செவ்வாய், 30 ஜூலை, 2019

கேட்டு வாங்கிப்போடும் கதை : நினைவுகள் - பரிவை சே. குமார்


நினைவுகள்
பரிவை சே. குமார் 


இந்த நினைவுகளை என்ன செய்வது..?

எப்போதேனும் ஏதோ ஒன்றின் முடிவில் இவை முழித்துக் கொள்கின்றன. மறந்தவற்றை மீட்டெடுத்து...  ஆம்... மறந்தவற்றை எப்படி மீட்டெடுப்பது..? மறக்க முடியாமல் மனசுக்குள் அழுத்தி வைத்தவற்றை மெல்ல மேலிழுத்து அதில் நீந்தச் செய்வதில்தான் இந்த மனசுக்கு எத்தனை ஆனந்தம்...?

பள்ளியில் படிக்கும் காலத்தில் கிச்சுகிச்சு தாம்பளம் என விளக்குமாற்றுக் குச்சியை மண்ணுக்குள் மறைக்க, நமக்கு எதிராய் ஆடுபவர் அது இருக்கும் இடம் இதுதான் எனக் கையால் பொத்துவார். அது சரியெனில் அவருக்கு மதிப்பெண்ணும் அடுத்த ஆட்டமும்... சரியில்லை எனில் மதிப்பெண்ணும் ஆட்டமும் நமக்கே...  அப்படித்தான் மனசுக்குள் கிச்சு கிச்சு தாம்பளம் என கண்ணாமூச்சி ஆடுகிறது நினைவு.

ஆச்சு எழுபது வயசு...

இன்னைக்கு மாங்காய் விக்கிற விலை குறித்து மனைவியும் மருமகளும் பேசும் போது ஆறு வயசுல பாலாயி அப்பத்தாவோட மாமரத்துல மாங்காய் களவாண்டு தின்றதைக் கூட இப்போது நினைவிலிருந்து உருவிக் காட்டுகிறது.

பிரஷருக்கு நல்லதாம்... கிலோக் கணக்குல அள்ளிக்கிட்டுப் போறாக... நம்ம வீட்டுலதான் நறுக்கு நறுக்குன்னு இருக்குன்னு யாருமே திங்கிறதில்லை... இருந்தாலும் பொரியல் பண்ணி நாமளாச்சும் சாப்பிடுவோம்ன்னு கொஞ்சம் வாங்கிட்டு வந்தேன்... பாரு... எம்புட்டு நீளம் இருக்குன்னு... என மனைவி கோவக்காயை கூடையில் கொட்டும் போது 'வைக்கோல் படப்பு வேலி'யில் படந்திருந்த கோவைக் கொடியில் பழுத்திருந்த காயைப் பறித்துச் சாப்பிட்ட நினைவை மெல்ல உருவிக் காட்டுவதுடன் 'அன்னைக்கு இதை யாருமே பிரஷருக்கு நல்லதுன்னு திங்கலை... வேலிக்கு வேலி கெடந்துச்சு... அணிலும் கிளியும் கொத்திச் தின்னுச்சுங்க'  என்ற எண்ணத்தையும் சேர்த்தே காட்டுகிறது.

'ஷாம்பு விலை எம்புட்டுன்னு பாத்தியா... என்ன ரேட்டு... என்ன ரேட்டுன்னு' மனைவி புலம்பும் போது ஆவரங்கொலையைப் பிடிங்கி கம்மாக்கரையில் கிடக்கும் செம்பறியங் கல்லில் தேய்த்துச் நுரை நுரையாய் வரும் சாறெடுத்து தலையில் தேய்த்துக் குளித்து குளிர்ச்சியுடன் அழுக்கில்லாத, பொடுகில்லாத, பளப்பளவென முடியை வைத்திருந்ததை ஞாபகத்தில் மெல்லக் கிளப்பி 'இப்ப யாரு வரங்கொலையைத் தேடுறா' ங்கிற ஆதங்கத்தையும் விளைவிக்கிறது.

இப்படித்தான் எதை எடுத்தாலும் அந்தக் கால நினைவு வந்து மெல்ல மேலெழும்பி எங்க கிராமத்துக்கு என்னை இழுத்துச் சென்று விடுகிறது. காராங்காய், சூராங்காய், மஞ்சநெத்திப் பழம், புளியம்பழம்,
ஈச்சம்பழம், கோவைப்பழம், கொடுக்காப்புளி, கொட்டாங்கெழங்கு, வின்னிக்காய்.... ஏன் ஆவரம் பூவைப் பிய்த்துத் தின்றிருக்கிறோம்... 
புளியங்கொழுந்தைத் தின்று இருக்கிறோம்... வேப்பம்பழத்தையும்
தின்றிருக்கிறோம்... கோரைப் புல்லின் குருத்தைத் தின்றிருக்கிறோம்... இன்னும் இன்னுமாய் எல்லாவற்றையும் மனசுக்குள் கிளப்பி நாவில் எச்சில் ஊற வைத்து அழகு பார்க்கிறது நினைவுகள். 

