28.6.25

Positive மற்றும் நான் படிச்ச கதை + எங்கள் பிறந்தநாள்.

 

இன்று எங்கள் Blog பதினாறு வருடங்கள் முடித்து, தன்னுடைய பதினேழாவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. 

அந்தக் காலத்திலிருந்து, இந்தக் காலம் வரை எங்கள் பதிவுகளில் பங்கேற்றும், பங்களித்தும், கருத்துகள் பதிந்தும் பேராதரவு கொடுத்து வருகின்ற பதிவர்கள் & வாசகர்கள் எல்லோருக்கும் ஆசிரியர்கள் குழு சார்பில் எங்கள் மனமார்ந்த நன்றி. 

நம் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும் சந்தோஷமாக ஆரோக்கியமாக பல்லாண்டுகள் வாழ எங்கள் வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்! 



= = = = = = = = = = = = =

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கல்லிடைக்குறிச்சி முனைவர் முகமது முகைதீனுக்கு விருது

இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் குராய்டன் தமிழ் சங்கம் நடத்திய உலகளாவிய சாதனை படைத்த தமிழர்களுக்கு விருது வழங்கும்விழா நடைபெற்றது.  உலகெங்கும் உள்ள தமிழர்களை இணைத்து தனது தேசியக் கல்வி அறக்கட்டளை அமைப்பின் மூலம் இணையவழியில் கருத்தரங்க நிகழ்வை நடத்தி தமிழ் மொழி மற்றும் தமிழ்க்கலாச்சாரத்தினை பரப்பி வரும் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீனுக்கு “செந்தமிழ் சான்றோர்” என்ற விருதினை குராய்டன் மாநகரின் துணை மேயர் முகமத் இஸ்லாம் வழங்கினார்.  இங்கிலாந்து பாரளுமன்ற உறுப்பினர் நடாசா அயர்ன்ஸ், குராய்டன் தமிழ் சங்க தலைவர் அப்பு தாமோதரன் , சென்னை ஆ.கோ.மோ தமிழ் ஆய்வு மையத்தின் இயக்குனர் பாட்டழகன், விஜிபி தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி. சந்தோஷம், கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழக பேராசிரியர் சிவா பிள்ளை, நார்பரி பார்க் மாமன்ற உறுப்பினர் ஆகியோர் உடன் இருந்தனர்.  தமிழ் எழுத்தாளர்களை உலகளாவிய ரீதியில் இணைக்கும் 'நடவு', வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் (NATAWO) அமைப்பில் அமீரக உலகத் தூதுவராக முனைவர் முகமது முகைதீன் அவர்கள் இலக்கியத் தொண்டாற்றி வருகிறார்.

=============================================================================================


=================================================================================================================================================================

நான் படித்த புத்தகம்

                                             பானுமதி வெங்கடேஸ்வரன் 





















                        



    


நான் படித்த புத்தகம்: 'நான் கிருஷ்ண தேவராயன்' ஆசிரியர் ரா.கி. ரங்கராஜன்


சரித்திர கதைகள் படிப்பதில் எனக்கு அத்தனை ஆர்வம் கிடையாது. நான் படித்த சரித்திர கதைகள் பொன்னியின் செல்வன், திருவரங்கன் உலா, ரத்தம் ஒரே நிறம், உடையார்,  கங்கை கொண்ட சோழன் மற்றும்  நான் கிருஷ்ண தேவராயன் மட்டுமே.

இவற்றில் பொன்னியின் செல்வனை எத்தனை முறை படித்திருக்கிறேன் என்றே சொல்ல முடியாது. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் படிப்பேன், அதைத் தவிர பொ.செ. யார் வீட்டிலாவது இருப்பதை பார்த்தால் கெஞ்சி கூத்தாடி அவர்களிடமிருந்து வாங்கி வந்து விடுவேன்.  பொ.செ. ரசித்தவர்களுக்கு உடையாரை ரசிப்பது கடினம். முதல் பாகத்தை கஷ்டப்பட்டு படித்து விட்டால் அடுத்தடுத்து படித்து விடலாம். திருவரங்கன் உலா மனதை உருக்கும். வெள்ளையர்கள் நம்மை ஆண்ட காலத்தை கதைப்படுத்திய சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறத்தை ரசிக்காமல் இருக்க முடியுமா?

