Milk man and the dog. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Milk man and the dog. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.1.12

பால்காரர்

     
அமைதியான இரவு; பெங்களூர்க் குளிர். போர்த்திக்கொண்டு படுத்து, நல்ல தூக்கம்.

மின் விசிறிச் சத்தம் கூட இல்லாமல் இருந்த அமைதியையும், தூக்கத்தையும் ஒருங்கே கெடுத்தது, நாய் குரைப்புச் சத்தம். வீட்டிலே உள்ள மற்ற மக்கள் எல்லோரும் ஆறு வருடங்களுக்கு மேலாக இந்தக் குளிருக்கும், குரைப்புச் சத்தங்களுக்கும் பழகிய கும்பகர்ணர்கள். நான் ஒருவன்தான் இந்தச் சூழ்நிலையில் இரண்டுங்கெட்டான். 

குறைக்கின்ற அந்த நாய் பக்கத்துத் தெருவிலிருந்து குறைப்பது போல தூரத்திலிருந்து குறைத்துக் கொண்டிருந்தது. 'போ போ போய் விடு' என்று சொல்வது போல குரைப்புகள்; சில சமயங்களில் அழுகை கலந்த முறையீடு! இது தெரு நாய் குரைப்புதான். வீட்டு நாய் குரைத்தால், அந்தந்த வீட்டு மக்கள் அதை எப்படியாவது சமாதானம் செய்து அமைதியை நிலைநாட்டி விடுவார்கள். 

திடீரென்று ஒரு மௌனம் - நிசப்தம். நம்ப முடியாத சூழ்நிலையை மனம் வாங்கி, நாய்க்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றி,  உறக்கம் வந்து கண் இமைகளை அழுத்தும் நேரம் --- திரும்பவும் குரைக்கத் தொடங்கியது அந்த நாய். 

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், ஓஷோ சொன்ன யுக்தியைப் பின்பற்றினால் என்ன என்று தோன்றியது. அதாவது அந்த நாய், நமக்குப் பிடித்த கடவுள் பெயரையோ அல்லது நமக்குப் பிரியமானவர்களின் பெயரையோ சொல்வது (குரைப்பது!) போல கற்பனை செய்து கொள்ளலாம். அப்போ நமக்கு அது ஒரு தொந்தரவாகத் தெரியாது என்ற யுக்தி அது. 

ஊ ஹூம் - அதுவும் சரிப்பட்டு வரவில்லை. அந்த நாயின் குறைப்பு எனக்குப் பிடித்தவர்களின் பெயரின் எழுத்துகளை சரியாகச் சொல்லவில்லை! அதற்காகவே அதை நேரில் சந்தித்து, ஒரு கல்லால் அடித்து, அதை ஓட ஓட விரட்டி விட வேண்டும் என்று தோன்றிற்று. 

நேரம் என்ன என்று பார்த்தேன். காலை மணி நாலரை. சரி. எப்படியாவது அந்த நாயை விரட்டிவிடுவோம் என்று நினைத்து, படுக்கையிலிருந்து எழுந்து, ஸ்வெட்டர், கம்பளிக் குல்லாய், போர்வை எல்லாம் அணிந்து, போர்க்கோலம் பூண்டு வந்து, வாசல் கதவைத் திறந்தேன். அடேடே - வாசல் கிரில் கேட் பூட்டப்பட்டிருக்கின்றதே! இந்தப் பூட்டின் சாவி எங்கே இருக்கின்றது என்று வீட்டில் இருக்கின்றவர்கள் யாரையாவது எழுப்பிக் கேட்டால்தான் தெரியும். அப்படி எழுப்பினால், எழுப்பப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அந்த நாயை விடக் கடுமையாக என்னைப் பார்த்துக் குரைக்க ஆரம்பிப்பார்கள் என்பது சர்வ நிச்சயம். 

