சனி, 27 பிப்ரவரி, 2010

சுஜாதா ரங்கராஜன்


சுஜாதா...

மந்திரச் சொல்.

அறுபதுகளின் பிற்பகுதியில் தென்றலாய் தொடங்கி போகப் போகப் புயலாய் மாறிய ஒரு எழுத்து ராட்சசர்...

இன்று அவர் மறைந்த நாள்.


புத்தகம் படிக்கும் பழக்கம் என்பது மு.வ கதை ஒன்றை படிப்பதுடன் தொடங்கியது. பின்னர் அம்புலிமாமா, விக்ரமாதித்தன் கதை முதல் கல்கி, அரு.ராமநாதன், மணியன், பி.வி.ஆர், ஜ.ரா.சு., விந்தன், சாண்டில்யன், ஜெகசிற்பியன், ரா.கி.ரங்கராஜன், கதைகள் வரை... எல்லாம் படிக்கத் தொடங்கிய காலத்தில் எங்கேயோ ஒரு சுஜாதா கதை படிக்க நேர்ந்தது. மற்ற எழுத்துகளில் இருந்து அதன் வித்யாசம் உடனே உரைத்து மனதில் இடம் பெற்றது.



மாடிப் படிகளில் 
ங்
கி --> நடந்தான் என்று எழுதிய அவர் பாணி புருவம் உயர்த்த வைதத்தது. வேறு என்ன என்ன பத்திரிகைகளில் அவர் எழுதுகிறார் என்று தேட வைத்தது.

சமீப காலங்களில் அல்லது எழுபதுகளுக்குப் பின் எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களுக்கு சுஜாதா நடை சாயல் இல்லாமல் இருக்காது. நடிப்புலகில் எல்லோரிடமும் ஏதாவது ஒரு இடத்திலாவது சிவாஜியைப் போல முயற்சி பண்ணுவார்கள் என்பது போல சுஜாதா பாணி, அவரது சில வார்த்தைகளை ஸ்வீகாரம் செய்யாத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. அவர் இந்த அளவு தனது ஆதர்ச எழுத்தாளராய் தி. ஜானகிராமனை சொல்லி உள்ளார்.
அவரது பாலம் கதையைப் படித்து விட்டு, 'எனக்கு உன்னையே கொல்லணும் போல இருக்கு வரவா' என்று யாரோ லெட்டர் எழுதி இருந்தார்களாம்.

சிறுகதை, தொடர்கதை, நாவல், நாடகம், விஞ்ஞானக் கட்டுரைகள், பல்சுவைக் கட்டுரைகள்...சுஜாதா வீட்டு லாண்டரிக் கணக்கை எடுத்துக் கூடப் பிரசுரிக்க பத்திரிகையாளர்கள் தயாராய் இருந்தார்கள் என்று சொல்வதுண்டு..அவர் என்ன எழுதினாலும் பிரபலம் தான்.
சில வித்யாசங்கள், பாதி ராஜ்ஜியம், கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு, அனிதா இளம் மனைவி, காயத்ரி, (இந்தக் கதையின் கருவுக்கு சாவியிடமிருந்தே எதிர்ப்பு வந்ததாம்)..ஜேகே, வானமெனும் வீதியிலே, பதினாலு நாட்கள், எதை விட, எதைச் சொல்ல?

விகடனில் வந்த அவரின் 'கற்றதும், பெற்றதும்...' பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர். ஜூனியர் விகடனில் வந்த 'ஏன், எதற்கு, எப்படி? ' விஞ்ஞானக் கேள்வி பதில்கள்..

யாருக்கும் தெரியாததை இங்கு சொல்ல வரவில்லை. அவர் நினைவு நாளில் அவரை நினைவு கூரும் முயற்சிதான்.

".......எனவே இந்தக் கதையில் நீதி தேடுபவர்களுக்கு சரியாக மூன்று நிமிடங்கள் தருகிறேன், விலகுவதற்கு...
மூன்று நிமிஷம்.
மற்றவர்கள் மேலே படிக்கலாம்....".........
சுஜாதா பாணி!

சில பிரத்யேக வார்த்தைகள் சுஜாதா ஸ்பெஷல். ஆதார, உத்தேசம், போன்றவை உதாரணங்கள். பசித்த புலி தின்னட்டும் என்பது அவர் எழுதும் இன்னொரு சொற்றொடர். மெக்சிகோ தேசத்து சலவைக்காரி ஜோக்கை சொல்லாமலேயே பிரபலப் படுத்தியவர்.

அறுபத்தைந்து, எழுபது வயதுகளிலும் இளமை மாறாத எழுத்துகளுக்கு சொந்தக் காரர். மற்றவர்களின் எழுத்துகளையும் ரசித்து, படித்து, மனமுவந்து பாராட்டுபவர்.

