5.9.26

வாரம் ஒரு பாசுரம் தொடர் பகுதி 36 - நான் படிச்ச கதை


நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர் 

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 36 

சென்ற வாரத்தில் ஆறாவது பிரகாரமான உத்தரவீதி பற்றிப் பார்த்தோம். திருவரங்கத்தில் குடியிருப்புப் பகுதிகள் ஆறாவது பிரகாரத்துடன் நிறைவு பெறுகிறது. அதற்கு உட்பிரகாரமான ஐந்தாம் பிரகாரத்திலிருந்து திருக்கோயிலின் முதன்மைப் பகுதிகள் தொடர்கின்றன. 

ஐந்தாம் பிரகாரத்தில் முக்கியமான கோயில்கள் மூன்று. ஒன்று தென்கிழக்கில் இருக்கும் இராமானுஜர் சன்னிதி, தென்மேற்கில் இருக்கும் சக்கராத்தாழ்வார் சன்னிதி, வடமேற்கில் இருக்கும் திருவரங்க நாச்சியார் (தாயார்) சன்னிதி. இது தவிர பல்வேறு கோயில்கள், மண்டபங்கள் இந்தப் பிரகாரத்தில் இருக்கின்றன. (நான் சிறுவயதில் இந்தப் பிரகாரத்தில் மேற்குப் பகுதியில் இடுப்பளவு வளர்ந்துள்ள புற்கள் நிறைந்த பகுதியாக இருந்ததைக் கண்டிருக்கிறேன்).

ஐந்தாம் பிரகார வாயில், உள்ளிருந்து எடுத்த படம். அதற்கு வெளியே தூரத்தில் தெற்கு கோபுரம் தெரிகிறதா?

இந்தப் பிரகாரத்துக்குள் நுழையும்போது, கூரத்தாழ்வார் சன்னிதியும் (மூலவர் அபயஹஸ்தம், உற்சவர் கைகூப்பியவாறு)  அதையொட்டி லக்ஷ்மி நரசிம்மர் சன்னிதியும் (அந்தக் கோயிலுள்ளே) இருக்கின்றன. கூரத்தாழ்வார் காலத்திற்குப் பிறகு அவர் புதல்வர் பட்டர், இந்தக் கோயில் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டாராம். அதன் பிறகு நஞ்சீயர். அதனால் கூரத்தாழ்வார் சன்னிதியில் பட்டர் , நஞ்சீயர்  திருவுருவங்கள் உள்ளன. 

கூரத்தாழ்வார் சன்னிதிக்கு (கோயிலுக்கு) அடுத்தது தொண்டரடிப்பொடி ஆழ்வார் சன்னிதி உள்ளது. இங்கு தொண்டரடிப்பொடி ஆழ்வார் உற்சவரும், ருக்மணி சத்யபாமாவுடன் அஷ்டபுஜக் கிருஷ்ணர் திருவுருவங்களும் உள்ளன. 

தொண்டரடிப்பொடி ஆழ்வார் சன்னிதிக்கு அடுத்து விட்டல கிருஷ்ணர் சன்னிதியும் அங்கு கருவறையில், விட்டல கிருஷ்ணருக்கு வலது புறம் மதுரகவி ஆழ்வாரின் திருவுருவமும், இடது புறம் நம்மாழ்வாரின் திருவுருவமும் அமைந்துள்ளன. 

விட்டல கிருஷ்ணர் சன்னிதிக்கு அடுத்து, திருப்பாணாழ்வார் சன்னிதியும் அங்கேயே இலட்சுமிநாராயணர் சன்னிதியும் உள்ளன. இலட்சுமிநாராயணர் மற்றும் கருடர் சிலைகளும், திருப்பாணாழ்வாரின் உற்சவத் திருவுருவமும் இருக்கிறது. திருப்பாணாழ்வாருக்குப் பின்புறம் வீர ஆஞ்சநேயர் திருவுருவம் ஓங்கி பெரிதாக அமைந்துள்ளது. இத் திருவுருவத்தில் அனுமனின் தலையும் பீமனின் உடலுமாக அமைந்திருக்கிறது. 

மேற் சொன்ன கோயில்கள் எல்லாம் நாம் பிரகாரத்தைக் கடக்கும்போது நம் வலது புறம் அமைந்துள்ளன. இனி இடது புறம் உள்ள சன்னிதிகள். 

இடது புறம் வீரநாராயணப் பெருமாள் சன்னிதியும், நாதமுனிகள் சன்னிதியும் அமைந்துள்ளன. நாதமுனிகள் அவதரித்த காட்டுமன்னார் கோயிலின் மூலவர் வீரநாராயணப் பெருமாள் என்பதால் பொருத்தமாக அமைத்துள்ளனர். நாதமுனிகள், நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைத் தொகுத்து பண் கூட்டிய பிறகு, பிரபந்தங்களை காட்டுமன்னார் கோயிலில் சேவிக்கும் முறையை நடைமுறைப்படுத்தினார். பிறகு திருவரங்கம் வந்து கோயில் அலுவலர்களுடன் கலந்தாலோசித்து, இங்கும் திவ்யப் பிரபந்தங்களைச் சேவிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார். 

நாதமுனிகள் சன்னிதியை அடுத்து வடமேற்கில் நம் இடது புறத்தில் ஆண்டாள் சன்னிதி அமைந்துள்ளது. இதனை உள் ஆண்டாள் சன்னிதி என்று அழைக்கின்றனர். இதில், இராமர், இலட்சுமணர், சீதை, அனுமன் ஆகியோரது திருவுருவங்களும் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. இங்கு இராமானுஜர் திருவுருவமும் பெரியாழ்வார் உற்சவத் திருமேனியும் உள்ளன.

உள் ஆண்டாள் சன்னிதிக்கு வடக்குப் பகுதியில் (தற்போது கோயில் மேல் தளத்திற்குச் செல்வதற்கான பாதை, மற்றும் டிக்கெட் கொடுக்கும் இடம்) வேணுகோபாலருக்கு கோயில் ஒன்று அமைந்துள்ளது. இது அளவில் பெரிய கோயில். சிற்பங்களும் கோயில் அமைப்பும் அழகுற அமைந்துள்ளன. இங்கு கருவறையில் வேணுகோபாலர் காளிங்கனின் மீது நர்தனமாடும் நிலைமையிலும், ருக்மணி சத்யபாமா, ஆஞ்சநேயர் திருவுருவங்களுடனும் உள்ளார். ஹொய்சாள மன்னர் இரண்டாம் நரசிம்மர் திருவரங்கம் வந்தபோது (1617) அவருடன் வந்திருந்த சீராமபட்டர் என்பவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. மூலவரான வேணுகோபாலர் குழலூதிய பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.

வேணுகோபாலர் கோயில், ஐந்தாம் பிரகாரம்

இந்தக் கோயிலை அடுத்து, அமிர்தகலச கருடன் சன்னிதி (கோயில்) அமைந்துள்ளது. இங்குள்ள உற்சவருக்கு நான்கு கைகள் உள்ளன. வலது கையில் அமுத கலசமும் இடது கையில் எட்டு நாகங்களும் உள்ளன. 

அமுத கலச கருடன் சன்னிதிக்கு அருகில் அனுமன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அனுமனின் அழகிய திருவுருவமும் உற்சவர் விக்கிரஹமும் உள்ளன. 

அமுத கலச கருடன் கோயிலைத் தாண்டிச் சென்றால் கடைசியில் சக்கரத்தாழ்வார் கோயில் வரும். அளவில் பெரிய சன்னிதி/கோயில் இது. சக்கரத்தாழ்வார் பதினாறு கைகளுடன் மூலவர் அமைந்துள்ளார். அதில் 108 அட்சரங்கள் மூலவரைச் சுற்றிப் பொறிக்கப்பட்டுள்ளன.  சக்கரத்தாழ்வாருக்குப் பின்புறம் நான்கு கைகளுடன் யோக நரசிம்மர் உருவம் உள்ளது. (இவரை சன்னிதியை வலம் வரும்போது பின்புறம் கண்ணாடி வழியாக தரிசிக்கலாம்). சக்கரத்தாழ்வாரின் உற்சவர் எட்டுக் கைகளுடன் இருக்கிறார்.  வலம் வரும்போது தென்மேற்கு மூலையில் திருவரங்கத்தமுதனாருக்கு சிறிய சன்னிதி உள்ளது. 

சக்கரத்தாழ்வார் சன்னிதி தென்கிழக்கில் என்றால், அதற்கு வடக்குப் பகுதியில் கடைசியில் திருவரங்க நாச்சியார்/தாயார் சன்னிதி அமைந்திருக்கிறது. திருவரங்கன் கோயில் என்பதால், மற்றவைகள் கோயில் போல விமானத்துடன் அமைக்கப்பட்டிருந்தாலும் சன்னிதி என்றே அழைக்கப்படுகின்றன. அதனால்தான் தாயார் சன்னிதி, சக்கரத்தாழ்வார் சன்னிதி, இராமானுஜர் சன்னிதி என்று குறிக்கப்படுகின்றன. 

தாயார் சன்னிதி மிகப் பெரிய அளவில் அமைந்துள்ளது. முன் மண்டபமும், இரண்டு பிராகாரங்களும், நாற்புறமும் மண்டபமும் இருக்கின்றன. தென்புறத்தில் இருப்பது பங்குனி உத்தர கல்யாண மண்டபம், மேற்குப் பகுதியில் அகழியுடன் கூடிய வசந்த மண்டபம் மற்றும் வடக்குப் பகுதியில் ஊஞ்சல் மண்டபமும் உள்ளன. ஊஞ்சல் மண்டபத்தின் முன்புறம் தாயார் சன்னிதிக்காக வில்வ மரமும், மேடையில் துளசி மாடமும் உள்ளன. 

