வியாழன், 2 மே, 2024

சீறி வரும் பாம்பும் சிரித்து வரும் பெண்ணும்

 பல வேடிக்கை மனிதரைப் போல நான்

 வீழ்வேனென்று நினைத்தாயோ 

இந்த வரிகளை நான் ஒரு ஆட்டோவின் பின்னால் கண்டபோது சட்டென பாரதி நினைவில் வந்தாலும் இது எதற்காக இங்கு எழுதப் பட்டிருக்கிறது என்றுதான் தோன்றியது.  மேலும் பாதி பாரதி பாடல்கள் ஓரிரு வரியைப் போட்டு அர்த்தத்தையே அனர்த்தமாக மாற்றுவார்கள்.  உதாரணமாக 'மெல்ல தமிழ் இனி சாகும்' வரி.  தமிழ் இனி பிழைக்காது என்று பாரதியே சொல்லி இருப்பதுபோல நிறைய அரைகுறைகள் சொல்வதுண்டு.  

எல்லைத்தமிழன் (நெல்லை அல்ல!)  என்ற ஒருவர் பாரதியார் இப்படி கூறி இருப்பது போல எழுதி இருப்பதை இங்கே தொடர்ந்து படிக்கலாம்.


அதுபற்றி விளக்கம் தேடினால் பாரதியின் முழு பாடலுடன் 'கோரா'வில் ஒரு விளக்கம் கிடைக்கிறது.  சங்கர் நீதிமாணிக்கம் என்னும் தமிழர் எழுதி இருப்பதை கீழே தருகிறேன்.

"உண்மையில் "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று சொன்ன ஒருவரைத்தான் பாரதி ரௌத்திரம் கொண்டு "கடிந்து" ஒரு பாடல் பாடியுள்ளார்.

ஆனால் எதையும் குதர்க்கமாக பொருள் கொள்ளும் அல்லது தங்களுக்கு தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுத்து ஒருவர் வேறு ஒருவரை அல்லது ஒன்றை பழித்துச் சொன்னது போல உருவாக்கும் நபர்களால் "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாரதி சொன்னதாக பரப்பப்பட்டுள்ளது.

சரி அப்படியானால் பாரதி யாரை இப்படி கடிந்து கொள்ள இந்தபாடலை பாடினார் ?

அதைப் பற்றிய ஆய்வில் இறங்குவதற்குமுன், பாரதியின் இப்பாடலை, தமிழ்த் தாய் என்னும் பாடலை, முழுமையாய் பார்ப்போம் வாருங்கள்.

"கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன்  காதில் விழுந்த திசைமொழி எல்லாம்  என்னென்னவோ பெயருண்டு - பின்னர்  யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!  தந்தை அருள் வலியாலும் - முன்பு  சான்ற புலவர் தவ வலியாலும்  இந்தக் கணமட்டும் காலன் - என்னை  ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான் 

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி
ஏது செய்வேன் என தாருயிர் மக்காள்
கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்
புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவ தில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ
இந்த வசையெனக் கெய்திடலாமோ
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
தந்தை அருள் வலியாலும் – இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்
ஏறிப் புவிமிசை என்று மிருப்பேன்"

இப்பாடலின் தொடக்கத்திலேயே, இங்கு கூறத் தகாதவன் கூறினான் கண்டீர் என்று வருகிறதல்லவா?

கூறத்தகாத வார்த்தைகளைக் கூறிய அந்தப் பேதை யார்?

இது பற்றி அறிய ஒரு ஆய்வாளர் வேகமாய் ஆய்வில் இறங்கினார்,

பாரதி குறித்த அத்துணை படைப்புகளையும் ஒரு வரி விடாமல், ஒரு எழுத்து விடாமல் ஆராய்ந்தார்

விடை கிடைத்தது

கூறத்தகாத வார்த்தைகளைக் கூறிய அந்தப் பேதை யார் என்பதைக் கண்டுபிடித்தார்.

1979 ஆம் ஆண்டு பாரதி அவர்களின் தமையனார் சி.விசுவநாதன் அவர்கள் பாரதி நூல்கள் தொகுப்பு கட்டுரைகள் என்ற நான்கு தொகுப்புகளை வெளியிட்டிருந்தார்

அந்தத் தொகுப்பின் நான்காம் பகுதியில், சமூகம் – பருந்துப் பார்வை என்னும் கட்டுரையில், பாரதியே இந்தக் கேள்விக்கான விடையினைக் கூறியிருப்பதை அறிந்து, தெளிந்து நெகிழ்ந்து போனார்.

தட்சிணப் பாஷையில், அதாவது தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில், சாஸ்திரங்களை அதாவது அறிவியல் நூல்களைப் படைக்கும் ஆற்றல் இல்லை என்று பச்சையப்பன் கல்லூரி தலைமை வாத்தியார் மிஸ்டர் ரோலோ என்பவர் சொல்லுகிறார்.

அவருக்கு இவ்விடத்து பாஷைகள் தெரியாது. சங்கதி தெரியாமல் விவரிக்கிறார்.

சாஸ்திர பாஷையை நமது பாஷையில் மிகவும் எளிதாக சேர்த்து விடலாம். மேலும் சாஸ்திரம் கற்பிக்க தமிழ் நேர்மையும் எளிமையும் கொண்ட மொழி என்பது, நம்மவர்களில்கூட, சில இங்கிலீஷ் பண்டிதர்களுக்குத் தெரியவில்லையே என வேதனையோடு குறிப்பிட்டுள்ளதைக் கண்டார்.

