1.6.25

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 22 :: நெல்லைத்தமிழன்.

 


இந்தப் பள்ளிப்படைப் படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது பாலகுமாரன் இராஜேந்திரனுடைய வரலாறை தன்னுடைய கங்கைகொண்ட சோழன்நாவலில் எழுதியுள்ள ஒரு பகுதி எனக்கு நினைவுக்கு வருகிறது.

சோழர் அரசகுலத்திலேயே (விஜயாலயச் சோழனில் ஆரம்பித்த) ராஜராஜ சோழன் மிக உன்னத இடத்தை அடைந்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுவாக உன்னதமான அரசனுக்குப் பிறகு அவனுடைய குலம் சரிவை நோக்கித்தான் செல்லும். வரலாற்றில் இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் உள்ளன. அப்படி இல்லாமல் ராஜராஜ சோழன் மகன் இராஜேந்திர சோழன், தந்தைக்கு ஏற்ற தனயனாக சோழ சாம்ராஜ்யத்தை இன்னும் உன்னத நிலைக்குக் கொண்டுவந்தான். ஆனால் பாருங்க, அவனுக்குப் பிறகு அவனுடைய மூன்று மகன்களே ஒருவர் மாற்றி ஒருவர் அடுத்த முப்பது வருடங்களுக்கு சோழ சாம்ராஜ்யம் சிதையாமல் ஆண்டுகொண்டு வந்தனர். அதன் பிறகு வாரிசுகள் இல்லாத தால், சாளுக்கியச் சோழ அரசு வந்தது என்பதை முன்பு படித்தோம்.

பாலகுமாரன் எழுதியுள்ள ஒரு சிறு பகுதியைப் பார்ப்போம். இராஜேந்திர சோழன் அரசனாக இருக்கிறான். அவனுடைய தங்கை குந்தவையை வேங்கி நாட்டு விமலாதித்தனுக்குத் திருமணம் செய்துகொடுத்திருந்தார்கள். விமலாதித்தன் மகன் ராஜராஜ நரேந்திரன். விமலாதித்தன் மறைந்த பிறகு, ராஜராஜ நரேந்திரனை கீழைச் சாளுக்கிய தேசத்துக்கு அரசனாக்க விழைகிறான் ராஜேந்திரன். (விமலாதித்தனுக்கு இன்னொரு மனைவி மூலம் விஷ்னுவர்த்த விமலாதித்தன் என்ற மகன் இருக்கிறான்) அப்போதுதான் சோழ தேசம் பாதுகாப்பாக இருக்கும் என்பது அவன் எண்ணம். ராஜராஜ நரேந்திரன் மருமகன் ஸ்தானம். ஆனால் ரொம்பவே திறமை இல்லாதவன். உறவைப் பலப்படுத்த தன் மகளை அவனுக்கு மணம் செய்துகொடுக்க எண்ணுகிறான்.  தன் தங்கை குந்தவை, விமலாதித்தனுடன் அனுசரணையாக இல்லை என்ற வருத்தம் ராஜேந்திரனுக்கு.  இந்தச் சமயத்தில் மனம் விட்டுப் பேச தன்னுடைய மூன்றாவது மகனான வீர ராஜேந்திரனை ஆள் விட்டு அனுப்பி வரச் சொல்லி அவனிடம் பேசுகிறான். அந்தப் பகுதிதான் நான் பகிர நினைக்கும் பகுதி.

நம்முடைய குந்தவைக்குப் பிறந்த  இராஜராஜ நரேந்திரனுக்கும் உன்னுடைய வயதுதான். ஆனால் உன் முகத்தில் இருக்கின்ற பொலிவு, களை, உன் உடம்பில் இருக்கின்ற கம்பீரம் அவர்களிடம் இல்லை. நீதான் இராஜராஜ நரேந்திரனை உற்சாகப்படுத்த வேண்டும், தந்திரங்கள் சொல்லித்தரவேண்டும், அவனுக்கு உற்ற தோழனாக இருக்கவேண்டும்.

நான் அவனை அரியணையில் வைத்துவிட்டாலும் மேலைச்சாளுக்கியத்தின் தொந்தரவு இருக்கத்தான் செய்யும். அதைத் துடைக்க உன் தமையன் இராஜ இராஜித்தனும் உன்னுடைய அண்ணன் இராஜேந்திரனும் நீயும் ஒன்றாக முயற்சி செய்து தொடர்ந்து உதவிகள் செய்யவேண்டும். உன்னிடம் ராஜராஜ நரேந்திரன் இயல்பாக இருப்பான் என்று நினைக்கிறேன். நீயே இராஜராஜ நரேந்திரனிடம் போய்ச் சொல்லி அவனைத் தயார் செய்.

அரசனுக்கு தோற்றம் முக்கியம். அந்தத் தோற்றத்தை தயவு செய்து நீ ஏற்படுத்து.

என்ன இது, தயவுசெய்து என்று சொல்லிக்கொண்டுகட்டளை இடுங்கள்

இது கட்டளை இட்டு வராது. ஒரு சகோதரனைப் போன்றவனை, மருமகனை நாம் அரவணைத்துப் போகவேண்டும். நான் விமலாதித்தனை அப்படித்தான் அரவணைத்தேன். அதுபோல இந்த வேலையை உன்னிடம் தருகிறேன். இது தவிர உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்

என்ன?’

