26.6.25

ரிஸப்ஷன் சங்கடங்கள்

 

காரணங்களை ஒதுக்கி விட்டு காரியங்களை பிடித்துக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் திருமணம் என்பது ஒரு தவிர்க்க முடியாத சடங்காகி விட்டது.  அதன் முந்தைய பழக்க வழக்கங்கள் மாறி இப்போது ஒரே மாதிரி பாட்டெர்னில் திருமணம் நடத்துகிறோம்.

திருமணத்துக்கு முதல்நாளே, அதாவது பெண் அந்த ஆணின் மனைவியாக மாறும் முன்பே, வரவேற்பு.  பெண் மணமகனுடன் கைகோர்த்து நிற்கிறாள்.  இதில் இப்போது நவீனமாக நடனம் எல்லாம் வேற...

திருமணத்துக்கு அழைக்கப்பட்ட பெரும்பாலான தூரத்து உறவுகள், நட்புகள் பெரும்பாலும் அந்த வரவேற்பன்று வந்து மொய் எழுதிவிட்டு சென்று விடுவார்கள்.  ஆறரை மணிக்கு வரவேற்பு என்று போட்டிருக்கும்.  ஆனால் பெண் அலங்காரம் முடிந்து வர எட்டு எட்டரை மணி ஆகும்.  காத்திருந்தவர்கள் ஒன்று, முன்னரே சாப்பிட்டு வந்து மேடையின் இடது பக்கம் வரிசை கட்டுவார்கள், அல்லது சாப்பிடாமல் மனமக்களைக் கண்டதுமே சட்டென எழுந்து கையில் மொய்க்கவர் அல்லது பரிசுப்பொருளோடு மேடையின் இடது ஓரம் சென்று வரிசை கட்டி நின்று விடுவார்கள்.

இதில் இன்னொரு சங்கடம் இருக்கிறது.  ஏற்கெனவே மேடைக்கு வந்து விட்டாலும் உடனே மொய் கொடுக்கும் சடங்கு தொடங்கி விடாது. போட்டோகிராபர் அப்போதுதான் வளைத்து வளைத்து மணமக்களை போட்டோ பிடித்துத் தள்ளிக் கொண்டிருப்பார்.  பொறுமையில்லாமல் நாம் வாட்ச்சைப்பார்த்தபடி கால் மாற்றி நின்று காத்திருக்க வேண்டும்!  

சரி, வரிசை கரைந்து மேடையில் ஏறி செருப்புடனோ செருப்பை மேடை ஓரம் எங்காவது அவசரமாகக் கழற்றிக் கடாசி விட்டோ (இதிலும் இன்னொரு துணைச் சங்கடம், அந்த கடாசப்பட்ட செருப்பை ஆளுக்கு ஆள் கால்களால் எத்தி, அலலது நகர்த்தி எங்கோ போட்டு இருப்பார்கள், அல்லது இரண்டும் வெவ்வேறு இடங்களில் இருக்கும்படி ஒதுங்கி விடும்.  வலதுபுறம் மேடை இறங்கி வந்து சாப்பிடச் செல்லும் அவசரத்தில் செருப்பைத் தேடுவது ஒரு எரிச்சல்!  ஒருமுறை என் அந்த இன்னொரு செருப்பை நெருங்கி காலில் போட்டுக்கொள்ளும் சமயம் ஒரு சிறுவன் ஓடிவந்த ஒரு சிறுவன் கால் பட்டு  அது எங்கேயோ அங்கிருந்த இடுக்கில் சென்று விட, அன்று இன்னும் எரிச்சல், அவஸ்தை!) மணமக்களை நெருங்கும் சமயம் ஒரு எரிச்சலான அனுபவம் கிடைக்கும்; ஒரு அநியாயம் நடக்கும்.

பெண் வீட்டுக்கோ அலலது பெரும்பாலும் பிள்ளை வீட்டுக்கோ வேண்டப்பட்ட வி ஐ பி க்கள், அல்லது நெருங்கிய பந்துக்கள் நாம் மணமக்களை நெருங்கும் சமயம் நெருங்கும் நேரம் (!) வலது புறம் மேடை  வழியாக நான்கைந்து பேர் வந்து நிற்பார்கள்.  குறுக்கே புகுந்து விடுவார்கள். நெருங்கிய அல்லது முக்கிய நபர்கள்தான் என்றில்லை, பொதுவாகவே இந்த பொது விதியை - பிரதட்சணாமாக என்று எடுத்துக் கொண்டாலும் சரி, அலலது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இடதுபுறமாக வரிசையில் நிற்பது, பரிசு கொடுத்து விட்டு வலது புறம் இறங்குவது என்கிற வழக்கத்தைப் புறக்கணித்து வலது புறமாக ஏறி கலகம் செய்பவங்கள் உண்டு.  மனதுக்குள் ரொம்ப சாமர்த்திய சாலிகள் என்று நினைப்பு இவர்களுக்கு.  நாகரீகம் தெரியாத முண்டங்கள்!  கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன், கோச்சுக்காதீங்க...  சிலர் இந்தப் பக்கம் மேடையில் ஏறுகிறார்களோ, அந்தப் பக்கமாகவே இறங்கி இடைஞ்சல் செய்வார்கள்.  என்னென்ன சொல்றேன் பாருங்க...

