காலையும் இரவும் அந்த ஹெவி ஆண்டிபயாட்டிக் ஊசியுடன் தேவையில்லாமல் தலைவலிக்கு என்று சொல்லிக்கொண்டு பாராசிட்டமால், பாண்ட்டாப்ரஸோல் இணைந்து கொடுத்தார்கள். தலைவலியோ, ஜுரமோ உடம்பு வலியோ இல்லை என்பதைச் சொல்லி பாராசிட்டமாலை மட்டும் முதல் டோஸுக்கு அப்புறம் வேண்டாம் என்று நிறுத்தினேன். கொஞ்சம் ஹெவி ஆண்டிபயாட்டிக் என்பதால் பான்ட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
பெரியவன் கல்யாணத்துக்கு முன் ஓயாத இருமல் என்று உள்ளூர் க்ளினிக் சென்றபோது அங்கும் ஐவி ஊசி பரிந்துரைக்கப்பட்டது. இதே மூன்று நாட்கள். ஆனால் அங்கிருந்த மருத்துவர் உட்பட யாருக்கும் என் கையில் சரியான நரம்பைக் கண்டுபிடித்து மூன்று நாட்களுக்கும் இருக்கும்படியான வென்ஃபிளான் போடத்தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் புதிதாகக் குத்தித் துன்புறுத்தினார்கள். இதனால், தப்புதான் என்றாலும், அப்போது நான் ஆறு ஊசி போடுமிடத்தில் இரண்டோடு நிறுத்திக் கொண்டேன்!
நல்லவேளையாக இங்கு அப்படி இல்லாமல் சரியாகவே பொருத்தி வைத்தாலும் அதுவும் ஏகப்பட்ட பிரச்னைகள் செய்ததுதான். ட்ரிப் சரியாகபாவே ஏறாமல் சண்டி செய்யும். கைமாற்றி போடுவார்கள். இம்சை. அதோடு முக்கால் மணி என்றதில் முடியவேண்டிய அந்த ட்ரிப்ஸ் போய்க்கொண்டே இருக்கும். பார்த்தால் மிக ஸ்லோ ஆகி இருக்கும், அல்லது நின்று போயிருக்கும்.
எவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியிராயிருந்தால் என்ன, அழைத்த உடன் எந்த செவிலியரும் உடனே வருவதில்லை. ட்ரிப் முடிந்து விட்டது என்று சொன்னாலும் தாமதமாகத்தான் வருவார்கள். முதல் முறை நானே எடுத்து விட்டேன். வந்து பார்த்த நர்ஸ் "அப்படியெல்லாம் எடுக்கக் கூடாது. எங்களை கூப்பிடுங்கள். கொஞ்சம் முன்ன பின்னே இருந்தாலும் நாங்கள் வந்துதான் எடுக்க வேண்டும். ரூல்ஸ். எங்களுக்கும் வேறு வேலைகளும் இருக்கும் அல்லவா" என்று அறிவுறுத்திச் சென்றார். அப்புறம் என்ன, அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் தலைக்கு கீழே இன்னொரு கையை வைத்துக் கொண்டு தேவுடு காத்துக் கொண்டிருப்பேன்!
சிறு சிறு விஷயங்களில் நான் ஸ்ட்ரைக் செய்தாலும், பொதுவாக என் பேச்சை அவர்கள் எல்லோரும் ரசித்தார்கள். ஒருவரிடம் பேசும்போது இன்னும் ஒருவரும் வந்து நின்று பேச்சைக் கேட்டார்கள். ஆக நான் சொல்ல வருவது என்னவென்றால் அவர்களுக்கு எதிரியாயில்லை! நான் ஒரு VIP இல்லை... அதாவது Very Irritating Person இல்லை!
இருங்கள். .. அவர்கள் சொன்னதை கீழே தருகிறேன்...
"அப்பா சுவாரஸ்யமா பேசறாரு.. என்னென்னமோ சொல்றாரு.. ஜோக்கா பேசறாரு... "
பொதுவாக முன்னர் அங்கிருந்த ஹோட்டல் கான்ட்ராக்ட்டும் நன்றாய் இருந்தது. இப்போது இருக்கும் கான்ட்ராக்டும் நன்றாகவே இருக்கிறது. ஒரே ஒரு சிரமம் இரண்டாம் நாளிலிருந்து ஏற்பட்டது. டெல்லியிலிருந்து ISO தரச்சான்றிதழ் தர வர இருப்பதால் எல்லா இடமும் குறிப்புக்கள் ஒட்டப்பட்டு, துடைக்கப்பட்டு என்று விதம் ஷோ பிசினஸ் தயாராகிக் கொண்டிருக்க,இரண்டாம் மாடியிலிருந்து கிளை உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டு ஒரு தாற்காலிகச் சுவரால் மறைக்கப்பட்டது. எனவே நாங்கள் ஐந்து மாடி - லிஃப்ட்டில்தான் - இறங்கி மெயின் பிராஞ்சுக்கு செல்ல வேண்டி இருந்ததது உணவு வாங்கி வர.
ஏற்கனவே சொன்னபடி அறையிலேயே வந்து ஆர்டர் எடுப்பவரும் உண்டு. திடீரென நினைத்துக் கொண்டாலும் போன் செய்து உணவு சூப், காபி ஆர்டர் செய்ய முடியும்.
தப்பித்தவறி கூட நாம் கொடுக்கும் பிஸ்கட், பழம் என்று எதையுமே வாங்க மாட்டார்கள் செவிலியர்கள். பிடிவாதமாக மறுத்து விடுவார்கள். அவர்களில் மாணவ செவிலியர்களும் உண்டு என்று அறியவும்!
பெரிய தனியறை என்ன, ஆக்சிஜன் கொடுக்க தயாராய் முஸ்தீபுகள், இன்னும் பெரிய பெரிய சுருள் குழாய்கள் என்றெல்லாம் தலைமாட்டில் பொருத்தப்பட்டு அட்டாச்ட் பாத்ரூமுடன் அட்டகாசமாக அறை. BED தலைமாட்டில் உயரமாக்கிக் கொள்ளும் வசதியுடன் இருந்தது. இன்னொரு எரிச்சலூட்டும் ரூல் இருந்தது.
கட்டிலின் இருபுறமும் கீழே விழாதிருக்க இருக்கும் தடுப்புகள் இருந்தன என்பது மட்டுமில்லை, அதை மாட்டி மாட்டி விடுவார்கள். அதை நாங்கள் - நான் - இறக்கி விட்டாலும், உள்ளே வரும் நர்ஸ் அதை மறுபடியும் மேலேற்றி விட்டு விடுவார். 'அப்படி எல்லாம் கீழே விழ மாட்டேன்மா... இதைவிட சிறிய கட்டிலிலே படுத்திருக்கிறேன்' என்று சொன்னாலும் புன்னகையுடன் வரும் ஒரே பதில், "ரூல்ஸ்"
இந்த சிகிச்சையின் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்து விட்டேன். அது....
========================================================================================
எம்.ஆர். ராதா பேசுகிறார்!
1971ம் ஆண்டு மே1ந் தேதி, ஏறக்குறைய ஐந்தாண்டு காலம் வெறிச்சோடிக் கிடந்த சென்னை தேனாம்பேட்டை போயிஸ் ரோட் வீடு கலியாண வீடுபோல் 'கலகல' வென்று காட்சியளிக்கிறது.
வெளியே பல கார்கள் நிற்கின்றன. சில கார்கள் வருவதும் போவதுமாயிருக்கின்றன. ஆணும் பெண்ணுமாக மக்கள் அங்கங்கே சிறு சிறு கூட்டமாக நின்று, மாடியைப் பார்ப்பதும், தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்வதுமாக இருக்கிறார்கள்.
மேலேயும் கீழேயுமாகச் சிலர் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து நானும் போகிறேன். ராதாவின் குரல் ஒலிக்கிறது:
"என்னைப் பார்க்கவா இத்தனை பேரு? நான் என்ன, ராஜாஜியைப் போல, பெரியாரைப் போல, காமராஜைப் போல பெரிய மேதையா ? சாதாரண நடிகன்தானே? என்னைப் பார்க்க ஏன் இப்படி விழுந்தடிச்சிக்கினு வர்றீங்க?... சரி, பார்த்தாச்சா ?... போங்க மாலை வேறே கொண்டாந்து இருக்கீங்களா?... ஐயோ, ஐயோ சரிசரி, போடுங்க... போட்டாச்சா?... போயிட்டு வாங்க!" ... ...
ராதாவின் குரலா இது, இத்தனை சன்னமாயிருக்கிறதே'...
வியப்பு அடங்கு முன் இன்னொரு குரல் கேட்கிறது: "உங்கள் குரல் முன்னைப் போல்..."
