சனி, 4 மே, 2024

பஸ்ஸில் தவறவிட்ட நகை மற்றும் நான் படிச்ச கதை

 


சமீப காலமாக அரசு பள்ளிகளுக்கு நிலத்தை தானமாக வழங்குவது அதிகரித்து வருகிறது. மதுரையை சேர்ந்த பூரணம்மாள் தனது மகள் நினைவாக அரசு பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கினார். இதே போன்ற ஒரு சம்பவம் விருதுநகரிலும் நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி எம்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்காக கு.மணிவண்ணன் என்பவர் தனது தந்தை மா.பா.குரு சாமி, தாய் குருதேமொழி நினைவாக 2 ஏக்கர் நிலம் தானமாக வழங்கினார். இவர் திண்டுக்கல் மாவட்டம் ஏ.கே.எம்.ஜி. நகரில் வசித்து தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். போட்டோ பாலிமர்ஸ், ஆன்டி மைக்ரோபையல், தொற்று தொடர்பாகவும் ஆய்வு கட்டுரை பணிகளில் பணியாற்றி உள்ளார்.
இவர் கூறியதாவது: எனது தந்தை மா.பா.குருசாமி ஒரு எழுத்தாளர். பெண்மை வெல்க, புது புது சிந்தனைகள், புது புது தாழில்கள், அக்கினி குஞ்சுஎனும் கவிதை நாடக தொகுப்பு, வள்ளுவப்பொருளியல், காந்தி பொருளியல், இதழியல் கலை, எப்படி இப்படி என்ற தன் வரலாறு என 150க்கும் மேற்பட்ட புத்தகங் களை எழுதி உள்ளார். 1983ல் இவரது 'நமது சமுதாய சீர்கேடுகள்' புத்தகம் மத்திய அரசு விருதையும், 'அக்கினி குஞ்சு' புத்தகம் தமிழக அரசின்
தமிழ் வளர்ச்சித்துறையின் 2007ம் ஆண்டிற்கான சிறந்த நுால்களில் ஒன்றாகவும், 2010ல் காந்தி பொருளியல் புத்தகம் தமிழக அரசு விருதையும் பெற்றுள்ளன. மேலும் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது, சிறந்த பள்ளி முதல்வர் விருதையும் பெற்றுள்ளார். இவர் எழுதிய நுால்களில் குறள் கதைகள் எனும் நுால் சிறப்பு வாய்ந்தது.
குறிப்பிட்ட முப்பது திருக்குறள்களை எடுத்து வள்ளுவர் எந்த சூழலில் எழுதினார் எனவள்ளுவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை போல கற்பனையில் எழுதி உள்ளார். என் தந்தைக்கு கல்வி மீது அளப்பரிய பற்று உண்டு. எங்களையும் நன்றாக படிக்க வைத்து முன்னேற்றி உள்ளார். நான் முதுகலை வேதியியல், பி.எச்.டி., படித்து விட்டு பேராசிரியராக பணியாற்றி தற்போது அமெரிக்காவில் வேதியியல் அறிவியலாளராக இருக்கிறேன்.  அரசு பள்ளிக்கு ஒரு உதவி என்று கேட்ட போது மறுக்க முடியாது. 200 மாணவர்கள் படிக்கும் சூழலில் 80 மாணவர்களுக்கு வகுப்பறை கட்டடம் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக என்னிடம் நிலம் கேட்டுவந்தனர். அப்பள்ளிக்கு நிலம் வழங்கியதால் அப்பகுதி மாணவர்களின் கல்வி மேம்படும் என்ற நம்பிக்கையிலும், தந்தை, தாயின் கல்வி பணிக்கு நினைவாகவும் வழங்கினேன். என் தந்தைக்கு உறுதுணையாக அவர் கல்வி பணிக்கு ஆதரவாக என் தாய் குருதேமொழியும் இருந்துள்ளார். எனவே 2 ஏக்கர் நிலத்தை சிவகாசி எம்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்காக, தமிழக கவர்னர் பெயரில் நன் கொடையாக வழங்கினேன் என்றார்.