அட, ஒருவழியாக மணமக்களை நெருங்கி விட்டோமப்பா..  என்ன நடக்கும்?  முன்னால் சென்ற குழுவே இன்னும் நகர்ந்திருக்காது.  இரண்டொருவர் நின்று கைகுலுக்கி பேசிக்கொண்டே இருப்பார்கள், அல்லது மாஞ்சு மாஞ்சு செல்பி எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

சரி, அவர்களும் போயாச்சு..   நாம் மணமக்களை நெருங்குகிறோம்.  அவர்கள் கையைக் குலுக்கி வாழ்த்துச் சொல்ல ஆரம்பிக்கும்போது மணமகளோ, மணமகனோ, நம் சம்பந்தப்பட்ட நபர் அங்கிருக்கும் உறவினரை அவசரமாக அழைத்து சில இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுப்பார், பேச்சு நீண்டுகொண்டே போகும்.  அல்லது ஏதோ ஒரு உறவு அப்போதுதான் வந்து அவரிடம் எதையோ விவாதிக்கத் தொடங்கும்.  நம் முகராசி.  மர்ஃபி லா மாதிரி இதெல்லாம்.  

நம் கவலையோ, இப்போது மணமகள்/ன் கையில் கொடுத்த மொய்க்கவர் நம் கணக்காய் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்...  பின்னர் பெயர் பார்த்து தெரிந்து கொள்ளலாம்தான்.  ஆனால் அந்த நிமிடமே அவர்கள் கையில் இருக்கும் கவரை ரிஃப்ளக்ஸ் ஆக்ஷனில் பின்னால் நிற்கும் மொய் க்லெக்டரிடம் கொடுத்து விட்டால், அப்புறம் மறந்துபோய் இவர்கள் ஒன்றும் கொடுக்காமலேயே வந்து போகிறார்கள் என்று தோன்றி விடாதா என்கிற மாதிரி அ(னா)வசிய கவலை எல்லாம் நம்மை வாட்டும்!  பின்னால் லிஸ்ட் பார்த்து நிரூபிக்கலாம்தான்.  அந்த நிமிடம் தோன்றுவதை எப்படி மாற்ற முடியும்?!  சரி, லிஸ்ட்டில் பெயர் எழுத மறந்து விட்டால்?  அட, நாமே ஒரு மறதியில் பெயர் எழுதாமல் கொடுத்திருந்தால்?  ஆனால் நான் வீட்டிலேயே பெயர் எழுதி கவரின் உட்புறம் கொடுக்கப்படும் தொகையையும் எழுதி ஒட்டிக் கொடுப்பது வழக்கம்.  அனுபவம்!  ஏனெனில் கவர் தனியாக, பணம் தனியாக பிரிந்து விட்டால் குழப்பம் வரும்.  இது பற்றி எல்லாம் முன்னரே கவலைப் பட்டிருக்கிறேன்,  ச்சே...  எழுதி இருக்கிறேன்.

நாம் கொடுக்கும்போதும் சரி, இறங்கி வந்து பார்க்கும்போது வேறு சிலர் மொய் கொடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போதும் சரி, மணமகனோ, மணமகளோ இந்தப் புதியவர்களை, அல்லது அவர்களுக்கு இன்னும் அறிமுகமாகாத நட்புறவுகளை அலட்சியம் செய்வது போல போட்டோ போஸ் தராமல் அருகில் அல்லது தூரத்தில் நிற்பவருக்கு சைகை காட்டிக்கொண்டோ, பேசிக்கொண்டே இருப்பதும் சங்கடத்தைத் தரும்.  எரிச்சல் என்று எழுத வந்தேன்.

மொய் கொடுத்து போட்டோவிலும் விழுந்து நாம் வந்தது ரெஜிஸ்டர் ஆயாச்சுன்னா, விடு ஜூட்..   நேரா டைனிங் ஹால்.  சாப்பாடு, பீடா...  தாம்பூலம், அப்புறம் போடா என்று வெளியே வந்து விழுந்து விடலாம். 

==================================================================================================

குவிகம் ஜூன் மாத மின்னிதழில் இடம்பெற்ற கட்டுரை.  மருத்துவர் திரு பாஸ்கர் ஜெயராமன் எழுதியது.  அவர் அனுமதி பெற்று இங்கு பகிர்கிறேன்.  அந்த கட்டுரையின் சுட்டி இங்கே க்ளிக்கினால் திறக்கும்.


அவருக்கு அறுபத்தைந்து வயதிருக்கலாம் – இருபது வருடங்களுக்கு மேலாக சர்க்கரை வியாதியும் இரத்தக் கொதிப்பும் அவருடன் பயணிக்கின்றன! கொஞ்சம் நெட்டில் மேய்வது – முக்கியமாக ஹெல்த் சம்பந்தமான செய்திகள் – பிடித்தமான பொழுதுபோக்கு.