இராஜராஜ நரேந்திரனுக்கு திருமணம் செய்ய வேண்டும். யார் மனைவி என்று நினைக்கிறாய்?...... இந்த நேரம் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். யார் அவனுக்கு மனைவியாக இருப்பது நல்லது?’

என்னுடைய அக்காள், அம்மங்கா தேவி என்று நீங்கள் மனதில் நினைத்திருக்கிறீர்கள். அது எனக்குப் புரிகிறது, எனக்கும் அது சம்மதமே

இந்த உறவு ஏற்படுத்திக்கொண்டால்தான் நமது தேசம் பாதுகாப்பாக இருக்கும்

அம்மங்காதேவிக்கு அவனைப் பிடிக்குமா?’

சோழ ராஜ வம்சத்தில் பிறந்துவிட்டால், பிடித்த கணவன் என்று எந்த இளவரசியும் நினைத்துக்கொள்ள முடியாது. தான் விரும்புகின்ற இளவரசன் என்று எந்த இளவரசியும் கற்பனை செய்துவிட முடியாது. அரசியல் காரணமாக நடக்கின்ற திருமணங்கள் சில நமயம் நரபலியாகவும் நடந்துவிடும். குந்தவையினுடைய திருமணம் நரபலி. ஆனால் பலி ஆனது விமலாதித்தன்.

இந்தத் திருமணம் அவ்விதம் இருக்காது. அம்மங்கை மிகவும் கெட்டிக்காரி. என்னுடைய அத்தை குந்தவையால் வளர்க்கப்பட்டாவள். வீரமாதேவியால் போற்றப்பட்டவள். அவளுக்கு நெளிவு, சுளிவுகள் பலதும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். பரவைநாச்சியார் உடுத்த கற்றுக்கொடுத்திருக்கிறார். திருபுவனமாதேவி பாடவும், பேசவும் கற்றுக்கொடுத்திருக்கிறார். வீரமாதேவி குதிரை ஓட்டக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.  எனவே அம்மங்கை பொருத்தமுடையவள். அம்மங்கைக்கு இராஜராஜ நரேந்திரன் கொஞ்சம் குறைவோ என்று தோன்றுகிறது. அவனுக்கு அம்மங்கையை வைத்துச் சீராட்ட முடியுமா என்ற பயம் இருக்கிறது. ஆனால் அவன் நல்லவன். என்ன சொல்கிறாய்?’

இது அரசியல் எனில் சரி. என் சகோதரி என்னும்போது கொஞ்சம் வருத்தம். அத்தைப் பாட்டி குந்தவையாருக்கு வந்தியத்தேவர் கிடைத்தது போல நம் வீட்டுப் பெண்களுக்குக் கிடைக்கவில்லை.

நமக்குத்தான் அரச குலம் என்ற ஒரு உயர்வான எண்ணம் இருக்கிறது. ஆனால் அரசகுல மகளிருக்கு திருமணம் என்பதும் ஒரு அரசியல் நிகழ்வு. இராஜராஜ சோழனுக்கு பத்துக்கும் மேற்பட்ட மனைவியர்.  ஆனால் அவனுக்கு அரசியல் வாரிசு என்று அமைந்தது இராஜேந்திர சோழன்.

சீன அரசியல் நிகழ்வுகளைப் பற்றிப் படித்தபோது ஒரு விஷயம் தெரிந்தது. அரசனுக்கு நிறைய மனைவிகள் இருந்தாலும், யாருக்கு வாரிசு வரப்போகிறது என்பது மிகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாம். அதனால் தங்களுக்குத் தோதானவருக்குத்தான் வாரிசு அமையவேண்டும் என்று அரசியல் நிர்பந்த த்தினால் கருவைச் சிதைப்பதோ இல்லை அந்த அரசியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதோ சகஜமாம். அதுபோல ஆண் மகவு பெற்றுவிட்டால் அந்த அரசிக்கு மிக்க உயர்வு ஏற்பட்டுவிடுமாம், அடுத்த அரசனைப் பெற்ற தாய் என்று. அதுபோல பிறந்த குழந்தைக்கு பால் கொடுப்பதற்கும் மற்ற எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளவும் தாதிகள் இருப்பார்களாம்.