=========================================================================================================


==============================================================================================



===============================================================================================



===============================================================================================

 

நான் படிச்ச கதை (JKC)

தண்ணீர்-கந்தர்வன் 

தமிழ் இலக்கிய உலகின் காத்திரமான படைப்புகளுக்கு சொந்தக்காரரான எழுத்தாளர் கந்தர்வன் (03-02-1944 - 22-02-2004) அவர்கள், வானம் பார்த்த பூமியை தனக்குள் அடக்கி வைத்திருக்கும் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிக்கல் எனும் கிராமத்தில் பிறந்தார். கந்தர்வன் அவர்களின் இயற்பெயர் நாகலிங்கம்.

  தனது சிறுவயதிலேயே மளிகைக் கடை விற்பனை ஊழியர்,  ஜவுளிக் கடை உதவியாளர், ஓட்டல் தொழிலாளி, பால்பண்ணை மேற்பார்வையாளர் என்று பல வேலைகளையும் பார்த்து, படிக்கும் ஆர்வம் மேலெழ, நிறைய தடைகளை மீறி படித்து, தனது 24ஆம் வயதில் அரசுப் பணிக்கு வந்தார். தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பல்லாண்டுகள் பணிக்குப் பிறகு, மாவட்டக் கருவூல அதிகாரியாக (T.O.) பணியாற்றி ஓய்வு பெற்றார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அதில் பணியாற்றியவர். தாமரை, சுபமங்களா , சிகரம், செம்மலர், விகடன் என்று எல்லாவகை  இதழ்களிலும் எழுதிக் கொண்டேயிருந்தார்.

அவர் கவிஞர் என்றே பெயர் பெற்றாலும், தேர்ந்த சிறுகதைகள் பல படைத்தவர். அவரின் கவிதைகளுக்குள்ளும் கதைகள் ஒளிந்தே கிடந்தன. "சனிப்பிணம்" எனும் சிறுகதையே அவரின் முதல் சிறுகதை. அந்தச் சிறுகதை 1970 இல் தாமரையில் வந்தது.

1.    பாலிதின் பைக்குள் கிடந்த பாலை

வாசலில் வந்து எடுத்துப் போனாள்

காய்கறிக் கடை கூவல் கேட்டு

வாசலில் வந்து வாங்கிப் போனாள்

சினிமா வண்டிச் சத்தம் கேட்டு

வாசலில் வந்து பார்த்துப் போனாள்

வீதி உலா வரும் சாமி பார்த்து

வாசலில் வந்து வணங்கிப் போனாள்

பிச்சைக் காரன் பிலாக்கணம் கேட்டு

வாசலில் வந்து வழங்கிப் போனாள்

கணவன் திரும்பும் காலம் அறிந்து

வாசலில் வந்து தாங்கிப் போனாள்

அத்தை நின்ற வாசல் வரை

அவளும் வந்து திரும்புகிறாள்

மரத்தில் கட்டிய பசுமாடு

கயிற்றின் நீளம் சுற்றி வரும்

வாசல்வரைக்கும் அளவெடுத்து

புகுந்தவீட்டின் எல்லைகளுக்குள் செக்குமாடாய் உழைத்து பிள்ளைகளைப் பெற்று வளர்த்து குடும்பத்தை நடத்திச் செல்வதால் மாட்டுப்பெண் என்கிறார்களோ?


தண்ணீர்-கதைச்சுருக்கம்


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.

                                                   (குறள் 20: வான்சிறப்பு அதிகாரம்)

சாலமன் பாப்பையா விளக்கம்

எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது

இந்த ஊரும் அக்கம்பக்கத்து ஊர்களும் உவடு அரித்துப் போய்விட்டன. ஊருக்குள் நாலு இடங்களில் கிணறு வெட்டிப் பார்த்தார்கள். உப்பென்றால் குடலை வாய்க்குக் கொண்டுவருகிற உப்பு ' கடல் தண்ணீரை விட ஒருமடங்கு கூடுதலான உப்பு கிணற்றுத் தண்ணீரில் உப்பளம் போடலாம் என்றார்கள்.

எல்லா ஊர்களும் தீய்ந்துபோய்விட்டன. பஸ்ஸில் போகும் போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயற்காடுகளில் பச்சை நிறத்தையே பார்க்க முடியாது. ஜனம் எதைத்தின்று வாழ்கிறது என்று இந்தப் பக்கத்தில் பயணம் செய்கிறவர்கள் அதிசயமாகப் பார்ப்பார்கள்.

