம். தற்போது ஒரு LKG பிள்ளைக்கு படிப்பு செலவு சராசரி ஆண்டு செலவு ஒரு லட்சம் ரூபாய்.
    KGG சாருக்கு உடம்பு சரியில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நல்லா இருக்கேன். வேறு சில தவிர்க்க இயலாத வேலைகளால், நேரம் கிடைக்கவில்லை.

      நீக்கு
    2. ஆம்.  அப்போதெல்லாம் வருஷத்துக்கொரு பேனாதான்.  சிலசமயம் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரே பேனா...  சின்னதாய் போகும் வரை அல்லது கிழியும் வரை அதே சீருடை டிராயர் சட்டை!

      நீக்கு
    3. இன்னுமொரு ஓசி யை மறந்துட்டேன். ஒரு கரிக்கட்டை போல ஒரு கட்டி அப்பா ஆபீஸிலிருந்து எடுத்து வருவார். அதை தண்ணீரில் ஊறவைத்து கரைத்தால் பேணா இங்க் ஆகிவிடும்.
      கம், நோட் தைக்கிற ஊசி, சாணி பேப்பர் எல்லாம் ஆபீஸ் சப்ளை தான்.
      Jayakumar

      நீக்கு
    4. சாணி பேப்பர், தைக்கும் ஊசி, கம் எல்லாம் ஓகே. அந்த இங்க் கட்டி பார்த்ததில்லை!

      நீக்கு
    5. ஆமாம் சாணி பேப்பர் எழுதினா எழுத்து வாசிப்பது ரொம்ப கஷ்டம். இங்க் பரவும். பைண்டிங்க் ஊசி, அதுக்கான பசை அது லைட் பச்சை கலர்ல மெழுக்கு மெழுக்குன்னு இருக்கும். பைண்டிங்க் இணைக்க ஒரு வலைத் துணி போல வைப்போமே அதை ஒட்ட...ஜெ கே அண்ணா சொன்ன இங்க் கட்டியும் பயன்படுத்தியதுண்டு.

      கீதா

      நீக்கு
    6. எந்த வெத்து தாளும் பைன்ட் செய்யப்படும். அது ஒரு பக்கம் எழுதப்பட்டு இருந்தாலும்....பழைய வகுப்பு நோட்டுகளில் மீதமான பேப்பர்கள், வீட்டில் மாமாக்கள் கொண்டு வரும் ஒரு பக்கப் பேப்பர்கள் எல்லாம் பைண்ட் செய்யப்படும். அதிலும் கூட இடம் விடக் கூடாது...எழுதறப்ப. பழைய டைரிகள் கணக்குப் போட்டு பார்க்கும், எழுதிப் பார்க்கும் நோட்புக்காக மாறும்

      கீதா

      நீக்கு
    7. பாருங்க...  அந்தக் காலத்துல எல்லாமே காமனா இருந்திருக்கு....!

      நீக்கு
  12. வளைகுடா நாடுகளில் இருந்து தாயகம் திரும்புகின்ற சில விமானங்களில் உற்சாக பானம் வழங்கப்படுகின்றது..

    உ.பா. பிரியர்களால் விமான கழிவிடங்கள் களேபரமாக ஆக்கப்பட்டிருக்கும்..

    பதிலளிநீக்கு
  13. வளைகுடா நாடுகளில் இருந்து தாயகம் திரும்புகின்ற சில விமானங்களில் உற்சாக பானம் வழங்கப்படுகின்றது..

    உ.பா. பிரியர்களால் விமான கழிவிடங்கள் களேபரமாக ஆக்கப்பட்டிருக்கும்..

    பதிலளிநீக்கு
  14. வளைகுடா நாடுகளில் இருந்து தாயகம் திரும்புகின்ற சில விமானங்களில் உற்சாக பானம் வழங்கப்படுகின்றது..

    உ.பா. பிரியர்களால் விமான கழிவிடங்கள் களேபரமாக ஆக்கப்பட்டிருக்கும்..

    பதிலளிநீக்கு
  15. ஒப்பனை அறை - ஹாஹா... எப்படியெல்லாம் மாற்றுகிறார்கள்!

    மற்ற விஷயங்களும் சிறப்பு. பேப்பர் இல்லாத நாட்கள் - எனக்கு ஒரு பக்கத்தில் Dot Matrix Printer-இல் ஒரு பக்கம் மட்டும் அச்சடிக்கப்பட்ட தொடர் காகிதங்கள் தான் ரஃப் நோட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஒப்பனை அறை என்றுதான் எழுதி வைத்திருக்கிறார்கள்.  உறவினரைப் பார்க்க ஒரு தனியார் மருத்துவமனை சென்றால் அங்கேயும் அதே மாதிரி எழுதி வைத்திருந்ததைப் பார்த்தேன்.