இதனை எழுதும்போது பஹ்ரைன் அரண்மனை நிகழ்வுகளை ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. அரசர் உணவு உண்ண வரும்போது அவர் எதைக்கேட்டாலும் இல்லை என்று சொல்லாத நிலைக்குத் தயாராக இருப்பார்களாம். 20 பேருக்குக் குறையாத உணவு தயாராக இருக்குமாம். அரசர் எதைச் சாப்பிடுவார் என்றே தெரியாதாம். அவர் எதையாவது ருசித்துச் சாப்பிட்டால் அடுத்துமுறையும் அதனைச் செய்வார்களாம். சில நேரங்களில் அரசர் சரியாகச் சாப்பிடமாட்டாராம். அரசர் சாப்பிட்டு முடித்த பிறகு மிஞ்சும் எல்லாவற்றையும் அவரது விசுவாசிகளுக்குக் கொடுத்துவிடுவார்களாம். அரசரைச் சந்திக்க அவரது மனைவி மற்றும் மகன்களுக்கு அனுமதி தேவையாம். அரசருடன் கூடவே பையா/உதவியாளன்என்ற இட த்தில் ஒருவர் இருப்பாராம். அந்த இடத்திற்கு வருவதற்கு நிறைய போட்டி இருக்குமாம். கேரளத்தைச் சேர்ந்தவர்களும் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார்களாம். அரசர் படுத்துக்கொள்ளும் அறையின் வாசற்கதவின் அருகில் இவர் படுத்திருப்பாராம். அரசர் கூப்பிட்ட குரலுக்குத் தயாராக இருக்கவேண்டும். சொந்த மகனே (இளவரசனாக இருந்தாலும்) அனுமதி பெற்று இவரைத் தாண்டித்தான் அரசரைப் பார்க்க முடியும். இந்தப் பதவியில் இருப்பவர்களுக்கு பணம் ஒரு பிரச்சனை இல்லை. அதுபோல அவரது வேலை, அரசர் மறைந்தவுடன் முடிந்துவிடும்.

இதையெல்லாம் படிக்கும்போது அரச குலத்தில் பிறப்பது நல்லதா?, பிறந்தால் மூத்தோனாகப் பிறப்பது நல்லதா இல்லை கடைசிப் பையனாக இருந்து அரச குலத்தின் அதிகாரம் வசதி போன்றவற்றை மாத்திரம் அனுபவித்து வாழ்ந்தால் போதுமா? பெண்ணாய்ப் பிறந்தால் அதன் பிரச்சனைகள் என்னென்ன? யாரையும் நம்பமுடியாமல், யாரிடமும் எதையும் வெளிப்படையாகப் பேசாமல், ஒவ்வொருவர் பேசுவதற்கும் அரசியல் அளவீடுகள் கொண்டு அர்த்தம் பார்ப்பது என்றெல்லாம் வாழும் வாழ்க்கை சிறப்பாக இருக்குமா? என்றெல்லாம் யோசனை தோன்றுகிறது.

சரி.. நாம் இந்தப் பள்ளிப்படைப் படங்களைக் காண்போம்.









அம்பாள் மங்களநாயகி (மங்களாம்பாள்). விமலநாயகி என்றும் எழுதியிருக்கின்றனர்.

துவாரபாலகர்கள் மிக அழகாக இருக்கின்றன. இது பழுவேட்டரையர்களின் கலைப்படைப்பாக இருக்கலாம்.

நந்தியின் கழுத்து அலங்காரங்களை எடுக்கவில்லை. துணி போர்த்தியிருந்ததால். சிவலிங்கத்துக்குக் கீழேதான் பஞ்சவன் மாதேவியின் உடல் இருக்கிறதாம்   மூலவர் இராமலிங்கஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார். எட்டு பட்டைக் கோணங்களாலான லிங்கம் (தாராலிங்கம் என்று சொல்கின்றனர்)


பிரமன் மற்றும் மாதொருபாகன். 

பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை என்று குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டு (கோப்பரகேசரி வர்மரான ராஜேந்திர சோழதேவர்க்கு யாண்டு 7வது சத்திரிய சிகாமணி வளநாட்டு திருநறையூர் நாட்டுப் பழையாறையான முடிகொண்ட சோழபுரத்து பள்ளிப்படை பஞ்சவன் மாதேவீஸ்வரத்து இதில் பள்ளிப்படை என்ற வார்த்தை கல்வெட்டில் சிதைந்துள்ளது அல்லது அழிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில்தான் இது பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை என்று கூறும் கல்வெட்டு இருக்கிறது. கண்டிப்பாகக் காணத் தவறாதீர்கள்.  வலது பக்கம் மஹிஷாசுர மர்தனி, அடுத்து அர்த்தநாரீஸ்வரர்,  அதை அடுத்து கங்காதரர்.


நான் குறிப்பிட்டிருந்த பூசாரி அவர்கள்.  இவர், இந்தக் கோவிலின் பகுதியில்தான் முன்பு குந்தவைக்கான சமாதி (அவரது அஸ்தியை வைத்து அதன் மேல் எழுப்பப்பட்ட மண்டபம்) இருந்ததாம், பிறகு இடிந்து தரையில் கான்க்ரீட் போட்டு இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது என்றார்.


அம்பாள் சன்னிதி. 

இந்தப் பகுதியில்தான் குந்தவையின் சமாதி இருந்த மண்டபம் இருந்தது என்று கோயிலில் இருந்தவர் சொன்னார். அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

நானும் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை என்று எழுதியுள்ள கல்வெட்டு அருகே போய்ப் பார்த்ததை நினைவுக்காக போட்டோ எடுத்துக்கொண்டேன்.

இந்தப் பகுதி முழுவதுமே வாழைத்தோப்பு மற்றும் வயல்களாக இருந்தனவாம் (அப்படி பல வரலாற்றுச் சின்னங்கள் கபளீகரம் செய்யப்பட்டுவிட்டன). இப்போதும் இந்தப் பள்ளிப்படை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அதற்கான பாதையை மாத்திரம் விட்டுவைத்திருக்கிறார்கள்.