கதைகளிலும் நாவல்களிலும் ஆரம்பித்தாலும் அவர் எழுதிய கணையாழியின் கடைசிப் பக்கங்கள், கற்றதும், பெற்றதும், சில எண்ணங்கள், விவாதங்கள் விமர்சனங்கள், போன்ற அவர் எழுத்துகளை வாசிப்பது சுகம். ஆரம்ப காலங்களில் பெண்கள் பற்றிய அவர் வர்ணனைகள் படிக்கும்போது சற்றே கூச்சப் படவைக்கும் அளவு இருந்தாலும், ஒரு தரப்பு வாசகனை கட்டி இழுக்க செய்த முயற்சியாகக் கூட அதைச் சொல்லலாம்.

ப்ரியா, காயத்ரி, போன்ற அவரது கதைகள் படமானபோது, அவை படமான விதம் குறித்து தன் கோபத்தை வெளிப்படுத்த மேற்கே ஒரு குற்றம் என்ற கதையை எழுதி 'இதை எப்படிப் படமெடுக்கிறார்கள் பார்க்கிறேன்..' என்று கோபப் பட்டவர், பிறகு அதே சினிமா உலகுக்குள் புகுந்து பல முயற்சிகள் செய்தவர்.

பாலச்சந்தர் அவரை ஒரு கதை எழுதித் தரச் சொல்ல, கடத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் எழுதிய மர்மக் கதையை பாலச்சந்தர் மாற்றி அற்புதமான காதல் கதையாக எடுத்ததைப் பற்றி சொல்லி இருந்தார்....(நினைத்தாலே இனிக்கும்)

ஒரே ஒரு படத்தில் 'நடித்துள்ளார்'! தைப் பொங்கல் என்ற படத்தில் ஒரு காட்சியில் தன் மனைவியுடன் அவர் வருவது போன்ற காட்சி இருக்கும்.

எழுத்தில் இவ்வளவு பேர் மனத்தைக் கொள்ளை கொண்டவர், மேடையில் தனக்கு பேச வராது என்பார். தன் மனைவி கூட தான் எழுதுவதை பின்னால் நின்று பார்த்தால் எழுதுவது நின்று போகும் என்று சொல்பவர், மன்னிக்கவும், சொன்னவர்.

கணேஷ் - வசந்த் என்ற சுவாரஸ்யமான பாத்திரங்களைப் படைத்து, ரசிகர்கள் மனதில் இடம் பெறச் செய்தவர். (ஆங்கிலத்தில் பெர்ரி மேசன், ஷெர்லக் ஹோம்ஸ் போன்ற பாத்திரப் படைப்புகளைப் பார்த்த/படித்த பாதிப்பாக இருக்கலாம்)

"ஆசார்யருக்கு வடை வாங்கிக் கொடுத்தால் நம்ம கட்சிக்கு வந்துடுவார்.."
"உங்களை ஒரு பார்ட்டியில பார்த்திருக்கேன்.." போன்ற வசந்தின் கமெண்ட்ஸ் அவர் சொல்லும் ஜோக்குகள், மற்றும் அவரது புத்தி கூர்மை, கணேஷின் ஒரு அறிவு ஜீவித் தனமான அலசி ஆராய்ந்து துப்பறியும் பாத்திரப் படைப்பு...ரசிகர்களால் மிகவும் விரும்பி படிக்கப் பட்ட கதைகள்..கொலையுதிர் காலம், நில்லுங்கள் ராஜாவே, மறுபடியும் கணேஷ், நிர்வாண நகரம், விபரீத கோட்பாடு, மேற்கே ஒரு குற்றம்....பிரியாவில் வசந்த் இல்லாத கணேஷ்..

கணையாழியின் கடைசிபக்கங்கள்...அவரது எண்ணங்களைப் படிப்பதில் தான் எத்தனை சுகம்...

கற்றதும் பெற்றதும் பகுதியில் ஒரு முறை (அவர் முதல் முறை பை-பாஸ் சர்ஜரி செய்து கொண்ட பின் என்று நினைக்கிறேன்) ஆஸ்பத்திரி அனுபவங்களைப் பற்றி எழுதும்போது அறுவை சிகிச்சைக்கு முன் தரப்படும் பச்சை நிற உடையை பற்றி ஒரு விமர்சனம் செய்திருப்பார். மேலும் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் நன்றாகப் படிக்க வேண்டும், எஞ்சினியர் ஆக வேண்டும், பைலட் ஆக வேண்டும் என்ற இலட்சியங்கள் மறைந்து ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் காலை பாத்ரூம் போய் நிம்மதியாய் சிறுநீர் கழித்து வந்து விட்டாலே போதும் என்ற நிலைக்கு வருவது வாழ்க்கையின் ஒரு Progressive Compromise என்று சொல்லி இருப்பார். வாசகர்களை 'சட்'டென அதிர வைத்த வாரம் அது.

பாசாங்குகளையும் , அலங்கார வார்த்தைகளையும் சட்'டென அகற்றி விட்டு நேர் வார்த்தைகளில் சிக்கனமாக முகத்தில் அறையும் வார்த்தைகள்..

அவரது Electronic Voting Machine இன்று பரவலாக உபயோகப் படுவது நான் சொல்லத் தேவை இல்லை.

