4.9.26

இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே இதய போர்வையில் மறைத்தானே

சென்ற வருடம் கோபிநாத் நடத்திய நீயா நானா நிகழ்ச்சியைப் பார்த்து நொந்துபோய் ஃபேஸ்புக்கில் எழுதியது.  அதைப் பார்த்துக் கூடத் தொலைத்திருக்க மாட்டேன்.  என் தங்கைக்கு அதில் கலந்து கொள்ள அழைப்பு வந்து ஆர்வமுடன், ஆசையுடன் கலந்து கொண்டாள்.  நிகழ்ச்சி தெருவில் திரியும் நாய்கள் பற்றியது.  என் தங்கை நாய் வளர்க்கிறாள்.  நாய் நேசள்.   

நிகழ்ச்சியில் இப்படி நாம் குதரப்பப்படுவோம் என்று நாய் நேச க்ரூப் நினைத்துக் கூடப் பார்த்திராது.  அந்த நிகழ்ச்சியில் கோபிநாத்  நடந்து கொண்டார்.  அவர் மீதிருந்த மதிப்பு முற்றிலும் சரிந்து போனது.  பொதுவெளியில் கூட அது பற்றி பேசியவர்களை எல்லாம் நெட்டிஸன்கள் என்று அழைக்கபப்டுபவர்கள் கடித்துக் குதறினார்கள்.  ஆபாசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார்கள்.  அது ஒரு திட்டமிட்ட தாக்குதலாய்த்தான் இருந்தது.

அது பற்றி நான் எழுதி இருந்தது கீழே... 

மீண்டும் ஒரு ஜாலியன் வாலாபாக்
நீயா நானா நிகழ்ச்சியில் இடம்பெற இஷ்டமா? இந்தக் கேள்வி சில புதுமுகங்களிடம் கேட்கப்பட்டது.
எது பற்றி?
Dog Love பற்றி...
நாம் குறிவைத்துத்தான் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று அறியாத சிலஜனம் உற்சாகத்தோடு ஒத்துக் கொண்டது.
அவர்களும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறார்கள். நகைச்சுவையோடு ஜாலியாகப் போகும் அந்த நிகழ்ச்சி. மாமியார் பற்றி மருமகள், மருமகள் பற்றி மாமனார், கணவன் பற்றி மனைவி, காசு செலவழிப்பது பற்றி கணவன் என்று சின்னச் சின்ன சிண்டு முடிதல்களோடு போகும்.

