நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்
நெல்லைத் தமிழன்
குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 25
சென்ற வாரம் கூரத்தாழ்வான் வரலாற்றைப் பார்க்கத் தொடங்கியிருந்தோம். பெயர் காரணத்தைப் பார்த்துவிட்டோம்.
தன் தகப்பனார் காலத்திற்குப் பிறகும் கூரத்திற்கு தலைவனாக இருந்தார் கூரத்தாழ்வார் (செல்வச் செழிப்பு மிக்கவர்). காலை முதல் இரவு வரை, இறைவனின் அடியவர்களுக்கு அன்னதானம் செய்யும் கைங்கர்யத்தை அவர் தொடர்ந்து செய்துவந்தார். ஒரு முறை வட நாட்டிலிருந்து காஞ்சீபுரம் கருடசேவையை (அன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் உத்ஸவர், கருடவாஹனத்தில் மீது அமர்ந்து நகர்வலம் வருவார். இது மிக விசேஷமாகக் கொண்டாடப்படும். இப்போதும் காஞ்சியில் பெரும் கூட்டம் கூடும். அன்னதானம் எல்லாம் நடக்கும்) கண்டுகளிக்க இரண்டு வைணவர்கள் காஞ்சிக்கு வந்தனர். வரும் வழியில் கூரத்தில் ஆழ்வான் திருமாளிகையில் நடக்கும் அன்னதானத்தில் பங்கேற்றுவிட்டு வந்தனர்.
இறைவன் சன்னிதானத்திற்குப் போவதற்கு முன்பு, நாம் இவ்வளவு தூரம் செலவு செய்துகொண்டு காஞ்சீபுரம் கருடசேவையைப் பார்க்க வந்திருக்கிறோம். ஸ்ரீவத்ஸசிந்ஹர் காஞ்சீபுரம் அருகிலேயே இருந்துகொண்டு கருடசேவையை தரிசிக்க வரவில்லையே, அவருக்கு கொடுத்துவைக்கவில்லை என்று பேசிக்கொண்டிருந்தனர். மூலவர் சன்னிதிக்கு வந்ததும் அவர்கள் கண்களில் பெருமாள் தெரியவில்லை. சன்னிதியில் இருந்த அர்ச்சகர், ஆவேசமடைந்து, (இதற்குப் பொருள், இறைவனே அர்ச்சகர் மூலமாக தான் சொல்ல நினைத்ததைச் சொல்வது), நீங்கள் இருவரும் கூரத்தாழ்வானுக்கு மனதினால் குற்றம் இழைத்துவிட்டீர்கள். அவர், எம்மையே மனதில் நினைத்துக்கொண்டு, என்னைத் தரிசிக்க வரும் அடியார்களுக்கு உணவிடும் கைங்கர்யத்தைச் செய்துகொண்டிருப்பதால், என்னைத் தரிசிக்க அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. எனக்கு அடிமை செய்வதை விட என் அடியார்களுக்கு அடிமை செய்வதுதான் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அதனால் கூரத்திற்குச் சென்று ஆழ்வானிடத்தில் மன்னிப்பு பெற்று வாருங்கள்” என்று சொன்னார்.
ஆழ்வான் அவதரித்த கூரம் என்ற இடம், அந்தக் காலத்தில் ஒரு நகரமாகச் சிறப்புப் பெற்றிருந்தது. அதன் தலைவராக இருத கூரத்தாழ்வான், ஒரு தடவை இரவு வலம் வந்துகொண்டிருந்தபோது, ஒரு வீட்டில் கதவைத் தாழிட்டுக்கொண்டு சத்தமாக சிலர் பேசிக்கொண்டிருந்த குரல் கேட்டதும், அவர்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து என்ன நடக்கிறது என்று கேட்டார். அவர்கள் பேசிக்கொண்டிருந்ததாவது. இந்தப் பெண்ணை மணந்துகொள்பவன், திருமணம் ஆன சில காலத்திலேயே இறந்துவிடுவான். இதை அறிந்துகொண்டதனால் ஒருவரும் இவளை மணம் புரிய முன்வரவில்லை. திருமணம் ஆகாத பெண்ணை வீட்டில் வைத்திருப்பது தோஷமல்லவா? உலகம் நம்மைப் பழிக்குமே. அதனால் இவளைக் கொன்றுவிடுவதுதான் உத்தமம் என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.