நினைவுகளுக்கு அழிவில்லைதான்... பழசை நினைத்து அழ வைப்பதில் அப்படி என்ன ஒரு ஆனந்தம்..?  என்னைப் பொறுத்தவரை பழைய நினைவுகளுக்குள் மூழ்கும் போதெல்லாம் ஒரு எட்டு நான் பிறந்த கிராமத்துக்குப் போய்விட்டு வரவேண்டும் என்று தோன்றும். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக சொந்த ஊர்ப் பக்கம் போகவேயில்லை. 

நாப்பது வருடமாக பெங்களூர் இந்திரா நகரில்தான் வாழ்க்கை.  அப்பாவின் இறப்பு என் கல்லூரிக் காலத்தில்... அம்மாவின் இறப்பு இருபத்தஞ்சி வருசத்துக்கு முன்னால... அதுதான் நான் கடைசியாக அந்த ஊருக்குப் போனது. பழைய வீடு தம்பி வசம், அண்ணன், தம்பி, அக்காவென யாரோடும் ஒட்டுதல் இல்லை. அம்மாவின் கருமாதிக்கு எல்லாருமாய் சேர்ந்து நின்றது. அதன் பின் சொத்துப் பிரித்தல் என்னும் சடங்கு உறவைப் பிரித்து வைக்க 'போங்கடா உங்க சொத்தும் வேண்டாம்... சுகமும் வேண்டாம்' ன்னு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு வந்தவன்தான். 

நல்லது கெட்டது எதுக்கும் போறதில்லை. என்னைத் தொடர்பு கொள்ள அவர்களிடமோ அவர்களைத் தொடர்பு கொள்ள என்னிடமோ போன் நம்பர் கூட இல்லை.  மனைவியின் உறவுகள் எல்லாமே இந்த இந்திரா நகரில்தான்... படித்து முடித்து வேலைக்காக வந்தபோது நம்ம சொந்தக்காரங்கதான் உனக்கு எதுவும் உதவியின்னா கேளு... செய்வாங்க என அப்பாஅறிமுகப்படுத்தியவர்களின் மகள்தான் என் மனைவி கமலா. கல்யாணம் ரெண்டு குடும்பமும் மனமொத்துத்தான் செய்தார்கள். ஏனோ அம்மாவுக்கு கமலா மீது சற்று வெறுப்பு... எப்போதேனும் ஊருக்குப் போகும்போது அது வெடிக்கும். பின்னாளில் அவள் பெரும்பாலும் வருவதில்லை. இப்போ சுத்தம்... மருமகளும் அவள் சொந்தத்தில்... மொத்தமாய் உறவு அத்துப் போயாச்சு.

'என்ன ரொம்ப யோசனையில இருக்கீக போல' கேட்டபடி காபியை நீட்டினாள் கமலம். பில்டர் காபியில் அவளின் கை மணம் நாசியைத் தாக்கியது.

காபியை வாங்கியபடி 'ஓண்ணுமில்ல... திடீர்ன்னு ஊர் ஞாபகம்...ஒரு தடவை போயி பொறந்த ஊரைப் பாத்துட்டு வரணுமின்னு தோணுச்சு... அதான்...'

'நல்லாயிருக்கு... இந்த வயசுல இனி தனியா இங்கேருந்து அந்த ஊருக்குப் பொயிட்டு வர்றதுன்னா நடக்குற காரியமா... டவுன்ல இருந்து பஸ் வசதியும் இல்லை... ஒரு நல்ல ரோடு கிடையாது... கருவ மரமா  மண்டிப் போயிக் கெடக்கும்... அங்க ஒரு நாள் ரெண்டு நாள் தங்குறப்பவே எனக்கு ஏதோ ஒரு அத்துவான காட்டுக்குள்ள இருக்க மாதிரி இருக்கும்... அப்புடியே போனாலும் உங்களுக்கு விருந்து வச்சி வரவேற்க யாரிருக்கா...? சொல்லுங்க...'

