ஞாயிறு, 29 ஜனவரி, 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன்

 

திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில் பகுதி 3

கடந்த இரண்டு வாரங்களாக, நெல்லையிலுள்ள கிருஷ்ணாபுரம், வெங்கடாசலபதி கோவிலில் இருக்கும் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டுவந்தோம். இன்று கடைசி பகுதியைப் பார்ப்போம்.

நான் 2018 அக்டோபரில் சென்றபோது, இரவு 6 மணி ஆகிவிட்டது. சென்ற மாதத்தில் மாலை 5 1/2க்குச் சென்றோம். தயக்கத்துடன் ஒரு சில படங்கள் எடுத்தேன். பெருமாளைச் சேவித்த பிறகு, நான் படங்கள் எடுப்பதைக் கண்டுகொள்ள யாரும் இல்லை. அதனால் நிறையவே படங்கள் எடுக்க முடிந்தது (Ofcourse தயக்கத்துடன்). இதற்கு முந்தைய முறை சென்றபோது சிற்பங்களின் சிறப்புகளை ஒரு வயதானவர் சொல்லிக்கொண்டு வந்தார். அப்போதே அவர், என் காலத்துக்குப் பிறகு யார் இவற்றைச் சொல்லப்போகிறார்கள் என்றும் சொன்னார். அதன்படி இந்த முறை சிற்பங்களின் சிறப்பைச் சொல்ல யாருமே இல்லை.











இந்தச் சிற்பம் என் மனதுக்கு உகந்த ஒன்று. இதனைத்தான் நான் இண்டியன் இங்க் கொண்டு வரைந்திருந்தேன். கல்லூரியில் இதனைப் பார்த்த என் நண்பன், அதை வாங்கி கல்லூரி வருட இதழில் வெளியிட த் தூண்டுகோலாக இருந்தான். 83 அல்லது 84வது தூய சவேரியார் கல்லூரி ஆண்டுமலரில் இந்தப் படம் இருக்கும். இண்டியன் இங்க் கொண்டு கோட்டோவியம் வரைவது எனக்குப் பிடித்தமானதொரு பொழுதுபோக்கு. அதற்கு நிறைய பொறுமை வேண்டும். ஒரு தடவை வெங்கடாசலபதியும் பத்மாவதி தாயாரும் வரைந்துகொண்டிருந்தேன். முடியப்போகும் நேரத்தில் என் தம்பி தவறுதலாக அதில் தண்ணீரைக் கொட்டிவிட்டான்.


இந்தப் பதிவுக்காக, கிருஷ்ணாபுரம் ரதி சிற்பத்தை எடுத்துக்கொண்டு வரைந்தேன். சுமார் 1 ½ மணி நேரம் ஆனது. அப்போ அப்போ என் பெண்ணிடம், உன் பாடும், வரையும் திறமையெல்லாம் என்னுடைய ஜீன் என்று சொல்வேன். சின்ன வயதில், அவள் பள்ளிக்கு டிராயிங்க் ஒன்று அவுட்லைன் போட்டு அவள் கலர் போட்டாள். பிறகு டேபிள் க்ளாத்தில் வரைந்து டிசைன் போட்டு கொண்டுவரச் சொல்லியிருக்காங்க என்று முந்தின நாள் இரவு சொன்னாள். எனக்கு கோபம், கடைசி நேரத்தில் இப்படிச் சொல்றாளே என்று. கடைக்குப் போய் டேபிள் க்ளாத் 2 வாங்கிவந்து ஒன்றில் நானே டிசைன்கள் போட்டுக்கொடுத்தேன் (நடுராத்திரி நீ வரைஞ்சு கிளிச்ச என்று கோபத்தோடு சொல்லிக்கொண்டே). மறுநாள் அவள் டீச்சர், வகுப்பில், இந்த வார இறுதிக்குள் அந்த டேபிள் கிளாத் சப்மிட் பண்ணினாப் போதும் என்று சொன்னதும், இதை சப்மிட் பண்ணாமல், மறுநாள் உட்கார்ந்து அவளே டிசைன் போட்டு அதை உபயோகப்படுத்தினா. (ரோஷக்காரி, திறமை உள்ளவ ஹா ஹா ஹா) இதை எழுதும்போது, அவளின் ஓவியங்களை ஒரு பதிவாக்கி எங்கள் பிளாக் ஞாயிறுக்கு அனுப்பலாமே என்று தோன்றுகிறது



ரதி சிற்பம் பல கோவில்களில் உள்ளது என்று சொல்லியிருந்தேன். உதாரணத்துக்கு நான்கு சிற்பங்கள்.