இந்தப் பள்ளிப்படைக் கோயிலைப் பார்த்த பிறகு எனக்கு சோழர் வரலாறே (எனக்குத் தெரிந்த சில சம்பவங்களே) மனதில் தோன்றிக்கொண்டிருந்தன. அடுத்து நாங்கள் சென்ற இடம் தஞ்சைப் பெரிய கோயில்.  இந்தக் கோயிலுக்கு நான் மூன்று நான்கு முறைகள் சென்றிருக்கிறேன் (றோம்). எனக்கு எத்தனை முறை இந்தக் கோயிலை வலம் வந்தாலும் அலுக்காது. இதன் காரணத்தை யோசியுங்கள்.  

= = = = = = = = = = = = =

சோழர் கால சிற்பங்கள் கட்டுரைகள் மெக்ஸிகோ பயணம் பற்றிய 14 வார தொடர் கட்டுரைகளுக்குப் பிறகு தொடரும். 

 அடுத்த வாரம் நெல்லைத்தமிழனின் (14 வார) மெக்ஸிகோ பயணத் தொடர் ஆரம்பம். 

= = = = = = = =

44 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். உங்கள் ப்ரார்த்தனைக்கு நன்றி

      நீக்கு
  2. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய கோவில் தரிசன பகிர்வும் அருமை. சோழர் வரலாறு படிக்கப்படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. பாலகுமாரன் அவர்கள் எழுதிய நூலும் அருமை. தனயனின் கருத்தை கேட்டறிவது , அவருடன் அரசியல் சம்மந்தபட்ட கருத்துக்களை விவாதிப்பது என பல நிகழ்வுகள் நம்மையும் அந்த காலகட்டத்திற்கு செல்ல வைத்தது. அந்த காலத்தில் இளவரசியாக பிறந்தாலும், பெண்கள் தந்தைக்கு பணிந்து, இல்லை தம் நாட்டு அரசியலுக்காக சுயநலமாக யோசிக்காது இருந்திருக்க வேண்டியுள்ளது. ஆயினும் இதில் வாழ்க்கைப்பட்ட இடத்தில், சாமர்த்தியமாக செயல்பட்டு வீரமங்கையர்களின் வரலாற்றையும் படித்திருக்கிறோம்.

    நீங்கள் சொன்ன பஹ்ரைன் அரண்மனை பற்றியும் முன்பு நீங்கள் பதிவில் சொல்லி படித்திருக்கிறேன். அரண்மனைக்குள் என்ன ஒரு கட்டுப்பாடுகள்..! எத்தனை நிகழ்வுகள் நடந்திருக்கின்றன என ஆச்சரியமாகத்தான் உள்ளது.

    படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. இறைவிக்கு இரண்டு பெயர்களா? இதையெல்லாம் பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்குமா என்பதே கேள்வி குறிதான். ஒவ்வொரு இடத்திலும், நீங்கள் இப்படி விசாரித்து தருவதைப் போலவும் கிடைக்கிற சந்தர்ப்பங்களும் குறைவு. உங்கள் கோவில் பகிர்வுகளே எங்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். தொடரட்டும் உங்களது ஆன்மிக வழிபாட்டு, மற்றும் சோழர் குல அரசர்கள் ப்பற்றிய விமர்சனங்கள். படிக்க காத்திருக்கிறேன்.

    அடுத்து வரவிருக்கும் மெக்ஸிகோ பகுதிக்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலகுமாரன் எழுதியது, இயல்பா என்ன நடைபெற்றிருக்கும் என்று அவர் யோசித்த வகையில் நன்றாக இருக்கிறது.

      வாழ்க்கைப்பட்ட இடத்தில் ஒன்றிப்போவது சரிதான். இருந்தாலும் இரண்டு அரசுகளுக்கும் பிணக்கு ஏற்பட்டுவிட்டால் திண்டாட்டமாகிவிடும். இன்னொன்று, நியாயமான கருத்துக்களைச் சொன்னாலும், இவள் அவளுடைய பிறந்த வீட்டிற்குச் சாதகமாகச் சொல்கிறாளோ என்று தோன்றவும் வாய்ப்புண்டல்லவா?

      எனக்குமே ஆர்வத்தினால் இந்த இடங்களைக் காணும் சந்தர்ப்பங்கள் வாய்த்தன. எதுக்கு அலைச்சல் என்றிருந்திருந்தால் சந்தர்ப்பம் வாய்த்திருக்காது.

      நன்றி

      நீக்கு
    2. /இன்னொன்று, நியாயமான கருத்துக்களைச் சொன்னாலும், இவள் அவளுடைய பிறந்த வீட்டிற்குச் சாதகமாகச் சொல்கிறாளோ என்று தோன்றவும் வாய்ப்புண்டல்லவா?/

      இந்த சந்தேகம் அன்றைய அரசகுமாரிகளுக்கு மட்டுமின்றி இன்று வரை பெண்களுக்குத் தொடர்கிறது. என்ன செய்வது?

      நீக்கு
    3. சந்தேக்க் கோடு, அது சந்தோஷக் கேடு.

