திங்கள், 26 நவம்பர், 2012

சங்கீத ஞானமு ...


எங்கள் ப்ளாக் இடப் பக்க பத்தியில், 

<<< ---------------- (இது சுட்டி - மாலை நாலரை மணிக்கு மேலே இங்கு சொடுக்குங்கள்.) 

நாங்கள் கொடுத்திருக்கின்ற சுட்டி மூலமாக, கடந்த இரண்டு நாட்களாக, எவ்வளவு பேர் கலாக்ஷேத்ரா ருக்மிணி அரங்கத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை, இணையம் மூலமாக பார்த்து, கேட்டு பயன் பெறுகின்றீர்கள் என்கிற விவரம் தெரியவில்லை. 

நிகழ்ச்சிகளை இணையம் மூலமாகப் பார்த்து கேட்டு பயன் அடைந்தவன் என்கிற வகையில், என் அனுபவங்கள் இங்கே, சுருக்கமாகப் பதிகின்றேன். 

இருபத்து நான்காம் தேதி மாலை நாலரை மணி முதல், விக்கிரமாதித்தனை விடாத வேதாளம் போல, அல்லது வேதாளத்தை விடாத விக்கிரமாதித்தனாக, தொடர்ந்து சுட்டியில் கிளிக்கிக் கொண்டிருந்தேன். 
   
வேதாளம் நான்கு ஐம்பது மணி ஆகும் பொழுது மனமிரங்கி, மரமிறங்கி (இணையமிரங்கி) வந்தது. 
               
ஆர் கார்த்திக் நாராயணன் பாட்டு. நன்றாகப் பாடினார். வீடியோ சில சமயங்களில் "ஹாண்ட்ஸ் அப்" ஆகி உறைந்து நின்றாலும், ஆடியோ கை (காது) விடவில்லை. 
                 
Free Sound Recorder (இதுவும் தரவிறக்கம் செய்ய ஒரு சுட்டி.) பயன் படுத்தி, அந்த கச்சேரியை (ஒலிப்)பதிவும் செய்து வைத்துக் கொண்டேன். 
               
பிறகு விதூசி சௌம்யா அவர்கள் நிகழ்த்திய சிற்றுரை. பிறகு, இந்துஸ்தானி சங்கீதம்.  பாடியவர் பெயர் ஆதித்யா காண்ட்வே (?) (இந்துஸ்தானி சங்கீதம் கேட்டு இரசிக்க நிறைய ஞானம் வேண்டும் என்று நினைக்கின்றேன். என்னிடம் அது இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்!) 

இருபத்தைந்தாம் தேதி, நாலரை மணிக்கு பாடியவர் வி சுபஸ்ரீ. இவர் சௌம்யா அவர்களின் சிஷ்யை என்று அறிவித்தார்கள். நன்றாகப் பாடினார். 
         
பிறகு ஆர் வேதவல்லி அவர்கள், காலப்ரமாணம் பற்றி உரை நிகழ்த்தினார் (எனக்கு சங்கீத ஞானம் கிடையாது என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேனே! ) 
     
ஏழு மணி முதல், ஒன்பதே கால் மணி வரையிலும் ஐஸ்வர்யா வித்யா ரகுநாத் பாட்டு. (ஆமாம் ஒருவர்தான் பாடினார். நான் கோஷ்டிகானம் என்று நினைத்திருந்தேன்.) நன்றாகப் பாடினார். முகாரி, தோடி இராகங்களைக் கூட சிரித்த முகத்துடன் பாட முடியும் என்று நிரூபித்தார். பக்க வாத்தியங்கள் பக்காவாக வாசிக்கின்ற டாக்டர் ஆர் ஹேமலதா வயலின்; ஜெ வைத்தியநாதன் மிருதங்கம். பக்கா வாத்தியக்காரர்கள். 
          
இன்று (26.11.2012) மாலை நாலரை மணிக்கு அர்ச்சனா & ஆரத்தி பாட்டு; பிறகு, திரு டி  என் கிருஷ்ணன் அவர்கள் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் பற்றி உரை. அதன் பிறகு கே பாரத் சுந்தர் அவர்களின் பாட்டு. சென்ற வருடம் பாரத் சுந்தர் மியூசிக் அகடமியில் பாடிய பாட்டு இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இன்று அதை மாற்றி, வேறு பாடல்கள் நுழையுமா என்று பார்க்க (கேட்க) வேண்டும். 
     
இன்றைய நிகழ்ச்சிகளை, இணைய ரசிகர்கள் தவற விடாதீர்கள். 
                    

3 கருத்துகள்:

  1. மின்சார தேவதை உதவி செய்தால் சுட்டுகிறேன்...

    நன்றி... நேற்று முதல் மின்வெட்டு 18 மணிநேரம்...

    வளமுடன் வாழ்வோம்...

    பதிலளிநீக்கு
  2. தனபாலன் சொல்வது சிரிக்க வைத்தாலும் வேதனை. தினசரி வாழ்வின் சின்ன சந்தோஷங்கள் கூடக் கெடுகிறதே!

    சுட்டிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. எல்லாம் சரி, மின்சாரமும் கொடுப்பாங்களா! கொடுத்தால் கேட்கலாம். இது சென்னை வாழ் பதிவர்களுக்கு மட்டுமான பதிவோ? :P :P :P :P

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!