மறுநாள் கூரத்தாழ்வான், அவர்களைத் தன் இல்லத்திற்கு வரவழைத்து, நேற்று இரவு நீங்கள் பேசிக்கொண்டிருந்ததை விவரமாகச் சொல்லவேண்டும் என்று கேட்டார். அவர்களும் உள்ளதை ஒளிக்காமல் சொல்லவும், உங்கள் கலக்கத்தைத் தீர்ப்பது என் கடமை என்று நினைக்கிறேன். அதனால் உங்கள் பெண்ணை நானே திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொன்னார். அவளை மணந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்தே. அதற்கு நாங்கள் எப்படி சம்மதம் சொல்ல இயலும் என்று கேட்டனர். அதற்கு கூரத்தாழ்வான், ஒருவன் திருமணம் செய்துகொள்வதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உண்டு. தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், சந்ததியைத் தொடர்வதற்கும். நான் அவளை, தர்மத்தை நிலைநாட்டுவதற்கே மணந்துகொள்கிறேன். அதனால் எனக்கு ஆபத்து வராது என்றார். அப்படி அவர் ஆண்டாளை மணந்துகொண்டார். ஆண்டாளும் கல்வியறிவு மிக்கவர். கூரத்தாழ்வானுக்கு சாஸ்திரங்களில் அதன் அர்த்தங்களில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால், தம் தேவியாரிடத்தில்தான் கேட்டுத் தெளிவாராம்.
கூரத்தில் இவரது திருமாளிகை மிகப் பெரிதாக இருந்ததாம். அதன் வாயிற்கதவுகளில் பல வெங்கல மணிகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்குமாம். அந்தக் கதவைச் சாத்தும்போது மணிகள் ஒலிக்கும் ஒலி பல காத தூரம் கேட்குமாம். எப்போதும் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் கதவுகள் மூடிய பிறகே கூரத்தாழ்வான் திருமாளிகைக் கதவுகள் மூடப்படுமாம். அப்படி இருக்கையில் ஒரு விசேஷ நாள் அன்று வரதராஜப் பெருமாள் கோயிலின் பூஜை முடிய நேரமாகிவிட்டது. இது தெரியாத ஆழ்வான் திருமாளிகைக் காவலர்கள் திருமாளிகைக் கதவை அடைத்தனர். அந்த மணியோசை பேரருளாளன் சன்னதி வரை கேட்கவும், பேரருளாளன், திருக்கச்சி நம்பியைப் பார்த்து, நம்முடைய கடைசி பூஜை முடிந்த பின்னரே திருக்கதவு சார்த்தும் வழக்கம் உண்டு. இன்று ஏன் அதற்குள் மூடிவிட்டார்கள் என்று கேட்க, அதற்கு திருக்கச்சி நம்பி, நம் கோயில் கதவுகள் சாத்தும் சப்தமல்ல அது. கூரத்தில் கூரத்தாழ்வான் அரண்மனைக் கதவுகள் சாத்தப்படும் சப்தம் அது என்று சொல்ல, பேரருளாளன் சிரித்து, ஆழ்வானது செல்வச் சிறப்போ நம்மை இவ்வாறு மயங்கவைத்தது என்று ஆச்சர்யப்பட்டாராம்.
பேரருளாளப் பெருமாளுக்கும் திருக்கச்சி நம்பிக்கும் நடந்த இந்தப் பேச்சு கூரத்தாழ்வானுக்குத் தெரியவர, வரதராஜன் செல்வத்தை அளவிட பிரம்மா முதலனவர்களும் சக்தியற்று இருக்க, ஒரு புழுப்போன்ற என்னுடைய செல்வத்தைக் குறித்து எம்பெருமான் அதிசயப்படுவது கூடுமோ? இது நம் ஆத்மாவுக்குத் தகுமோ என்று யோசித்து, தன்னுடைய செல்வத்தில் மிகச் சிறிய பகுதியை வைத்துக்கொண்டு, பிறவற்றை எல்லாம் அவர் மற்றவர்களுக்குத் தானமளித்துவிட்டார். பேரருளாளனின் திருவடியைப் பற்றி இராமானுஜ முனி என்ற விசிஷ்டாத்வைத சன்னியாசி காஞ்சீபுரத்தில் உதயமாயிருப்பதை அறிந்து அவரைப் பணிவோம், ஆச்சார்யராக ஏற்றுக்கொள்வோம் என்று எண்ணி காஞ்சீபுரம் வந்து சேர்ந்தார். அவருக்கு இராமானுஜர் பஞ்ச சம்ஸ்காரங்களும் செய்து தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொண்டார். பஞ்ச சம்ஸ்காரங்கள் என்றால் என்ன என்பதை இந்தப் பகுதியிலேயே கொடுத்திருக்கிறேன்.
இராமானுஜரின் சீடரான பிறகு அவரை ஒரு போதும் விட்டுப் பிரிந்ததில்லை. நிழல் போலவே எங்கும் தொடர்ந்தார்.
இராமானுஜர் சீடர்களின் அல்லது ஆச்சார்யர்களின் சீடர்களுடைய வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தால், கோர்வையாக எழுதுவது கடினம். இதன் காரணம் அவர்களுடைய வரலாறு இராமானுஜர் வரலாற்றுடன் சேர்ந்துவிடுவதால். அதனால் அந்த அந்தப் பகுதிகளில் வரலாற்றைத் தொடர்வோம்.
