5.6.25

காதுக்கும், நாவுக்கும்

 

திருமணத்துக்கு முதல்நாள் காலை நடக்கும்  விரதம் / நாந்தி என்று அழைக்கப்படும் சம்பிரதாயத்தில் ரொம்ப நெருங்கிய உறவுகள் மட்டுமே பங்கு பெறுவார்கள்.  அது ஆரம்பிக்கும் நேரம் உள்ளே நுழைந்தோம்.  ஊபர்காரர்கள் வெகுவாக வெறுப்பேற்றி இருந்தார்கள்.

நேராக டிஃபன் ஹாலுக்கு செலுத்தப்பட்டோம்.  

பின் வந்து அமர்ந்து நிகழ்ச்சிகளில் கவனமாக இருந்தோம்.  காதுகளில் நாதஸ்வர இசை.  

என்னதான் மங்கள / மங்கல இசையாக இருந்தாலும் கொஞ்சம் டெசிபல்களைக் குறைக்கலாம் என்று தோன்றியது.  முடியுமா என்றும் கேள்வி வந்தது.  அதாவது சத்தத்தின் அளவைக் குறைத்து கொஞ்சம் மெதுவாக ஊத / வாசிக்க முடியுமா என்கிற சந்தேகம்!

பிறந்து முறையே ஐந்து மாதம், இரண்டு மாதம் ஆன இரண்டு குழந்தைகள் அந்த வீட்டிலேயே, அந்த ஹாலிலேயே இருந்தார்கள்.  பாவம்  அவைகளின் காதுகள்.

இசை நிகழ்ச்சி என்றில்லை, இந்த மாதிரி மங்கள / மங்கல இசைகளின் நடுவேயும் யாரும் யாருடனும் பேச முடிவதில்லை.  நெடுநாட்கள் பார்க்காத உறவைப் பார்த்ததும், உற்சாகமாகி, புன்னகையுடன், பேசுகிறேன் என்ற பெயரில் கத்த ஆரம்பிக்கும்போதே தொண்டையில் கரகரவென்று இருமல் வேறு வந்து விடுகிறது.  அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு தொடர் இருமல்!

'தண்ணி வேணுமா', 'தூத்தம் தரட்டா'. 'ஜலம் கொண்டுவரவா' போன்ற விசாரிப்புகளுக்கு தலையை இடம்வலமாக ஆட்டி இருமலை சரிசெய்து கொள்ளவேண்டும்!  என் இருமல் தண்ணீர் வெந்நீருக்கு அடங்காது என்பது எனக்கும் என் பாஸுக்கும்தான் தெரியும்.

இத்தனையையும் மீறி அவர்கள் வாசித்த ஹிந்தோளம், ஹம்சநாதம் காதுகளை நிறைக்க அடுத்து ஆபேரி காதுகளுக்கு வந்தது.  அதே 'நகுமோ' பாடல்.  நடுநடுவே அவர்கள் சுட்டு விரலால் நிறுத்தப்பட்டும், "கொன்னுடுவேன்" போன்ற சைகையால் டமடமடமடமாவென்று கெட்டிமேளம் வாசித்ததும் போக மீதி இருந்த ஆபேரியை கொத்து பரோட்டா போல வாசித்தார்கள்.   ஓஹோ என்றில்லா விட்டாலும் ஓரளவுக்கு  இருக்க, நம் மனம் கவர்ந்த ராகம் என்பதால் அதிலேயே கவனமாக இருந்தேன்.  இடைத்தடங்கல்கள் இல்லாமல் முக்கியமான இரண்டாவது சரணத்தில் கொஞ்சம் இங்குமங்குமாக அலையாடி, உச்சத்தை சரியாக தொடாமலேயே முடித்தார்கள். 'ஜகமேலனி பரமாத்மா எவரிதோ' வரிகளுக்காகசின், அதன் உயரத்துக்காகவும்  காத்திருந்த என் காதுகள் ஏமாந்தன! எனினும் என் வழக்கப்படி எழுந்து சென்று பாராட்டி வந்தேன்.  

அப்போதுதான் கவனித்தேன்.  இரட்டை நாயனம் அல்ல, ஒன்று நாதஸ்வரம், இன்னொன்று சாக்ஸபோன்.  
அப்புறம் ப்ரோசேவாரூரா என்று கமாஸ் தொடங்கிய போது 'இதே பாடல்தான் கிடைக்கிறதா இந்த ராகத்தில்' என்று நினைத்தபோதே அந்த சந்தேகம் எழுந்தது.  அடுத்தடுத்து 'சங்கரா......' என்றும்,  'எந்தன் நெஞ்சில்' என்றும் வாசித்தபோது 'அடடா..  சினிமா  பாடல்களுக்கு போய்விட்டார்கள்' என்று தெரிய, சற்று யோசித்துப் பார்த்தால் 'நகுமோ' கூட சினிமா பாடலைத்தான் வாசித்திருப்பார்களோ என்று தோன்றியது.  ஆனால் ஹிந்தோளம், ஹம்சநாதம் மட்டும் சினிமா பாடல் இல்லையே என்றும் தோன்றியது.  அப்புறம் ஒட்டகத்தை கட்டிக்கோ எல்லாம் வாசித்தார்கள்.

எப்படியோ..  அப்புறம் வர்கள் மேலிருந்த கவனம் குறைந்துவிட்டது!  சாதாரணமாக சில திருமணங்களில் அவர்களிடம் சென்று 'காபிநாராயணி வாசியுங்களேன்; என்றெல்லாம் கோரிக்கை வைப்பேன்.  இங்கு அதுவும் செய்யவில்லை.  சத்தம் அதிகம் என்பது அதற்கு அப்புறம் மனதில் இன்னும் ஸ்ட்ராங்காக விழுந்து விட்டது.  நிறையபேர் சினிமா பாடல்களை அடையாளம் கண்டு தலையாட்டி ரசித்துக் கொண்டிருந்தார்கள்.  பெரும்பான்மைதான் ஜெயிக்கிறது.

இரவுச் சமையலுக்கு பொறுப்பான ஊழியருடன் தயாராகும் கிச்சன்.

மாலை ஸ்நாக்ஸுக்கு சென்றபோது வரிசையாக இலைகள்.  முன்னதாக எதுவும் பரிமாறப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.  என்ன பரிமாறப்படப்போகிறதோ என்கிற ஆர்வம் இருக்கும்தானே!


மாலை ஸ்நாக்ஸ்.  காசி அல்வா. குடலை இட்லி, போண்டா.  பக்கவாத்யம் சட்னி, மி.பொடி, கெட்டியான சாம்பார்.

போண்டாவும் 

குடலை இட்லியும் க்ளோஸப்பில்!

===============================================================================================




படித்ததும், அதைப் பகிர்வதும் 

சுஜாதாவின் கடைசி நாட்கள்.


