27.6.25

கானல்வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே…….. கொஞ்சவா……. பாடும் மொழி உனது தேடும் விழி எனது

 

தீர்த்தக்கரைதனிலே                       ;                 தீர்த்தக்கரை ஓரத்திலே 

தீர்த்தக்கரைதனிலே தெற்கு மூலையில் 

1980 ஆம் வருடம் வெளியான தைப்பொங்கல் படத்திலிருந்து ஏற்கனவே 'கண்மலர்களின் அழைப்பிதழ்' பாடல் பகிர்ந்திருந்தேன்.  அதே படத்திலிருந்து இன்னொரு இனிய பாடலை இன்று பகிர்கிறேன்.   எம் ஜி வல்லபன் பாடலுக்கு இசை இளையராஜா.  பாடி இருப்பவர் கே ஜே யேசுதாஸ்.

சற்றே சோகமான பாடல் இது.  கொஞ்சம் வெறுமையைச் சொல்லும் பாடல்.  சரணங்களில் பாடல் கவனம் ஏற்கும்படி இருக்கும். 'காவிரி ஓரமாய் கோவலன் காதலி...  கானல்வரி சுகம் தேடிடும் இன்பங்களே சொல்லவா' வரிகள் இரண்டு சரணங்களிலும் பொது.  மனதைப் பிசையும்.  யேசுதாஸ் மனதில் மென்மையாக ஆனால் அழுத்தமாக உட்காரும் வண்ணம் இந்தப் பாடலை வழங்கி இருப்பார்.

கல்கியில் இந்தப் படத்துக்கான விமர்சனத்தில் "படத்தின் கதை அப்படி இருந்து அதற்கு A certificate கிடைத்தால் அது ஓகே.  ஆனால் A certificate வாங்குவதற்காகவே கதை எழுதப்பட்டிருப்பது அசிங்கமாக இருக்கிறது" என்று எழுதி இருந்தார்களாம்.

என்னைக்bகேட்டால் படத்துக்கு ஹீரோ சரி இல்லை.  சக்கரவர்த்திதான் ஹீரோ.  ஆனால் ஒன்று, நான் படம் பார்க்கவில்லை.

இந்தப் படத்தில் எழுத்தாளர் சுஜாதா எழுத்தாளர் சுஜாதாவாகவே ஒரு காட்சியில் வருவார்.  எம் ஜி வல்லபனும் அவரும் நண்பர்கள்.  அவருக்காக அப்படி தோன்றினார்.  எம் ஜி வல்லபனுக்கு சுஜாதாவுக்கு ஒரு பாத்திரம் கொடுத்து நடிக்க வைக்கவே ஆசை இருந்ததாம்.  சுஜாதா சம்மதிக்கவில்லையாம்.

இளையராஜா இசை மட்டுமே ஒரு படத்தை காப்பாற்றாது அல்லது அதையும் மீறி படம் தோல்வி என்றால் என்ன செய்வது!  யேசுதாஸ் குரல் இனிமை.  வழக்கம்போல இளையராஜாவின் இசை, இடையிசை அருமை.  ஜென்சியின் ஹம்மிங் ஒரு வெறுமையை ஒரு தனிமையை தொடங்கி வைக்கிறது.

வெகு இனிமையான தாஸேட்டன் குரல்.  'செண்பகம்' என்பதை 'ஷெண்பகம்' என்று உச்சரிக்கிறார்.  என்ன அனாயாசமாக சிறுசிறு கமக்கங்கள், குழைவுகள்...Bhaaவம்..

தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே

தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே
நான் போடும் தாளங்கள் விழி நீரின் கோலங்கள்
பாடுங்கள் ஜீவ ராகங்கள்

தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே….

நாண மேக வானிலே நானும் நீயும் கூடியே
மோக ராகம் பாடியே போடும் சோக நாடகம்
காவிரி ஓரமாய் கோவலன் காதலி
பூவிழி மாதவி காதலில் பாடிய
கானல் வரி சுகம் தேடிடும்
நெஞ்சங்களே……..கொஞ்சவா…….

தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே….

ராமநாம நோன்புகள் காமதேவ ஜாலங்கள்
பாதி ஜாம பூஜைகள் காண கோடி ஆசைகள்
காவிரி ஓரமாய் கோவலன் காதலி
பூவிழி மாதவி காதலில் பாடிய
கானல் வரி சுகம் தேடிடும்
நெஞ்சங்களே……..கொஞ்சவா…….

தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே
நான் போடும் தாளங்கள் விழி நீரின் கோலங்கள்
பாடுங்கள் ஜீவ ராகங்கள்

தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே
.

======================================================================================

நினைவு நாடாக்கள் நூலில் திரு வாலி சொல்லி இருபிப்பதிலிருந்து...


1956.  என் மனைவிக்கு சிசேரியன் ஆபரேஷன். பிளட் பேங்க்கில் இருந்து, பிளட் வர வேண்டும். கஸ்யாணி ஆஸ்பத்திரியில் கனத்த இதயத்தோடு காத்திருக்கிறேன்.

'அன்னமிட்ட கை' படத் தயாரிப்பாளரில் ஒருவரான சிவசாமி அய்யர் போன் செய்கிறார்.

வாலி சார்! கேவிமகாதேவன், கிருஷ்ணன் நாயர் எல்லாரும் வெயிட்டிங் ராமாவரத்தில்இருந்து சின்னவரும் புறப்பட்டுவிட்டார். பாட்டு நாளைக்கு ரிக்கார்டிங். மறுநாளே தேவிகுளம் பீர்மேடு புறப்படுகிரோம். நீங்க உடனே வந்தாத் தேவலே!"

என்னால வர முடியாது சார்!  மனைவிக்கு சிசேரியன் ஆப்பரேஷன் நடக்கப்போறது, நாள் டென்ஷள்ல இருக்கேன்!' என்றேன்.

உடனே சிவசாமி அய்யர்  'ஆபரேஷன் நீரா பண்ணப்போறீர்? என்று சற்று நக்கலாகக் கேட்டதும், நான் கோபத்தின் உச்சிக்குப் போனேன்.

போனைக் கீழே வையுடா..., நான் கறி திங்கற பாப்பான். எங்கிட்ட வெச்சுக்காதே... உள் பாட்டும் வேணாம் ஒரு ம**ம் வேணாம்!' என்று கத்தினேன்!

'சின்னவர் வந்துட்டார்!' என்றார் அவர்.

'சொன்னதை ஒரு வரி விடாம அவர்கிட்ட சொல்லுய்யா! நான், யாரையும் நம்பி சென்னைக்கு வரலே' என்று சீறினேன்.

மறுநாள் என் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். போன் செய்து,

'உங்க கோபம் நியாயமானது. அவர் அப்படிப் பேசியது தப்புதான். ஆனா, எனக்கு உங்க பாட்டு வேணும்.  அவசரமில்லே!' என்று சொல்விவிட்டு, மாலை கல்யாணி நர்சிங் ஹோமுக்கு வந்து - என் மனைவியையும் குழந்தையையும் பார்த்துவிட்டு குழந்தை கையில் ஒரு பவுன் காசைத் திணித்துவிட்டுப் போனார்!

அடுத்த சம்பவம்...


கலைஞர் கதை வசனம், இராமநாராயணன் படம், ஏவி.எம்மில் பூஜை கலைஞர் தலைமை யில் எல்லோரும் பேசினோம்.

'இராமநாராயனான் நூறு படம் எடுத்தவர், அதில் எழுபது படம் நான் பாட்டு எழுதிஇருக்கிறேன். எல்லாப் படத்திலும் பாம்பு பாடும், நான் மொத்த நாகத்துக்கும் எழுதிவிட்டேன்; இனி துத்நாகம்தான் பாக்கி!' என்று பேசினேன்.