எல்லா ஊரிலும் பருவகாலத்தில் மழை பெய்யும். புயல் வந்தால்தான் இந்தப் பக்கம் பூராவுக்கும் மழை. மழை பெய்வதில்லை...பெய்தாய் பேய் மழை கண்மாய், ஊருணி எல்லாம் உடைப்பெடுத்து வெள்ளம் போய் மூன்றாம் நாள் மறுபடி நீரில்லா பூமியாகக் கிடக்கும். ஆகாயத்துக்கும் பூமிக்கும் இந்த ஊர்ப்பக்கம் நிரந்தரப் பகை.

ஐயா காலத்தில் உலகம்மாள் கோயில் கிணறு மட்டும் நல்ல தண்ணீர் கிணறாக இருந்தது. ஏற்றம் வைத்து இறைப்பார்கள். அதிகாலை முதல் டின் கட்டி நாலைந்து இளவட்டங்கள் இறைத்துக் கொண்டே இருந்தார்கள். பெண்கள் தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடமென்று எடுத்துவந்தார்கள். ஜனங்கள் இலுப்பை மரத்துக்காய், கண்மாய்க் கரம்பை என்று தலை தேய்த்து ஜன்னி வருகிற மாதிரி சுகமாகக் குளித்தார்கள். சனிக்கிழமைகளில் வானவில்லாக எண்ணெயும் வாசனையாகச் சீயக்காயும் மிதக்கும், நந்தவனத்துக்குப் பாயும் தண்ணீரில்.

இப்போது எல்லாமே பூண்டற்றுப் போய்விட்டன. முல்லை மணந்த நந்தவனம் குட்டிச்சுவர்களில் சின்ன அடையாளங்களோடு பாழடைந்து கிடக்கிறது. கிணற்றில் முள்ளை வெட்டிப் போட்டிருக்கிறார்கள். மழைபெய்து குண்டுக்கால் நிறையும் வரை குடிக்கத் தண்ணீர் வேண்டிப் பெண்கள் குடங்களோடு பிலாப்பட்டிக்குப் போகிறார்கள்.

மூணு மைல் தூரம் நடக்கவேண்டும் பிலாப்பட்டிக்கு. ஊருணிக்குப் பக்கமாயிருக்கிறது அந்த நல்ல தண்ணீர் கிணறு. ஊற ஊறத்தான் இறைக்கவேண்டும். மதியம் வரை பிலாப்பட்டி ஜனம் மட்டும் இறைத்துக்கொள்ளும். மதியத்துக்குமேல் வெளியூர் ஆள்களுக்கு விடுவார்கள்.

அம்மாதான் தினமும் பிலாப்பட்டிக்குப்போய் வந்து கொண்டிருந்தது. வயிற்றில் கட்டி வந்ததிலிருந்து இந்திரா குடத்தை எடுத்தாள்.

 நாலு மாசத்துக்கு முன்தான் ரயில் நிலைய ஓரத்து வீடுகளில் இந்தப் பேச்சு வந்தது. 'ஒலகம் பூராவும் தண்ணில்லைன்னாலும் சரி, நாள் தவறாம ரயிலுக்கு மட்டும் எங்கெருந்தாவது கொண்டு வந்து ஊத்திவிட்டுருறான் பாரு. ' இப்படிப் பேசிப்பேசியே மூன்று மணிக்கு வரும் பாசஞ்சர் ரயிலைக் குறிவைத்துத் தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தார்கள்.

பாய்ண்ட்ஸ்மேன் பக்கத்து ஊர்க்காரர். அவரை வைத்துப் பேசித்தான் இந்த ஏற்பாடு. ரயில் வரும்போதுதான் வரவேண்டும். வந்து சத்தம் போடக்கூடாது. தண்ணீர் கொஞ்சம்தான் பிடிக்க வேண்டும். இவற்றுக்குக் கட்டுப்பட்டு வருவதாகப் பேர்; சண்டை இன்னும் நாறிக்கொண்டுதானிருக்கிறது. எந்தச் சண்டை எப்படி நடந்தாலும் இந்தப் பெண்களுக்கு ஆறாத ஆச்சரியம் ஒன்று உண்டு. நம் ஊர் தண்ணீரை விட ஒசத்தியான தண்ணீர் ரயில் குழாயில் வரும்போது, ஏன் சில ரயில் பயணிகள் வெள்ளை வெள்ளை பாட்டில்களில் தண்ணீரைப் பதினைந்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் வாங்கி வைத்துக்கொண்டு திரிகிறார்களென்று.