இவைகளை (ரதி சிற்பங்களை) ஒப்பிடும்போது கிருஷ்ணாபுரம் சிற்பத்தின் அழகு பளிச் என்று தெரியும் என நம்புகிறேன். மற்ற கோவில் சிற்பங்கள் காலத்தினால் முற்பட்டதாக இருப்பதால் அழகு குறைந்திருக்கும் என்று சொல்லலாம். எனினும், சிற்பியின் திறமை, கிருஷ்ணாபுரம் சிற்பங்களில் நன்றாகப் புலப்படுகிறது. மற்ற ரதி சிற்பங்களுக்கும் கிருஷ்ணாபுரம் ரதி சிற்பத்துக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருக்கிறது. அதைக் கவனித்தீர்களா? ஆம் என்றால் பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

கிருஷ்ணாபுரம் சிற்பங்களை நீங்கள் மிகவும் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அடுத்தமுறை இன்னொரு கோவில் சிற்பங்களோடு சந்திக்கலாம்.

= = = = = =

62 கருத்துகள்:

  1. படங்களும், கட்டுரையும், தொகுப்பும் நன்றாக உள்ளன. ரதி உங்களை பிடித்து "என்னைப் பார் என் அழகைப் பார்" என்று சொல்லி மயக்குகிறாள். மற்ற கோயில்களில் உள்ள ரதிதேவி சிலைகளின் படத்தையும் சேர்த்திருப்பது அதனால் தானோ ?


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சிற்பங்களைப் பல கோயில்களில் காண்கிறேன். ஆனால் வெவ்வேறு சிற்பிகள் செதுக்கியது.

      இதற்கெல்லாம் ஒரு அடிப்படை மேனுவல் (பேப்பர் இல்லாத அக்காலத்தில் ஓலைச் சுவடிகளிலா இல்லை பலகைகளிலா தெரியவில்லை) இருந்திருக்க வேண்டும்.

      நீக்கு
  2. அனைவருக்கும் காலை வணக்கம். கிருஷ்ணாபுரம் படங்களை அனேகமாக எல்லாவற்றையும் உள்ளடக்கி மூன்று பதிவுகளாகத் தந்தது என் மனதுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த பத்து வாரங்களுக்கு மேல், சமீபத்தில் மேற்கொண்ட ஒரு யாத்திரையை தொடர்ந்து எழுதலாம் என நினைத்துள்ளேன். அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். யாத்திரை மாதிரி எழுதுவது சரியாக வருமா என்ற யோசனையும் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "வாழ்க வளமுடன்' இதை எங்கு படித்தாலும் உங்கள் நினைவுதான் எனக்கு வரும்

      நீக்கு
  4. படங்கள் எல்லாம் மிக அருமை.
    நீங்கள் வரைந்த ரதி ஓவியம் அழகாய் இருக்கிறது.
    நீங்கள் வரைந்த ரதி அழகாய் சிரிக்கிறார். கண்களும் மலர்ந்து சிரிக்கிறது. சிலையில் உதடு குவிந்து பேச முயல்வது போல உள்ளது.
    திருப்பரங்குன்ற ரதி, மன்மதன் சிலையின் அழகை பார்க்க முடியாத படி சந்தனத்தால் மக்கள் பூசி வைத்து இருப்பார்கள்.
    கணவன், (மனைவி ஒற்றுமைக்கு வேண்டிக் கொண்டு சந்தனம் பூசுவார்கள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம். என்னை ஊக்குவிக்க, நல்ல டீச்சர்ட்ட டிராயிங் படிக்க அனுப்பலை.

      பதினோராம் வகுப்பில் ஹாஸ்டலில் இருந்தபோது எங்க பள்ளியில் டிராயிங் போட்டி வைத்து ஒருவரை செலெக்ட் பண்ணி, மாவட்ட அளவிலான போட்டிக்கு அனுப்புவார்கள்னு சொன்னாங்க. எனக்க ஒரு நாள் முன்பு தெரியவந்தது. என்ன வரைவது, என்று ஒன்றும் தெரியலை. என்னிடம் இருந்த போர்வையில் மானை புலி துரத்துவதாக போர்வை முழுவதும் போட்டிருக்கும். அதை மனதில் வைத்து, போட்டிக்கான ஹாலில் வைத்து அதனை பென்சிலால் வேகமாக வரைந்தேன். 20 பேர்களுக்குமேல் போட்டியில் கலந்துகொண்டனர். புலியின் ஆக்ரோஷமும், மானின் பயமும் மிகச் சிறப்பா வந்திருக்குன்னு சொல்லி என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அப்புறம் பள்ளிகளுக்கிடையே அப்போது சொல்லும் தீமை வரைந்து, கலர் உபயோகிக்காத்தால் இரண்டாம் பரிசு, சேவியர்ஸ் நூற்றாண்டு விழாவில் ம பொ சி கையால் கொடுத்தார்கள்.