தாயார் சன்னிதி கருவறையில் இரண்டு நாச்சியார்கள் மூலவர்களாக இருப்பதைக் காணலாம். முகமதியர் படையெடுப்பின்போது, அச்சம் காரணமாக நாச்சியார் உற்சவர் வில்வ மரத்தின் கீழ் புதைத்து மறைத்து வைக்கப்பட்டது. மூலஸ்தானமே மூடப்பட்டிருந்தது. ஸ்பெஷல் டிக்கெட் வரிசையில் செல்லும்போது நமக்கு இடதுபுறம் பார்த்தால் ‘கலாபக் கால நாச்சியார்’ என்று மாடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதனையே தாயார் சன்னிதிபோலத் தோற்றம் வரச் செய்திருந்தார்கள்.

படையெடுப்பு முடிந்து பிறகு கோயில் வழிபாடுகள் ஆரம்பித்த பிறகு, தாயார் சன்னிதியில் புதிதாக மூலவரைச் செய்து வைத்தார்கள். வில்வ மரத்தடியில் முன்பு புதைத்து வைக்கப்பட்டிருந்த உற்சவரை தாயார் சன்னிதிக்குக் கொண்டுவந்தார்கள். பிறகுதான் கருவறையில் மூலஸ்தானம் மூடப்பட்டிருந்த கல்திரையை நீக்கியபோது, முன்பிருந்த தாயார் மூலவர் இருப்பது தெரிந்தது. இதைத்தான் தற்போது அர்ச்சகர்கள் ஸ்ரீதேவி என்றும் (பழைய திருவுருவம்), பூதேவி என்றும் (புதிய திருவுருவம்) சொல்கிறார்கள். 

தாயாருக்கான உற்சவங்கள் எல்லாமே தாயார் சன்னிதியிலேயே நடைபெறுகின்றன. அதனால் இவரை ‘படி தாண்டாப் பத்தினி’ என்று குறிப்பிடுகிறார்கள். 

பங்குனி உத்தரத்தின்போது உத்தரமண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருள, தாயாருடன் சேவை சாதிப்பார். 

தாயார் கோயிலின் கிழக்குப் பகுதியில் (வெளியில்) வேதாந்த தேசிகர் கோயில் உள்ளது. வேதாந்த தேசிகர் ஹயக்ரீவரை வழிபட்டுதான் எல்லா Sidhசித்திகளைப் பெற்றார் என்பதால் இங்கு ஹயக்ரீவருக்கு சன்னிதி உள்ளது. வேதாந்த தேசிகர் மேற்கு திசை நோக்கி தரிசனம் தருகிறார். 

ஸ்வாமி வேதாந்த தேசிகர் பலகாலம் திருவரங்கத்தில் வாழ்ந்தார். கலாபக் காலத்தில் இவர் இராமானுஜர் இயற்றிய “ஸ்ரீபாஷ்ய விளக்கவுரையை”க் காத்தார். அந்தச் சமயத்தில் நம்பெருமாள் விக்ரஹத்துடனும் ஆபரணங்களுடனும் பிள்ளைலோகாச்சார்யார், மதுரை நோக்கிச் சென்றார். எல்லோருடைய வரலாறும் இந்தப் பகுதியில் வரும். 

தாயார் சன்னிதிக்கு வெளியே இன்னொரு புறத்தில் மேட்டில் ‘மேட்டு அழகியசிங்கர்’ சன்னிதி அமைந்துள்ளது. இந்தச் சன்னிதிக்குச் செல்ல 25 படிகள் ஏறவேண்டும். இங்கு அழகியசிங்கரின் உற்சவ விக்ரஹம் உள்ளது. அது தவிர ஓவியங்கள் உள்ளன. மூலவர் திருவுருவம் கிடையாது. 

தாயார் சன்னிதிக்கு நேரெதிரே நான்குகால் மண்டபம் ஒன்று உயரமாக உள்ளது. இதனை கம்பர் மண்டபம் என்று சொல்வர். இங்குதான் கம்பநாட்டாழ்வார், இராமகாதையை அரங்கேற்றம் செய்தார் என்றும் அதற்கு ஆளவந்தார் உதவினார் என்றும் சொல்வர். 

மேட்டு அழகிய சிங்கர் கோயிலை அடுத்து சிறிய அறையில் வாசுதேவர் சன்னிதியில் நின்ற கோலத்தில் வாசுதேவர் விக்ரஹம் வடக்கு நோக்கி உள்ளது. இந்தச் சன்னிதி அருகில்தான் ஐந்து குழி மூன்று வாசல் எனப்படும் கற்சதுரம் உள்ளது. 

மேட்டழகியசிங்கரின் கோயிலிலிருந்து ஆயிரங்கால் மண்டபத்திற்குச் செல்லும் வழியில் பெரியவாச்சான் பிள்ளைக்கு சன்னிதி உள்ளது. பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானச் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுகிறார். திவ்யப் பிரபந்தங்கள் அனைத்துக்கும் வியாக்கியானம் எழுதியிருக்கிறார். குருபரம்பரை வரலாற்றில் இவரும் வருவார். இவரது சன்னிதியில் கிருஷ்ணர் மூலவர் திருவுருவமும், பெரியவாச்சான் பிள்ளை வழிபட்டுவந்த திருவேங்கடமுடையான் திருவுருவமும் உள்ளது. பெரியவாச்சான் பிள்ளை உற்சவர் விக்ரஹமும் இங்கு உள்ளது. 

இனி இன்றைய நாளுக்கான பாசுரம். 

வேதாந்த தேசிகரின் பிரபந்தங்களில் இருந்து திருவரங்க கோயிலுக்கான பாசுரம். அவர் சமஸ்கிருத ஸ்லோகங்களும், தமிழில் பிரபந்தங்களும் நிறைய இயற்றியிருக்கிறார். அதில், அதிகார சங்கிரகம் என்ற தமிழ் பிரபந்தத்திலிருந்து இன்றைய பாசுரம். இந்தப் பாசுரத்தில் திருவரங்கம் அரங்கநாதர் கோயிலின் பெருமைகளையும் சிறப்புகளையும் விளக்குகிறார். 

ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற்கு அளித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்க்குத் துணையாம் கோயில்
சேராத பயனெல்லாம் சேர்க்கும்ம் கோயில்
செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கம் எனத் திகழும் கோயில் தானே 

பொருள்: பக்தர்களுக்கு என்றும் திகட்டாத அளவில்லாத கருணை என்னும் அமுத த்தைத் தன்னகத்தே கொண்டுள்ள கோயில். தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன், அயோத்தி மன்னரான இஷ்வாகுவுக்கு பூஜிப்பதற்காகக் கொடுத்த கோயில் இது. இராவணனை வதம் செய்து, யாராலும் வெல்லமுடியாத மாவீரனான இராமன் வணங்கிய கோயில் இது. இராமனுக்கு இக்கட்டான நிலையில் துணையாக நின்ற விபீஷணருக்குத் துணையாக நின்ற கோயில் இது. ஒருவருக்குக் கிடைக்கவேண்டிய நற்பயன்கள், கிடைக்க அரிதான  முக்தி போன்ற அனைத்தையும் அருளும் கோயில் இது. வேதங்களின் முதல் எழுத்தான பிரணவ வடிவில் அமைந்த கோயில் இது. ஒருவரின் பிறவிப் பிணியை நீக்கும் கோயில் இது. இத்தனை சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள, பூலோக வைகுண்டமாக மிளிரும்  திருவரங்கம் கோயில் இதுவே ஆகும். 

விளக்கம்: ஆராத-திகட்டாத, அம்புயத்தோன் – தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் பிரம்மா, தோலாத – தோற்கடிக்க முடியாத, துணையான வீடணர் – இராமனுக்குத் துணையாக ஆன விபீஷணர், செழுமறையின் முதல் எழுத்து – வேதங்களுக்கு முதல் எழுத்தாக இருக்கும் ‘ஓம்’ (பிரணவம்)

ஸ்வாமி வேதாந்த தேசிகர், தூப்புல் (அவர் பிறந்த கிராமம்)

இன்றைக்கு அவர் இயற்றிய ஆகார நியமம் என்ற பிரபந்தத்திலிருந்து ஓரிரு பாசுரங்களைச் சேர்க்கலாமா என்று நினைத்தேன் (வைணவர்கள் என்ன மாதிரியான உணவைச் சாப்பிடலாம், எவை எவற்றைத் தவிர்க்கணும் என்பதற்கான பிரபந்தம்). ஏற்கனவே பதிவு ரொம்ப நீளமாகிவிட்டது.   

ஐந்தாம் பிராகார கோபுரம்

நாம் இன்னும் ஐந்தாம் பிராகாரத்திலேயே இருக்கிறோம். பெரியவாச்சான் பிள்ளை சன்னிதியிலிருந்து சிறிது கிழக்கு நோக்கிச் சென்று பிறகு தெற்கு நோக்கி நடந்தால் பிள்ளைலோகாச்சார்யார் சன்னிதி, கோதண்டராமர் சன்னிதி, பார்த்தசாரதி பெருமாள் சன்னிதி மற்றும் இராமானுஜர் சன்னிதி வரும். அவற்றைப் பற்றி அடுத்த வாரம் காண்போம்...

===============================================================================

நான் படிச்ச கதை

கதாபாத்திரங்களின் காலம்

 கதையாசிரியர்: கோசின்ரா

 இதழ்: கணையாழி

கோ.ராசேந்திரன் என்ற இயற்பெயர் கொண்டவர் கவிஞர் கோசின்ரா. கடந்த பதினைந்து வருடங்களாக கவிதை எழுதி வருகிறார். இவருடைய அரசியல் கவிதைகள் பிரபலமானவை. சமூக எதார்த்தங்களின் மீது இவருடைய உக்கிரமான பார்வை கவிதைகளாகிறது.

“என் கடவுளும் என்னைப் போல கருப்பு” என்பது இவரது முதல் கவிதைத் தொகுப்பு.

“சமூகத்தில் பிரச்னைகள் எழுகிற போதெல்லாம் என்னுடைய விமர்சனங்கள் கவிதைகளாக வெளிவருகின்றன” என்கிறார்.

இவருடைய இரண்டாம் தொகுப்பு “பூனையின் கடவுள்” புது எழுத்து வெளியீடு.