'ஏய் நாம்பொறந்து வளர்ந்த ஊருடியம்மா அது... அத்துவானக் காடுதேன்... நான் சின்னப்புள்ளயா இருக்கும் போது கரண்ட் இல்ல... நம்ம கல்யாணத்தின் போது குண்டுங்குழியுமா இருந்த கப்பி ரோடு கூட அப்ப இல்ல... ஆவாரஞ்செடி நெறஞ்ச கொல்லக்காட்டுக்குள்ள ஒத்தயடி பாதையிலதான் போவோம்... எத்தன மணியானாலும் பயமில்லாமப் போவோம்... ஏன்னா அது எங்கூரு... எங்கூரு கம்மாயில மணிக்கணக்குல நீந்தியிருப்போம் தெரியுமா...? இப்ப ஷவருல குளிக்கிறேன்னு தண்ணி பத்தியும் பத்தாமயும் குளிக்கிறது ஒரு குளியலாடியம்மா... சீசனுக்குத் தக்க என்னென்ன புடிங்கித் தின்னிருப்போம்...  மாடு மேய்ச்சதும்... மழை நேரத்துல மல்லுக்கட்டிச் சண்டை போட்டதும்... கபடி விளையாண்டதும்...  இளவட்டக்கல் தூக்கி வீரம் காட்டியதும்... புளியங்காயைப் புடுங்கியாந்து மடையில தேய்ச்சு... கட்டியா உருட்டி....' சொல்லும் போதே எனக்கு எச்சில் ஊறியது.

'போதும் உங்க ஊர்ப்புராணம்...  அந்த ஊருக்கதையைப் பேசுறதுன்னா போதும்... அப்புடிப் பேசுவாக...  அங்க ஒண்ணுமில்லாம வறண்டு போயிக் கிடக்கும்... இவரு என்னவோ சொர்க்க பூமி மாதிரி பேசுவாரு...  எனக்கு வேல கிடக்கு...' என எழுந்தாள் கமலம்.

'அடியே அம்மாடி... அது எனக்கு சொர்க்க பூமிதாண்டி... ஒரு தடவை பாக்கணுமின்னு ஆசை மனசெல்லாம் நிறைஞ்சி நிக்கிது...' 
'
நிக்கிம்... நிக்கிம்.... உங்க மகனுக்கிட்ட சொன்னா அம்புட்டுத்தான்... இந்த வயசுல அங்க போகணுமாக்கும்ன்னு வானத்துக்கும் பூமிக்குமா குதிப்பான்... பேசாம இருங்க...'

'அவனெல்லாம்... பாஸ்ட்புட் வாழ்க்கை வாழ்றவன்டியம்மா... அவனுக்கு பரந்த மனசுக்காரனுங்க வாழ்க்கை தெரியாது... நான் ஒரு ரெண்டு நாள் பொயிட்டு ஓடியாரப் போறேன்... இங்க சும்மாதானே உக்காந்திருக்கேன்...'

'எனக்கென்னப்பா... உங்க மகன் விட்டா நீங்க போங்க... அங்க சொந்தமின்னு யாரு இருக்கா... உங்க  உறவுகள் எல்லாமே அத்துப் போச்சு... நமக்குன்னு அங்க ஒரு அடி நிலங்கூட இல்ல... எல்லாத்தையும் கோபத்துல தூக்கிப் போட்டுட்டு வந்துட்டீக... எந்த மனுச இருக்காங்க அங்க உங்கள வான்னு சொல்ல... என்னத்துக்கு இப்ப உங்களுக்கு இந்த ஆசை....' என்றபடி எழுந்து சென்றாள்.

'அந்த வாழ்க்கையை அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும்... ஏன் இந்த ஆசை இப்ப எந்திரிச்சி நிக்கிதுன்னு... அவன் என்ன சொன்னாலும் சரி... நான் போகத்தான் போறேன்.... என் முடிவில் மாற்றம் இல்லை.' சத்தமாகச் சொன்னேன்.

ஆயிற்று... அந்த நாளும் வந்தாச்சு...

மகனுடன் வேலை பார்க்கும் மதுரைப் பையன் மூலமாக ஏற்பாடு செய்திருந்த கார் விமான நிலையம் வந்து ஏற்றிக் கொள்ள, நான் பார்த்த மதுரையில் எத்தனையோ மாற்றங்கள்... மீனாட்சியம்மன் கோவில் தீவிபத்து செய்தி அறிந்திருந்ததால் அது குறித்து டிரைவருடன் பேசியபடி பயணித்தேன்.

எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் சின்ன டவுன் நான் படிக்கும் போது நகராட்சி இப்போது பேரூராட்சியாய்... பொட்டல் வெளியாய் கிடந்த இடங்கள் எல்லாம் நெருக்கமாய் வீடுகள்....  எங்க ஊர் விலக்கு ரோட்டைக் கண்டுபிடிக்க எனக்கு சிரமம் இல்லை... அந்த இடத்தில் இருந்த ஒற்றை சிறிய கடை போய் பெரிய காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டிருந்தது. அதன் அருகே ஆவரங்காடு 3 கி.மீ என்ற தகவல் பலகை காட்டிய வழியில் கார் பயணித்தது.

