அவன் வருவானா?
பானுமதி வெங்கடேஸ்வரன்
கோபால் உள்ளே நுழைந்த பொழுது சோபாவில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த சங்கர் மரியாதையோடு எழுந்து நின்றான்.
“ஹலோ சங்கர்.. எப்போ வந்த? உட்காரு..” என்றவர், சோபாவில் அவனருகே உட்கார்ந்தார்.
“நல்லா இருக்கேன் மாமா, நீங்க எப்படி இருக்கீங்க?” என்றான்.
“ம்..ம்..ம்..” என்றவர் தலையை வலது கையால் நீவி விட்டுக் கொண்டார்.
சங்கர் அவர் மகன் தீபக்கின் நெருங்கிய தோழன். இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்து, ஒரே நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். வெளியூரிலிருந்து வந்து ஹாஸ்டலில் தங்கிப் படித்த சங்கருக்கு, ஹோம் சிக்னெஸ் வராமல் இருக்க தீபக்கும், அவன் குடும்பமும் மிகவும் உதவினார்கள்.
தீபாவளி, பொங்கல் போன்ற பெரிய பண்டிகைகள் தவிர மற்ற விசேஷங்களுக்குத் தீபக் சங்கரை தன் வீட்டிற்கு அழைத்து வருவான். வனஜா, கோபால், தீபக்கின் தம்பி விவேக் எல்லோருமே சங்கரை தங்கள் வீட்டுப் பையனைப் போலவேதான் நடத்தியதால் சங்கருக்கும் அங்கு தங்குவது சகஜமாக இருந்தது.
அவனைப் பார்க்க வந்த சங்கரின் பெற்றோர்களும் இவர்கள் வீட்டிற்கு வருகை தந்து, தங்கள் வீட்டிற்கு இவர்களை அழைத்து இரு குடும்பத்திற்கிடையேயும் நட்பு விரிவடைந்தது. முதலில் கோபாலையும், வனஜாவையும் அங்கிள், ஆண்டி என்று அழைத்துக் கொண்டிருந்த சங்கர், 'மாமா, அத்தை' என்று அழைக்கத் தொடங்கினான்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு எப்போதும் போல் காலையில் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, அலுவலகத்திற்குச் சென்ற தீபக் மாலையில் வீடு திரும்பாதவரை எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
தீபக் வீட்டிற்குத் தாமதமாக வருவது ஒன்றும் புதிது கிடையாது. பல நாட்கள் இரவு பத்து மணிக்கும் சில நாட்களில் இரவு பன்னிரண்டு மணிக்கும் வருவதுண்டு. நேரமாகும் என்பதை ஃபோன் பண்ணி தெரிவிக்கவும் மாட்டான். ஆரம்பத்தில் வனஜா மிகவும் பதட்டமடைவாள். கோபால்தான் “நீ தூங்கு, அவன் வருவான்” என்பார். கொஞ்சம் கொஞ்சமாக வனஜா பழகிக்கொண்டாள். அன்றும் வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் தூங்க ஆரம்பித்தாள்.
காபியை வாங்கிக் கொண்ட விவேக், “என்னை கேட்டா எனக்கு என்ன தெரியும்?’ என்று திருப்பிக் கேட்டதும்,
“ரெண்டு பேரும் ஒரே ரூமில்தானே படுத்துக்கிறீங்க?”
“ஆமாம், ஆனால் நேத்து அவன் வந்ததா தெரியலையே? அவன் சீக்கிரம் எழுந்துட்டான்னு நினைச்சேன்”
“என்னடா சொல்ற?” என்ற வனஜா, “தீபு.. தீபு..” என்று அழைத்தவாறே பெட் ரூமிலும், பாத் ரூமிலும் சென்று தேடினாள். எங்கேயும் அவன் இல்லை.