நடக்கப் போவதை அறியாமல் அதில் கலந்து கொள்வது பற்றி இந்தப் புதியவர்கள் உற்சாகமாகவே இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியில் நகைச்சுவை இல்லாமல் சீரியஸாக வேறு ஏதோ திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் இருந்தார்கள்
இந்தத் தொலைக்காட்சிக்கு இது மாதிரி கேவலப்படுத்தும் நிகழ்ச்சிகள் சகஜம். என்ன பார்க்கறீங்க.. நான் சொல்வதெல்லாம் உண்மை!
சினிமாவில் அனாதைகளை அழைத்து வா... பிரபலமில்லாதவர்களை அழைத்து வா அப்போதுதான் அவர்களால் நமக்கு எதிராக பேச முடியாது, கேஸ் போட மாட்டார்கள் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்களே...
அதுமாதிரிதான் இவர்கள் அழைக்கப் பட்டிருந்தார்கள்.
சரி, இந்த திட்டத்தையும் யாரேனும் கண்டு பிடித்து விட்டால்...
ஒன்றிரண்டு ஸ்லீப்பர் செல்களை அவர்களுடன் உட்கார வை..
எதிரணியும் தயார் செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு எதைப் பற்றி பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், எதிராளிகளை எப்படி தாக்கவேண்டும், காயப்படுத்த வேண்டும் என்று திட்டமாக சொல்லப்பட்டது. அதில் சிறந்தவர்களாக நான்கைந்து பேர்கள் தெரிவு செய்யப்பட்டு பரவலாக உட்கார வைக்கப்பட்டார்கள். ஒருவர் சட்டம் பேச, ஒருவர் மனிதம் பேச, ஒருவர் நடப்பு பேசி கண்கலங்க வைக்க... அவர்கள் மட்டும் கணக்காக அழைக்கப்பட்டார்கள்.
ஏதும் பிரச்னை வருமாங்க... நடுவர் ஏதாவது சொல்லிட்டாருன்னா..
சொல்ல மாட்டார். வந்து பாருங்க...
வந்து பார்த்தவர்களுக்கு அந்த இனிய ஆச்சர்யம் காத்திருந்தது. அவர் நடுவராக - நிகழ்ச்சி நடத்துபவராக - இருப்பதற்கு பதில் அவரும் இந்த அணியுடன் சேர்ந்து கொண்டார். ஆனால் அவர்களுடன் நாற்காலி போட்டு உட்காராமல் நடந்து கொண்டே இருந்தார். யாரை எப்போது அடிக்க வேண்டும் என்று காட்டிக் கொடுத்தார். போதுமான கோப வெளிப்பாடு அழைத்து வந்தவர்களிடம் குறைந்த போது அவரே அந்த உணர்ச்சியைக் காட்டி அமர்க்களம் செய்தார்.
சொல்லிக் கொடுத்த கருத்துகளை சொல்ல முடியாமல் சொல்ல மறந்து பாதியில் நின்றாலும் கவலையில்லை. நடுவர் 'அவர் என்ன சொல்றாருன்னா' என்று அவரே பேசி கருத்தை நிறைவு செய்தார்
தாங்களே காரில் செல்பவர்கள்தான் என்பதை மறந்து, மறக்க வைத்து காரில் செல்பவர்கள், இருசக்கர வாகனத்திலும் நடந்தும் செல்பவர்கள் என்றெல்லாம் பேசி பிரிவினை உண்டாக்கினார்கள். குடிசையில், தெருவோரத்தில் குடியிருக்கும் ஜனங்கள் எல்லாம் நாயே வளர்க்க மாட்டார்கள் என்ற ஒரு பொய்ப் பிம்பத்தை உருவாக்கினார்கள்.
"எனக்கே கோபம் வருது" ஐ ஸ்ட்ராங்லி கண்டெம்ன் திஸ்' போன்ற பன்ச் டயலாக்குகள் சேர்க்கப்பட்டு ரசிக்கப்பட்டன.
நன்றி கெட்ட மாந்தரடா.. நானறிந்த பாடமடா... என்னும் குரலை கேட்க மறந்தார்கள். நல்லவேளை "தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா" என்று பாடிய கவிஞரையும் சந்திக்கு இழுத்து கேவலப்படுத்தவில்லை.
பாவம் படவா கோபி எனும் அப்பாவி. தான் உண்டு தன் அறக்கட்டளை உண்டு என்று இருந்தவரை வலிய அழைத்து வந்து, அவர் பேசியதைத் திரித்து வேறு அர்த்தம் கொடுத்து கேவலப்படுத்தினார்கள். எந்த நிகழ்ச்சியால், எதனால் அவர் மேல் இவர்களுக்கு கோபமோ.. இரண்டு கோபிக்களும் அப்புறம் ஒருவரை ஒருவர் முகம் பார்க்க வேண்டும் என்பதை மறந்தார்கள்.
இரண்டு அணியில் தாக்கும் அணியும் அப்படியே.. எதிரில் இருபப்வர்களும் நம் சகோதர சகோதரிதான் என்பதை மறக்க வைக்கப் பட்டார்கள். அவர்கள் மட்டும் என்ன நாயால் கடியுண்டு சாவதை புண்ணியமாகவா நினைக்கிறார்கள்? போதுமான முன்னெச்சரிக்கை எடுப்பது, மாநரகாட்சி, அரசாங்கங்களின் கடமை என்பது பற்றி கலந்து பேசப் போகிறோம் என்றல்லவா காத்திருந்தார்கள்...
உள்ளே வந்து பேச ஆரம்பித்த .பலியாடு அணிக்கு நிகழ்ச்சியின் நோக்கம் சற்று நேரம் கழித்துதான் புரிந்தது. அவர்கள் டீமில் சரியான முறையில் எடுத்து பேச ஆட்கள் இல்லை. அவர்கள் யாரும் இதற்கு தயாராகவும் இல்லை. இருந்த ஒன்றிரண்டு பேரும் ஸ்லீப்பர் செல்களாக இருந்தார்கள். மீறி சில கருத்துகளை பேச ஆரம்பிக்கும் போது அவர்கள் இடைநிறுத்தப்பட்டு, தி ஸோ கால்டு நடுவராலும் எதிரணியின் 'முக்கிய புள்ளி'களாலும் மிரட்டப்பட்டார்கள். அவமானப் படுத்தப்பட்டார்கள்.
அந்த பாதி ஜனம் தங்கள் சகோதரர்களான மீதி ஜனத்தால் அநியாயமாக கொலையுண்டார்கள். ஜாலியன்வாலாபாக்கில் ஒரு டயர். இங்கோ..?
எட்டு மணி நேரம் அவர்கள் பட்ட சித்திரவதையை நாற்பது நிமிடங்களில் சுருக்கினார்கள் வியாபாரிகள். எங்கோ எதற்கோ சிரித்ததை வெவ்வேறு இடங்களில் சொருகி எடிட் செய்தார்கள். எது காரணமாகவோ ஒரு பெண்மணி மோசமாக ட்ரோல் செய்யபட வேண்டி அதற்கேற்றவாறு தயார் செய்தார்கள்.
ஊடக வியாபாரம் அறியாத பாதி பொதுஜனம் இதை உற்று கவனித்து அங்கு நிகழ்ச்சியில் ஒரு முறை கொல்லப்பட்டவர்களை பொதுவெளியில் பலமுறை கொலை செய்தார்கள். ஊடக தந்திரம் அறிந்த பெரும் அறிவாளிகளும், பத்திரிகையாளர்களும் நாவலாசிரியர்களும் கூட இந்தக் கொலையில் இணைந்தார்கள். தாங்களும் உத்தம ஜாதி பொதுஜனம் என்று நிரூபிப்பதில் மும்முரமானார்கள். தாங்கள் எண்ணியது நடந்ததில் ஊடகத்துக்கு கொண்டாட்டம். அவர்களே சிலரைத் தூண்டி விட்டு சில பதிவுகள் சிலரை போட வைத்திருக்கும்.
சரி, என்ன தீர்வு சொன்னார்கள்?
ஒன்றுமில்லை.
ஒன்றுமேயில்லை.
கலகத்தைத் தூண்டி விட்டு காசு பார்க்கும் அளவு மட்டுமே திட்டமிட்டார்கள்.
படித்த, அறிவுசார்ந்த பொதுமக்களைக் கூட எப்படி மைண்ட் கண்ட்ரோல் செய்யமுடியும் பாருங்கள், ஊடகம் என்ன செய்ததோ அதைப்போலவே இங்கு பொதுவெளியில் யாருமே இப்போதும் இந்தப் பிரச்னைக்கான தீர்வைப் பற்றியே பேசவில்லை, யோசிக்கவில்லை. நாய்க்கு ஆதரவாகப் பேசிய அந்தச் சிலரையே கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறார்கள்.
கலந்து பேசி முடிவெடுக்கபோகிறோம் என்று நினைத்து காத்திருந்த அப்பாவி டீமை 'கேரக்டர் கொலை' செய்ததைத் தவிர வேறொன்றும் தீர்வு அங்கு சொல்லப்படவில்லை. அந்தத் தீர்வைக் சொன்னால் அரசாங்கம் கோபப்படுமே .. எப்படி சொல்ல முடியும்? அப்பாவி பொதுஜன டீம் என்றால் மனதுக்குள் அழுது உள்ளுக்குள் முடங்கி விடுமே... பாதுகாப்பு! போதாக்குறைக்கு மீடியாவில் பொதுஜனமும் இவர்களை காயப்படுத்தும்.
பொதுமக்களின் உணர்வுகளோடு விளையாடி கலவரத்தைத் தூண்டி, ஜனங்களை இரண்டு துண்டாக ஆக்குகிறோம் என்று தெரிந்தே அவர்கள் இப்படி செய்கிறார்கள். காசு! அதுதான் முக்கியம்.