எத்தனை மாற்றங்கள் என்ற என் மனதுக்குள் எங்கள் ஊர் ஒற்றையடிப் பாதை நெளிய....  ஆவரஞ்செடிகள் நிறைந்த கொல்லைக்காடெல்லாம் வீடுகளால் நிறைந்திருந்தது....

அந்த வீடுகளுக்கு ஊடே தார் ரோடு வளைந்து நெளிந்து பயணித்தது....
மாமரங்களும் புளியமரங்களும் இருந்த இடம் தெரியவில்லை...  மணிக்கணக்கில் ஆடிய கண்மாய் தண்ணீர் காணாது வறண்டு போய்க் கிடந்தது....  பச்சைப் பசேல் என பயிர்கள் தலையாட்டும் வயல்களெல்லாம் கருவை மரங்கள் மண்டிக் கிடக்க, வாய்க்கால்கள் எல்லாம் வசமிழந்திருந்தன...

ஊருக்குள்ளும் மனிதர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள் என்பதை அமானுஷ்ய அமைதி காட்டிக் கொடுத்தது...  மாடு, ஆடு, கோழிகளை மருந்துக்கும் காணவில்லை...

டிஷ் டிவிக் குடைகள் விடுகளில் விரிந்திருந்தன....  அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டிருந்தது...

நான் பிறந்து வளர்ந்த வீடு இருந்த இடத்தில் புதிதாய் வீடு முளைத்திருந்தது....
எல்லாமே மாறியிருந்தது... என்னுள்ளே நினைவுகள் மாறாமலே இருந்திருக்கும் இங்கு வராதிருந்தால்.. 

மனசை ஏதோ அழுத்த எனக்குள் என்னமோ செய்தது...

சுற்றமெல்லாம் நிறைந்த ஊர் சுடுகாடாய் காட்சியளித்தது. அந்த மண்ணில் இறங்க மனசு மறுத்தது.

எங்கள் ஊரிலிருந்து பக்கத்து ஊரை இணைக்கப் போட்டிருந்த சாலையில் டிரைவரைப் பயணிக்கச் சொன்னேன்...

மெல்ல பார்த்துக் கொண்டே பயணித்தவனின் மனசுக்குள் கால ஓட்டத்தில் ஊரின் மாற்றம் நெஞ்சில் எழும்பிய நினைவுகளை எல்லாம் மெல்ல அழித்து அழ, எங்கயும் நிறுத்த வேண்டாம்ப்பா... நேரே மதுரைக்கே போ என்றேன்.

கார் பயணித்தது மீண்டும் மதுரை நோக்கி....

இங்கு வராதிருந்தால் நினைவுகளாவது பசுமையாய் இருந்திருக்கும் என்ற நினைப்பு நெஞ்சுக்குள் முள்ளாய்த் தைத்தது.

- பரிவை - சே.குமார்.

66 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பு ஸ்ரீராம் ,அன்பு துரை செல்வராஜு ,அன்பு குமார் அனைவருக்கும் இனிய கலை வணக்கம்.

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் வல்லிம்மா.. வாங்க.. வாங்க...

      நீக்கு
  2. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிமொழிகிறேன். வரவேற்கிறேன்.

      நீக்கு
    2. வரவேற்ற துரைக்கும் வந்திருக்கும் அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. வாங்க கீதா அக்கா.. காலை வணக்கம்.

      நீக்கு
  4. ஆகா..

    குமார் அவர்களது கைவண்ணமா இன்று!..

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் காலை வணக்கங்களுடன் இனிய நாளாக அமைய எனது பிராத்தனைகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா..

      இனிய காலை வணக்கம். பிராத்தனைக்கு நன்றி.

      உங்களுக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

      நீக்கு
  6. மனதை மயக்கும் மண்வாசம்...

    படிக்கும் எவரது மனமும் கண்டிப்பாக இளகி விடும்...

    பதிலளிநீக்கு
  7. ஆவாரங்காடு அடியோடு மாறிப் போயிருந்தாலும்
    போக்குவரத்து வசதி இன்னும் இல்லையாமா?...

    அது அந்த ஆவாரங்காட்டுல எல்லாரோட வீட்டுலயும்
    ரெண்டு சக்கர நாலு சக்கர வண்டி இருக்குரதால
    ஏதுக்கு.. வீணா நட்டம்.. ந்னுட்டு பஸ்ஸு விடலையாம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வீடுகளுக்கு ஊடே தார் ரோடு வளைந்து நெளிந்து பயணித்தது....
      மாமரங்களும் புளியமரங்களும் இருந்த இடம் தெரியவில்லை... மணிக்கணக்கில் ஆடிய கண்மாய் தண்ணீர் காணாது வறண்டு போய்க் கிடந்தது.... பச்சைப் பசேல் என பயிர்கள் தலையாட்டும் வயல்களெல்லாம் கருவை மரங்கள் மண்டிக் கிடக்க, வாய்க்கால்கள் எல்லாம் வசமிழந்திருந்தன...//திரும்பிப்பார்னு பழைய படம்.
      திரும்பிப் பார்க்க முடியாமல் மாறிவிட்ட ஊரை
      எந்த நினைவு வைத்து அடையாளம் கண்டு கொள்வது.