"அஞ்சு வருஷமாப் பேசாம இருந்த குரல் இல்லையா? அப்படித்தான் இருக்கும்; கொஞ்சம் கட்டினாச் சரியாயிடும்!" என்கிறார் ராதா.
மேலே செல்கிறேன். ராதா தம் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். "உங்கள் உறவினர்களோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது; நான் டிஸ்டர்ப் செய்ய வந்துவிட்டேனோ?" என்கிறேன்.
ராதா சிரிக்கிறார்.
அப்போது அவர் மகன் வாசு வருகிறார். அவரைப் பார்த்ததும், "வாசு உங்களை விட நன்றாக நடிக்கிறார் என்று சினிமா ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்களே ?" என்கிறார் டாக்டர்.
"அதை நான் ஒத்துக்க முடியாது. டி.வி.எஸ்.ஸை எடுத்துக்குங்க; அவருடைய பையனுங்க அந்த ஸ்தாபனத்தை இப்ப பிரமாதமா முன்னுக்குக் கொண்டாந்திருக்காங்க. அதை வெச்சி ஆதியிலே அதுக்குக் காரணமாயிருந்த டி.வி.எஸ். திறமையிலே குறைஞ்சவருன்னு சொல்லி விட முடியுமா?" என்கிறார் ராதா.
"அது எப்படிச் சொல்ல முடியும்?" என்கிறேன் நான்.
சக பத்திரிகையாளர் ஒருவர், "உங்கள் மனைவியைக் கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? அவரை ஒரு படம் எடுத்துக் கொள்கிறேன்", என்கிறார் வினயத்துடன்.
"என் மனைவியை எதுக்குக் கூப்பிடறது ? நான் மட்டும் பார்க்கத் தான் அவ இருக்கா; நீங்களும் உங்க பேப்பரைப் படிக்கிறவங்களும் பார்க்க அவ இல்லே!" என்று ராதா 'பட்'டென்று பதிலளிக்கிறார்.
"ஜெயில்லே..." என்று நான் மெல்ல ஆரம்பிக்கிறேன்.
ராதா குறுக்கிட்டுச் சொல்கிறார்:
சொன்னபடி அவர், 'கதிரு'க்காக வாரா வாரம் என்னிடம் சொல்லிக் கொண்டு வந்தார்.
***********
- 1971-ல் 'தினமணிகதிரி'ல் நடிகவேள். எம்.ஆர். இராதா வைப் பேட்டி கண்டு அமரர். விந்தனா'ல் தொடராக எழுதப் பட்ட இந்நூல் -
இதன் தொடர்ச்சி நாளை....
==========================================================================================
AVM நிறுவனத்துக்காக பாக்கியராஜ் செய்த படம். முதலில் இந்தப் படத்துக்கு கங்கை அமரன்தான் இசை அமைப்பதாக இருந்தது. AVM விருப்பthதுக்கிணங்க, கங்கை அமரனும் சம்மதிக்க, முதலில் மறுத்தாலும், அவர் சிபாரிசுடனேயே இளையராஜா இசை அமைக்க வந்தார். இதில் பல பாடல்கள் ஹிட். விளக்கு வச்ச நேரத்திலே பாடல் பதிவில் நடந்த சுவாரஸ்யத்தை பாக்யராஜ் பகிர்ந்திருந்தார். இளையராஜா அந்தப் பாடலில் சில இடங்களில் ஆபாசமாக இருக்கிறது என்று வார்த்தைகளுக்கு பதிலாக தந்தானானா என்றும் தரனானானா என்றும் பாட, பாக்யராஜ் சொன்ன வார்த்தைகளை விட மறைபொருளாக வரும் இந்த சந்தம் இன்னும் எஃபெக்டிவாக இருக்கும் என்று பாக்யராஜ் விட்டு விட்டாராம்.
இன்று அந்தப் படத்திலிருந்து ஒரு பாடல்.. சின்னஞ்சிறு கிளியே .. முத்துலிங்கம் பாடல். ------------------------------- ராகத்தின் அடிப்படையில் இளையராஜா போட்டிருக்கும் பாடல். உணர்வுகளை சுண்டி இழுக்கும் பாடல். காட்சியில் ஊர்வசியுடன் பாக்யராஜ்.
===============================================================================
சென்னை மக்களைப்
பார்க்கும் ஆவல்
மழையை விட
வெயிலுக்குத்தான்
அதிகம் இருக்கிறது.
மழை வெல்லும்
தருணங்களும் உண்டு.
ஆனால்
மயங்கிச் சாரல்
மெல்ல வெளிப்படும் தருணம்
மடக்கித் தள்ளிச்
சென்று விடுகிறது காற்று.
மண் நனையும் முன்
காணாமல் போய்விடுகிறது
மழை மேகம்,
தேர்தல் முடிந்ததும்
தொகுதியிலிருந்து காணாமல் போகும்
வேட்பாளரைப்போல! - 2015
==========================================================================================
துரத்துகிறர் துரைக்கண்ணு!
சித்ராலயா கோபு
"உத்தரவின்றி உள்ளே "சுமதி என் சுந்தரி," ஆகிய சித்ராலயா தமிழ் இந்திப் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து கொண்டிகுந்த நேரம்.
வீட்டுத் தொல்லைகளை நான் காதில் போட்டுக் கொள்ளாமல் இருந்ததற்கு ஒரு நல்ல சீசன் என்று கூடச் சொல்லலாம். நான் காலையில் வீட்டை விட்டுச் சீக்கிரமாகவே சென்று, இரவு லேட்டாக வருவது அப்போது சகஜமாகி விட்டது.
ஒருநாள் கார் என்னை ஸ்டூ டியோலிற்கு அழைத்துச் செல்லக் காலை 2, 30க்குள் வந்து விடுமே என்று அவசர அவசரமாகத் தயாரானேன். ஹாலுக்கு வந்ததும், என் மனைவியின் தூரத்து உறவினரான பெரியவர் ஒருவரும் வேலுவும், அவரைச் சுற்றிக் குடும்பத்தின் முக்கால் பகுதியும் அங்கு குழுமியிருப்பதைக் கண்டேன். என் மைத்துன சிகாமணி, "ஒரு நிமிடம்," என்று என்னை நிறுத்தி, வந்திருந்த பெரியவரிடம். "இவர்தான் கோபு." என்றான்.
பெரியவர் "யார்?" என்று கேட்பது போல் முகத்தை முன்னால் கொண்டு வந்தார். மைத்துனன் தொடர்ந்து, "இவர் தான் என் பிரதர் இன்லா, சினிமாப் படங்களுக்கு வசனமெழுதுகிறார்." என்றான்.
மறுபடியும் பெரியவர் கேள்விக் குறியுடன், "புரியவில்லை." என்றார்.
மைத்துனன். "இந்த கலாட்டா கல்யாணம் படத்திற்கு இவர்தான் வசனம், " என்றான்.
"கல்யாணத்துலே கலாட்டாவா. யார் கல்யாணத்துல?" என்றார் அவர். என் மேல் எனக்கே பரிதாப உணர்ச்சி பிறந்தது. மானம் வெட்கத்தைக் இந்த காலத்தில் பார்த் தால் முடியுமா?
"இந்த நில் கவனி காதலி, சாந்தி நிலையம், வீட்டுக்கு வீடு போன்ற படங்களுக்கு வசனம் எழுதி யிருக்கிறேன்." என்றேன் தன்னடக்கத்துடன்.
பெரியவர் முகத்தில் அப்போதும் ஒரு கேள்விக்குறி. மைத்துனன் விடுவதாக இல்லை. கடைசி அஸ்திரத்தை உபயோகித்து எப்படியாவது என்னை அவருக்கு அறிமுகப் படுத்தி விடுவது என்ற நம்பிக்கையில், "சித்ராலயா கேள்விப் பட்டிருக்கிறீர்களா?" என்று ஆரம்பித்ததும் பெரியவர் "எந்த சித்ரா?" என்று கேட்பதற்குள் நான் பொறுமை இழந்து, "சார். நான் ஏதோ ஒரு நல்ல வேலையிலே இருக்கேன்." என்று கடிந்தபடி கூறி, உடனே பெரியவர் என்று உணர்ந்து பொய்ச் சிரிப்போடு. "சாருக்குக் காபி கொடுங்கள்." என்று சொல்லி மாடிக்கு ஓடிவிட முயற்சி செய்தேன்.
வீட்டு மாடிக்கு வாசல் பக்கமாகத்தான் நான் செல்ல வேண்டும் அந்த மாடிப் படியை மறைத்தபடி ஓர் உருவம் நின்று கொண்டிருந்தது. நல்ல பரட்டைத் தலை. .பாவம்! அவ்வளவு முடியை அவர் தலை எப்படித்தான் சுமக்கிறதோ என்ற எண்ணம் எனக்குப் பிறந்தது. பக்கவாட்டில் நல்ல பெரிய கிருதா. கரு கரு மீசை வேறு. என்னையும் அறியாமல் ஒரு பய உணர்ச்சி ஏற்பட்டது. வந்திருந்த அந்த உருவம் "நீ தானே கோபு!" என்றது.
