வீடு வந்தபோது இடது கை முஷ்டி லேசாக வீங்கியிருந்தது. விரல்களை அசைக்க முடிந்தது.வலி இருந்தது. அன்று வலி நிவாரணி ஒன்று லோகல் மெடிகல் ஷாப்பில் வாங்கிச் சாப்பிட்டு விட்டு மறுநாளும் வலி தொடர்ந்தாலும், நட்பு மற்றும் உறவுகள் சொன்னதாலும் மருத்துவமனை சென்று எக்ஸ்ரே எடுத்தார்.
சிறு கோளாறு இருப்பது தெரிந்தது. அதாவது 'சிறிய' என்று இவர் நினைத்தார்! முதலில் கட்டுப் போட்டு அனுப்பிவிடத் தீர்மானித்தது அவர் இருந்த ஏரியா சிறிய மருத்துவமனை. இவரின் நண்பர் ஒருவர் மருத்துவர். அவர் பார்த்து விட்டு "சர்ஜரி பெஸ்ட்.... இருபதாயிரம் ரூபாய் வரை ஆகும்.... ரொம்ப அதிகம்னா முப்பதாயிரம் ஆகலாம்" என்று சொல்ல, தென் சென்னையில் பெரிய பெயரை உடைய ஒரு மருத்துவமனை சென்றார்.
ஐம்பத்தைந்தாயிரம் ரூபாய்.
ப்ளேட், ஸ்பூன் (!) எல்லாம் வைத்து சர்ஜரி தேவையா, அல்லது மாவுக் கட்டு மட்டும் போதுமா என்று விவாதித்து செகண்ட் ஒபீனியன் என்று அண்ணா நகர் பக்கம் இன்னொரு பெரிய ஸ்பெஷாலிடி மருத்துவமனைக்குச் சென்றார்கள். எக்ஸ்ரே எல்லாம் புதிதாக மறுபடி கூடுதல் விலையில் எடுக்கப் பட்டு, 'சர்ஜரி தான் பெஸ்ட்' என்று சொல்லி, அவர்கள் கொடேஷனைக் கொடுத்தார்கள்.
ஒன்றரை லட்சம் ரூபாய்!
முப்பதாயிரம் ருபாய் ஆகும் என்று சொன்ன (நண்ப) மருத்துவரிடம் அணுகியபோது அவர் சற்றே சுதாரித்திருந்தார்! ஆனாலும் ரீசனபில்! தன் தோழைமை மருத்துவருக்கு சிபாரிசு செய்தால் அறுபதுக்குள் முடியும் என்றார். சரி, ஐமபதையிரம் சொன்ன இடமே தேவலாம் என்று முடிவு செய்து மறுபடி அங்கேயே சென்று அட்மிஷன் நடைமுறைகளை ஆரம்பித்த போது இவர்கள் கொடேஷன் கொடுத்தார்கள்! ஒரு லட்சத்து இருபதாயிரம்!
வீக்கம் ரொம்பக் கம்மியாய் இருக்கிறது, வலியும் இல்லை பேசாமல் அப்படியே இருந்து விடுகிறேன் என்கிறார் இவர்.
மாவுக் கட்டு போட்டால் நேராக உட்காருமா, அப்புறம் பிசியோதெரபி செய்ய வேண்டும் அதற்கு இவர் வயது தடையாக இருக்கும், சர்ஜரி என்றால் உடனடி ரிசல்ட், ஆனால் அதற்கும் பிசியோதெரபி உண்டு... "மாவுக் கட்டு எல்லாம் இப்போ யார் சார் போடறாங்க... சர்ஜரிதான்" என்றார் மருத்துவத் துறை நண்பர் ஒருவர்.
ஏகப் பட்ட விவாதங்கள்.
என்ன ராசியோ நண்பரின் மகனும் சமீபத்தில் இதே மாதிரி கையில் சர்ஜரி செய்து கொண்ட வகையில் முப்பதாயிரம் ரூபாய் செலவாகி இருந்தது. அது கேரளாவில்! இதை விடப் பெரிய சிகிச்சை- ஒரு விபத்தில் ஏற்பட்டது. அங்கு விலை நிலவரம் கம்மி போலும்!
"நீங்க என்ன கையிலிருந்தா கொடுக்கப் போறீங்க.... இன்சியூரன்ஸ்காரங்க கொடுக்கப் போறாங்க...உங்களுக்கென்ன...உங்கள் கையிலிருந்து பத்தாயிரமோ இருபதாயிரமோதான் செலவாகப் போகுது... நீங்கள் சொன்ன ரேட்டை விடவும் இது கம்மிதானே..." என்று கூறின ரிசப்ஷன்கள்!
அறுவைச் சிகிச்சை முடிந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இந்த விலை நிலவரங்கள்தான் ஆச்சர்யமேற்படுத்தியது.
இன்சியூரன்ஸ், மெடிக்ளெய்ம் எல்லாம் போடாதவர்கள் கதி என்ன?