      இதை மனதில் வைத்து, சின்ன வயதிலேயே பசங்களை கலர் டிராயிங் பழக கோர்ஸுக்கு அனுப்பினேன். இருவரும் ஆளுக்கு ஒரு படத்தை வரைந்து என்னுடம் கொடுத்தாங்க.

      பசங்களை பாராட்டுவது தவறு, கண்ணேறுக்கு வழிவகுக்கும் என்பது என் ரத்தத்தில் ஊறிவிட்டது. வெறும்ன பாராட்டுவதோடு நிறுத்திக்கொள்வேன். மகள் செய்த உணவின் தொகுப்புகளை ஒரு பதிவாக எழுதி மனைவியிடம் காண்பித்தபோது கண்ணேறு பட்டுவிடும், கூடாது என்று சொல்லிவிட்டாள்.

      நீக்கு
  5. அழகான படங்கள், ஓவியங்கள்.

    ஓவியம் வரைவது என்பது இறைவனின் பாக்கியம் இது எல்லோருக்கும் வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி... நமக்கு என ஏதாவது பொழுதுபோக்கு வைத்திருந்தால் தனிமை என்ற பேச்சுக்கே இடமிருக்காது

      நீக்கு
  6. உங்கள் மகளின் தனித்திறமைகள் நிறைய இருக்கிறது. மகளின் ஓவியங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    //ஒரு தடவை வெங்கடாசலபதியும் பத்மாவதி தாயாரும் வரைந்துகொண்டிருந்தேன். முடியப்போகும் நேரத்தில் என் தம்பி தவறுதலாக அதில் தண்ணீரைக் கொட்டிவிட்டான்.//

    மீண்டும் வரையலாம் நீங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அரசு மேடம். இப்போதைய பொழுதுபோக்கு, பயணங்கள், புகைப்படங்கள், பதிவாக்குதல்.

      நீக்கு
  7. @நெல்லை! உங்கள் மகளின் திறமைகளை நீங்கள் பாராட்டாமல் வேறே யார் பாராட்டுவார்கள்? ஆனாலும் அதுக்கு மனம் இல்லாமல் அதைப் பெருமையாக வேறே சொல்லிக்கறீங்க! மனசு வேதனைப் படுகிறது. ஏனெனில் இந்த வலியை நான் நிறைய அனுபவிச்சிருக்கேன். அண்ணாவோ/தம்பியோ எனில் மனம் மகிழ்ந்து பாராட்டும் அப்பா அதே நான் எனில் "உன்னைப் படிக்க வைப்பதே பெரிய விஷயம். நீயெல்லாம் படிச்சு என்ன பண்ணப் போறே! பால் கணக்குப் பார்க்க இந்தப் படிப்பே அதிகம்! " என்பார். அதெல்லாம் நினைவில் வருகின்றன. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா, உங்க வரிகளை நல்லா புரிஞ்சுக்க முடியும். டிட்டோ டிட்டோ என் அனுபவமும்...எங்க வீட்டிலும் ஆண் பிள்ளைகள்தான் உசத்தி....ஆனால் என் அப்பா அல்ல கூட்டுக் குடும்பம் என்பதால் ஒப்பீடுகள் என்று.....பல

      கீதா

      நீக்கு
    2. ஆனாலும் அதுக்கு மனம் இல்லாமல் அதைப் பெருமையாக வேறே சொல்லிக்கறீங்க! மனசு வேதனைப் படுகிறது. //

      கீதாக்கா ஹைஃபைவ்!!!! என் கருத்தும் ப்ளஸ் 1

      கீதா

      நீக்கு
    3. அப்படி இல்லை கீசா மேடம்... Whoever sees or receive her drawing as a gift, will know its worth. நான் just appreciate பண்ணுவதோடு சரி. உங்க மனவருத்தத்தைப் புரிந்துகொள்கிறேன்.

      நீக்கு
  8. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  9. கலைப் பெட்டகமாக மாறிக் கொண்டு இருக்கின்றன - ஞாயிறு பதிவுகள்..

    அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
  10. மேலும் சொல்ல வேண்டும்...

    பிறகு வருகின்றேன்..

    பதிலளிநீக்கு
  11. கிருஷ்ணாபுரம் சிற்பங்களை நீங்கள் மிகவும் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.//

    ரொம்பவே ரசிக்கிறேன், நெல்லை. அருமை என்று ஒரு வார்த்தையில் சொல்லிச் செல்ல முடியவில்லை அதே சமயம் வர்ணிக்க வார்த்தைகளும் கிடைக்க மாட்டேங்குது!!!! சிற்பங்களின் அழகைச் சொல்லிட வார்த்தைகள் இல்லை. எனக்கு மிகவும் பிடிக்கும் இப்படிப் புகைப்படம் எடுப்பதும்.

    உங்கள் திறமையும் அட்டகாசம் போங்க! தாராளமாகப் பாராட்டித் தள்ளறேன், உங்கள் வரையும் திறமையையும்.