ஹாலுக்குள் என்னை அவமதித்துவிட்ட பெரியவருக்கு இவர் தேவலை என்ற பெருமிதம் எனக்கு ஏற்பட்டபோதிலும் அந்த உருவ அமைப்பு எனக்கு ஓர் அச்சத்தை ஏற்படுத்திய காரணத்தால் ஒரு அரை செகண்ட் யோசித்துவிட்டு, "தான் கோபு இல்லை. அவர் தம்பி. அவர் இப்போதான் அவருடைய ஸ்டூடியோவுக்கு போனார் என்றேன்..
உடனே அவர். "என்ன, நம்மளையே டபாய்க்கிறியே! நான்தான் உன்னைப் போகும்போதும் வரும் போதெல்லாம் கண்டுகிணு வர்ரனே?" என்றார்.
இந்த பிகரிடம் பொய் சொல்லியது தவறு என்று சமாளித்தபடி, "வேடிக்கைக்குச் சொன்னேன் நான்தான் கோபு," என்றேன்..
அவர் "நான் உன்னைப் பார்க்கலாம்னுதான் வந்தேன். நான் தில்லக்கேணி துரைக்கண்ணு," என்றார் அவர். உன்னை, நீ என்று அவர் ஏக வசனத்தில் பேச ஆரம்பித்தவுடன் அவர் மேல் எனக்கிருந்த பயம் அதிகமாகியது.
"நான் அவசரமாகப் புறப்படவேண்டும் கார் வரும் நேரமாகி விட்டது." என்றேன்.
'அப்படியா' என்று துரைக் கண்ணு பாக்கெட்டிலிருந்து எதையோ இழுத்தார். அரைக்கால் கால் கெஜம், அரை கெஜம் ஏதோ துணி வந்தபடி இருந்தது. நாள் உணர்ந்து கொண்டேன். அவருடைய சுச்சிப் என்று. அந்தத் துணியால் முகத்தைத் துடைத்தபடி, "நீ எனக்கு ஒரு சின்ன வேலை செய்ய ணும்," என்றார்.
"என்ன விஷயம்?" என்றேன் நான்.
"ஒண்ணுமில்லே. நீ நம்ம பேட்டை ஆளாருக்கிறியே? நமக்கு ஏன் செய்யக் கூடாதுண்ணுதான் வந்தேன்." என்றார்.
"கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க துரைக்கண்ணு சார்," எனக்கு அவரை துரைக்கண்ணு என்று கூப்பிட ஏனோ பயம். என் அந்தராத்மாவுக்குத்தான் தெரியும்.
உடனே, "நீ ஒண்ணும் செய்யவேணாம், ஸ்டுடியோவுக்கு இட்டு கிட்டுப் போயி இவருதான் துரைக்கண்ணு அப்படின்னு கையைக் காட்டி விடு. மத்ததை நான் பாத்துக்கறேன்.ஆமா." என்றார் ஏதோ யுத்தத்தை எதிர்பார்ப்பவர் போல.
நான் மிரண்டு, "ஸ்டூடியோ பக்கங்களில் உங்களுக்கு யாராவது லிரோதி இருக்காங்களா?** என்று கேட்டேன்.
உடனே துரைக்கண்ணு, "இந்த டமாஸ்லாம் வேணாம். நான் பாயிண்டுக்கு வர்ரேன் .. நான் நடிக்கணும்," என்றார்.
உட்கார்ந்திருந்த நான் அதிர்ச்சியில் எழுந்து நின்றேன். உடனே அவர் "அதுலே என்ன தப்புன்றே?" என்றார்.
நான் சமாளித்தபடி, "நடிப்பதற்கு நேரம் காலம் அதெல்லாம் ' அமையணுங்க," என்று ஆரம்பித்தேன்
கொஞ்சம் கூட அசராமல் துரைக்கண்ணு, "நேரங்காலம் என்ன நம்ம வூட்டுக்கா வந்து கதவைத் தட்டும்? நம்மனாதான் டிபிகல்டியா அதைத்தேடிப் போகணும்," என்று ஆங்கில வார்த்தையை என்னிடம் உபயோகித்த பெருமிதத்தில் சிரித்தார்.
கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஐயப்பஸ்வாமியையும் மனதில் பிரார்த்திக் கொண்டு, அவரிடம், "நடிக்கிறது அவ்வளவு சுலபமில்லிங்க, அதுக்கு அனுபவம் கொஞ்சம் தேவை, என்று நான் முடிப் பதற்குள், துரைக்கண்ணு ரோஷத்துடன், "என்ன அப்படி சொல்லிட்டே? நான் இப்பதான் ஒரு நாடகத்துவே ஆக்ட் கொடுத்துப் பேரு வாங்கியிருக்கிறேன்." என்றார்.
"என்ன நாடகம்?" என்றேன்
உடனே துரைக்கண்ணு "பாராங்கல்லில் படுகொலை" என்றார். எனக்குச் சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது.
துரைக்கண்ணு ஆர்வத்துடன் "அந்த நாடகம் முடிந்தவுடன் நம்ம சோடாக்கடை கமலக்கண்ணன் கைத்தறி துணி போத்தினாரு எனக்கு," என்றார். 'நம்ம சோடாக் கடை' என்று குறிப்பிட்டு அந்தக் கமலக்கண்ணணையும் என் சிநேகிதராக்கி விட்டாரே இந்த துரைக்கண்ணு என்று அவரைப் பரிதாபத்துடன் பார்த்தேன். இடைவெளி தராமல் துரைக்கண்ணு, ''உன்னைக் கூட அன்னிக்கு நாடகத்துக்குக் கூப்பிடலாம்னு பார்த்தேன்,' என்றார்.
உடனே நான் மதிப்புடன் "பம்பாய் கிம்பாய் சென்றிருப்பேன்." என்றேன்.
"இல்லே. இல்லே. அண்ணிக்கி பீச்லே சீதரோடு கார்லே போயிட்டிருந்தே. கையைக் காட்டினேன். கார் நிக்கல்லே.என்ன. அந்த சீதரு அப்படி ஸ்பீடா உடறாரு வண்டியை? என்றார் துரைக்கண்ணு.
நான் சாவதானமாக "அவரு சொன்னா கேக்க மாட்டாருங்க. எப்பவும் அப்படித்தான்," என்று கூறி ''எனக்குத் தெரிஞ்சிருந்தா நாடகத்துக்கு வந் திருப்பேனே?" என்று பேச்சை மாற்ற ஆரம்பித்தேன்.
துரைக்கண்ணு உடனே, "நீ கவலைப்படாதே. அடுத்த வாரம் சூளைமேட்லே ராத்திரி 10 மணிக்கு நாடகம் வச்சிருக்கறேன், நீ கண்டிப்பா வர்ரே," என்றார்.
நான் ரொம்ப அக்கறையுடன், "பாராங்கல்லில் படுகொலை நாடகம் தானே?" என்றேன்.
துரைக்கண்ணு புதிய ஆர்வத்துடன் "இது வேறே கதை. தலைப்பு வந்து 'வராவிட்டால் கொலை" என்றார்.
சற்றும் தயங்காமல், ''நான் கண்டிப்பா வந்து விடுகிறேன்." என்று கூறிவிட்டு, அவரிடம் கெஞ்சும் பாணியில் "உங்கள் நாடகத் தலைப்பில் எல்லாம் கொலை என்ற வார்த்தை வரவேண்டும் என்று ஏதாவது செண்டிமெண்டா?" என்றேன்.
துரைக்கண்ணு, "நான் எல்லா ஆக்டும் கொடுப்பேன். ஆனா என்கூட இருக்கிறணுங்க பாரு. பயலுங்க, அவங்க எங்கிட்டே பயங்கரமான ஆக்டைத்தான் எதிர்பார்க்கணுங்க."
சரி, சரி. இவர் கூட இவரது பயல்கள் வேறெயா?" என்று சிலிர்த்தது, மெல்ல "அடுத்த வாரம் வாங்களேன்." என்றேன்.
"மறந்துடாதே.அடுத்த வாரம் நம்ம நாடகம். நீ மேடைக்கு வந்து என்னைப்பத்தி பேசறே," என்றார் துரைக்கண்ணு,
அழாத குறையாக, "துரைகண்ணு சார், நான் எழுதுவேன் கொள்ளுவேன். மேடையிலே பேச வராது." என்றேன்
.
