கார புட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கார புட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26.1.15

'திங்க'க்கிழமை : காய்கறி கார புட்டு

   
90 களில் வந்த மங்கையர் மலர் இதழில் இந்த ரெசிப்பியை எழுதி, கடலூரிலிருந்து எஸ். ஜெயலட்சுமி என்பவர் 'இம்மாத இல்லத்தரசி' பகுதியில் முதல் பரிசு வென்றிருக்கிறார்.
      
அதை இங்கு பகிரலாம் என்று தோன்றுகிறது.
     
தேவையான பொருட்கள் :  
     
கோதுமை ரவை (சம்பா)  -  200 கிராம்.
பயத்தம் பருப்பு                   -  200 கிராம்.
உப்பு                                      -  தேவையான அளவு.
கடுகும் உ.பருப்பும்            -  ஒரு, ஒரு டீஸ்பூன்.

டால்டா அல்லது 

எண்ணெய்                           - 50 கிராம். (நான் டால்டாவுக்கு எதிரி!)


வேண்டிய காய்கறிகள் :  

கேரட் அல்லது பீட்ரூட்  -  200 கிராம்.
காலிஃபிளவர்                   -  சிறியது
பச்சைப்பட்டாணி            -  50 கிராம்.
(பெரிய) வெங்காயம்     -  2
உ.கிழங்கு                         -  2
கொத்துமல்லித் தழை  -  ஒரு கட்டு
பச்சை மிளகாய்              -  6
இஞ்சி                                -  சிறு துண்டு
தேங்காய்                         -  ஒரு மூடி
எலுமிச்சம்பழம்              -  1 

  



செய்முறை :
பயத்தம்பருப்பைத் தண்ணீரில் ஊற வைக்கவும். கோதுமை ரவையை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.  வறுத்த ரவையைத் தண்ணீரில் ஊற வைக்கவும்.  கேரட் அல்லது பீட்ரூட்டை பூப்போல் சீவி வைத்துக் கொள்ளவும்.  ஊறிய பயத்தம் பருப்பைத் தண்ணீர் விடாமல் நைஸாக அரைக்கவும்.  அரைத்த விழுதுடன் ஊற வைத்த கோதுமை ரவை, சீவிய துருவல், திட்டமாக உப்பு சேர்த்துக் கரைக்கவும்.  கரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி வேக விடவும்.  வெந்தவுடன் எடுத்து, ஆறவைத்து, நன்றாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும். 
    
(உரித்த பச்சைப்) பட்டாணி, உருளைக்கிழங்கு, காலி ஃபிளவர் இவைகளைச் சிறிது உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக விடவும்.  
     
காலிஃபிளவரை உப்புத் தண்ணீரில் போட்டு எடுத்தால் அதில் உள்ள புழுக்கள் வந்து விடும் (அதான் எனக்குத் தெரியுமே...)  
     
வெங்காயம், இஞ்சி, மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  மல்லித் தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.   
     
அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்ப........   
      
ஐயையோ..... இந்த இடத்திலிருந்து கிழிந்து போயிருக்கிறதே....  என்ன செய்ய?  இவ்வளவு தூரம் டைப் செய்ததை எதற்கு வீண் செய்ய வேண்டும்?  கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.  மிச்சம் இருப்பதை என்ன செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரியாதா என்ன?
அன்புள்ள கடலூர் எஸ். ஜெயலட்சுமி......  எங்கே இருக்கிறீர்கள்?  நீங்கள் இதைப் படிக்கிறீர்களா?  அப்புறம் என்ன சொல்லுங்களேன்....!  



ஆ.... கிடைத்து விட்டது.  மிச்ச பாகமும் கிடைத்து விட்டது. இதோ...
 


அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வறுபட்டவுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகாய் போட்டு வதக்கவும்.  வதங்கியவுடன் ஆவியில் வெந்த கோதுமைக் கலவையைக் கொட்டி நன்கு கிளறவும்.  ஆறியவுடன், எலுமிச்சம்பழத்தைப் பிழியவும்.