இவருடைய கவிதை ஒன்று

குடித்த பின்புதான்

அவருக்கு அதிகதிகமான தாகம் எடுக்கிறது

 

காதலியின் தந்தை கேட்கிறார்

தம்பி நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா

கடவுள் விழுங்கியபடி பதில் சொன்னார்

இல்லையென்றார்

முன்னுரை.

ஒரு கதை உருவாக ஒரு அடிப்படை தேவை. கதாசிரியர் கண்ட, கேட்ட, படித்த, மனிதர்கள், நிகழ்ச்சிகள், கருத்துக்கள் போன்றவற்றின் அடிப்படையாகக் கொண்டு அதில் கற்பனையையும் கலந்து கதை என்ற பொருத்தமான வடிவில் தருவது தான் கதைகள்.

ஆனால் இந்தக் கதையின் ஆசிரியர் இந்த பொதுவான நியமத்தை உடைத்து முழுதும் கற்பனையாக ஒரு கதையை உருவாக்க முயல்கிறார். இக்கதைக்குள் இன்னொரு கதையை கற்பனையில் கட்டி எழுப்புகிறார்.

சாதாரணமாக மாந்தர்கள் தாம் கதாபாத்திரம் ஆவார்கள். ஆனால் இக்கதையில் ஒரு கற்பனை i கதாப்பாத்திரம் கற்பனையில் ஒரு வாழும் மனிதனாகிறது. அந்த கற்பனைகள் விபரீதமானவை, நம்ப முடியாதவை. இதைத்தான் பின் நவீனத்துவம் என்று வகைப்படுத்துகிறார்களோ என்று நினைக்கத் தோண்றுகிறது..

ஒரு கதாசிரியர், ஒரு  கதை பாத்திரம். அந்த பாத்திரம் எந்திரன் போன்று படிப்படியாக AI பெற்று கதாசிரியனையே கொலை செய்து வெறும் பாத்திரமாய் நிற்கிறது.

கற்பனையில் உதித்த கற்பனை என்பதால் எப்படியும் எழுதலாம் என்று எழுதப்பட்ட ஒன்று இக்கதை. ஆக லாஜிக், நம்பகத்தன்மை, சிறப்பு அம்சம் போன்றவை அறவே  இல்லை .

கதையைப் படிக்க பொறுமை வேண்டும். படிக்காமல் விட்டாலும் சரி. இக்கதையின் ஆசிரியர் சறுக்கும் சில பகுதிகளை பின்னர் கமெண்ட் பகுதியில் எழுதுவேன்

கதை கணையாழியில் வெளிவந்த ஒன்று. sirukathaigal.com இல் இருந்து பெறப்பட்டது.

 கதாபாத்திரங்களின் காலம்

காட்சி ஒன்று

தன்னைப் படைத்த கதாசிரியரின் உடலுக்கு முன்பு ஒரு கதாபாத்திரம் அழுதுகொண்டிருந்தது. படைப்பாளிகளுக்கு இப்படியொரு மரணம் நிகழ்ந்திருக்கக் கூடாது. அது கொடூரமான சம்பவம். அதற்கு கண்டனம் தெரிவிப்பதாக அறிவித்தது. ஆனால் அங்கே சுற்றியிருந்த யாருக்கும் இப்படியொரு கதாபாத்திரம் வந்து அழுதுக்கொண்டிருப்பது தெரியாது, அழுபவர் யாரோ கதாசிரியருக்குத் தெரிந்தவராக இருக்க வேண்டுமென்று சிலர் நினைத்துக் கொண்டார்கள்.

அந்தக் கதாசிரியர் மரணம் இயற்கையானதல்ல. அவரை யாரோ குத்தி கொன்றிருக்கிறார்கள். குத்தப்பட்ட இடங்களையும் ஆழத்தையும் பார்த்தால் அது திட்டமிடப்பட்டு செய்த கொலையாகத்தான் தெரிவதாக கொலை நடந்த சூழலை வைத்து சிலர் பேசிக்கொண்டார்கள்.

சமீப காலமாக கதைக்குள்ளிருந்த கதாபாத்திரங்கள் உயிர்பெற்று சகஜமாக பூமிக்குள் மனிதர்களோடு மனிதர்களாக உலவிவருவது, முன்பெல்லாம் கேலியாகவும் கார்ட்டூன்களைப் போல பார்க்கப்பட்டது. ஆனால் அது பேசும் பேச்சுகளும் அது ஈடுபடும் வன்முறை செயல்களும் மனித சமூகத்திற்கு அச்சுறுத்தலாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக விவரமறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

காரணம், கதாபாத்திரங்கள் முந்தைய காலத்தைப் போல கதைகளுக்குள்ளே இருப்பதில்லை.. அவைகள் கதைகளிலிருந்து வெளியேறி அரசியல்வாதிகளுடன் கள்ளத்தனமாக உறவு வைத்துக்கொள்கின்றன. அவர்களோடு சேர்ந்துக்கொண்டு வதந்திகளைப் பரப்பும் காரியத்தில் துணிச்சலாக அவைகள் ஈடுபடுகின்றன.

மேலும் கதாபாத்திரங்கள் தன்னை நல்லவர்களைப் போல காட்டிக்கொள்வதாகவும், சிலசமயம் புனைவுக்காக எழுதப்பட்ட கதாபாத்திரங்கள் வரலாற்றில் இடம்பிடிக்கவும் செய்ய முயற்சிப்பதாகவும், அப்படி முயற்சிக்கும் கதாபாத்திரங்களால் தங்களுக்கு ஆதாயம் இருப்பதாக கருதினால் சாதியும் மதமும் அதற்கு போட்டி போட்டுக்கொண்டு உதவுதாகவும் செய்திகள் பரவியிருந்தன.

அப்படி உதவும் கதாபாத்திரங்கள் தாங்கள் கதைகளுக்குள் வந்த நாளை மக்கள் பண்டிகையாகக் கொண்டாட வேண்டுமென்றும் சிலர் தங்கள் சிலைகளாக வணங்க வேண்டுமென்றும் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை வைத்திருப்பதாக அரசல்புரசலாக ஆனால் உறுதிபடுத்தப்பட்ட செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன.

தங்களைப் புனித பாத்திரங்களாக மாற்றி எழுதும்படி கதாசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக கதாப்பாத்திரங்கள் மீது குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது மனிதனாக பிறக்கிறான். ஆனால் யாரோ ஒருவன் அவனைக் கதாபாத்திரமாக மாற்றி விடுகிறான். அந்த கதாபாத்திரங்கள் நல்ல-மனிதர்களோடு பழகும்போது – -எந்தப் பிரச்சினையும் இல்லை. அவைகள் கடைசி வரைக்கும் கதைகளுக்குள்ளே இருந்து விடுகின்றன, ஆனால் அவைகள் வன்முறையாளர்களிடமோ கடத்தல்காரர்களிடமோ சாதிமத வெறியர்களிடமோ அகப்படும்போது அந்தக் கதாபாத்திரங்களை தங்களின் நிழல் பிரதிகளாக மாற்றிவிடும் போக்கும் சமீபத்தில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

இந்தச் சூழ்நிலையில்தான் அந்தக் கதாசிரியரின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. கதாசிரியரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்த கதாபாத்திரம் அந்தக்- கதாசிரியரோடு தனக்கிருந்த உரையாடலை நினைத்து பார்த்தது. அதன் மனதில் சில சம்பவங்கள் நிழலாடின.

 காட்சி இரண்டு

இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது.

“இனி நமக்குள் எந்த மோதலும் வேண்டாம். நீ சொல்லும் எந்த கண்டிஷனுக்கும் நான் கட்டுப்படறேன். எழுதும் முதல் கதை தயவுசெய்து என்னை தொந்திரவு செய்யாதே. என் நலம் விரும்பியாக இருந்தால் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடு எனக்கு நிறைய லட்சியங்களிருக்கின்றன. நான் சாதிக்கனும்னு வெறியோட இருக்கேன்” என்றான் கதாசிரியன்.

“உனக்கு எந்த லட்சியம் வேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்கு அதை பத்தி கவலையில்லை. நீ பேசினது ரொம்ப பழைய ஏதோ அருங்காட்சியகத்திலிருந்து எடுக்கப்பட்ட வசனமா இருக்கு”- என்றது அந்தக் கதைக்குள் இருக்கும் கதாபாத்திரம்.

“இருக்கட்டும்… நான் சாதாரண மனிதன். என் வார்த்தைகள் அப்படித்தான் இருக்கும்.”

“ஏன் சாமானியனுக்கு அழகான வார்த்தைகள் இருக்கக்கூடாதா. அவன் உயிரிலிருந்தும் வார்த்தைகள் அழகானதாக பிறக்கும்”

“நான் அப்படி சொல்லவில்லை”

“என் சொல்லின் பொருளை திரித்து விடாதே. மேலும் நீ பேசுவதை நிறுத்து”

“என்னால் நிறுத்த முடியும், ஆனால் என்னை வடிமைத்துக்கொள்ள நான் பேசித்தானே ஆக வேண்டும்.”

“நான் தவறு செய்துவிட்டேன். உன்னை முதலில் தொட்டிருக்கக்கூடாது. ஆனால் தொட்டுவிட்டேன். அதனால் இப்பொழுது துன்பப்படுகிறேன்” 

“இதெல்லாம் ஒரு துன்பமா. அப்படியென்றால் உண்மையான துன்பத்திற்கு உன்னிடம் என்ன சொல் இருக்கிறது”

“எனக்கு நீ முக்கியமே கிடையாது. ஆனாலும் உன்னை என்னோடு வைத்திருக்கின்றேன்”

“இருக்கலாம் நான் உங்களுக்கு முக்கியம் கிடையாதுதான். நீங்கள் நினைத்தால் என்னை – தூரமாக தள்ளி வைத்து விடலாம். ஆனால் யார் வாழ்க்கையில்-யார் முக்கியமென்று காலம் தீர்மானிக்கும் . நீங்களல்ல.”

