Enough லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Enough லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.3.16

போதும்


 
 Image result for enough images
 
 
 
"போதும்"

இந்த வார்த்தையை மனதாரச் சொல்லத் தெரிந்தவன்தான் பெரிய பணக்காரனாம்.

மனிதன் "போதும்" என்று மனதாரச் சொல்லும் ஒரே இடம் சாப்பிடும் போதுதான்.  வயிறார சாப்பிடுவதால் மனம் நிறைந்து போதும் என்று சொல்ல முடிகிறது!

சம்பாதிக்கச் சம்பாதிக்கப் பணத்தைப் பார்க்கும் மனிதனுக்கு "போதும்" என்கிற எண்ணமே ஏன் வருவதில்லை?  முதலில் தன் வயிற்றுப்பாட்டுக்காக சம்பாதிக்கத் தொடங்குபவன், பின்னர் அடுத்த வேளைக்காக, நாளைக்காக, தன் சந்ததியினருக்காக என்று தொடர்ந்து பணம் சேர்க்கத் தொடங்குகிறான்.

அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டுதான் என்ன செய்வார்கள்?  


ஒரு கதை சொல்வார்கள்.  ஒரு ஊருக்கு முற்றும் துறந்த ஒரு முனிவர் வந்தாராம்.  ஊர்க்காரர்கள் அவருக்கு உதவி செய்கிறேன் என்று அவர் ஆஸ்ரமத்தில் புகுந்த எலியை விரட்ட பூனை ஒன்றைத் தந்தார்களாம்.  பூனைக்கு தினமும் பால் வைக்க வேண்டி பசு ஒன்று..   பசுவுக்கு புல் போட ஒரு தோட்டக்காரன்.. 

கதை முன்னே பின்னே இருக்கலாம்.  போதும் என்ற மனம் இல்லாமல் ஒரு தேவைக்குப் பார்க்கப் போக, தேவைகள் விரிந்து கொண்டே போவதைச் சொல்லத்தானே இந்தக் கதை..
 
எவ்வளவு பணம் சேர்ந்தால் ஒரு மனிதனுக்கு போதும் என்று தோன்றும்?
 
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று அதனால்தானே சொன்னார்கள்?
 
சில பேர்கள் பேசுவதைக் கேட்கையில் போதும் என்று சொல்லத் தோன்றும்.  

 
இதுவரைப் படித்த புத்தகங்கள் போதும், இனி படிக்க வேண்டாம் என்று தோன்றுமா 
 
வாழ்ந்தது போதும் என்று சொல்ல எத்தனை பேர் தயார்?
 
சண்டை போதும் ; கோபம் போதும் ;  சோகம் போதும் ; ஆத்திரம் போதும் ; மன இறுக்கம் போதும் ;  சரிதான்!
 
அதே சமயம் எதுவுமே அளவாக இருக்க வேண்டும் என்பதால் சந்தோஷம் கூட அளவோடு போதும்,  சந்தோஷம் மட்டுமே இருந்தால் திகட்டி விடுமே....

 
ஊழல் போதும் என்று நாம் சொல்லலாம்.  ஊழலைச் செய்பவர்கள் சொல்ல மாட்டார்களே....

 


==============================
=====================

கே ஜி ஜி

 
போதும் போதும் .......

எப்பொழுது நாம் இப்படிச் சொல்கிறோம்?

இன்பமயமான அனுபவத்திலா அல்லது இன்னல்கள் துன்புறுத்தும் பொழுதா?

பெரும்பாலும் இன்னல்கள் வரும்பொழுதுதான்.

பாயாசம் நன்றாக இருந்தால் நான்கு அல்லது ஐந்து முறை இலையில் போட்டு உறிந்து குடித்துவிட்டு   பிறகு இன்னும் உண்டால் ஆபத்து / இன்னல் என்ற நிலையில் போதும் போதும் என்போம் .

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று இன்னல்களுக்கிடையே பாடியவர்களைப் பார்த்திருக்கறோமே!

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று படித்திருந்தாலும் எனக்கு பொன் மீது ஆசையில்லை எனவே போதும் என்று சொல்லமாட்டேன் என்று நான் வாதம் புரிவேன் .

யாராவது நமக்கு புத்திமதி கொடுத்துக்கொண்டே இருந்தால் போதும் நிறுத்து என்று கூற ஆசைப் படுவோம்.

எப்பவோ பார்த்த பாடல் காட்சி ஒன்றும் நினைவுக்கு வருகிறது. காருக்குள்ளே காதலர்கள் பாடிய 'போதுமோ இந்த இடம் .... ' பாடல்தான் அது.
 

தேர்தல் நேரத்தில் நடிகர் கார்த்திக் கூட்டம் கூட்டி விடுகின்ற அறிக்கையை படிப்பவர்கள் ' போதும் ' போதாதற்கு இவர் வேற ஒரு பக்கம்'  என்று சொல்லி சிரிப்பார்கள்.

தேர்தல் ஊர்வலங்களில் கோஷம் இட்டுச் செல்வதைக் கேட்டிருப்போம் .... ' இந்தக் கூட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா!


இது போதுமா அல்லது இன்னும் வேண்டுமா !


==============================================================
 
 

Image result for enough images