      நீக்கு
  16. கமலா ஆரேஞ் சுவாரசியம்.

    Kgg பக்கம் அந்தக் காலத்தை நினைவூட்டியது.
    என்னுடன் படித்த ஒரு பெண். தந்தை இல்லாதவர் ஒரு நோட்புக்குடன்தான் ப்ளஸ் ரூ விற்கு வருவார். நாங்கள் சிலர் கொப்பிகள் குடுத்து உதவுவோம். அவர் நிலை பாவமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  17. இத்தனை வார புதன் கிழமைகளும் அந்தப் பகுதி KGS--ஸா
    இல்லை, இந்த வாரம் தான் KGS-- ஸா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி..ஹி..

      'Subramaniyam is exempted from...' என்ற வரி வரவில்லையென்றால், இந்த வாரம் கூட இது தெரிந்திருக்காமல் போயிருக்கும் தான்!..

      எப்படி இந்தத் தவறு கவனிக்கப்படாமல் போயிற்று என்று ஆச்சரியமாய்த் தான் இருக்கிறது...

      நீக்கு
    2. நீங்கள் சரியாக பார்த்ததில்லை என்று தெரிகிறது.  அவர் KGG பக்கம் என்று தலைப்பிட்டுதான் எழுதுகிறார்.  அப்பாதுரை சில நாட்கள் எழுதியபோது கூடவே தொடங்கினார்.  அவர் நீரெடுத்தி விட்டார். இவர் தொடர்கிறார்.  இரண்டு வாரங்களாக சில குடும்ப விசேஷங்கள் காரணமாக KGG யாழ் இணையத்துக்கு வர முடியாத நிலை.  எனவே அவருக்கு பதில் இந்த வாரம் KGS

      நீக்கு
  18. ஒரே பெற்றோருக்கு பிறந்து, ஒரே மாதிரி சூழலில் வளர்ந்தாலும் உடன் பிறந்தவர்களின் இயல்பு ஒரே மாதிரி இருப்பதில்லையே//

    காரணங்கள் - ஒன்று ஒவ்வொருவருக்கும் வரும் மரபணு. மற்றொன்று innate intelligence.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. ஆரஞ்சு என்பது ஆங்கிலம் என்றாலும் அதில் 6 அலல்து 5 சுளைகள் இருப்பதால் ஆரஞ்சுன்னு சொல்றாங்களோ!

    கமலா ஆரஞ்சு - ஆரஞ்சு வகைகளில் கமலா ஆரஞ்சு மட்டும் நடுவில் உரித்தாலும் சரி தோல் ஒட்டாமல் இருப்பதால் அழகாகத்தோலோடு அலல்து தோல் பிரித்தால் டக்குனு வந்திருமே (குடை ஆரஞ்சு அல்லது ஜாக்கெட் ஃப்ரீ ஆரஞ்சு ஹாஹாஹாஹா!! ) தாமரை போல விரிக்கலாமே அதனால கமலா ஆரஞ்சுனு சொல்றோமோ? மற்ற ஆரஞ்சு வகைகளை அப்படி அதன் ரசம் வெளிய வராம உரிப்பது சற்று சிரமம் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஞ்சாறு சுளைகளை மேலே வருமே கீதா... மற்றபடி உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும். ரிசல்ட் கிடைத்த பின் பானு அக்காவுக்கு (ஹிஹிஹி..) சொல்லுங்கள்.

      நீக்கு
    2. கமலாவும் நேருவும் மனமொட்டாமல் வாழ்ந்ததைப்போல தோலும் பழமும் ஒட்டாமலிருப்பதால் இருக்குமோ?

      நீக்கு
    3. ஸ்ரீராம் சிரித்துவிட்டேன்....
      ஆமால்ல 8 சுளை கூட வரும்...

      கீதா

      நீக்கு
    4. நெல்லை - சூப்பர் கமெண்ட்! கமலா & நேரு !

      நீக்கு
  20. காலைலருந்து கரன்ட் இல்லை வந்திச்சு திரும்ப போயாச்சு. எங்க ஏரியாலமட்டும்தான் கரன்ட் கட் இப்படி ஆகுதா இல்லை மத்த ஏரியாலயுமான்னு தெரியலை. தினமுமே ரொம்ப பவர் கட்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொபைல்ல வாலாம் தான்...வாய்ஸ் டைப்பிங்க்கும் கரெக்ட் பண்ணனுமா இருக்கு ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  21. வெற்றி பெற்றவர்களையே நாம் கேள்வி கேட்கமுடியாது இதில் தோல்வி பெற்றவர்களை எப்படி கேட்கமுடியும் ?