    அத்தனைப் படங்களும் பார்த்து பார்த்து ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன்(க்கா).... நாம சேர்ந்து ஒரு கூட்டமா பயணம் போகலாம்.

      நீக்கு
  12. சிற்பங்களின் மீது குங்குமம், சந்தனம் அப்புவது எனக்கு மனம் ஒப்பாது இது என் தனிப்பட்டக் கருத்து. சிற்பங்கள் அப்படியே இருக்க வேண்டும் பராமரிக்கப்பட்டு.

    நெல்லை நீங்க சொல்லிருக்காப்ல கருங்கல்லில் வடிக்கப்பட்ட சிற்பங்கள் எண்ணை தடவப்பட்டு இண்டு இடுக்களில் தூசி சேராமல் பாதுகாக்கப்பட வேண்டும். வெள்ளை சிற்பங்கள் உட்பட....இடுக்குகளில் எல்லாம் தூசி சேராமல் பராமரிக்கப்பட வேண்டும். அதெல்லாம் எங்கே நடக்கிறது? அது போல அதீத உப்புக்காத்து படும் இடங்களில் (மஹாபலிபுரம் போன்ற இடங்களில்) ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் வெப்பம் அதிகம் உள்ள இடங்கள் கற்கள் பிளவுபடும்...இதெல்லாம் பார்த்து பார்த்து பராமரிக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கருத்தும் அதேதான் கீதா ரங்கன்(க்கா). சிற்பங்களைப் போற்றணும், பத்திரமா பாதுகாக்கணும். தெய்வ உருவங்களாக சந்நிதிகளில் இருப்பவற்றை வணங்கணும். அப்படி இல்லாமல், இருக்கும் எல்லாச் சிற்பங்களிலும் மஞ்சள் குங்குமம் தடவி, மாலை போட்டு, விளக்கேற்றி என்று அலங்கோலப்படுத்தக்கூடாது

      நீக்கு
  13. நெல்லை தயவாய் உங்க பெண்ணை கொஞ்சம் தாராளமாகப் பாராட்டுங்க...பாராட்டிருக்கணும்.

    எனக்கெல்லாம் எந்தப் பாராட்டும் கிடைத்தது இல்லை இப்ப வரை. எங்குமே. சரி பாராட்டுதான் இல்லை...ஊக்கம்? அதுவும் சிறு வயதில் கிடைத்ததில்லை இப்ப வரையிலும். சரி ஊக்கம்தான் நமக்குக் கொடுக்கலை...போகட்டும், அட்லீஸ்ட் எதுக்கும் லாயக்கில்லை , என்னத்த கிழிக்கப் போற, போன்ற வார்த்தைகளாவது இல்லாமல் இருக்கலாம்.

    படிப்பில் ஆராய்ச்சி செய்யும் திறன் உண்டு, அது போல பாட்டு, ஓவியம் வரைதல், எம்ப்ராய்டரி, தையல், விளையாட்டுத் திறமை,(குழுவில் வேறு இருந்தேன். அதனால்தான் இன்று வரை உடற்பயிற்சி ஆர்வம்), புகைப்படம் எடுத்தல் என்று பல ஆனால் எதுவுமே ஊக்கப்படுத்தப்படவில்லை இப்போது வரை திட்டுகள் கிடைக்கலாம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I understand your point. என் மனைவி மாத்திரம் அல்ல...பெரும்பாலான பெண்கள், எவ்வளவோ உழைக்கறாங்க. வாழ்க்கைல அவங்களுக்கு ரெகக்னிஷன் கிடைப்பதில்லை. வீட்டை 3/4 மணி நேரம் பெருக்கித் துடைக்க (அதுவும் பரவாயில்லாமல்தான் பண்ணுவாங்க) 3000 ரூ வாங்கின்றவர் வீட்டு உதவி செய்வோர். சமைக்கணும்னா இன்னொரு 5000 ரூ 2 வேளைக்கு, பாத்திரம் அலம்ப 2000 ரூ, தோய்த்த துணி காயப்போட 2000 ரூ, பாத்ரூம் அலம்ப, 2000 ரூ. இப்படி ஒரு நாளைக்கு எல்லா வேலையும் என்றால் 2-3 வீடுகளுக்கு உதவி செய்வாங்க. ஆனால் நாம் மனைவியை Home Maker என்று இப்போதான் சொல்றோமே தவிர, பொதுவா, அவ வேலைக்குப் போலை, வீட்லதான் சும்மா இருக்கா என்றுதான் அறிமுகப்படுத்துகிறோம். இதைவிட ஒரு அநியாயம் இருக்குமா என்று எனக்குத் தோன்றவில்லை. மனைவி என்பவள் வீட்டின் தலைவி, அவள் இல்லையேல் வீடில்லை, குழந்தை வளர்ப்பில்லை, வீட்டில் ஒளியில்லை. (ஆனா பாருங்க..இதை வெளிப்படையா எப்போதுமே சொன்னதும் இல்லை ஹாஹாஹா)

      நீக்கு
  14. நெல்லை, நீங்க எத்தனையோ விஷயங்கள் பேசறீங்க, தத்துவம் பேசறீங்க.....ஆனா இது ஒரு அடிப்படை விஷயம் இந்தப் பாராட்டுதல் என்பது....விமானம், ராக்கெட் பறக்கணும்னா உந்துசக்தி அவசியம் என்பது போல மனிதனுக்கும் அது தேவை.

