Appu's background லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Appu's background லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21.10.14

கல்யாணி ஏன் சிரித்தாள்? 08. அப்புவின் பின்னணி.

                   
முந்தைய பகுதியின் சுட்டி இது:  அப்பு 

கல்யாணியின் நினைவில், மங்காவின் அறிவுரை வந்து சென்றது. 'கல்யாணீ ! கொள்ளி போட ஒரு பிள்ளை இல்லாமல் என் காலம் முடிவடைந்துவிடும் போலிருக்கு. உனக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்து, பேரப்பிள்ளைகளைப் பார்க்கலாம் என்றிருந்தேன். அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. நீ யாராவது ஒரு பையனை தத்து எடுத்துக்கொள். அந்தப் பையனுக்கு என்னை எடுத்து வளர்த்த அப்பு என்பவரது பெயரை வை.' 
     
மங்கா மாமிக்கு ஒரு சிறப்புக் கோரிக்கை, கும்பகோணத்து பெரிய மனிதரிடமிருந்து வந்தது. அவருடைய பிறந்தநாளுக்காக, அருகிலிருந்த அனாதை விடுதி ஒன்றிற்கு லட்டு செய்து அவற்றை அங்கிருந்த குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை. அந்தப் பெரிய மனிதர் நடமாடும் நிலைமையில் இல்லை. தன்னை குழந்தைகள் உள்ளம் வாழ்த்தினால், தனக்கு நற்கதி கிடைக்கும் என்பதற்காக அவர் இந்தக் கோரிக்கையை வைத்து, அதற்கான பொருளுதவியும் செய்தார். 

லட்டுகள் செய்து, அவற்றை விநியோகிக்கச் சென்றிருந்த மங்கா மாமிக்கும், கல்யாணிக்கும் அந்த அனாதை விடுதியில் ஓர் இனிய அதிர்ச்சி காத்திருந்தது. 
     
   

அந்த விடுதியில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருந்த இரண்டு வயது சிறுவன், சாப்பிடமாட்டேன் என்று அழுது அடம் செய்து கொண்டிருந்தவன், கல்யாணியைக் கண்டதும், ஓடோடி வந்து அவள் கால்களைக் கட்டிக்கொண்டு, "அம்மா" என்றான். 

கல்யாணிக்கு, அவனைக் கண்டதுமே பிடித்துப் போயிற்று. இது ஏதோ பூர்வ ஜன்ம பந்தம் போலிருக்கு! என்று நினைத்தாள் கல்யாணி. எவ்வளவு அழகான குழந்தை! அவள் கையால் கொடுத்தால், எதையும் சாப்பிட்டான் அவன்! அதுவரை அழுது கொண்டிருந்தவன், கல்யாணியைக் கண்டதும், சிரித்து விளையாடத் தொடங்கிவிட்டான்! அன்று அந்தக் குழந்தை தூங்கிய பிறகுதான், பிரிய மனமில்லாமல், பிரிந்து வந்தாள், கல்யாணி. 

வீட்டுக்கு வந்த கல்யாணிக்கு ஒரு மணி நேரத்தில் அனாதை விடுதியிலிருந்து அழைப்பு. அந்தப் பையன் கல்யாணியைக் காணாமல் எழுந்தவுடன் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறான், கல்யாணி உடனே அங்கு வரவேண்டும் என்று ஆள் அனுப்பியிருந்தனர், அந்த விடுதியிலிருந்து.  

இப்படித் துவங்கிய நட்பு, அந்தச் சிறுவனை, கல்யாணி தத்து எடுத்துக் கொள்ளும் வரை வளர்ந்தது. மங்கா மாமி, மூர்த்தி தாத்தா முன்னிலையில், அந்தச் சிறுவனை தத்து எடுத்து, பையனுக்கு அப்பு என்று ஒரு பெயரும், விஸ்வநாதன் என்று ஸ்கூலுக்காக ஒரு பெயரும் இட்டு, முறைப்படி அப்புவின் அம்மா ஆனாள் கல்யாணி. 
            
=======  ======  ====== 
    
நண்பர்களோடு தஞ்சாவூர் சென்றிருந்த அப்பு வீட்டுக்கு வந்தவுடன், உற்சாகமாக, "அம்மா! நண்பர்களோடு தஞ்சாவூருக்கு பிக்னிக் போயிருந்தேன் இல்லையா? அங்கே பெரிய கடைத்தெருவில், சர்வ லட்சணம் பொருந்திய ஒரு பெண்ணைப் பார்த்தேன் அம்மா. அந்தப் பொண்ணு ஒரு மொபைல் கடையில வேலை பார்க்கிறாள் போலிருக்கு. பார்த்தால் ஏழைப்பெண் மாதிரிதான் இருக்கின்றாள். நீ இந்த சாட்டர்டே வந்து பாரு அம்மா - அவளை நிச்சயம் உனக்கும் பிடிக்கும் அம்மா! " என்றான். 
              
(தொடரும்) 
               
(சீனு! இரண்டே வாரம் பொறுத்துக்குங்க! பத்தாவது பகுதியோடு கதைக்கு மங்களம் பாடிடறேன்! )