    பதிலளிநீக்கு
  22. இனி வரும் காலங்களில் தண்ணீர் பிரச்னையால் ஒவ்வொரு வீட்டிலும் #%& &%# கடைப் பிடிக்கும்படி நேரலாம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே இருந்தாலும் &^*&%$#&&*^%@ செய்து சமாளித்துக் கொள்ளலாம்!

      நீக்கு
  23. ஒன்று, ஏதாவது ஒரு விஷயம் இப்போது இருக்கும் நிலையிலிருந்து மாறி 'இப்படி இருந்தால் நல்லாயிருக்குமே' என்று நினைப்பதுண்டா? என்ன விஷயம்? எப்படி இருப்பது, எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?//

    ஆடம்பரமான திருமணங்கள். சிம்பிளாக மாற வேண்டும். ஒவ்வொருவர் செய்வதை பார்த்து அவங்க அப்படிக் கொடுத்தாங்க நாம அப்படிக் கொடுக்கலைனா என்ன நினைப்பாங்கன்னு சொல்லி சொல்லியே சீர், கிஃப்ட், சாப்பாடு என்று ஏகமான செலவு.

    எதற்கெடுத்தாலும் பார்ட்டி, கார் வாங்கினா பார்ட்டி, பைக் வாங்கினா பார்ட்டி இப்படி...பிறந்த நாள் பார்ட்டிகள் இப்ப எல்லாம் அதீதமான செலவு...எதற்கெடுத்தாலும் பார்ட்டி....இதுவும் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக மாறிக் கொண்டு வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெட்கமா இருக்கு கீதா... ஆனா நானெல்லாம்.... வேறு வழியில்லை! மஜ்பூர்... என் கையில் இல்லை கண்ட்ரோல்.

      நீக்கு
  24. தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கும் கட்சிக்கு/வேட்பாளருக்கு, அவர்கள் தோற்றாலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கடமை எப்படி இருக்கும்?//

    தோற்றால் எப்படிச் செய்ய முடியும்? ஜெயிச்சாலே செய்யறதில்ல....நல்ல எதிர்க்கட்சியாக இருந்தால் செய்ய முடியுமாக இருக்கலாம். இல்லைனா, அந்த வேட்பாளருக்கு நிஜமாகவே தோற்றாலும் ஜெயிச்சாலும் தொகுதி மக்களுக்குச் செய்யும் மனப்பான்மை இருந்தால் நல்லது.

    ஆனா நம்ம மக்கள் அதுக்கெல்லாம் ஓட்டு போடமாட்டாங்க. காசு கொடுத்தா ஓட்டு போடுவாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசு கொடுக்கறது ஓல்ட் ஸ்டைல்...   ஆதார் நம்பரோட கையெழுத்து போட்ட பத்திரம் கொடுக்கறது புது ஸ்டைல்!

      நீக்கு
  25. இன்றைய கேள்விகளும் அதற்கான பதில்களும் அருமை.

    KGS அவர்கள் பக்கம் நன்றாக இருக்கிறது.

    என் அம்மா எங்கள் பழைய நோட்டு புத்தகங்களில் ஒரு பக்கம் எழுதியவைகளை தைத்து வைத்து இருப்பார்கள். அதில் வீட்டிலிருந்து
    ஏதாவது குறிப்பு, கோலம் போட்டு பார்க்க வைத்து கொள்வார்கள்.
    எழுதாமல் இருக்கும் பக்கங்களை சேர்த்து தைத்து ரப் நோட்டாக எங்களுக்கு எல்லாம் தருவார் வருடா வருடம்.

    நீங்கள் சொல்வது போல விளம்பர தாள்களையும் வீணாக்க மாட்டார்
    அதிலும் கோலங்கள் போட்டு பார்க்க எங்களுக்கு கொடுப்பார்.
    விடுமுறை நாளில் அதில் ஏதாவது படம் வரைய சொல்வார். அந்த காலத்தில் பணம் இருந்தாலும் வீண் செலவு செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சிக்கனமாக வாழ்ந்த காலம். காகிதம் தட்டுபாடு இருக்கிறது சில நாடுகளில் இப்போதும். அந்தக்காலத்திலும் இருந்து இருக்கலாம்.

    ஹெட்மாஸ்டர் ரெவரென்ட் ஃபாதர் மரியதாஸ் அவர்களை வணங்க தோன்றுகிறது. மாணவரின் கஷ்டத்தை உணர்ந்து கொண்டு விலக்கு
    அளித்தமைக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  எல்லோர் வீட்டிலும் அந்த ஒன் ஸைட் நோட் இருந்திருக்கு...   நன்றி கோமதி அக்கா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!