TV Talk shows. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TV Talk shows. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19.1.12

யானை, கிரிகெட், பட்டிமன்றம், எஸ் எம் எஸ் கட்டணங்கள்...வெட்டி அரட்டை.

       
ஆடாத மனமும் உண்டோ? 
   
தோனிக்கு ஒரு மேட்ச் தடையாம்.... காரணம் மெதுவான ஓவர் ரேட்டாம்...     
    
மொத்த டீமும் தோனியைப் பார்த்துப் பொறாமைப் படும்.
     
திட்டு குறையுமே... ஏதாவது ஐடியா செய்து மொத்த டீமுக்குமே தடை வரும்படி ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்... அடுத்த மேட்ச் விளையாடித்தான் ஆக வேண்டுமா என்ன? (அதுவும் ஊர்ப் பெயரைப் பாருங்கள் - அடிலயிட் (அடி + Laid) ரிசல்ட் தெரியும். பேசாமல் நீங்களே ஜெயித்ததாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவித்து விட்டு கார் விளையாட்டு, மூணு சக்கர சைக்கிள், பனிச் சக்கரச் சறுக்கு என்று போய் விளயாடியாவது பொழுதைக் கழிக்கலாம்.
                             
"ஐ பி எல் வந்ததும் பாருங்கள்.. இவர்கள் எல்லாம் மிகப் பிரமாதமாய் விளையாடுவார்கள் மக்களும் ஆஹா ஓஹோ என்று கொண்டாடுவார்கள்" என்று பிஷன் சிங் பேடி சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது!
********************************
 So & சோ 

  
ஜெயா செய்தியில் துக்ளக் ஆண்டு விழா பற்றிச் சொல்லும்போது ஸோ ஸோ என்று பத்து முறை சொன்னார் அந்தப் பெண் செய்தி வாசிப்பவர். அவர் குறிப்பிட்டது துக்ளக் ஆசிரியர் 'சோ'வை!
**********************************
 ஆன மட்டும் பார்க்கிறார்கள்!  

கேரளாவிலிருந்து யானைகளை வண்டியில் அழைத்து வந்து உலவ விட்டு தமிழக மக்களை பயமுறுத்துவதாக சில மக்கள் சொல்வதை செய்திச் சேனல்கள் காட்டின, சொல்லின.
                  
மனிதர்களை அவை  கொல்வதில்லை என்றாலும் கேஷுவலாக சுற்றி வருகின்றன என்றார்கள். காட்டு யானைகள் என்றால் மனிதர்களைக் கண்டால் ஓடுமே... அல்லது எதிர்க்குமே என்றார்கள். சிலர் அபபடி சர்வ சாதாரணமாக இவற்றை அழைத்து வந்து விட்டுச் செல்வதற்கு சீப்பான விஷயமில்லை யானை என்றும் கருத்து வந்தது.
                     
காடுகளை அழிப்பதிலும் வன விலங்குகளின் இடத்தை மனிதன் ஆக்ரமிப்பதாலும் அவை தற்சமயம் கிராமங்களுக்குப் படை எடுக்கின்றன என்றும் கூடிய விரைவில் நகரங்களுக்குள்ளும் அவை நுழையும் என்று வன ஆர்வலர்கள் சொல்கின்றனராம்.
                   
அப்போ கொஞ்ச நாளில் சென்னைத் தெருக்களிலும் மற்ற இடங்களிலும் ஆடு மாடுகள் மேய்வது போல யானைகள் திரிவதைக் காணலாம் என்று எதிர்பார்க்கலாமா... !    
***************************************
உன்னை வாழ்த்திப் போடுகிறேன்! 


   
இந்தமுறை பழைய முறையில் பொங்கல் வாழ்த்துகள் வாங்கி நண்பர்களுக்கு அனுப்பலாம் என்ற யோசனை இருந்தது. முன்பு போல மூலைக்கு மூலை பொங்கல் வாழ்த்துகள் விற்கும் கடை கிடைக்காததாலும், தேடிச் சென்று வாங்கும் பொறுமை இல்லாததாலும் செய்ய முடியவில்லை. வேலை மும்முரத்தில் முகவரி சேகரித்து வைக்க வேண்டும் என்று நினைத்ததும் மறந்து போனது.

அடுத்த முறையாவது செய்ய வேண்டும்!   
***************************************
  குறுஞ்செய்திக் குமுறல்   


    
தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என்று வந்தால் எஸ் எம் எஸ் ஸுக்கு ரகம் ரகமாகக் காசு வாங்கும் அலைபேசி நிறுவனங்களைப் பார்க்கும்போது மக்கள் அனைவரும் ஒன்றாகப் பேசி முடிவு செய்து அந்த மாதிரி நாட்களில் முன் பின்னாக ஒரு மூன்று நாட்கள் எஸ் எம் எஸ் அனுப்புவதையே சுத்தமாக நிறுத்தினால்  என்ன என்று தோன்றுகிறது. ஒரு நபர் என்றால் ஒரு நபர் கூட எஸ் எம் எஸ் அனுப்பக் கூடாது. முடியுமா?             
**********************************
 பட்டி சுட்டதடா!           
       
  
இந்த முறை சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் அந்த அளவு சுவை இல்லை. குறிப்பாக ராஜா பேச்சில். முன்பெல்லாம் ராஜாதான் கடைசியாகப் பேசுவார். கடந்த சில முறைகளாக பாரதி பாஸ்கர்.

அந்த நேரத்தில் எந்த சேனலைத் திருப்பினாலும் எல்லா சேனல்களிலும் பட்டிமன்றங்கள். எவ்வளவு பேச்சாளர்கள்...எவ்வளவு நடுவர்கள்...தென்றல் தொலைக் காட்சியில் பட்டிமன்றம் மணிக்கணக்கில் நீண்டிருந்தது. ஆனால் ராஜா, பாரதி பாஸ்கர் பேச்சு தவிர வேறு எதையும் கேட்பதில்லை!  
     
நிற்க! 
   
பதினெட்டாம் தேதி காலை எட்டு மணிக்கு சன் டி.வி 'வாங்க பேசலாம்' நிகழ்ச்சியில், 'பன்னிரண்டு' மகத்துவம் பற்றி பாரதி பாஸ்கரும் ராஜாவும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது, ராஜா, ஒரு ரூபாய்க்கு, பன்னிரெண்டனா என்று கூறினார். எந்த ஊரில் இப்படி ஒரு கணக்கு? எங்களுக்குத் தெரிந்து, ஒரு ரூபாய்க்கு பதினாறு அணாக்கள்தான்!     

   
  ***************************************