27-02-2008 புதன்கிழமை அன்று காலையில், விகடன் ஆசிரியர் திரு.அசோகன் எனக்குப் போன் செய்து, "எழுத்தாளர் சுஜாதா உடல்நிலை சரியில்லாமல், அப்போலோவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். முடிந்தால் ஒரு நடை போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்" என்றார்.
அலுவலகம் போனதும், அன்றைக்கு முடிக்க வேண்டிய இதழுக்கான ஃபாரம் லிஸ்ட் போட்டுக் கொடுத்துவிட்டு, நான் சுஜாதாவைப் பார்க்கக் கிளம்பினேன். வெறுங்கையாகப் போகவேண்டாம் என்பதற்காக ஒரு பெரிய ஹார்லிக்ஸ் பாட்டிலை வாங்கிக்கொண்டு போனேன். விகடன் எடிட்டோ ரியல் அலுவலகத்திலிருந்து பொடிநடை தூரத்தில் அப்போலோ.
ஆஸ்பத்திரியின் மெயின் பில்டிங்குக்குப் போனேன். சுஜாதாவின் இயற்பெயரான ரங்கராஜன் என்ற பெயரைச் சொல்லி, விசாரித்தேன். பக்கத்துக் கட்டடத்தில் முதல் மாடி, 48-ம் எண்ணுள்ள ஐ.சி.யு அறையில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கே போனதும், ஒரு நர்ஸ் மறித்து, "வெயிட்டிங் ஹாலில் டோ க்கன் வாங்கிக்கொண்டு வாருங்கள். அப்போதுதான் அனுமதிக்க முடியும்" என்றாள். அதே பில்டிங்கில் சுற்றிச் சுற்றித் தேடியும் வெயிட்டிங் ஹால் கிடைக்காமல், மீண்டும் ஒரு ஊழியரிடம் கேட்க, அவர் திரும்பவும் என்னை மெயின் பில்டிங்குக்குப் போகச் சொன்னார். அங்கே போய் விசாரிக்க, "நேரா போய் லெஃப்ட்டு!" நேரா போய் லெஃப்டை அடைந்து விசாரிக்க, "உள்ளே போய் ஃபர்ஸ்ட் ரைட்டு!" என அங்கங்கே என்னை மடைமாற்றி, குறிப்பிட்ட வெயிட்டிங் ஹாலுக்குக் கொண்டு சேர்த்தார்கள்.
அங்குள்ள வரவேற்பாளரிடம் என் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, விஷயம் சொல்லி டோ க்கன் கேட்டேன். "சார், டாக்டர்ஸ் ரவுண்ட்ஸ் வந்துட்டிருக்காங்க. அவங்க கீழே இறங்கினப்புறம் நீங்க போகலாம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!" என்றார். டீலக்ஸ் பஸ்ஸின் சொகுசு நாற்காலிகள் போல் போடப்பட்டிருந்த அந்த ஹாலில், ஒன்றில் வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, மூலையாக வைக்கப்பட்டு இருந்த டி.வி-யில் ஓடிக்கொண்டு இருந்த 'சூர்யவம்சம்' தொடரைப் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். என் பெயர் அழைக்கப்படுமா என என் காதுகள் காத்திருந்தன.
முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, அழைக்கப்பட்டேன். வரவேற்பாளர் இன்டர்காமில், "தேவகி! ரவிபிரகாஷ்னு ஒருத்தரை அனுப்பறேன். அவரை ஃபர்ஸ்ட் ஃப்ளோர் 48-ம் ரூமுக்கு அனுப்புங்க" என்றுவிட்டு, "போங்க சார்!" என்றார். "டோ க்கன் சார்?" "தேவையில்லை. அதான், போன்ல சொல்லிட்டேனே!"
போனேன். மறுபடி டோக்கன் கேட்டாள் அந்த நர்ஸ். "நீங்கதானே தேவகி?" என்றதும், சிரித்துக் கொண்டே, "நீங்களா? போங்க" என்று அனுமதித்தாள்.
ஒரே மாடிக்கு லிப்டில் சென்றிருக்க வேண்டியதில்லைதான். அப்போது இருந்த குழப்பத்தில் ஒன்றும் புரியவில்லை. காத்திருந்து, லிப்ட் வந்ததும் ஏறிச் சென்றேன். முதல் மாடியில் வெளிப்பட்டு, தேடித் தேடி, ஐ.சி.யு-வை அடைந்து, 28, 36, 42, 34, 17 என மாறி மாறி இருந்த அறைகளில் குழம்பி, அங்கிருந்த ஒருவரை விசாரிக்க, "இதோ!"
உள்ளே நுழைந்தேன். இருவர் அட்மிட் ஆகும் அறை. முதல் பிளாக் காலியாக இருந்தது. கடந்து உள்ளே போனேன். ஹா... சுஜாதா!
சின்ன வயதில் என்னைத் தன் எழுத்தால் அசர வைத்த சுஜாதா. "இவன் உங்க பரம ரசிகன். உங்க எழுத்துன்னா இவனுக்கு உசுரு!" என்று சாவி அவர்களால் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட சுஜாதா. "எப்படிக் கூட்டினாலும் விடை ஒரே மதிப்பில் வர்றதுக்கு இப்படி ஒரு சுலபமான வழி இருக்கா? கிரேட்!" என்று வியந்து, தனது 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதிய சுஜாதா.
சலனமற்றுத் தலைசாய்த்துப் படுத்திருந்தார். தலை மட்டும்தான் வெளியே தெரிந்தது. உடம்பு எங்கே இருக்கிறது என்று புரியாமல் மேலே துணிகளும் போர்வையும் மூடியிருந்தன. லாலி லாலியாகத் தொங்கும் வயர்களின் நடுவே படுத்திருக்கும் அவரைப் பார்க்க மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அருகில் இருந்த இரண்டு நர்ஸ்களிடம், அவரது நிலை பற்றிக் கேட்டேன். "ப்ச்... நோ ஹோப்! டயலிசிஸ் நடந்துட்டிருக்கு. ஹார்ட் பீட் டவுன் ஆயிருச்சு. வென்டிலேட்டர் வெச்சிருக்கு. தெரியலே... இன்னிக்கோ நாளைக்கோ, ஒரு வாரமோ!'"
"சார் யாரு தெரியுமில்லே... வேர்ல்ட் ஃபேமஸ் ரைட்டர்!" என்றேன்.
"தெரியும். நாங்களும் இவரோட ஃபேன்ஸ்தான்!" - இருவரின் முகங்களிலும் ஒரு வறட்சிப் புன்னகை.
இதே கோலத்தில், இதே அப்போலோவில் என் குரு சாவி அவர்களைப் பார்த்தது ஞாபகத்துக்கு வந்தது.
நர்ஸிடம் சுஜாதாவின் மனைவி தங்கியிருக்கும் அறை எண்ணைக் கேட்டுக்கொண்டு வெளியே வந்தேன். கண்டுபிடித்து, உள்ளே போனேன். ஐந்தாறு பெண்மணிகளுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார். கூடவே, உயரமாக ஒரே ஒரு ஆண். அவர் சுஜாதாவின் மகனாக இருக்க வேண்டும் என யூகித்தேன்.
சுஜாதாவுக்காக வாங்கி, அவரிடமே கொடுத்து, உடல்நிலை விசாரிக்கலாம் என்ற எண்ணத்தில் வாங்கி வந்திருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை, சுஜாதாவின் மனைவி சுஜாதாவிடம் கொடுத்து, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். "தெரியுமே! ரெண்டு மூணு தரம் வீட்டுக்கு வந்திருக்கீங்களே!" என்றார். அதன்பின் சம்பிரதாய விசாரிப்புகள்.
போன வியாழக்கிழமையே, நிமோனியா என அப்போலோவில் கொண்டு வந்து சேர்த்தார்களாம். இரண்டு மூன்று நாளில் குணமாகி, வீட்டுக்குப் போய்விடலாம் என்றிருந்த நிலையில், மீண்டும் உடல்நிலை மோசமாகி, டயலிசிஸ் செய்யவேண்டி வந்து, நேற்று (செவ்வாய்) மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வென்டிலேட்டர் வைத்து, உசிர் ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்றார். "யாருக்குமே இன்னும் சொல்லலை. சங்கருக்குக்கூடத் தெரியாது. (டைரக்டர் ஷங்கரைச் சொல்கிறார் என்பது லேட்டாகத்தான் புரிந்தது.) யாருக்கும் சொல்லவேண்டாம்னுட்டார். 'உடம்பு சரியாகி வீட்டுக்கு வந்துடுவேன். நான் அப்போலோல சேர்றதும், வீடு திரும்பறதும் என்ன புதுசா? வீணா பிரஸ்ஸுக்கெல்லாம் சொல்லி காப்ரா பண்ணவேண்டாம்'னார். அதான் சொல்லலை. நாங்களே அதான் நினைச்சுண்டிருந்தோம். திடும்னு நேத்துலேர்ந்து இப்படி ஆயிடுத்து. ரொம்ப நெருங்கிய சொந்தக்காராளுக்கு மட்டும் சொன்னேன். இனிமேதான் ஒவ்வொருத்தருக்கா சொல்லணும்" என்றார். மாமிக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. ஆறுதல் சொல்லவேண்டியது மாமிக்கு மட்டும்தானா? என்னைப் போன்ற லட்சக்கணக்கான சுஜாதாவின் வாசகர்களுக்கும் அல்லவா?
பின்பு, சுஜாதாவின் மகனிடம் கைகுலுக்கிப் பேசினேன். இவரிடம் போனில் இரண்டொரு முறை பேசியிருக்கிறேன். அப்படியே சுஜாதாவின் குரல். சுஜாதாவிடமே இந்தக் குரல் ஒற்றுமை பற்றி வியந்து பேசியிருக்கிறேன்.
பின் அனைவரிடமும் விடைபெற்று, வெளியே வந்து, சுஜாதாவின் நிலைமை சீரியஸாக இருப்பது பற்றி அசோகனுக்குப் போன் மூலம் தெரிவித்துவிட்டு, வெளியேற வழி தெரியாமல் தடுமாறி, படிகளில் இறங்கி, அலுவலகம் வந்தேன். எம்.டி-யின் நம்பர் கொடுத்து, அவரிடம் பேசி விஷயத்தைச் சொல்லுங்கள் என்றார் அசோகன்.
பேசினேன். சுஜாதா கிடந்த இருப்பைச் சொன்னேன். போனிலேயே விசும்பி, விசும்பி அழத் தொடங்கி விட்டார் எங்கள் சேர்மன் பாலசுப்ரமணியன். "நானும் அவரும் ஒரே வயசு. என்னை விட சில மாசங்கள்தான் மூத்தவராக இருப்பார். நாற்பது வருஷத்துக்கும் மேலான நட்பு" என்று மேலே பேசமுடியாமல் நா தழுதழுத்தார். பின்பு, "என் உடம்பு இருக்கிற இருப்புல எங்கேயும் போக முடியலியே! எனக்காக நாளைக்கு மறுபடியும் ஒரு தரம் போய், மாமி கிட்டே நான் ரொம்ப வருத்தப்பட்டேன்னு சொல்லுங்கோ!" என்றார். அதைச் சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் எதிர்முனையில் அடக்கமாட்டாத அழுகை.
அன்று இரவு, பத்து மணிக்கு அசோகனிடமிருந்து போன்... "சுஜாதா எக்ஸ்பயர்ட்!"
எழுத்துலக சகாப்தம் ஒன்று முடிந்துவிட்டது!
-ரவிபிரகாஷ் (விகடன்)
நன்றி: சுஜாதா தேசிகன்
========================================================================================