“தயவு செய்து என் வேலையில் தலையிடாதே”

“அப்படி என்னால் இருக்க முடியாது. நான் தலையிடத்தான் செய்வேன். அது என் வாழ்க்கை மட்டும் சார்ந்ததல்ல. என் ஒழுக்கம், நீதி நெறிமுறைகளும் சார்ந்தது”

“ஆச்சரியமாக இருக்கிறது. நீயெல்லாம் நீதி, ஒழுக்கம்னு பேச ஆரம்பிச்சிட்டே”

“இங்கே கல் சிலையாகி புனிதமாகி வானளாவிய அதிகாரத்தோடு கதாபாத்திரங்களின் வழியாக பேசிக்கொண்டிருக்கிறது என்பது உனக்குத் தெரியாதா”

“நீயும் கடவுளும் ஒன்றா”

“ஒன்றல்ல. கடவுளை விட மேலானவன். கடவுளுக்கு சக்தி கொடுப்பதில் என் பங்கு அதிகமாக இருக்கிறது”

“உன்னிடம் விவாதம் செய்ய விரும்பவில்லை. உன்னுடன் சமாதானமாக போக சம்மதிக்கின்றேன். கொஞ்சம் நேரம் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இரு”

“இன்னொரு கதையில் என்னைப் போலவே ஒருவன் இருப்பான். ஆனால் அது நான் கிடையாது. இந்தக் கதையில் என் ஒத்துழைப்பு இன்றி உன்னால் எதுவும் செய்ய இயலாது.”

“அதைத்தான் எனக்கு புரிய வைச்சிட்டியே கதாபாத்திரமே.”

“அதென்ன கதாபாத்திரமே…- எனக்கு இன்னும் பெயர் வைக்கவில்லையா."

"வச்சாச்சு.”

“என்ன பெயர்”

“வாசு”

“அதென்ன வாசு தூசுன்னு. வேற பெயர் கிடைக்கலையா”

“செந்தில்ன்னு”

“இதென்ன கிராமத்து சப்ஜெக்ட்டா”

“இல்லை நகரம் சார்ந்த காதல் கதை

“அப்படின்னா செந்தில் ஒத்து வராது. வேற பெயரை சொல்லு.”

“ஹரி…”

“யாரை தெரியனும்.

“நீயே உன் பெயரை செலக்ட் பண்ணிக்கோ. என்னை விட்டுடு.”

“சரி விஜய் அல்லது நவீன் வச்சிடு இப்ப கதையை சொல்லு.”

“ஒவ்வொரு விஷயத்திலும் கதாபாத்திரம் குறுக்கிட்டா நான் எப்படி கதை எழுதுவது.”

“மெயின் கதாபாத்திரம் ஓகே ஆயிடுச்சின்னா மத்த எல்லாமே சரியா வந்திடும்… உனக்கொரு கதை வேண்டும். அந்த கதையில் ஒரு முதன்மையான கதாபாத்திரம் வேண்டும். அந்த கதாபாத்திரம் சரியா அமைந்தால்தான் உன் கதை செல்லுபடியாகும். அதற்கு அந்த கதாபாத்திரத்தோடு ஒத்துப்போவது தான் உனக்கு நல்லது. என்னை அதிகம் பேச வைக்காதே”

“இப்படி எழுத தொடங்கும் முன்பே கதாபாத்திரம் அடிக்கடி குறுக்கிடுவது கதைக்கு நல்லதல்ல.”

“எந்தக் கதாபாத்திரமும் கதையை தானே எழுதிக்கொள்வதில்லை. அப்படி எழுதினால் எழுதப்பட்ட அந்தக் கதை யாருடைய சொத்து அல்லது உரிமையாகும்.?"

“சந்தேகமென்ன அது உன்னுடைய சொத்துதான். நீதான் கதையின் உரிமையாளி. ஆனால் நாளைக்கு அந்த கதாபாத்திரம் சரியாக அமையவில்லையென்றால் அது எனக்கு கெட்ட பெயரை வரவழைக்கும். எனக்கு கிடைப்பதோ ஒரு வாழ்க்கை. அது சரியாக அமைய வேண்டுமென்று எனக்கு ஆசையிருக்கக் கூடாதா.” கதாபாத்திரம் கேட்டது.

கதாசிரியனால் எதுவும் பேச முடியவில்லை. கதாபாத்திரங்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டன என்பது மட்டுமல்ல, அது தன்னை எப்படி வடிவமைக்க வேண்டும் தனக்கு என்ன பெயர் வைக்க வேண்டுமென்பது வரை குறுக்கிட்டால் -குறிப்பிட்ட காலத்துக்குள் கதை எழுதி முடிக்கப்பட வேண்டும் என்ற என் இலக்கு எப்படி முடியும்.

அவன் ஒரு நகரம் சார்ந்த காதல் கதை எழுதுவதாக எண்ணியிருந்தான். அந்தக் காதல் கதையை உயிர் துடிப்போடும் ஜனரஞ்சகத்தோடும் எளிமையாகச் சொல்ல எண்ணியிருந்தான்.

அடிப்படையில் அவன் ஓர் ஓவியன் என்பதால் அந்தக் கதாபாத்திரத்தின் முகத்தை வரைந்து வைத்திருந்தான். அவன் வாழப்போகும் வீடு, நடமாடும் தெருக்கள், அவன் படிக்கபோகும் கல்லூரி, அவன் சந்திக்கப்போகும் அவன் காதலி எல்லாவற்றையும் ஒரு ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தான்.

அவன் காதலி கொள்ளை அழகுடன் இருந்தாள். இந்த அழகை ஒரு வங்காள நடிகையின் சாயலில் வரைந்திருந்தான். அவள் மார்பு திமிறிக் கொண்டிருந்தது. அதன்மேல் மெல்லிய மஞ்சள் வெயில் பூசினாற் போலிருந்த ஆடையை அவள் தாவணியாய் கட்டியிருந்தாள்.

இதையெல்லாம் காட்டிக்கொண்டிருந்த போது அந்தக் கதாபாத்திரம் கேட்டது.

“இந்த மண்ணில்தான் இந்த காதல் நடக்கபோகுது. ஓகே. அந்த காதலி இந்த மாநிலத்தை சேர்ந்தவளா இல்லை வேறு ஊரை சார்ந்தவளா.”

கதையாசிரியன் சொன்னான். “இந்த ஊரை சேர்ந்தவள்தான்.”

“அப்படியெனில் எதற்கு அந்த பெண்ணின் முகத்தை பெங்காலி முகத்தை போல வரைந்து வைத்திருக்கிறாய். நான் ஏன் பெங்காலி பெண்ணை காதல் செய்ய வேண்டும். ஒரு தமிழ் பெண் கிடைக்கவில்லையா.”

“நீ ஒரு தமிழ் பெண்னைத்தான் காதலிக்கிறாய். அந்த தமிழ் பெண் வேடத்தில் நடிக்கும் ஒரு பெண் வங்காளத்திலிருந்து கூட்டிவரப் போகின்றேன்.”

அவனுக்கு எரிச்சலாக வந்தது. 

"இப்படிக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் இந்தக் கதையை இழுத்து மூடிவிட்டு வேறு கதையை எழுத தொடங்கி விடுவேன்."

கதாபாத்திரம் சொன்னது.

“அது உன் இஷ்டம். ஆனால் இந்தக் கதையை நீ எழுதுவதாக இருந்தால் என் குறுக்கீடு இருக்கும். அதை நீ தவிர்க்க முடியாது. அதைப்போல அடுத்த கதை எழுத தொடங்கும் போது அந்த கதையின் மெயின் கதாபாத்திரம் குறுக்கிடாது என்பதற்கு எந்த உத்ரவாதமுமில்லை.”

“இன்னுமிரண்டு நாளில் கதை அவுட்லைன் எழுதி முடித்து விட வேண்டும். இப்போதைக்கு கதாபாத்திரத்தின்-பெயர் நவீன் என்று முடிவாகியிருக்கிறது.”

இன்னும் கதையின் நாயகிக்கு பெயர் சூட்ட வேண்டும். அவள் என்னென்ன குறுக்கீடு செய்யபோகிறாளோ. இனி கதை எழுதுவது சிரமமான காரியமாகிவிடும்.

அவன் யோசித்துக்கொண்டிருந்தான். அவனைத் தட்டி எழுப்பியது கதாபாத்திரம். என்ன என்பது போல் பார்த்தான் கதை ஆசிரியன்.

கதாபாத்திரம் பேசத்தொடங்கியது.

“இன்னிக்கு நான் என்ன கலர் சட்டை போட வேண்டும்.”

“ஏன்”

“இன்னிக்கு கதாநாயகியை சந்திக்கப்போகிறேன் அல்லவா.”

“இன்னும் முடிவு பண்ணல. முடிவு பண்ணியிருக்கனும். அதை காஸ்ட்யூம் டிசைனர் பார்த்துக்கொள்வார்.”

“அது நீ கதையை சினிமாவாக எடுக்கும்போது இப்ப நான் என்ன கலர் சட்டை போட்டுக்கொள்ள வேண்டும்.

“லைட் ஜீன்ஸ் டார்க் புளு சர்ட்”.

“ஓகே.”

“போட்டுக்கிரேன், உன்கூட நானும் கதை விவாதத்தில் பங்கெடுக்கப் போறேன். வேறு யாராவது வராங்களா. இல்லை நாம் மட்டும் போதுமா.”

“இந்தக் கதையை எழுதி முடித்துவிட்டு சொல்லிடறேன். அதுவரை கொஞ்சம்-பொறுமையாக காத்திரு.”

“நீ என்னை வேறு யாரோ என்று பேசிக்கொண்டிருக்கிறாய். எனக்குத் தெரியாமல் என்னை எப்படி எழுத முடியும். நன்றாக யோசி."

“சரி எனக்கு பசிக்கிறது. நான் குளித்துவிட்டு-வருகிறேன். நீயும் யோசித்துக்கொண்டிரு. அடுத்த ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் சந்திப்போம்.”