“என்னங்க.. தீபு ராத்திரியிலிருந்து வீட்டுக்கு வரவே இல்லையாம்”. என்று பதட்டமாகக் கூற,
படித்துக் கொண்டிருந்த பேப்பரை தாழ்த்தி, “ஏன் பதட்டப்படற? ஆஃபிசில் வேலை அதிகமா இருந்திருக்கும்.. வந்துடுவான்.” என்று மனைவிக்கு ஆறுதல் கூறினாலும், இந்த மாதிரி நடந்ததே இல்லை என்பதால் அவரையும் கவலை தொற்றிக் கொண்டது.
“உன் பையன் இருக்கானே ‘வேலை இருக்கு, லேட்டாகும்’னு ஒரு ஃபோன் பண்ண மாட்டான்..” என்று முணுமுணுத்தபடியே, “என் செல்ஃபோனை எடு” என்றார்.
மனைவி எடுத்துக் கொடுத்த செல்ஃபோனை வாங்கி, மகனின் நம்பரை தேடி திரையில் ஒளிர்ந்த பச்சை நிற ரிசீவர் சின்னத்தை அழுத்தினார். எதிர் முனையில் எந்த பதிலும் இல்லை.
“விவேக் நீ ட்ரை பண்ணு..” அவனுக்கும் அதே பதில்தான் கிடைத்தது.
அதற்குள் விவேக் சங்கரைத் தொடர்பு கொண்டான். விஷயத்தை கேட்ட சங்கர், “நேத்திக்கு நான் ஆஃபிஸ் போகல.. இப்போ அவன் இருக்கற ப்ராஜெக்ட்ல ஒவர் நைட் வேலை செய்யணும்னு இல்லையே..? எனிவே நான் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட செக் பண்ணிட்டு லெட் யூ நோ” என்றான்.
வனஜா வாசலில் போய் நின்றாள். “எதுக்கு அங்க போய் நிக்கற? தெருவுக்கு வருகிறவன், வீட்டிற்கு வர மாட்டானா?” என்ற கோபாலின் கேள்வி அவள் காதில் விழவில்லை.
விவேக்கின் செல்ஃபோன் ஒலித்தவுடனேயே அதை எடுத்தான். எதிர் முனையில் சங்கர். “அவன் நேத்திக்கு சீக்கிரமே கிளம்பிட்டானாம்”. என்று கூறியதை கலவரமான முகத்தோடும், நடுங்கும் குரலோடும் சொன்னதை நல்ல வேளையாக வனஜா கேட்கவில்லை.
“சரி, அம்மாகிட்ட எதுவும் இப்போ சொல்ல வேணாம்” என்று அடிக் குரலில் சொன்ன கோபால், ஃபேனைப் போடு..” என்று சொல்லி, சோபாவில் உட்கார்ந்தார்.
“வா நாம அவனோட ஆஃபிசில் போய் விசாரிச்சுட்டு வரலாம்..” என்றார்.
“நீங்க வர வேண்டாம்பா, நான் பாத்துக்கறேன்.. அம்மாவ தனியா விட்டுட்டு போறது அட்வைசபில் கிடையாது”
“சரி, கிளம்பு ஜாக்கிரதை. ஆஃபிசுக்கு போயிட்டு எனக்கு உடனே தகவல் சொல்லணும். டென்ஷனா வண்டி ஓட்டாத”
அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே உடை மாற்றிக் கொண்டு, செருப்பை மாட்டிக் கொண்டு, “கொஞ்சம் வேலை இருக்குமா, போய்ட்டு வந்துடறேன்” சொல்லிக்கொண்டே தன் பைக்கை எடுத்தான் விவேக்.
*******
தீபக்கின் அலுவலகத்தில், 'நேற்று முழுமையாக அலுவலகத்தில் இல்லை, சீக்கிரமே கிளம்பி விட்டான்' என்ற தகவல் கிடைத்தது.
சங்கரைத் தவிர வேறு சில நண்பர்கள் அலுவலகத்தை விட்டுச் சென்ற பிறகு அவன் தங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்றார்கள்.