கமலா அக்கா தனது சமீபத்து பதிவில் மரங்களை வெட்டியதில், தங்க வீடுகளைத் தொலைத்த பறவைகள் பற்றி எழுதி இருந்தார்.  நானும் அந்த சிந்தனையில் 2013 ல் எழுதிய பழைய கவிதை ஒன்று...


பெட்டைக் குருவி ஒன்று
தான்
நேற்றுக் குடியிருந்த
ஒற்றை மரத்தைத் தேடி
சுற்றி வருகிறது பரிதாபமாய்
அரசியல் காரணங்களுக்காக
வெட்டுப்பட்ட மரம்
வேரோடு வீழ்ந்து கிடக்கிறது மண்ணில்..
உற்றுக் கேட்டால்
கூடு நொறுங்கி
குஞ்சுகள் இழந்த
குருவியின் அழுகையோடு
மரத்தின் மரண வாக்கு மூலமும்
கேட்கலாம்..
உன் தலைவன்
நாளை
இல்லம் சேர்ந்தால்
மறுபடி என்
வேரை மண்ணில் நிறுத்தி
மண் சேர்ப்பாயா மானிடனே... மே 24, 2013

======================================================================================

(விநோதச்) செய்திகள்!



========================================================================================

இணையத்தில் ரசித்த படங்கள்..



=================================================

================================================================================================

ஜோக்ஸ்...







92 கருத்துகள்:

  1. எண்ணிப் பெறுக (வாரிசை/குழந்தையை) பெற்றபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு

    இப்படி அமைந்தால்தான் தளை தட்டாது என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...    எனக்கும் இந்த தளை, தொடை விஷயமெல்லாம் தெரியாது.  நீங்கள் எழுதி இருப்பது சரியாய் வருவதாகத்தான் தோன்றுகிறது.  

      நீக்கு
  2. ஒருவர் மறையும்போது, அவரது பகிராத அனுபவங்கள், பெற்ற அறிவு எல்லாமே பிறருக்குப் பகிரப்படாமல் மறைந்துவிடுகிறது. அது பெரும் சோகம்.

    சுஜாதா மறைவுப் பகுதி எழுத்துலகின் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது இதனுடைய தொடர்ச்சியாகவே, சுஜாதா தேசிகன் எழுதியிருந்த அவர் நினைவைப் பெஇர்ந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதா, தான் பெற்ற அறிவை, அனுபவங்களை 99 சதவிகிதம் பகிர்ந்து விட்டார் என்றே நான் நினைக்கிறேன்.

      நீக்கு
  3. திருமணங்களில் மங்கல வாத்தியம் மிக முக்கியம். இருந்தாலும் இந்த மாதிரி நிகழ்வுகளுக்குச் செல்வதே ஒவ்வொரு உறவினரையும் ஒரே இடத்தில் கண்டு, பேசி மகிழலாம் என்பதுதான். அதற்கு இந்தச் சப்தம் இடைஞ்சல்.

    அது சரி... இசை, கெட்டிமேளம்/வாத்யம் ... இவையெல்லாம் வெற்றுச் சம்பிரதாயங்களாகிவிட்டதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளையாக இந்த மங்கள இசை சம்பிரதாயம் தொடர்கிறது.  நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.  மண்டபம் சிறிது.  கூரை உயரத்தில் இல்லை.  இவர் வாயில் வைத்து பீப்பீ என்று உச்சஸ்வீகாரத்தில் முழங்கி தன் திறமையை காட்டுவானேன்?  இடத்துக்குத் தகுந்தவாறு மெதுவாக வாசிப்பதுதானே திறமை?  நாதஸ்வரம் திருமணத்திற்கு கண்டிப்பாக தேவை.

      நீக்கு
  4. திருமணங்களில், காலை டிபனைச் சாப்பிட்டால், மதிய உணவை என்னால் சாப்பிட முடியாது. வந்திருப்பவர்களோடு அமர்ந்து சாப்பிட்டேன் எனப் பெயருக்கு அமர்வேன்.

    இப்படி உணவை இன்னுமே ரசிக்கமுடியாதபடி, இடையில் ஜூஸ், மாலை ஸ்னாக்ஸ் போன்றவை இடைஞ்சல் பண்ணும்.

    ரிசப்ஷன் டின்னருக்கு முந்தைய ஸ்னாக்ஸ், சாட் போன்றவை, இடையில் வரும் விருந்தினர்களுக்காக மாத்திரம் ஏற்பட்டதோ? அதையும் ஆடம்பரமாக்கியிருக்கிறோமோ? (இந்த ஸ்னாக்ஸ் போன்று பழைய காலத்தில் பரிமாறிய பஜ்ஜி போண்டா, கேசரியை, இப்போது பலவித சாட், ஜூஸ் வகைகள், நூடுல்ஸ் என்றெல்லாம் மாற்றி வெட்டி பந்தா செய்கிறோம் என நினைக்கிறேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை டிஃபனை ரசிக்கலாம்.  இன்னும் ஒன்று, இன்னும் கொஞ்சம் என்று போட்டுக் கொள்ளக் கூடாது.  மத்தியானம் மனதில்  இருக்க வேண்டும்!  முடிந்தவரை சீக்கிரமே காலை டிஃபனை முடித்து விடுதல் நலம்.