சிலிகான் - சில்லுப் புரட்சி, தலைமைச் செயலகம் போன்றவை அவரது இன்ன பிறக் கட்டுரைகள். அம்பலம் டாட் காமில் அவர் எழுதியவை பின்னர் புத்தகமாகவும் வெளி வந்தது. திருக்குறளுக்கு விளக்கம் கூட எழுதி உள்ளார் என்று ஞாபகம். ஆரம்ப காலங்களில் கடவுள் மறுப்பு போலவும், சற்றே நாத்திகமும் பேசி (எழுதி) வந்தவர், பின்னாளில் ஆழ்வார் பாசுரங்கள் ஒரு எளிய அறிமுகம் என்று கல்கியில் எழுதினார். பிரம்ம சூத்திர விளக்கம் போன்றவை அவரது அசாதாரண ஆற்றலுக்கு எடுத்துக் காட்டு. கதைகள் எழுதுவதில் தொடங்கி அவர் தொடாத துறையே இல்லை எனலாம்.
சுருக்கமாக முடிக்க வேண்டும் என்றுதான் தொடங்கினேன்...சற்றே அதிகமாக நீண்டு விட்டாலும், இன்னும் எனக்கு ஒன்றுமே சொல்லாதது போல குறை.



சுஜாதா...

மறக்க முடியாத, மறக்க விரும்பாத எழுத்தாளர்.
(பக்கத்தில் மீசையுடன் உள்ள சுஜாதா படத்தில் மீதியைத் தேடுபவர்கள் அந்தக் கதைப் புத்தகத்தின் பெயரைப் படித்துக்கொள்ளுங்கள். நாம் எல்லோரும் எவ்வளவு தேடினாலும் கிடைத்துவிடுவாரா - இம்மாதிரி எழுத்தாளர் இனிமேல்?)

வியாழன், 25 பிப்ரவரி, 2010

இது கதையா - பகுதி மூன்று

முன் கதைச் சுருக்கம் : கனவும் விழிப்பும் ... பகுதி ஒன்று. பெப்ரவரி பதின்மூன்று பதிவு.
நீ தினமும் என்னையும், நான் தினமும் உன்னையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நீ கேட்டதால் சொல்கிறேன், நாளைக் காலையில் நீ எழுந்த பிறகு நீ சந்திக்கின்ற உன் சொந்த பந்தம் இல்லாத நான்காவது உயிரினம் நாந்தான் - அந்த நான்காவது உயிரினத்தை ஞாபகத்தில் என்றும் வைத்திரு. மீண்டும் சந்தர்ப்பம் நேர்ந்தால் நாம் இந்தக் கனவுலகில் சந்திப்போம்." விழித்துக் கொண்டேன். வியப்புடன் யோசித்தேன்.

பகுதி இரண்டு : பெப்ரவரி பதினேழு பதிவு.
ஒன்று : கார் துடைப்பவர்.
இரண்டு : ஈ
மூன்று : ஜாகிங் செல்லும் பெண்ணுருவம்.
நான்கு : ?

இது கதையா - பகுதி மூன்று:
நிஜமாகவே என்னால் நம்பமுடியவில்லை. கடவுள் என்று நான் நம்பிய கனவு உருவம் நிச்சயமாக என்னை வைத்துக்கொண்டு காமெடி கீமெடி பண்ணுவதற்குத்தான் முனைப்பாக இருப்பது போலத் தோன்றியது. வேறு என்ன? நான்காவது உயிரினமாக எதிர்ப் பக்கத்தில் கட்டப்படும் வீட்டினுடைய வாட்ச்மேனை என் கண்ணெதிரே காட்டினால் - நான் என்ன சொல்வது?

கடவுளை மீண்டும் கனவிலே கண்டால் - அவரிடம் கண்டிப்பாகச் சொல்லி விடவேண்டும். கடவுளே இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்று.
கொஞ்சம் நிதானமாக யோசித்தேன். ஆமாம், இவருக்கு என்ன குறை? இவர் ஏன் கடவுளாக இருக்க முடியாது?

இந்த வாட்ச்மேன் அதிகாலையில் நான் எழுவதற்கு முன்பே எழுந்துவிடுகிறார். எப்பொழுதுமே கடமையில் கண்ணாக இருக்கிறார். மனைவி குழந்தைகள் என்று யாரும் இவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சிரிப்பது இல்லை, அழுவதும் இல்லை. எப்பொழுதும் தீவிரமாக எதையாவது யோசனை செய்துகொண்டே இருக்கிறார். எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் - அடிக்கடி பீடி புகைக்கிறார். மற்றபடி - மீதி எல்லாமே தெய்வீக குணங்கள்தானே? டீ வி இல் கூட ஏதேதோ சாமியார்கள் - பீடி புகைப்பவர்கள், சாராயம் குடிப்பவர்கள் எல்லோரையும் காட்டினார்களே? 