வெயில் குரூரமாயடித்துவிட்டுத் தணியத் தொடங்கிய வேளை; பாசஞ்ஜர் ரயிலின் கூவல் வெகு தொலைவிலிருந்து அருவலாகக் கேட்டது. வல்லநேந்தல் தாண்டியதும் இன்ஜின் டிரைவர்கள் இப்படித்தான் ஒலி எழுப்புவார்கள். திண்ணைக்கு ஓடிவந்து, தூணைப் பிடித்துக் கொண்டு திரும்பிப் பார்த்தாள் இந்திரா. தூரத்தில் ரயில் வருவது மங்கலாகத் தெரிந்தது.

                                          —-----------------------------------------------------------------------------------

உள்ளே அம்மா 'பொட்டுத் தண்ணியில்லை ' என்று ரயில் ஊதல் கேட்டு அனிச்சையாகச் சொ ல்லிக் கொண்டிருந்தது. ஐயா, சினை ஆட்டைப் பார்த்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தார். ஐயாவுக்கு எப்போதும் கணக்குத்தான். ஆடு குட்டி போட... குட்டி பெருத்துக் குட்டிகள் போட்டுக் குபேரனாகும் கணக்கு.


இந்திரா குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு வாரியைத் தாண்டி ஓடினாள். மேட்டை எட்டும்போது ஏழெட்டுப் பெண்கள் இடுப்பில் குடங்களோடு ஓடிவந்து இந்திராவை முந்தப் பார்த்தார்கள். எல்லோரும் வாலிபப் பெண்கள். முந்துகிற பெண்களை பிந்துகிற பெண்கள் சடைகளைப் பிடித்து இழுத்தார்கள். கைகளைப் பிடித்து மடக்கினார்கள். அடுத்தவர் குடங்களைப் படபடவென்று கையால் அடித்தார்கள். சிரிப்பும் கனைப்புமாக ஓடினாலும் முந்துபவர்களைப் பார்த்து நொடிக்கொருமுறை கடுகடுவென்று கோபமானார்கள். அடுத்த நொடியில் முந்தும்போது சிரித்துக் கொண்டார்கள்.

புயல் நுழைவது போல் ரயில் நிலையத்துக்குள் பாய்ந்தார்கள். கிளித்தட்டு விளையாட்டில் தங்கள் தங்கள் இடங்களில் ஓடிவந்து நிற்கும் ஆட்களைப் போல் பிளாட்பார நுனியிலிருந்து கடைசி வரை.

இந்திரா இதில் படுகெட்டியான பெண். எல்லோருக்கும் முன்பாக இடம்பிடித்ததோடு மட்டுமில்லாமல், பதட்டமேயில்லாமல் அலட்சியமாக நிற்கிற அழகைப் பார்த்தால் ஐந்தாறு வருசங்களாக அதே இடத்தில் நிற்பது போல இருந்தது. இடம் பிடிக்க முடியாத பெண்கள் சுவர்களில் சாய்ந்துகொண்டு எகத்தாளம் பேசினார்கள்.

ரயில் சத்தம் நெருங்கிக் கொண்டிருக்கையில் இந்திராவைப் படாரென்று தள்ளிவிட்டு, அந்த இடத்தில் டெய்லர் மகள் ராணி நின்று கொள்ள முயன்றாள். இந்திரா கொஞ்சம் தடுமாறிவிட்டு அவளை அலாக்காகத் தூக்கிப் போட்டுவிட்டு மறுபடி வந்து நின்றுவிட்டாள்.

ரயில், காட்டுயானை பிளிறிக்கொண்டு வருவதுபோல் நிலையத்துக்குள் நுழைந்தது. பயணிகள் யாரும் இறங்கு முன்பாக இந்திரா குடத்தோடு பெட்டிக்குள் பாய்ந்தாள். முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி செம்பில் தண்ணீர் பிடித்தாள். செம்பு பாதி நிறையுமுன் குடத்தில் ஊற்றினாள். ஊற்றிய வேகத்தில் மறுபடி செம்பில் பிடித்தாள்.