      விருந்தின் செலவைக் குறைக்கத்தான் ஜூஸ் போன்ற பானங்களோ என்று நினைத்தால் காலைக்கும் காலைக்கும் அல்லது மதியத்துக்கு, இரவுக்கும் இடைப்பட்ட வேளைகளில் தாகம் வந்து விடுகிறது.  நாக்கு புதிய சுவை ஒன்றுக்கு தவிக்கிறது!!

      பஜ்ஜி போண்டா பழைய காலத்துக்கும் இன்றைக்கும் நடுவில் நாம் காரணங்களைத் தொலைத்து விட்டு காரியங்களை கையில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.  ஊர் கூடி சமைக்கும்போது  இரவு உணவு சற்று தாமதமாகலாம்.  நடுவில் குழந்தைகள் பெரியவர்களுக்கு முக்கியமாகவும் மற்றவர்களுக்கும் என்று சிறு உணவு - சிற்றுண்டி - தரும் பழக்கம் இருந்திருக்கலாம்!

      நீக்கு
  5. காட்சிப்பிழை அழகு. விநோதச் செய்திகள் ஏற்கனவே படித்தவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்சிப்பிழை கவர்ந்ததால்தான் பகிர்ந்தேன்.  விநோதச் செய்திகள் சற்றே அதிர வைக்கவில்லையா?

      நீக்கு
  6. மாலை டிபன் பந்திக்கு முந்தியருக்கீங்க.

    கல்யாண சமையல் காய்கறி திருத்தும் ப்ரிபரேஷனைப் படமெடுக்கக்கூடாது.

    சுத்தம் பல்லிளிக்கும், யாராக இருந்தாலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்து, பகிரலாம் என்னும் அளவு சுத்தம் இருந்ததால்தான் பகிர்ந்தேன்.  மேலும் அவர் அனைவரும் சாப்பிடும் டைனிங் ஹாலிலேயே எல்லோரும் கைகழுவச் செல்லும் வழியில் அமர்ந்து திருத்திக் கொண்டிருந்தார்!

      நீக்கு
    2. பொதுவா கேடர்ர்களுக்கு காய்களைஅலம்பும் வழக்கம் கிடையாது. திருத்தும் இடமும், முறையும் சுத்தமாக இருக்காது.

      நீக்கு
    3. கொல்லைப்பக்கம்​ பெரிய பிரியாணி பாத்திரம் போன்ற ஒன்றில் குழாயின் கீழ் வைத்து அலம்பியதை நான் ஒரு சேலத்து திருமணத்தில் பார்த்திருக்கிறேன்!

      நீக்கு
  7. விரதம் வேறு, நாந்தி வேறு. விரதம் என்பது திருமணத்தை நல்லபடியாக முடிப்பேன் என்று சம்பந்தப்பட்ட பெண், பையன் அவர்களுடைய பெற்றோர்கள் உறுதி எடுத்துக் கொண்டு கையில் கங்கணம் கட்டிக் கொள்வது. ஏதாவது ஒரு விஷயத்தை முடித்தே தீருவேன் என்று உறுதியாக இருப்பதை "இதை முடிச்சே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறான்(ள்)" என்று சொல்ல மாட்டார்களா?
    நாந்தி என்பதை நாந்தி சிரார்த்தம் என்பார்கள். முன்னோர்கள் வழிபாடு. முன்னோர்களாக பிராமணர்களை வரித்து, அவர்களுக்கு அரிசி, வாழைக்காய், வேஷ்டி கொடுத்து வணங்குவது. ஆசாரத்தை அனுஷ்டிப்பவர்கள் நாந்தியை முதல் நாளே வீட்டில் செய்து விடுவார்கள். அல்லது நாந்தியை திருமணத்திற்கு முதல் நாள் செய்து விட்டு, திருமணத்தன்று காலை விரதம் செய்வதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​வாங்க பானு அக்கா... விரதம் - நீங்கள் சொல்வது எனக்கும் தெரியும்.  ஆனால் நிறைய குடும்பங்களில் இதை விரதம் என்றுதான் அழைக்கிறார்கள்.  குறிப்பக வைஷ்னவக் குடும்பங்களில்.  நாங்கள் நாந்தி என்றுதான் சொல்வோம்.  நெல்லை விளக்கம் அளிக்கலாம்.  நாந்தி சமயம் மாப்பிள்ளை, பெண், மற்றும் அவர்கள் பெற்றோர் முன்னும் பின்னும் ஒன்றும் சாப்பிடக்கூடாது என்பதாலும் இருக்கலாம்.

      நீக்கு
    2. நாந்தி - விரதம் எப்போதுமே திருமணத்துக்கு முந்தையநாள் காலைதான்.

      நீக்கு
    3. வைஷ்ண்வ குடும்பங்களில் நாந்தி என்று சொல்லமாட்டாங்க. விரதம் என்றுதான். பொதுவாக கல்யாணத்தோடுதான் விரதம், எல்லாம் செய்யப்படுகிறது. நான் பார்த்த வரையில். எங்கள் வீட்டுக் கல்யாணங்களில் 40 வருடங்களுக்கு முன்புமே....இத்தனைக்கும் குடும்ப வாத்தியார், திருவனந்தபுரத்தில் அப்போது ரொம்பவே அறியப்பட்ட வைதீகர்! இப்போது அவர் இல்லை.

      கீதா

      நீக்கு
    4. நாந்தி சமயம் மாப்பிள்ளை, பெண், மற்றும் அவர்கள் பெற்றோர் முன்னும் பின்னும் ஒன்றும் சாப்பிடக்கூடாது என்பதாலும் இருக்கலாம்.//

      அதேதான் ஸ்ரீராம். பார்க்கப் போனா முதல் நாளில் இருந்தே விரதம் இருக்கணுமாம். காப்பு கட்டுவாங்க....ஆனா அப்படி எல்லாம் இல்லையே இப்பவும் சரி 40 வருடங்களுக்கு முன்ன நடந்த நம்ம வீட்டுக் கல்யணங்களிலும் சரி.

      கீதா

      நீக்கு
    5. நாந்தி - விரதம் எப்போதுமே திருமணத்துக்கு முந்தையநாள் காலைதான்.//

      ஆமா...

      ஆனா ஒரு சில கல்யாணங்களில் நேரப் பற்றாக்குறை என்றால் முகூர்த்தம் தாமதமாக இருந்தால் அதிகாலையில் செய்யறாங்க. இது ஒரு பக்கம் நடக்கும், ஜாதகநாமகரணம் பெண்ணுக்கு இன்னொரு பக்கம் நடக்கும்.

      அதிகாலை, சீக்கிரம் முகூர்த்தம் என்றால் முதல் நாள்...

      கீதா

      நீக்கு
    6. // ஆனா ஒரு சில கல்யாணங்களில் நேரப் பற்றாக்குறை என்றால் முகூர்த்தம் தாமதமாக இருந்தால் //

      அது பெரும்பாலும் ஒரு நாள் அட்ஜஸ்ட் திருமணமாக இருக்கலாம் கீதா.  நன்றி மற்ற விளக்கங்களுக்கும். வைஷ்ணவத் திருமணம் ஒன்றில் விரதம் என்று சொல்லப்பட்டபோது ஏன் நாந்தி என்று சொன்னால் என்ன என்று நான் கேட்டிருக்கிறேன்.