    ஆஞ்சநேயரின் சக்தியை எடுத்துரைத்து அவருக்கு உந்து சக்தி அளித்தவர் ஜாம்பவான் என்று நாம் ராமாயணத்தில் வாசித்திருக்கிறோம்தானே....அது போலத்தான் இதுவும். ஆஞ்சநேயரை சொல்லின் செல்வர் என்றும் சொல்வதும் அதை Management, Personality development போன்றவற்றில் அவர் கையாண்ட சூழலை எடுத்துக்காட்டாகச் சொல்வதும் உண்டு. போதும் இதோடு நிறுத்திக்கறேன். இதைக் குறிப்புகளாக எழுதி வேற வைச்சுருக்கேன் குழந்தை உளவியலுக்குன்னு ஒரு பதிவு!!!!!!!!!!! சமீபத்திய அனுபவம், Occupational Therapist சந்திப்பு கருத்துகள் என்று குறிப்புகளாக...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Management, Personality development etc - இதெல்லாம் இக்காலத்தைய தத்துவங்கள். பொதுவா நம் பசங்களை நாம் பாராட்டக்கூடாது என்ற தத்துவத்தில் வளர்ந்தவன் நான். அது சரியோ தவறோ... ஆனால் அதைத்தான் நான் தொடர்கிறேன்.

      நீக்கு
  15. கிருஷ்ணாபுரம் சிலைகள் எல்லாம் மிகுந்த அழகாக இருக்கிறது.

    நீங்கள் வரைந்த ஓவியம் அழகு. மகளின் திறமைக்கு பாராட்டுகள். படங்கள் பகிருங்கள் கண்டு மகிழ்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மாதேவி.... படங்களைப் பகிர்கிறேன், வாய்ப்பு வரும்போது

      நீக்கு
  16. அழகிய படங்களும் அதற்கான விளக்கங்களும் அருமை...

    பதிலளிநீக்கு
  17. ஓவியம் மிக அழகாக வரைந்திருக்கிறீர்கள் நெல்லைத்தமிழன்! இனிய பாராட்டுக்கள்! கில்லர்ஜி சொல்வது போல வரைவதும் பாடுவதும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அது ஒரு கொடுப்பினை! உங்கள் ஓவியத்திறமையை நீங்கள் இன்னும் சிறப்பாக வளர்த்துக்கொண்டிருக்கலாம்! சில இடங்கள் ஓவியர் சில்பியை எனக்கு ஞாபகப்படுத்தியது! அப்புறம் பார்த்தால் கூடவே சில்பியின் ஓவியங்களையும் இணைத்திருக்கிறீர்கள்! வெகு நாட்களுக்குப்பிறகு அவற்றை கண்டு ரசிக்க வைத்ததற்கு இனிய நன்றி!

    பதிலளிநீக்கு
  18. திருமதி.கீதா சாம்பசிவம் சொன்னதை நான் வழிமொழிகிறேன்! மற்றவர்களின் தனித்தன்மையை மனதாராட்டுவதும்கூட ஒரு கலையே! அதுவும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை! பெற்றோர்கள் மட்டுமே ஒரு குழந்தையை பாராட்டி ஊக்குவிக்க முடியும். மலரும் வயதில் கிடைக்கும் பாராட்டு ஒரு பொக்கிஷமாகி அந்தத் திறமைகளை பலமாக வேரூன்ற வைக்கிறது. கீதா சொன்னது போல நானும் சின்ன வயதில் அந்த வலியை அனுபவித்திருக்கிறேன்! பின்னால் கணவரின் ஊக்குவிப்பு 200 சதவிகிதமாக இருந்த போதிலும் குடும்பப்பொறுப்புகள் திறமைகளை புறம் தள்ளி விட்டன!

    பதிலளிநீக்கு
  19. படங்களை ப் பெரியதாக்கிப் பார்க்கும் போது தான் அவற்றிலுள்ள உயிரோட்டம் தெரிகின்றது..

    இவற்றை இல்லாமல் செய்து விட வேண்டும் என்று ஒரு கொள்கை (?) உலவுகின்றதே...

