தேவையான பொருட்கள்:
கோதுமைமாவு : 2 கப்.
மைதா மாவு : 2 கப்.
மிளகு : ஒரு டீஸ்பூன்.
சீரகம்: இரண்டு டீஸ்பூன்.
மஞ்சள் தூள் : ஒரு சிட்டிகை.
நெய் : இரண்டு டீஸ்பூன்.
தயிர் : அரை கப்.
நல்லெண்ணெய்: நானூறு மி லி
உப்பு: தேவையான அளவு.
பூரி இடுகின்ற பலகை.
பூரிக் கட்டை (காணோம் என்றால், கணவரிடம் கேட்கவும். அவர் முன்னெச்சரிக்கையாக எடுத்து எங்காவது ஒளித்து வைத்திருப்பார்!)
கொஞ்சம் பொறுமை.
கோதுமை மாவையும், மைதா மாவையும் நுண்ணிய துளைகள் கொண்ட சல்லடை மூலம் சலித்து, ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போடவும்.
மிளகையும், சீரகத்தையும் லேசாக வறுத்து, பொடி செய்து மாவுடன் சேர்க்கவும். பின்பு, தயிர், மஞ்சள் தூள், உப்பு, நெய் ஆகியவற்றைப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு, மாவை கெட்டியாகப் பிசையவேண்டும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, அப்பளமாக இட்டுக்கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அடுப்பில் வைக்கவும். (அடுப்பைப் பற்றவைக்கவும்) எண்ணெய் காய்ந்தவுடன், இட்டு வைத்த அப்பளங்களை ஒவ்வொன்றாக எண்ணெயிலிட்டுப் பொரிக்கவும்.
கவனமாக இருங்கள்: அப்பளம் ஒருபுறம் பொரிந்ததும், கண்கரண்டியால், அதைத் திருப்பி விடவேண்டும். இரு புறமும் மொறு மொறுவென்று பொரிந்ததும், கண்கரண்டியால் பூரியைத் தூக்கி, எண்ணெயை வடித்துவிட்டு, பூரியை ஒரு தட்டில் போடவும்.
இந்த வகையில் எல்லா பூரியையும் பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
மசாலா பூரி தயார்.
இதை, தேங்காய் சட்னி அல்லது உருளைக்கிழங்கு மசாலா தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்!