அவரைப் பார்த்து லேசாக புன்முறுவல் பூத்தேன். அவர் என்னை லட்சியம் செய்யவில்லை. சரிதான் - GOD =  LOVE. LOVE =  BLIND, So, GOD = BLIND போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். ஆனாலும் அப்படியே விட்டுவிட மனது இல்லை. எனவே அவரை நோக்கி இரண்டடி எடுத்துவைத்து (நீங்க கடவுளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் அவர் உங்களை நோக்கி மூன்றடி எடுத்து வைப்பார் என்று எங்கேயோ படித்திருக்கிறேனே) "ஹல்லோ" என்றேன். அவர் என்னை நிதானமாக தலை முதல் கால் வரை, மறுபடியும் கால் முதல் தலை வரை பார்த்தார். அவர் பார்வையில், 'அடாடா இவர் நேற்று வரை நல்லாத்தானே இருந்தார்' என்ற ஒரு குழப்பம் நிதரிசனமாகத் தெரிந்தது. பிறகு எனக்குத் தெரியாத இந்த மாநில மொழியில் ஏதோ முனகியது போல இருந்தது. 

சரி சரி - இன்று இரவு கனவு லோகத்திற்கு மம்தா பானர்ஜி ஏதாவது பகவான் எக்ஸ்பிரஸ் விட்டிருக்கிறாரா என்று பார்த்து, அதில் டிக்கட்டில்லாமல் பயணித்து, கடவுளை சந்தித்து, இந்தக் குழப்பத்திற்கு விடை தெரிந்து கொள்ளவேண்டும்.
வர்ர்ட்டுமா?
(தொடரும்)

புதன், 24 பிப்ரவரி, 2010

சுட்ட பழங்கள் - சுவையானவை


கல்யாண விருந்தில் நீண்ட நேரமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்த Mr. X இடம் "இன்னும் எவ்வளவு நேரம் சாப்பிடுவே.." என்று அவர் நண்பர் கேட்டார்.
 
Mr X : "கல்யாண பத்திரிக்கையைப் பார்..." கல்யாணப் பத்திரிகையைக் காட்டுகிறார்.

அதில் எழுதி இருந்தது...
சாப்பாட்டு நேரம் : 12 மணி முதல் 3 மணி வரை...
================================================================ 
   அவன் : "நல்ல மொபைலா இருக்கே, எப்போ வாங்கினே.."

    இவன் : "வாங்கலை...ஓட்டப் பந்தயத்துல ஜெயிச்சது..."

    அவன் : "அட, எத்தனை பேர் கலந்துகிட்டாங்க..."

    இவன் : "மூன்று பேர்...நான், இந்த மொபைலோட சொந்தக் காரன், போலீஸ்...."
==================================================================
   உலகம் எப்போது வெறுமையாய், இருளாய் இருப்பதாய் நினைக்கிறாயோ...
   அப்போது வந்து என் கையைப் பிடித்துக் கொள்...  
நான் இருக்கிறேன்....
   கவலைப் படாதே..உன் கைப் பிடித்து நான் உன்னை நிச்சயமாய் 
   கண் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போவேன்...!
=================================================================
"முளைச்சு மூணு இலை கூட விடலை...அதுக்குள்ள அந்தப் பையன் இப்படிப் பண்ணிட்டானே..."

"என்ன பண்ணினான்..?"

"செடியைப் புடுங்கிட்டான்..."
=================================================================
ஜேம்ஸ் பான்ட் ஓர் இந்தியனைச் சந்திக்கிறான்...

"மை நேம் இஸ் பான்ட்....(புன்னகையுடன் தோளைக் குலுக்கி) ஜேம்ஸ் பான்ட்...உங்கள் பெயர்...?"

இந்தியன் : "ஐ ஆம் நாயுடு...
வெங்கட்ட நாயுடு..... சிவ வெங்கட்ட நாயுடு... லக்ஷ்மி நாராயண சிவ வெங்கட்ட நாயுடு......ஸ்ரீனிவாசுலு லக்ஷ்மி நாராயண சிவ வெங்கட்ட நாயுடு...சீதாராம ராஜசேகர ஸ்ரீனிவாசலு லக்ஷ்மி நாராயண சிவ வெங்கட்ட நாயுடு... அனுமந்தராய சீதா ராம ராஜா சேகர........"

ஜேம்ஸ் பான்ட் : "தெரியாம சொல்லிட்டேன்...விட்டுடுப்பா...உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம்..."
==================================================================

படிக்காமலே டிகிரி வைத்திருப்பது Thermometer மட்டும்தான்

=============================================

எறும்பு நினைச்சா ஆயிரம் யானையைக் கடிக்கலாம். ஆனால் ஆயிரம் யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக்  கூட கடிக்க முடியாது.

=============================================
ப்ளேடு...

டீச்சர் : "யானை பெருசா, எறும்பு பெருசா?"

மாணவன் : "டேட் ஆஃப் பர்த் சொன்னால்தானே டீச்சர் சொல்ல முடியும்..?

==============================================
எறும்புகள் சைக்கிள் ரேஸ் நடத்திக்கொண்டிருந்தபோது குறுக்கே ஒரு யானை வந்து விட்டது...ப்ரேக் போட்ட எறும்பு கோபத்துடன்,"நீ விழுந்த சாக என் வண்டிதான் கிடைச்சுதா?"

***********************************

ஏழெட்டு எறும்புகள் சாலையில் நடந்து கொண்டிருந்தபோது எதிரே ஒற்றை யானை..வழி விட்டு விலகி நிற்கச் சொன்னதில் பிரச்னை ஏற்பட்டு வாய் சண்டையில் முடிந்தது. ஒரு எறும்பு மற்ற எறும்புகளிடம் சொன்னது,"விடுடா..நாம நாலு பேர்..அவன் ஒத்தை ஆளு...இது நியாயமில்லை..பிழைச்சிப் போகட்டும்...


செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

எஸ் எம் எஸ் ஆபத்துக்கள்.


என்னுடைய இரண்டு அலைபேசி எண்களுக்கு, ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து எஸ் எம் எஸ், அதிகபட்சம் இருபது எஸ் எம் எஸ் என்கிற எண்ணிக்கையில் குறுஞ்செய்திகள் வந்து குவிகின்றன. இந்தக் குறுஞ்செய்திகளில் அரும் செய்திகள் என்று பார்த்தால், ஒரு வாரத்தில் மூன்றோ நான்கோ தேறலாம். மற்றவை உபயோகமில்லாத செய்திகள்.  சில குறுஞ்செய்திகள் நாம் எப்பொழுதோ வெப் சைட்டில் பதிந்துகொண்டதால் வருபவை. அவைகளுக்கு எஸ் எஸ் எஸ் என்று பெயர் இடலாம் (சொந்த செலவில் சூனியம்)  
என் உறவினர் ஒருவர் தவறாமல் (அவர்) விழித்திருக்கும் நேரங்களில் இரண்டு மணிக்கு ஒரு எஸ் எம் எஸ் என்று அனுப்புவார். எஸ் எம் எஸ் செய்திகளை, பொதுவாக கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்.  

# காதல் நட்பு - இவற்றின் மேன்மை உயர்வு குறித்து.
# புதிர்க் கேள்விகள்.
# புதிர்க் கணக்குகள்.
# பொது அறிவுத் துகள்கள்.
# ஜோக்குகள். (A + B + C)
# அறிஞர்கள் அன்று கூறியவை.
# நடப்பு செய்திகள்.
சில எஸ் எம் எஸ் மிகவும் பயனுள்ளவை - என் தம்பியிடமிருந்து முன்பு ஒருநாள் வாட்ச் என் டி டி வி என்று எஸ் எம் எஸ் வந்தது. அப்பொழுதுதான் நான் உடனே டீ வி பார்த்து, மும்பை தாக்குதல் தொடர்பான நேரடி கவரஜே பார்த்தேன். சில சமயங்களில் முக்கியமான இசை நிகழ்ச்சி டி வி இல் ஒளிபரப்பாகும்போது கூட, சகோதரர் எஸ் எம் எஸ் அனுப்பியது உண்டு. 


நான் எஸ் எம் எஸ் அனுப்பியது என்று பார்த்தால் ஒரு மாதத்தில் ஒன்று இருந்தால் அதிகம். ஆனால் யாஹூ மெசெஞ்சரில் உள்ள எஸ் எம் எஸ் அனுப்பும் வசதியை அடிக்கடிப் பயன்படுத்திக்கொள்வேன். 


ஒருமுறை எனக்கு எஸ் எம் எஸ் செய்த உறவினரை, தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர் அனுப்பிய குறுஞ்செய்தி குறித்து பேச ஆரம்பித்தேன். அவர் அப்படியா, அப்படியா எனத் தொடர்ந்து ஆச்சரியமாக விசாரித்துவிட்டு, இறுதியில் ஓர் உண்மையைக் கூறினார். அவருக்கு வேறு யாரோ அனுப்பிய செய்தியாம். அதைப் படித்துவிட்டு ஒன்றும் புரியாததால் (அந்த உறவினருக்கு ஆங்கிலம் கொஞ்சம் அரைகுறை) அதை வழக்கம்போல் எல்லோருக்கும் பார்வார்ட் பண்ணினாராம்.


உபயோகமில்லாத செய்திகளை அனுப்புபவர்களை நான் வேண்டிக்கொள்வதெல்லாம் காசு செலவழித்து எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பாதீர்கள். அதற்கு பதில்  எல்லோரும், அதற்காகும் செலவை, ஓர் உண்டியலில் போட்டு வைத்திருங்கள். என்னை எப்பொழுதாவது நேரில் பார்க்கும்பொழுது, சேர்த்துவைத்திருக்கும் பைசாவை என்னிடம் காட்டுங்கள். நான் மேற்கொண்டு அதே அளவுக்கு பைசா உங்களுக்குக் கொடுக்கிறேன். இவ்வாறு செய்வதால், அனாவசியமாக ஏதோ ஒரு செல் கம்பெனி சம்பாதிக்கின்ற பைசா, உங்க நேரம், என்னுடைய நேரம் எல்லாமே நிறைய மிச்சமாகும்.  மேலும் எஸ் எம் எஸ் அனுப்பியே ஆகவேண்டும் என்னும் உந்துதல் உள்ளவர்கள் இரண்டு மொபைல் போன் வாங்கி வைத்துக்கொண்டு - இதிலிருந்து அதற்கும், அதிலிருந்து இதற்கும் மாற்றி மாற்றி எஸ் எம் எஸ் அனுப்பி - அதைப் படித்து ஆனந்தம் அடையலாம் என்றும் எனக்குத் தோன்றுகிறது.