அடுத்துப் பேச வந்தவர் - அவரும் பாட்டு எழுதுபவர்தான்​.  "நான் துத்தநாகத்துக்கு எல்லாம் பாட்டு எழுத மாட்டேன்" என்று எகத்தாளமாகப் பேசிவிட்டு அமர்ந்தார்!

ராமநாராயணனிடம் 

'என்னைப் பற்றி மேடையில், எகத்தாளமாகப் பேசப்பட்டபோது நீங்களோ கலைஞரோ அதைக் கண்டிக்கவில்லை; ஆகவே, நாள் இந்தப் படத்திற்குப் பாட்டெழுத மாட்டேன்!" என்று மறுத்துவிட்டேன்.

அன்று இரவு கலைஞர் என்னோடு தொலைபேசியில் பேசினார்.

'உங்கள் கோபம் நியாயமானது; அந்த ஆள் அப்படிப் பேசியது தப்புதான்; ஆனா, எனக்கு உங்க பாட்டு வேணும்... நீங்க எழுதணும்!' என்றார். எழுதினேன்.

எம்.ஜி.ஆர். சொன்னதுபோலவே, கலைஞரும் சொன்னார்; சான்றோர் சான்றோரே!

========================================================================================

அடுத்து வருவது தலைவர் குரலில் ஒரு பாடல்   இந்தப் பாடலைக் கேட்டால் மனதில் தோன்றும் உணர்வு வலியா, சுகமா, சோகமா?  சோகமான சுகமான வலியோ!

தீர்த்தக்கரையினிலே படம்.  பழ கருப்பையா தயாரிப்பில் கலைமணி கதையை மணிவண்ணன் இயக்கி இருந்தார்.  மோகன், ரூபிணி நாயக நாயகி.

1987 ல் வெளிவந்த படம்.  நான் படம் பார்க்கவில்லை.  இந்தப் பாடல் மட்டும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு மாதிரி வளைவுக்கோலம் போடுவது போல, முறுக்கு சுற்றுவது போல ஜாங்கிரி பிழிவது போல பாடல் சுற்றிச் சுற்றி வளையம் வளையமாக அமைந்திருக்கும்.  பல்லவி சரணம் இரண்டும் ஒரே டியூன்தானோ என்று மயங்க வைக்கும்.  பல்வி கீழ் ஸ்தாயியில், சரணங்கள் மேல் ஸ்தாயியில் இருக்கும்.  சரணம் முடியும் இடங்கள் இளையராஜா SPB  அற்புதங்கள்.  சுபபந்துவராளி ராகமாம்.

பாடலை எழுதி இருப்பவர் கங்கை அமரன். இசை இளையராஜா.

சரணத்தின் இரண்டாவது வரிகளில் வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் எத்தனை வளைவுகள்...!  அந்த ஒரு வரியையே மூச்சு விடாமல் என்னால் பாட முடியாததற்கு காரணம் என் இருமல் என்று நான் சாக்கு சொல்லிக் கொள்கிறேன்!  கிட்டத்தட்ட சரணத்தின் மூன்றாவது வரியும் அப்படிதான் என்றாலும் நடுவில் நைஸாகக் கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்ள Gap கிடைக்கிறது.

காட்சியோடு நான் பாடலைக் கொடுத்திருந்தாலும் காட்சியைப் பார்க்காமல் பாடலை ரசிக்கவும்.  அப்போதுதான் குரலின் இனிமையை ரசிக்க முடியும்.


தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது தேடும் விழி எனது

தீர்த்தக் கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே

பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன்
பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன்

தேனிரைத்த பால் நிலவு தீ இரைத்து போவதென்ன
காதல் வரி பாடல் எல்லாம் கானல் வரி ஆனதென்ன
என் ஜீவன் நீ இன்றி எந்நாளும் வாழாது
என் கண்கள் உன் கோலம் காணாமல் தூங்காதம்மா
ஆ…..ஆஅ……ஆஅ……ஆஅ……

தீர்த்தக் கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே

ஒற்றை வழி பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன்
ஒற்றை வழி பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன்

நெற்றி முதல் பாதம் வரை முத்தம் இட்ட சொப்பனங்கள்
ஒற்றிக் கொண்ட தொட்டுக் கொண்ட அத்தனையும் கற்பனைகள்

நேராக உன் பார்வை என் மீது வாராது
நீ இன்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா
ஆ…..ஆஅ……ஆஅ……ஆஅ……

தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது தேடும் விழி எனது

தீர்த்தக் கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே 


============================================================================================

வாலி விகடனில் எழுதிய நினைவு நாடாக்கள் தொடரிலிருந்து... 

​- 'அ' னாவில்தான் படத்தின் முதல் உரையாடல் தொடங்க வேண்டும் என்பது அமரர் AVM அவர்கள் காத்து நின்ற மரபு.

- அஞ்சாம் ரீலில்தான் ரீ-ரெக்கார்டிங்கை ஆரம்பிக்க வேண்டும் என்பது மெல்லிசை மன்னர் MSV அவர்களின் செண்டிமெண்ட்.

- பாடுவதற்கு முன் பாடலுக்குரிய ஸ்வரங்களை பாடல்களின்மேல் பென்சிலால்தான் குறித்துக் கொள்வார் வெண்கலக்குரல் வேந்து திரு TMS அவர்கள்.  அதற்காக தனியாக பென்சிலும், அதைச் சீவ ப்ளேடும் கொண்டு வருவார்.

- தன்னுடைய கார்களின் நம்பர்களின் கூட்டுத்தொகை ஏழாக இருக்க வேண்டும் என்பது புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் உறுதி.  அவர் நடிக்கும் படங்களின் தலைப்பின் எண்ணிக்கையும் ஏழாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்.

- ம, மா, மு என்ற எழுத்தில் தொடங்கும் பாடல்களை நான் அவருக்கு எழுதும்போது அவை வெற்றி பெறுகின்றன என்பது திரு AR ரஹ்மான் அவர்களின் கணிப்பு.

.. ரு படம் இயக்குனர் ஏ.  காசிலிங்கம் அவர்கள்.  இசை திரு டி ஆர் பாப்பா அவர்கள்.  

நான் பாடல் எழுத உட்கார்ந்தேன்​.  மணி பகல் பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது​. ​"ராகு காலம் நெருங்குகிறது​. முதலில் ஒரு பிள்ளையார் சுழி போடும்​" என்றார்​ திரு டி ஆர். பாப்பா. 

படத் தயாரிப்பாளர்​.  இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர் ஆகவே நான் பிள்ளையார் சுழியை போட்டு அவர் மனம் வருத்தப்பட வைப்பானேன் என்று வெகு நேரம் பிள்ளையார் சுழி போடாமல் பிடிவாதமாக இருந்​தேன்.  

கடிகாரமுள் 10:29 காட்டியது​. ராகு காலம் வர இன்னும் ஒரு நிமிஷம் தான் இருந்தது​.  திடீரென்று ஒரு குரல் கேட்டது ​"இதில் எல்லாம் நம்பிக்கை உண்டு போ​டுய்யா பிள்ளையார் சுழியை​" என்று என் பின்னால் நின்று குரல் கொடுத்தார் பராசக்தி எடுத்தவர்​! 

- நெடுங்காலம் நாத்திகராக இருந்து இறுதியில் இறைப்பற்று மிக்கவராகி இரவெல்லாம் குருத்வாராவில் பிரார்த்தனை ​செய்யலானார். திரு குஷ்வந்த்சிங்

நம்பிக்கைதான் - மனிதனை 
நகர்த்துகிறது அது -
முடமாக இருந்தாலும் 
மூடமாக இருந்தாலும்!
========================================================================================

தீர்த்தக்கரை பாடல்கள் இரண்டைப் பகிர்ந்துவிட்டு, ஏற்கெனவே பகிர்ந்திருந்தாலும்  இன்னொரு தீர்த்தக்கரையை பகிராமல் விட மனமில்லை.  