சரி, சாலையெங்கும் நிறைய மாடுகள் சுற்றி வந்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்கின்றனவே, விபத்து ஏற்படுத்துகின்றனவே... அலட்டிக் கொள்ளாமல் வரிசையாக சில எருமைமாடுகள் சாலையை நிதானமாக கடந்தும், மழை பெய்தாலும் சாலை நடுவே நின்றும் விபத்தை ஏற்படுத்துகின்றனவே.. அட, அதைக் கூட விடுங்கள் சாதுகள் என்று நாம் நினைத்த மாடுகளே பள்ளி சென்ற குழந்தையையும், தாயும் குழந்தையும் போகும்போது குழந்தையை, எதிரில் வந்த வாகன ஒட்டி மீது திடீரெனப் பாய்ந்து முட்டுவது என்றெல்லாம் செய்கிறதே.. அவற்றை என்ன செய்யப்போகிறீர்கள்? என்ன சொல்லப் போகிறீர்கள்?
"ஊஹூம்.. ஒன்றும் சொல்ல மாட்டோம். அதைப் பற்றி பேசக்கூடாது. மாடு மனிதனுக்கு பால் தருகிறது.. நாய் என்ன தருகிறது? கலகத்தைத் தூண்ட கண்டெண்ட்தான் முக்கியம்,
மூச்... அதையெல்லாம் பேசக்கூடாது. பேசினால் மனிதஜாதி இல்லை.
வெறி நாய்க் கடிக்காவது மருந்து உண்டு. நாவினால் சுட்ட வடுவுக்கு?
இதைப் படித்து என்னைக் கடிக்க வருவோர் கவனத்துக்கு...
"பாலைப் பொழிந்து தரும் பாப்பா
அந்த பசு மிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்து வரும் நாய்தான்
அது மனிதர்க்கு தோழனடி பாப்பா..."
என்று பாடி இருக்கும் பாரதி "சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?" என்றும் பாடி இருக்கிறார் என்று நினைவு படுத்த விரும்புகிறேன்! 2/9/25

=============================================================================================

சுவாரஸ்ய செய்திகள்...


மகளுக்காக மாரத்தான் ஓடிய தாய்


மஹாராஷ்டிரா பீட் மாவட்டத்தை சேர்ந்த ரமாபாய்க்கு வயது, 47. செய்வது, சமையல் வேலை. மகள் படிப்புச் செலவுக்கு பணம் தேவைப்பட்ட அவருக்கு, மாரத்தான் ஓட்டத்தில் வென்றால் 3,000 ரூபாய் கிடைக்கும் என்று தெரிந்ததும், அந்த நிமிடத்திலேயே ஓட்டத்துக்கு தயாராகி விட்டார். போட்டி தொடங்கியது.  விலை உயர்ந்த ஷூ, டிராக் சூட் அணிந்தவர்கள் மத்தியில், சேலை அணிந்து, செருப்புக் காலுடன் ஓடினார் ரமாபாய். சிறிது துாரம் சென்றதுமே செருப்பு வழுக்கி விடுவதை உணர்ந்தவர், அவற்றை கைகளில் எடுத்துக் கொண்டு வெறும் கால்களில் ஓடினார்.  தன்னை விட வயதில் இளையவர்கள், அதுவும் தினமும் பயிற்சி செய்யும் இளைஞர்களுக்கு சமமாக ஓடினார். கடைசியில், அனைவரையும் முந்தி முதலிடத்தை பெற்று எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார்; பரிசும் கிடைத்தது. சேலையில் மாரத்தான் ஓடி வென்ற ரமாபாயின் வீடியோ, இணையத்தில், 'டிரெண்ட்' ஆனது. அவரது மன உறுதியை பாராட்டிப் புகழ்கின்றனர், நெட்டிசன்கள்.


*******************************


அமெரிக்கா தண்டிக்கிறது


அமெரிக்காவில் சில ஆண்டுகள் வசித்த நிலையில், மீண்டும் இந்தியா திரும்பும் முடிவுக்கு வந்துள்ளார் யுவன் இபனேஸ் கார்வார். 'அமெரிக்காவில் உடல் நல பாதிப்பு என்பது தண்டனைக்கு சமம்' என்கிறார், அவர்.  'இந்தியாவில் சில ஆண்டுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது, எம்.ஆர்.ஐ., சிடி ஸ்கேன் எல்லாம் எடுத்தும் எனக்கு, 47 ஆயிரம் ரூபாய் தான் கட்டணம் வந்தது. அமெரிக்காவில் அதேபோன்ற சிகிச்சைக்கு 23 லட்ச ரூபாய் கட்டணம் வந்தது. முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு பிரீமியம் செலுத்தி இருந்தாலும், கையில் இருந்து 6.67 லட்ச ரூபாய் செலுத்த வேண்டி இருந்தது' என்கிறார், வருத்தத்துடன்.

'இந்திய மருத்துவமனையில் நினைத்த போதெல்லாம் மருத்துவரை சந்தித்து சந்தேகங்களை போக்கினேன். அமெரிக்க மருத்துவமனையில் கடைசி வரை டாக்டரை சந்திக்க முடியவில்லை. சிகிச்சையும் படுமோசம். அமெரிக்காவில் நல்லவை பல இருந்தாலும், மருத்துவ சிகிச்சை பெறுவதில் பிரச்னை இருக்கிறது' என்ற அவரது 'இன்ஸ்டாகிராம்' வீடியோவை ஆமோதித்து, நெட்டிசன்கள் தங்கள் அனுபவத்தை கொட்டித்தீர்க்கின்றனர்.