      அங்கேயே இருந்திருந்தால் நாமும் ஊரோடு வளர்ந்திருப்போம்.

      வெகு யதார்த்தமான கதை பரிவை குமார்.
      நாம் பார்த்த ஊர்களும் மனிதர்களும் நம் மனதில்
      பொக்கிஷமாக இருக்க வேண்டியதுதான்.

      எத்தனை நினைவுகளைச் சேர்த்து வைத்திருக்கிறார் இந்தப் பெரியவர்,

      நீக்கு
    2. இங்கு வராதிருந்தால் நினைவுகளாவது பசுமையாய் இருந்திருக்கும் என்ற நினைப்பு நெஞ்சுக்குள் முள்ளாய்த் தைத்தது.//இதுதான் மனதைத் தைக்கும் உண்மை. அருமையான ஈரம் நிரம்பிய
      மண்ணின் கதை.

      நீக்கு
    3. //ஆவாரங்காடு அடியோடு மாறிப் போயிருந்தாலும்
      போக்குவரத்து வசதி இன்னும் இல்லையாமா?...

      அது அந்த ஆவாரங்காட்டுல எல்லாரோட வீட்டுலயும்
      ரெண்டு சக்கர நாலு சக்கர வண்டி இருக்குரதால
      ஏதுக்கு.. வீணா நட்டம்.. ந்னுட்டு பஸ்ஸு விடலையாம்!...//


      வணக்கம் அய்யா.
      ஹா..ஹா...

      எங்கள் உரைப்போல ஒரு ஊருதான் இக்கதையில் வரும் ஆவரங்காடு.
      எங்கள் பகுதியில் மெயின் ரோட்டில் இருந்து பிரியும் கிராமங்கள் வேறு எந்த ஊருடனும் இணைக்கப் படுவதில்லை. அப்படியே போகணும் என்றாலும் ஒற்றையடிப் பாதை... அல்லது வயல் வரப்புகள்தான். எங்க ஊருக்கு தேவகோட்டை அல்லது கண்டதேவியில்தான் பேருந்து வசதி... இப்போதும்.
      தேவகோட்டையில் இருந்து ஊருவரை ரோடு என்பதுகூட நான் கல்லூரியில் படிக்கும் போதுதான்... அது வரை பஞ்சாயத்து சரளை ரோடு ஊரில் இருந்து பாதிவரை... அப்புறம் ஆவாரம் செடிகளுக்கு ஊடே ஒற்றையடி பாதைதான் தேவகோட்டை வரை.

      இப்போது கண்டதேவிக்கு ஒரு இணைப்பு ரோடு போட்டிருக்காங்க... பட் அதிகம் பயன்படுவதில்லை.

      நாலைந்து ஊரை இணைத்துப் பயணிக்கும் ரோடு இருந்தால்தான் பேருந்து வசதியெல்லாம்... அதெல்லாம் எங்க ஏரியாவில் பலஊர்களுக்கு கிடைக்க வாய்ப்பு இப்போது இல்லை.

      விவசாயம் போன பின் எங்கள் ஊரில் சிலர் மட்டுமே (பெரும்பாலும் பெரியவர்கள்) இருக்கிறார்கள்... படிப்பு வேலை என நாங்களெல்லாம் வெளியில் வந்தாச்சு...

      நல்லது கெட்டதுக்கு மட்டுமே ஊரில் எல்லாரும் கூடுவதே இப்போதெல்லாம் நிகழ்கிறது.

      இந்த ஊரை எங்க ஊரைப்போல எடுத்து எழுதினேன் அய்யா.