1980 ல் வெளியான வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இடம்பெற்ற பாரதியார் பாடலான தீர்த்தக்கரையினிலே பாடல் SPB பாடியது.  எம் எஸ் விஸ்வநாதன் இசை.

ஒரு மொத்தமாக பார்வையாக இன்றைய மூன்று பாடல்களில் முதல் பாடலின் சரணங்களை நான் அவ்வப்போது பாடிக் கொண்டிருப்பேன்.  இரண்டாவது பாடலை ரசித்துக் கேட்பேன்.  மூன்றாவது பாடலான இந்தப் பாடலை முழுமையாக பாடி மகிழ்வேன்.  எல்லாம் எனக்குள்தான்.  சமயங்களில் 'கொஞ்சம் நல்லா இருக்கோ' என்று என் மனதுக்குள் நினைக்கும் தருணங்களில்  ஓரிரு நண்பர்களுக்கு நான் பாடியதை அனுப்பி துன்புறுத்துவது உண்டு!

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில்
செம்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்

வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே
பாவை தெரியுதடி ஆஆ....பாவை தெரியுதடி

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில்
செம்பகத் தோட்டத்திலே
தீர்த்தக் கரையினிலே
தெற்கு மூலையில்
செம்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன்
வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்

வார்த்தை தவறிவிட்டாய்
அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்தவிடத்திலெல்லாம்
உன்னைப் போலவே
பாவை தெரியுதடி
பாவை தெரியுதடி

மேனி கொதிக்குதடி
தலை சுற்றியே
வேதனை செய்குதடி
வானில் இடத்தையெல்லாம்
இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்

மோனத்திருக்குதடி
இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே
{நானொருவன் மட்டிலும்
பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ} (2)

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் 

13 கருத்துகள்:

  1. இன்றைய வாலி பகுதி ஏற்கனவே படித்திருந்தாலும் ரசனை மிக்கது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  நன்றி.  எங்கே நேற்று ஆளைக் காணோம்?

      நீக்கு
    2. நேற்று பத்ரி தர்ப்பணம். பிறகு கோயில்கள் ஹரித்வார் நோக்கிப் பயணம்

      புதனுக்கு லேட்டா கருத்துகள் எழுதினா கேஜிஜி பார்க்காதே மில்லை. அதனால் நேற்று லேட்டா எழுதலை. படித்துவிட்டேன்

      நீக்கு
  2. எழுத்துப்பிழைகள் இருக்கின்றன துத்தநாகம் சுழி...

    இன்றைய மூன்று பாடல்களில் முதலும் மூன்றாவதும் மிக அருமை. வாலி பகுதியைப் படித்ததில் இரண்டாவது பாடலில் மனம் செல்லவில்லை. பிறகு கேட்கணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்துப் பிழைகளா?  குறிப்பாக எந்த இடத்தில என்று சொல்லி இருந்தால் நலம்.  இப்போது நான் முழுமையாக மறுபடி படித்துத் தேட வேண்டும்!  பார்க்கிறேன்.  

      இரண்டாவது பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.  நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வுகள் அருமை. முதல் இரண்டு பாடல்களும் இதுவரை கேட்டதில்லை. இப்போதும் இனிதான் முழுவதுமாக கேட்ட வேண்டும். அந்தந்த படங்களைப் பற்றி நீங்கள் தந்திருக்கும் தகவல்களுக்கு நன்றி.

    கவிஞர் திரு வாலியைப் பற்றிய செய்திகளை படித்து தெரிந்து கொண்டேன். அந்தக்காலத்தில் ஆபரேஷன் என்றாலே கொஞ்சம் பயந்தான். எம்ஜிஆர் அவர்களின் செயல் மனிதாபிமானத்தை காட்டுகிறது. கலைஞரும் பாடல்கள் வேண்டுமென விண்ணப்பித்து கொண்டது அவரின் நல்ல மனதை காட்டுகிறது. திரையுலகம் என்றாலும் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களுக்கு சில பழக்க வழக்கங்கள் இருப்பது சகஜந்தானே..!