இந்திரா உள்ளங்கையை இன்னும் அழுத்திக் கொண்டிருந்தாள். தண்ணீர் சன்னமாக வந்தது குழாயில். பாதிக்குடம் கூட நிறையவில்லை. இன்ஜினிலிருந்து ஊதல் ஒலி வந்தது. அம்மா ‘சொட்டுத் தண்ணியில்லை ‘ என்று முனகியது ஞாபகத்துக்கு வந்தது. சில நேரங்களில் இன்ஜினிலிருந்து ஊதல் ஒலி வந்தாலும் புறப்படத் தாமதமாகும். உள்ளங்கையில் ரத்தம் வரும்படி இன்னும் வேகமாகக் குழாயை அழுத்தினாள். ரயில் நகர்கிற மாதிரி இருந்தது. இன்னும் கொஞ்சம் மட்டிலும் பிடித்துக் குடத்தில் ஊற்றிவிட்டுக் குதித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டே உள்ளங்கையை மேலும் அழுத்தினாள்.

ரயில் வேகம் அதிகரித்து பிளாட்பார முனை வருவது போலிருந்தது. படபடவென்று செம்பை எடுத்துக் குடத்தைப் பாதையில் வைத்துவிட்டுக் குதிக்கப் போனாள். முழங்கை வரை கண்ணாடி வளையல்களணிந்த ஒரு வடக்கத்திப் பெண் ஓடிவந்து இவளை இழுத்து வண்டிக்குள் தள்ளிவிட்டுக் கோபமாகக் கத்தினாள். மொழி புரியவில்லையென்றாலும், ‘தற்கொலை பண்ணிக் கொள்ளவா பார்த்தாய் ? ‘ என்கிற மாதிரி ஒலித்தது.

—--------------------------------------------------------------------------------------------------

சினை ஆட்டைப் பார்த்தபடி கணக்குப் போட்டுக்கொண்டிருந்த ஐயா காலாற கடைத் தெருவுக்குப் போனபோது சின்னவன் ஓடிவந்து இரைத்துக்கொண்டே சொன்னான்; ‘ரயில் போயிருச்சு… அக்கா இன்னும் வரலை. ‘ ஐயா ரொம்ப சாதாரணமாகச் சொன்னார், ‘எங்கெயாவது வாயளந்துகிட்டிருக்கும். போய் நல்லாப் பாருலெ. ‘


‘நல்லாப் பாத்துட்டுத்தான் அம்மா சொல்லச் சொன்னுச்சு. ‘

லேசான பதட்டத்துடன் வீடு வந்தவரிடம் அம்மா படபடவென்று சொன்னாள். ‘ஓடுங்க… அந்த ரயிலைப் பிடிங்க. எம்மக அதிலெதான் போயிட்டா. அடுத்த டேசன்ல பிடிங்க போங்க ‘ அண்ணன் வீடு, தம்பிவீடு, மச்சினன் வீடுகளிலிருந்துஆட்கள் ஓடி வந்தார்கள். நாலைந்து பேர் சேரவும் வேட்டிகளை மடித்துக் கட்டிக்கொண்டு மெயின் ரோட்டுக்கு ஓடினார்கள். இரண்டு பஸ்கள் போய் மூன்றாவதாக வந்த ராமநாதபுரம் பஸ்ஸில் ஏறியும் ஏறாமலுமாக கண்டக்டரிடம் கத்தினார்கள். ‘பாசஞ்சர் ரயிலைப் பிடிப்பா… ‘

டிக்கெட் கொடுப்பதில் மும்முரமாயிருந்த கண்டக்டர், அதைச் சாதாரண முறையில் கேட்டுக்கொண்டு பதறாமலுமிருக்கவே ஐயாவின் மைத்துனர் பாய்ந்தார்… ‘பொண்ணு ரயிலோட போயிருச்சுனு நாங்க ஈரக்குலையைப் பிடிச்சுக்கிட்டுக் கத்துறோம். சிணுங்காமக் கேட்டுக்கிட்டு நிக்கிறீரு. டிரைவர்ட்ட சொல்லுமய்யா, வேகமா ஓட்டச் சொல்லி…'

விவகாரம் வேண்டாமென்று கண்டக்டரும், ‘வேகமாப் போங்கண்ணே ‘ என்று ஒப்புக்குச் சொல்லிவிட்டு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். கும்பல், டிரைவரிடம் போய் கத்தியது. டிரைவர் விரட்டிக்கொண்டுபோய்ச் சேர்ந்தார்.