பாரதியின் இக்கூற்றில் இருந்து, கூறத்தகாதவன் என்பதும், அந்தப் பேதை என்பதும், பச்சையப்பன் கல்லூரி முதல்வர் ரோலோ என்பவரைத்தான் என்பதை தனது ஆய்வின் மூலம் நிரூபித்தார் அந்த ஆய்வாளர். அவர் முனைவர் த.செந்தில்குமார் அவர்கள், காவல்துறை அதிகாரி.

படித்த கட்டுரையில் இருந்து எடுத்தும், தொகுத்தும் வழங்கியுள்ளேன்.​"

இங்கு சொல்லி இருக்கும் ரோலோவுக்கு பதிலாக நீலகண்ட சாஸ்திரிதான் அப்படிச் சொன்னார் என்று ஒரு பக்கம் இங்கே சொல்கிறது.  ஆனால் அப்பாதுரையின் கருத்தே நம்பக்கூடியதும், ஏற்க்க கூடியதும்!

சரி, ஆட்டோவில் எழுதும் சம்பிரதாயத்துக்கு வருவோம்.

ஒவ்வொரு மனிதர்க்குக்கும் ஒவ்வொரு உணர்வு, ஒவ்வொரு அனுபவம்.  நண்பர்களாலோ, உறவினர்களாலோ மோசமான அனுபவங்களை அடையும் மனிதர்கள் இல்லாமல் இல்லை.

ஆனால், நாம் ஏன் அதை பொதுவில் பறைசாற்ற விரும்புகிறோம்?  என்ன லாபம் அதில்? என்ன மாதிரியான மனநிலை? யாரோ ஓரிருவருக்கு சொல்ல வேண்டிய செய்தியை பொதுவில் சொல்லி நிம்மதி அடைகிறோம்!  'அவரி'டம் நேரில் சொல்ல முடியாத கோபம், அவஸ்தை!  'அவரு'ம் பார்ப்பார் என்கிற திருப்தி!

உள்ளேயே அடைத்து வைத்து, குமைந்து குறைந்தபட்சம் ஒரு மனநல மருத்துவரை நாடும் நிலையை தவிர்க்கிறோம்.

தாண்டிச் செல்லும் சமயம் அதைப் படிக்கிறவர்கள் மனதில் ஒரு புன்னகையுடன் ஓட்டுனரைப் பார்க்க முயற்சிக்கிறார்கள்...  

"நீதானா?  என்னய்யா உன் பிரச்சனை?"  அவர்கள் மனதுக்குள் ஒரு கதை ஓடும்!

ஒருவேளை இதுபோன்ற அனுபவம் அடைந்தவர்கள் சிறு அல்ப திருப்தி அடைவார்களோ என்னவோ...  

'பல வேடிக்கை மனிதரைப்போல....' என்று நான் படித்ததும் இவர் யாரையோ தோற்கடிக்க விரும்புகிறார் என்று தோன்றியது.  இவரால் நேரடியாக மோத முடியவில்லை; வெற்றி கொள்ள முடியவில்லை.  என் எஸ் கிருஷ்ணனின் "ங்கொப்பன் மகனே அடிப்பியோ...  சிங்கண்டா..."  ஜோக் நினைவுக்கு வந்தது.  நீங்கள் பார்த்திருக்கிறீர்களோ?  இணைப்பை க்ளிக்கி மூன்று நிமிடங்கள் கணக்கிலிருந்து பார்க்கலாம்!

 சரி, ஆட்டோவின் பின்னால் ஏதாவது வாசகம் இருந்தே ஆகவேண்டுமா என்ன!  பெண்ணின் திருமண வயது 18, நான் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன் போன்ற சாதாரண வாசங்களுக்கு நடுவே எழுத்துப் பிழைகளுடன் 'சீறி வரும் பாம்பை நம்பினாலும் சிரித்து வரும் பெண்ணை நம்பாதே' என்கிற வார்த்தை இருக்கும்.  ஆட்டோ ஓட்டுநராக ஒரு புள்ளிங்கோ கட்டிங் பையன் இருந்தாலும் பரவாயில்லை, ஒரு நடுத்தர வயது ஆசாமி அமர்ந்திருப்பர்.  அதுசரி, அது அவர் சொந்த ஆட்டோவாக இருக்க வேண்டும் என்று கட்டாயமா என்ன?  நாள் வாடகைக்கு கூட எடுத்திருக்கலாம்!  நமக்குதான் எத்தனை விதமாக கற்பனை ஓடுகிறது!

இந்த உலகத்துக்கு ஏதோ ஒரு செய்தி சொல்ல ஆசைப் படுகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள்.  ஒரு காருக்குப் பின்னால் "செத்தே போகும் நிலை வந்தாலும் சொந்தக்காரர்கள் கிட்ட போகாதே" என்பது போன்ற வரி இருந்தது.  சரி, அதை பப்ளிக்காக போட்டு அவர் ஆறுதல் அடைகிறார்.  அப்புறமும் அவர் டாஸ்மாக்கை நாடாமல் இருந்தால் சரி!  அல்லது டாஸ்மாக்கை நாடுவதற்கு ஒரு காரணம் வைத்திருக்கிறார் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

சரி, நீங்கள் ஆட்டோவின்  பின்னால் பார்த்த வித்தியாசமான வாசகம் ஏதும் உண்டா?

==================================================================================================

'சினிமா பட்டி' என்கிற பக்கம் பேஸ்புக்கில் பகிர்ந்து இங்கே....