      நீக்கு
  8. Optical illusion படங்கள் அருமை.
    மரம் வெட்டப்பட்டதால் வீடுகளை இழந்த பறவைகள் பற்றிய கவிதையும், சுஜாதாவின் கடைசி நாட்கள் கட்டுரையும் நெகிழ்ச்சி! கடைசியாக உடல் நிலை பாதிக்கப்பட்டபொழுது ஆஸ்பத்திரிக்கு செல்ல சுஜாதா விரும்பவில்லை, "போறுமே, இனிமே என்ன இருக்கு?" என்று மருத்துவமனைக்கு வர முரண்டு பிடித்தார் "எப்போதும் இப்படி சொல்ல மாட்டார், இந்த முறை அப்படி கூறினார்" என்று அவர் மனைவி கூறியிருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  நன்றாக இருந்ததால்தான் அனைவரும் ரசிப்பார்கள் என்று பகிர்ந்தேன்.  ரசிக்கப்படுவது மகிழ்ச்சி.  கமலா அக்கா தளத்தின் சமீபத்தைய பதிவு காரணமாகவே அதுபோலவே நான் எழுதி வைத்திருந்த பழைய கவிதையைப் பகிர்ந்தேன்.  எழுதிய வருடத்தை கவனிக்கவும்!

      சுஜாதா தனது ஆஸ்பத்திரி அனுபவங்களை கற்றதும் பெற்றதுமில் எழுதி இருக்கிறார்.  அங்குதான் அவர் ப்ரக்ராஸிவ் காம்ப்ரமைஸ் பற்றி சொன்னதும்.  நீங்கள் சொல்லும் விஷயம் கேள்விப்பட்டது போலதான் இருக்கிறது.

      நீக்கு
    2. 13 லியே அப்படினா பாருங்க இப்ப எவ்வளவு அழிஞ்சுருக்குன்னு!!!

      கீதா

      நீக்கு
  9. சுருக்கமான செய்திகள் நன்று, தொடரலாம். ஜோக்ஸ் ஓகே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தச் செய்திகளை படித்ததும் எனக்கு பகிராமல் இருக்க முடியாது. விரல்களில் எல்லாம் அரிப்பு!!!

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​வாங்க கமலா அக்கா... வணக்கம். பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  11. தற்போதும் விரிவான இரண்டு நாள், மூன்று நாள் திருமணங்கள் நடக்கிறதா? சாப்பாட்டுக்கே செலவு செய்து எல்லோருக்கும் சக்கரை வியாதியை கொடுத்து அனுப்புவார்கள் என்று தோன்றுகிறது.

    இங்கு கேரளத்தில் திருமண விருந்து என்பது ஒரு வேளை சத்ய மட்டும்தான். திருமணமும் 5 நிமிடங்களில் முடிந்து விடும். தற்போது கோயில்களில் தாலி கட்டி, அடுத்துள்ள ஹோட்டலில் விருந்து ஏற்பாடும் செய்வது வழக்கமாகி வருகிறது.

    இசை, ராகம் இவற்றிற்கும் எனக்கும் காத தூரம். இங்கு என்றில்லை எங்கும் அதே போல் கேரளத்திலும். இசை கச்சேரிகள் அபூர்வம்.

    சுஜாதா இறப்பு பற்றிய முக நூல் பதிவு முன்பே வாசித்தது தான்.

    வெட்டிய மரம் துளிர்க்குமோ
    சென்ற உயிர் திரும்புமா

    Kindle and other digi-media have buried the normal, formal libraries. Most libraries have started a backup by digitising their stock.

    இந்த வார பதிவில் போண்டா அதிகம் இடம் பெருகிறேதே. கல்யாண விருந்தில், போண்டா படங்கள், போண்டா ஜோக் என்று.

    குடும்பக்கட்டுப்பாடு ஜோக் தேவையா? அர்த்தம் வேறாகிறதே.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்..  முதல் வரியைப் படித்ததுமே சிரித்து விட்டேன்.  

      கல்யாணங்களில் சாப்பாடுதான் பிரதானம்.  

      இதோ நான் கலந்து கொண்ட இந்தத் திருமணம் கூட மூன்று நாள் கல்யாணம்தான்.  அல்லது இரண்டரை நாள் கல்யாணம் என்று கூட சொல்லலாம். 

      முதல் நாள் காலை நாந்தி, மாலை நிச்சயதார்த்தம் மற்றும் வரவேற்பு, மறுநாள் திருமணம், அந்தந்த குடும்ப வழக்கங்களின்படி திருமணத்துக்குப் பின்னான வேறு தொடரும் சம்பிரதாயங்கள், மாலை நலங்கு, விளையாடல் இரவு சாந்தி முகூர்த்தம், மறுநாள் கட்டுசாதம் கூடை.  பத்தரை மணி பதினோரு மணி போல சத்திரம் காலி செய்து விடுவார்கள். 

      இதே வழக்கம்தான் என் மகன் திருமணத்திலும் நடந்தது.

      நீக்கு
    2. கேரளா திருமண முறை எல்லோரும் பின்பற்றவேண்டியது.  நிச்சயம் சிக்கனம், நேர விரயமும் தவிர்க்கப்படும்.  அலுவலகங்களில் வேலை செய்வோருக்கு இந்த மூன்று நாள் திருமணங்கள் அலர்ஜி.  கலந்து கொள்ளவும் முடியாது, கலந்து கொள்ளாமல் இருக்கவும் முடியாது!

      நீக்கு
    3. இசை ராகம் தனிமனித அனுபவங்கள்.  அவரவர் ரசனைக்குத் தக்கபடி.  80% நாதஸ்வர இசையை மதிக்கவே மாட்டார்கள்!

      அந்தக் காலத்தில் பாலமுரளி, MLV உட்பட பல பிரபலங்கள் திருமணங்களில் பாடியதுண்டு, பாவம்.

      நீக்கு
    4. எனக்கு கூட லைப்ரரி சென்று நாட்களாச்சே என்று தோன்றியது. 

      இந்தக் காலத்தில் நூலகங்களின் உபயோகிகம் எந்த அளவில் இருக்கிறது என்று தெரியவில்லை.  மேற்படிப்பு படிப்பவர்களுக்கும், பொழுதுபோகாத சீனியர் சிட்டிசன்களுக்கும்தானா என்று தெரியவில்லை.

      குடும்பக்கட்டுப்பாடு ஜோக்...   தப்புதான் இல்லை?  அவர்கள் பகிர்ந்திருந்தார்களே என்று நானும்...

      நீக்கு
    5. கேரள பிராமண திருமணங்கள் அப்படி நடந்தால் மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த ஜெனரேஷன் கண்டதையெல்லாம் காப்பியடித்து, மெஹந்தி, மஞ்சள் குதூகலம்..... பணத்தை வீணாக்குகிறார்கள். அந்தப் பணம் அவங்க வாழ்க்கைக்கு மிக உபயோகம் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

      நீக்கு
    6. கேரள பிராமண திருமணங்கள் இன்னும் அப்படி ஆகவில்லை, நெல்லை. இதே மூன்று நாள் திருவிழாவை விடவில்லை.

      ஜெ கெ அண்ணா சொன்னது போல கேரளத்துக் கல்யாணங்களை நாம் பழகினால் நல்லது.

      நெல்லை, நாம் அடிக்கடி சொல்வது, வட இந்திய இந்த மெஹந்தி, மஞ்சள் குதூகல விழா எல்லாம் இங்கும் வதுவிட்டதுன்னு.

      ஆனால் முன்ன காலத்தில் இங்கும் மருதாணி இடும் நாள் என்று அத்தனை இளசுகளும் மாமிகளும் சேரும் நாள் உண்டாம். அது போல பெண்ணிற்கு, நெருங்கிய உறவினர் எல்லாரும் வந்து மஞ்சள் பூசிக் குளிக்க வைக்கும் நாள், சுமங்கலிப் பிரார்த்தனை, பந்தக்கால் நடும் நாள், ஜானவாசம், கல்யாணம், சம்பந்தி போஜனம் என்று....அப்புறம் மறுவீடு அழைத்தல் என்று இப்படி ஒரு வாரம்...