இவர்கள் போய்ச் சேர்ந்த போது ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஈ எறும்புகூட இல்லை. ஸ்டேஷன் மாஸ்டரிலிருந்து ஒவ்வொருவரிடமாக விசாரித்தார்கள். ‘குடத்தோட ஒரு பொண்ணு எறங்குச்சா… ? ‘வென்று. யாரும் பார்த்ததாகச் சொல்லவில்லை. போன ஆட்களில் குயுக்தியான ஒருவர் சொன்னார்; ‘புள்ளைட்ட டிக்கெட் இல்லைங்கிறதனாலெ யாருக்கும் தெரியாம ஒளிஞ்சு ஒளிஞ்சு வெளியே போயிருக்கும்யா. ‘

ரயில் நிலையத்துக்கு வெளியே ஆட்டோ ஸ்டாண்ட், ரிக்ஷா ஸ்டாண்ட், சைக்கிள் கடை, பேக்கரி எல்லா இடங்களிலும் கேட்டார்கள். ‘குடத்தோட ஒரு பொண்ணு இந்தப் பக்கமா போச்சா ? ‘வென்று. ராமநாதபுரம் வடக்குத் தெருவில், அத்தை வண்டிக்காரத் தெருவில், சின்னம்மா வீடு, தெரிந்தவீடு, அறிந்தவீடு பூராவும் தேடிவிட்டு பஸ் ஸ்டாண்டுக்குப் போனார்கள். அந்த குயுக்திக்காரர் வெகு நம்பிக்கையாகச் சொன்னார். ‘புள்ளைட்ட காசிருக்காது. இங்கெதான்யா நிக்கணும்… நம்மூர் ஆளுக யாரும் வருவாகளான்னு ‘ பால்கடை, பழக்கடை, மிட்டாய்கடை யென்று ராமநாதபுரத்தையே சல்லடை போட்டு சலித்துப் பார்த்துவிட்டுக் கவலையும் அசதியுமாக ஆட்கள் ஊர் திரும்பினார்கள்.

வீட்டு வாசலில் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த கூடத்தில் ஒருவர் ‘மெட்ராஸ்உக்கே போயிருச்சோ புள்ளை ‘ என்று சந்தேகமெழுப்ப….ஐயா கத்தினார், ‘ஒன் கழுத்தைக் கடிச்சு மென்னுபுருவேன்; பேசாம இரு ‘ ஐயா கூட போய்த் திரும்பிய ஆள்களில் ஒருவர் கூட்டத்தின் கவலையைக் கவனித்து விட்டுச் சொன்னார். ‘நாம அடுத்தடுத்த ஸ்டேஷன்களுக்குப் போய் பார்த்திருக்கணும் எங்கெயாவது புள்ளை எறங்கி தெசை தெரியாம நிக்குதான்னு… இங்கெ உக்காந்து என்ன செய்யிறது ‘ ‘

அம்மாவுக்கு இந்தப் பேச்சுக்களைக் கேட்டுக் குமட்டலும் மயக்கமுமாய் வந்தது. இந்தக் கூட்டத்தில் யாரும் எட்டமுடியாத யோசனைக்குப் போய் பொருமிக்கொண்டும் வாயில் முந்தானையை அழுத்திக்கொண்டும் சொன்னாள், ‘எம்புள்ளை எந்த ஊரு தண்டவாளத்திலெ விழுந்து கெடக்கோ ‘ அவளால் அடக்கமுடியவில்லை. அவளை யாரும் பிடித்து அடக்கவும் முடியவில்லை.