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் செவாலியே சிவாஜி குறித்த பல சுவையான நினைவுகளை இவ்வாறு பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
நான் சிவாஜியோடு 33 படம் நடித்து விட்டேன். இதை விட எனக்கு வேறு எந்த அவார்டும் தேவையில்லை. எனக்கு ரெண்டே ரெண்டு பேர் தான் நான் வெஜ் பழக்கம் பண்ணி விட்டார்கள். ஒன்னு சிவாஜி. இன்னொன்னு கமல். சூட்டிங் சமயத்தில் சிவாஜி வீட்டுல இருந்து சாப்பாடு வரும். ஆனால் அவரு வெளியில சொல்லிக்கிறது இல்ல.
உருவங்கள் மாறலாம் படத்தில் எல்லாரும் வருவாங்க. அதுல சிவாஜி தான் கடவுள். இவருக்கு ஒரே ஒரு நாள் தான் சூட்டிங். எஸ்.வி.ரமணன் இயக்குனர். கதை வசனம் எழுதியவர் ராம்ஜி. அவர் கே.சுப்பிரமணியம் பேமிலி. ஒருநாள் எங்கிட்ட வந்து சிவாஜி, டேய் இன்னைக்கு வந்து இந்த யூனிட்ல இருக்குற அத்தனை பேருக்கும் என்னோட சாப்பாடுடான்னு சொன்னாரு. கிட்டத்தட்ட 150 பேரு இருந்திருப்போம்.
என்ன சார் திடீர்னு இப்படி சொல்றீங்க…? தெரியாது மகேந்திரா. இந்த கே.சுப்பிரமணியன் வீட்டுல நாங்கள்லாம் பசிக்கும்போது எத்தனையோ தடவை உட்கார்ந்து சாப்பிட்டுருக்கோம் தெரியுமா? அப்படி சாப்பாடு போட்டவருடா இவங்க அப்பா. எனக்கு எப்படி அந்த நன்றிக்கடனை திருப்பி சொல்றதுன்னு தெரியல.
ஏதோ என் மனசுல இவங்களுக்கு எல்லாம் சாப்பாடு போட்டா அதுல கொஞ்சம் மனநிறைவுன்னாரு. ஒரு சாதாரண மனுஷனோட மனசுல என்ன ஆசாபாசம் உண்டோ, அதெல்லாம் அவரிடம் உண்டு.
ஒண்ணே ஒண்ணு தான் அவரோட குறிக்கோள். இந்த கேமரா ஆன் ஆயிடுச்சுன்னா மக்களைக் கவரணும். அவ்வளவு தான். அவர் மத்தவங்களுக்கு நிறைய உதவி பண்ணிருக்கார். ஆனால் அதை சொல்லிக்கிறது இல்ல. சிவாஜி அரசியலுக்கு வர வேண்டாம்னு அப்பவே சொன்னேன்.
ஏன்னா அவரு எல்லாருக்கும் சொந்தம். எம்ஜிஆரே அவரோட மிகப்பெரிய ரசிகர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சிவாஜி எனக்கு வைத்த செல்லப்பெயர் பரதேசி. வாடா பரதேசின்னு கூப்பிட்டார்னா அன்பா இருக்காருன்னு அர்த்தம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

===========================================================================================

1970 வரிவிதிப்பு முறை பற்றி தினமலரில் வந்த கட்டுரை 

வெளிநாடுகளில் செல்வந்தர்களுக்கு மிக அதிகமாக வரி விதிப்பதாகவும், இந்தியாவில் அப்படி இல்லை என்றும் பலர் கருதுகிறார்கள். ஆனால், ஒரு காலத்தில் இந்தியாவில் வருமான வரியாக 97.50 சதவீதம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது என்பது தெரியுமா?

செல்வத்தை பகிர்ந்தளிப்பது, வாரிசுரிமை வரியை அறிமுகப்படுத்துவது போன்ற விவாதங்கள் எழுந்து, தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், நம் நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்னரே, அதிகபட்சமாக 97.50 சதவீதம் வரை வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு காலகட்டமும் இந்தியாவில் இருந்தது.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, இந்தியாவில் வருமான வரி 97.50 சதவீதம் வரை வசூலிக்கப்பட்டது. ஆனாலும், சிறிது காலத்திலேயே இந்த வசூல் முடிவுக்கு வந்துவிட்டது.

வருமானம் மற்றும் செல்வத்தில் சமநிலையை ஏற்படுத்த, வரி விதிப்பை ஒரு முக்கிய இயந்திரமாக கருதினார், இந்திரா காந்தி. இதன் அடிப்படையில், கடந்த 1970ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பார்லிமென்டில் பட்ஜெட் தாக்கல் செய்து அவர் உரையாற்றினார்.

சமூக நலன் என்பதே அந்த பட்ஜெட்டின் கருப்பொருளாக இருந்தது. பசுமைப் புரட்சி நடைபெற்று வந்த காலகட்டம் என்பதால், விவசாயத் துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன. இதற்கு நிதியளிக்க மிகப்பெரிய தொகை தேவைப்பட்டது.

இந்திரா காந்தி அன்னிய முதலீடுகளை ஆதரிக்கிறவராக இல்லாத காரணத்தால், வரி செலுத்தும் மக்கள் இந்த சுமையை சுமக்க வேண்டியிருந்தது. இதையடுத்து, அதிக செல்வம் மற்றும் பரிசாக பெற்ற பொருட்களுக்கான வரியை உயர்த்துவதாக அவர் அறிவித்தார்.

குறைந்தபட்சமாக 5,000 முதல் 10,000 ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்கு 10 சதவீதமும்; அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய்க்கு மேலாக வருமானம் பெறுவோருக்கு 85 சதவீதமும் வரி விதிக்கப்படும் என அறிவித்தார்.

