எஸ்ரா படம் எவ்வளவு தேடினாலும் ஒரே மாதிரிதான் கிடைக்கிறது.

"நவீனத்துவம், பின் நவீனத்துவம், யதார்த்தவாதம், மேஜிகல் ரியலிசம் என்பன போன்ற வார்த்தைகளும் அவை சொல்ல வரும் விஷயங்களும் என்னைப் போன்ற சாதாரண வாசகனுக்குச் சுத்தமாகப் புரியவில்லையே..விளக்க முடியுமா" என்ற அவரின் கேள்விக்கு எஸ்ராவின் பதில்:
"நவீனத்துவம் என்பது வாழ்வை விஞ்ஞான பூர்வமாக அணுகி ஆராய்வது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில் புரட்சிக்குப் பிறகு உருவான சிந்தனை. உதாரணத்துக்கு முந்தைய காலங்களில் கடவுள் கண் முன்னே தோன்றினால், பக்தன் உருகி, தன்னை ஒரு கடையேனாகக் கருதி காலில் விழுந்து வணங்குவான். அது மரபுப் பார்வை. அதே கடவுளை, புதுமைப்பித்தன் தனது 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' சிறுகதையில், காபி வாங்கிக் கொடுக்க ஹோட்டலுக்கு அழைத்துப் போவதுடன், உமது லீலைகளை எல்லாம் பில்லுக்குப் பணம் கொடுப்பதற்குக் காட்டும் என்று பகடி பேசுகிறார். இதுதான் நவீனத்துவம். வாழ்வின் சிக்கல்களை விஞ்ஞானபூர்வமாகப் பேசியது நவீனத்துவம்.
பின்நவீனத்துவம் ... இருபதாம் நூற்றாண்டின் சிந்தனைத் தளம். இலக்கியம், சினிமா, இசை, கட்டடக் கலை என எல்லாத் துறைகளிலும் பின் நவீனத்துவம் உண்டு. நவீனத்துவம் போதவில்லை என்று இந்தக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஒரு வார்த்தையில் சொல்வதாயின், சிதறடிப்பது என்பதுதான் அதன் ஒரே நோக்கம்.ஒரே கதைக்குள் நாலைந்து கதைகள் சொல்வது, ஒரே சினிமாவில் வேறுபட்ட நாலைந்து கதைப் போக்குகளைச் சரடுகளாக உருவாக்கி, கதையின் மையத்தைச் சிதறடிப்பது. (Babel-Alejandro Gonzalez Inarritu), புதிர்மையை உருவாக்குவது,(Inception -Christopher Nolan), நகல் உண்மைகளை அடையாளம் காண்பது, பாலியல் சிக்கல்களை நுணுகி ஆய்வது என அதற்குப் பல தளங்கள் உண்டு. பின்நவீனத்துவம், வாசகனை எழுத்தாளனுக்கு இணையாக்கியதுடன் கதையை விருத்தி செய்வதே வாசகன் வேலை என்கிறது.
யதார்த்தவாதம்..... பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான கோட்பாடு. அன்றாட வாழ்க்கையை அதன் உட்புதைந்திருக்கும் உண்மைகள் புலப்படுமாறு எடுத்துச் சொல்வது யதார்த்தவாதம். மனிதனின் மேம்பாட்டுக்கும் கீழ்நிலைகளுக்கும் அவனது செயல்களே காரணம் என்கிறது யதார்த்தவாதம். கு. அழகிரிசாமியின் கதைகளைச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.
மேஜிகல் ரியலிசம்.... உள்ளதை உள்ளபடியே காட்டும் மாயக் கண்ணாடி முன்பாக நின்று, அரக்கனின் உயிர் எங்கே இருக்கிறது என்று கேட்க, அது பாதாள லோகத்தில் உள்ள கிளியின் உடலுக்குள் ஒளிந்து இருக்கிறது என்று அடையாளம் கொடுக்கிற கதையைக் கேட்கையில், ஏன்,எப்படி என்று லாஜிக் கேட்காமல், அந்த விந்தையில் மயங்கிப் போயிருந்தோம் இல்லையா? அதுதான் மேஜிக் ரியலிசம்! வாழ்வில் நாம் இழந்துபோன வித்தைகளை, மாயத்தைக் கதையில் மறுபடி உருவாக்குவதே மேஜிகல் ரியலிசம்!"
சொன்ன எஸ்ராவுக்கு நன்றி. பிரசுரித்த விகடனுக்கு நன்றி. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பகிர்ந்து விட்டேன் விகடனுக்கு நன்றியுடன்.
சென்ற வாரம் ஜெ மோ மதுரையில் இதே நவீனத்துவம் பின்நவீனத்துவம் பற்றிப் பேசியதாக எங்கள் மதுரை நிருபர் (!) குறிப்பிட்டிருந்தார்.