நீ என்ன நீ! கண்டவனும் பேசறான். ஏன் நானே பேசறேன். ஒரு சமயம் தலைவரையே வாரிட்டனே, உனக்கு என்ன? நான் இருக்கிறேன். பேசிடு,'' என்றார். அண்
தலையை அசைத்து வைத்தேன்
"நம்ம நாடகத்துக்கு வரும். போது, சீதர் காரைக் கேட்டு வாங்கிட்டு அப்படி பர்தாவோட வா. என்ன" என்று கூறி, "சீதர் கூப்டா வருவாரா" என்றார்.
என் மதிப்பைத் துரைக்கண்ணிடம் விட்டுக் கொடுக்காமல், "நான் சொன்னால் அவர் வருவார். ஆனால் இன்னும் ஒரு மாதம் அவர் ஐதராபாத்தில் தான் இருப்பார்." என்றேன்.
"அவரை அடுத்த நாடகத்துக்குப் போட்டுக்குவோம்" என்றார்.
'அப்பாடி,' என்று நான் பெருமூச்சு விட்டதற்கும். எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருப்பதற்கும் சரியாக இருந்தது. வீட்டுப் படியை விட்டு நுரைக்கண்ணு இறங்குவதற்குமுன் ஸ்கூட்டரில் வெண்ணிற ஆடை மூர்த்தி கையில் ஒரு இன்விடேஷனுடன், குட் மார்னிங் சார்." என்று நுழைந்தார்.
துரைக்கண்ணுவும் அவரைப் பார்த்தபடி உள்ளே வந்துவிட்டார். மூர்த்தியிடம் நான் பேச்சுக் கொடுக்கு முன் துரைக்கண்ணு, "நீதான் வெண்ணிற ஆடை மூர்த்தி இல்லே?" என்று கூறி, "சினிமாவிலே ஒரு மாதிரியாயிருக்கறே, நேர்லே பார்த்தா அஞ்சாம் பேசு அடிச்சமாதிரி இருக்கறே." என்றார்.
எனக்கு வயிறு பிசைய ஆரம்பிந்தது,
- பழைய 1971 ஆம் வருட குமுதம் இதழிலிருந்து -
==================================================================================
1981 ஆம் வருடம் பாக்யராஜ் வெளியிட்ட இன்னொரு சூப்பர்ஹிட் படம் அந்த 7 நாட்கள்.
எம் எஸ் விஸ்வநாதன் இசையில் ஜெயச்சந்திரன் ஜானகி குரலில் வரும் பாடலை எழுதி இருப்பவர் குருவிக்கரம்பை ஷண்முகம். JP சந்திரபாபு வாழ்க்கைக் கதையை ஒட்டி பாக்யராஜ் எழுதி வெளியிட்ட படம்.
"என்டே காதலி உங்களுக்கு மனைவியாயிட்டு வரும்... ... ஆனால் உங்கள் மனைவி எனக்கு காதலியாக முடியாது"
நான் மிகவும் ரசித்த பாக்யராஜ் படம்தான் இதுவும். பாலக்காட்டு மாதவனாக அவர் செய்யும் அதகளம்..
---------------------------------- ராகத்தில் அமைந்திருக்கிறதாம் இந்தப் பாடல். காட்சியில் அம்பிகாவுடன் பாக்யராஜ்.
==========================================================================================





காலை வணக்கம்.
பதிலளிநீக்குமாலை வணக்கம் ஜீவி ஸார்.. வாங்க.
நீக்குஹி..ஹி.. இப்போ இரவு 7.30. வெளியே பளீர் என்று வெளிச்சம் டாலடிக்கிறது.
நீக்குதோஹாவில் காலை நான்கு மணிக்கே வெளிச்சம் வந்துடும். நாலரை மணி ஐந்து மணிக்கெல்லாம் சூர்யோதயம் ஆயிடும். ஐந்தரை மணிக்கு நல்ல வெயில் வந்துடுது. இங்கே பரவாயில்லை. ஆறு மணிக்குப் பின்னரே சூரியோதயம். அதோடு இது மேற்குப் பகுதி வேறேயா? அதனால் .சூரியன் மறைவதும் நிதானமாகவே. ஆறரை மணிக்குப் பின்னரே மறையும்.. -வெளிநாடுகளில் மட்டுமில்லாமல், ராஜஸ்தான், குஜராத்தில் எல்லாம் இரவு எட்டு மணிக்குச் சூரியனார் சக்கைப் போடு போடுவார். அதுவே அக்டோபர், நவம்பர் மாதங்களில் சாயங்காலம் நான்கு மணிக்கு இரவு எட்டு மணி போல் இருக்கும்.
நீக்குஇது மாதிரி இடங்களில் இருந்த அனுபவம் எனக்கு இல்லை. நான் கி.த
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். வளமுடன் வாழப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா.. மாலை வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குதி.கதிரில் எம்.ஆர்.ஆர். பற்றி விந்தன் எழுதிய தொடர் இது.
பதிலளிநீக்குஎழுத்தாளர்கள் நினைத்தால் மணலை கயிறாகவும் கயிரை மணலாகவும் திரிக்கலாம்.
நன்றாகவே திரித்திருக்கிறார்!
நீக்குதினமணி கதிரில் வந்தப்போவே படிச்சிருக்கேன். அதோடு இங்கேயும் இப்போக் கொஞ்ச நாட்களாகச் சுத்திக் கொண்டே இருக்கு! ஆகவே கடந்த ஓரிரு மாதங்களில் நாலைந்து முறை படிச்சிருப்பேன்.
நீக்குபாக்யராஜ் படத்தின் பாடல்களைக் கொடுத்ததுக்கு நன்றி. இந்த வாரம் வியாழன் வேறே இல்லாமல் சுருக்கமாக முடிஞ்சிருக்கு. கோபு சாரின் துரைக்கண்ணு பத்தி இப்போத் தான் படிச்சேன். நல்லாவே எழுதறார். அவர் சொன்ன படங்களும் பார்த்திருக்கேன். மற்றப் படங்களும் பார்த்திருக்கேன். எல்லாமே ஸ்ரீதர் சம்பந்தப்பட்டது ஆச்சே! பார்க்காமல் எப்பூடி?
வாங்க கீதா அக்கா.. M R ராதா விஷயம் நான்தான் பேஸ்புக்கில் பகிர்ந்து அது கிட்டத்தட்ட 15 க்கும் மேற்பக்க ஷேர்களைக் கண்டது.
நீக்குதுரைக்கண்ணு வந்தபோதே நான் சுவாரஸ்யமா படிச்சிருக்கேன். வியாழன் வேற எப்படி இருக்கும்? என்ன குறைகிறது?
ஏதோ ஒரு கலகலப்புக் குறைஞ்சாற்போல் இருக்கு. படிச்ச திருப்தி வரலை. :(
நீக்குஅச்சச்சோ... ஜோக்ஸ் போடறதை குறைச்சுக்கிட்டிருக்கேன். எதைப் போட்டாலும் போட்டாச்சு போட்டாச்சு என்பதால்!
நீக்குஆஸ்பத்திரி வாசம் எப்போது ஶ்ரீராம். இப்போது நலமா. ஐவி,டிரிப்ஸ் எல்லாம் நிறையப் பார்த்தாச்சு. நீங்கள் நலமுடன் இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஇது சென்ற வருடம் அக்டோபர் அம்மா... பழைய கதையை சும்மா பொழுது போக எழுதுகிறேன்!
நீக்குகோபு சாரின் தொடர்,, சினிமா பார்ப்பது போல இருக்கிறது.
பதிலளிநீக்குஆமாம் அம்மா.. அந்தக் காலத்தில் சுவாரஸ்யமாக படித்தது. யதேச்சையாகக் கிடைத்தது!
நீக்குஎழுத்தாளர் சாவியின் கேரக்டர்ஸ் தொடர் போல இருக்கிறார் மிஸ்டர் துரைக்கண்ணு.
பதிலளிநீக்குஆமாம் அம்மா.. அவர் கற்பனையா, நிஜமா தெரியவில்லை. அப்போது படித்திருக்கிறீர்கள் தானே?
நீக்குஏவிஎம் நிருவனத்திற்காக ஸோ அண்ட் ஸோ செய்த படம் இது.
பதிலளிநீக்குசினிமாவை எப்படி செய்வது என்ற இந்த திரையுலக பாஷையை கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன் ப்ளீஸ்.
ஒரு தொழிலாக செய்தது. திரையுலகில் "எனக்கொரு படம் பண்ணிக் கொடுங்களேன்" என்பார்கள்.
நீக்குக்விதைகளில் ஒரு தடவை உபயோகித்த வார்த்தையை மறுபடியும் அதே கவிதையில் உபயோகிக்காமல் எழுதினால் அதன் அழகே தனி தான்.
பதிலளிநீக்குஆமாம்.