இதுபோக, இப்பிரிவினருக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதையடுத்து, 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெறும் நபர்களுக்கான வரி விகிதம், 93.50 சதவீதத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து, கடந்த 1973-74 பட்ஜெட்டின் போது, அப்போதைய நிதியமைச்சர் ஒய்.பி. சவான், இப்பிரிவினருக்கான கூடுதல் வரியை, 15 சதவீதமாக உயர்த்தினார். இது வருமான வரியை 97.50 சதவீதமாக உச்சத்துக்கு கொண்டு சென்றது.

இந்த அதிகமான வரிவிதிப்பு, கடைசியில் வரி ஏய்ப்புக்கு வழிவகுத்துக் கொடுத்தது. இதனால் வரி வருவாய் குறைந்தது. இதுபற்றி ஆராய விசாரணை குழு அமைக்கப்பட்டது. வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதே வரி ஏய்ப்புக்கு முக்கிய காரணம் என விசாரணை குழு அதன் அறிக்கையில் தெரிவித்தது.

இதையடுத்து, அடுத்த நிதியாண்டு முதல் வரி விகிதங்கள் தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்தது. கடந்த 1985 - 86ம் நிதியாண்டில், அதிகபட்ச வரி விகிதம் 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. தற்போது நடைமுறையிலுள்ள அதிகபட்ச வரி விகிதமான 30 சதவீதம், கடந்த 1997 - 98ம் நிதியாண்டு முதல் அமலில் இருந்து வருகிறது.

============================================================================================

நியூஸ்ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 


News room  - 02.05.24

- சென்னை விமான நிலைய கழிப்பறை குப்பைத் தொட்டியில் இருந்த ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள்.

- பீகார் மாநிலம் அராரியா பகுதியிலிருந்து, உ.பி. மாநிலம் சஹரன்பூருக்கு கடத்தப்பட்ட 95 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

- 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அரசாங்கம் அறிவித்த பிறகும் கூட திருப்பதி உண்டியலில் 2000 ரூபாய் நோட்டுகளை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். அதனால் அவற்றை மாற்ற ரிசர்வ் வங்கியிடம் தி.தி. தேவஸ்தானம் சிறப்பு அனுமதி கோறி, ஐந்து தவணைகளாக அவற்றை மாற்றிக் கொள்ளும் சலுகையும் பெற்றிருக்கிறது. அதன்படி, மார்ச் 24 வரை 3.20 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டிருக்கின்றன.

- சென்ற அண்டு 75000 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியிருக்கிறதாம் முன்னணி ஐ.டி. நிறுவனங்கள். அதே சமயத்தில் HCL, Tech.Mahindra போன்ற நிறுவனங்கள் வரும் 2025ல் 25000 புது ஊழியர்களை வேலைக்கு எடுக்க இருக்கின்றனவாம்.

- ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான பள்ளி மாணவனை மிரட்டி பணம் படித்தவர்கள் கைது.

ஆனந்தராகம், பூங்கதவே தாழ் திறவாய் போன்ற பல இனிமையான பாடல்களை பாடிய பிரபல பாடகி உமா ரமணன் மே ஒன்றாம் தேதி இரவு காலமானார்.

==============================================================================================

கொரோனா சமயத்தில் செய்த வெட்டி ஆராய்ச்சி - கொரோனா பயமுறுத்தல் செய்திகளே எங்கும் கண்ணில் பட்டு கொண்டிருந்த நேரம்.....  அப்போதைய ஒரு மனமாற்றத்துக்காக ....  



============================================================================================


உற்றுப் பார்க்கும் கண்களுக்கு 
தயங்கி 
அழுவதைக் கூட 
மறைவாகத்தான் அழ வேண்டியிருக்கிறது.
மறைப்பதற்கு பல காரணங்கள் 
கண்ணீர் வெட்கம் பார்க்கிறது 
சங்கோஜம் பார்க்கிறது 
சந்தோஷங்களுக்கு 
சங்கோஜம் உண்டா?
அணை உடைக்கும் கண்ணீர் 
வரும் சந்தர்ப்பங்களும் உண்டு 
அப்போது கரை உடைந்து வரும் வெள்ளம் 

=========================================================================================================

பொக்கிஷம் :-








59 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. ஆட்டோவின் பின்னால் எழுதியிருக்கும் வாசகங்கள் பற்றிய அலசல் நன்றாக உள்ளது. இங்கு அப்படி ஏதும் எழுதி உள்ளதாவென தெரியவில்லை. அப்போது அங்கு இருக்கும் போது நானும் சிலதை படித்திருக்கிறேன்.

    கவிதை நன்றாக உள்ளது. கவிதைக்கு கண்ணீரும், சங்கோஷமும் என தலைப்பிடலாம். சமயங்களில் ஆனந்த கண்ணீரும் லேசாக அணை உடையலாம். துக்கம் பெருகும் போது கரை உடையும் அபாயமும் ஏற்படுவதுண்டு. எல்லாவற்றிற்கும் மனதின் சுயபச்சாதாப பெரு மழையே காரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வீழ்வேனென்று நினைத்தாயோ ஆட்டோவை போட்டோ எடுப்பதற்குள் பறந்து விட்டது.  முதலில் பேஸ்புக்குக்கு ஒரு மேட்டர் தேத்தலாம் என்றுதான் போட்டோ எடுக்க முயன்றேன்.  அதையே வியாழன் பதிவாக்கி விட்டேன்.  நன்றி!