      ஒருவர் நமக்கு இனிப்பு கொடுத்தால் நமக்குப் பிடிக்கும் என்பதற்காக்க் கொடுக்கிறார் என நினைக்கலாம். இல்லை, இவனுக்கு டயபடீஸ் வரட்டம் என்ற கெட்ட எண்ணத்தில் கொடுக்கிறார் எனவும் நினைக்கலாம். ஒவ்வொரு செயலையும் இருவேறு நிலையில் பார்க்க முடியும். அதனால் நேர்மறைச் சிந்தனையை வளர்த்தால் தவறான எண்ணத்தில் செய்திருந்தாலும் நம்மைப் பாதிக்காது என நான் நினைக்கிறேன்.

      நீக்கு
  3. துவாரபாலகர்கள் மிகவும் நளினமாக இருக்கிறார்கள். தகவல்கள் நன்று.
    தன் ஆட்சிக்கு எதிரிகளால் வரும் என்றால் தொல்லையை தவிர்க்க தன் சகோதரியையோ, மகளையோ அந்த எதிரி மன்னனுக்கு மணமுடித்து கொடுப்பது அந்தக் காலத்தில் சகஜமாக இருந்திருக்கிறது. அப்படித்தானே அக்பர் ராஜபுத்திர பெண்கள் உட்பட 53 பெண்களை மணந்து கொண்டார். அரசகுல பெண்கள் பாவம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம். தொல்லையைத் தவிர்க்க என்பதைக்காட்டிலும் உறவு வளர்க்க என்று எடுத்துக்கொள்ளலாம்.தற்காலத்தில் வரும் பெரிய விருந்தினருக்கு பரிசு கொடுப்பதுபோல பெண்களை மணமுடித்துக் கொடுத்திருந்திருக்கிறார்கள். யாரையோ மணப்பதற்குப் பதிலாக அரசனை மணந்திருக்கிறோம் என நினைத்திருந்திருக்கலாம். அவன் நல்லவன் இல்லையென்றால் அவனுடன் இணைந்து தன்னைப் பாழும் கிணற்றில் தள்ளிவிட்ட தந்தையையும் அமைச்சர்களையும் பழிவாங்கியிருக்கலாம். பொதுவாக தன்னைச் சார்ந்த பெண்ணின் நலத்தையும் கருத்தில் கொண்டிருப்பார்கள்

      நீக்கு
  4. இறந்த உடலை புதைக்கும் இடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்வது முறையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவதீட்சை பெற்றுக்கொண்டவர்கள் உடலை துறவிகளுக்குள்ள சடங்குகளைச் செய்வர். பிறகு பிருந்தாவனம் அமைப்பதுபோல அந்த இடத்தின்மீது சிவலிங்கம் பிரதிட்டை செய்து அங்கு கோயில் அமைப்பர். இது தவிர அஸ்தி மீது சிவலிங்கம் வைத்து கோயில் கட்டுவதும் பள்ளிப்படை எனப்படும். இத்தகைய கோயில்கள் எந்தவிதமான பிரிவினரிடம் விடணும் என்ன என்ன கிரமம் என்பதெற்கெல்லாம் விதிமுறைகள் இருந்தன

      நீக்கு
  5. அப்போ எல்லாம் எதிரியை போரில் வெல்வதற்குப் பதில் இப்படிக் கண்ணாலம் கட்டிக் கொடுத்துட்டா பாதுகாப்புன்னு நினைச்சிருப்பாங்களோ? ஒரு வேளை எதிரி கொஞ்சம் வல்லமை படைத்தவராக இருந்திருந்தால்?! எனக்கு அப்படித் தோன்றியது. ம்ம்ம்ம்ம்ம் பெண்களுக்குத் தங்கள் விருப்பம் தெரிவிக்க முடியாமல் அரசக் கட்டளைக்குக் கீழ்படிந்து....

    பொன்னியின் செல்வனில் கூட நந்தினி மணம்....காரணம் வேறாக இருந்தாலும் கிட்டத்தட்ட...பாவம் நந்தினி என்று எனக்குத் தோன்றியதுண்டு. ஆனால் சீனியர் குந்தவை நல்ல ஆளுமை படைத்தவள் என்றாலும் அவளுக்கும் இந்த ராஜகாரியங்கள் குறுக்கே நின்றனவே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். அப்படி வெளிப்படையான எண்ணத்தில் திருமண உறவுகள் நிகழ்ந்திருக்க முடியாது. முஸ்லீம் அரசர்கள் வலுக்கட்டாயமாக இந்து அரசர்களின் மகளை, சகோதரியை மணந்திருந்திருக்கலாம். ஆனால் நட்புடன் இருக்கும் அரசர்களிடையே, உறவுமுறை இன்னும் பிணைக்கும் என்ற எண்ணத்தில் திருமணங்கள் நடைபெற்றிருக்கலாம்.

      இராஜேந்திரனின் பெண் வயிற்றுப் பேரன் சோழ சாம்ராஜ்ஜியத்தின் அரசனானதைப் பார்த்தோமே.

      அரசு, அரசியல் என்று வந்தால் குறிப்பாக பெண்களிடையே பொறாமை, மதிப்பு குறைவது என்பதெல்லாம் தோன்றும். சமீபத்தில் பிரிட்டன் அரச குடும்பத்தைப் பற்றிப் படித்தேன். மறைந்த ராணி எலிசபெத், தன் மகளுக்கும், மகனின் பேத்திக்கும் செய்ததில் (மரியாதை, சொத்தைப் பகிர்வது, பரிசுகள் கொடுப்பது) நூற்றில் ஒரு பங்கு கூட, மகனின் மனைவியான கமீலாவுக்குச் செய்யவில்லை. அவர், அவளை, அரசகுடும்பத்தைச் சாராதவர், வெளி ஆள் என்ற நிலையிலேயே வைத்திருந்தார்.