**********************

உருகிய பனியால் உள்ளம் குளிர்ந்தது


கடந்த, 1963ல் ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலையில் ஏறிய ஜெர்மானிய வீரர் ஆல்பிரெட் ராத்பிஷர், 23, பனி பிளந்து உருவான பள்ளத்தில் தவறி விழுந்தார். நண்பர்கள் அவரை மீட்டனர். எனினும், அவர் வைத்திருந்த பை, அதில் இருந்த ஆவணங்கள், கேமராவை மீட்க முடியவில்லை. அந்த பனிமலை, கடந்த மாதம் உருகிவிட்டது.  ராத்பிஷர் தவற விட்ட பையும், அதில் இருந்த பொருட்களும் அதே இடத்தில் கிடந்தன. அவற்றை கண்டெடுத்த மலையேற்ற வீரர் ஒருவர், போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரித்த போலீசார், ராத்பிஷர் குடும்பத்தினரை கண்டறிந்து ஒப்படைத்தனர். இப்போது, 86 வயதான ராத்பிஷரும், அவரது குடும்பத்தினரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை என்ற செய்தி, இணையத்தில் 'டிரெண்டிங்'கில் உள்ளது.


========================================================================================

சாண்டில்யன் பக்கம் :  

முன்னுரை என்பது அந்தப் புத்தகம் எதைப்பற்றி பேசுகிறது என்பதை அறியத்தான்!


முன்னுரை


முன்னுரை என்பது ஆசிரியரின் இதயத்தைத் திறந்து காட்டும் கருத்துரை; வாசகரை நூலுக்குள் அழைத்துச் செல்லும் ஆரம்பக் கட்டுரை; குறிப்பிட்ட கதைக்குக் கொடுக்கப்படும் விளக்க உரை என்றும் சொல்லலாம். சாதாரண கதைகளுக்கு இவை பொருந்தும். சரித்திரக் கதையாயிருந்தால் இவற்றுடன் சரித்திர அஸ்திவாரமும் சேரும். சரித்திரக் கதை என்பது சரித்திரம், கதை இரண்டு அம்சங் களைக் கொண்டதாகையால், கதையில் சரித்திரம் எது, கதை எது. இரண்டும் எப்படி இணைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் விவரிக்க வேண்டியிருக்கும். ஓர் ஆசிரியன் எழுதும் சரித்திரக் கதை சரித்திரத்தின் முழு ஆதரவைப் பெறாவிட்டாலும் சரித்திரத்தால் புறக்கணிக்கப்படாதிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

கால் பங்கு சரித்திரத்தை வைத்தும் சரித்திரக் கதை எழுதலாம். முக்கால் பங்கு சரித்திரத்தை வைத்தும் கதை எழுதலாம். சரித்திரத் தோடு கதை இழைந்து ஓடுகிறதா என்பதுதான் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சம். இந்தக் காரணங்களால் சாதாரண கதையைவிடச் சரித்திரக் கதையை எழுதுவது மிகக் கடினமான பணியாகிறது.

'ராஜ்யஸ்ரீ' கதை சம்பந்தப்பட்ட வரையில் அத்தகைய கடினமான பணி எதுவும் கிடையாது. சரித்திர ஆதாரங்களைத் தேட வேண்டிய அவசியமில்லை. 'ராஜ்யஸ்ரீ'யின் வாழ்க்கையே ஒரு சரித்திரக் கதை. நூற்றுக்குத் தொண்நூற்று எட்டு சதவிகிதம் இதில் சரித்திரந்தான். அந்தச் சரித்திரத்தைச் சுவைபடக் கூறவே சில நிகழ்ச்சிகளையும் இரண்டு மூன்று பாத்திரங்களையும் சிருஷ்டித்திருக்கிறேன்.

வடபுலச் சக்கரவர்த்தி ஹர்ஷனுடைய அவையிலிருந்த வனான பாணபட்டன்; அவன் இயற்றிய 'ஹர்ஷன் சரித்திர'த்தில் ராஜ்யஸ்ரீயின் இன்பமும் துன்பமும் கலந்த சரித்திரத்தை விரிவாக எழுதியிருக்கிறான். தவிர இக்கதைக்கான சரித்திர அமைப்பபுகள் ஆசிரியர் வின்சென்ட் ஸ்மித் எழுதிய இந்தியாவின் புராதன வரலாற்றிலும் விரிவாகக் காணப்படுகின்றன.

இந்தக் கதையில் பிரபாகரவர்த்தனன், மகாராணி யசோவதி, ராஜ்யவர்த்தனன், சசாங்கன், தூதனான ஸம்வாதகன், உபாத்தியாயர் கம்பீரன் ஆசார்ய பண்டி எல்லோருமே சரித்திரத்தில் வாழ்ந்தவர்கள். சோதிடர்கள், ராஜ்யஸ்ரீயின் பணிப்பெண்கள் முதலானோர் கற்பனைப் பாத்திரங்கள்.

“ராஜ்யஸ்ரீ'யின் கதை முழுமையாக சரித்திரத்தின் அஸ்திட வாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது, காதலுக்கும் ஏனைய சிந்தை களுக்கும் உரிய பல நிகழ்ச்சிகளை இணைத்து சரித்திரமென்னும் எலும்புக்கூட்டுக்குக் கதையெனும் சதையும் உணர்ச்சியாகிறா ரத்தமும் சேர்த்து உயிர் கொடுக்க முயன்றிருக்கின்றேன்.

இது ‘சாவி'யில் தொடர்கதையாக வந்தபோது வரவேற்ற தமிழர்கள் இதைப் புத்தக வடிவத்திலும் வரவேற்பார்களென்பதில் ஐயமில்லை. இதைத் தொடர்கதையாக வெளியிட்ட 'சாவி" ஆசிரியருக்கும், புத்தக வடிவில் கொண்டுவரும் வானதி அதிப திரு. திருநாவுக்கரசு அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகும்.

சாண்டில்யன்

BIBLIOGRAPHY

The Early History of India - by Vincent A. Smith Harsha Charitra - by Bana.

Harsha - A Political study - by D. Devahuthi

Travels and Life of Hiuen Tsang - by Beal

Records of the western words - by Hiuen Tsang Deeds of harsha - by Professor Vasudev S. Agarwala

========================================================================================

பாஹே  பக்கம்  :
நான் உயரமோ குள்ளமோ - மற்றவர்களை அளக்க என்னை நானே ரசமட்டமாக்கிக் கொள்வதுதான் இயல்பாக நடக்கிறது.
என் புருவமட்டம்தான் என் பார்வை உயர முடிகிறது.