எங்கே, எதில் சென்றான் என்பது சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்தால் தெரியும், ஆனால் சம்பந்தப்பட்ட டிபார்ட்மென்ட் தலைமையிடம் கடிதம் வாங்கி வர வேண்டும் என்றார்கள்.
“என்னது? தீபக் நேற்றிலிருந்து வீட்டுக்கு வரவில்லையா? என்றார் அவன் அதிகாரி. “இப்போ வந்திருக்கப் போறான்? செக்..” என்றவர் சொன்னதைக் கேட்டு வீட்டிற்கு ஃபோன் பண்ணினான்.
முதல் ரிங்கிலேயே ஃபோனை எடுத்த அப்பா, விவேக் சொன்னதை கேட்டு, “அப்டியா?.. சரி, நீ கிளம்பி வா, மேற்கொண்டு என்ன பண்றதுனு பார்க்கலாம்” என்றார்.
*********
"போலீஸில் புகார் கொடுப்பது பெட்டர் மாமா” என்று சங்கர் சொன்னதைக் கேட்ட வனஜா,
"என்னாச்சு? என்னாச்சு?” என்று பதறினாள்.
“ஓண்ணுமில்ல, பதறாத” என்றவர் மனைவிக்கு, தீபக் முதல் நாள் அலுவலகம் முடிவதற்கு முன்பே கிளம்பி விட்டான் என்பதைச் சொன்னதும், அவள் அதிர்ச்சி அடைந்தாள்.
உடனே குளித்து விட்டு, சாமிக்கு விளக்கேற்றி வைத்துக் காசு முடிந்து வைத்தாள்.
புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸ், அலுவலக நண்பர்களிடம் விசாரித்தார்கள். சிசி டிவி ஃபுட்டேஜை பார்த்தார்கள். அதில் அவன் அலுவலகத்தை விட்டு வெளியேறியது தெரிந்தது, அவன் ஆட்டோவோ, வேறு வாகனமோ எதிலும் செல்லாததால் உருப்படியாக எதுவும் தெரியவில்லை.
"காதல் விவகாரம் ஏதாவது உண்டா?" என்று கேட்டார்கள்.
"எங்களுக்கு தெரினஞ்சு இல்லை" என்றார். ஆனால், மனசுக்குள் ஒருவேளை அப்படி ஏதாவது இருக்குமோ? என்று தோன்றியது.
“இந்த காலத்து பசங்களை ஒண்ணும் சொல்ல முடியாது” என்றார் என்னவோ அந்த காலத்தில் காதல் இல்லாதது போல.
சங்கரிடம் கேட்டபொழுது கொஞ்சம் தயங்கி விட்டு, “எனக்கு கூட அப்படி ஒரு டவுட் உண்டு மாமா...ஆனால், அவன் எதுவும் எங்கிட்ட சொன்னதில்லை..”
“தெரிஞ்சா சொல்லுப்பா ப்ளீஸ்...” அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் மல்க அவர் கேட்டதும், சங்கர் ஆடிப்போனான்.
“மா..மா.. தெரிஞ்சா சொல்ல மாட்டேனா?” என்றான்.
இன்னும் சில முறைகள் இதே கேள்வி அவரிடமிருந்து வந்தது அவனைச் சங்கட படுத்தியிருக்க வேண்டும், அவர் வீட்டுக்கு வருவதைக் குறைத்துக் கொண்டான்.
*************
வனஜாவும், கோபாலும் கோவில் கோவிலாகச் சென்றார்கள். தொலைக்காட்சியில் வரும் ஜோதிடர் முதல், முறையாகக் கற்காமல் ஒரு ஹாபியாக பார்ப்பவர் வரை தீபக்கின் ஜாதகத்தைக் காட்டினார்கள். அவர்கள் பரிந்துரைத்த பரிகாரங்களைச் செய்தார்கள். அவைகளில் எவ்வளவு தூரம் உண்மை இருந்ததோ? அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்தது. என்றாவது ஒரு நாள் தங்கள் மகன் வந்து விடுவான் என்று தீவிரமாக நம்பினார்கள். வனஜாவுக்கு அவள் மகன் தீபக் வயதில் இருக்கும் எந்தப் பையனைப் பார்த்தாலும் தீபக் என்று தோன்றும்.