நம் வாசகர்கள் எல்லோருக்கும் ஒரு செய்தி சொல்கின்றேன். ஒருவர் நேற்று எனக்கு அனுப்பியிருந்த செய்தி ஒன்றில், தெருவில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் யாரையாவது பார்த்தால், உடனே ------- என்ற செல்லுக்கு சொல்லுங்கள். அவர்கள் அந்த சிறுவரின் படிப்புக்கு ஏற்பாடு செய்வார்கள். என்று இருந்தது. சும்மா இதைப் பற்றி கொஞ்சம் கூகிளிட்டுப் பார்ப்போமே என்று பார்க்கும் பொழுது, இந்த செல் எண்ணை தொடர்பு கொள்ளச் சொல்லி - ஒரு பிரபல இரண்டாம் கட்ட நடிகரின் இரசிகர் என்று கூறிக்கொண்டு, ஒருவர் இரண்டாயிரத்து ஏழாம் வருடம் - அந்த நடிகரின் இரசிகர் மன்ற பெயர் கொண்ட டாட் காம் வலைப் பதிவில் தன பெயரைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அந்த எண்ணைத் தொடர்புகொண்டு எதுவும் விசாரிக்க முடியவில்லை. வேறு எங்கோ ரி-டைரக்ட் ஆகிறது. இதில் மேற்கொண்டு மர்மங்கள் ஏதாவது இருக்குமா அல்லது இருக்காதா என்று தெரியவில்லை. பெயர் குறிப்பிடாமல், ஏதாவது செல் எண் மட்டும் குறிப்பிடப்பட்டு வருகின்ற எண்களை யாரும் தொடர்புகொள்ளாமல் இருப்பது (குறிப்பாக பெண்கள்) மிகவும் நல்லது. 


சென்ற வருடம் எனக்கு வந்த போலீஸ் கமிசனர் ஆபீஸ் எஸ் எம் எஸ் ஒன்று, சென்னை நகர போலீஸ் மொபைல் எண் 9500099100 என்பதைத் தொடர்புகொண்டு புகார் எதுவும் கொடுக்கலாம் என்று கூறியிருந்தது. நமக்குத் தெரிந்த யாராவது இந்த எண்ணைப் பயன்படுத்தி இருப்பார்களா என்று அறிய ஆவலாக உள்ளது.


 இறுதியாக நான் கூறுவது இவைகள்தாம்:
$ அனாவசிய எஸ் எம் எஸ் யாருக்கும் அனுப்பாதீர்கள். நேரமும், செலவும் மிச்சமாகும்.
$ பெயர் இல்லாத செல் எண் மட்டும் எங்கேயாவது பார்த்தால் அதைத் தொடர்பு கொள்ளாதீர்கள்.
$ உள்ளூர் போலீஸ் மொபைல் எண் எப்பொழுதும் கை(பேசி) வசம் வைத்திருங்கள். 
$ பெண்கள் உங்கள் கைபேசி எண்ணை, யாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் கொடுக்காதீர்கள். 


முடிக்கும்  முன்பு வாசகர்களுக்கு ஒரு பொது அறிவு கேள்வியோடு முடிக்கிறேன். பெரும்பாலான அலை பேசிகளில், குறுஞ்செய்தி வரும்பொழுது, கீழ்க்கண்டவகையில் சத்தம் (டிஃபால்ட்) செட்டிங் இருக்கும்.
மூன்று குறுகிய சத்தம் (பிப் பிப் பிப்)
இரண்டு நீண்ட சத்தம் (பீப் பீப்)
திரும்பவும் மூன்று குறுகிய சத்தம் (பிப் பிப் பிப்)
இப்படி கேட்கும் : " பிப் பிப் பிப் --- பீப் பீப் --- பிப் பிப் பிப்."
இதன் விளக்கம் என்ன? யாருக்காவது தெரியுமா? 

திங்கள், 22 பிப்ரவரி, 2010

பெயரை சொல்லுங்க...

எனக்கு வந்த எஸ் எம் எஸ் - உங்களுக்கும் பொருந்தியிருக்கான்னு பாத்து சொல்லுங்க.  
உங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதினால், (இனிஷியல் கணக்கில் வராது) பெயரின் முதல் ஆங்கில எழுத்து என்னவோ அதைக் கொண்டு உங்கள் பற்றி சிறு ஜோஸ்யம்.