      கவிதைக்கு தலைப்பு வைப்ப்பதெல்லாம் பெரும்பாலும் விட்டு விட்டேன்!   பொருத்தமாக ஏதாவது தோன்றும்போது வைக்கத்தோன்றும்.  நீங்கள் சொல்லி இருக்கும் தலைப்பும் பொருந்துகிறது.  மேலும் கவிதையில் ஒரு சிறு மாற்றம் செய்ய விரும்புகிறேன்.  செய்து விடுகிறேன்!

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. கமலாக்கா நேற்றைய உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!!! முழு வீச்சில் வர கொஞ்சம் சமயம் எடுக்கும்.

      எனக்குக் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய வேண்டும். என் தனிப்பட்ட ஆர்வங்களுக்காக.

      கீதா

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      சரி சகோதரி. தங்களுக்கே உரித்தான பல புதுமையான படைப்புக்களை (கதைகள், சமையல் ரெசிபிகள்) கொண்டு நிதானமாக வாருங்கள். காத்திருக்கிறோம். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  3. சினிமா பட்டி மற்றும் வரி விதிப்பு முறை பகுதிகள் புதிய செய்திகளைச் சொல்லின.

    என்னைக்கேட்டால் எல்லா டிரஸ்டுகளையும் ஓவர் நைட்டில் அரசுடமையாக்கி, NGO மற்றும் Trust illegal என்ற சட்டம் கொண்டுவந்தாலே போதுமானது. டிரஸ்ட்களினால், அரசியல்வாதிகள் சொத்தாக இரண்டு லட்சமும், அவர் சம்பந்தப்பட்ட டிரஸ்ட் 20000 கோடி சொத்துடையதாகவும் இருப்பது நடக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே அரசியல் சாணக்கியத்தனம்!

      நீக்கு
    2. தமிழ் நாட்டு அரசுக்கு மட்டும் அரசுடமை
      உபதேசமா?

      மத்திய அரசு பாணியோ வித்தியாசமானது. அரசு வச உடைமைகளை மக்களின் வரிப்பணத்தில் நன்கு வளர்த்து அவை கொழு கொழுவானதும் ....

      ஆனதும்?..

      நீக்கு
    3. ஜீவி சார்... மத்திய அரசு (காங்கிரஸோ இல்லை பாஜகவோ) தனியாரிடம் கொடுத்துவிடுகிறது என்று ஆதங்கப்படுகிறீர்கள். அரசு வங்கி மற்றும் துறைகளுக்கு நீங்கள் சென்றிருந்தால் அவங்க எப்படி பொழுதைப் போக்குகிறார்கள், வேலை செய்வதே கிடையாது என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். பல வங்கிப் பணியாளர்கள், அவங்க எஜமானர்கள் என்ற மிதப்பில் பணிபுரிகின்றனர். இத்தகையவர்களை தனியார் கம்பெனிகளில் தள்ளிவிட்டால்தான் வேலை செய்வது என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வார்கள்

      நீக்கு
    4. நெல்லை... அரசு அலுவலகங்கள் என்றாலே ஒரு மட்டமான அபிப்ராயம் வைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது!

      நீக்கு
  4. ஆட்டோ வாசகம் - அந்த ஓட்டுநருக்கு என்ன பிரச்சனைகளோ யார் அவருக்குத் துரோகம் செஞ்சாங்களோ? தானும் வாழ்ந்து காட்டுவேன்னு வீர சபதத்தை தன் மன உளைச்சலை இப்படிச் சொல்லிக் கொள்கிறாராக இருக்கலாம்.

    இதை எழுதி முடிச்சு கீழ வரப்ப உங்க கருத்தையும் பார்த்துவிட்டேன் ஸ்ரீராம். இதே கருத்துதான்...

    பல விஷயங்கள் தப்பு தப்பா பொருள் படுத்திதானே பலரும் விளக்கங்களுடன் பேசுவதும் எழுதுவதும் நடைமுறையில் உள்ளது. அப்படித்தான் தமிழினி மெல்லச் சாகும் என்பதும். இந்தப் பாடல் அறிந்த பாடல் என்பதால் பாரதி எல்லோரும் சொல்லும் பொருளில் சொல்லலைன்னு நல்லா தெரியும். அதைத் தெளிவுபடுத்திய நல்ல ஆராய்ச்சி. ஆனா மக்கள் இதெல்லாம் வாசிப்பாங்க? அவங்க சொன்னதையேதான் சொல்லிட்டிருப்பாங்க...மேற்கோள் காட்டி!!! அம்புட்டுத்தான் அவங்க அறிவு! இப்ப இருக்கற ஊடகங்களை நினைச்சா....இப்படித்தான் யார் எது பேசினாலும் தப்பர்த்தம் பண்ணிக் கொண்டு சும்மானாலும் கண்டதைப் பேசிடறாங்க...பொய் பரப்பினாதானே நிறையபேர் பார்ப்பாங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மாதிரி ஆட்டோ வாசகங்கள் பற்றி நான் நினைப்பது என்னவென்றால் ஏதோ ஒன்றிரண்டு பேர்களுக்கு சொல்ல வேண்டியதை ஊருக்கே சொல்கிறார்கள் என்பதுதான்!

      நீக்கு
  5. நானும் வண்டிகளின் பின்னால் வித்தியாசமான வாசகங்கள் பார்த்ததுண்டு. மொபைலையோ கேமராவையோ எடுத்து அதை எடுக்கறதுக்குள்ள...ஹிஹிஹி...