ஒரு நாள் வனஜா முகம் வாடியிருந்தாள். என்ன விஷயம் என்று அவர் விசாரித்தபொழுது, “இன்னிக்கு எங்க அண்ணி வந்திருந்தாங்க, அவங்க சொந்தகாரங்க மகன் ஒருத்தன் நம்ம தீபு ஆஃபிசில்தான் வேல பாக்கறானாம். அவன் சொன்னானாம் தீபு ஒரு பொண்ண லவ் பண்ணினானாம், அந்த பொண்ணு நம்ம ஜாதி கிடையாதாம், அதனால் அவங்கதான் ஏதோ பண்ணிட்டாங்களாம்” முடிக்கும் பொழுது அவளுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது.
“அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க, அப்படியாம் இப்படியாம்ங்கற செய்தியெல்லாம் கொண்டு வராத” என்று அவளை அடக்கினாலும் அவரையும் அந்தச் செய்தி மிகவும் பாதித்தது.
இரண்டு நாள்கள் கழித்து விவேக் அதே செய்தியை கூறினான். “அப்பா, இந்த மாதிரி ஆணவக் கொலைகளில் கொலை செய்த பாடியின் மீது சர்க்கரையை கொட்டி எரித்து விடுவார்களாம், அப்போது எலும்பு கூட கிடைக்காதாம்.” என்று கூறிவிட்டு அழுததும், இவரும் உடைந்து போனார்.
அந்த மன அழுத்தம் நோயாக மாறி அவரைத் தாக்கியது. அவரை விட அவர் மனைவியின் ரத்தத்தில் சர்க்கரை ஏகமாக ஏறியது. அடிக்கடி மருத்துவ மனையை நாட வேண்டியிருந்தது.
இதற்கிடையில் விவேக் வெளிநாட்டிற்குச் சென்று படிக்க விரும்பினான். அவன் கல்விக்கடனுக்காக வங்கிக்குச் சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்படிப்பட்ட நேரத்தில்தான் சங்கர் வந்திருக்கிறான். என்ன விஷயம் என்று தெரியவில்லை.
கிளம்பும்பொழுது, “தீபக் பத்தி ஏதாவது தெரிஞ்சுதா மாமா?” என்றான்.
“ப்ச்..” என்று கை விரித்தார்.
“உங்கள எங்க ஆஃபிஸ் பர்ஸனல் டிபார்ட்மெண்டில் மீட் பண்ணனும் சொன்னாங்க,
“எனக்குக் கூட மெயில் வந்திருந்தது. என்ன விஷயமாம்?”
“தீபக்கின் செட்டில்மெண்ட் பத்தி உங்ககிட்ட பேசணுமாம்”
பெர்சனல் டிபார்ட்மெண்ட் அதிகாரி கோபாலை வரவேற்று உட்காரச் சொன்னார்.
“உங்க பையன் பத்தி ஏதாவது தெரிஞ்சுதா சார்?”
“நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டோம், எந்த யூசும் இல்ல,”
“வெரி சாரி சார். எங்களோட ப்ரொசீஜர்ஸ் இருக்கு. தீபக்கை அப்ஸ்காண்ட் என்று குறிப்பிட்டு செட்டில் பண்ணுவதில் எனக்கு விருப்பம் இல்லை” என்றவர் கொஞ்சம் தயங்கி, “நீங்க ... உங்க சன் இப்போ இல்லனு...நான் என்ன சொல்றேனு புரியுதா...? ஒரு லெட்டெர் குடுத்தீங்கனா நாங்க செட்டில்மெண்ட் குடுத்துடுவோம்”.
முதலில் கோபாலுக்கு அவர் சொன்ன விஷயத்தின் வீரியம் புரியவில்லை. புரிந்ததும், “அது எப்படி சார்? ஸாரி சார், எங்க பையன் உயிரோடு இருக்கான்னுதான் நாங்க நம்பறோம், பணம் என்ன சார் பணம்?”