A. Gifted ( திராணி படைத்தவர், வரசக்தி வாய்த்தவர், வரப்ரசாதி, பல வகைகளில்.) (அப்பிடியா துரை?)
B. எல்லோராலும் நேசிக்கப்படுபவர். 
C. அப்பாவி, வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கமாட்டார்.
D. எதையும் பார்த்தால் கேட்டால், அதை அப்படியே செய்து காட்டக் கூடியவர்.
E. ரோஜாப்பூ - முள்ளும் சேர்ந்து இருக்கிறது - ஜாக்கிரதை.
F. மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பவர்.
G. எதையும் அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர். கற்பனா சக்தி அதிகம்.
H. நிச்சலனமாக இருப்பார்; ஆழமானவர். ( அப்படியா ஹேமா?)
I.  மற்றவர்களின் மரியாதைக்குரியவர்.
J. செய்யும் செயல் எல்லாவற்றிலும் நேர்த்தியாக, சிறப்பாக செய்து, வாழ்க்கையை அனுபவிப்பவர். 
K.  வித்தையும் இருக்கு, கர்வமும் இருக்கு. கோபம் அதிகம். (கிருஷ் சார் ?)
L.  கோபம் அதிகம். துணைவர், துணைவி மீது பிரியம் கொண்டவர்.
M. மிகவும் உயர்ந்த மனிதர். நல்லெண்ணங்கள் அதிகம். எதையும் எதிர் கோணத்தில் சிந்திப்பவர்.  (மாதவன்?)
N. கர்வம் உண்டு, அதற்கேற்ற செயல் திறனும் உண்டு.
O. எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ளமாட்டார். எல்லோரையும் அனுசரித்துச் செல்பவர். 
P. புன்னகை மன்னர் + மன்னி. 
Q. எதற்குமே அலட்டிக்கொள்ளமாட்டார். 
R. எந்த நேரத்தில் என்ன செய்வார் அல்லது என்ன சொல்வார் என்று யாருக்குமே தெரியாது (அவர் உள்பட) 
S. புத்திசாலி - ஐ கியூ டெஸ்டில் முதல் ரேங்க் - ஆனா சில சமயங்கள்ல மத்தவங்க இவர் வாயில கடிபடுவாங்க. (இந்த எழுத்துல பெயர் ஆரம்பிக்கறவர்கள் அதிகம் - டெலிபோன் டைரக்டரி பார்த்தால் தெரியும். அவங்களே கூட ஒருத்தரை ஒருத்தர் கடிச்சிக்கக் கூடும்.)
T. உதவுபவர்கள், உண்மையானவர்கள்.
U. அனாவசியக் கோட்டை கட்டமாட்டார். நடைமுறை வழிகளைச் சிந்தித்துச் செயல் ஆற்றுபவர்.
V. எல்லோருக்குமே நண்பர். அதனால் - எதிரிகள் குறைவு.
W. "அப்படியா? - அடாடா! - சரி போனால் போகட்டும் - அடுத்தது என்ன?" - இவை இவர் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். (Take it easy.)
X. மற்றவர்களை, அன்பாக, அனுசரணையாக பார்த்துக்கொள்வர். (Caring)
Y.எப்பொழுதும் புன்னகையோடு இருப்பார்கள். ஆனா இளிச்சவாயர்கள் அல்ல.
Z. இவரைச் சுற்றி எப்பொழுதுமே ஒரு சிறு கூட்டம் இருக்கும் இவர் அடிக்கும் ஜோக்குகளைக் கேட்டுச் சிரித்தவண்ணம்.

சனி, 20 பிப்ரவரி, 2010

நீங்க நீதிபதி ஆனால்?

கடுமையான கட்டு திட்டம் கொண்ட ஒரு ரஷியக் கம்பெனியில் தினசரி ஒருவன் வண்டியில் வைக்கோல் எடுத்துச் செல்வதைப் பார்த்த காவலாளி "எதற்கு இந்த குப்பையை தினசரி கொண்டு போகிறாய்?" என்று கேட்டதற்கு அவன், "நான் தினம் கொண்டு போவது குப்பையை அல்ல, புதுப் புது வண்டியை " என்றானாம். இப்போது ஆடோமேஷன் அதிகமாகி விட்ட கால கட்டத்தில் இப்படிக்கூட சிரமப் பட வேண்டியது இல்லை. கம்ப்யூட்டர் புரோகிராமில் ஒரு சிறு வரியை சேர்த்தால் போதும். பணம் யாருக்குக் கொடுத்தாலும் இந்த கணக்குக்கு லட்சத்துக்கு ஒரு பைசா செலுத்து என்று ஒரு ஆணை. லட்சத்தில் ஒரு பைசா மிக அற்பத் தொகை எனவே சரிபார்க்கும் இயந்திரங்கள் கண்டுகொள்ளாது. பல துளி சிறு வெள்ளம். பல வெள்ளம் பெரும் பிரவாகம். மனித உற்று நோக்கலை இயந்திரங்கள் செய்ய முற்படும்போது இந்த மாதிரி தகிடு தத்தங்கள் எளிதாகி விடுகின்றன. இன்றைக்கும் பெரிய நிறுவனங்கள் ஹாக்கிங் நிபுணர்களை அமர்த்திக் கொண்டு தம் மென்பொருள்களை சரி பார்க்கிறதாகச் சொல்கிறார்கள்.