    சில இடங்களில் இருப்பதை எடுத்திருந்தேன். அதெல்லாம் எங்க போச்சோ தெரியலை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "மோதி விடாதே... மொத்தமும் கடன்" என்று ஒரு காரில் எழுதி இருந்தது!!

      நீக்கு
  6. சினிமா பட்டி தகவல்கள் - ஒய் ஜி மகேந்திரன், சிவாஜி பத்தி சொல்லியிருந்தது வேறு சில வியாழன் பகுதியிலோ அல்லது வேறு எங்கோ வாசித்த நினைவு. இவை புதியவை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு நான் பகிரவில்லை.  வொய் ஜி மகேந்திரன் சிவாஜி பற்றி சொன்ன வேறு சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறேன்.

      நீக்கு
  7. நம்ம ஊர்ல செல்வந்தர்கள் வருமான வரி கட்டறாங்க!!!????

    முதல்ல எல்லா ஆன்மீக ஸ்தாபனங்களையும் வரி கட்ட வேண்டும் என்ற விதிக்கு உட்படுத்த வேண்டும் என்பது என் தனிப்பட்டக் கருத்து. தனிப்பட்ட கருத்துன்னு ஏன் சொல்றேன்னா இங்க எல்லாரும் என்னை அடிக்க வந்துருவாங்க. அது போல ட்ரஸ்ட்னு பேர்ல நடப்பவற்றிற்கும் இது பொருந்தும்.

    அவங்க ஸ்தாபனங்களின் பொருட்களை வாங்கினால் பில்லில் அது அவர்களுக்கு வழங்கபடும் நன்கொடை என்றுதான் தருகிறார்கள், பொருளுக்கான பில் அல்ல. (பொருளின் விலை யம்மாடியோவ்!!!) உறவினர் அப்படி வாங்கிய போது அறிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நம்ம ஊர்ல செல்வந்தர்கள் வருமான வரி கட்டறாங்க!!!???? //

      ஆடிட்டர் வச்சு அளவா குறைச்சு கட்டுவாங்க!

      ஆன்மீக ஸ்தாபனங்கள் பற்றி சொல்லி இருப்பதை நானும் ஆமோதிக்கிறேன். சமீபத்தில் ஏதோ ஆட்சேபகரமான விளம்பர வாசகத்துக்கு பதஞ்சலி நிறுவனம் கூட உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரியது.

      நீக்கு
  8. இப்ப ஒரு கருத்து போட்டேனே....வந்துச்சா ஸ்ரீராம்? இத்தனை நாள் என்னை பார்க்காததால் ப்ளாகர் இதாருன்னு கருத்தை பப்ளிஷ் பண்ணாம விட்டுடுச்சா!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்பாம்ல இருந்தது.  கூட்டிட்டு வந்துட்டேன்!

      நீக்கு
  9. நம்ம ஊர்ல எல்லாம் செல்வந்தர்கள் வரிகட்டறாங்க???!!!!!!!!

    முதல்ல ஆன்மீக ஸ்தாபனங்கள் அனைத்தையும் வரிக்கு உட்படுத்த வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. தனிப்பட்ட கருத்துன்னு ஏன் சொல்றேன்னா...இல்லைனா இங்க என்னை எல்லாரும் அடிக்க வந்துருவாங்க!!!

    இந்த ஆன்மீக ஸ்தாபனங்கள் விற்கும் பொருட்களுக்கான பில்லை அவர்களுக்கு வழங்கப்பட்ட நன்கொடைன்னு கொடுக்கறாங்க. பொருளின் விலைக்கான பில் அல்ல அது. (அதுவும் பொருளின் விலை யம்மாடியோவ்!!! சும்மானாலும் அதில் அந்த பவர் இருக்கு இந்தப் பவர் இருக்குன்னு சொல்லி!!!) சமீபத்தில் நம்ம உறவினர் வாங்கிய அப்படியான பொருளின் பில் பார்த்ததால் சொல்கிறேன். அது போல பல ட்ரஸ்ட்களும் விதிக்குள் வர வேண்டும். நிறைய தில்லுமுல்லுகள் நடப்பதால்.

    அதிக செல்வம் மற்றும் பரிசாக பெற்ற பொருட்களுக்கான வரியை//

    இதுவும் கண்டிப்பாக வர வேண்டும். வந்தால் பரிசு என்ற பெயரில் கொடுக்கப்படும் வரதட்சணை, மணமகளுக்குக் கொடுக்கப்படும் பரிசு, மணமகனுக்குக் கொடுக்கப்படும் பரிசு என்பவை குறையும். நம்மைப் போன்ற சாமானியகளைச் சொல்லலை.....பணக்காரர்களைச் சொல்கிறேன். இப்படித்தான் சாமானியர்களும் தங்கள் வசதிக்கு மீறி கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதுவும் என் தனிப்பட்ட கருத்து

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரி ஏய்ப்புக்கும் வழி கொடுக்கும் தான். இதைச் சொல்ல வந்தப்ப, அடுத்த வரியை அங்கு வாசித்துவிட்டேன்.

      கீதா

      நீக்கு
  10. உமா ரமணம் மறைவு - ஓ மை கடவுளே! என்னாச்சு? செய்தி பார்க்க வேண்டும்.

    திருப்பதி உண்டியலில் இப்படி ரூ 2000 மற்றும் செல்லாத நோட்டுகளைப் போடுவது சௌகரியமோ!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  12. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க..

    பதிலளிநீக்கு
  13. செய்தித்தாள் விவரங்கள் தெரிந்து கொண்டேன். முன்ன எங்கேயோ படித்திருந்தாலும் மறந்து போனவை!!!