    நினைக்கவே நடுக்கமாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தச் சிற்பங்கள், ஓரிரவில் உதித்தவை அல்ல. அது கலாச்சாரத்தின் பரிமாணத்தில் வந்தது. ஆயிரம் ஆண்டுகள் evolve ஆன கலாச்சாரம் அது. கும்பகோணத்தில் இருக்கும் பித்தளை, பஞ்சலோக சிற்பங்களை கடைகளில் பாருங்கள். உலோகத்தை உருக்கி, ஐந்து உலோகக் கலவையில் இறைவனின் உருவத்தை அப்படியே கொண்டுவர முடிந்த அந்தத் திறமை எத்தனை எத்தனை ஜெனெரேஷன்களாக வளர்ந்த ஒன்று?

      பாரதத்தின் இந்து கலாச்சாரம் என்பது நாமெல்லாம் பெருமிதப்பட வேண்டிய ஒன்று

      நீக்கு
  20. நெல்லை அவர்களது மகளாரின் திறமைக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜு சார். பெரியவர்களின் நல்லெண்ணம் அவளுக்கு நல்லது செய்யும்

      நீக்கு
  21. எந்த சிற்பத்தையும் உருவாக்கும் முன் இது இப்படித் தான் இருக்க வேண்டும் என்று எப்படி தீர்மானிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
    உதாரணத்திற்கு இந்த ரதி சிற்பத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். யாருக்குமே ரதி என்பவள் இப்படித்தான் இருப்பாள் என்று தெரிந்திருக்கவில்லை.
    அப்படியிருக்கையில்
    இரண்டு ரதி சிற்பங்களுக்குள் தோற்றத்தில், முக பாவத்தில், உருவ அமைப்பில் வித்தியாசம் இருப்பின் எந்தச் சிற்பம்
    உண்மையான ரதியை ஒத்திருக்கிறது என்று எப்படித் தீர்மானிப்பது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மனதிற்குள் எந்த சிற்பம் புகுந்து கொள்கின்றதோ -

      அந்த சிற்ப வடிவத்தையே ரதிதேவி ஆகர்ஷிக்கின்றாள் என்று எண்ணிக் கொள்ளுங்கள் அண்ணா..

      நீக்கு
    2. நெல்லை வரைகலை அறிந்தவர். அவர் என் சந்தேகத்திற்கு விளக்கம் கொடித்தால் வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் நானும் தெரிந்து கொள்வதற்காக மனசில் கிளர்ந்த கேள்வி இது, தம்பி.

      நீக்கு
    3. //எந்தச் சிற்பம் உண்மையான ரதியை ஒத்திருக்கிறது// - கமலஹாசன் வீரபாண்டிய கட்டபொம்மன் வேஷம் போட்டு நடித்தாலும், நம் மனம் எண்ணும் வீரபாண்டியனை சிவாஜி அவர்கள் காட்டினதை நம்மால் மறக்க இயலாது. நாம் வீ.பா.கட்டபொம்முவைப் பார்த்ததில்லை, ஆனால் அவன் இப்ப்டைத்தாண்டா இருந்திருப்பான் என்று நினைக்கிறோம் இல்லையா?

      அந்தப் பொது உணர்வு, எண்ணம்தான் ரதி எப்படி இருப்பாள் என்பதை நம் மனதில் ஒரு உருவமாக்கி வைக்கிறது. இப்படித்தான் பூங்குழலி, குந்தவை, நந்தினி என்று வரலாற்றுப் பாத்திரங்களுக்கு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான நடிகைகளை நடிக்க வைக்கிறார்கள். அது தவறும்போது, கதாபாத்திரம் நகைச்சுவையாகிவிடுவதைத் தவிர்க்க இயலாது.

      நீக்கு
    4. // இது இப்படித் தான் இருக்க வேண்டும் என்று எப்படி தீர்மானிக்கிறார்கள்// - இதுபற்றி நான் நெடுநாளாக எழுதணும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். குறைந்தபட்சம் மனதில் அசைபோட்டுப் பார்ப்பேன். நாராயணன், கிருஷ்ணன் போன்ற தெய்வத்தை, 'நீல மேனி', 'கார் போன்ற மேனியை உடையவன்', 'கமல நயனன்/தாமரைக் கண்ணன்/செங்கண்ணன்', கண்கள் சூரிய சந்திரர்களை ஒத்தது, 'கருங்குழலன், சுருண்டிருந்து கருத்த தலைமுடி' என்றெல்லாம் விவரிக்கின்றனர். இவற்றைப் படித்து பல்வேறு ஓவியர்கள் வெவ்வேறுவகையாக வரைகிறார்கள். சில படங்கள், நம் மனதைக் கவர்ந்துவிடும். இங்கு 'நம்' என்று சொல்லியிருப்பது பெரும்பாலானவர்களை.