      அரசனின் (சார்லஸ்) மனைவி, அரசி என்று இருந்தாலும் குடும்பத்தில் அரசில் மரியாதை இல்லை.

      நீக்கு
    2. உங்க கருத்துத்ட்தகவலைப் பார்த்துக் கொண்டேன் நெல்லை

      கீதா

      நீக்கு
  6. மீதிக்குப் பின்னர் வருகிறேன். ஆஜர் வைச்சாச்சு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதுதான் பெங்களூர் காலநிலை (கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல்) குளுகுளு என ஆகிவிட்டதே... வார இறுதிச் சுற்றுலா தொடங்கவில்லையா?

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....விடிய விடிய கதை சொல்லி......

      சனி ஞாயிறு செம டைட். அதுக்கு ரொம்ப யோசிச்சு செஞ்சாதான் போக முடியும்.

      கீதா

      நீக்கு
    3. பெண்களுக்கு பெரும்பாலும் அடுக்களை வேலைகளே ஐந்தாறு மணி நேரத்திற்குக் குறையாது, ஒரு நாளில். அதுதவிர தயார் செய்யும் வேலைகள். அதற்கு மேல் பல பொறுப்புகள். வீட்டில் அவங்க இல்லைனா, ஒரு வேலையும் நடைபெறாது

      நீக்கு
  7. பஞ்சவன் மாதேவியின் பள்ளிப்பட்டு கோவில் , அத்துடன் சோழர் வரலாறு, பாலகுமாரன் பார்வை அனைத்தும் கண்டோம்.

    நீங்கள் கூறியது போல அரசியல் வெற்றிக்காக அரசிளம் பெண்களை அவர்களின் விருப்பம் இன்றியே மணமுடித்துக்குடுப்பது பெரும்பாலான வரலாறுகளில் கண்டிருக்கிறோம்.

    உங்கள் பயணங்களால் நேரடியாக தரிசித்த உணர்வை படங்கள் மூலமும் எழுத்தாற்றல் மூலமும் எமக்குத் தருகிறீர்கள் நன்றி.

    அடுத்த பயணம்காண வருகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.

      நீக்கு
  8. பள்ளிப் படை படங்கள் எல்லாமே சூப்பர். பழமையைச் சொல்கின்றன . ஆனா பராமரிச்சா நல்லாருக்கும்.

    உள்ளே அபிஷேகம் நடந்து அந்தத் தீர்த்தமா வருகிறது?

    விமலநாயகி/மங்களாம்பாள் பெயர்களே மனதைக் கவர்கின்றன.

    ஆமா துவாரபாலகர்கள் செம அழகு. வலப்பக்க துவாரபாலகரின் இடப்புறம் கீழே வளையம் போன்று ஒன்று அதைப் பிணைப்பது போன்ற வடிவம் எல்லாம் எவ்வளவு அழகா செஞ்சிருக்காங்க? அது என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை ஆனால் வளையமும், அதனுள் இருக்கும் மற்றொரு வளையமும் ரொம்ப அழகா தத்ரூபமாக...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்குள்ள துவார பாலகர்கள் மற்றும் நந்தி, மிக அழகாக இருந்தது. பழையாறையின் சிற்பக்கலை என்று சொன்னார்கள்.

      சிற்ப அழகைவிட, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு சரித்திர இடத்தில் நிற்கிறோம் என்பது பெருமிதமாக இருந்தது.

      நீக்கு
  9. இராமலிங்க சுவாமி - ராமேஸ்வரத்திலும் ஒரு சிவலிங்கம் உண்டு என்ற நினைவு. திருநெல்வேலியிலும் கூட ராமர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் என்று இராமலிங்க சுவாமி கோவில் ஒன்று தாமிரபரணி நதிக்கரையில் இருக்கிறது.அருகம்புல் நிறைய கிடைக்கும் அருகன்குளம் ஊர்.

    பிரமன், அர்த்தநாரீஸ்வரர்/மாதொருபாகன் எல்லாச் சிற்பங்களும் அழகு.

    படங்கள் எல்லாமே நல்லாருக்கு ரொம்ப...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமேஸ்வர லிங்கம் சரித்திரத்தில் உண்டு. திருநெவேலியில் ராமர் பிரதிட்டை செய்தது.... நான் சென்றதில்லை. இதுபோல ராமர் பாதம் என்று கோடியக்கரையிலும் உண்டு. இதில் சரித்திரத்தை நாம் தேடமுடியுமா?

      நீக்கு
  10. நான் குறிப்பிட்டிருந்த பூசாரி அவர்கள். இவர், இந்தக் கோவிலின் பகுதியில்தான் முன்பு குந்தவைக்கான சமாதி (அவரது அஸ்தியை வைத்து அதன் மேல் எழுப்பப்பட்ட மண்டபம்) இருந்ததாம், பிறகு இடிந்து தரையில் கான்க்ரீட் போட்டு இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது என்றார்.//

    அடடா! இப்படி எத்தனை இடங்கள் போச்சோ?

