வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

ந.து., பி.ந.து., இலக்கியப்பதிவு..!


நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்கிற வார்த்தைகளை இலக்கிய உலகில் இலக்கியவாதிகள் அடிக்கடி உபயோகித்துப் பார்த்திருக்கிறேன். நவீனத்துவம் என்பதையாவது யூகிக்க முடிந்தது. இந்த பின் நவீனத்துவம் ஒன்றும் புரியவில்லை. அபபடி என்றால் என்ன என்று தெரியவில்லை என்று சொல்ல வெட்கம்! கையில் கிடைத்த புத்தகம் படிக்கிறேனே தவிர என்ன எது என்று எல்லாம் தெரியாது. இரண்டு வாரங்களுக்குமுன் எஸ் ராமகிருஷ்ணன் விகடனில் சொல்லும் பதில்களில் அடுத்த வாரம் இது சம்பந்தமான கேள்விகள் வருகிறது என்றதும் (இதே பகுதியில்தான் ஒரு கேள்விக்கு சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த (எழுத்துப் புதிர்) வரிகளைக் குறிப்பிட்டிருந்தார்!) அன்று ஆவலாகக் காத்திருந்து காலை கட்டு பிரித்ததும் முதல் விகடன் வாங்கி வந்து விட்டேன். காஞ்சிபுரம் கே மகேஸ்வரனுக்கு நன்றி.


எஸ்ரா படம் எவ்வளவு தேடினாலும் ஒரே மாதிரிதான் கிடைக்கிறது.



"நவீனத்துவம், பின் நவீனத்துவம், யதார்த்தவாதம், மேஜிகல் ரியலிசம் என்பன போன்ற வார்த்தைகளும் அவை சொல்ல வரும் விஷயங்களும் என்னைப் போன்ற சாதாரண வாசகனுக்குச் சுத்தமாகப் புரியவில்லையே..விளக்க முடியுமா" என்ற அவரின் கேள்விக்கு எஸ்ராவின் பதில்:

"நவீனத்துவம் என்பது வாழ்வை விஞ்ஞான பூர்வமாக அணுகி ஆராய்வது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில் புரட்சிக்குப் பிறகு உருவான சிந்தனை. உதாரணத்துக்கு முந்தைய காலங்களில் கடவுள் கண் முன்னே தோன்றினால், பக்தன் உருகி, தன்னை ஒரு கடையேனாகக் கருதி காலில் விழுந்து வணங்குவான். அது மரபுப் பார்வை. அதே கடவுளை, புதுமைப்பித்தன் தனது 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' சிறுகதையில், காபி வாங்கிக் கொடுக்க ஹோட்டலுக்கு அழைத்துப் போவதுடன், உமது லீலைகளை எல்லாம் பில்லுக்குப் பணம் கொடுப்பதற்குக் காட்டும் என்று பகடி பேசுகிறார். இதுதான் நவீனத்துவம். வாழ்வின் சிக்கல்களை விஞ்ஞானபூர்வமாகப் பேசியது நவீனத்துவம்.

பின்நவீனத்துவம் ... இருபதாம் நூற்றாண்டின் சிந்தனைத் தளம். இலக்கியம், சினிமா, இசை, கட்டடக் கலை என எல்லாத் துறைகளிலும் பின் நவீனத்துவம் உண்டு. நவீனத்துவம் போதவில்லை என்று இந்தக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஒரு வார்த்தையில் சொல்வதாயின், சிதறடிப்பது என்பதுதான் அதன் ஒரே நோக்கம்.ஒரே கதைக்குள் நாலைந்து கதைகள் சொல்வது, ஒரே சினிமாவில் வேறுபட்ட நாலைந்து கதைப் போக்குகளைச் சரடுகளாக உருவாக்கி, கதையின் மையத்தைச் சிதறடிப்பது. (Babel-Alejandro Gonzalez Inarritu), புதிர்மையை உருவாக்குவது,(Inception -Christopher Nolan), நகல் உண்மைகளை அடையாளம் காண்பது, பாலியல் சிக்கல்களை நுணுகி ஆய்வது என அதற்குப் பல தளங்கள் உண்டு. பின்நவீனத்துவம், வாசகனை எழுத்தாளனுக்கு இணையாக்கியதுடன் கதையை விருத்தி செய்வதே வாசகன் வேலை என்கிறது.

யதார்த்தவாதம்..... பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான கோட்பாடு. அன்றாட வாழ்க்கையை அதன் உட்புதைந்திருக்கும் உண்மைகள் புலப்படுமாறு எடுத்துச் சொல்வது யதார்த்தவாதம். மனிதனின் மேம்பாட்டுக்கும் கீழ்நிலைகளுக்கும் அவனது செயல்களே காரணம் என்கிறது யதார்த்தவாதம். கு. அழகிரிசாமியின் கதைகளைச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.