இரண்டு நாட்களாக மார்வலி – ’கேஸ்’ பிராப்ளம் என்று தானே, ரோஸ் கலர் மருந்து, ரானிடிடின் (நெட் உபயம்!) எடுத்துக்கொண்டும் வலி கேட்கவில்லை. வலி அதிகமாகவே, ’ஹார்ட் அட்டாக்’ எனப் பயந்து, எல்லா டெஸ்டுகளும் எடுத்து, மருத்துவமனை யில் இரண்டு நாட்கள் தீவிரமாகக் கண்காணிக்கப் பட்டார்! ஐந்தாம் நாள் திட்டுத் திட்டாக சிவந்த நிறத்துடன் சின்னச் சின்ன நீர்க் கொப்புளங்கள் இடது பக்க மார்புப் பகுதியில் தோன்றின – ஹெர்பிஸ் சாஸ்டர் – அக்கி – எட்டிப்பார்த்தது.
‘அக்கி’ என்பது பெரும்பாலும் ஐம்பது வயதிற்கு மேற்பட்டோருக்கு வருகின்ற ‘வைரஸ்’ தொற்று – சின்ன வயதில், சம்மர் விடுமுறையில் அநேகமாக நம் எல்லோருக்கும் வரக்கூடிய ‘சின்ன அம்மை’ (ஆத்தா மேலெ எறங்கியிருக்கா என்று வேப்பிலைப் படுக்கையும், பத்தியமும், பால்குடமும், நேர்த்திக்கடனும் இன்னமும் வழக்கத்தில் தமிழ்ப் பாரம்பரியம் பேசியபடி உள்ளன!), பெரியவர்களுக்கு உடம்பின் ஒரு பாதியில் (இடது அல்லது வலது), ஒரு பகுதியில் மட்டும் (ஒரு நரம்பு ஓடும் பாதையில் மட்டும்) வருவதுதான் அக்கி – வேரிசெல்லா சாஸ்டர் வைரஸ் (VARICELLAA ZOSTER VIRUS) தொற்று.
ஜுரம், குளிர், தலைவலி, சோர்வு, தசை பிடிப்பு எல்லாம் சிலருக்கு வரலாம். நரம்பின் பாதையில், தோலின் மீது சிறு நீர்க் கொப்புளங்களாக, அங்கங்கே வரும் – எரிச்சலுடன் வலியும் இருக்கும் (சில நேரங்களில் அரிப்புடன்). உடம்பின் ஒரு பாதியில் மட்டும் இருப்பது முக்கியம். குறிப்பிட்ட பகுதியில் மட்டும் (LOCALISED) வருகின்ற சின்ன அம்மை எனலாம்.
பேச்சு வழக்கில், குழந்தைகளுக்கு முகத்தில் வருகின்ற – மூக்கு, உதடுகளின் ஓரங்கள், கன்னம், கழுத்து, கை, கால் என வரலாம் – பாக்டீரியல் தொற்றினை (IMPETIGO) ‘அக்கி’ எனத் தவறாக நினைப்பவர்கள் உண்டு. இவை, சிவப்பும்,மஞ்சளும் கலந்த நிறத்தில், பொருக்குடன், இரண்டு பக்கமும் இருக்கும் – இதற்கான சிகிச்சை வேறு. (அம்மை அல்லது அக்கி என்றெண்ணி, வேப்பிலையும், மஞ்சளும் அரைத்துப் பூசி, உடம்பு பூராவும் புண்ணாகி விடும் – ஆத்தா வீரியமாக வந்துவிட்டதாக நினைத்து பயப்படுவோரும் உண்டு!)
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நிலையில், வயதானவர்களுக்கு அக்கி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அறுபது வயதுக்குமேல், எச்.ஐ.வி., புற்றுநோயும் அதற்கான கீமோதெராபி, ரேடியோதெராபி, ஸ்டீராய்ட் தெராபி, நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்கு அக்கி வரலாம்.
தோல் கொப்புளங்கள், இரண்டு அல்லது மூன்று வாரங்களில் ஆறிவிடும். சிலருக்கு, மாறாத வடுவாகவும் நின்று விடக்கூடும்.
ஓய்வு மிகவும் அவசியம். குளிர் ஒத்தடம் உதவும். காலமின் லோஷன் கொப்புளங்கள் காய்வதற்கு உதவும். மருத்துவரின் ஆலோசனையுடன், ஆண்டி வைரஸ் மருந்துகளும், வலி மற்றும் அரிப்புக்கு மருந்துகளும் எடுத்துக் கொள்ளலாம்.
அக்கி என்றவுடன், சட்டி, பானைகள் செய்யும் குயவனாரிடம் சென்று ‘எழுதிக் கொண்டு’ வருவது வழக்கம் – சுட்ட பானைச் சில்லுகளைப் பொடித்து, குழைத்துப் பூசி விடுவார்கள் – காலமின் லோஷன் போலவே ’காயவைக்கும்’ குணம் இதற்கு உண்டென்றாலும், அசுத்தமான நிலைகளில், பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்புகள் அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
முகத்தில் கண்ணைச் சுற்றி வருகின்ற அக்கி (HERPES ZOSTER OPHTHALMICUS) சிறிது கவலைக்குறியது. கண் கருவிழியில் வெள்ளைப் புள்ளிகளாய் காயங்கள் ஏற்படலாம். சரியான மருத்துவப் பரிசோதனையும், சிகிச்சையும் அவசியம்.
ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி – வலது பக்கக் கண் மற்றும் நெற்றி எங்கும் தாங்கமுடியாத வலியுடன் – ”பளிச்” சென கத்தியால் வெட்டுவதைப் போன்ற வலியுடன் – வந்தார். அருகில் பார்த்ததில், ஆறிய அம்மை வடுக்களும், சிவந்த கண்ணும் தெரிந்தன. கண் மருத்துவர் பார்த்து, கண்ணுக்கு சொட்டு மருந்துகள் கொடுந்திருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன் அக்கி வந்ததையும், சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டதையும் அவர் காட்டிய மருந்துச் சீட்டு சொல்லியது! இது அக்கியின் பின் விளைவான நரம்பு வலி (POST HERPETIC NEURALGIA) !
வயதானவர்களுக்கும், சர்க்கரை நோயுள்ளவர்களுக்கும், அக்கி மறைந்த பிறகும் கூட – சில சமயங்களில் ஒரு வருடம் வரையில் – நரம்பு ‘வலி’ இருந்து கொண்டே இருக்கும். வைரஸினால் நரம்புகள் பாதிக்கப் படுவதால், தோலில் கொப்புளங்கள் மறைந்தாலும், வலி மட்டும் தொடரும். அக்கி வந்த இடங்கள் சிலருக்குக் கூசும் – சிலருக்கு, மஸ்லின் போன்ற மெல்லிய துணிகள் பட்டால் கூட எரிச்சலோ, கூச்சமோ ஏற்படும். மிகவும் தாங்கமுடியாத நரம்பு வலி சிலரை மிகவும் பாதிக்கும். அதற்கான பிரத்தியேக மருந்துகளும் எடுத்துக்கொள்வது அவசியம். குடைமிளகாயில் செய்யப்படும் கிரீம்கள் இங்கு உதவியாக இருக்கும் (CAPSAISIN). (பாட்டி வைத்தியமாக பச்சைக் குடைமிளகாயை அரைத்துப் போடுவதைத் தவிர்க்கவும் – விளைவுகள் விபரீதமாக இருக்கும்!).
அக்கி பிறருக்குத் தொற்றும் வாய்ப்புகள் உள்ளதால், குழந்தைகள், மற்றும் வயதானவர்கள் சிறிது விலகி இருப்பது நலம்.
தோலில் கொப்புளங்கள் இல்லாமல் வலி மட்டும் முதலில் வருவதால் டயக்னோசிஸ் குழப்பங்கள் (முதல் கேஸ்) - அக்கியின் பின் விளைவாக வரும் நரம்பு வலி (இரண்டாவது கேஸ்) - இவற்றால் அக்கி முக்கியத்துவம் பெறுகிறது.
============================================================================================