மௌனமாகச் சில நொடிகள் கழிந்தன. “ஓகே சார், உங்க விருப்பம் அது, நான் கம்பெல் பண்ண முடியாது... ஆல் த பெஸ்ட்!” என்று பர்ஸனல் அதிகாரி கை நீட்டியதும், அதைப் பற்றிக் குலுக்கி விட்டு, “தேங்க் யூ சார்” என்று எழுந்து வந்தார்.
“நீங்க என்ன சொன்னீங்க?”
“என்ன சொல்லியிருப்பேன்னு நினைக்கற?”
வனஜா கொஞ்சம் மௌனமாக இருந்தாள், பின்னர் “அவன் என்னிக்காவது ஒரு நாள் வர மாட்டானா?” என்றாள்.
முகத்தை துடைத்துக் கொண்டு வெளியே வந்தவருக்குப் பத்தடி முன்னால் சென்று கொண்டிருந்த இளைஞன் தீபக் போலவே தோன்றினான்.
**********************
கதை நன்றாக இருக்கின்றது. கடைசி வரி நம்பிக்கையைக் கொடுப்பதுபோல முடித்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஆணவக் கொலை பகுதி ஒட்டவில்லை. காரணம் அந்தமாதிரி நிகழ்வுக்கான காரணம் இருக்கும்படி அமையவில்லை
நல்ல கதை, நல்ல எழுத்து
பிபல்கோட்டிலிருந்து. இன்று பத்ரிநாத் சென்றுவிடுவோம்
ஆணவக் கொலை பகுதி ஒட்டவில்லை. காரணம் அந்தமாதிரி நிகழ்வுக்கான காரணம் இருக்கும்படி அமையவில்லை//
நீக்குநெல்லை, கதைல யாருக்குமே என்ன நடந்ததுன்னு தெரியலையே...ஸோ யூகங்கள் தான். வந்து சொன்னவங்களும் கூட காது வழி வந்த செய்தியைத்தான் சொல்றாங்க.....ஆனா அம்மா அப்பா, தோழர்கள் யாருக்குமே அப்படி நிகழ்வு பத்தி தெரியாதப்ப, கதையாசிரியர் எப்படி அதைக் கொண்டுவர முடியும்!!!!
அக்கா வந்து சொல்வாங்க ஏன்னு, என்று நினைக்கிறேன்.
காணாமல் போனதுமே அங்கு இன்வெஸ்டிகேஷன் ஸ்டைலில் கொண்டு போனால், க்ரைம் திரில்லர் கதைக்கான கரு.
அக்கா அதை குடும்பக் கதையாகச் சொன்னதால்...இப்படி.
கீதா
நன்றி நெல்லை.
நீக்குஎன் சார்பில் பதில் சொன்ன கீதாவுக்கு நன்றி. AI படங்கள் உங்கள் உபயம் என்று நினைக்கிறேன். அதற்கும் நன்றி.
நீக்குகதையில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லையே. மெகா சீரியல்ல இப்படித்தான் இழுத்து கடைசியில் சப்பென்று முடித்து விடுவார்கள். இவ்வாறு கூறியதற்கு மன்னிக்கவும்.
பதிலளிநீக்குJayakumar
மன்னிப்பு கோர வேண்டிய அவசியமில்லை. உங்கள் கருத்திற்கூ நன்றி. நெகடிவ் விமர்சனங்கள் நம்மை மேம்படுத்திக் கொள்ள உதவும். நன்றி.
நீக்குபானுக்கா கதை நல்லா எழுதியிருக்கீங்க. நீங்க எழுதும் விதம் பற்றி சொல்லத் தேவையே இல்லை!!!!!
பதிலளிநீக்குசப்ஜெக்ட் நல்ல ஹெவி சப்ஜெக்ட், அக்கா. அதுக்கான ஹெவினெஸ் இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாமோன்னு தோன்றியது. அக்கா, வேகமாகக் கதை போவது போல ஒரு தோற்றம்.