    அதெல்லாம் சரி. சோழ தேசத்திலிருந்து டகால்னு அடுத்து மெக்சிகோ...ம்ம் ஒரு வாரம் சமயம் இருக்கு பாக்கிங்க் எல்லாம் பண்ண வேண்டுமே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!கௌ அண்ணா நீங்க ஃப்ளைட் டிக்கெட்டா இல்லை நெல்லை புக் பண்ணுவாரா!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன் க்கா... ஒரு சமயத்தில் இந்தத் தொடர் எழுதும்போது நான் சிரமப்பட்டேன், பல வரலாற்றுத் தகவல்களைப் படித்தும் அதனைச் சுருக்கி எழுதியும் கொஞ்சம் அயர்ச்சியாக இருந்தது. படிப்பவர்களுக்கும் அந்த அயர்ச்சி வருமோ என்று நினைத்து, முன்பு நான் சென்றிருந்த மெக்சிகோ பயணம் பற்றி ஒரு நெடுந்தொடர் (பின்னே.. நிறைய படங்கள் உண்டே) எழுதி, இடையிடையே இதனை வெளியிடலாம் என்று கேஜிஜி சாரிடம் சொன்னேன். அவர், தொடர்ச்சி போயிடக்கூடாது, அதனால் ஒரு இடத்தில் நிறுத்தி பிறகு மெக்சிகோ தொடர் வெளியிட்டு, பிறகு சரித்திரத்தைத் தொடர்வோம் என்று சொன்னார். அதனால் வெளியிடுவது எல்லாம் அவர் பாடு.

      நீக்கு
  11. ​மெக்ஸிகோ போனீர்களே. அந்த மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் என்னானு தெரிஞ்சுக்கிட்டீங்களா? அதையும் பதிவில் எழுத முடியுமா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார்... மெக்சிகோவை விடுங்க. இந்த உலக அழகி உலக அழகின்னு சொல்றாங்களே. அதைப்பற்றி உங்க கருத்தென்ன?

      இப்போ உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாய்லாந்து பெண் ரொம்ப அழகாக என் கண்ணுக்குத் தெரியலை. நம்ம ஊர் பெண்ணே ரொம்ப அழகாகத் தோன்றியது (இது போல பிலிப்பைன்ஸ் பெண்ணும் உலக அழகியாக எனக்குப் படலை). இதற்கு என்ன காரணமாயிருக்கும்?

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. இந்த பதிவு சொல்லும் வரலாறு படித்து இருக்கிறேன், பாலகுமரன் கதை மூலம்.
    நாட்டையும், நாட்டு மக்களின் மீது உள்ள கவனம் நாடு விஸ்தரிப்புக்கு மற்றும் படை உதவிக்கு என்று கட்டி வந்த பெண்ணின் மேல் பரிவு, பாசம் வருமா என தெரியவில்லை.

    இருந்தாலும் அந்தக் கால ஆண், பெண் வாழ்க்கை தியாகம், சகிப்பு தன்மைகளால் கட்டுஅமைக்கபட்டது.

    அரசர்கள், வஞ்சம், சூழ்ச்சி, தந்திரங்களால் வீழ்த்தபட்டு இருக்கிறார்கள்.
    அப்போது காதல் எல்லாம் காணாமல் போய் இருக்கிறது.
    அந்தக்கால மன்னர்கள் கதை சில வருத்தம், கோபம் இவற்றை வரவழைத்து இருக்கிறது படிக்கும் போது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.

      //பெண்ணின் மேல் பரிவு, பாசம் வருமா என தெரியவில்லை.// என்னுடைய எண்ணம், பெண் அழகாக இருந்தால்தான் அவளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். குணமும் நன்றாக இருந்துவிட்டால் அரசனின் தனிப்பட்ட கவனமும் கிடைக்கும். வாரிசைப் பெற்றுக்கொடுத்துவிட்டால் இன்னமும் கௌரவம் கிட்டும்.

      ஆண் பெண் வாழ்க்கை என்று சொல்வதைவிட, பெண்களின் வாழ்க்கைதான் தியாகம் சகிப்புத் தன்மைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது, இந்தக் காலத்திலும்.

      வஞ்சம், சூழ்ச்சி, தந்திரங்களால் வீழ்த்தப்பட்டவர்கள் அனேகம். இருந்தாலும் ஒரு பெண்ணால் அப்படி நிகழ்வதை, மந்திரிகள் மற்றும் அரசனைப் பாதுகாப்பவர்கள் முடிந்தவரை தடுத்துவிடுவார்கள் என்றே கருதுகிறேன்.

      நீக்கு
  14. இந்த பதிவு சொல்லும் வரலாறு படித்து இருக்கிறேன், பாலகுமரன் கதை மூலம்.
    நாட்டையும், நாட்டு மக்களின் மீது உள்ள கவனம் நாடு விஸ்தரிப்புக்கு மற்றும் படை உதவிக்கு என்று கட்டி வந்த பெண்ணின் மேல் பரிவு, பாசம் வருமா என தெரியவில்லை.

    இருந்தாலும் அந்தக் கால ஆண், பெண் வாழ்க்கை தியாகம், சகிப்பு தன்மைகளால் கட்டுஅமைக்கபட்டது.