ரங்கநாதன் தெருவில், செல்வரத்தினம் மளிகைக் கடை வைத்தாரா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்பு, அதற்கு முந்தைய ஒரு வரலாற்றைப் பார்க்கலாம். சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் 1948-ல் தி.நகர் ரங்கநாதன் தெருவில் வசித்துவந்தார். தி.நகரில் தாம் வசித்த அனுபவம் குறித்து அவர் எழுதி இருக்கும் தகவல்களைப் பார்க்கலாம்.
"ரங்கநாதன் தெருவில் உள்ள ஒன்பதாம் நம்பர் வீட்டில் நானும், என் குடும்பத்தினரும் வசித்துவந்தோம். அப்போது குடிநீருக்குக் கடும் பஞ்சம் நிலவியது. குடிநீருக்காக அரை கி.மீ தள்ளி இருந்த தாமோதர ரெட்டி தெருவில் இருக்கும் எங்களது உறவினரின் வீட்டுக்குச் சென்று குடிநீர் பிடித்துவருவோம். தாமோதர ரெட்டி தெருவில் இருந்து பார்த்தால், கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில், பிணங்கள் எரியும் புகையைப் பார்க்கலாம். சிலநேரம் பிண வாடையையும் உணரமுடியும். தாமோதர ரெட்டி தெருவிலும் எங்கள் குடும்பம் 5 ஆண்டுக்காலம் வசித்துவந்தது. தி.நகரில் இப்போது இருக்கும் சிவா விஷ்ணு கோயில் அப்போது ஒரு கிராமத்துக் கோயில்போல இருந்தது. இந்தக் கோயில் முன்புதான் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கும். அப்போது 9, 10, 11ஏ, 12 மற்றும் 13 எண்கள் கொண்ட பேருந்துகள் தி.நகரிலிருந்து கிளம்பும். ரயில் செல்லாத பகுதிகளுக்கு மட்டுமே பேருந்துகளில் மக்கள் பயணித்தனர்.
ரங்கநாதன் தெருவில் வசித்தபோது, வீட்டில் இருந்து ரயில் போகும், வரும் சத்தங்கள் கேட்கும். இப்போது பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் ஒரு சிறிய குட்டை இருந்தது. அந்தக் குட்டையில் இருந்த தண்ணீரில் நிறைய எருமை மாடுகள் ஊறிக்கொண்டிருக்கும். பிறகு அந்தக் குட்டை தூர்க்கப்பட்டுப் பொதுக்கூட்ட மைதானமாக உபயோகிக்கப்பட்டது. அங்கு ராஜாஜி, அண்ணா, செங்கல்வராயன், மா.பொ.சி., முத்துராமலிங்கனார், சின்ன அண்ணாமலை ஆகியோர் எல்லாம் பேசி இருக்கிறார்கள். அவர்களது உரைகளை நான் கேட்டிருக்கிறேன். இப்போது மேட்லி, துரைசாமி சுரங்கப்பாதைகள் இருக்கும் இடங்களில் இரண்டு ரயில்வே கேட்கள் இருந்தன. ரயில்வே கேட்டைக் கடக்க முயன்று மாதத்துக்கு இரண்டு பேராவது உயிரிழப்பார்கள். அந்தக் காலத்தில் தி.நகர் அமைதியாக இருக்கும்
அமைதியாக இருந்த தி.நகரும், ரங்கநாதன் தெருவும்தான் இப்போது ஆசியாவின் முக்கிய வணிக மையங்களாகத் திகழ்கின்றன. தென் மாவட்டங்களில் இருக்கும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவரகள், அந்தக் காலத்தில் ஏதாவது ஓர் ஊருக்குப் போய் மளிகைக் கடை வைத்துக்கூடப் பிழைப்பை ஓட்டுவார்கள். தெரியாத ஊரில்கூடத் தொழில் செய்து வாழ்க்கையை நடத்துவார்கள். அப்படி ஒரு நம்பிக்கையில்தான் செல்வரத்தினம் தமது கிராமத்திலிருந்து சென்னைக்குக் கிளம்பிவந்தார்.
ரங்கநாதன் தெரு மாம்பலம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய செல்வரத்தினம், சுந்தரம் காபி உரிமையாளர் சோமசுந்தரத்தைச் சந்தித்தார். "மளிகைக் கடை வைக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்" என்று கேட்டார். அதற்கு சோமசுந்தரம், "மளிகைக் கடை வைத்தால் அது இந்தப் பகுதியில் இப்போதைக்கு எடுபடாது. எல்லோரும் கொத்தவால் சாவடி போய் அங்குதான் மளிகைப் பொருள்கள் வாங்குகிறார்கள். ரங்கநாதன் தெருவில் கும்பகோணம் பாத்திரக்கடை இருக்கிறது. அதை நடத்துகிறவர், கடை மற்றும் கட்டடத்தை அப்படியே விலைக்குக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறார். நீங்கள் வேண்டுமானால், அதை வாங்கிப் பாத்திர வியாபாரம் செய்யுங்கள். நன்றாகப் போகும்" என்று அறிவுறுத்தினார்.
சோமசுந்தரத்தின் யோசனைப்படி கும்பகோணம் பாத்திரக் கடையைக் கட்டடத்தோடு சேர்த்து தனபாலிடமிருந்து செல்வரத்தினம் விலைக்கு வாங்கினார். இந்தப் பாத்திரக் கடைதான் இன்றைக்கு சரவணா ஸ்டோர்ஸ் ஆக உருவாகி இருக்கிறது.
ரங்கநாதன் தெரு 1970-க்குப் பிறகுதான் கொஞ்சம்கொஞ்சமாக முகம் மாறத் தொடங்கியது. அதுவரை ஓட்டுவீடுகளுமாய், கொல்லைப்புறத்தில் தென்னை மரங்களுமாய், மாட்டுத் தொழுவங்களுமாய் இருந்த வீடுகளின் பகுதிகள் எல்லாம் கடைகளுக்காக வாடகைக்கு விடப்பட்டன. வீடுகளின் முதல் மாடியில் வீட்டு உரிமையாளர்கள் வசிக்கத் தொடங்கினர். மாம்பலம் ரயில் நிலையத்துக்கு அருகே ஹோட்டல், மளிகைக் கடை, பாத்திரக் கடை என்று ஒரு கதம்பக் கடைத்தெரு உருமாறத் தொடங்கியது.
இதுதவிர, தெரு முழுவதும் பிளாட்ஃபாரத்தில் காய்கறிக் கடைகள், பழக்கடைகள் இருந்தன. வெளியூர்களில் இருந்து ரயிலில் காலையில் கொண்டுவரப்படும் காய்கறிகள்... விலை மலிவாக ரங்கநாதன் தெருவில் விற்கப்பட்டன. ரயில் நிலையத்தில் இருந்து இறங்கிச் செல்வோர், வேலை முடிந்து ரயில் நிலையத்துக்கு வருவோர்களைக் குறிவைத்துத்தான் ரங்கநாதன் தெருவில் காய்கறிக் கடைகள் முளைத்தன. ரங்கநாதன் தெரு மொத்தமும் கடைகளாக மாறிவிட்ட நிலையில், இன்றைக்கும் அந்தத் தெருவில் ஒரே ஒரு வீடு மட்டும் இருக்கிறது.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், பலர் நடக்கின்றனர் மற்றும் வெளிப்புறம் ,
- Vikatan EMagazine