      சமீபத்தில் கூட நம்ம மக்கள் அமெரிக்காவில் இருக்கறவங்க தன் பெண்ணுக்குக் கல்யாணத்தை இங்கு சென்னையில் மேலே சொன்னாப்ல ஒரு வாரம் கொண்டாடறாங்க. பையன் பெற்றோர் பார்த்த பையன் தான்.

      கீதா

      நீக்கு
    7. எப்படியான கல்யாணம் என்றாலும் என்னைப் பொருத்தவரை ஒரு நேரம் ஒரே ஒரு நேரம் தான்....3 மணி நேரத்துக்குள் முக்கியமான நிகழ்வுகளை முடித்துச் செலவு செய்யாமல் அந்தப் பணத்தைக் குழந்தைகளின் எதிர்காலத்துக்குக் கொடுக்கலாம்.

      கீதா

      நீக்கு
    8. அந்தக் காலத்தில் பாலமுரளி, MLV உட்பட பல பிரபலங்கள் திருமணங்களில் பாடியதுண்டு, பாவம்.//

      ஆமாம் பாவம் என்பேன். இப்பவும் பாடறாங்களே! ஆனால் பணம் கிடைக்கிறது என்றாக இருக்கலாம். அவங்க சம்மதிப்பதால்தானே ஏற்பாடு செய்யறாங்க இல்லையா?

      கீதா

      நீக்கு
    9. அந்தக் காலத்தில் மூன்று நாட்கள் அல்ல, ஐந்து நாட்கள் நடக்கும் திருமணங்கள். ஏன் என்று காரணம் தேடிப்போனால் பல விவரங்கள் கிடைக்கலாம்! சமயங்களில் சில திருமணங்கள் ஒரு வாரம் கூட நடக்கும்.

      நீக்கு
    10. கீதா ரங்கன்(க்கா), ஸ்ரீராம் - அந்தக் காலத்தில் திருமணம் 2 குழந்தைகளுக்கு. அதனால மருதாணி இட்டுவிடுவது, என்று பலவித நிகழ்வுகள். அப்புறம் ஊர் கூடி திருமணம் நடக்கும். இப்போ மாதிரி வேளைக்கு ஒரு டாம்பீக உணவு என்றெல்லாம் கிடையாது. வண்டி கட்டிக்கொண்டு வந்த உறவினர்கள், ஒரு வாரம் சாவகாசமாகப் பொழுது போக்கி, உறவினை வளர்த்து திருமண நிகழ்வில் பங்குகொண்டு, போகும்போது கட்டுச்சாதம் இனிப்பு வகைகளைக் கொண்டு செல்வாங்க. இப்போ காலமே முழுவதுமாக மாறிவிட்டது. இருந்தாலும், வாத்தியார் பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பிப்பதற்கு முன்பு, ஒரு பூனையைத் தேடி, கயிறு கொண்டு கட்டிவிட்டு ஆரம்பிப்பதுபோல எல்லாவற்றையும் தொடர்கிறோம், அர்த்தம் இல்லாமல். இதைச்சாக்கிட்டு மண்டபம், கேடரர், புகைப்படக்காரர் (இதைப்பற்றி விவரமாக கிண்டலாக எழுதலாம். இதெல்லாம் ஒரு தொழிலா என்று என் மனதுக்குத் தோன்றும்), மேடை அலங்காரம் என்று வரிசையாக பலருக்கு பொருளாதாரம் ஏறும்.

      நீக்கு
    11. அது தெரியும் நெல்லை....அந்தக் காலத்துல 12 வயசுக்குள்ள = என் பாட்டி கல்யாணம் எல்லாம் - அப்படிச் சொல்லித் தெரிந்து கொண்டதுதான்.

      இப்ப அப்படி இல்லை என்பதும் நிறைய விரயம் என்பதும் என் கருத்து அதுதான்

      கீதா

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. தொடர் உ. தி. வி. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பாடல்களையும், ராகங்களையும், கேட்டு, செவிக்கும் உணவைத்தந்து ரசித்தது சிறப்பு. செவிக்குணவு தந்தவர்களை பாராட்டி வந்ததும் நன்று.

    இந்த மாதிரி சிலர்தான் இருப்பார்கள். மற்றபடி பாடுபவர்களைப் பற்றியோ, இசைக்கருவிகளை இசைப்பவர்களைப் பற்றியோ சிறிதும் கவலையுறாமல், தங்கள் மனம் போனபடி நல்லதும், கெட்டதுமாக அங்கு வந்த தன் உறவுகளோடு பேசுபவர்களை அதிகம் கண்டுள்ளேன். சிலர் தெரிந்த சினிமா பாடல்களுக்கு மட்டுமே தலையாட்டி தன் ரசனையை தெரிவிப்பார்கள். சிலர் தலையாட்டும் போதே உறவுகளின் பேச்சுக்கு கமெண்ட் அடித்து சத்தத்தோடு, சத்தமாக சிரித்து அனைவரையும் கவரப் பார்ப்பார்கள். இப்படி சில மனிதர்களின் பண்புகளில் பல ரகங்கள்.

    டிபன் வகையறாக்கள் நன்றாக உள்ளது. குடலை இட்லியா? இப்போதுதான் பார்க்கிறேன். சமீபத்தில் எந்த ஒரு திருமணத்திற்கும் செல்வதில்லை. முடிந்ததால் குழந்தைகள் சென்று வருவார்கள். நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  கல்யாணத்தை உண்ணும் திருவிழா என்றே பெயர் சூட்டி விட்டீர்கள்.  JKC  ஸாரும் அவ்வண்ணமே சொல்லியுள்ளார் என்பதை குறித்துக் கொள்கிறேன்!  என் பகிரும் ஸ்டைல்தான் காரணம் என்று தெரிகிறது.  கல்யாண சம்பிரதாயங்களையும் காட்டி விளக்கம் அளிக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.  அடுத்த திருமணங்களில் முயற்சிக்கிறேன்.

      குடலை இட்லி அல்லது காஞ்சிபுரம் இட்லி..  பெரிதாகச் செய்து அடுக்கை வெட்டி பரிமாறி இருக்கிறார்கள்.  ஜாக்கிரதையாக சாப்பிட்டேன்.  தேவை காலில் விழுந்தாள் கட்டைவிரல் வீங்கி இருக்கும்.  (இது மாதிரி கமெண்ட்களை என் மகன்கள் விரும்புவதில்லை.  'அப்பா ஏன்பா குறை சொல்றே' என்பார்கள்.  இந்தத் திருமணத்திலும் கேட்டரரிடம் நான் சொன்னதைக் குறிப்பிட மறந்து விட்டேன்.  அடுத்த வாரம் பகிர்கிறேன்..  அடுத்த வாரமுமா என்று மயக்கம் போட்டு விழுந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  இன்னும் ஓரிரு வாரங்களுக்கு இதே தொடரும் என்பதை ஆழ்ந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்)

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    கவிதை அருமை. என்னை நினைவு வைத்துக் கொண்டு தாங்கள் முன்பே பகிர்ந்த கவிதையை இன்றைய வியாழனில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. படித்ததும் மனதிற்குள் ஒரு வலி வந்தது. அந்த குருவி மட்டுமல்லாமல், மனிதர்களாகிய நமக்கும் எதிர்கால விளைவுகளை மறைத்து வைத்து மறைந்திருந்து விளையாடுவதும் இறைவனின் செயல்தானே !! நாளை நடப்பதை யாரரிவார் பராபரமே என்ற சிந்தனையும் நம்மால் எந்நாளும் உணரப்படுவதில்லையே..! வாழ்க்கையே ஒரு போராட்டந்தான். அதீத மகிழ்வும் நமக்கெனவே இறைவன் உண்டாக்கும்/ தோற்றுவிக்கும் ஒரு அஸ்திரந்தான். (இங்கு நடந்த நேற்றைய நிகழ்வை பார்த்ததில் மனம் வலித்தது.) நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவுக்கும் சுட்டி கொடுத்திருக்கிறேன், பார்த்தீர்களா?  எந்த வருடம் எழுதியது என்பதையும் கவனித்திருப்பீர்கள்!!!