கீதா
உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியிருக்க வேண்டுமோ? நான் அதில் உங்கள் அளவு ஸ்ட்ராங்க் இல்லை. நன்றி
நீக்குகாணாமல்போன தீபக் குடும்பத்திற்கே என்ன நடந்தது என புரியாத நிலையில் கதை நகர்கிறது. நல்ல கதை.
பதிலளிநீக்குஆணவக் கொலை என படிக்கும் போது மனம் நெருடியது.
தாய் மனதின் எதிர்பார்ப்பில் கதை பாஸிட்டிவ் செய்தியாக முடிந்துள்ளது.
//காணாமல்போன தீபக் குடும்பத்திற்கே என்ன நடந்தது என புரியாத நிலையில் கதை நகர்கிறது. // சரியான புரிதல். இப்படியும் நடக்கின்றன என்பது கொடூரமான நிஜம். நன்றி மாதேவி
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு//அவனைப் பார்க்க வந்த சங்கரின் பெற்றோர்களும் இவர்கள் வீட்டிற்கு வருகை தந்து, தங்கள் வீட்டிற்கு இவர்களை அழைத்து இரு குடும்பத்திற்கிடையேயும் நட்பு விரிவடைந்தது. முதலில் கோபாலையும், வனஜாவையும் அங்கிள், ஆண்டி என்று அழைத்துக் கொண்டிருந்த சங்கர், 'மாமா, அத்தை' என்று அழைக்கத் தொடங்கினான்.//
பதிலளிநீக்குசங்கர் மாமா, அத்தை என்று கூப்பிட்டு பழகுவதால் சங்கர் வீட்டில் தீபுக்கு துணை கிடைக்கும் போலும் என்று நினைத்தேன் முழு கதையை படித்ததும் ஏமாற்றம்.
இறந்து விட்டானா என்று தெரியாமல் எப்படி இறந்து விட்டான் என்று சொல்லி பணத்தை வாங்குவது அதற்கு மனம் இடம் கொடுக்காதே!
அவன் வருவான் என்று நம்பும் உள்ளங்களை குளிர்விக்க அவன் வரட்டும்.
கதை சொன்ன விதம் அருமை. எல்லாம் யூகத்திலேயே கடந்து போகிறது.
பதிலளிநீக்குசரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குகதை தங்கள் பாணியில் நன்றாக உள்ளது. தீபகின் முடிவு எப்படி என்பதை அந்த குடும்பத்தில் அவரவர் யூகத்திற்கு விட்டு எழுதினாலும், நம் குடும்பத்தில் இப்படி ஒருவர் தீடிரென காணாமல் போவதை போலவே ஒரு அபரிமிதமான வருத்தம் கதையை படித்து முடித்ததும் மனதில் ஆழமாக எழுந்தது. அத்தனை உணர்வுபூர்வமான எழுத்து தங்களுடைய.து. இக்கதையை படிப்பவர்களுக்கு இதயபலம் நிறைய இருக்க வேண்டுமென ஒரு முன்னுரையும் நீங்கள் எழுதியிருக்கலாம்.
அன்பான அந்த பெற்றோர்களின் நம்பிக்கையை காப்பாற்றியபடி அவன் ஒருநாள் கண்டிப்பாக திரும்பி விட வேண்டுமென மனது துடிக்கிறது. எத்தனையோ க்ரைம் கதைகளைப் படிக்கும் போதும் அதன் முடிவான முடிவில் மனது சற்று சலனப்படுமே ஒழிய இப்படி கனத்துப் போனதில்லை. அதனால், அவன் திரும்பி வந்ததாகவும், பல காரணங்களால் அவன் இருப்பிடத்தை தெரிவிக்காமல் இருந்ததாகவும், ஒரு புதிய கதையை எழுதி பதிப்பித்து விடுங்களேன் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். . பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .