இராஜமகேந்திரன் 1058-59களில் சோழ இளவரசனாகப் பட்டம் சூட்டப்பட்டான். (அதற்கு முன்பு மாறவர்மன் பராக்கிரம சோழ பாண்டியன் என்ற பெயரில் பாண்டிய நாட்டிற்கு அரசனாக இருந்தவன் இவன்). இராஜமகேந்திரன் 1063 ஆரம்பத்தில் இறந்திருக்கவேண்டும், அதனால்தான் ஏப்ரலில் அடுத்த தம்பியாகிய வீர ராஜேந்திரன் பட்டம் பெற்றான் என்று பார்த்தோம். இந்த அனுமானம் சரிதானா என்பதை அடுத்த வாரம் பார்ப்போம் என்று சென்ற வாரத்திற்கு முந்தைய வாரம் முடித்திருந்தேன். ஆனால் அதனைப் பற்றி எழுத சென்ற வாரம் இடம் இல்லை. காரணம் அந்தப் பகுதியை முன்பே எழுதி முடித்திருந்தேன்.
இதுவும் இறைவன் செயல்தான் என்று நினைக்கிறேன். காரணம் சோமஸ்கந்தருடன் தொடர்புடையது இந்த வரலாறு என்பது என் அனுமானம்.
துங்கபத்ரா நதியின் வடகரையில் பெலகோலா என்னும் பகுதியில் (இதனை கல்வெட்டுகள் பெலவோலா எனக் குறிப்பிடுகின்றன) கவர்வாட் என்ற கிராமத்தில் கன்னட மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட து. அதில் குறிப்பிடப்படுவதாவது.
இந்தக் கல்வெட்டு மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லனின் மகனாகிய இரண்டாம் சோமேஸ்வரனால் 1071ல் வெட்டப்பட்டது. கல்வெட்டில் ஆகவமல்லன் காலத்தில் நடந்த போர் நிகழ்ச்சி ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவமல்லன் 1068ல் இறந்துவிட்டதால், கல்வெட்டு குறிப்பிடும் நிகழ்வு அதற்கு முன்பு நடந்தது என்று கொள்ளலாம்.
ஆகவமல்லன் பெயர் முதலாம் சோமேஸ்வரன். அவனுடைய ஆட்சிக்காலத்தில் பெலகோலா பகுதியில் நிறைய ஜைன கோயில்கள் இருந்தன. இந்தப் பகுதியில் சோழ பாண்டியன் என்ற பெயர் கொண்ட மன்னன் படையெடுத்து வந்து, அங்கிருந்த ஜைனக் கோயில்களை அழித்தான். பெலகோலா பகுதியைத் தீக்கிரையாக்கினான். இந்தப் பாபச் செயல்களுக்குப் பரிசாக, அந்தச் சோழபாண்டிய சோழ மன்னன், ஆகவமல்லனின் வாளுக்கு இரையாகி, தன் தலையை இழந்து ஆவி போக்கி, போர்க்களத்தில் பைசாசமானான். பிற்காலத்தில் கிபி 1071ல் இலக்ஷ்மணன் என்பான் முன்பு சோழபாண்டிய சோழமன்னனால் இடிக்கப்பட்ட கோயில்களை சீர்படுத்தினான்.
ஆண்டுக் கணக்கை வைத்துப் பார்க்கும்போது, மாறவர்மன் பராக்கிரம சோழ பாண்டியனே, படையெடுத்து வந்த இந்த சோழ பாண்டியன் என்று புலப்படும். அவனே இராஜமகேந்திர சோழனாவான். இவன் 1058-59 முதல் 1063 வரை ஆட்சி புரிந்திருக்கிறான். இவன் இரண்டாம் இராஜேந்திர சோழனுடன் இணைந்து மேலைச் சாளுக்கியர்களுடன் முடக்காற்றில் போர் புரிந்தான் என்று சரித்திரம் கூறுகிறது. இவன் திருவரங்கம் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்தான் என்று ஒட்டக்கூத்தர் கூறுவர். இவன் பெயரால்தான் இராஜமகேந்திரன் திருச்சுற்று அமைந்துள்ளது.
ராஜமகேந்திர சோழன் பற்றி எழுத ஆரம்பித்ததும் வேறு சில செய்திகளும் என் நினைவுக்கு வருகின்றன. விலகிச் செல்வதாகத் தோன்றினாலும் தெரியாத ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம்.
திருவரங்கம் கோயிலில் கருவறையைச் சுற்றியுள்ள முதல் திருச்சுற்று அல்லது பிராகாரம் தர்மவர்மா திருச்சுற்று. இரண்டாவது திருச்சுற்று இராஜ மகேந்திரன் அமைத்த திருச்சுற்று. இதனை, விக்கிரம சோழ உலாவும், திருவரங்க கோயிலொழுகும் உறுதி செய்கின்றன.
கோயிலொழுகில், ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் ஏற்படும் வெள்ளத்தினால், திருவணுக்கன் திருவாசல் வரை (கோயிலின் உட்பகுதி) தண்ணீர் புகுந்து தரைப்பகுதி சேதமடைந்துகொண்டிருந்தது. அந்த நிலை கண்டு, திருவனந்தாழ்வான் கண்வளர்ந்தருளுகிற இடம் (அரங்கன் அரவணை இருக்கும் இடம்), மற்றும் அதைச் சுற்றியுள்ள கோயில் பகுதிகளை, நாராயணர், நாபி நளிகர், நாகசயனர், நாரஸிம்ஹர் ஆகிய சன்னதிகள் இருக்கும் தரைமட்டம் வரை உயர்த்தி கட்டி, தூண்கள் அமைத்து, தரைப்பகுதி படுப்பித்து செப்பனிட்டான். என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த ராஜமஹேந்திரன் திருவீதியில்தான் (அதாவது இரண்டாம் பிரகாரம்) கிளி மண்டபம், அர்ஜுன மண்டபம் போன்றவை அமைந்திருக்கின்றன. வைகுண்ட ஏகாதசி சமயத்தில் நம்பெருமாள் இந்தத் திருவீதியில்தான் வருவார்.
பின்னொரு சமயத்தில் இராஜமகேந்திரன் திருவீதி படங்களை பகிர்கிறேன்.
இராஜமகேந்திர சோழன் பெலகோலா போரில் சாளுக்கிய அரசன் ஆகவமல்லனால் (முதல் சோமேஸ்வரன்) சிரமறுத்து கொல்லப்பட்டான் என்று பார்த்தோம்.
அதனால் இரண்டாம் இராஜேந்திர சோழன், தன் அடுத்த தம்பியான வீரசோழனுக்கு பட்டம் கட்டி, அபிஷேகப் பெயராக ‘வீர ராஜேந்திரன்’ என்ற பெயர் அளித்தான். அப்போது மதுரையை ஆட்சி புரிந்தது யார் என்று பார்த்தால், இந்த வீர ராஜேந்திர சோழனின் மகன் ‘கங்கைகொண்டான்’. (காரணம் இராஜமகேந்திரனை பாண்டிய நாட்டிலிருந்து சோழ நாட்டுக்குக் கொண்டுவந்து பட்டம் கட்டியதால்). கங்கைகொண்டான், ஜடாவர்மன் சோழபாண்டியத் தேவன் என்ற பெயரில் பாண்டிய நாட்டுக்கு அரசனாக இருந்தான்.
முதலாம் ராஜேந்திர சோழனுக்கு ஒரு சகோதரன் இருந்தான் என்று பார்த்தோம். அவன் பெயர் கங்கைகொண்டான். அவன் அனேகமாக பஞ்சவன் மாதேவியின் மகனாக இருந்திருக்கவேண்டும். அரசுக்கட்டில் ஏறவில்லை. ராஜேந்திர சோழனுக்குப் பின் வந்த சோழ அரசர்கள் (அதாவது ராஜேந்திரனின் மகன்கள்), தங்கள் கல்வெட்டுகளில் சிறிய தாதை என்று கங்கைகொண்டான் பெயரைக் குறிப்பிடுகின்றனர்.
இந்தக் கல்வெட்டுகளைப் படித்துப் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம். (கருணாநிதியை கலைஞர், முத்தமிழறிஞர் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். அவருடைய இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. ஐம்பது ஆண்டுகள் கழிந்தால் இந்த நான்கு பெயர்களில் எது இயற்பெயர், புனைப்பெயர், விருது, பட்டம் என்பதெல்லாம் கண்டுபிடிப்பது கடினமாகிவிடும். கண் முன் தெரியும் உதாரணம் என்பதால் குறிப்பிட்டேன்). மணிமங்கலம் கல்வெட்டில் (இராஜாதிராஜன் ஆட்சியாண்டு 29) சிறிய தந்தையை வானவன் என்றும் அவர் மகனை, அதாவது தமையனை வல்லவன் என்றும் குறிப்பிட்டுள்ளது. கூழம்பந்தல் கல்வெட்டில் (33வது ஆட்சியாண்டு), சிறிய தந்தையை கன்னிகாவலன், தலைநகரில் பதவி என்றும், தமையனை தலைவன் என்ற பெயரில், தென் மண்டலத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஆட்சி செய்ததால் குறிப்பிட்டுள்ளனர். இரண்டாம் இராஜேந்திரனின் மணிமங்கலம் கல்வெட்டு அவனது 4ம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட து. அதில் சிறிய தந்தை கங்கைகொண்டான், பட்டப்பெயர் இருமுடிச்சோழன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் இராஜேந்திரனின் 9ம் ஆட்சியாண்டில் திருமழபாடியில் உள்ள கல்வெட்டில், சிறிய தந்தை கங்கைகொண்டான், பதவி/பட்டப்பெயர் – இருமுடிச் சோழன் என்றும், தமையன் ஆளவந்தான், அவனது பட்டப்பெயர் இராஜாதிராஜன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டுகளில், ஒருவரின் பெயர் இல்லாதிருந்தால், அவர் அதற்கு முன்பு மறைந்துவிட்டார் என்று வரலாற்றாசிரியர் கொள்கின்றனர். உதாரணமாக, வீர ராஜேந்திரனின் இரண்டாம் ஆண்டு கல்வெட்டு திருவெண்காட்டில் உள்ளது. அதில் சிறிய தந்தை பெயர் இல்லை, ஆனால் முதலில் தமையன் பெயர் ஆளவந்தான், பட்டப்பெயர் இராஜாதிராஜன் என்று உள்ளது. அதனால் அதற்கு முன்பே கங்கைகொண்டான் மறைந்துவிட்டான் என்று எடுத்துக்கொள்ளணும்.
இந்தக் கல்வெட்டுகளின் மூலம்தான், ராஜேந்திர சோழனுக்கு ஒரு சகோதரன் இருந்தான் என்றும், அனுமானம் மூலம் அந்தச் சகோதரன் பஞ்சவன் மாதேவிக்குப் பிறந்திருக்கலாம் என்றும் சொல்கின்றனர். சகோதரன் கங்கைகொண்டானின் மகன் பெயர் ஆளவந்தான். இருவருமே நல்ல பதவிகளில் இருந்திருக்கின்றனர், ஆனால் ஆட்சி உரிமை இல்லை.
இதையெல்லாம் எழுதிக்கொண்டு வரும்போது, திரும்பத் திரும்ப சோழ மன்னர்களின் பெயர்கள் இராஜேந்திர சோழன் காலத்திலிருந்து சாளுக்கிய சோழன் காலம் வரையில் பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லாப் பெயர்களும் ஒரே மாதிரித் தோன்றின.
இந்தப் பகுதியை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் ஸ்ரீராமும் அவர் பாஸும் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். எத்தனையோ வேலைகள் இருந்தும் பத்து பதினைந்து நிமிடங்கள் இருந்தார்கள்.
சென்ற வாரத்தில் சோமஸ்கந்தர் கோயிலில் இருக்கும் மீன் புடைப்புச் சிற்பத்தைப் பகிர்ந்திருந்தேன். சோழர் கட்டிய கோயில் போல் தோற்றமளிக்கும் இதில் பாண்டியன் சின்னமான மீனா? என்று.
இராஜமகேந்திரன், மும்முடிச் சோழன் என்ற பெயரால் அறியப்பட்டான் (ராஜராஜ சோழனுக்கு அப்பெயர் உண்டு). காரணம் இவன், பாண்டிய நாட்டுக்கு அரசனாகவும் பிறகு சோழ தேசத்து அரசனாகவும் பதவி வகித்ததால். அதுபோல, சோமஸ்கந்தர் கோயிலுக்கும் சோமேஸ்வரனுக்குமே (சாளுக்கிய அரசன்) தொடர்பு இருக்கும் என்று தோன்றுகிறது.
சோமஸ்கந்தர் கோயிலுக்குள் நுழைந்துவிட்டோம். ஷிவண சமுத்திரம் பகுதியில் அமைந்திருக்கும் கோயில்கள் இவை (மத்திய ரங்கநாதர் கோயில் உட்பட). இந்த ஷிவண சமுத்திரம் பகுதி, கொள்ளேகால் தாலுக்காவில், காவிரி ஆற்றால் ஏற்பட்ட 17 கிமீ நீளம் மற்றும் ஐந்து கிமீ அகலமும் உள்ள ஒரு தீவுப்பகுதி. இப்போ அது தீவுப் பகுதி மாதிரியான தோற்றம் தரவில்லை.
முழுவதும் காட்டுப்பகுதியாக இருந்த இந்த நிலத்தை கங்கர்கள், சோழர்கள் சரி செய்து கோயில்களைக் கட்டுவித்தார்கள். இந்தப் பகுதியில் அழிந்துபட்ட கோட்டையும், அழிந்துள்ள மண்டபங்களும் முன்பு நன்றாக இருந்ததற்குச் சாட்சியாக இன்னும் இருக்கின்றன.
இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீசக்ரம் மிகவும் பெருமை வாய்ந்தது. அதனால் கோயிலையே ஸ்ரீ சக்ரத்துடன் கூடிய ஸ்ரீ ப்ரசன்ன மீனாக்ஷி ஸ்ரீ சோமேஸ்வரர் கோயில் என்றே அழைக்கின்றனர். 12ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சோழ-பல்லவ மன்னன் திருவீர ரத்நம் (யார் என்று கண்டுபிடிக்கணும்) இந்தக் கோயிலைச் சீர் செய்தானாம். அதற்கு முன்பு வரை இந்தக் கோயில் உலக மண்டீஷ்வரர் மற்றும் திருவை ஆள்வாரீஸ்வரர் கோயில் என்றே அறியப்பட்டதாம். சைவ ஆகமசாஸ்திர முறையில் கட்டப்பட்டது இந்தக் கோயில். பொதுவா சோழ அரசர்கள் காலத்தைய சிறிது பெரிய கோயில் அமைப்பைக் கொண்டிருக்கிறது. தென்கிழக்கில் மடப்பள்ளி, வடகிழக்கில் யாகசாலை, தென் மேற்கில் ஐந்து லிங்கங்கள் (தஞ்சை பெரியகோயிலில் வெளிப்பிராகாரத்தில் வரிசையாக லிங்கங்கள் இருப்பது போல, காஞ்சி கைலாசநாதர் கோயிலில் வெளியில் 7-8 லிங்கங்கள் தனித் தனி சந்நிதியில் இருப்பது போல), தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், த்வஜஸ்தம்பம், நந்தி, சுப்ரமண்யர், அழகிய கணபதி, துவாரபாலர்கள் போன்றோரைக் கொண்டுள்ளது இந்தக் கோயில்.
இந்தக் கோயில் அமைந்த பகுதியில் காளியின் ஆதிக்கம் அதிகமாக இருந்த தாம். ஆதி சங்கராச்சார்யார், இந்தப் பகுதிக்கு வந்த போது ஸ்ரீசக்கரத்தைச் செய்து காளியின் உக்கிரத்தைத் தணித்தார் என்று சொல்கின்றனர். மற்றபடி இந்தக் கோயில் சம்பந்தமான புராணக் கதையை இங்கு நான் விவரிக்கவில்லை.
ஆதிசங்கராச்சார்யார், காஞ்சி காமாக்ஷி கோயில், திருச்சி அகிலாண்டேஸ்வரி கோயில் (இங்கு ஸ்ரீசக்ரம், தேவியின் காது தோடுகளாக இருக்கின்றது என்பர்), மற்றும் சிதம்பரத்தில் ஷிவ சக்ரம் மற்றும் ஸ்ரீ சக்ரம் இரண்டையும் இணைத்ததாக ஸ்தாபனம் செய்தார் என்று சொல்வர். கர்னாடக பகுதியில் கொல்லூர் மற்றும் ஷிவண சமுத்திராவில் மாத்திரம் ஸ்ரீசக்ரத்தை ஸ்தாபித்திருக்கிறார். இங்குள்ள ஸ்ரீசக்ரம், 1 ½ அடி குறுக்களவு கொண்டதாக அமைந்திருக்கிறது.