நீக்குபாக்கியராஜ் சார் .,,, மறைந்ததை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. அசப்பில் என் தம்பி இப்படியே இருப்பான். என் அஞ்சலிகள். முன்னாள் முதல்வர் மறைந்த போது கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு முக நூலில். அதே மும்முரத்தில் எல்லோரும் பதிவிட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போது யூ டியூபிலும் பல வித துறையைச் சார்ந்த ஆட்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர் ஆத்மா அமைதி அடையட்டும். ஒரு கை ஓசையும், இது நம்ம ஆளும் , அந்த ஏழு நாட்களும் பிடித்த படங்கள்.
பதிலளிநீக்குஎனக்கு அவரின் நிறைய படங்கள் பிடிக்கும். அவர் நடிப்பையும் ரசிப்பேன். வெற்றி பெற்ற திரைப்பிரபலம்.
நீக்கு'எண்டே காதலி' --- கல்யாணமான ஒருத்தனுக்கு மனைவிக்கும், அவனது காதலிக்கும் என்ன வித்தியாசம்?.. தெரியாமல் தான் கேட்கிறேன்.
பதிலளிநீக்குதெரிந்தவர்கள் சொல்லலாம்.
கதைப்படி சொல்பவனுக்கு மணமாகவில்லை.
நீக்குநான் கேட்டது வேறே. இதே கேள்வியை மாற்றிய்ம் கேட்கலாம்.
நீக்குஒருத்தனை ஒருத்தியாக்கி.
கல்யாணமான ஒருத்திக்கு................... (பூர்த்தி செய்து கொள்ளுங்கள்)
நீக்குநான் காதலிச்சவளை நீ திருமணம் செய்யலாம். ஆனால் உன்னுடைய மனைவியை நான் காதலிக்க மாட்டேன். நான் யோக்கியன்.
அம்புட்டுதான் ஜேகே உரை.
Jayakumar
:))
நீக்குஜீவி சார் கேட்டதற்கான பதில். விமர்சனம் படித்தோ படிக்காமலோ ஒரு நமக்கு மாத்திரமே எழுதப்பட்ட நாவலை வாங்குவதற்கு முன் இருந்த ஆர்வத்துக்கும், புத்தகம் கைக்கு வந்து படிக்க ஆரம்பித்ததற்கும் உள்ள வேறுபாடுதான்
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குநலமே விளைக..
பதிலளிநீக்குநலமாகட்டும் அனைத்தும். அதுசரி, சென்ற வெள்ளிக்குப் பிறகு உங்கள் தளத்தில் பதிவில்லையே...
நீக்கு"அப்பா சுவாரஸ்யமா பேசறாரு.. என்னென்னமோ சொல்றாரு.. ஜோக்கா பேசறாரு... "
பதிலளிநீக்குஇதுதான் எந்நாளும் வேண்டும்...
நன்றி. ஹிஹிஹிஹி!
நீக்குஇருந்தாலும்,
பதிலளிநீக்குமருத்துவமனை வாசல் அணுகாதிருக்க
அருள் புரிவாய் அபிராமவல்லியே!..
இந்தக் கலியுகத்தில் அதெல்லாம் ரொம்பக் கஷ்டம்தான்.
நீக்கு/இருந்தாலும்,
நீக்குமருத்துவமனை வாசல் அணுகாதிருக்க
அருள் புரிவாய் அபிராமவல்லியே!../
உங்கள் பிரார்த்தனைதான் எப்போதும் என் பிரார்த்தனையும். இறைவனும் அனைவரையும் உபாதைகளின்றி நடமாடி கொண்டிருக்குமாறு கருணை காட்ட வேண்டும். 🙏.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. சேர்ந்த ஆஸ்பத்திரியில் நடந்த விஷயங்களை சுவாரஸ்யமாக எழுதி வருகிறீர்கள். அங்கு இருக்கும் போது, அவர்கள் கட்டளைகள்படிதானே நடந்து கொள்ள முடியும். நானும் ஒரு சிகிச்சைக்காக மதுரையில் ஒரு பெரிய ஆஸ்பத்திரியில் மூன்று நாட்கள் இவ்விதமான அவர்களின் கட்டளைகளுக்கு பயந்து நடந்திருக்கிறேன்.. ஸ்கேன் எடுக்க வேண்டி, எதிரில் இருந்த ஒர் இடத்திற்கு நடந்து வருவதை அவர்களும் தவிர்த்து, வீல் சேரில் அமர வைத்து அழைத்துச் சென்றனர். ஸ்கேன் முடிந்து வரும் போது நான் என் கணவருடன் மறுபடி வீல்சேரை எதிர்பாராமல் வந்தது ஒரு குற்றமெனக் கூறி, பெரிய டாக்டர் அந்த வீல்சேர் தள்ளிவரும் ஊழியரை கடிந்து, அவர் எங்களிடம் வருத்தத்துடன் முறையிட்டது நினைவுக்கு வருகிறது.
சில ஆஸ்பத்திரியில் நாம் நம் உதவிக்கு எவ்வளவு கெஞ்சினாலும் உடனே வர மாட்டார்கள். ஆனால் மொத்தத்தில் எப்படியும் ஆஸ்பத்திரி வாசம் கொடுமைதான். இந்த சமயங்களில் அனைவரும் நலமாக இருக்க நான் எப்போதும் வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அப்படி அந்த டாக்டர் அந்த ஊழியரை கடிந்து கொண்டது பற்றி என்ன சொல்ல என்று தெரியவில்லை. நடனது வந்து அதனால் ஏதாவது ஆகி இருந்தால் என்ன ஆவது என்கிற அக்கறையா, அப்படி நேர்ந்தால் தங்கள் மருத்துவமனைக்கு கெட்டபேர் வரும் என்கிற முன் எச்சரிக்கை பயமா, இல்லை பந்தாவா??!!
நீக்குஎன்னவோ போங்க ஒண்ணும் சொல்றதுக்கில்லை!
அப்படி இல்லை, சர்க்கரை அளவு குறைஞ்சாலும் சரி, அதிகம் ஆனாலும் சரி, நோயாளியை எழுந்து நடக்க விடுவதில்லை. சர்க்கரை அளவு சரியா இருக்கு என்று தெரிந்தாலும் ஒரு நாள் படுக்கையில் இருந்தே ஆகணும். நடக்க விட மாட்டாங்க. அதனால் எக்ஸ்ரே, ஸ்கான், எம்.ஆர்.ஐ என்று போகையில் நடந்து போவதை விட வீல் சேர் தான் நல்லது. இப்போக் கண் அறுவை சிகிச்சையில் கூட நான் முழுக்க முழுக்க வீல் சேர் தான். டாக்சியில் இருந்து இறங்கியதில் இருந்து திரும்ப டாக்சியில் ஏறும்வரை வீல் சேர்தான்.
நீக்குவீல் வீல் என்று கத்தினாலும் நடக்க விடமாட்டார்கள் போல..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்கள் மழை கவிதை நன்றாக உள்ளது. அழகான அனுவிற்கு போட்டியாக தகுந்த உவமானத்துடன் கூடிய அழகான கவிதை. ரசித்தேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனுஷ் அழகை மீறி கவிதை எழுத முடியுமா என்ன! அனுவே ஒரு கவிதை!
நீக்குஅது அனுஷ்காவா? நான் அலை பாயுதே! ஷாலினி மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்.
நீக்கு:))
நீக்குAn attempt to post from tv
பதிலளிநீக்குpost from tv? ஸம்ஜா நஹி!
நீக்குHe has an android tv. A keyboard will appear on the screen like mobile phone..
நீக்குஅட ஆமாம். எங்கள் வீட்டிலும் ஆண்ட்ராய்ட் டிவி தான். ஆனால் முயற்சித்ததில்லை!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வார பாடல்கள் இரண்டும் நன்று. நானும் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். திரு. பாக்கியராஜ் அவர்களின் மறைவு எனக்கும் மிகவும் வருத்தத்தை தந்தது. நல்ல திறமையான நடிகர், இயக்குனர். இன்னும் பல சிறப்புக்களைப் பெற்றவர். அவருக்கு அஞ்சலிகள். அவர் இயக்கி நடித்த பல படங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். அவர் நடித்த படங்களின் வசனங்களை, நாம் நம் வாழ்வில் பல அனுபவங்களை பற்றிக் கூறும் போது, நினைவுபடுத்தி கூறிக் கொண்டிருப்போம். மறக்க முடியாத நடிகர்.நீங்கள் பகிர்ந்த அவரின் இரு பாடல்களை மீண்டும் பிறகு கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அவர் படங்களையும், கதை அமைப்பையும், அவர் நடிப்பையும் ரசிக்கலாம். பாடல்களை ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா.