      நீக்கு
  14. பதில்கள்
    1. முருகா சரணம்.  வாங்க செல்வாண்ணா..  வணக்கம்.

      நீக்கு
  15. // 'தண்ணி வேணுமா',
    'தூத்தம் தரட்டா'.
    'ஜலம் கொண்டு வரவா' போன்ற விசாரிப்புகளுக்கு..//

    வாட்டர் வேணுமா?..ந்னு விசாரிச்சதை விட்டுட்டேளே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரும் அப்படி ஜாரிக்கலையே....

      அது மூன்றுபேர் மூன்று விதமாக கேட்டதைச் சொல்லி இருக்கிறேன்.

      நீக்கு
  16. முதல் பகுதி ரசனை...

    பொக்கிஷம்...
    ஆகா!

    பதிலளிநீக்கு
  17. நிச்சயமாக, நாதஸ்வர இசை டெசிபல் குறைக்கலாம். அதுக்கான சவுண்ட் ப்ரூஃப் சுவர்கள் இருந்தால் நல்லது...

    அல்லது மண்டபம் மிகவும் பெரிதாக இருக்க வேண்டும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மண்டபங்கள் ஒத்துழைக்க வேண்டும். பணம் பண்ணும் நோக்கில் அவசரக் கோலத்தில் கட்டப்படும் திருமண மண்டபங்களில் இவற்றை எதிர்பார்க்க முடியாது. அவசரக்கோலம் என்பதற்கு ஒரு உதாரணம் வரும் வாரங்களில் எப்படி என்று காட்டுகிறேன்!

      நீக்கு
    2. அதேதான் ஸ்ரீராம்...

      காட்டுங்க காட்டுங்க!!! நாங்களும் அதுக்கு எசப்பட்டு பாட தயாராகிறோம்!!!!

      கீதா

      நீக்கு
  18. நாதஸ்வரத்தின் சத்த்த்தைக் குறைத்து வாசிக்க முடியும், ஸ்ரீராம். அதற்கு நல்ல அனுபவம் தேவை. அதுவும் மிகச் சிறிய கட்டிடத்திற்குள் வாசிக்க, நாபியிலிருந்து கொண்டு வரும் காற்றையும் அழுத்தத்தையும் சரியாக உபயோகித்து வாசிக்க நல்ல அனுபவம் தேவை. அனுபவஸ்தர்களால் வாசிக்க முடியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்.  இவர்கள் தங்கள் திறமையைக் காட்ட வாசித்தார்கள் போலும்.

      நீக்கு
  19. மேலே கருத்தின் கூட ஒரு வரி - இல்லைனா நாதஸ்வரத்தின் கீழே உள்ள ஓட்டையில் உள்ள வேக்ஸ் ப்ளக்குகளை அட்ஜஸ்ட் செய்து குறைக்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? எனக்கு ஐடியா இல்லை!

      நீக்கு
    2. கீதா ரங்கன் கருத்து எனக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறது.

      'அடச்சே..இந்தக் கோஹ்லியைப் பாரு. பேட்டை இப்படிக்கா திருப்பி அதை பவுண்டரிக்கு அனுப்பறதை விட்டுட்டு கட்டை போடறான். அந்த பாலை மேலே அடித்திருந்தால் சிக்சர் பறந்திருக்கும். ஐயோ..காலை இப்படி வைக்கிறானே, கொஞ்சம் முன்னால் கொண்டுவந்து கவர் டிரைவ்-அது எங்க இருக்குன்னே சொல்றவனுக்குத் தெரியாது, அடித்திருக்கலாம். சே..கேவலமாத் தோத்துட்டானுவ

      என்று பேசுவதை நினைவுபடுத்துகிறது. ஹா ஹா ஹா

      இருந்தாலும் அடுத்த முறை ஒரு நாகஸ்வரமே அவருக்கு அன்பளிப்பா கொடுக்க நினைத்திருக்கிறேன்.

      நீக்கு
    3. ஹாஹாஹஹாஹா.....நெல்லை கொடுங்க ப்ளீஸ் எனக்கும் மூச்சுப் பயிற்சிக்கு சோதனை செஞ்சிடலாம்......இதயம் நுரையீரல் எல்லாம் நல்லாருக்கான்னு!!!! உங்களுக்கு எல்லாம் வாசிச்சும் வேணா காட்டறேன், என்ன தில்லானா மோஹனாம்பாள் மனோரமா மாதிரி வாசிப்பேன்..ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    4. அப்படியா? எனக்கு ஐடியா இல்லை!//

      ஸ்ரீராம், எனக்கும் ஐடியா எதுவும் இல்லை தெரிந்து கொண்டதுதான்......நெருங்கியவர் ஒருவர் வித்வானிடம் புல்லாங்குழல் கற்றுக் கொண்ட போது, அந்த வித்வான் நாதஸ்வரமும் வாசிக்கக் கூடியவர். அப்படித் தெரிந்து கொண்டது.

      கீதா

      நீக்கு
  20. நாதஸ்வரம் இருந்தால் பேசுவது மிகவும் அசௌகரியமாக இருக்கும். அதுவும் என்னைப் போல் மூன்றாவ்து காதுடன் வலம் வருபவர்களுக்கு ரொம்ப ரொம்ப சிரமம், ஸ்ரீராம்.

    நான் பேசவே மாட்டேன். இல்லைனா சைகையில் சொல்லிவிட்டு, சத்தம் இல்லா பகுதிக்குச் சென்று பேசுவது அலல்து நாதஸ்வரம் இசை நிற்கும் சமயத்தில். தொண்டையும் போகும் காதும் போகும்

    பாவம் அக்குழந்தைகள்,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்தமாக பேசுவோம்.  எதிராளிக்கு காதிலேயே விழாது.  திரும்பத் திரும்ப கத்துவோம்.  விழாது.  கடைசியில் எரிச்சலில் அவர் காதில் எங்கே விழப் போகிறது என்று 'டேய் செவிட்டுக் கம்மனாட்டி..  என்னால் இவ்வளவுதான் கத்த முடியும்' என்று கத்த ஆரம்பிக்கும் நொடியில் நாதஸ்வர ஓசை சுத்தமாக நின்று மண்டபத்தில் பின் டிராப் சைலன்ஸாக இருந்து அசடு வழிய வைக்கும்.   ஒருவரை அப்படி வழிய வைத்த அனுபவம் அது.  அவர் உபயோகித்தது இன்னும் கெட்டவார்த்தை.

      நீக்கு
    2. ஹாஹாஹா சிரித்துவிட்டேன், ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  21. என் இருமல் தண்ணீர் வெந்நீருக்கு அடங்காது என்பது எனக்கும் என் பாஸுக்கும்தான் தெரியும்.//

    ஹாஹாஹாஹா.... +1 ஹிஹிஹிஹி...எனக்கும் அந்த ரகசியம் தெரியுமாக்கும்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி... அந்த நொடி இப்போதெல்லாம் தலையை இடம் வலமாக ஆட்டி சமாளித்து விடுகிறேன்!

      நீக்கு
  22. நாதஸ்வர பாடல்களை விவரித்த விதம் ரசித்தேன் ஸ்ரீராம் சிரிக்கவும் செய்தேன்....

    ஹைஃபைவ் ஸ்ரீராம் பாராட்டும் பழக்கம் உண்டு மீக்கும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி யாராவது ஒருவராவது ரசித்தால்தான் எழுதியவருக்கு திருப்தி!  நன்றி கீதா.