      நீக்கு
    4. தங்கள் கருத்துக்கு நன்றி வல்லிசிம்ஹன் அம்மா.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    நல்ல கதை. நம் நினைவுகள் என்றும் அழிவதில்லை. பழைய நினைவின்படி வாழ்ந்திருந்தாலும், அந்த கற்பனை இன்பத்தில், மறைந்து விட்ட ஊரின் நிஜங்கள் கண்ணில் படாமலேயே இருந்து பெரியவரின் சந்தோஷங்களும் நிலைத்து நிறைந்திருக்கும். அருமையான முறையில் ஒரு யதார்த்தமான கதையை தந்த சகோதரர் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. இந்தக் கதையை, இல்லை, இல்லை, நிகழ்வைப் படிக்கையில் எனக்கும் நான் மதுரையை இழந்துவிட்டுத் தவிக்கும் உணர்வு ஏற்படுகிறது. அன்றைய மதுரையோடு இன்றைய மதுரையை ஒப்பிட்டால் இப்போது இருப்பது எனக்குத் தெரியாத ஏதோ ஓர் ஊர்! நான் அறிந்திராத ஊர்! :((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அக்கா...
      எல்லா ஊரிலும் ஏகப்பட்ட மாற்றங்கள்...
      தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  10. நானும் மதுரை குறித்த என் நினைவுகளை மட்டும் பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டு நினைத்து நினைத்து மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கெல்லாம் எப்பவும் எங்க ஊர் நினைவுதான்...
      விஷாலுக்கு எங்க ஊரில் இருக்க அதிக விருப்பம் இருப்பதுண்டு.
      பாப்பாவுக்கு அப்படியான விருப்பங்கள் எப்போதும் இல்லை.
      எனக்கு ஊருக்குப் போனால் எங்க ஊரிலேயே இருப்பதில்தான் ஆனந்தம்... தேவகோட்டை வீட்டில் அவ்வளவாக இருக்க விரும்புவதில்லை.

      நீக்கு
  11. நான் நெல்லைல எங்க கிராமத்தில் இரு வருடங்கள் தங்கி தினமும் ஐந்து கிலோமீட்டர்கள் நடந்து டவுனுக்கு வந்து படித்தவன். கிராமத்தில் தாமிரவருடி ஆற்றுக் குளியல், அங்கேயே துணி தோய்த்து வீட்டில் வந்து காயப்போடுவோம். சின்ன வயதிலிருந்தே தடம் பதித்த வீதி, விளையாடிய வீடுகள், நண்பர்கள்.

    வெகு காலம் கழித்து நெல்லையிலிருந்து குடும்பத்தோடு காரில் ஊரை நோக்கிப் பயணித்தேன். நான் நடந்த வழிகள் முற்றிலும் மாறிவிட்டன. தாமரைக் குளம் கொஞ்சம் உலர்ந்து காணப்பட்டது. பைபாஸ், புது வீடுகள் என முற்றிலும் வேறு இடமாகத் தெரிந்தது. எங்கள் வீதி, அதன் பொலிவிழந்து அனேகமாகத் தெரிந்தவர்கள் யாருமின்றி இருந்தன. தாமிரவருணி-சொல்லமுடியலை...காடாக மண்டிக்கிடந்தது, மணற்பரப்பே இல்லை.

    எனக்கு ஏற்பட்ட அந்த உணர்வை குமாரின் கதை கொண்டுவந்தது.

    வாழ்க்கையின் கடந்த பக்கங்களுக்கு மீண்டும் பயணம் செய்தால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைவது உறுதி. பழைய நினைவுகளுடன் வாழ்ந்துவிட்டால் மிஞ்சுவது நிம்மதி.

    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..காலை வணக்கம்.

      நீக்கு
    2. ஆமாம்..இதைப் படிக்கும் எல்லோருக்கும் அவரவர் ஊர் பற்றிய இந்த நினைவுகள் வரப்போவது உறுதி.

      நீக்கு
    3. தங்கள் நீண்ட கருத்துக்கு நன்றி அண்ணா...
      ஊர் நினைவுகள் எப்போதும் தித்திப்பானவை... அவை மாறியதை அறியாத வரை சுவையில் குறைவதில்லை... அறிந்தாலும் அனுபவங்கள் கொடுக்கும் ஆனந்தம் எப்போதும் மாறாமல் மனசுக்குள்.

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  13. பழைய நினைவுகளை , பழைய வாழ்வியல் கடைபிடிப்புகளை அழகாய் சொல்லி விட்டார் குமார்.
    இப்போது நாளுக்கு நாள் மாற்றம் ஏற்படுகிறது இடங்கள். நேற்று பார்த்த இடம் இன்று இல்லை என்ற நிலை.
    மூன்று வருடம் ஆக போகிறது மதுரைக்கு வந்து, ஒரு முறை போன இடம் அடுத்த முறை மாறி விடுகிறது.
    அழகர் கோவில் போகும் சாலை அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது முன்பு. இப்போது பார்க்கும் போது மனதுக்கு வருத்தம் கொடுக்கிறது. பறவைகள் எல்லாம் மரத்தில் கூடு கட்டி இருந்தது முன்பு, மரங்கள் வெட்டப்பட்டவுடன் போஸ்ட் கம்பத்தில் கட்டி இருந்தது. மரத்தை வெட்டுவார்கள் இதை என்ன செய்வார்கள் என்று நினைத்து இருக்கும். இப்போது அதையும் சாலை விரிவு திட்டத்தில் அதை நகர்த்தி வைப்பார்கள் அதன் கூடு போய் விடும்.