நீக்குபாட்டெல்லாம் கேட்டுட்டேன். பாக்யராஜ் படங்கள் நிறையப் பார்த்திருக்கேன். இதில் டார்லிங், டார்லிங், டார்லிங் படமும் தூறல் நின்னு போச்சு படமும் மதுரை தங்கம் தியேட்டரில் பார்த்தவை. பெண்கள் தான் அவர் ரசிகர்கள். பெண்களுக்கெனச் சிறப்புக் காட்சியே தனியாகப் போடும்படி தியேட்டர் உரிமையாளர்களிடம் கேட்டுக் கொள்வார் என்பார்கள். சின்ன வீடு படம் வந்தப்போ அம்பத்தூர் ராக்கி தியேட்டரில் வந்திருந்தது. எங்க வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரங்க உறவினர்கள் அனைவரும் சேர்ந்து காலைக்காட்சிக்குப் போனாங்க. அதே பேருந்தில் நாங்க திருமுலைவாயில் கோயில் போய்க் கொண்டிருந்தோம். எங்களைப் பார்த்துட்டு அவங்க அசடு வழிந்து கொண்டு ராக்கி தியேட்டருக்கு முன்னாடியே பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்து தியேட்டருக்குப் போனாங்க. குற்ற உணர்ச்சியோ என்னமோனு நினைச்சுண்டேன். நான் பெரும்பாலும் தியேட்டர்களில் படம் பார்ப்பது எப்போவோ தான்.
நீக்குநான் கிட்டத்தட்ட அவர் ஆரம்ப காலப் படங்கள் அனைத்தும் பார்த்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.. ஆனால் இதில் அசடு வழிய என்ன இருக்கிறதாம்?
நீக்குஅது ஏகோ ஆடி மாதமோ, மார்கழி மாசமோ நினைவில் இல்லை. அதனால் நாங்க எங்க க்ரூப் திருமுலவாயில் கோயிலுக்குப் போயிட்டிருந்தோம். மத்தியானம் உச்சிக்காலம் பார்க்க. அப்போ அவங்க க்ரூப்பாத் தியேட்டருக்குப் போறது எங்களுக்குத் தெரிஞ்சுடுத்துனு வழிஞ்சாங்க. நாங்க கண்டுக்கலை. கூட வந்த பாலக்காட்டு மாமி தான் "சின்ன வீடா" எஞ்சாய்!" நு ஆசிகள் கொடுத்தாங்க. அதெல்லாம் பொற்காலங்களில் சேர்த்தி.
நீக்குஅது சரி.. நீங்களும் ஜாயின் பண்ணி இருக்கலாம்.
நீக்கு//"அப்பா சுவாரஸ்யமா பேசறாரு.. என்னென்னமோ சொல்றாரு.. ஜோக்கா பேசறாரு... " // நன்றாக கடலை போட்டிருக்கிரீர்கள் என்று சொல்ல நினைத்தேன், அப்பா என்னும் வார்த்தை காப்பாற்றி விட்டது.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... அப்படி சொல்லி விடுவீர்கள் என்பதற்காகத்தான் கீழே அந்த வரிகளையே கொடுத்தேன்.
நீக்கு:))) இந்த மரியாத...ம்ம்ம்!
நீக்கு//அதுசரி, சென்ற வெள்ளிக்குப் பிறகு
பதிலளிநீக்குஉங்கள் தளத்தில் பதிவில்லையே...//
முயற்சிக்கிறேன்..
உடல் நலம் ஓகேதானே
நீக்குஎம்.ஆர்.ராதா செய்தி ஏற்கனவே வேறு எங்கோ படித்திருக்கிறேன். ஒரு நடிகனாக இருந்தாலும் தன்னைப் பார்க்க கூட்டம் கூடுவது அவருக்குப் பிடிக்காது என்பதை உணர்த்தும் வேறு சில சம்பவங்களும் படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குசாத்தியம்தான். நானென்ன புதிதாகவா தயாரிக்கிறேன்? ஏற்கனவே எங்கோ இருந்தததைதானே எடுத்துக் கொடுக்கிறேன்!
நீக்குதலைப்பைப் பார்த்ததுமே புரிந்து விட்டது. பாக்யராஜ்! அந்த ஏழு நாட்கள். அழகான வசனம் அது.
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா.. இன்றைய பதிவில் அவருக்கும் ஒரு இடம். இதயத்தில் எப்போதும் உண்டு இடம்.
நீக்குமழை
பதிலளிநீக்குமழை உணவைப் போன்றது
தக்க சமயத்தில் பெய்யாவிட்டால்
பயிர் காயும்
நிறைய பெய்தால்
பயிர்கள் அழுகிவிடும்
அளவோடு பருவத்தில் பெய்து
வளமோடு வாழ வழி செய்.
பயிர்: வயறு
நீக்குஅளவோடு வா மழையே.. மண் நனைய , உள்ளம் குளிர பயிர் வளர அவளோடு வா மழையே என்றும் எழுதி இருந்தேன். அந்த வருடம்தான் பெரு வெள்ளம் வந்தது!
நீக்குஹையோ ஸ்ரீராம், இந்த கையில் வெய்ன் எடுத்து ஒரு நிரந்தரமா ஒன்னு போட்டு வைப்பாங்களே சத்தியமா சொல்றேன் எனக்குப் பல முறைகளில் வீக்கம் வந்தது. அவர்களுக்குச் சரியாகப் போடத் தெரிவதில்லை எப்படி இவர்கள் நர்ஸிங் பாஸ் செய்து வருகிறார்கள் என்று கேள்வி எழும். வெய்ன் கிடைக்கத் தட்டுவாங்க கொட்டுவாங்க ஆனாலும் சரியா குத்தமாட்டாங்க. வலி பின்னி எடுக்கும்...அடுத்த முறை ஊசி செலுத்த வரும்போது மருந்த்து உள்ளெ போகும் போது வலி எடுக்கும் பாருங்க....
பதிலளிநீக்குமேலை நாடுகளில் இதுக்குக் கேஸ் போட்டுடுவாங்க!!!
கீதா
சிகிச்சை முடியும் வரை பெர்மனெண்ட்டாக போட்டு விடுவது ஓகே. ஆனால் அது போடத் தெரியாமல்தான் என்னை தினம் புதிதாகக் குத்திக் கிழித்தனர்!
நீக்குஅதே அதே ஸ்ரீராம்...உங்கள் இம்சைகள் போன்று எனக்கும் அனுபவம்...
பதிலளிநீக்குசிறு சிறு விஷயங்களில் நான் ஸ்ட்ரைக் செய்தாலும், பொதுவாக என் பேச்சை அவர்கள் எல்லோரும் ரசித்தார்கள். ஒருவரிடம் பேசும்போது இன்னும் ஒருவரும் வந்து நின்று பேச்சைக் கேட்டார்கள். ஆக நான் சொல்ல வருவது என்னவென்றால் அவர்களுக்கு எதிரியாயில்லை! நான் ஒரு VIP இல்லை... அதாவது Very Irritating Person இல்லை!//
ரசிகைகளாகிட்டாங்க! அப்படியே எழுதறேன்னு ப்ளாக் பத்திச் சொல்லிருந்தாலும் இங்கும் வந்திருப்பாங்களோ!!! வந்தா அவங்க இதை வாசித்தால் ஆச்சரியப்பட்டிருப்பாங்க அட நம்மை பத்தி எல்லாம் எழுதுகிறாரா என்று!!
கீதா
நிறைய தமிழக கேரளா எல்லையை ஒட்டிய கிறித்துவப் பெண்கள்தான் மாணவிகள் அங்கு.
நீக்குதப்பித்தவறி கூட நாம் கொடுக்கும் பிஸ்கட், பழம் என்று எதையுமே வாங்க மாட்டார்கள் செவிலியர்கள். பிடிவாதமாக மறுத்து விடுவார்கள்.//
பதிலளிநீக்குஅட!!!! ஆனால் பயமாக இருக்கும் போல! ஆஸ்பத்திரி கண்டிஷன்ஸ் அப்படி. நல்ல பழக்கம்தான் ஸ்ரீராம்.
கீதா
cctv இருப்பதும் ஒரு காரணம்.
நீக்குஉண்மையோ, கற்பனையோ சித்ராலயா கோபுவின் கட்டுரை நகைச்சுவையுடன் ரசிக்கும்படி இருந்தது. நகைச்சுவையாளர்கள் சரக்கு சேர்த்துக்கொள்வதுண்டு.
பதிலளிநீக்குஆமாம். ஆமாம்.