ஒரு பிரபல ஐடி கம்பெனியில், தனி நபர் ஒருவர் - கம்பெனிப் பணத்தை, கோடிக்கணக்கில் - தன் கணக்குக்கு டிரான்ஸ்பர் செய்து மூன்றாண்டுகளாககம்பெனியை ஏமாற்றி வந்துள்ளார் என்ற செய்தி மிக்க வியப்பை அளிக்கிறது. ஆயிரம் இரண்டாயிரம் என்றால் கண்ணுக்குத் தெரியாமல் போகலாம். கடல் அளவு புழங்கும் பெருந்தொகைகளில் ஒதுக்கப்படும் சிறு தொகைகள் களவு போவது கண்டுபிடிக்கக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் கோடிக் கணக்கில், ஒரு தனி நபர், தொடர்ந்து செய்கிறார் என்றால் -- இது எப்படி அய்யா சாத்தியம்? இன்டெர்னல் ஆடிட், எக்ஸ்டெர்னல்ஆடிட் - இவர்களெல்லாம் எதற்குத்தான் இருக்கவேண்டும்? அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் -இது தனி நபர் செய்த தகிடுதத்தம் என்று அறிக்கை வெளியிடுகிறார்கள்

இதே நேரத்தில், அமெரிக்காவில் வசித்து வந்த ஒருவர், தன்னால் வரிகட்ட இயலவில்லை, பண நெருக்கடி என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டுக்குத் தீ வைத்துவிட்டுப் பின் பிளேனை எடுத்துக்கொண்டு போய் - ஒரு ஏழு மாடிக் கட்டிடத்தின் மீது மோதி - அந்தக் கட்டிடத்தையே எரித்துத் தரைமட்டமாக்கி தானும் தற்கொலை செய்துகொண்டு உயிரைவிடுகிறார். மனித இனம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

சுயநலம், ஏமாற்றிப் பணம் சேர்ப்பது, தனக்குப் பணக்கஷ்டம் என்றால் பொதுச் சொத்துகளுக்கு நாசம் விளைவிப்பது - இதுமாதிரியான விபரீத சிந்தனைகளுக்கு என்ன காரணம்? இதை சட்டம் மட்டும் சரி செய்ய இயலுமா?

இப்போதெல்லாம் எப்படியோ தெரியவில்லை. ஆனால் அந்தக் காலத்தில், ஒரு பிரபலதனியார் கம்பெனியில் மெடிகல் பில்லில், நாற்பத்தொன்று ரூபாய் என்பதை நாற்பத்தொன்பது ரூபாயாகவோ அல்லது வேறு ஏதோ ஒரு அற்ப தொகையாக மாற்றம் செய்த ஒருவர் மறுநாளே வீட்டுக்கு அனுப்பப் பட்டார். இந்த வகையில் கடுமையான தண்டனைகள் இருந்தால் தான், தனிநபர் ஒழுக்கம், நியாய உணர்வுகள் எல்லோரிடமும் தலை எடுக்கும்.


மீண்டும் ஒரு கதைக்கு வருவோம். ஒரு அரசன் காட்டில் வேட்டையாடச் செல்லும் போது தாகம் எடுத்தது. மந்திரியுடன் பக்கத்தில் ஒரு வீட்டுக்குச் சென்று மோர் வாங்கிக் குடித்து விட்டு அதற்கு ஒரு காசு விலையாகத் தந்தானாம். " மகா ராஜா, உங்களுக்கு ஒரு குவளை மோர் காசு கொடுக்காமல் வாங்கிக் கொள்ள அதிகாரம் இல்லையா " என்று அமைச்சர் கேட்ட போது அரசர், " இன்று நான் காசு கொடுக்காமல் மோர் வாங்கிக் குடித்தால் நாளை என் அதிகாரிகள் இந்த ஊரையே சுருட்டிக் கொண்டு விடுவார்கள் " என்றாராம். இவர் அல்லவோ அரசர்! இது அல்லவோ நல்லாட்சி!!

ஆனால் இன்று நடப்பதென்ன? பெரிய பெரிய தலைகள் கொலை, கொள்ளை எல்லாம் செய்து விட்டு சட்ட ரீதியாக நிரூபிக்க முடியாத ஒரே காரணத்துக்காக வெளியில் உலவுவது மட்டும் அல்லாமல் மேலும் மேலும் கோடிகளை ஒதுக்கிக் கொள்கிறார்கள். அவர்களது அரசியல் ஆதரவு அவசியமாதலால் அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் அவர்களை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டியதாகிறது. இவ்வகையில் குற்றம் இழைப்பவர்களை, படத்துடன் அவர்கள் கொள்ளை அடித்த பணத்தின் மதிப்பு உட்பட -எல்லா மீடியாக்களிலும் வெளியிடவேண்டும். அது எப்படி சாத்தியம் ஆகும்? இன்றைய நிலை அதற்கு சாதகமாக இல்லையே!

சட்டங்கள் கடுமையாக்கப் படும்போது சாதாரண இருபது ரூபாய் லஞ்சக் கேஸ்கள் பிடிபடுகின்றன. பிடிப்பவர் வாரம் இரண்டு லட்சம் சம்பாதிக்கும் முதலையாகக் கூட இருக்கக் கூடும். அதற்கும் மேலே, மேலே, தினசரி ஐந்து கோடி சுருட்டும் பெருந்தலைகள் இருக்கக் கூடும். இந்த அவலத்தை எப்படி எதிர் கொள்ளலாம், குற்றம் புரிவோருக்கு வேறு என்னென்ன தண்டனைகள் அளிக்கலாம்? வாசகர்கள் தீர்ப்பு கொடுங்கள்.