      என்னால் இங்கு மறுமொழியில் படங்களை வலையேற்றத் தெரியவில்லை. 'யாமிருக்க பயமேன்' என்று போட்டிருக்கும் முருகக் கடவுளின் படத்தை/ஓவியத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதுபோல, தவழும் கண்ணன் கைகளில் லட்டுவுடன் இருக்கும் படம்.... இவைகள், அவனே இவன் என்ற எண்ணத்தைப் பலரிடம் தோற்றுவித்துவிடும்.

      ஒரு உருவத்தால், பலரும் ஏற்கும்படியான பிரதிபலிப்பு கொடுக்க முடிந்தால், அதுவே அந்த உருவம்.

      நீக்கு
    5. இங்கு கொடுத்திருக்கும் ரதி சிற்பங்களில், எல்லோரும் அன்னத்தின் மீது சவாரி செய்கிறார்கள். ஆனால் கிருஷ்ணாபுரம் ரதியோ, நான் பெரும் அழகி, என்னைச் சுமப்பதால் அந்த அன்னம்தான் பெருமிதம் கொள்ளணும், இதோ நான் என் முக அழகைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன், பிரமித்த அன்னம் என்னைப் பெருமிதமாகச் சுமந்துகொண்டிருக்கிறது என்று சொல்வதுபோல எனக்குத் தோன்றுகிறது.

      அது சரி... இந்தச் சிற்பத்திலேயே உள்ளவள் உங்கள் பதின்ம வயதில் உங்களைத் திருமணம் செய்துகொள்ள வந்திருந்தால், நீங்கள் சரி என்று சொல்லியிருப்பீர்களா அல்லது உங்கள் மனதில் 'அழகி' என்று தோன்றம் கொண்டிருந்தவர் வேறு மாதிரி இருந்திருப்பாரா?

      நீக்கு
    6. 50 வருடங்களுக்கு முன் நாங்கள் பெண் பார்க்கப் போன போது முதலாவது பார்த்தப் பெண்ணையே சம்மதம் சொல்லி திருமணம் செய்து கொண்டேன். வேறு பெண்களைப் பார்க்கும் அலைச்சலெல்லாம் இல்லாமல் இறைவன் அருள் பாலித்து விட்டார். எப்படி இதெல்லாம் கிளிக் ஆகிறது என்பதெல்லாம்...
      'இன்னார்க்கு இன்னார் என்று தான் இறைவன் எழுதி வைத்து விடுகிறாரே!

      நீக்கு
    7. நான் பெண் பார்க்காமலேயே சம்மதம் தெரிவித்தேன் 90களில். எனக்கு பெண்களைப் பார்த்து சம்மதம் சொல்லும் அந்தப் பழக்கம் பிடிப்பதில்லை. யாரையும் வேண்டாம் என்று சொல்லும் எண்ணம் எனக்கு எப்போதுமே வந்ததில்லை, மிக மிகத் தயங்குவேன். பலரும், நீ லக்கி என்று என்னைத்தான் சொல்லுவார்கள்.....ஹா ஹா ஹா

      நீக்கு
  22. நல்லதொரு கலை விருந்து..

    நெல்லை அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  23. வரையும் கலையில் உங்களுக்கிருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டிற்கு வாழ்த்துக்கள். இதெல்லாம் லேசில் கைவசப்படாத நுண்கலைகள் என்பதை அறிவேன்.
    உங்கள் அடியொற்றிய
    இளம் ஓவியக் கலைஞரான
    உங்கள் குழந்தைக்கும் மேலும் மேலும் இக்கலையில் சிறப்புகள் பெற என் மனமார்ந்த ஆசிகள். அப்பப்போ எப்படிப் பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி குழந்தையின் கலைத் திறமையைப் பாராட்டுங்கள். வளர்ந்த கலைஞர்களுக்கே உற்சாக கைத்தட்டுதல்கள் தேவையாக இருக்கும் பொழுது இளம் கலைஞர்களை எந்தளவுக்கு தட்டிக்கொடுத்தல் ஊக்குவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார்... நன்றிகள். நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனா பொதுவா என்ன நினைப்போம்னா, படிப்புதான் முக்கியம், அதில் வரும் ரேங்க், அடுத்த நிலை என்று இருந்தால்தான் க்வாலிஃபைட் ஆகமுடியும், அப்புறம் நல்ல வேலை.... இப்படித்தான் நம் மனம் எண்ணத் தோன்றும். ஒருவேளை வரைவதை ரொம்பவே ஆதரித்தால், எழுதுவதை ஆதரித்தால், பாட்டுப்பாடுவதை ஆதரித்தால்....படிப்பில் ஆர்வம் குறைந்துவிடுமோ, எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று தெரியாமல் இருந்துவிடுவார்களோ, சிறு சிறு பாராட்டுகளில் மகிழ்ந்து முக்கியமான படிப்பில் கவனம் குறைந்துவிடுமோ என்ற பயம்தான் இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம். என் அப்பா என்னை அப்படிச் சொல்லித்தான் வரைவதிலிருந்து விலக்கி வைத்தார். ஆனால் பலரும் இங்கு சொல்லியிருப்பது உண்மை. (அமெரிக்கா போன்ற மேற்கத்தைய நாடுகளில் ஒருவனின் ஆர்வத்துக்கேற்ற துறையில் வாழ்க்கையில் மிளிர முடியும், இந்தியாவில் மேற்படிப்பு, வேலை என்றே நாம் சிந்திக்கிறோம் என்பதனாலும் இந்தச் சிந்தனை வந்திருக்கலாம்.