      நீக்கு
  23. அப்புறம் ஒட்டகத்தை கட்டிக்கோ எல்லாம் வாசித்தார்கள்.//

    ம்ம்ஹூம்.....மீ - ஓடிடுவேன்!!! எனக்கென்னவோ கல்யாணங்களில் இப்படியான சினிமா பாடல்களை வாசிப்பதை ரசிக்க முடிவதில்லை. கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் வாசித்தால் பிடிக்கும் அப்படியான பாடல்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பாடல் மட்டுமல்ல, மணமகளே  மருமகளே வா வா, எந்தன் கண்ணில் நீங்காத, கண்ணோடு காண்பதெல்லாம் என்று ஒரே திரையிசை மயம்தான்!

      நீக்கு
  24. பெரும்பாலும் ஸ்னாக்ஸ் நேரங்களில் முன்னதாகப் பரிமாறப்படுவதில்லை, ஸ்ரீராம்....அதெல்லாம் மதியம், இரவுதான்

    அட குடலை இட்லி போட்டுருக்காங்களே!

    பானுக்கா போல ஸ்ரீராமிற்கு நான் என்ன போஜன எசைப்பட்டு பாடலாம்னு பார்த்தால், ஒன்றும் தேறவில்லை. போனாத்தானே!!! ரொம்ப வருஷமாச்சு இப்படியான விருந்துகளுக்குப் போய்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்னவோ இப்போதெல்லாம் நிறைய விருந்து, திருமண அழைப்புகள் வருகின்றன எனக்கு..  முடிந்த வரை நானும் தவற விடுவதில்லை!

      நீக்கு
  25. ரவிபிரகாஷ் அவர்களின் இந்தப் பதிவை, சுஜாதா தேசிகன் அவர்களின் பக்கத்தில் வாசித்திருக்கிறேன்.

    ரொம்ப ஆழ்ந்து வாசித்த பதிவு. அங்கு, ரவிபிரகாஷ் அவர்களின் பதிவுகள் எல்லாமே வாசித்திருக்கிறேன்....ஆவியில் சேர்வதற்கு முன்னான, திரு சாவி அவர்களுடனான அவரது அனுபவங்கள், சுஜாதா குமுதத்தில் இருந்த போதானது, சுஜாதாவிடம் வேலைக்குக் கேட்டது....அவர் சொன்னது...என்று எல்லாமே....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ரசிகன் ரவிபிரகாஷ் பக்கத்துக்கு எப்போதோ ஒருமுறை சென்றிருக்கிறேனே தவிர, இதெல்லாம் அங்கு வாசித்ததில்லை.  இருக்கவே இருக்கிறார் நமக்கு கந்தசாமி ஸார்!

      நீக்கு
  26. மருத்துவமனையில் ஒருவரைப் பார்க்கச் செல்ல, அதுக்காகவே பிறந்த!!! ஹார்லிக்ஸ், அல்லது சாத்துக்குடி வாங்கிச் செல்லும் நாட்கள் அவை!! இப்போதெல்லாம் அவுட் ஆஃப் டேட் இவை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதும் இவைதான் கீதா.  அஞ்சு ரூவா ஹார்லிக்ஸ் பாக்கெட் கூட வாங்கித் தந்திருக்கிறோம்.  நேற்று கூட!

      நீக்கு
    2. அட! ஸ்ரீராம் இதை ஹார்லிக்ஸ் பார்த்துச்சுனா நல்ல விளம்பரம் ஆகிடுமே!!!

      கீதா

      நீக்கு
  27. ஸ்ரீராம் கவிதை அருமை. வாசித்த ஒன்றுதான் என்றாலும்....மீண்டும் ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. வினோதமான செய்திகள்தான், ஸ்ரீராம். லிங்க் கொடுக்கலையோ?

    செய்தியை இணையத்தில் கொடுத்து எடுத்து வாசிக்கப் பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லிங்க் கொடுக்கவில்லை கீதா.  படத்தோடு வெளியிட்டதால் முடியவில்லை!

      நீக்கு
  29. stairway to heaven - பிரமித்துப் பார்த்தேன். என்ன அழகான சிந்தனை மற்றும் படைப்பு!!

    மூழ்கும் நூலகம் அந்த அமைப்பு சிம்பாலிக்காக அப்படி எழுப்பப்பட்ட ஒன்றோ...அழகா இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  30. முதல் ஜோக் புன்னகைக்க வைத்தது. இரண்டாவது ஜோக் பழசோ? வாசித்த நினைவு.

    மாடர்ன் குறள் சூப்பர்!!!!!

    144 - கும்பல் - ஹிஹிஹிஹி

    கடைசி சொல்லாடலை ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  31. ஆம், நீண்ட நாள் கழித்து சந்திப்பவர்களுடன் பேச முடியாத சூழலைத் தருகின்றன எவ்வளவு அருமையாக இருந்தாலும் இசை நிகழ்ச்சிகளின் டெஸிபல் லெவல். கத்திப் பேசி தொண்டை வலியை இழுத்துக் கொள்கிறோம். நான் கலந்து கொண்ட பெங்களூர் திருமண நிகழ்வுகளில் இதில் கவனமாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. தமிழகத்தில் பல ஊர் திருமணங்களில் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. நாதஸ்வரத்தை சத்தமாக வாசிப்பதற்கு ஒரு காரணமும் சொல்கிறார்கள். எந்த விதமான நெகடிவ் வைப் இருந்தாலும் அவை இந்த இசை சப்தத்தில் கரைந்து காணாது போய் விடுமாம்.

    கவிதை உருக்கம். எழுத்தாளர் சுஜாதாவின் கடைசி தினங்கள்.. கலங்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தாலி கட்டும் நேரம் மங்களம் இல்லாத சொற்கள், தும்மல் போன்றவை காதில் விழக்கூடாது என்பதற்காகவே கெட்டிமேளம் அடிப்பார்கள். நாதஸ்வரம் அது போல தான். நன்றி ராமலக்‌ஷ்மி

      நீக்கு
  32. நாதஸ்வரம், இன்னொன்று சாக்ஸபோன் இரண்டும் மெலிதாக இனிமையாக வாசித்தால் காதுகளை தொந்திரவு செய்யாது.
    அதிக சத்தம் எனக்கும் ஒத்துக் கொள்வது இல்லை.

    நமக்கு தெரிந்த பாடல்களை வாசிக்கும் போது மனம் மகிழும்.

    உறவுகள், நட்புகளை சந்தித்து உரையாட முடியாது என்பது உண்மை.

    காலிப்பிளவர் வாடி கறுத்து போஉ இருக்கிறது.
    உணவு மெனு படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிக சத்தம் யாருக்குமே ஒத்துக் கொள்வதில்லை தான். ஆனால் திருமணம் நடத்துபவர்கள் நாமாகவே இருந்தாலும் அதை பொருட்படுத்துவதும் இல்லை! காலிஃப்ளவர் பாடி இருப்பதாக சொல்வது நல்ல அவதானிப்பு! நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  33. சுஜாதாவின் கடைசி நாட்கள் படித்தேன், மனதை கலங்க வைக்கிறது.

    உங்கள் பழைய கவிதையும், கமலா அவர்களின் பதிவும் பறவைகளின் தவிப்பை சொல்கிறது.
    எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த தோட்டங்கள் அழிக்கப்பட்டு வீடு கட்டி விட்டார்கள். வீடு இழந்த பறவைகள் எத்தனை எத்தனையோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடும் பறவைகள், 'பாவம் பறவைகள்' ஆகி விடுகின்றன! நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  34. இணையத்தில் ரசித்த படங்கள், முக்கிய செய்திகள் படித்தேன். நகைச்சுவையை பார்த்து பகிர வேண்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!