பேனாவை மூடினான். தாள்களை ஒரு பைலில் போட்டுவிட்டு எழுந்து விட்டான். கதை அவனுடைய மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

இது காதல் கதையென்றாலும் அந்தக் கதையை ஓர் அரசியல் பின்புலத்தில் சொல்ல நினைத்திருந்தான்.

காதலில் மதமும் சாதியும் அரசியலும் நுழைந்து தனிமனித வாழ்வில் ஏற்படுத்தும் அவலங்களை, சிதைவுகளை ஒரு மாற்றுப்படம் என்று எண்ணம் வராதவாறு கமர்சியலாகவும் வெற்றிபெற வைக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் அந்தக் கதையின் கருவை நினைத்திருந்தான்.

காதலுக்கு மதமும் சாதியும் அரசியலும் வெளியாட்கள். அந்த வெளியாட்கள் செய்யும் அதிகாரங்களீன்-நடுவில் தெளிந்த நதி போல இருக்கும் காதல் ஒரு வாழ்வை கூவம்நதியைப் போல மாற்றிவிடும் சம்பவங்கள் நிறைந்த கதை தான் அவனுக்குள் ஓகே ஆன கதை.

 காட்சி மூன்று

அதுவொரு காவல் நிலையம். காலை மணி பத்திருக்கும். அங்கே உரையாடல் நடந்துகொண்டிருந்தது.

“சார் என்னை- ஒருத்தன் அவமானப்படுத்தி விட்டான். அவனை என்ன ஏதுன்னு ஒரு எட்டு வந்து கேளுங்க சார்” என்றான் அவன்.

“நீ யாருய்யா. எங்க வேலை செய்யறே”.

“வேலை எதுவும் கிடையாது. சும்மாதான் இருக்கேன்”

“சும்மாதான் இருக்கியா. இந்த வயசுல ஒரு வேலையும் செய்யாம சும்மா இருக்கிறதே ஒரு அவமானம் தான். இதிலே இன்னொருத்தன் உன்னை அவமானப்படுத்திட்டான்னு புகார் வேற. அப்படி அவன் என்ன சொல்லி உன்னை அவமானப்படுத்தினான்”

“என்னை மூடிக்கிட்டு போய்யான்னு சொல்லிட்டான்”

“எதை மூடிக்கிட்டு போயான்னு சொன்னான்”

“அதை நீங்கள் எதிரிகிட்டத்தான் கேட்கனும்”

“ஏன்யா உன்ன அவமானபடுத்துவனெல்லாம் உனக்கு எதிரியா? விடுய்யா… கோபத்துல ஏதோ ஒரு வார்த்தை தடிச்சி வந்திருக்கும். இதுக்கெல்லாம் கோபப்பட்டா வாழ்க்கை போயிடும்”

“அது எனக்கு அவமானம்தான் சார். "

"அதுவும் அந்த எதிர்வீட்டு பொம்பள..என்ன ஏதுன்னு விசாரிக்க வேண்டாமா?”

“நல்லா விசாரிங்க. அப்புறம் நடவடிக்கை எடுங்க”

“யோவ் இங்க வாய்யா. இதெல்லாம் சின்ன விஷயம். அதை பெரிசாக்காம போய் வீட்டில வேற வேலை ஏதாவது இருந்தா பாரும்”

“அப்படி விட முடியலன்னுதான் உங்ககிட்ட வந்திருக்கேன். நானும் இதை விட்டுடலாம்னு நினைச்சேன். ஒவ்வொரு முறையும் அவன் பார்க்கிற பார்வை சரியில்ல. நான் ஏதாவது செய்யனும் சார்” என்றான்.

“சரி நீயும் அவனை அவமானபடுத்து. ரெண்டு பேரும் சேர்ந்து வாங்க சமாதனப்படுத்துறேன். இப்ப எனக்கு வேற வேலை இருக்கு. நீ போ. பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட கொஞ்சம் விட்டுக்கொடுத்து போய்யா. இல்லைன்னா இதுவே பெரிய பிரச்சனையா உன் மனசை அரிச்சுகிட்டு இருக்கும்”.

“நீங்க சொல்றது உண்மைதான். இது அரிச்சிக்கிட்டு இருக்கிறதால தான் வந்தேன்”

“என்னய்யா உன்னோட ஒரே தொந்தரவா போச்சு. மனுஷனை சும்மா இருக்க விட மாட்டே. இப்ப சொல்லு என்ன நடந்துச்சு…”

“சார் ஒரு வருஷத்துக்கு முந்தி நடந்த சம்பவம்…”

“யோவ் எனக்கு கதை கேட்கிற மூடு இல்ல. இப்ப என்ன நடந்ததோ அதை மட்டும் சொல்லு”

“இப்ப எதுவும் நடக்கல சார்”

“எப்ப அவமானப்படுத்தினான்? எந்த வேலையும் இல்லைன்னு நினைச்சிட்டீங்களா. எரிச்சலை கிளப்பாமே போயிடு”.

“சார் நீங்க வந்து-இந்த கேஸை சரியாக பாருங்க. சம்பவம் நடந்ததென்னவோ ஒரு வருஷத்துக்கு முன்னாடி. ஆனால் அதை நான் அப்பவே மறந்துட்டேன். ஆனால் என் எதிரி நக்கலா பார்க்கிற பார்வையில என்னை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திகிட்டு இருக்கான்”

“நீ இருக்கிற முகவரி சொல்லு”

“முகவரி இல்லை சார், ஆனால் அவனை எனக்குத் தெரியும்”

“நீ என்ன பிளாட் பார்மல வசிக்கிறவனா”

“நீங்க தப்பா நினைக்கிறீங்க. நான் அடுக்கு மாடி குடியிருப்புல வசிக்கிறவன்”

“அந்த அப்பார்ட்மெண்ட் எங்கிருக்கு”

“அது எங்கிருக்குனு தெரியாது சார். ஆனால் நான் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன். என் எதிரி அதே அடுக்குமாடி குடியிருப்பில் எனக்கு எதிர் பிளாட்டில் வசிக்கின்றான்.”

“உங்களுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா…”

“நீங்க அப்படி நினைச்சிட்டீங்களா. எனக்கு பைத்தியம் கிடையாது…”

அப்போது காதாசிரியன் வந்தான்.

“சார் வணக்கம்”

‘வணக்கம் யார் நீங்க”

“சார் நான் ஒரு சினிமா காதாசிரியன். எனக்கு ஒரு கதை ஓகே ஆயிடுச்சி.”

“சரி சொல்லுங்க…”

“அது வந்து சார். அந்தக் கதையிலே வர்ற கதாபாத்திரம் ஒண்ண காணோம் சார்”

“உங்களுக்கு என்ன தோணுது”

அப்போது தூரத்தில் கைகளை இறுகக் கட்டிக்கொண்டு வாயை பொத்தியபடி ஒருவன் ‘ம்ம்ம் ம்ம்ம்’ என்று சத்தமாகக் கூப்பிட்டான். சத்தம் வந்த திசையில் பார்த்தால் அது அவன் தேடிவந்த கதாபாத்திரம்.

“சார் நான் தேடி வந்தது இந்த கதாபாத்திரத்தைதான். "

“அவன் அடுக்குமாடியில குடியிருக்கானாம். ஆனா வீட்டின் முகவரி தெரியாதுன்னு சொல்றான்.”

“அது உண்மைதான் சார். அதை நான் இன்னும் எழுதல. அதனால் அந்த கதாபாத்திரத்துக்கு முகவரி தெரியாது சார்”

“யோவ் இவன் மனுஷன்யா. அவனப்போயி கதாபாத்திரம்னு சொல்றே”

“சார் நல்லா சொல்லுங்க சார்… என்னை மனுஷனா பார்க்க மாட்டேங்குகிறார். முதல்ல இவர புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்”

“அந்த ஆளுக்கு என்ன மூளை குழம்பி போச்சா. என்னை ஒருத்தன் அவமானப்படுத்திட்டார்னு சொல்றான். ஆனால் அவன் அட்ரஸ் எங்கேன்னு கேட்டா சொல்லத் தெரியல. நீ என்னடான்னா அவனை கதாபாத்திரம்னு சொல்றே. -யாராவது கதாபாத்திரம்னு பெயர் வைப்பாங்களா”

“சார் அவர் நிஜம் இல்ல சார் என் கதையில் வருகிறவர்…”

“யாரு…”

“அதோ அவர்தான். அங்க கையை கட்டி நிக்கிறாரே அவருதான்…”

"காலையிலாங்காட்டியும் நம்மள பைத்தியம் பிடிக்க வச்சிருவாங்க போலிருக்கு. இவங்கள் கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளு”

கதாபாத்திரத்தை அழைத்துக்கொண்டு போகும்போது ஏட்டு அழைத்தார்.

“தம்பி நீங்க சொல்றது உண்மையா பொய்யான்னு தெரியாது. கதாபாத்திரத்தை கையாளும் போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. கதாபாத்திரத்துக்கு சாதி தெரியாது, மதம் தெரியாது. அதற்கு கற்பழிப்பு, ஏமாத்துறது, கள்ளக்கடத்தல் எதுவும் தெரியாது. நீங்க சொல்லிக் கொடுத்து கதைகளை கெடுத்துடாதீங்க..”

கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு வெளியே வந்தான். வெளியே வந்தவுடன் காதாசிரியன் அந்தக் கதாபாத்திரத்தை கேட்டான்.

“உன்னை எங்கெல்லாம் தேடறது.. ஆமாம் என்ன அது புது பழக்கம் என் அக்கௌண்டுல டிபன் வாங்கி சாப்பிட்டிருக்க. சிகரெட் வாங்கியிருக்க…? என்ன இதெல்லாம்?”

“எனக்கு சிகரெட்னா என்னான்னே தெரியாது. நீதான் எனக்கு அந்தப் பழக்கம் இருக்குதுன்னு எழுதியிருக்கே. நான் தெரியாதுன்னு சொன்னா உனக்கு கோபம் வரும். அதான் குடிச்சி பழகறேன்”

“நல்லா பேச கத்துகிட்டு இருக்கே… ஏது அந்த ஏட்டு சொன்ன மாதிரி உன்னை ஜாக்கிரதையா கையாளனும் போலிருக்கு”

காட்சி நான்கு

அதுவொரு மாலை நேரம். ஒரு பூங்காவில் குறைவானவர்களே நடந்துகொண்டிருந்தனர்.