'என்ன செய்யலாம்?' என்று யோசித்துக் கொண்டிருக்கையில், ஆபத்பாந்தவனாக சைக்கிளில் வந்து இறங்கினார், எதிர் வீட்டுப் பால்காரர். 
       
மாத முதல் ஞாயிற்றுக் கிழமைகளில், வாடிக்கையாளர் வீடுகளுக்கு கூப்பன் விற்க, பணம் வசூல் செய்ய அவர் வருகின்ற நேரங்களில்,  அவரைப் பார்த்ததுண்டு. தமிழ் தெரிந்தவர் என்பதால், என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் தமிழில் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் செல்வார். எங்கள் வீட்டுப் பால்காரர் காலை ஏழுமணி சுமாருக்குத்தான் வருவார். எதிர் வீட்டுப் பால்காரர் இவ்வளவு சீக்கிரமாக வருகின்றாரே என்று வியப்பாக இருந்தது. அதை அவரிடமே கேட்டுவிட்டேன். "என்ன பால்காரரே - இவ்வளவு சீக்கிரம்?" 

"நான் இன்றைக்கு கொஞ்சம் முன்னதாகத்தான் வந்துவிட்டேன். சட்டென்று பால் பாக்கெட் போடுகின்ற வேலையை முடித்துக் கொண்டு, ஹோசூர் போகணும். அதான் காரணம்" என்றார். அவருடைய குரல் முற்றிலும் கரகரப்பாக மாறியிருந்தது. 'சரி இந்தப் பனி காலத்தில் இப்படி வெளியே உலவுபவருக்கு தொண்டை கட்டிக் கொள்வது இயற்கைதான்' என்று நினைத்துக் கொண்டேன். 

"பால்காரரே - எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?"
           
"என்ன சார் வேண்டும்?"
           
"பக்கத்துத் தெரு நாய் - இப்படி பயங்கரமாக, பேயைக் கண்டது போல குரைத்துக் கொண்டு இருக்கின்றதே; அதை அந்தப் பக்கம் போகும் பொழுது, விரட்டி நாலைந்து தெருக்கள் தாண்டி போகின்றாற்போல துரத்தி விடுங்கள். அல்லது எப்படியாவது அது சத்தம் போடாமல் இருக்க வையுங்கள்."
           
"இனிமேல் அது சத்தம் போடாது சார். இப்போ நிறுத்திடும். நீங்க போய் தூங்குங்க." என்று சொல்லி விட்டு, எதிர் வீட்டுப் பால் பையில் பால் பாக்கெட்களைப் போட்டு விட்டுக் கிளம்பினார். அவர் பக்கத்துத் தெரு போகின்ற வரையிலும் பார்த்திருந்து விட்டுப் போகலாம் என்று பார்த்திருந்தேன். ஆனால் சைக்கிளில் ஏறிச் சென்றவர், சைக்கிளுடன் திடீரென்று பனி மூட்டத்தில் கரைந்து காணாமல் போனார். கொஞ்ச தூரம் போனவுடனேயே அவர் எங்கு போனார், என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஆனால் நாய் குரைப்பு மட்டும் உடனே மந்திரம் போட்டாற்போல் நின்றது. எனக்கு அது போதும். 
            
வாசல் கதவைத் தாளிட்டு, வந்து படுத்து, இரண்டரை மணி நேரம் தூங்கினேன். ஏழு மணிக்கு வாசல் பக்கம் வந்து பால் பாக்கெட்களை எடுக்க வந்தால், எதிர் வீட்டுக்காரர் அவர்கள் வீட்டு கேட்டுக்கருகே, தெருவைப் பார்த்தபடி நின்றிருந்தார். 
           
"என்ன சார்? காஃபி சாப்பிட்டுட்டீங்களா?" என்று கேட்டேன். 
   
"ஊ ஹூம் ... இன்னும் பால்காரர் வரவில்லை" என்றார் எதிர்வீட்டுக்காரர்.