ஆவேசம் வந்தவள் போல் ரயில் நிலையத்துக்கு ஓடினாள். பின்னாலேயே ஐயாவும் ஊர் ஜனமும் ஓடியது. பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. அம்மா தண்டவாளத்தின் ஓரத்திலேயே ஓட ஆரம்பித்தாள். பத்தடி ஓடியதும் ஐயா, அம்மாவைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டுக் கூர்ந்து பார்த்தார். தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது. நெருங்க நெருங்க அம்மாதான் முதலில் கத்தினாள். ‘அந்தா, இந்திரா வருது. ‘

இடுப்பில் தண்ணீர்க் குடத்தோடு இந்திரா. கூட்டத்தருகில் வந்தாள். அம்மா நிறை பூரிப்பில் விம்மிக்கொண்டு போய்க் குடத்தை வாங்கினாள். நிறைகுடம், சொட்டு சிந்தாமல் கொண்டு வந்துவிட்டாள். மகள் வந்து சேர்ந்ததில் மலர்ந்துபோய் ஐயா கேட்டார்… ‘பயமகளே.. இதையும் சொமந்துக்கிட்டா வரணும்; இத்தனை மைலுக்கும் ? ‘

இந்திரா சொன்னாள்.. ‘ஊக்கும்.. நாளைக்கு வரை குடிக்க எங்கெ போறது ?‘

==========>கதையின் சுட்டி<============

===========>ஆசிரியரைப் பற்றி அறிய இங்கு<===========

8 கருத்துகள்:

  1. தண்ணீர் பஞ்சத்தை மிக நன்றாகச் சொல்லியிருக்கிறார் கதையாசிரியர். நீரின்றி அமையாது உலகு. நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  2. அரசுப் பள்ளிக்கு கவர்னர் பெயரால் நிலம் வழங்கியவர் என்னைக் கவர்ந்தார்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. பாஸிடிவ் செய்திகள் அருமை.
    பள்ளிக்கு இடம் கொடுத்தவருக்கு வாழ்த்துக்கள், வணக்கங்கள்.

    கதை நன்றாக இருக்கிறது. அவர் எழுதிய கவிதையும் நன்றாக இருக்கிறது.
    கோடை காலத்தில் தண்ணீரின் அவசியம் அனைவருக்கும் தெரிய வேண்டும்.

    //மகள் வந்து சேர்ந்ததில் மலர்ந்துபோய் ஐயா கேட்டார்… ‘பயமகளே.. இதையும் சொமந்துக்கிட்டா வரணும்; இத்தனை மைலுக்கும் ? ‘//

    ஐயாவுக்கு மகள் வந்தது மகிழ்ச்சி , நிறைகுடம் தண்ணீருடன் வந்தது மேலும் மகிழ்ச்சி.


    //இந்திரா சொன்னாள்.. ‘ஊக்கும்.. நாளைக்கு வரை குடிக்க எங்கெ போறது ?‘//
    அது தானே! நல்ல பெண்.

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல மனம் படைத்தோர் இன்னும் மிச்சம் இருக்கின்றார்கள்.

    பதிலளிநீக்கு
  7. அரசுப் பள்ளிகளுக்கு நிலம் குடுக்கும் மக்களை பாராட்டுவோம்.

    தண்ணீர் பஞ்சம் நல்லதோர்கதை.
    ரயிலுடன் போகும் இந்திரா மனதுக்கு அதிர்வை தருகிறார். முடிவு சுபமாக இருக்கிறது.
    "
    மலர்ந்துபோய் ஐயா கேட்டார்… ‘பயமகளே.. இதையும் சொமந்துக்கிட்டா வரணும்; இத்தனை மைலுக்கும் ? ‘

    இந்திரா சொன்னாள்.. ‘ஊக்கும்.. நாளைக்கு வரை குடிக்க எங்கெ போறது ?‘
    தண்ணீருக்காக மக்கள் படும் கஷ்டம் நன்றாக புரிகிறது.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. அனைவரையும் பாராட்டி வாழ்த்துவோம்.

    கதை பகிர்வும் நன்றாக உள்ளது. முழுக் கதையையும் ம் படித்தவுடன் முன்பே (நூலகத்திலிருந்து புத்தகங்கள் வாங்கி படிக்கும் காலத்தில்) படித்ததாக ஞாபகம் வந்தது. இல்லை வேறு எங்கேனும் படித்துள்ளேனோ, தெரியவில்லை. ஆனால் படித்த நினைவு வந்தது. மீண்டும் இன்றும் படித்தேன். தண்ணீர் தினமும் ஒரு மனிதருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை கதை உணர வைக்கிறது. பகிர்ந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!