அந்தப் பூங்காவில் ஓரமாக இருந்த ஒரு பெஞ்சில் இருந்த அந்த மனிதனை இதற்கு முன்பும் பார்த்திருக்கின்றான். தனிமையில் வெகுநேரமாய் இருந்துவிட்டு இருட்டியபின் எழுந்து சென்று விடுகிறார். யாரிடமும் பேசிப் பார்த்ததில்லை.

அவர் நண்பர்கள் யாரும் அவரைத் தேடி வந்ததில்லை. எப்பொழுது வந்தாலும் அந்த மரத்தடியில் போடப்பட்டிருக்கும் பெஞ்சில் அமர்ந்திருப்பார். அவருடைய உடைகள் இன்றைய நவீன உடைகள் அல்ல

பழங்காலச் சிற்பங்களில் ஓவியங்களில் தென்படுகிற உடையில் இருந்தார். அவருடைய உடையை போலவே அவரும் பழசாக இருந்தார்

வாழ்வில் ஏற்பட்ட துயரங்களிடமிருந்து கொஞ்ச நேர விடுதலைக்காக வருகிறவர்களிடம் அந்த தனிமைக்குள் நுழைந்து அதைக் கெடுக்க விரும்பாததால் அவரிடம் பேசவில்லை.

ஆனாலும் யாரையும் பேசத் தூண்டும் அல்லது கவனிக்கத் தூண்டும் மனிதராக இருந்தார்.

அவரை தாண்டி செல்லும் குழந்தைகளிடம் கூட சிரித்த மாதிரியோ கவனித்த மாதிரியாகவோ காட்டி கொள்வதில்லை. ஒரு மனிதர் எந்தவித முகபாவங்களின்றி எப்படி இருப்பார்? மிகவும் ஆச்சரியத்துகுரிய மனிதராக இருந்தார்.

எதற்கும் அந்த மனிதரிடம் கேட்டுவிட வேண்டுமென்று அணுகினான். அந்த மனிதரிடம் கேட்டான்.

“சார் வணக்கம் நீங்கள் கதாசிரியர்தானே. என்னை தெரிகிறதா”

“யாரு தெரியலையே…”

“சார் நீங்க மனிதர்தானே…”

“ஆமாம். நீங்க…”

“நான் கதாபாத்திரம். இப்பவெல்லாம் மனிதர்களை பார்ப்பது அபூர்வமாக இருக்கிறது.”

“என்னை எப்படி கண்டுபிடித்தீர்கள்…”

“உங்களை பார்க்கும்போது கவலையில் இருப்பதாக தெரிந்தது. மேலும் நீங்கள் மரணத்தின் படிக்கெட்டில் நிற்பது தெரிந்தது. எனக்கு நினைவு இருக்கிறது. நான் உங்கள் முதல் கதையில் வந்த முதன்மை கதாபாத்திரம். நான் இன்றும் இளமையோடு இருக்கின்றேன். என்னைப் படைத்த நீங்கள் முதுமையில் இருக்கிறீர்கள். நாங்கள் எதற்கும் கவலைபடுவதில்லை. கதாபாத்திரங்கள் வாழ்கின்றன ஆனால் சாவதில்லை. ஆமாம் உங்களுக்கு என்னவாயிற்று சார்”

“உன்னை நான்தான் படைத்தேன் என்று நீ சொல்கிறாய். ஆனால் அங்கே ஒருவன் அதை நான்தான் படைத்தேன் என்று சொல்லிக்கொண்டு என் கதையை திருடிவிட்டான். நான் எழுதிய கதை என்னுடையதில்லையாம்.”

“அதெப்படி சார் உங்களுக்கும் எனக்கும்தான் எத்தனை வாக்கு வாதங்கள் நடந்தன. அதையெல்லாம் சொல்ல வேண்டியதுதானே”

“அதை யார் நம்புவார்கள்? உன்னைப் போலவே அல்ல.  அதில் வில்லனுக்காக நாட்டை காட்டிக் கொடுக்கும் ஒரு கதாபாத்திரத்தை படைத்தேன். ஆனால் அந்தக் கதாபாத்திரம் உண்மையிலே பணத்துக்காக நாட்டை காட்டி கொடுத்துவிட்டது. அதன்மீது வழக்கு பதிவு செய்து என்னை கைது செய்து இதோ கொஞ்ச நாளுக்கு முன்னாலதான் அடிப்படை ஆதாரமில்லையென்று விடுதலை செய்தார்கள். இதோ தினமும் இங்கு வந்து என் தனிமையில் கடந்துபோன நாட்களை நினைத்துப் பார்கின்றேன். அவர்களால் கதாபாத்திரங்களை எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் படைத்த என்னை சிறையில் தள்ளிவிட்டனர்.”

“உலகத்தில் முன்பெல்லாம் மனிதர்கள் அதிகமாக இருந்தார்கள். கதாபாத்திரங்கள் குறைவாக இருந்தன. இப்பொழுது கதைகள் அதிகமாகி கதாபாத்திரங்கள் கதைகளில் நிழல்களை விட்டுவிட்டு கதையிலிருந்து வெளியே வந்து பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன”

சாலையில் நடந்து போவோரில் யார் மனிதர் யார் கதாபாத்திரம் என்று கண்டுபிடிப்பது கடினம். ஒரு கதாபாத்திரம் ஒரு நேர்காணலில் சொன்னது:

“எங்களுக்கும் மனிதர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. சிலசமயம் எங்களை விட மனிதர்கள் கொடூரமானவர்களாக இருக்கிறார்கள். கதாபாத்திரங்களினால் சலசலப்பு வரும். எந்த கதாபாத்திரமும் இன்னொரு கதாபாத்திரத்தை தாழ்வாக எண்ணியதில்லை. ஆனால் மனிதர்கள் பிறவியிலே கோளாறானவர்கள் அவர்களால் உலக யுத்தங்கள் நடந்திருக்கின்றன. தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் ஜந்துக்கள். நாங்கள் அப்படியில்லை.”

ஒரு முறை மூத்த படைப்பாளி சொன்னார்.

“மனிதர்கள் சிறுபான்மையினராக வாழும் உலகில் நடமாடும் கதாபாத்திரங்கள் எல்லாமும் ஏதோ சாதியின் மதத்தின் தத்துவத்தின் பிரதிகளாக நடமாடுகின்றன. அவைகளிடம் மனிதம் என்பது மருந்துக்கும் இருக்காது. இதற்கெல்லாம் காரணம் மனிதன்தான். அவன் பெருமைகளும் இழிவுகளும் மன வக்கிரங்களும் தான் இங்கே கதாபாத்திரங்களாக உலவிக் கொண்டிருக்கின்றன. பாவம் மனிதர்கள். அவைகளிடம் மாட்டிகொண்டு ஒரு அன்னியன் போல வாழ்கின்றனர்”

அந்தக் கதாபாத்திரம் அந்த முதுமையான கதாசிரியனை கேட்டது.

“நீங்கள் என் வீட்டுக்கு வரமுடியுமா”

“முடியும். உங்களால் எனக்கு சாப்பிட ஏதாவது தர முடியுமா”

“முடியும். வாருங்கள்” என்று அழைத்துப்போனது.

அடுத்த நாள் அந்தக் கதாசிரியனின் சடலம் குப்பைத்தொட்டியில் கிடந்தது.

யார் கொலையாளி என்று தெரியவில்லை.

ஆனால் கதாபாத்திரங்கள் முந்திக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கை பதிவுசெய்து விசாரிக்கின்றன. ஏனெனில் நீதி நேர்மை நியாயத்துக்கு கட்டுப்பட்டவைகள் கதாபாத்திரங்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்கின்றன.

ஆனால் மனிதர்கள் நடத்தும் புலனாய்வு பத்திரிகையில் மனிதர்கள் அடிக்கடி கொல்லப்படுவது தொடர்வதாகவும் அதற்கு காரணம் கதாபாத்திரங்கள் என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டியது. ஆனால் அந்த அறிக்கையை எந்தக் கதாபாத்திரங்களும் கண்டுகொள்ளவே இல்லை.

இப்பொழுதெல்லாம் நாட்டில் கதாபாத்திரங்களே ஆட்சி செய்கின்றன. கதாபாத்திரங்களே தத்துவங்கள் பேசுகின்றன. அதனால் புராணக் காலத்திலிருந்து நிறைய கதாபாத்திரங்கள் வெளிவரத் தொடங்கி விட்டன. நீதிமன்றங்கள், நாடாளுமன்றங்கள் அனைத்தும் கதாபாத்திரங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அதனால் கதாபாத்திரங்களுக்கு எதிராக நீதிமன்றத்தால் எந்த தண்டனையும் வழங்க முடியாதென்றனர்.

கொலை நடந்த இடத்தில் அந்த உடலுக்கருகில் வண்டித் தடங்களோ காலடித் தடங்களோ இல்லையென்பதால் சந்தேகம் கதாபாத்திரங்களின் மீது திரும்பியிருக்கிறது. ஏதோ ஒரு கதாபாத்திரம் அந்தக் கொலையை செய்திருக்கலாமென்று விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

பின்குறிப்பு :

அந்தக் கதாபாத்திரம் அஞ்சலி செலுத்தியபின் நேராக ஒரு சாதிச் சங்கத்-தலைவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தது.

“ஆமாம் எப்படி கொலை செய்தாய்”

“எல்லாம் நீங்கள் கற்றுக் கொடுத்ததுதான். நயமாக பேசி –அழைத்துக்கொண்டு போய் ஆத்திரம் தீரும் வரை கொன்றேன்… ஆமாம் என்னை ஏன் கொல்லச் சொன்னீர்கள்.”