    கவிதையின் பொருள் நல்லாருக்கு ஸ்ரீராம், ஆனால் இடையில் ஏதோ மிஸ்ஸிங்க்? இன்னும் கொஞ்சம் தட்டிக் கொட்டலாமோ?!!!

    அழுகை என்பது நம் உணர்வுகளின் வெளிப்பாடு. அதைக் கண்டிப்பாக அடக்கி வைக்கக் கூடாது. ஆனால் நாம் அழக் கூடாது என்று கட்டுப்படுத்தப்பட்டு வளர்க்கப் படுகிறோம். அதனாலேயே பல உளவியல் பிரச்சனைகள் வருகின்றன. அதுவும் ஆண்கள் அழக் கூடாது என்று!!!!! Stupid!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கவிதையின் பொருள் நல்லாருக்கு ஸ்ரீராம், ஆனால் இடையில் ஏதோ மிஸ்ஸிங்க்? இன்னும் கொஞ்சம் தட்டிக் கொட்டலாமோ?!!! //

      ஆமாம். எனக்கும்  அப்படி தோன்றியது.

      நீக்கு
  14. ஜோக்குகள் சில புன்னகைக்க வைத்தன!!! ஆஃபீஸ் ஜோக்குகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. யாரும் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்ற சுதந்திரம் உள்ளபோது கூறப்பட்ட,ஒரு ரோலோ என்பவர் கூறிய கருத்தை மிக்க முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ச்சி செய்தவர் செய்ததும் ஒரு வெட்டி வேலை என்று நினைக்கிறேன். பாரதி அன்றே அதற்கு பதில் கூறி விட்டார் என்பது தெரிகிறது. செந்தில் நாதன் கண்டுபிடித்தார் எனும்போது //அப்பாதுரையின் கருத்தே நம்பக்கூடியதும், ஏற்க கூடியதும்!// அப்பாதுரை எப்படி இங்கே வந்தார்? தெரியவில்லை.

    ஆட்டோ வாசகம் என்பது ஒவ்வொரு ஊரின் பழக்கம் என தோன்றுகிறது. இங்கு ஆட்டோக்களில் இது போன்ற வாசகங்கள் எழுதும் பழக்கம் இல்லை. மாறாக ஒரு பெயர் முகப்பில் எழுதும் வழக்கம் இருந்தது. அதுவும் தற்போது மறைந்து வருகிறது.

    1970களில் வருமான வரி கட்டுபவர் என்றால் மதிப்பு அதிகம். காரணம் மக்களுடைய சராசரி வருமானம் மிக குறைவு. 100 ரூபாய்க்கு சில்லறை கிடைக்காத காலம். என்னுடைய முதல் சம்பள ஸ்கேல் 150-5-240. பிடித்தம் இல்லாமல் மொத்த சம்பளம் 325 ரூ. ஒரு தேர்தல் ஓட்டின் விலை 2ரூ. தற்போது அந்த போஸ்டுக்கு புதிதாக சேருபவர் வருமான வரி கொடுக்க வேண்டும். ஆக வரி விகிதம் என்பதும் பொருளாதார விதிகளுக்கு உட்பட்டே ஆகவேண்டும். கொஞ்சம் பேர் என்றால் கூடிய விகிதம். நிறைய பேர் என்றால் குறைந்த விகிதம்.

    பேப்பர் துண்டை வெட்டி எடுத்து பதிவில் இணைத்து வெட்டி ஆராய்ச்சி? தற்போது அச்சு பத்திரிகைகள் வாங்குபவர் குறைவு. மேலும் சிறு பத்திரிகைகள் நிறுத்தப்பட்டு விட்டன.

    தண்ணீர் இல்லாமல் தவிக்க கண்ணீர் தானே வருகிறதோ?

    லஞ்சத்திற்கு கடன் ஜோக் பரவாயில்லை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அப்பாதுரை எப்படி வந்தார்?  எங்கோ படித்ததை இங்கு புகுத்திக் குழம்பிக் குழப்பி விட்டேன் போல!

      ஆட்டோக்களில் மகன் மகள் மனைவி பெயர்கள் எழுதும் வழக்கம் இங்கும் உல்ளது.

      //பேப்பர் துண்டை வெட்டி எடுத்து பதிவில் இணைத்து வெட்டி ஆராய்ச்சி?//

      படத்துக்கு கீழே உள்ள பதிவு, எழுத்துகளை கவனிக்கவில்லையா?

      ஒரு பதிவின் ஜோக்ஸுக்கு ஒரு ஜோக் பதம்!

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. படித்தவன் பாட்டைக் கெடுத்தான்.. எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்றெல்லாம் இங்கே சொல் வழக்கம் உண்டு..

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் சில விளம்பரங்களும் செய்வதைக் கண்டால் மனம் வெதும்புகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடிக்கடி தொலைக்காட்சி குறித்து நொந்து கொள்கிறீர்கள்.
      உங்களுக்கு பிடித்த சப்ஜெக்ட் பற்றிச் சொல்லுங்கள்.
      அவையெல்லாம் எந்தந்த சேனல்களில் ஒளிபரப்பாகிறது
      என்று ஒரு லிஸ்ட் தயாரிக்கலாம்.

      ஒரே ஒரு நிபந்தனை:
      உங்களுக்குப் பிடிக்காதவற்றை நீங்கள் பார்க்கக்கூடாது.
      சரியா?

      நீக்கு
    2. ஸ்ரீராம், ஒரு வியாழனுக்கான மேட்டர். (ஏதோ நம்மாலானது)

      நீக்கு
    3. நான் தொலைக்காட்சியை பார்பபதில்லை.  பார்ப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிறது.எனவே நான் பேச்சிலன்!!