      நம் பேரக்குழந்தைகள் வரும்போது (அந்தக் காலகட்டத்தில்) நாமும் அவர்களது நுண்ணியல் கலைகளை ஆஹா ஓஹோ என்று போற்றுவோம் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  24. என் பேத்தியும் அட்டகாசமாக படங்கள் வரைவாள். பேப்பரும் பென்சிலுமாக அவள் உட்கார்ந்து செலவிடும் நேரத்தைப் பார்க்கும் பொழுது உங்களைப் போலத் தான் நானும் நினைப்பேன். ஆனால் படிப்பில் முதல் வரிசையில் அவள் வரும் நேர்த்தியைப் பார்க்கும் பொழுது நமக்கே அவள் உழைப்பு உன்னதமாகி விடும். வயலின், கர்நாடக
    சங்கீத வகுப்புகள் என்று நேர் ஒதுக்கல்கள் வேறு.
    அமெரிக்க வகுப்பு பாடத்திட்டங்கள் மற்றும்
    Extra curricular activities பற்றியெல்லாம் நேரில் கண்டு அசந்து போயிருக்கிறேன், நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் குழந்தைகள், சிறுவர்/சிறுமியர், இளைஞர்கள், இந்தத் தமிழகச் சூழலில் உள்ள பிரச்சனைகளுக்கு நடுவே (குறிப்பாக infrastructure, சௌகரியமான வீட்டுச் சூழல் போன்றவை), கடுமையாக உழைத்து முன்னேறுகின்றனர். இங்கு நிறைய மனப்பாடம் செய்து மிக அதிகமான portions கொடுத்து...என்று நிறைய அழுத்தங்கள் உண்டு. அவர்களே வெளிநாடுகளில் உள்ள சூழலில், இதே உழைப்பைக் காட்டி, மிகவும் அதிகமாகப் பிரகாசிக்கின்றனர், பிரகாசிப்பார்கள். மேற்கத்தைய சூழலில் மிக நன்றாக மிளிர்வார்கள் என்பது உண்மைதான்.

      குழந்தையைப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். உங்களுக்கு, உங்கள் மகன்/மகளுக்குக் கிடைக்காத சௌகரியம் அவர்களுக்கு அமைந்தது பூர்வஜென்ம புண்ணியம்தான்.

      நீக்கு
  25. பையனின் மகள் 9th grade,
    பெண்ணின் மகன்கள் முறையே 10th grade and 5th grade படிக்கின்றனர்.
    அமெரிக்க வகுப்பு பாடத் திட்டங்கள், அவர்களது extensive studies, 9th கிரேடிலிருந்து 12th கிரேட்
    வரை எப்படி பாட திட்டத்தைப் பிரித்துப் பிரித்து படிக்கிறார்கள், உலக சரித்திரம் பற்றிய
    அவர்கள் பிரமிக்க வைக்கும் அறிவு, அரசு
    நூலகங்கள் எந்தளவுக்கு அவர்கள் வாசிப்புக்குத் துணையாக இருக்கின்றன என்பது பற்றியெல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு. வாய்ப்பு வரும் பொழுது எழுதுகிறேன்.

    குழந்தைகளுக்கு உங்கள் ஆசி குறித்து மனம் நெகிழ்ந்த நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது ஜீவி சார்.

      இப்போல்லாம் அமெரிக்க வரன், அமெரிக்காவில் உள்ளவர்கள் அல்லது கனடாவில் உள்ளவர்களை மாத்திரம்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டி இருக்கிறது. உதை மீறி திருமணம் செய்பவர்கள் கேரியர் பாழாகிறது அல்லது இந்தியாவிலேயே ஓராண்டாக திருமணத்திற்குப் பிறகும் உட்கார்ந்திருக்கவேண்டி இருக்கிறது. விசா குளறுபடிகள் எப்போது சரியாகும் என்றே தெரியவில்லையாம்.

      நீக்கு
  26. சிற்பங்களும் படங்களும் மிக அருமை. நீங்கள் வரைந்த ரதி ஓவியம் நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!