    உங்களின் இருபாடல்களின் விளக்கங்கள் படித்ததுமே எனக்கும் மூன்றாவதான "தீர்த்தக்கரையினிலே" பாடல்தான் மனதுக்குள் ஓடியது. அதையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. அதைபலமுறை கேட்டு ரசித்திருக்கிறேன். மீண்டும் அதையும், மற்ற பாடல்களையும் கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா..  

      வாலி செய்தியில் அந்த இரண்டு செய்திகளை நான் வேறு வகையில் பார்க்கிறேன்.  பொதுவில் வாலியை விட்டுக் கொடுத்து விட்டு தனியாக மன்னிப்பு கேட்டு அவர்கள் வேலையை முடித்துக் கொண்டிருக்கிறார்கள் சுயநலமிகள்.  இவர் ஏமாளியா, பெருந்தன்மையா? தெரியவில்லை!

      நீக்கு
    2. /பொதுவில் வாலியை விட்டுக் கொடுத்து விட்டு தனியாக மன்னிப்பு கேட்டு அவர்கள் வேலையை முடித்துக் கொண்டிருக்கிறார்கள் சுயநலமிகள். /

      ஆம். அதுவும் உண்மைதான். ஆனால், பொதுவாக இதுவும் மனித சுபாவங்கள் ஆயிற்றே..! இதை ஒரு மனிதன் எப்படி மறப்பான்...?

      நீக்கு
  5. மூன்றுபாடல்களும் கேட்டு இருக்கிறேன்.

    முதலாவதும், மூன்றாவதும் முன்பே பிடித்திருந்த பாடல்கள்.

    இப்பொழுதும் மூன்றையும் கேட்டேன். பாடல்பகிர்வுகளுக்கும் ஏனைய சினிமாத் தகவல்களுக்கும், நன்றி.

    பதிலளிநீக்கு
  6. முதல் பாடல் மிக மிக அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். எந்தப் படம் என்பதெல்லாம் தெரியாமலேயே ரசித்த பாடல்!

    ராஜாவின் இசையும் தாஸேட்டனின் குரலும் ஜென்சியின் ஆரம்பமும் செமை....சிவரஞ்சனியோன்னு தோன்ற வைக்கும் ஆனால் கொஞ்சம் அரிதான ராகம் கர்ணரஞ்சனியில் அமைந்த பாடல்.

    அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் எழுதிய தமிழ்க்கிருதிகளை உன்னிகிருஷ்ணன் பாடிய ஆல்பத்தில் ஒரு பாடல் உண்டு ஓ நமோ நாராயணா எனும் பாடல், நான் ஏகலைவியாக உன்னிகிருஷ்ணனிடம் கற்றுக் கொண்ட பாடல். இப்பாடலும் கர்ணரஞ்சனி. அப்பதான் தெரிந்தது, அப்ப தீர்த்தக்கரைதனிலேவும் கர்ணரஞ்சனி என்று. அந்தசமயத்தில்தான் சிவரஞ்சனிக்கும் கர்ணரஞ்சனிக்கும் வித்தியாசம் என்ன என்பதும் தெரிந்தது.

    ராஜா எப்படியான கொஞ்சம் அரிதான ராகங்களில் எல்லாம் இசை அமைத்திருக்கிறார் என்று வியந்த தருணங்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. என் மனைவியையும் குழந்தையையும் பார்த்துவிட்டு குழந்தை கையில் ஒரு பவுன் காசைத் திணித்துவிட்டுப் போனார்!//

    எம் ஜி ஆர் இப்படி எல்லாம் செய்பவர், கொடை வள்ளல் என்று வாசித்திருந்திருந்தாலும், வாலிக்குப் போட்ட bread crumb அதில் ஒளிந்திருக்கிறதோ என்றும் தோன்றியது!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!