      நீக்கு
  18. ஆட்டோ வாசகம் உங்களை நிறைய் ஆய்வுகள் செய்ய வைத்து இருக்கிறது.

    என் எஸ் கிருஷ்ணனின் "ங்கொப்பன் மகனே அடிப்பியோ... சிங்கண்டா..." ஜோக் ரசித்துப்பார்த்து இருக்கிறேன், மீண்டும் பார்த்து ரசித்தேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி..  என் எஸ்  கே ஜோக் கவனித்த ஒரே ஆள் நீங்கள்தான் போல!

      நீக்கு
  19. குரு பெயர்ச்சி காலம் அல்லவா... எல்லாரும் இஷ்டத்திற்கு சொல்கின்றார்கள்.. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தென்குடித்திட்டை என்று ஒரு பெரியவர் சொல்கின்றார்..

    உண்மையில் தஞ்சை மாநகர எல்லையில் இருந்து ஐந்து கிமீ.. தென்குடித் திட்டை கோயில்..

    விட்டால் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள மதுரை..

    கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சபரி மலை..

    கும்பகோணத்திற்கு அருகில் உள்ள வாரணாசி என்றெல்லாம் வந்து விடுமோ!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்பகோணம் வினைதீர்த்த
      விநாயகர் கோயில் தெரு (பேட்டைத் தெரு என்றும் சொல்வார்கள்) அறிவீர்கள் தானே?

      நீக்கு
    2. உஷ்...   கும்பகோணத்தைப் பற்றி குறை சொல்லாதீர்கள்.  அது என் மருமகள் ஊர்!

      நீக்கு
    3. ஹி.. ஹி...

      நான் பிறந்த ஊர் அது. தெருப் பெயரை மேலே கொடுத்திருக்கிறேன்.

      நீக்கு
    4. அதானே...   அதை மறந்து விட்டேனே.....

      நீக்கு

    5. ஸ்ரீ ஒப்பிலியப்பன் எங்கள் குலதெய்வம்.

      கும்பகோணம் அடுத்த ஒப்பிலியப்பன் கோயிலில் உங்கள் திருமணம் நடந்தது.

      உங்கள் திருமகனார்
      திருமணம் நடந்தது + மேலே நீங்கள் குறிப்பிட்டிருப்பது.

      நீக்கு
  20. ஒய்.ஜி.மகேந்திரன் சிவாஜி பற்றி சொன்ன செய்தியை முன்பு படித்து இருக்கிறேன்.

    உமா ரமணன் மறைவு வருத்தபட வைத்தது, முன்பே படித்து விட்டேன், அவர் மறைவு செய்தி.

    //அணை உடைக்கும் கண்ணீர்
    வரும் சந்தர்ப்பங்களும் உண்டு
    அப்போது கரை உடைந்து வரும் வெள்ளம்//

    உங்கள் கவிதை சொல்வது போல மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் சில நேரங்கள் அடக்கமுடியாமல், கரையை உடைத்து கொண்டு வரும் வெள்ளம் போல கண்ணீர் வரும்.

    பொக்கிஷபகிர்வுகளும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'சிரித்தாலும் கண்ணீர் வரும்...  அழுதாலும் கண்ணீர் வரும்..  ' பாடல் நினைவுக்கு வரவில்லையா?

      நீக்கு
    2. சிரித்தாலும் கண்ணீர் வரும்... அழுதாலும் கண்ணீர் வரும் பாடல் நினைவுக்கு வந்தது. சிரித்து கொண்டே அழுகின்றேன் என்ற பாடலும் நினைவுக்கு வந்தது.

      நீக்கு
    3. அடடே....  இதோ ஒருமுறை கேட்டு விடுகிறேன்.

      நீக்கு
  21. சில நேரங்களில் ஆட்டோவின் பின்புறம் நல்ல செய்திகளும் கிடைக்கத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    நடிகர் ஒய். ஜி மகேந்திரன் அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றிய செய்திகளை தொகுத்தளித்த விபரங்கள் இங்கேயே ஏற்கனவே படித்த நினைவு வருகிறது. இருப்பினும் இப்போதும் படித்து ரசித்தேன்.

    சற்று மாற்றி வந்த கவிதையையும் படித்து. ரசித்தேன். இதுவும் நன்றாக உள்ளது.

    செய்தியறை பக்கம் படித்து செய்திகளை தெரிந்து கொண்டேன். பாடகி உமா ரமணன் அவர்கள் இழப்புச்செய்தி மிக்க வருத்தமளித்தது.

    நகைச்சுவைகள் அனைத்தும் நன்றாக உள்ளது. மாப்பிள்ளை தோப்புக்கரணம் போடுவதில் கின்னஸ் ரெகார்ட் வாங்கியிருப்பது பயனுள்ளது என அந்தக் காலத்திலேயே பெண் திருமணத்திற்கு ஒத்துக் கொள்வது ஆச்சரியம் ஒன்றுமில்லை. இது எக்காலத்திலும் காலங்காலமாக நடப்பதுதானே:)) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  23. நேற்றே படித்து விட்டேன். கருத்து இடுவதற்குள் வேறுவேலை வந்துவிட்டதால் தாமதம்.

    ஆட்டங்களும் வாசகங்களும் எரிச்சல் தருவன.

    நியூஸ் ரூம் நன்று.
    கவிதை பிடித்தது.

    ஜோக்ஸ் இரண்டாயிரம் தோப்புக் கரணம் ...ஹ்.ஹா...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!