எவருக்கும் எவரிடமும் எப்போதும் குற்றம் குறைகளைப் பார்ப்பதற்கும் அதை வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டிருப்பதற்கும் எந்தத் தகுதியும் உரிமையும் இல்லை என்பது அடுத்தடுத்து நிரூபணமாகி வந்தும் -
இதையே ஒவ்வொருவரும் 'நித்திய கர்மானுஷ்டான'மாக செய்துகொண்டுதானே இருக்கிறார்கள்?
தான் செய்யும்போது சரியெனப்படுவது அதையே பிறர் செய்யும்போது எப்படித் தவறாகிறது?
இது ஒரு மன நோய்தானே?
எனக்கும் இந்த மனநோய் எப்போதும் இருக்கிறதே, மீள்வது எப்போது? முடியவே முடியாதோ?
சிந்தனைக்கும் செயலுக்கும் பலசமயம் தொடர்பே இல்லாதும் போகிறதே அது ஏன்?
'நண்பர்கள் அறுக்கிறார்கள் என்று நினைக்கிறேன்..... நான்?
என் 'குப்பை' கவிதை நினைவுக்கு வருகிறது.
எனக்குள்ள ஒரு ஆறுதல் - நான் என்னைப் பார்த்தும் சிரிக்கவும் செய்கிறேனே, அதுதான்!

====================================================================================

 நெல்லை கண்ணன் பக்கம்  :  அரசியல்  நடைமுறை உண்மைகள் காமராஜ் காந்தி நவகாளி சோனியா பிரதமர் ஜாதியற்ற......

========================================================================================

கவிதைப் பக்கம்  :  கவிஞர் தாமரை.  'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' பாடல் நினைவிருக்கிறதா?  'வசீகரா என் நெஞ்சினிக்க' பாடல் நினைவிருக்கிறதா?  அதெல்லாம் இவர் பாடல்கள்தான்.

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் என்ற கவிதையில் அம்மா அப்பாவை விட்டு பிரிந்து வேறொரு இடத்தில் விடுதியில் தங்கியிருந்து படிக்கையில் அதை வெறுத்தது பற்றி கவிதையின் முன் பகுதியில் சொல்லி,இறுதியில் இப்படிச் சொல்கிறார்….  


குறைந்தது நூறு முறை 
என் கடிதம் 
சுமந்து போனது 
கண்ணீரையும், 
கடந்தகாலத்தையும், 
வந்துஅழைத்துப் போங்களையும்… 

திடீரென்று எனக்குள் ஒரு கதவு 
அறைந்து திறந்தது 
என் அறைக்கதவு திறந்தது போலவே… 
அறை தோழியாய் வந்தவள் 
என்னைவிடச் சின்னவள் 
அகதிகள் ஒதுக்கீட்டில் 
இடம் கிடைத்திருக்கிறது 
யாழ்ப்பாணத்துக்காரியாம்! 
இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து 
கள்ளிப்பால் போல் 
ஒவ்வொன்றாய் சொட்டிய கதைகள்… 
என் நேற்றைய கடிதம் கண்டு 
அம்மா வியந்திருக்க வேண்டும் 
“அம்மா நான் மிக நலம் 
அடிக்கடி வர வேண்டாம் 
அழுவதை நான் நிறுத்தி விட்டேன் 
அடுத்த முறை அங்கே வரும்போது 
ஒரு சினேகிதியை அழைத்து வருவேன்… 
முடிந்தால் அவளையும் மகளே என்று விளி…”


வீடு

நண்பன் சொன்னான் 
வீட்டுக்குள்ளிருந்தே 
விண்மீன்கள் பார்த்தானாம்...-
கூரையில் ஓட்டைகள்! 
ப்பூ! இதென்ன பிரமாதம்?
என் வீட்டுக்குள்ளிருந்து 
வானத்தையே பார்க்கலாம்!

======================================================================================

தமிழருவி மணியன் கூட சுவாரஸ்யம்தான்...

========================================================================================

வாட்ஸாப்பில் வந்தது...   மனத்தைக் கவர்ந்தது...  பகிர வைத்தது...


கட்டிய மனைவி சலிப்படைந்து எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.

பெற்ற பிள்ளை சனியனே என்று சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.

சொத்து சேர்த்த தகப்பனை தவிக்க விட்டு சொத்துக்கு மக்கள் அடித்துக் கொள்ளும் நிலை வருவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.

இழுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நாளை போக வேண்டும் என்று கடவுளை மகள் வணங்குவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.

மூன்று வேளை உணவில் ஒருவேளை உணவை கொடுத்து தின்னு தொலை சனியனே என்று சொல்லும் முன் மரணம் வந்து விட வேண்டும்.

உறவுகள் எல்லாம் கூடி அறியாமல் செய்த பாவத்தை எடுத்துரைத்து கைத்தட்டி சிரிப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.

நோயில்லாத  உடல் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்தில் மரணம் வந்துவிட வேண்டும்.

பெற்ற பிள்ளைகள், கட்டிய மனைவி எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.

நீ எல்லாம் வாழ்ந்து என்ன பயன் என்று மனைவியும் மக்களும் மற்றவர்களும் சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்....... என தந்தை நினைக்குமாறு நடந்து கொள்ள வேண்டாம் 

தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!

அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடு வான்

தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்

அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்

தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்

அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்

தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள் ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது

தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்

அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்

தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு பாடமாக எண்ணி பயன் அடைந்து கொள்ளுங்கள்

தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக் கூடியவர்

மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்

முகம் தெரியாத யாருக்கோ மரியாதை செய்கிறோம் உன்னை கொஞ்சி வளர்த்த தந்தைக்கு முன்பு மரியாதை செய்.

அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம்

தாய் தன் பிள்ளை பத்திரமாக இருக்கணும்னு மார்பில் அனைத்துக் கொள்வாள்.