 FaceBook 
======================================================================

2014 ல் நுங்கம்பாக்கத்தில் ஒரு பெரிய ஹோட்டலில் சாப்பிட்டதன் பில் கிடைத்தது.  பதினோரு வருடங்கள்.  விலைகளில் என்ன மாற்றம்?

================================================================================


================================================================================

பதிமூன்று வருடங்களுக்கு முன் எழுதியது...


சுஜாதா புத்தகம் ஒன்றைப் படித்துவிட்டு எழுதிய இரண்டு லிமெரிக்குகள்!



=================================================================================

பொக்கிஷம் 

டெல்லியில் இருக்கும் அல்லது இருந்த ஒரு விநாயகர் கோவில் பற்றி..   இப்போதும் இது டெல்லியில் இருக்கிறதா, தெரியவில்லை!


எல்லோரா சென்று வந்து சாவி விகடன் ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினார்.  அதன் படம் இது.  அதற்கு அடுத்த வாரம் அந்த பயணக்கட்டுரை வெளிவந்தது.  அதற்கு அப்புறம் சாவி விகடனில், புத்தகத்தின் இரண்டு பக்கங்களும் கோபுலு ஓவியங்களுடன் 'இங்கு சென்றிருக்கிறீர்களா' என்று எழுதினர்.

வாயில் சிகரெட் இருந்தால் இயக்குனர் என்று அறிக...   60 களில் எந்த இயக்குனர் அப்படி இருந்தாரோ....

படத்தில் இருப்பது பஸ் மாதிரி இல்லாமல் மெட்ரோ ரயில் மாதிரி தெரிவது எனக்கு மட்டும்தானா?!!


நிச்சயம் இதில் ஏதோ ஜோக் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்!

30 கருத்துகள்:

  1. ​இங்கு கேரளத்தில் கல்யாணங்களில் ரிசெப்சன் என்று தனியே முதல் நாள் வைப்பது அரிது. சாதாரணமாக பெண் வீட்டில் சிறிய அளவில் இரண்டு அல்லது மூன்று ஐட்டம் களுடன் (அப்பம், பிரெயிட் ரைஸ், சிக்கன், ஐஸ் கிரீம் என்று இருக்கும்). மாப்பிள்ளை அங்கு இருக்க மாட்டார். பெண்ணைப் பார்த்து கையில் மொய் கவர் கொடுத்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு செல்வார்கள்.

    கவிதைகளா? கானாப் பாடல்களா? ஏதோ ஒன்னு , ரசிக்கத்தக்கவை. ஆனால் இலக்கியத்தரம் கொடுக்க முடியாதவை.