இது கோயிலில் நாங்கள் நுழைந்த வாயில். (ஆனால் இது கோயிலின் பின்பக்க வாசல்)
கோயிலுக்குள் நுழைந்த பிறகுதான் எதிர்ப்புறத்தில் இன்னொரு பெரிய நுழைவாயில்
இருப்பதைப் பார்த்தேன். அங்கு சென்று படங்கள் எடுத்துவந்தேன். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்திருந்தாலும் கல்லால் செய்யப்பட்ட
நுழைவாயில் என்பதால் இன்னும் கம்பீரமாக நிற்கிறது. நிறைய சிற்பங்களைக் காணவில்லை. இதுதான்
கோயிலின் நுழைவாயிலாக இருந்திருக்கிறது.
அந்த வாயிலில் இருந்த அலங்கார வளைவுகள்
சிற்பங்கள் இல்லாவிட்டாலும் காலத்தால் பழுதுபட்டிருந்தாலும் கம்பீரமாகக் காணப்பட்ட நுழைவாயில் இது.
இந்தப் பகுதியில்தான் கிராமம் அமைந்துள்ளது என்று நினைக்கிறேன். அந்தக்
காலத்தில் இது எல்லா ஊர்களிலும் காணப்படுவது போல, பிராமணர்கள் வசித்த தெருவாக இருக்கவேண்டும்.
கோயில் மரக் கதவுகளில் அழகிய சிற்பங்கள். ஆனால் இவை சமீப காலத்தையது.
மீனாட்சி அம்மன் சன்னிதிக்கு முன்பு இருக்கும் துவார பாலகிகள். (அல்லது
இவர்களுக்கு வேறு பெயர்கள் உண்டா? மதுரை மீனாட்சிதான் சொல்லணும்)
அம்மன், பிரசன்ன மீனாக்ஷி, சுமார் 4 ½ அடி உயரத்தில் நான்கு தோள்களுடன்
காணப்படுகிறாள். வலது கரம் அபய முத்திரையுடனும் இடது கரம் வரத முத்திரையுடனும் காணப்படுகிறது.
கூந்தல் பாம்பைப்போன்று முடிந்திருக்கிறது. கிரீடத்துடனும் விரல்களில் அழகிய மோதிரங்களுடனும்,
தீட்சண்யமான பார்வை ஸ்ரீசக்ரம் நோக்கியும் காணப்படுகிறது. இந்த தேவி, மதுரை மீனாட்சியம்மனை
ஒத்து இருக்கிறாள் என்கின்றனர் (மீன் சின்னம் காணப்பட்ட தன் காரணம் இதுவாக இருக்குமோ?)
அதற்கேற்ப கையில் கிளியுடன் காட்சி தருகிறாள்.
நிறைய கோயில்களில், ஏன் மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலிலும், அம்பாளை
நிம்மதியாக தரிசனம் செய்வது கடினம். காரணம் பக்தர்களின் கூட்டம். ஆனால் இந்தக் கோயிலில்
நிம்மதியாக தரிசனம் செய்ய முடிந்தது.
பொதுவாக நாம் சோழர் கோயில்களில் காணும் படி அமைப்புகள்
சிவலிங்க சன்னிதிகள். சுமார் ஐந்து உள்ளன. ஒவ்வொரு சன்னிதியின் எதிரிலும் நந்திதேவர்.
இது யானையும் சிலந்தியும் ஈசனை வழிபட்ட சிற்பமாகத்தான் எனக்குத் தெரிகிறது. திருச்சி பகுதி வரலாறு. எங்கோ கர்நாடக கோயிலில்
விநாயகர் சிலை. வேடுவர் கண்ணப்ப நாயனார் சரித்திரச்
சிற்பம்
பழைமையான கோயிலை தரிசித்த திருப்தியுடன் நாங்கள் வெளியில் வந்து எங்கள் பயணத்தை அன்று தொடர்ந்தோம்.
எவ்வளவோ சோழர் கோயில்கள் தமிழகம் மற்றும் அதற்கு வடப் பகுதியில் நிறைந்து இருக்கின்றன. எத்தனை கோயில்களைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியவில்லை.
அடுத்த வாரம் இதுவரை பார்த்த சோழர் கோயில் தொகுப்பைக்
காண்போம். அதற்குப் பிறகு வேறு ஒரு அரச பரம்பரையோ இல்லை வேறு வகையான இடங்களையோ எழுத
நினைக்கிறேன். தொடர்ந்திருங்கள்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!