எல்லாம் சரி, நீ எந்த புத்தகத்தைப் பற்றி எழுதப் போகிறாய்? என்று கேட்கிறீர்களா?  மேற் சொன்ன புத்தகங்கள் எல்லாமே எனக்கு பிடித்தவைதான், என்றாலும் இப்போது நான் குறிப்பிட விரும்புவது ரா.கி. ரங்கராஜன் அவர்கள் எழுதிய 'நான் கிருஷ்ண தேவராயன்' என்னும் புத்தகத்தைதான்.

கிருஷ்ணதேவராயர் மீது  எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஹிந்து சாம்ராஜ்யத்தை காப்பாற்றி கொடுத்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.  ரா.கி. ரங்கராஜன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். Very very versatile. குமுதத்தில் பல புனை பெயர்களிலை பல தளங்களில் கதைகள் எழுதியிருக்கிறார். எழுத்தாளர் ரிஷபன் ஒரு முறை இவரைப் பற்றி கூறும் பொழுது "very underrated writer" என்றார். உண்மைதான் இவருக்கு இன்னும் அதிகம் புகழ் கிடைத்திருக்க வேண்டும். இவர் தொடாத சப்ஜெக்ட் இல்லை. அப்படிப்பட்டவர் எழுதியிருக்கும்  சரித்திர புதினம் 'நான் கிருஷ்ண தேவராயன்'.

சரித்திர கதைக்கான டெம்ப்ளேட்டை உடைத்து,தன்மையில்(first person) எழுதப்பட்டிருக்கும் ஒரே சரித்திர நாவல் இது என்று நினைக்கிறேன். சரித்திர கதை சமூக கதை போல எழுதப் பட்டிருப்பது இதன் சிறப்பு.

கிட்டத்தட்ட பொன்னியின் செல்வனில் வருவது போலவே வாரிசு போட்டியால் கிருஷ்ண தேவராயர் உயிருக்கு ஆபத்து வரும் என்று கருதிய மந்திரி அப்பாஜியின் அறிவுரையின் பேரில் நாட்டை விட்டு வெளியேறி, தன்னை அரசர் என்று வெளிகாட்டிக் கொள்ளாமல், முத்திரை மோதிரம் மட்டும் அணிந்து சாதாரண மக்களோடு பழகி வரும் கிருஷ்ணனுக்கும், பாகவத மேளா நடத்தும் குடும்ப பெண் ஆன சின்னாதேவிக்கும் காதல் அரும்புகிறது. அரச குடும்பத்தின் மேல் கோபத்தில் இருக்கும் சின்னா தேவியின் சகோதரன் எதிராஜன் அதற்கு எதிராக நிற்கிறான்.

இந்நிலையில் கிருஷ்ண தேவராயர் நாடு திரும்பி அரச பொறுப்பை ஏற்க வேண்டிய நிர்பந்தம்.  ராஜாங்கரீதியில் கிடைக்கும் அனுகூலத்திற்காக ஸ்ரீரங்கபட்டண இளவரசியாகிய திருமலா தேவியை மணந்தாலும், அவரால் சின்னாதேவியை மறக்க முடியவில்லை. அவளைத்தேடி அடைய அவர் மேற்கொண்ட முயற்சிகளே நான் கிருஷ்ண தேவராயன் நாவல்.

அடிப்படையில் காதல் கதைதான். அதுவும் கெளதம் மேனன் பட கதாநாயகனைப் போல காதலியைத் தேடி ஊர் ஊராக அலைகிறார். அவர் நடத்தும் ஒரு முக்கியமான போரே சின்னாதேவியை தேடிதான் என்பது சற்று வியப்பாக இருக்கிறது.

கிருஷ்ண தேவராயரை ஒரு அரசராக, ஹீரோயிசம் கொண்ட ஒரு பாத்திரமாக படைக்காமல், சாதாரண மனிதனாக படைத்திருக்கிறார். அதற்காக வீரத்தில் சோடை போனவராக சொல்லவில்லை. உருவத்தை பொறுத்தவரை நடுத்தர உயரத்தில், நடுத்தர உருவ அமைப்பு கொண்டவராகத்தான் இருந்தாராம். சிறு வயதில் அம்மை போட்டியதால் தாடையில் அம்மைத் தழும்பு இருக்குமாம். அரசர் என்றால்  ஆஜானுபாகுவாக இருக்க வேண்டும் என்று அப்படி சித்தரித்து ஒரு ஓவியன் வரைந்த ஓவியத்தை நிராகரித்து விடுகிறார் என்று கதையில் ஒரு இடத்தில் வரும்.