    //வாயில் சிகரெட் இருந்தால் இயக்குனர் என்று அறிக... 60 களில் எந்த இயக்குனர் அப்படி இருந்தாரோ....
    //
    ஸ்ரீதரைத் தெரியாதா? டங்கன், பாலசந்தர்

    கடைசி பொக்கிஷ ஜோக்கு "செக்" என்பதை "செக்கு" க்கு உபமேயமாக்குகிறார். புரிந்தால் சரி.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இரண்டு கேரளத் திருமணங்கள் பார்த்திருக்கிறேன்.  ஒன்று கிறித்துவ திருமணம்.  இன்னொன்று இந்துத் திருமணம்.   இரண்டாவதில் நீங்கள் சொன்னபடி இருந்தது.  ஆனால் பெரிய விழாக்கோலம் போல எதுவும் கேரளத் திருமணங்களில் இல்லையோ என்று எண்ண வைத்தது.  தமிழகத்து திருமணங்களில் இருக்கும் உற்சாகம், கிண்டல், கேலி, மகிழ்ச்சி அங்கில்லை என்பது என் எண்ணம்!

      கானாப்பாடல்களா?  இல்லையே..  அதன் இலக்கணங்கள் வேறாச்சே...  எனினும் ரசித்ததற்கு நன்றி!

      ஸ்ரீதரோ, கேபியோ எந்நேரமும் வாயில் சிகரெட்டுடன் இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்!

      //"செக்" என்பதை "செக்கு" க்கு உபமேயமாக்குகிறார். புரிந்தால் சரி.//

      :))

      நன்றி JKC ஸார்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதியான ரிஸப்ஷன் சங்கடங்களை படித்து ரசித்தேன். எனக்குப் படிக்கும் போது, திருப்பதி கோவிலில், இறைவனை தரிசிக்க நின்றும், ஓடியும் சென்றது நினைவுக்கு வந்தது. (ஒரே ஒரு வித்தியாசம். இதில் நாம் நம்முடைய புகைப்படத்தை திருமண ஜோடிகளோடு சேர்த்து எடுப்பார்கள். நாம் வந்தற்கு/ நம் வரவிற்கு அது அத்தாட்சியாக இருக்கட்டுமென நினைத்துக் கொண்டு நகர்கிறோம். கோவிலில், இறைவனை நம் மனதில் புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டு, மனதிற்கு ஆறுதலை பெறுவோம் என்ற நம்பிக்கையோடு நகர்வோம். "அவனும்" அதை ஏதோ கணக்கில் வைத்துக் கொள்ள மாட்டானா என்ற (அவ) நம்பிக்கை வேறு சென்று வந்த பின் அடிக்கடி வந்து போகும். அது வேறு விஷயம். :))) )

    /மொய் கொடுத்து போட்டோவிலும் விழுந்து நாம் வந்தது ரெஜிஸ்டர் ஆயாச்சுன்னா, விடு ஜூட்.. நேரா டைனிங் ஹால். சாப்பாடு, பீடா... தாம்பூலம், அப்புறம் போடா என்று வெளியே வந்து விழுந்து விடலாம். /

    ஹா ஹா ஹா. சிரித்து விட்டேன். திருமணங்களின் யாதார்த்தங்களை அழகாக எழுதியிருக்கிறீர்கள். அருமை. உங்கள் எழுத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஸப்ஷன் வைபவங்களை படித்ததும் உங்களுக்கு திருப்பதி நினைவுக்கு வந்தது வித்தியாசமான எண்ண ஓட்டம்!  

      ஆமாம்,... , நாம் போன இத்தனை திருமணங்களில் நின்ற நமது எத்தனை புகைப்படங்களை நாம் அப்புறம் பார்த்திருக்கிறோம்?!!

      படித்து ரசித்ததற்கும், பாராட்டுக்கும் நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. /ஆமாம்,... , நாம் போன இத்தனை திருமணங்களில் நின்ற நமது எத்தனை புகைப்படங்களை நாம் அப்புறம் பார்த்திருக்கிறோம்?!!/

      நல்ல கேள்வி...! கொஞ்சம் நெருங்கிய உறவாக இருந்தால், அவர்கள் வீட்டிற்கு நாம் என்றாவது போகும் போது, நம் பொழுதை கழிப்பதற்காக அவர்கள் வீட்டு அந்த திருமண ஆல்பங்களை நம் கைகளில் தருவார்கள். அதில் நம் போட்டோக்களைப் பார்த்து (அடிக்கடி அதை மட்டும் திரும்ப பார்த்து.) சந்தோஷமடையலாம்.

      அப்போது நண்பர்கள், மற்றும் தூரத்து உறவு திருமணங்களில் அது சாத்தியமில்லை. ஆனாலும், இப்போதுதான் வாட்சப் மூலமாக போட்டோக்கள் ஆங்காங்கே சம்மந்தபட்டவர்களுக்கு பறக்கிறதே..! விஞ்ஞான வளர்ச்சியில் இப்போது அந்த கவலையும் படவேண்டாம்.

      நீக்கு
    3. அப்படி வாட்ஸாப்பில் அனுப்பப்படாத படங்கள் நிறைய உண்டு.  எப்போதாவது சில படங்களை அப்படிப் பார்க்க நேரும்போது நமக்கே ஆச்சர்யமாக இருக்கும்.  இது எப்போது எடுக்கப்பட்டது என்கிற ஆச்சர்யம் வரும்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    அடக்கிப் பற்றிய செய்திகளை அறிந்து கொண்டேன். நீங்கள் தந்த சுட்டிக்கும் சென்று படிக்க வேண்டும். அந்த காலத்தில் எந்த அம்மை போட்டாலும், இறைவன் காப்பாத்துவார் என்றுதான் நம்பிக்கையோடு, வலிகளை தாங்கியபடி, நோயாளிகள் வலிகளை தங்குவதை மனககஸ்டங்களோடு வீட்டில் உள்ள மற்ற உறவுகள் பார்த்தபடி இருப்பார்கள். இப்போது அனைத்திற்கும் மருத்துவங்கள் வந்து விட்டது. மருத்துவ ரீதியோடு இவற்றிற்கான பலன்களை பெறத்தான் அனைவரும் விரும்புகிறார்கள்.