“அந்தக் கதாசிரியன் நம்ம சாதிப் பெண்ணை கீழ்சாதிப் பையன் காதலிப்பதாக எழுதியதாக நீதானே சொன்னாய்.”

“நான்தான் சொன்னேன். ஆனால் எனக்கு சாதி மதம் முக்கியமில்லை யென்றேனே. அதற்கு நீங்கள்தான் அது இந்த மண்ணின் கலாச்சாரம். அதை விட முடியாதென்றீர்கள். எனக்கு மீசை வளர்த்து விடவும் அரிவாள் தூக்கவும் பயிற்சி தந்தீர்கள். ஆனால் அவனை மன்னித்து விடலாமென்று சொன்னதை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை…”

“நாம் மன்னிக்கும் பரம்பரையை சார்ந்தவன் அல்ல எப்படி மன்னிப்பது? எனக்கு அந்தக்காதல்-பிடிக்கவில்லை. அதனால் நான் அந்த கதாசிரியனை கொல்லச் சொன்னேன். நீ எத்தனையோ வருடங்கள் காத்திருந்து பழிதீர்த்துக் கொண்டாய். அதுதான் நம் சாதியின் பெருமை. வீரம்.”

“நானும் அந்தக் கலாசாரத்தின் அங்கமா”

“ஆமாம். உன் உடலிலும் நம் சாதி ரத்தம்தான் ஓடுகிறது.”

“அப்படியெனில் நான் கொலைச் செய்தது தப்பில்லையா”

“என்ன கேள்வி மேல் கேள்வி கேட்கிறாய்”

“வரும் வழியில் ஒரு பொதுவுடமைவாதியை சந்தித்தேன்”

“பொதுவுடமைவாதிகளை, திராவிடர் கழகத்தினரை சந்திக்காதே. உன்னை குழப்பி விடுவார்கள்”

“இல்லை எனக்கு சிந்திக்கும் ஆற்றல் உண்டு.”

“அப்படியா நல்லது. என்னயோசிக்கிறாய்”

“நான் செய்தது பாவமென்று தோன்றுகிறது. மேலும் நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவள் கீழ்சாதியை சார்ந்தவள். அதனால்....நான் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் நீ உயிரோடு இருக்கக் கூடாது.- உன்னைப் போன்றவர்கள் மனிதர்களை கதாபாத்திரங்களாக மாற்றி விடுகிறீர்கள். நான் மனிதனாக வாழ விரும்புகிறேன்… நான் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் சாதியனாக இருக்க விரும்பவில்லை” என்று தான் மறைத்து வைத்த கத்தியால் எதிரே பேசிக்கொண்டிருந்த சாதிச் சங்கத் தலைவனைக் கொன்றது.

அவன் மெல்லச் சரிந்தான்.

– கணையாழி – மலர் 61 – இதழ் 01 – ஏப்ரல் 2026.

பின்னுரை.

படித்தீர்களா?  ஆச்சர்யம். கதை அறிவு ஜீவிகளுக்காக, அறிவு ஜீவி என்று கருதும் ஒருவர் தன்னுடைய மனக்குவியல்களை, எண்ணங்களை கொட்டி உருவாக்கப்பட்ட ஒன்று. புரிந்து கொள்வது மிகவும் கடினம்.

= = = = = = = = = =

முக்கிய அறிவிப்பு : 

Blogger பிரச்சனை ஏதோ இன்று காணப்படுகிறது. அதனால் ஆசிரியர்கள் உட்பட யாராலும் கருத்துரை பதிய இயலவில்லை. பிரச்சனை என்ன என்பது தெரியாததால், சரியாகும் வரை வாசகர்கள் பொறுமையாக இருக்கவும். நன்றி. 

ஆசிரியர்கள். எ பி .

47 கருத்துகள்:

  1. பிரச்சனை நேற்று மதியத்திலிருந்து. நான் எழுதிய கருத்துகளை வெளியிட இயலவில்லை. எங்கள் பிளாக் பிரச்சனை என நினைத்து கீசா மேடம் பதிவுக்குப் போனால் அங்கும் அதே நிலை.

    என் சிஸ்டத்தில்தான் ஏதோ பிரச்சனை, ரீபூட் பண்ணணும் என நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரச்சினை சரியாகிவிட்டது என்று நினைக்கிறோம். கடவுளுக்கு நன்றி.

      நீக்கு
  2. மஞ்சள் நிற ஹைலைட் படித்துவிட்டு, இன்றைக்கு கமலா ஹரிஹரன் மேடம் பிரார்த்தனை பண்ணாமல் இருந்துவிடுவார்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. காலையில் நானும் எத்தனையோ முயன்றும் என்னால் இயலவில்லை. சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவிலும் நீண்ட கருத்துரை ஒன்றையிட்டும் அது வெளி வராமல் அங்கு தோல்விதான். பிறகுதான் எ. பியின் முக்கிய அறிப்பை படித்துணர்ந்தேன். இப்போது அனைவரின் கமெண்ட்ஸும் வந்துள்ளதை ப் பார்த்து மகிழ்வடைகிறேன்.

      நீக்கு
    2. ஆம். வாசகர்களின் பொறுமைக்கு நன்றி.

      நீக்கு
  3. ஹையா வந்து விட்டதே. : ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கானா லோகநாதன் கணக்கா பாடுகின்றீர்களே!

      நீக்கு
  4. நேத்திலே இருந்து ஒரே பிரச்னை. முகநூலில் இதுக்காகப் பதிவும் போட்டேன். என்னோட வலைப்பக்கத்திலேயும் பதிவு போட்டேன். அங்கேயும் என்னோட வலைப்பக்கத்துக்கு நான் போட்ட கருத்துப் போகவில்லை. ப்பின்னர் வெங்கட்டோட வலைப்பக்கம், கமலா ஹரிஹரன் வலைப்பக்கம், பானுமதியோடது, கோமதி அரசோட வலைப்பக்கம்னு எல்லாம் போய் முயற்சி செய்தேன். எல்லாத்துக்கும் பெப்பே நு சொல்லிடுச்சு ப்ளாகர். பின்னர் நேத்திக்கு முகநூலில் மட்டும் இருந்துட்டுப் பின்னர் லாப்டாப்பை மூடிட்டேன். இன்னிக்கும் காலை வந்ததில் இருந்து முயற்சி பண்ணினேன். வரலை. இப்போ திடீர்னு வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் வீட்டில் மட்டுமே கரண்ட் போயிடுச்சு என்று வருத்தப்படும் போது பக்கத்து வீடுகளிலும் கரண்ட் இல்லை என்று தெரிய வந்ததும் வரும் நிம்மதி(!) போல ஒரு ஃபீலிங்!

      நீக்கு
    2. yessu, athee, athee. நேத்திக்கு ஸ்ரீராம் தனக்கும் இரண்டு நாளாவே போட முடியலைனு சொன்னதும் ஒரு நிம்மதி வந்தது பாருங்க. அதுக்கு ஈடு, இணை இல்லை. :))))))

      நீக்கு
  5. இப்போவும் முதல் முயற்சியில் வருவதில்லை. திரும்பத் திரும்ப 2 தரமாவது கொடுத்தால் ஒரு தரம் "க்ளிக்" ஆகிறது. இன்னும் முழுசாச் சரியாகலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு முதல் முயற்சியிலேயே ஜிம்கானா!

      நீக்கு
  6. நெல்லை மிக விரிவாக ஸ்ரீரங்கம் அரங்கன் கோயிலைப் பற்றியும் பிரகாரங்களைப் பற்றியும் அங்கு அமைந்திருக்கும் சின்னச் சின்ன கோயில்கள் (சந்நிதிகள்) பற்றியும் மிக அழகாக வர்ணித்துள்ளார். நானும் என்னோட அரங்கநாதன் தொடரில் ஓரளவுக்குச் சொல்லி இருந்தாலும் நெல்லையின் பார்வையின் வீச்சு எனக்கு இல்லைனே சொல்லணும். மிக அருமையாக எழுதி இருக்கார். அதோடு அவரால் கோயிலில் நேரம் செலவிட முடிந்த அளவுக்கெல்லாம் என்னால் இயலாது என்பதும் ஒரு காரணம்.
    வேதாந்த தேசிகரின் பிரபந்தமும் அதற்கான பொருளும் மிக அருமை. கோயிலின் பெருமையை மிகச் சிறப்பாகச் சொல்லி இருக்கார். இன்னிக்கு வரை வேதாந்த தேசிகர் பிரபந்தம் எதுவும் கேட்டதில்லை. வடமொழியில் மட்டும் தான் எழுதி இருப்பார்னு நினைச்சிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்..... இதற்காக இரண்டு புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். இவ்வளவு தடவை கோயிலுக்குப் போயும் பல சன்னிதிகள் எங்கிருக்கின்றன என்று சரியாகத் தெரியவில்லையே. ஆச்சார்யர்கள் திருமாளிகைகளும் அப்படியே என்ற வருத்தம் வந்தவுடன், இதனை எழுதிய கையோடு திருவரங்கம் சென்றேன். இரண்டு நாட்கள் செலவழித்து ஒவ்வொரு சன்னிதி, இடங்களையும் பார்த்தேன். ஒரு சில, நடை சாத்தியிருந்தன என்பதையும் சொல்கிறேன்.

      நீக்கு
    2. வேதாந்த தேசிகர், வடமொழி ஸ்தோத்ரங்களையும், தமிழ் பிரபந்தங்களையும் நிறைய எழுதியிருக்கிறார். அவை தேசிக ஸ்தோத்ரங்கள் என்றும் தேசிக பிரபந்தங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. வடகலையாருக்கு வேதாந்த தேசிகர். அவருக்குப் பின் நூறு ஆண்டுகள் கழித்து அவதரித்த மணவாள மாமுனிகள், தென்கலையாருக்கு. அவருடைய வரலாற்றையும் இந்தத் தொடரின் கடைசியில் எழுத எண்ணம்.