கதையில் வரும் ஆண் பாத்திரங்களை விட கிருஷ்ண தேவராயரின் தாய் நாகலாம்பிகை, கலிங்க நாட்டை சேர்ந்த காயத்ரி என்னும் பெண், கணவனுக்கு சின்னமாதேவி மீது இருக்கும் காதலை புரிந்து கொண்டு, கணவர் அவளைத் தேடி மணக்கும்வரை தன் தாம்பத்ய சுகத்தை தியாகம் செய்யும் திருமலா தேவி போன்ற பெண் பாத்திரங்கள் அழுத்தமாக படைக்கப்பட்டிருக்கின்றன.

கிருஷ்ண தேவராயருக்கும் அவர் அம்மாவுக்கும் இருக்கும் உறவும்,நட்பும் சிறப்பு. அம்மாவின் பெயரில்தான் நாகலாபுரம் என்னும் ஊரை சிருஷ்டி செய்தாராம் கிருஷ்ண தேவராயர்.

அரண்மனைக்குள் ஏதாவது ஒரு பகுதியிலிருந்து அந்தபுரத்திற்கு செல்ல அரச குடும்பத்தினர் விரும்பினால் அவர்களை தங்கள் முதுகில் சுமந்து செல்ல அடிமைப் பெண்கள் உண்டாம்.

அரசர் யாருக்காவது தன் கையால் தாம்பூலம் கொடுத்தால் தன் நம்பிக்கைக்கு உரியவராக அவரை ஏற்றுக்கொண்டு, ஒரு முக்கிய பொருப்பை அவருக்கு வழங்கப் போகிறார் என்று பொருளாம்.

அதைப்போல யாருக்காவது பரிசு கொடுக்க வேண்டுமென்றால் அரசர் தன் கையால் அதை கொடுக்க மாட்டாராம். பரிசுப்பொருள் அரசரின் காலடியில் வைக்கப்பட்டு விடும். ஊழியர்தான் எடுத்து வழங்குவாராம்.

விஜயநகர பேரரசில் பாளையகாரர்களுக்கு தாங்களே வரி விதித்துக் கொள்ளும் உரிமை இருந்ததாம். அதில் சில பாளையகாரர்கள் திருமணவரி என்று ஒன்றை விதித்திருந்தார்களாம்.

அதைப்போல மழை சரியாக பெய்யவில்லை என்றால், நன்றாக மழை பெய்து தானிய விளைச்சல் நன்றாக இருந்தால் மனைவியின் சுண்டு விரலையும், நடு விரலையும் அறுத்து காணிக்கையாக தருவதாக வேண்டிக் கொள்வார்களாம்(எது..?).

அப்படி விரலை அறுக்க நாவிதர், உடனே மூலிகை கட்டு போட வைத்தியர் போன்றவர்கள் கோவிலில் இருப்பார்களாம், அவர்களுக்கு அரிசி கொடுக்க வேண்டுமாம், அதற்கு 'விரலரிசி' என்று பெயராம்.

கோவில்களில் விளக்கேற்றவும், அந்த விளக்கு அணைந்து விடாமல் அதற்கு அவ்வப்பொழுது எண்ணெய் ஊற்றி, தூண்டி விடவும் தூண்டுகூலி என்ற பெயரில் ஆட்கள் இருப்பார்களாம்.

மன்னர் உறங்கச் சென்றதும் இரண்டு பேர்கள் தீவட்டிகளை கொண்டு வந்து மன்னரை வணங்கி, பின்னர் அந்த தீவட்டிகளை வெளியே எடுத்துச் சென்று உப்பரிகையிலிருந்து மக்களுக்கு காட்டுவார்களாம். அப்படி தீவட்டியை மக்களுக்கு காட்டினால் மன்னர் நலமாக இருக்கிறார் என்று பொருளாம், தீவட்டி காட்டப்பட வில்லை யானால் மன்னர் நலமாக இல்லை என்று பொருளாம். இதற்கு 'தீவட்டி சலாம்' என்று பெயராம்.