    எழுத்தாளர் திரு. அசோகமித்திரன் அவர்களின் தி. நகர் பற்றிய கட்டுரை நன்றாக உள்ளது. அதிர்ஷ்டம் என்பது அனைவருக்குமே எளிதில் கிட்டி விடாது. அது யாரை அடைய விரும்புகிறதோ அவர்களை மட்டுந்தான் குறி வைத்து செல்லும் இல்லையா? பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கு குடும்பத்தோடு 2000 ம் வருடத்தில் அம்மை போட்டது.  அப்போது நான் அரிப்பு மாத்திரை மற்றும் ஜூரா மாத்திரை சாப்பிட்டது சிலருக்கு வருத்தம.  அதெப்படி நீ இதற்கு மாத்திரை சாப்பிடலாம் என்று!

      அதிருஷ்டத்துக்கு உழைப்பும் வேண்டும்.  அந்தக் கட்டுரையில் சுந்தரம் காஃபி பற்றியும் சொல்லி இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.  நான் பல வருடங்களாக சுந்தரம் காஃபிதான் உபயோகித்து வருகிறேன்.

      நீக்கு
  5. ரிசப்ஷன் சங்கடங்கள்...என்ன சொல்ல ஸ்ரீராம், நீங்க சொல்லியிருப்பதை அட்சரம் பிசகாமல் டிட்டோ!

    அதனாலேயே பெரும்பாலும் நான் முகூர்த்தம் நாளன்றுதான் செல்வது வழக்கம். காரணங்கள், ரிசப்ஷன் சாப்பாடு பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை, நம்ம உடல் ஆரோக்கியத்திற்கு. ரிசப்ஷன் செல்ல வேண்டியதானால், மேடை ஏறி அன்பளிப்பு கொடுக்கும் பழக்கமும் இல்லை. தனியாக அவர்களைப் பார்த்தோ இல்லை அவர்களில் யார் நமக்கு உறவோ ஃப்ரென்டோ அந்தப் பெற்றோரைப் பார்த்துக் கொடுத்துவிடுவேன். சாப்பாடும் 7....7.15 க்குள் கிடைத்தால் காய்கள் மட்டும் சாப்பிட்டு தயிர்சாதம் அவ்வளவே. அந்த நேரத்திற்குள் இல்லை என்றால் சாப்பிடுவதில்லை.

    எனவே பெரும்பாலும் முகூர்த்தம் நாள் தான் என் சாய்ஸ்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... உங்கள் உணவுக்கட்டுப்பாடு என்னை வியக்க வைக்கிறது. என்னால் முடியாதது அது. நேற்று மருத்துவரிடமும் அதையே சொன்னபோது அவர் பார்த்த பார்வையில் இருந்த பொருள் என்ன என்று புரியவில்லை!!!

      நீக்கு
    2. நம்ம ராகுல் ரிசப்ஷனுக்கு வந்த போதும் இதேதான். நான் பானுக்கா, உமா, மூவரும் சாப்பாட்டு அறையில் இலை விரிக்கும் முன்னரே போய்க் கேட்டு, அவங்க போட்டதும் நாங்க மூணுபேர் மட்டும்...அப்பவும் நான் இதே மெனுதான்....உமா, என்ன நீங்க இப்படின்னு கேட்டாங்க...இப்படி இருந்தாதான் என் சர்க்கரை சரியா இருக்கு எல்லாமும்...டாக்டர்னாலே அலர்ஜிங்க என்றேன்....வழக்கமாகவே அப்படித்தான் அன்று வேறு ஜுரம்....நீங்க கொடுத்த மருந்துதான் கை கொடுத்துக் காப்பாற்றி பஸ் ஏறியதும் தூங்கியதுதான் தெரியும். நல்லகாலம், நான் இறங்க வேண்டிய இடம் வரும் முன்னே முழிப்பு கொடுத்து சரியா இறங்கிட்டேன்!!! காலை 4.30 மணிக்கு...மடிவாலா!!

      கீதா

      நீக்கு
    3. உண்மையிலேயே நானும் இதைப்பற்றி நினைத்தபடிதான் பதில் எழுதினேன்.  அப்போதே சொன்னீர்கள் இதைப்பற்றி.  ஆனாலும் ரொம்ப மிஸ் செய்தீர்கள் என்றே சொல்வேன்.  எல்லோருமே எல்லா உணவையும் குறிப்பிட்டு பாராட்டினார்கள்.  நல்ல கேட்டரர் அவர்.

      நீக்கு
  6. ஸ்ரீராம், ரிசப்ஷன் கலாட்டாக்கள் குறிப்பாக அன்பளிப்பு கொடுத்து ஃபோடோ செஷன், ஜருகண்டி ஸ்டைல். ஏன்னா ஃபோட்டோகிராஃபரே அல்ரெடி எடுத்தவங்களை ஒதுங்கச் சொல்வார். பார்த்திருப்பீங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆல்ரெடி எடுத்தவங்களை மட்டுமில்லை,  அந்தக் குழு தவிர மீதமிருக்கும் மற்றவர்களையும் இடது புறங்கையால் ஒதுங்கச் சொல்வார்!