மேஜிகல் ரியலிசம்.... உள்ளதை உள்ளபடியே காட்டும் மாயக் கண்ணாடி முன்பாக நின்று, அரக்கனின் உயிர் எங்கே இருக்கிறது என்று கேட்க, அது பாதாள லோகத்தில் உள்ள கிளியின் உடலுக்குள் ஒளிந்து இருக்கிறது என்று அடையாளம் கொடுக்கிற கதையைக் கேட்கையில், ஏன்,எப்படி என்று லாஜிக் கேட்காமல், அந்த விந்தையில் மயங்கிப் போயிருந்தோம் இல்லையா? அதுதான் மேஜிக் ரியலிசம்! வாழ்வில் நாம் இழந்துபோன வித்தைகளை, மாயத்தைக் கதையில் மறுபடி உருவாக்குவதே மேஜிகல் ரியலிசம்!"

சொன்ன எஸ்ராவுக்கு நன்றி. பிரசுரித்த விகடனுக்கு நன்றி. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பகிர்ந்து விட்டேன் விகடனுக்கு நன்றியுடன்.

சென்ற வாரம் ஜெ மோ மதுரையில் இதே நவீனத்துவம் பின்நவீனத்துவம் பற்றிப் பேசியதாக எங்கள் மதுரை நிருபர் (!) குறிப்பிட்டிருந்தார்.


'என்ன சொன்னார் என்று அனுப்புங்கள்' என்று சொன்னோம். 'எழுதி வைத்துக் கொள்ளவில்லை' என்றார். 'அப்படியா, சரி பரவாயில்லை என்ன சொன்னார்னு கொஞ்சம் நீங்களே 'குண்ட்ஸா' எழுதி அனுப்புங்களேன்...அட்லீஸ்ட் சொல்லுங்கள், நான் எழுதிக் கொள்கிறேன்' என்றோம். 'ஏதாவது புரிஞ்சாதானே சொல்றதுக்கு' என்றார். எனவே அதை இங்கு பகிரும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

17 கருத்துகள்:

  1. எளிமையாகத்தான் சொல்லியிருக்கிறார் எஸ்.ரா! பகிர்வுக்கு மிக்க நன்றி! :-)

    பதிலளிநீக்கு
  2. வாசகனை எழுத்தாளனுக்கு இணையாக்கியதுடன் கதையை விருத்தி செய்வதே வாசகன் வேலை என்கிறது.//

    அருமையான எளிமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. //என்ன சொன்னார்னு கொஞ்சம் நீங்களே 'குண்ட்ஸா' எழுதி......!!//

    அதுக்கெல்லாம் அவசியம் என்ன?

    அதான் அவர் வலைத்தளத்திலேயே ஒரு கமா, ஒரு செமிகோலன் விடாமப் போட்டுடறாரே! குன்சா எல்லாம் ஜுஜுபி! நிறைய குண்டே போடுவார் உ.த எ !

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. இனி நாமும் நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்றெல்லாம் எழுத ஆரம்பிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. அஞ்ஞானத்தை விஞ்ஞானம் கொண்டு தாக்கி நவீனம் படைத்தவர்கள் அதே விஞ்ஞானத்தின் வேறு உத்திகளைக் கையாண்டு விஞ்ஞான தத்துவம் பேசுபவர்களை உடைப்பது பின் நவீனத்துவம் என்கிறீர்களா ?

    பதிலளிநீக்கு
  7. இப்போ தான் இதை பத்தி தெரிஞ்சுகிட்டேன்.

    பதிலளிநீக்கு
  8. அருமை. பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  9. "நவீனத்துவம், பின் நவீனத்துவம், யதார்த்தவாதம், மேஜிகல் ரியலிசம் என்பன போன்ற வார்த்தைகளும் அவை சொல்ல வரும் விஷயங்களும் என்னைப் போன்ற சாதாரண வாசகனுக்குச் சுத்தமாகப் புரியவில்லையே..விளக்க முடியுமா"


    .... இதை விட தெளிவாக விளக்கி சொல்ல முடியாது போல. இத்தனை வகைகள் இருக்கின்றன என்றே தெரிந்து கொண்டேன். :-)))

    பதிலளிநீக்கு
  10. அப்பாடி பின் நவீனத்துவம் என்னன்னு இப்பதான் புரிஞ்சுது...

    பதிலளிநீக்கு
  11. இங்க (ஓசி)விகடன் கெடைக்காது..

    பகிர்ந்தளித்தமைக்கு மிகுந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  12. இவ்வரிகள் எந்த தத்துவத்தில் அடங்கும் சார் ............

    ////ஆடை யிழந்து வாடை மறந்து
    கபாலநாடி காட்டும் சன்னலறுத்து சகி
    மாடம் தவிர்த்து மீளு மது
    மதிகெ ட்டோன் சாகுமிடத்து சன்னதி///

    பதிலளிநீக்கு
  13. நல்ல பகிர்வு.

    // 'ஏதாவது புரிஞ்சாதானே சொல்றதுக்கு'//

    நல்ல பதில்:)!

    பதிலளிநீக்கு
  14. நல்ல பகிர்வு... நானும் இது என்னனு யோசிச்சு இருக்கேன்

    பதிலளிநீக்கு
  15. எஸ்.ராவின் பதில்கள் பளிச்...பளிச்.... பகிர்வுக்கு நன்றி!! :-))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!