    அரசர்கள், வஞ்சம், சூழ்ச்சி, தந்திரங்களால் வீழ்த்தபட்டு இருக்கிறார்கள்.
    அப்போது காதல் எல்லாம் காணாமல் போய் இருக்கிறது.
    அந்தக்கால மன்னர்கள் கதை சில வருத்தம், கோபம் இவற்றை வரவழைத்து இருக்கிறது படிக்கும் போது

    பதிலளிநீக்கு
  15. பள்ளிப்படை கோயில் படங்கள் மிக நன்றாக இருக்கிறது, சந்திரன் கிட்டே இருக்கும் ஸ்வாமி என்ன ஸ்வாமி?
    கோயிலை பார்த்துக் கொள்பவரா ஒரு காவி வேஷ்டி கட்டி கொண்டு வணங்கியபடி நிற்பவர்?
    கல்வெட்டு, மற்றும் கோயிலின் உட்புற படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க மூலவரைப் பற்றிக் கேட்கறீங்க என்று நினைக்கிறேன். பஞ்சவன் மாதேவீச்வரர் என்பது மூலவரின் பெயர். ஆனால் பாருங்க, இந்தக் கோயிலை இராமநாதன் கோயில் என்றுதான் அழைக்கிறாங்க. இந்தப் பெயர் எதனால் வந்தது என்று தெரியவில்லை (ஒருவேளை இந்த இடத்தை இராமநாதன் என்பவர் வைத்திருந்தாரா இல்லை வேறு காரணமா என்று தெரியவில்லை).

      கோயிலை அவர்தான் பார்த்துக்கொள்கிறார். இப்படி கோயிலைப் பார்த்துக்கொள்வதற்கு மிகுந்த புண்ணியம் அவர் செய்திருக்கவேண்டும்.

      நீக்கு
    2. மூலவரை கேட்கவில்லை நெல்லை. பள்ளிபடை கோயில் படங்களில் ஆறாவது படம் சந்திரன் கிட்டே இருக்கும் ஸ்வாமியை கேட்டேன். அர்த்தநாரிஸ்வரர் போலவும் இருக்கிறது. ஒரு பக்கமாக கொஞ்சம் ஒயிலாக சாய்ந்து கைகளை ஒரு மாதிரி வைத்து கொண்டு அழகாய் இருக்கிறது சிலை.

      நீக்கு
  16. மெக்ஸிகோ பயண கட்டுரை படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப எதிர்பார்ப்பு வைக்காதீங்க. நான் சென்ற இடங்களைப் படங்களுடன் விவரித்திருக்கிறேன். அவ்ளோதான்.

      நீக்கு
  17. // அடுத்த வாரம் நெல்லைத்தமிழனின் (14 வார) மெக்ஸிகோ பயணத் தொடர் ஆரம்பம். //

    மெக்ஸிகோ தேசத்து சலவைக்காரி ஜோக் வருமா?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம். எனக்கு அந்த அந்த தேசத்தின் பாரம்பர்ய உடையுடன் கூடியவர்களைப் படம் பிடித்துப் போட ஆசை. இப்படித்தான் மேகாலயாவின் உடையணிந்தவர்களில் ஒரு சிலரைப் படம் பிடித்தேன். ஆனால் அப்படி படங்களைப் பகிர்வது சரியா என்று ஒரு சந்தேகம். அதனால் முகத்தை மாத்திரம் மறைத்துப் பதிவிடலாமோ என்று நினைக்கிறேன்.

      அது சரி... மெக்சிகோ தேசத்து சலவைக்காரி ஜோக்கை எழுதினால் அது எங்கள் பிளாக்கில் வருமா? நல்ல மேல்நாட்டுச் சிற்பங்களையே கேஜிஜி சார் பதிவிடும்படி இல்லை என்று சொல்கிறார்.

      நீக்கு
  18. காலை இணையம் பக்கம் வரமுடியவில்லை.   இப்போதுதான் வந்தேன்.  வழக்கம்போல சுவாரஸ்யமான வரலாறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போல்லாம் நீங்க ரொம்பவே பிஸியாயிடறீங்க. அதுவும் நல்லதுதான். நான் திருச்சி வை கோபாலகிருஷ்ணன் சாரிடம் சொல்லிக்கிட்டே இருப்பேன், பிளாக் பக்கம் வாங்க, எழுதுங்க, அது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்று. ஆனால் அவர் யூடியூப் மற்றும் வாட்சப்பிலேயே ஆழ்ந்துவிடுகிறார். அதுக்கே நேரம் போதவில்லை என்கிறார்.

      நீக்கு
    2. மனதை பாதிக்கும் சில நிகழ்வுகள்... அடுத்த ஆறு மாதம் சிரமமான காலம்.

      நீக்கு
  19. எனக்கு என்னவோ வரலாற்றுக்கதை எழுதுவதில் பாலகுமாரன் அவ்வளவு பெரிய விற்பன்னர் இல்லை என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே எனக்கு கல்கி, சாண்டில்யன் போன்று வரலாற்று நாவல்கள் எழுதும் திறமை பலருக்கு இல்லை என்றே எண்ணம். அதில் பாலகுமாரனும் ஒருவர். வரலாற்று நாவலை, சமூக நாவல்போன்றுதான் பாலகுமாரன் எழுதுவார் என்பது என் எண்ணம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!