      நீக்கு
  7. இடப்புறம் ஏறி வலப்புறம் இறங்குவது.....ஆமாம் இடையில் நுழைபவர்கள் விஐபிஸ்.....படா படா இடங்கள் போல....விஐபிஸ் வந்துட்டா நம்மை ஒதுங்கச் சொல்வாங்க பாருங்க....இதெல்லாம் கடுப்பாக்கியதால்தான் நான் முகூர்த்தம் மட்டும் போவதென்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகூர்த்தத்தில் மட்டும் என்ன, அங்கும் அப்போதும் இதே கதைதான்.  சாஸ்திரிகளும் சேர்த்து நம்மை துரத்துவார்.

      நீக்கு
    2. ஹாஹாஹா ஆமாம்....நான் மிக மிக நெருங்கிய உறவு இல்லைனா மேடை ஏறவே மாட்டேனே!!!! சாஸ்திரிகள் துரத்துவார் பின்ன சில சாஸ்திரிகளுக்கு அடுத்ததுக்குப் பறக்கணுமே!!!!

      கீதா

      நீக்கு
    3. பாஸ் மேடை ஏறி பரிசளிப்பதுதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் கெளரவம் என்று எண்ணுபவர்.  அதனாலேயே என்னையும் படுத்துவார்.  மேடையில் நின்று கூட என்னை அழைப்பார்.

      இந்தக் குறிப்பிட்ட திருமணத்திற்கு குறுக்கே குறுக்கே இரண்டு குடும்பங்கள் வந்தததும் பெண்ணுக்கு கைகொடுத்து விட்ட என்னை ஒதுங்கச் சொன்னதும் நான் கீழே இறங்கி விட்டேன்.  பாஸ் என்னைக் கூப்பிட்டு கூப்பிட்டுப் பார்த்து அவரும் இறங்கி வந்து விட்டார்.

      நீக்கு
  8. கண்டிப்பாக உங்க வார்த்தைகளை ஆமோதிப்பேன் வலுவாக!!!!! சபை நாகரீகம் இல்லாத ethics இல்லாத .......உங்க வார்த்தையை போட்டு ஃபில் பண்ணிக்கோங்க...ங்கள்.....இன்னொரு ' ங்கள் ' வார்த்தை

    கீதா

    பதிலளிநீக்கு
  9. மொய் க்லெக்டரிடம் //

    ஹாஹாஹாஹா நானும் என்னை அப்படிச் சொல்லிக் கொள்வதுண்டு மொய் என்பது இல்லாம....இன்னிக்கு என்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னிக்கு எனக்குக் கலெக்டர் வேலை......என் தங்கை பெண்கள் உறவுகளின் கல்யாணத்தில் என்னை அமர்த்தினால்....புரியாது சிலருக்கு கலெக்டரா? ஆமாங்க மொய் கலெக்டர்!!!!

      கீதா

      நீக்கு
    2. இன்றா?  திருமண விழாவிலா இருக்கிறீர்கள்?

      நீக்கு
  10. ரிசப்ஷன் - வேதனையான விஷயம் தான். பெரும்பாலும் தவிர்த்து விடவே முயற்சி செய்வேன். ஆனாலும் சில தவிர்க்க முடியா சமயங்களில் இப்படி மாட்டிக்கொண்டு முழிப்பதும் நடக்கிறது.

    மற்ற விஷயங்களும் நன்று. வினய் நகர் தற்போது சரோஜினி நகர். வினாயகர் ஆலயம் இன்றைக்கும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்...     தவிர்க்க முடிவதில்லையே...  நட்புறவுகள் அப்புறம் வருத்தப்படுகின்றனரே...  இதில் இன்னொன்று..  அந்தத் திருமணத்தில் நமக்கு தெரிந்தவர் அவர் மட்டுமாகத்தான் இருப்பார்.  இது மாதிரி சயங்களில் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது அவர் மேடையில் இருந்து நம்மையும் மணமக்களுக்கு அறிமுகப்படுத்தி கூட நின்றால் நன்றாயிருக்கும்.  பெரும்பாலும் இது நடப்பதில்லை!

      //வினய் நகர் தற்போது சரோஜினி நகர். வினாயகர் ஆலயம் இன்றைக்கும் இருக்கிறது. //

      ஆம்.  பேஸ்புக்கில் பேசினோமே..
       

      நீக்கு
  11. குவிகம் மின்னிதழ் அவ்வப்போது பார்ப்பதுண்டு. நல்ல தகவல்கள். அக்கி என்றதுமே கீதாக்கா நினைவுக்கு வந்தார். அவர் பதிவு போட்டிருந்ததும் நினைவுக்கு வந்தது.

    என் அம்மாவுக்கும் அக்கி வந்து தொல்லைப்படுத்தியது. மருத்துவர் சொன்னது போல காலமின் தான் போட்டுக் கொண்டார்.

    மருத்துவர் பாஸ்கரன் அவர்களின் கதை செல்லப்பா சார் நடத்திய போட்டியில் முதல்பரிசு பெற்ற கதைகள் லிஸ்டில் இடம் பிடித்திருந்தது.

    குவிகம் மின்னிதழில் மே மாதத்துக் கதைத் தேர்வாக சிவசங்கரி அவங்க தேர்ந்தெடுத்திருக்கும் கதை முத்துக்குமரனின் கதை.

    முத்துக்குமர்ன் நினைவிருக்கா, ஸ்ரீராம்? செல்லப்பா சார் நடத்திய போட்டியில் பங்கெடுத்துப் பரிசு பெற்றவர்.

    கலைமகளில் வெளியான கதைகளில் ஒன்றையும் சிவசங்கரி தேர்ந்தெடுத்துள்ளார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக நினைவில்லை கீதா.. சமயங்களில் கலைமகள் மாதிரி பத்திரிகைகள் இன்னும் வெளிவருகின்றன என்பது இந்த மாதிரி செய்திகள் மூலம் தெரிய வருகிறது!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!