    //இங்கு வராதிருந்தால் நினைவுகளாவது பசுமையாய் இருந்திருக்கும் என்ற நினைப்பு நெஞ்சுக்குள் முள்ளாய்த் தைத்தது.//

    பசுமையான நினைவுகளையும், இப்போது உள்ள நிலையையும் நினைத்து நினைத்து வருந்த வேண்டும் இனி. பெரியவர் நிலை கஷ்டம் தான்.

    பசுமையான நினைவை மீண்டும் கொண்டு வந்து மகிழ பழகி கொள்ள வேண்டும் அது தான் செய்ய முடியும் வேறு என்ன செய்ய முடியும்.

    குமாருக்கு வாழ்த்துக்கள், கதை பகிர்ந்ததற்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  14. மனதில் இருக்கும் இனிமையான நினைவுகளை வெளியே எடுத்து, ஏக்கப்பட வைத்து விட்டீர்கள் குமார்...

    பதிலளிநீக்கு
  15. வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்...
    வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்...

    தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்...
    தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்...

    அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே...
    கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்...

    அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச...
    பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்...

    பொட்டல் காட்டில் பொழுதெல்லாம் ஓட்டம் போட்டு திரிஞ்சோம்...
    வெயிலத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்...?

    வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்...
    பொன் வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்...

    காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்...
    ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டனோம்...

    ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்...
    கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்...

    எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்...
    அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்...

    தொப்புள்கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம்...
    வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்...?

    வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடி...
    வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே...

    நண்டூரும் நரி ஊரும்... கருவேலங் காட்டோரம்...
    தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே...

    பசி வந்தா குருவி முட்டை... தண்ணிக்கு தேவன் குட்டை...
    பறிப்போமே சோளத்தட்டை... புழுதி தான் நம்ம சட்டை...
    புழுதி தான் நம்ம சட்டை... புழுதி தான் நம்ம சட்டை...

    நா.முத்துக்குமார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... அருமை அண்ணா...
      வெயில் பாடலில் தடித்த எழுத்துக்களில் தாங்கள் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டேன்.... அனுபவித்தும் இருக்கிறேன்...

      நீக்கு
  16. எல்லோருக்குமே பழைய நினைவுகளை மீட்டி விட்டது இக்கதை.
    அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  17. எதார்த்தமான கதை ...அருமை ..

    ஆனாலும் ஊரில் இறங்கி, மாறாது இருக்கும் மனித மனங்களை கண்டு மகிழ்ந்து இருக்கலாமோ என்னும் ஆசை வருவதே தவிர்க்க இயலவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாறாதிருக்கும் மனித மனங்களைக் காணுவதும் கஷ்டம்....கண்டு நாம் மகிழ்வதும் கஷ்டம். வாழ்க்கையில் எங்கோ தொலைவில் நாம் சென்றுவிட்டோம். திரும்ப பழைய இடத்திற்குச் சென்று மனம் மகிழ்வது நடக்காது. ஆனால் அந்த இடங்களில் நாம் வெறும்ன நடந்து நம் உணர்வுகளை மீட்டெடுக்க முயலலாம். இவ்வளவு சின்ன இடத்திலா நாம் அவ்வளவு பெரிய சுகத்தைப் பெற்றோம், இவ்வளவு அழுக்கான இடங்களிலா நாம் அவ்வளவு தூய்மையாக இருந்தோம் என்றெல்லாம் மனம் விசனப்படும்.

      நீக்கு
    2. தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி.
      மனிதர்கள் அங்கு இல்லை என்னும் போது அவர்களைச் சந்தித்தல் என்பது சாதாரணக் கதை ஆகிவிடாதா..?
      நெல்லை அண்ணன் சொல்வதே சரி.

      நீக்கு
  18. கதை ஆரம்பித்த அழகிலேயே முடிந்து விட்டதாக உணர்வு. அவ்வளவு தானா, பரிவை?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா...
      நீண்டதாய் இழுக்க எண்ணமில்லை...
      கொஞ்சம் மாற்றி இருக்கலாமோ என அண்ணனுக்கு அனுப்பிய பின்னர் தோன்றினாலும் எழுதியதை இதுவரை மாற்றவில்லை.

      நீக்கு
  19. ஆஹா... என் கதையா?

    கொஞ்சம் வேலை பிறகு வாரேன்...

    நன்றி ஸ்ரீராம் அண்ணாவுக்கும்.. கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
  20. ஒரு பத்து நாளா வேலை இல்லாமல் இருந்தேன்... பதிவெல்லாம் எழுதினேன்....
    இன்னைக்கு வேலை வந்தாச்சு... இப்ப கொஞ்ச நேரம் இந்தப்பக்கம் வந்தேன்....
    விரிவான பதில் தரலைன்னு நினைக்காதீங்க.... கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. நினைவுகளில் மண்ணின்வலிகளைப்பகிர்ந்து இருக்கும்விதம்நன்ரு எளிய நீரோடை போன்ற நடை ஊர் மாறி ருப்பதைபி எப்பொதாவது செல்லும்போதுதான் உண்ர்கிறோம் எனக்கு அந்த அனுபவம் உண்டு ம் உண்டு மனம் நிறைந்த பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  22. நல்ல படைப்பு.
    //இந்த நினைவுகளை என்ன செய்வது..?