நீக்குகட்டிலில் தடுப்பு - அந்த ரூல்ஸ் எல்லாம் இந்த ஆஸ்பத்திரி ரொம்ப கரெக்டா ஃபாலோ பண்றாங்க போல!! ஏன்னா அவங்க மேல குற்றம் வந்துவிடக் கூடாது என்பதால் இருக்கும். இல்லைனா பேஷன்ட் கிட்ட எழுதி வாங்கிட்டு...நான் கீழே விழுந்தால் அதற்கு ஆஸ்பத்திரி பொருப்பல்ல நான் தான் காரணம்னு ....அதுவும் வந்தாலும் வந்துவிடும்..
பதிலளிநீக்குகீதா
சின்ன காரணங்களுக்கு எழுதி வாங்க மாட்டார்கள். சிகிச்சை வேண்டாம்.. நான் வூட்டுக்கு போறேன் போ என்றால் எழுதி வாங்குவார்கள்!
நீக்குமழைக்கவிதை நல்லாவே இருந்தது. ஆஸ்பத்திரி அனுபவங்கள் மாமாவோடு இருந்ததில் எனக்கும் உண்டு. இப்படித் தான் மாமா சைடில் இருக்கும் தடுப்புக்களை மடக்கி விட்டு விடுவார். அதோடு அவருக்கும் ரத்தம் எடுக்கவும் வெயின் கிடைக்காது. இம்மாதிரி ஐவியில் ஏற்றுவதற்குப் போடப்படும் வென்ஃப்ளானும் சரி குத்திக் குத்தித் தான் எடுப்பாங்க. மாமா கைகளில் இரு பக்கமும் தோள் பட்டையிலிருந்து நீலம் பாய்ஞ்சு இருக்கும். பார்க்கவே கஷ்டமா இருக்கும். தொட்டாலே வலினு கத்துவார். எனக்கு அழுகையே வந்துடும். இப்போ கு.கு.வுக்கும் ரத்தம் எடுக்கையில் வெயினே கிடைக்காமல் இரண்டு நாட்கள் மருத்துவமனைக்குப் போய் ஒரு வழியா ரத்தம் எடுத்தாங்க. மாட்டுப் பெண் குஞ்சுலுவைக் கோவிசார். சரியாக் காட்டலைனு. அப்புறமா நான் சொன்னேன். மாமாவுக்கும் இதே நிலை தான். இருவருக்கும் ஒரே ரத்த க்ரூப்பும் கூட நெகட்டிவ்.
நீக்குஆ நெகட்டிவா? ரேர் க்ரூப்.
நீக்கு// எனக்கு அழுகையே வந்துடும். //
மாமாவின் மீதான உங்கள் அன்பு நெகிழ வைக்கிறது.
A Negative என்று கொடுத்திருந்தது ஆ நெகட்டிவ்னு எப்படி வந்தது? இத்தனைக்கும் கூகிள் மூலமா எல்லாம் எழுதுவதில்லை. :(
நீக்கு'ஆ..' என்று ஆச்சர்யக்குரல் கொடுத்திருப்பவன் நான். நீங்க அங்க நெகட்டிவ்னு மட்டும்தான் சொல்லி இருக்கீங்க..
நீக்குபாரதிராஜா, பாக்யராஜ் இருவருமே எனக்குப் பிடித்த இயக்குனர்கள். மிகவும் யதார்த்தமான மனிதர்களை திரையில் காண்பித்தவர் பாக்யராஜ்.பதமான சாவு. இன்னும் கொஞ்சம் சாப்பிடணும் என்று தோன்றும்போதே சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும், இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாராஎன்று தோன்றும் போது பேசுவதை நிறுத்தி விட வேண்டும் என்பார்கள். அதைப்போல இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கலாம் என்று மற்றவர்கள் கருதும்பொழுது மரணிப்பது நல்ல மரணம் இல்லையா?
பதிலளிநீக்குமிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு பாரதிராஜாவை விட பாக்யராஜை பிடிக்கும்.
நீக்குஎம் ஆர் ராதா விஷயம் இங்கே வாசித்த நினைவு இருக்கு ஸ்ரீராம் விந்தன் அவர்கள் எழுதியது...
பதிலளிநீக்குகூடவே இதே போல கொஞ்சம் ஒரு கதை பா ஹே அவங்களும் எழுதியிருந்த நினைவும்...அதில் முடிவு சூப்பரா இருக்கும்.
கீதா
எனக்கு நினைவில்லையே கீதா...
நீக்குபாடல்....................... ராகத்தின் அடிப்படையில் ஓ fill up the blank ஆ!!!!
பதிலளிநீக்குஎனக்குப் பாக்யராஜ் படங்களில் அந்த ஏழு நாட்கள் படம் முழுவதும் பார்த்த நினைவு குறிப்பாகக் கடைசி சீன்....திரைக்கதை நல்லாருக்கும். வேறு எந்தப் படம் முழுசா பார்த்திருக்கிறேன் என்று யோசிக்கேன்.....ஆனா சில சீன்ஸ் ஃபேமஸ் வசனங்கள் என்று பார்த்திருக்கிறேன். நல்லாருக்கும். சில சீன்ஸ்லயே தெரிந்துவிடும். படம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பதும் வசனமும்....முழுவதும் பார்க்கணும் என்று நினைத்து ம்ஹூம்.....
இந்தப் பாட்டு கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். இப்ப கேட்கிறேன்
கீதா
நான் ஒன்று சொல்வேன்... அது ஒன்றாக இருக்கும்.. அதுதான்.
நீக்குஸ்ரீராம், சாருகேஸி ராகத்தை இப்படிக் கூடக் கையாள முடியும் என்று வியப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குஆடல் கலையே தேவன் தந்தது பாட்டும் சாருகேஸி. இப்ப ஃபில் அப் பண்ணிப் பாருங்க!!!
கீதா
ஆமாம். எனக்கும் அதுதான் தோன்றியது.
நீக்குஅந்த த்ந்தனதானா விஷயம் நானும் எங்கேயோ வாசித்த அலல்து பேட்டியில்? கேட்ட நினைவு
பதிலளிநீக்குகீதா
ஆமாம். அது நிறைய இடங்களில் சுற்றி வந்தது.
நீக்குசென்னை வெயில் கவிதை நலலருக்கு அதைவிட படம்!! ஹாஹாஹா
பதிலளிநீக்குசரி இதுக்கு அனுஷ் படம் போட்டு நீங்க சொல்ல வருவது என்னன்னா...ஹிஹிஹி அனுஷ் சென்னைக்கு வந்தா சென்னை ஜில் என்று ஆகிவிடும்னு இல்லையா ஸ்ரீராம்!!!
கீதா
நான் சொல்லலை.. நீங்க சொல்றீங்க... ஹிஹிஹி
நீக்குதுரைக்கண்ணு பார்ட் - சிரித்துவிட்டேன்!! அது சரி வயிறு பிசைய ஆரம்பிச்சு அது அப்புறம் என்ன பண்ணிச்சு?! நாளை வருமா தொடற்ச்சி? இப்படில்லாம் சஸ்பென்சா விட்டா....
பதிலளிநீக்குகீதா
அப்படி எல்லாம் தொடர்ச்சியா இல்லை கீதா... கொஞ்சம் கொஞ்சம் கிடைக்கும்!
நீக்குஇப்போக் கண் அறுவை சிகிச்சை பண்ணிண்டப்போக் கூட இந்த வென்ஃப்ளான் போட்டாங்க இடக்கையில். அது வீங்கிப் போய் நீலம் பாய்ஞ்சு ரத்தம் கட்டிக் கொண்டு இரண்டு நாட்களுக்கு மணிக்கட்டில் வலி. :( இதெல்லாம் எதுக்குனா, இதே பதில் தான். மருத்துவமனை ரூல்ஸ் என்பதே. கான்டீன் இங்கே நான்காவது மாடியில். அதுக்கு லிஃப்ட் இல்லை. படி ஏறணும். என்றாலும் ஃபோன் பண்ணிச் சொல்லிட்டாக் கொண்டு வந்து கொடுப்பாங்க தான். ஆனால் உணவு என்னமோ பிடிக்கவே பிடிக்காது. :( எனக்கே அப்படின்னா மாமா எப்படிச் சாப்பிடுவார்? நான் அநேகமாக வீட்டிலிருந்து சமைச்சு எடுத்துட்டுப் போயிடுவேன். ஒரு சின்ன டப்பாவில் கொஞ்சம் காய் அல்லது கீரை, ஏதேனும் பிசைந்த சாதம், அல்லது ரசம் சாதம், மோர்/தயிர் சாதம். என்று சின்னச் சின்னதாக நான்கு டப்பாக்களில் கொண்டு போயிடுவேன்.
பதிலளிநீக்கு// கூட இந்த வென்ஃப்ளான் போட்டாங்க இடக்கையில். //// இதெல்லாம் எதுக்குனா, இதே பதில் தான். மருத்துவமனை ரூல்ஸ் என்பதே //
நீக்குஇல்லை... இது ரூல்ஸ் என்று சொல்லமுடியாது. வசதி. மறுபடி மறுபடி ரணமாக்காமல் ஒருதடவை பிரிக் செய்ததை வைத்தே ஊசி மருந்தை உள்ளே செலுத்த..