ஆனால்  தந்தைதான் பார்க்காத உலகத்தையும் என் பிள்ளை பார்க்க வேண்டும் என்று தன் தோழின் மேல் தூக்கி நான் பார்க்காத உலகத்தை நீ பார் என்பவனே தந்தை அவர் உன்னுடைய அருகில்
இருக்கும்போது பயன் படுத்துக் கொள்.

தந்தையை போல் உண்மையான நண்பன் இந்த உலகத்தில் யாரும் இல்லை.

இது உண்மை...சத்தியம்.

 தந்தையைமதித்தவன் கோபுரத்தின் மேல்.

 தந்தையைமதிக்காதவன் வாழ்கையில் எந்த உயரத்திற்கும் செல்வது கடினமே.

இப்படிக்கு

 தந்தையின் அன்பை உணரும் உங்களில் ஒருவன்...!!


======================================================================================= 1

ராஜராஜசோழன்படம் ஒன்று 1969 கல்கி ஒன்றில் அட்டைப்படமாக வந்திருந்திருக்கிறது.   அதைப்பற்றிச் சொல்லி விட்டு ராஜாஜி பற்றிய ஒரு சம்பவமும் சொல்கிறார் திரு மீ ப சோமு.
அட்டைப் படவிளக்கம்,  - மீ ப சோமு 

ராஜராஜசோழன்

தமிழ் நாட்டின் தனிப் பெருமையை, பண்பாட்டை, தெய்வ பக்தியை, காலவெள்ளத்தை  எதிர்த்து நிற்கும் கலைத்திறமையை உலகத்து நாடுகளெல்லாம் எடுத்தியம்பியவன் ராஜராஜ சோழன்; அறநெறி பிறழா ஆட்சி புரிந்து அரும் பெரும் புகழ் பெற்றவன்; பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே 'குட ஓலை சீட்டு' என்ற முறையில் மக்கள் அளிக்கும் வாக்குக்கு மதிப்பளித்த மாமன்னன் அவன்; ஊருக்குள் புகுந்து, ஊர்களை எல்லாம் குடித்து, ஊரையே அழிக்கும் பெருவெள்ளத்தைத் தேக்கி அணைகட்டி  அளிக்கும் பெரு வெள்ளத்தைத் தேக்கி, அணைக்கட்டி பாசன வசதியால் பயிர் வளர்க்கும் அரிய சாதனையை ஏற்படுத்திய சோழ மன்னர் பரம்பரையில் உதித்த வீர மன்னன் அவன்.

அத்தகைய மாமன்னனது வரலாற்றை வண்ணப் படமாகத் தயாரித்திருக்கிறார், துணிச்சல்காரரான ஜி. உமாபதி.  நல்ல கலை உள்ளம் படைத்த இவர் தென்னகத்திலேபே முதன் முதலில் 'சினிமாஸ்கோப்' முறையில் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

ஏராளமான பொருட்ச்செலவையும், உழைப்பையும் நல்கி, இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். ஆடை, அணிகலன்களுக்கு மட்டுமே ஏழு லட்ச ரூபாய்கள் செலவாகி யிருக்கின்றன! ராஜ ராஜ சோழனின் உடையின் செலவு மட்டும் ஏழாயிரம் ரூபாய்களாம்!

தமிழ் நாட்டுக்குப் பெருமை தரும் முறையில், விரைவில் திரையிடப்பட விருக்கும் "ராஜ ராஜ சோழ"னில் வரும் பாத்திரங்களை இந்த இதழ் அட்டையில் வாசகர்களுக்கு வண்ணக்கலை விருந்தாக அளித்து மகிழ்கிறோம்.

யாரென்றால் வாரென்பேன் 

         வானென்றால் வானென்பேன் 

யாரென்றால் நாரென்பேன் 

நன்!

இந்தப் பாடலைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை இங்கே குறிப்பிட வேண்டும்.

மகாமகோபாத்யாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் திருநெல்வேலியில் நடந்த வெள்ளகால் முதலியார் அவர்களின் எண்பதாண்டு நிறைவு விழாவுக்கு வந்திருந்தார். சமயம் அது! ஒரு நாள் டி. கே. சி. வீட்டில் ஐயரவர்களின் பேச்சுக்கு இடையே இந்தப் பாடலைப் பற்றிய குறிப்பு வந்தது. அப்போது டி. கே. சி. சொன்னார்: "இந்தப் பாடலுக்குக் காரணமான மூலப் பாடல் இருக்கிறதே, கம்பர் எழுதியது என்பதாக, அது இடைச்செருகல்! ஆனால் காளமேகம் பாட்டு பலே ஜோர்! அதிலும் அந்த "நன்" இருக்கிறதே நன், அடடா, எப்படி வந்து விழுந்திருக்கிறது!"

ஐயர் சொன்னார்: "இந்த "நன்" என்பதன் அழகையும் சுவாரஸ்யத்தையும் புரிந்துகொள்ளாத சில பதிப்பாசிரியர்கள், பிற்காலப் பதிப்புகளில் "நன்" என்பதை "நளன்" என்று திருத்தி அச்சிட்டிருக்கிறார்கள்! பழைய சுவடிகளில் 'நன்' என்றே இருக்கிறது!"

இதற்கு டிகேசி சொன்னார்: "ரொம்பச் சரி! அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்து  நான் என்னுடைய புத்தகத்தில் "நளன்" என்று அச்சாகியிருப்பதை "நன்" என்றே பேனாவினால் திருத்தி வைத்திருக்கிறேன்!" என்று கூறித் தமது புத்தகத்தை எடுத்து வந்து காட்டினார் ரசிகமணி!

இந்த நிகழ்ச்சியை ஒரு சமயம் ராஜாஜியிடம் நான் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் இதே போன்ற இன்னொரு சுவையான அனுபவத்தைச் சொன்னார். அவர் இந்த வேளையில் கல்கி நேயர்களோடு பரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். பிழையில்லாத ஒரு சொல்லைப் பிழை என்று எண்ணிக் கொண்டு திருத்துகிற விபரீதப் பிழையைப் பற்றியதே அது! குறியை நெடிலாக்கியதே அதுவும்!