      நீக்கு
  7. கோ.ராஜேந்திரன் என்னும் பெயரைக் கேட்ட நினைவு இருக்கு. ஆனால் கோசின்ரா என்றெல்லாம் கேட்டதில்லை. இவர் கதைக்கரு போலவே முன்னரும் மணிக்கொடி எழுத்தாளர்களில் யாரோ ஒருத்தர் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியதாகப் படிச்ச நினைவு இருக்கு. மனிதர்களுடன் பழகிப்பழகி அவங்களுடைய துர்க்குணங்கள் கதாபாத்திரத்துக்கும் வந்திருக்கு. கொஞ்சமானும் நல்ல குணம் வந்திருக்கக் கூடாதோ? :))) நேத்திக்கெல்லாம் ஜேகேசி சாரைக் காணோமே.

    இன்னிக்கும் எல்லோரும் கருத்துப் போட முயன்று போகாததால் அதிகம் வரலைனு நினைக்கிறேன். எனக்கே சரியாகிவிட்டபடியால் (சாதாரணமா நானெல்லாம் புலம்பிட்டிருப்பேன்.) மத்தவங்களுக்கும் விரைவில் சரியாகிடும். பிரார்த்தனைகள்.

    ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் நமஸ்காரங்கள்.

    பதிலளிநீக்கு
  8. வருதானு பார்க்க முதலில் போட்டிருந்த ஆங்கிலக் கருத்து இப்போ காணோமே? !!!!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா இடமும் தோண்டித் துருவிட்டேன். எங்கே போச்சுனு தெரியலை. பின் தொடரும் ஆப்ஷன் நேத்திக்கே போட்டுட்டதாலே இன்னிக்குக் கமென்ட்ஸ் எல்லாம் நேரே மெயிலுக்குத் தான் போயிருக்கு. இதை மட்டும் காணோம். மெயிலிலும் இருந்தது. இப்போக் காணோம். :(((( என்னவோ மர்மம். ஏதோ அமானுஷ்ய நடமாட்டமோ?

      நீக்கு
    2. கௌதமன் சார் எழுதும் தொடர்கதை மாதிரிச் சொல்றீங்களே கீசா மேடம்..

      நீக்கு
  9. ஸ்ரீரங்கம் கோவில் சன்னிதிகள் விவரிப்பு, வேதாந்த தேசிகர் பாசுரம் எல்லாம் கண்டேன். அருமை.

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. சரணம் சண்முகா... வாங்க துரை செல்வராஜு சார்.. நலமா?

      நீக்கு
  11. காலையில் இருந்து இணையம்
    சரியில்லை...

    அன்பின் நெல்லை அவர்களுக்கு வணக்கம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய அலைஞ்சிருக்கீங்க... இப்போ நார்மலா ஆயிடுச்சா?

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. திருவரங்கம் கோயிலை மிக அழகாய் ஒவ்வொரு சன்னதி பற்றி அருமையாக சொன்னீர்கள். நடந்து போய் ஒவ்வொரு சன்னதியாக வலம் வர இறைவன் அருள வேண்டும். முன்பு நிறைய தடவை பார்த்து இருக்கிறேன், நினைவில் இல்லை. இப்போது ஜூன் மாதம் ரங்கனையும், தாயாரை மட்டும் வீல் சேரில் போய் தரிசனம்.

    ஒருமுறை சக்கரத்தாழ்வார் சன்னிதிக்குள் நுழைய முடியவில்லை அவ்வளவு கூட்டம் வலம் வந்து கொண்டு இருந்தார்கள் இடைவெளியே இல்லை வலம் வரும் அன்பர் கூட்டத்தை தள்ளிக் கொண்டு உள் நுழைய முடியாமல் வெளியில் வந்து விட்டோம்.


    நீங்கள் போன போது செல் கொண்டு போக தடை இல்லை. இப்போது தடை விதித்து இருப்பதாய் செய்தியில் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய சன்னிதிகள். தற்போதெல்லாம் அனேகமாக எல்லாச் சன்னதிகளும் திறந்திருக்கின்றன. நமக்குத்தான் பொறுமை வேண்டும்

      வார நாட்களில் கூட்டம் குறைவு. நிதானமாகச் சேவிக்க இயலும். இன்னும் கோயிலுக்கு வெளியே இருக்கும் சில கோயில்களைக் காண வேண்டும்..

      நீக்கு
  14. ஃபேஸ்புக்ல தற்பொழுது வெளியான பதிவு ஒன்றில் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார் நேற்று (4.9.26) மாலை 3 மணி அளவில் காலமானார் என்று அவரது மகன் செய்தி பதிந்துள்ளார். எ பி சார்பில் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. உண்மையிலேயே தாங்க முடியவில்லை.

      நீக்கு
    2. very noble person. yesterday I remembered him and thought what happened? Hearty condolences.


      நீக்கு
    3. ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் மறைவு பற்றிய உங்களது இந்த செய்தியை அறிந்ததும் மனதிற்கு மிகுந்த வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. ஏற்றுக் கொள்வதே கடினமாக உள்ளது. கடந்த 2 தேதி வரை அவர் இங்கு தவறாது வந்திருக்கிறார்.இன்றைய பதிவுகளை படிக்கலாம் என வந்த என்னால் தொடர்ந்து படிக்க கூடஇயலவில்லை.

      அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன். அவரின் மறைவை தாங்கும் சக்தியையும், இறைவன் அவர் குடும்பத்திற்கு தரவேண்டுமென்றும் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.

      நீக்கு
    4. தனிப்பட்ட மு/றையில் எனக்குப் பல செய்திகளைப் பகிர்ந்து நான் எழுதுவதற்கு மறைமுகமாக உதவி இருக்கார். பல அபூர்வக் கோயில்கள், அவற்றின் பழக்க, வழக்கங்கள் எனக் குறிப்ப்புகள் கொடுத்திருக்கார். என் தங்கை (சித்தி பெண்) கணவர் அவருடன் வேலை செய்தவர். திருவனந்தபுரத்திலே தான் அவரும் இருக்கார். என்னை கீதா மாமி என அழைத்து அடிக்கடி வம்புக்கு இழுப்பார். இனி அதெல்லாம் இருக்காது. உடல்நிலை மோசமாகிக் கொண்டு வருவதை உணர்ந்திருப்பாரோ? கொஞ்ச நாட்களாக கலகலப்பு இல்லாமல் இருந்தார். ஆனால் நேற்று அவர் வராதது எனக்கு ஏனோ உறுத்தலாக இருந்தது. என்றாலும் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. :( அவர் குடும்பத்துக்கு மீண்டும் அனுதாபங்கள். அவர் ஆன்மா சத்கதி அடையப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    5. /நேற்று அவர் வராதது எனக்கு ஏனோ உறுத்தலாக இருந்தது. என்றாலும் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. :( /

      ஆம் கீதா சாம்பசிவம் சகோதரி. நீங்களும் நேற்று யதேச்சையாக கேட்டிருந்தீர்கள். சகோதரர் ஸ்ரீராம் அவர்களும் வியாழன் பதிவில் அவரை இதுவரை காணோமே என கேட்டிருந்தார். என்னாலும் அவரின் இந்த தீடீர் முடிவை ஏற்க இயலவில்லை. சனிதோறும் எபியில் வரும் அவரின் "நான் படிச்ச கதையை" படிக்க வந்தேன். அதை சனியன்று வந்த அவரின் மறைவு செயதி எனக்கும் மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. அவருக்கு என் அஞ்சலிகள். அவரின் குடும்பத்திற்கு என் அனுதாபங்கள். அவர் பிரிவை தாங்கும் சக்தியை இறைவன் அவர் குடும்பத்துக்கும், நமக்கும் தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  15. வேதாந்த தேசிகரின் பிரபந்தமும் அதன் விளக்கமும் அருமை. பாடலை பாடி தீராத வினைகளை தீர்க்க தொழுது கொண்டேன்.
    படங்கள், விவரங்கள் எல்லாம் அருமை. கோயிலுக்கு போகும் போது கையேடாக எடுத்து சென்றால் எல்லா சன்னதிகளையும் விடாமல் தரிசிக்கலாம்.

    நீங்கள் இரண்டு நாள் பார்த்தது போல நிதானமாக பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவு பலருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

      நீக்கு
  16. உடல் நலம் இல்லாமல் இருந்து இருக்கிறார் போலும். ஸ்ரீராம் கூட ஜெயக்குமார் சாரை காணவில்லையே என்று கேட்டு இருந்தார்.

    வயதானலும் கதைகளை, கட்டுரைகளை, பாசிடிவ் செய்திகளை பகிர்ந்து வந்தார்.

    அவருக்கு அஞ்சலிகள். அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் ஆறுதலை தர வேண்டும்.
    என்றும் நினைவில் இருப்பார்.



    பதிலளிநீக்கு
  17. திருவரங்கம் கோவில் பிரகாரங்கள் சந்நிதிகள் பற்றி விரிவாக தந்துள்ளீர்கள்.

    ஐந்தாம் பிரகார கோபுரபடம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  18. அருமை நண்பரின் இழப்பு அதிர்ச்சியாக இருக்கிறது. மிகவும் வருத்தமான செய்தி. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
    ஓம் சாந்தி.

    பதிலளிநீக்கு
  19. கௌதமன் சார், ஜெயகுமார் சாரின் மறைவைப் பகர்ந்ததும், தவறாக எழுதிவிட்டாரோ இல்லை இது வேறு ஜெயகுமாரோ என நினைத்தேன். மனதை மிகவும் பாதிக்க வைத்த செய்தி. எண்பது வயதாக இருந்தாலும், மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

    கேரள கோயில்கள், என்னுடைய கணிணி ப்ரொஃபஷனல் அனுபவங்கள் ஆகியவற்றை எழுதி, அவர் படிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்.

    சமீப பதிவில் முதன் முறையாக, சனி ஞாயிறு மற்றும் படப் பதிவுகள் எபிக்கு சிறப்பு சேர்ப்பதாக எழுதியிருந்தது ஆச்சர்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  20. சனிக்கிழமை எபி வரும்போது அவர் நினைவும் கூடவே வரும்.

    அவரைப் பிரிந்து வாடும் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!