வாங்க கீதா அக்கா.
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அக்கிரமம், அராஜகம், இது என்ன நியாயம்? என்ன நியாயம்னு கேக்கறேன். எனக்குனா அவசியம், உங்களுக்குனா அநாவசியமா? நான் இந்தக் கருத்தைக் கன்னாபின்னாவென எதிர்க்கிறேன். :)
நீக்குநீங்க சொல்றதையைதான் நானும் சொல்றேன். ஒருவாட்டி போட்டு விட்டுட்டா பரவாயில்லை. மூணு நாள் வச்சுக்கிட்டு அதுலயே மருந்தை உட்செலுத்தலாம். மறுபடி மறுபடி குத்தி ரணமாக்குவதுதான் சிரமம். மூணு நாள் ஒன்றே இருப்பதிலும் சில சங்கடங்கள் உண்டுதான். ஆனா அது குறைவு.
நீக்குகுருவிக்கரம்பை ஷண்முகம்//
பதிலளிநீக்குஏதோ கேட்ட பெயர் போல இருக்கிறது என்றாலும் அதிகம் தெரிந்தது இல்லை. ஜெ பி சந்திரபாபு? நடிகர் சந்திரபாபுவா?
கீதா
ஆம். அவரேதான். குருவிக்கரம்பை ஷண்முகம் ஒரு கவிஞர். அஷ்டே.
நீக்குஆமாம் அ ஏ நா செம படம். அவர் நடிப்பு அதில் அட்டகாசமாக இருக்கும். ரௌஸு....
பதிலளிநீக்குநல்ல திரைக்கதை. சீன்ஸ் நகர்த்தியிருக்கும் விதமும்....கடைசில நல்ல ஒருகருத்தைச் சொல்லும் அந்த வசனம் செம அப்ளாஸ் வாங்கியதுன்னு கேட்டதுண்டு. படம் அதனாலதான் அவருக்கு இப்ப சமீபத்திய படம் பெயர் மறந்து போச்சே...ஏதோ ஒரு ரங்கநாதன் நடிச்ச படம் அந்தக் கதை பத்தி விமர்சனம் வைத்தார்.
கீதா
அதுல ஆக்சுவலா பாக்யராஜ் டாக்டர் கேரக்டர்லதான் நடிக்கறதா இருந்ததாம். அப்புறம் பாலக்காட்டு மாதவன் பாத்திரம் உருவானதாம். அது கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் ஆகி அதில் பாக்கி நடிக்க டாக்டர் கேரக்டருக்கு சிவகுமாரை கேட்டார்களாம். நல்லவேளை அவர் நடிக்க மறுக்க, ராஜேஷ் நடித்தாராம்.
நீக்குநல்ல சீன் இந்த க்ளைமாக்ஸ் சீன்.
பதிலளிநீக்குகீதா
Yessu...
நீக்குகவிதை அரங்கேறும் நேரம் - பாடல் - காலி இடத்தை நிரப்பவும் - நிரப்புகிறேன்...சுத்ததன்யாசி ராகம் பேஸ் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குகீதா
ஆமாம். அபுபடிதான் அங்க போட்டிருக்காஹ.. இந்த தடவை பானு அக்கா ராகம் ஒன்றும் சொல்லவில்லை..! :))
நீக்குஆஸ்பத்திரி அனுபவங்கள் அவஸ்தை. அவர்களைப் பார்க்கப் போகிறவர்களுக்கு என்ன வாங்கிச் செல்வது என்ற அவஸ்தை
பதிலளிநீக்குஆஸ்பத்திரி அனுபவங்கள் போர் அடிக்கிறதோ? நிறுத்தி விடலாமோ?
நீக்குசுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. தொடரலாமே!
நீக்குவிந்தன் நூல் படித்திருக்கிறேன். நெஞ்சுக்கு நீதிபோல முழுவதும் புளுகு இல்லாவிட்டாலும் ரொம்ப சாஃப்டா எழுதியிருப்பார்.
பதிலளிநீக்குதவறு. புளுகாய் இருக்க முடியாது. இது அவர் அளித்த பேட்டி. இவராக எழுதிய கட்டுரை அல்ல. மாற்றி எழுதினால் எம் ஆர் ராதா கிழித்து தோரணம் கட்டித் தொங்கவிட்டிருப்பார்.
நீக்குமண் நனையுமுன் காணாமல்போய் விடுகிறது.... பலே
பதிலளிநீக்குஹி்... ஹி..... ஹி்....
நீக்குதுரத்துகிறார் துரைக்கண்ணு பிரமாதமா எழுதியிருப்பார். அதில் இன்று கொடுத்த பகுதி பார்த்து புன்னகை வந்தது.
பதிலளிநீக்குஇதுதான் தொடக்கம். 13 வாரங்களோ, 30 வாரங்களோ வந்ததாக நினைவு.
நீக்குதிரைவாழ்வு என்பதற்கு ஒரு லிமிட்தான் உண்டு. மக்கள் ரசனை மாறிவிடும்
பதிலளிநீக்குஎன்னதான் இளையராஜா ரகுமான் என்றாலும் அவர்கள் காலம் ஓவர். பா வரிசை டைரக்கர்களுக்கும் ஒரு சமயத்தில் டிமான்ட் இல்லை
ஓரளவுக்கு உண்மை.
நீக்குஇதைவிடக் கடுப்பு, பிரகாஷ்ராஜ் வாய்ப்பு கொடுத்தும் நல்ல திரைப்படத்தை தன் குயுக்தி எண்ணத்தால் கிளைமாக்ஸ் மூலம் தோல்விப் படமாக மாற்றிய பாலசந்தர்
நீக்குஎன்ன படம் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. கல்கி?
நீக்குஅவரோட கடைசிப் படம்னு நினைவு. பொய்...னு வரும். கடைசில கதாநாயகன் கதாநாயகிமைச் சேத்துவைக்கலை. பயங்கர கடுப்பு. ஒரு இயக்குநருக்கு தன்னுடைய வித்தியாச சிந்தனை, திருப்பங்கள் படத்தில் காண்பித்து தயாரிப்பாளரை நடுத்தெருவுக்குக் கொண்டுவருவது முக்கியமா இல்லை படம் எடுக்க முனைந்த தயாரிப்பாளருக்கு போட்ட காசாவது கிடைக்கச் செய்வது முக்கியமான்னு புதன் கேள்வியாத்தான் கேட்கணும்.
நீக்குவித்தியாசமா சிந்திக்கறேன் என்று அம்பிகா உங்களுக்கு மனைவியாகவும் எனக்குக் காதலியாகவும் தொடரட்டும். திரௌபதிக்கு பாண்டவர்கள் ஐவரும் கணவராக இருந்திருக்கிறார்களே என க்ளைமாக்ஸ் இருந்திருந்தால்?
சிலசமயம் இளமை நினைவுகள் இன்பம் தருவதுபோல பழைய அனுஷ்காவா
பதிலளிநீக்குஆல்வேஸ் அனுஷ்கா!!
நீக்குஒரு வழியாக இன்றைய பதிவைப் படித்துவிட்டேன். நல்ல கதம்பம். இப்போது குக்கே சுப்ரமண்யாவில்
பதிலளிநீக்குஉடுப்பி கிருஷ்ணன் கோயில், குக்கே சுப்ரமண்யா, தர்மஸ்தலா, கடில் துர்கை, மங்களா தேவி, சிருங்கேரி, மூகாம்பிகை, சிர்சா,தங்க அன்னபூரணி இங்கெல்லாம் போய் 20 வருடங்கள் ஆகின்றன. சிருங்கேரிக்குப்போய் ஸ்வாமிகளிடம் கைலாஷ், மானசரோவர் யாத்திரை பத்திச் சொல்லி ஆசி வாங்கிக் கொண்டு பின்னர் செப்டெம்பரில் கயிலை யாத்திரைக்குக் கிளம்பினோம்.
நீக்குமுருடீஸ்வரரை விட்டுட்டோம். இன்னும் ஒரு முக்கியமான கடற்கரைக் கோயில் கூட விட்டுட்டோம். கோமதி அரசு இங்கெல்லாம் போய்விட்டு எழுதினாங்கனு நினைக்கிறேன்.
நீக்குகோவிலில் பாடல் கேட்க முடிந்ததா என்ன?
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குராதா ஒரு ஒரிஜினல். நகலல்ல மற்றவர்களைப்போல்.
விந்தனின் புத்தகக் கவரில் யாரோ ராதாவின் சித்திரத்தை நன்றாக வரைந்திருக்கிறார்கள்..
பதிலளிநீக்கு