மன்னர் ஒரு நாட்டின் மீது படையெடுத்து செல்லும் போது முதலில் முள் வேலி அமைக்கப்பட்டு அதற்குள் அரசர் தங்கும் கூடாரம், அரச குல பெண்டிர்கள் தங்கும் இடங்கள். இவை தவிர அரசர் தினசரி செய்யும் பூஜைக்கான விக்கிரகங்கள் எடுத்து செல்லப்பட்டு தனியே வைக்கப்படுமாம்.

பின்னர் அரச பிரதானிகள், தளபதிகள், *அவர்களின் மனைவி, குழந்தைகள் தங்குமிடம். அதையடுத்து ஆபரணங்கள், முத்து, பவளம் போன்றவை விற்கப்படும் விற்பனை கூடங்கள், பின்னர் சமையல் பாத்திரங்கள், சமைப்பவர்கள், குழி தோண்டுபவர்கள், கருமார்கள், தச்சர்கள், மருத்துவர்கள் அரசர்கள் மாலை நேரத்தில் பொழுது போக்க இசைக் கலைஞர்கள், நாட்டியமாடுபவர்கள் என்று ஒரு சிறு ஊரே செல்லுமாம்.

*கிருஷ்ணதேவராயர் போர் வீரர்களோடு குடும்பம் வருவதை நிறுத்தினாராம்.

ஒரு பெண் நடத்தை கெட்டவள் என்று தெரிந்தால் அவளுடைய கையில் பெருக்கல் குறி(X) போல சூடு போட்டு குடும்பத்தை விட்டு விலக்கி வைத்து விடுவார்களாம்.
தேவதாசிகள் அளித்த வரியினால் அரசுக்கு 1/3 பங்கு வருமானம் கிடைத்ததாம். தேவதாசிகள் குளம் வெட்டுவது, சத்திரம் கட்டுவது, அன்னதானம் போன்ற பல நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்கள்.

இது போன்ற பல சரித்திர  தகவல்களையும், அந்தக்காலத்தில் வாழ்ந்த ஆன்மீக பெரியவர்கள் பற்றிய தகவல்கள், கிருஷ்ண தேவராயர் மேற்கொண்ட போர்கள், அவர் தரிசித்த கோவில்கள், அவற்றிர்க்கு அவர் அளித்த கொடை போன்ற விவரங்கள் இவற்றோடு சில ஜோதிட தகவல்களையும் இந்த ஒரு புத்தகத்தை படிப்பதால் தெரிந்து கொண்டுவிட முடியும்.

இந்த தகவல்களை திணிக்காமல், சம்பவங்களாக அழகாக கோர்த்திருப்பதில்தான் கதாசிரியரின் அனுபவமும், திறமையும் பளிச்சிடுகின்றன.

இது ஆனந்த விகடனில் தொடராக வந்தபொழுது, 52 வாரங்களுக்கு அருமையாக எழுதியிருக்கும் ரா.கி.ரங்கராஜன் அவர்களுக்கு 52 வராகன் கொடுக்கலாம் என்று தோன்றியது. 

4 கருத்துகள்:


  1. ​பா வே அவர்கள் கதை விமரிசனம் நன்றாக உள்ளது. கதை சுருக்கம் கொடுத்து பின்னர் கதையின் மூலமாக அறிந்து கொண்ட அன்றைய பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டுகிறார். புத்தகத்தில் இருந்து எடுத்துக்காட்டும் தகவல்கள் தற்காலத்தில் புதுமையாக தோன்றுகிறது.

    மொத்தத்தில் புத்தகத்தை வாங்கி படிக்க சிபாரிசு மடல் ஆக கட்டுரை உள்ளது. என்னுடைய குறை காணும் நோட்டங்கள் எதுவும் இல்லாமல் உள்ள நல்ல விமரிசனம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. பிறந்த நாள் பரிசு ஒன்றும் கிடைக்கவில்லையா? இது வரையிலும் யாரையும் காணோம்.

    பதிலளிநீக்கு
  3. எங்கள் ப்ளாக்கின். 17 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    இன்னும் இந்த. டீன் ஏஜ். 3 வருடங்கள் தான்.
    அதன்பின் பெரியவர்கள் லிஸ்ட்டில் வந்துவிடும்.
    என்ஜாய்.
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!