மகாபாரதம் (பழைய வியாசர் விருந்து) நூலில் சக்கிராச்சாரியர் என்று தாம் குறிலாக எழுதியிருந்ததை, "ப்ரூஃப்" திருத்துகிறவர் ஒரு சமயம் சக்கிராச்சாரியார் என்று "யா"வாக நீட்டி அச்சிட்டு விட்டதைப் பற்றி ராஜாஜி என்னிடம் சொன்னார்.

"சோமு, இதில் நாம் இருவரும் ரசிக்க வேண்டியது எதைத் தெரியுமோ? "ப்ரூஃப்" திருத்தியவருடைய பகுத்தறியும் ஆற்றலைத் தான்! இராஜாஜிகோபாலாச்சாரியார் எழுதியிருப்பதால் அது சக்கிராச்சாரியாராகத்தான் இருக்கவேண்டும் என்பது அவருடைய லாஜிக் !

இவ்வாறு சொல்லித் தமது வழக்கமான மோகனக் குறும்போடு சிரித்தார் ராஜாஜி! அந்தச் சிரிப்பு அப்படியே கண்ணுக்குள் நிற்கிறது!

=======================================================================================

1961  தீபாவளியில் வெளியான தேவரின் 'தாய் சொல்லை தட்டாதே' 140 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.  ஒரு சிறு ஊடலுக்குப்பின் தேவரும் எம் ஆரும் மறுபடி இணைந்த படம்.  K V மகாதேவன் இசையில் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் என்றுதான் சொல்ல வேண்டும்.  பாடல்களை எழுதி இருந்தவர் கவியரசர்.

இந்தப் படத்திலிருந்து TMS பாடிய ஒரு பாடல் "போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே..."

MGR, சரோஜா  தேவி,அசோகன், M R ராதா ஆகியோர் நடித்த படம்.

கண்கள் இரண்டில் அருள் இருக்கும் சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும் உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும்  பாயும் புலியின் கொடுமையை இறைவன் பார்வையில் வைத்தானே புலியின் பார்வையில் வைத்தானே இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே இதய போர்வையில் மறைத்தானே

கைகளை தோளில் போடுகிறான் அதை கருணை என்றவன் கூறுகிறான்  பைகளில் எதையோ தேடுகிறான் கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

34 கருத்துகள்:

  1. இன்றைய வெள்ளி பதிவு நீண்டிருந்தாலும் ஒவ்வொரு பகுதியும் நன்றாக இருந்தன. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. கடைசி வரை என்ன என்னெல்லாம் குறைகள் சொல்லி நாய்கள் வளர்ப்பவர்களை கோபி காயப்படுத்தினார் என்று சொல்லவே இல்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது சொன்னாலும் காயப்படுத்தினார்கள்.  யு டியூபில் ஒருவேளை கிடைக்கலாம்.  அரசாங்கம் எவ்வளவு வீண் செலவு செய்யும் என்று கேட்டார் கோபிநாத்  அணியின் ஒரு அறிவுஜீவி.  அரசு மருத்துவத்துக்கு கணக்கே பார்க்கக் கூடாது.  கல்விக்கும் அப்படிதான்.  அதை உணர்ந்து பேசவில்லை.  அதே போல இதற்கு மேல் அவர்கள் பேசியது எதையாவது நான் இதில் சேர்த்திருந்தால் நானும் ஆபாச வசைபாடுகளால் பாதிக்கப்பட்டிருப்பேன்.  அப்போது நேரம் அப்படி.

      நீக்கு
  3. ஈந்த ஒன்ளுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. இரண்டும் வெளிவந்தால்தான் நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடும்.

    எடின் செய்யப்பட்டுச் சுருக்குவதால் தொலைக்காட்சியின் கருத்தே இறுதியான கருத்தாக அமைந்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபிநாத் காதில் ஹெட்போன் வைத்துக்கொண்டு கட்டளைகளுக்கேற்ப செயல்பட்டார்.  அவர்கள் நோக்கம் டி ஆர் பி ரேட்டிங்.  என் சந்தேகம் திட்டும் அணியின் சிலரும் காதில் ஹெட்போனுடன் இருந்திருப்பார்கள் என்று.

      நீக்கு
  4. அமெரிக்கா தண்டிக்கிறது........ இதுதான் மேற்கத்தைய நாடுகளின் நிலை. இங்கும் வரும் வாய்ப்பு உண்டு என்றாலும், முற்றிலும் தனியார் மயமாகாமல், சிறு சிறு கிளினிக்குகளும், இரக்கமுள்ள மருத்துவர்களும் இருக்கும் வரை நமக்குக் கவலை இல்லை.

    நாங்கள் கன்சல்ட் செய்யும் முதிர்ந்த மருத்துவருக்கு 80 வயது. போய் வர எங்களுக்கு 450 செலவாகும். அவர் கட்டணம் ஒருவருக்கு 200 ரூ. சென்ற முறை, அதிகமாக்கலையா என்று கேட்டேன். இலவசமா, சேவையாகச் செய்யணும், ஆனால் செய்யவில்லை என்றார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கும் அந்த நிலை வந்து கொண்டுதான் இருக்கிறது.  அதுபற்றி பின்னர் எழுதுகிறேன்.  ஏற்கனவே ஆஸ்பத்திரி பற்றி நிறைய எழுதுகிறேன் என்கிற கு சா இருக்கிறது!!

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  6. அனைவருக்கும்
    ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. உங்களுக்கும் வாழ்த்துகள். பதிவில் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவிலையே என்று தேடாதீர்கள்! ஹிஹிஹி..

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

    இன்றைய வெள்ளி சிதறல் பதிவு அனைத்தும் நன்றாக உள்ளது நன்றாக உள்ளது. நீயா, நானா, பட்டிமன்றங்கள் போன்றவற்றில் இறுதி முடிவு நல்லவிதமாக கிடைக்காது என்றுதான் சொல்ல வேண்டும். முன்பெல்லாம் இதை வீட்டில் சிலசமயங்களில் பார்ப்போம். நீங்கள் குறிப்பிடும் இந்த நிகழ்ச்சியை ஒருநாள் தேடிப் பார்க்க வேண்டும்.

    அமெரிக்கா மருத்துவ செலவுகள் பற்றி குறிப்பிட்டிருப்பது சரிதான். இங்கும் பெரிய ஆஸ்பத்திரி என்றால், இத்தகைய செலவுகள் நீள்கிறது.

    தாமரையின் கவிதைகள் நன்றாக இருந்தன. "சட்டென்று மாறுது வானிலை" என்ற வரிகளை சொல்லிக் கொண்டேயிருப்பேன் .

    தந்தையைப் பற்றிய பதிவும் அருமையாக இருந்தது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றிருப்பவர்கள் தான் உயர்ந்ததை பிறகுதான் உணருவார்கள். உங்கள் தந்தையின் கவிதையும் அருமை.

    இன்றைய திரைப்பட பாடல் கருத்துள்ள பாடல். பலமுறை கேட்டு ரசித்துள்ளேன். இப்போதும் சிறிது நேரம் கழித்து கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேகமாக சடசடவென்று ஒரு மழை பெய்து ஓய்வது போல சட்சட்டென்று பகுதிகளை; படித்து கருத்து சொல்லி விட்டீர்கள். நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. உங்களின் இந்த சிறப்பான உழைப்புக்கு பாராட்டுக்கள். உங்களது உடனடியான பதிலுக்கும் நன்றி. சொல்லப்போனால் இன்று உங்கள் பதிவை ஐந்து மணிக்கே படித்து விட்டேன். ஆனால்,கருத்துக்கள் அளிப்பதற்குள் மறுபடி ஒரு சிறு உறக்கம் வந்து ஆட்கொணடு விட்டது. எனவே தாமதமான முழிப்பில் வேகமான கருத்து. கிருஷ்ண ஜெயந்தி வேலைகள் அழைக்கின்றன. மறுபடி கிடைக்கும் நேரத்தில் அனைத்தையும் படித்து விட்டு "தூறலாக" வருகிறேன். நன்றி சகோதரரே.

      நீக்கு
    3. ஆஹா உப்பு சீடை, வெல்ல சீடை, முறுக்கு சுக்குப்பொடி எல்லாம் தயாரா? இதோ வர்றேன்!

      நீக்கு
    4. வெறும்ன வர்றீங்களா இல்லை மெட்டல் பல்செட்டை பற்கள் மேல மாட்டிக்கிட்டு வர்றீங்களா? வெல்லச் சீடை உப்புச் சீடைலாம் கஹ மேடம் சாஃப்டா பண்ணுவாங்களா இல்லை பாரம்பர்ய முறையில் பல் உடைபடுவதுபோல பண்ணுவாங்களானு தெரியலை

      நீக்கு
  8. ராஜராஜ சோழரின் சிறப்புகளைச் சொல்லியிருக்கின்ற பகுதி சிறப்பு

    பதிலளிநீக்கு
  9. ஜென்மாஷ்டமி வாழ்த்துகள்! காரிருளில் உதித்த கண்ணன் நம் மன இருளை போக்கி மங்கலங்களை நல்கட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டும்... டும்.... உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

      நீக்கு
  10. ///சட்டென்று மாறுது வானிலை...///

    முன்னோட்டங்களைக் கவனிப்பதில் கவனம் இல்லை...

    ஆற்று வெள்ளம் நாளை வரத்
    தேற்றுதே குறி...

    என்று கணித்தவன் தமிழன்...

    ஆடியிலே காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்.....

    சும்மா தாமரை மரிக்கொழுந்துன்னு தன் வியப்பு...

    பதிலளிநீக்கு
  11. ஆமாங்கறேன்....

    ஐப்பசியில மழை வரத்தானே
    ஆடியில காத்தடிக்குது....

    பதிலளிநீக்கு
  12. நமது பழமொழிகளில் பற்று வைத்தாலே
    போதும்....

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. தலைப்புக்கு ஏற்ற பாடல் பின்னால் வந்து விட்டதே! பாடல் கேட்டேன் அருமையான பாடல்

    பதிலளிநீக்கு
  15. வளர்ப்பு செல்லங்களை வளர்ப்பவர்களை தவறாக பேசினார்களா? இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை.

    //சொல்லிக் கொடுத்த கருத்துகளை சொல்ல முடியாமல் சொல்ல மறந்து பாதியில் நின்றாலும் கவலையில்லை. நடுவர் 'அவர் என்ன சொல்றாருன்னா' என்று அவரே பேசி கருத்தை நிறைவு செய்தார்//

    இப்படி வேறு நடக்கிறதா? எல்லாம் முன்பே தயார் செய்து பேசபடுகிறது என்பார்கள் நீங்கள் அதை உண்மை என்று சொல்லி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. தோற்றுதே குறி...

    என்றிருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு

  17. மகளுக்காக மாரத்தான் ஓடிய தாய்க்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    நம் நாட்டு மருத்துவத்தை நாடி வெளி நாட்டினர் வருகிறார்கள்.
    அமெரிக்காவில் இன்சூரன்ஸ் இருந்தால் தான் வைத்தியம் பார்க்க முடியும். பெரிய வியாதிகளுக்கு நாம் செய்து கொண்டு போகும் இன்சூரன்ஸ் கவர் ஆகாது.

    பதிலளிநீக்கு
  18. பனிமழை உருகி 86 வயதான ராத்பிஷரின் தவறவிட்ட பொருள் கிடைத்தது மகிழ்ச்சி. அதை கண்டு எடுத்தவர் பத்திரமாக உரியவரிடம் சேர்த்தை பாராட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  19. அப்பாவின் சுய அலசல் சிந்தனை பதிவு அருமை.
    சாண்டில்யன் முன்னுரை நன்றாக இருக்கிறது.

    நெல்லை கண்ணன் பக்கம் கேட்டேன், காந்தி, காமராஜ் பற்றி நன்றாக சொன்னார்.
    தாமரையின் கவிதை அருமை.

    தமிழருவி மணியன் குமாரசாமி ராஜாவை பற்றி சொன்னதை கேட்டேன். மக்களுக்கு நன்மை செய்து இருக்க்கிறார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!