    எப்போதேனும் ஏதோ ஒன்றின் முடிவில் இவை முழித்துக் கொள்கின்றன. மறந்தவற்றை மீட்டெடுத்து... ஆம்... மறந்தவற்றை எப்படி மீட்டெடுப்பது..? மறக்க முடியாமல் மனசுக்குள் அழுத்தி வைத்தவற்றை மெல்ல மேலிழுத்து அதில் நீந்தச் செய்வதில்தான் இந்த மனசுக்கு எத்தனை ஆனந்தம்.// உண்மை! கதையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயமும் உண்மை.

    பதிலளிநீக்கு
  23. குமார் கதை அட்டகாசம்!

    உங்கள் எழுத்தைப் பற்றி விவரிக்க வேண்டுமா என்ன!!!!!!!

    என் பழைய நினைவுகளையும் மீண்டும் மேலெழுப்பியது.

    எனக்கும் சில வருடங்களுக்கு முன் ஊருக்குப் போன போதே அதுவும் எங்கள் வீட்டுச் சுற்றுலாக் குழுவுடன் தான் அதனால் கொஞ்சம் நேரமே இருக்க முடிந்தது. மனதில் இருக்கும் பிம்பம் பொடிந்தது. எங்கள் ஊரில் என்னோடு படித்தவர்கள் இருந்தவர்கள் எல்லோரும் இப்போது சென்னையில். எனவே அங்கு நான் அப்போது கண்டிருந்த 30, 40 வயதினர் இப்போது 65, 70 வயதில்...மற்றவர்கள் அனைவரும் புதியவர்கள். இருந்தவர்களில் பலரும் என்னை மறக்கவில்லை என்பது கூடுதல் ஆனந்தம்.

    அதை நானும் கதையாகவே எழுதி பாதியில் நிற்கிறது. நான் எழுதும் போதே என் மனம் என்னவோ செய்ததால் நிறுத்தி விட்டு முடிவு மனதில் இருந்தாலும் இன்னும் முடிக்கவில்லை...அதில் ஒரு சிறு பகுதியை சமீபத்தில் ஒரு கதைக்கும் பயன்படுத்திக் கொண்டேன்.

    பாராட்டுகள் குமார். அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. உண்மைதான் குமார் இந்த நினைவுகள் இருக்கிறதே....ஒரு சிறு நிகழ்வு அல்லது படம் அல்லது பாட்டு என்று எது கேட்டாலும் சரி சில சமயங்களில் உள்ளே உறங்கிக் கிடப்பவை எல்லாம் மேலே வந்து படமாக விரியும்...ஒரு சில மகிழ்வைத் தரும் ஒரு சில சோகம் அயற்சி என்று தரும்.

    ஆரம்பமும் கொண்டு சென்ற விதமும் முடிவும் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. அருமையான கதை குமார்..கதையல்ல..பலரின் வாழ்வில் நடக்கும் யதார்த்தம்!
    நம்மூரும், வணிகக்கட்டிடங்கள் அழித்த இயற்கையும் என்றும் மனதைப் பிசையும்..
    எனக்கும் ஊரில் இருப்பதுதான் பிடிக்கும், நம் மண்ணின் மனமும் இயற்கையும், அது ஒரு சொர்க்கம்!
    பகிர்ந்த எங்கள் ப்ளாக்கிற்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  26. சில மாதங்களுக்குப் பிறகு இங்கே வருகிறேன். நல்ல கதை.

    -இராய செல்லப்பா (தற்போது நியூ ஜெர்சியில் இருந்து)

    பதிலளிநீக்கு
  27. படிக்கும் ஒவ்வொருவரும் தமது மண்ணை நினைவில் சுவைப்பார்கள்.

    காலத்தின் மாற்றங்களில் அனைத்துமே மாறிக்கொண்டு போகின்றன.

    பதிலளிநீக்கு
  28. எத்தனை மாற்றங்கள்... பல சமயங்களில் நெய்வேலி செல்ல வேண்டும் என நினைப்பேன். சென்று பார்க்கும்போது இருக்கும் மாற்றங்கள் மனதை ஏதோ செய்யும். நெய்வேலியாவது பரவாயில்லை - இன்றைக்கு பல கிராமங்கள் நீங்கள் சொல்லி இருப்பது போல மாறித்தான் இருக்கின்றன.

    நல்ல கதை குமார். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!