இந்தச் சமயத்தில், இராமானுஜர் காஞ்சீபுரத்தில் அவருடைய மடத்தில் இருந்து விசிஷ்டாத்வைத்டத்தைப் பற்றி நிறைய பிரசங்கங்கள் செய்துகொண்டிருந்தார்.
இப்படி இருக்கையில் ஒரு நாள், யாதவப் பிரகாசரின் வயது முதிர்ந்த தாயார் இராமானுஜர் பிரசங்கங்களை விடாது கேட்பவராக ஆனார். அவரது உபதேசக் கருத்துக்களில் மிகவும் ஈடுபட்டார். அரிய தத்துவங்களை, வேதாந்தக் கருத்துக்களை எளிய மொழியில் சொல்வதைக் கேட்டு இவர் ஒரு அவதார புருஷரே என்ற எண்ணம் அவரிடத்தில் தோன்றியது. நம் மகன் என்ன படித்து என்ன பயன்? எத்தனையோ வாதங்கள் செய்திருக்கிறான். ஆனாலும் மன அமைதி இல்லாமல்தானே இருக்கிறான். நம் மகன் யாதவப் பிரகாசன் இராமானுஜரின் சிஷ்யர்கள் கூட்டத்தில் ஒருவனாகச் சேர்ந்தால் மன அமைதி தானே வந்துவிடாதோ? என்று எண்ணினாள். சீடர்கள் ஆச்சார்யரைப் புகழ்வது போல இருக்க வேண்டாமா என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
வீடு சேர்ந்தவுடன் தன் மகனை அழைத்து இராமானுஜரின் தேஜஸையும் பெருமையையும் பற்றிக் கூறி, உனக்கு, நம் குலத்துக்கு பெருமை கிடைக்கவேண்டும் என்றால் நீ இராமானுஜரை அண்டியிருக்கவேண்டும் என்று உபதேசம் செய்தாள். அவரை அண்டியிருந்தால்தான் உனக்கும், எனக்கும் நம் குலத்துக்கும் நல்ல கதி என்று முடித்தாள். (அப்போது யாதவப் பிரகாசருக்கு சுமார் எண்பது பிராயம். இராமானுஜருக்கு சுமார் 30 பிராயம் இருக்கலாம்)
நாமோ ஏகதண்டி மற்றும் பூநூல் சிகை இவற்றைக் களைந்தவர். இராமானுஜரை அடையவேண்டும் என்றால், திரிதண்டியாக வேண்டும். களைந்தவற்றிர்க்குப் பிராயச் சித்தமாக உலகை அல்லவா வலம் வரவேண்டும் என்று சாஸ்திரங்கள் பிராயச்சித்தம் சொல்கின்றன என்று யோசித்துக்கொண்டு தூங்கிவிட்டார். அன்று இரவு வரதராஜர் அவரது கனவில் வந்து, “யாதவனே.. செய்த குற்றத்துக்குப் பிராயச் சித்தமாக பூமியை வலம் வரவேண்டும் என்று நினைக்கிறாயே… நம் இராமானுஜனை ஒரு தரம் வலம் வந்தால் நீ இதுகாறும் செய்த குற்றமெல்லாம் அனலிடிட்ட பஞ்சு போல மறைந்துவிடுமே. ஆதலின் நீ இராமானுஜனை அடைவாய்” என்று சொன்னார்.
மறுநாள் தன் நித்திய கடமைகளை முடித்துக்கொண்டு, தன் கனவைப் பற்றிய நினைவே மனதை ஆக்கிரமித்ததால், வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்று திருக்கச்சி நம்பியைக் கண்டு, அவரிடம் பேரருளாளன் தன் விஷயமாக என்ன நினைக்கிறார் என்று கேட்டுச் சொல்ல முடியுமா என்று விண்ணப்பித்தார். திருக்கச்சி நம்பி பேரருளாளப் பெருமாளிடம் விண்ணப்பம் செய்ய, தேவராஜப் பெருமாள் அவரிடம், ‘நம்பி, நாம் கனவில் உரைத்ததை நம்பாமல் திரும்பவும் கேட்கின்றானோ? நாம் கனவில் உரைத்தது போலவே இராமானுஜனை அண்டியிருந்து வாழச் சொல்லும்’ என்று சொன்னார். மறுநாள் திருக்கச்சி நம்பி, நம் எல்லோருக்கும் இருக்கும் ஒரே கதி யதிராஜர்தான் என்பதே பேரருளாளனின் கருத்து என்று உறுதியாகச் சொன்னார்.
உடனே யாதவப் பிரகாசர் இராமானுஜர் இருந்த மடத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு சீடர்கள் குழாங்களுடன் இருந்த இராமானுஜரைக் கண்டு பிரமித்தார். இராமானுஜர் அவரை வரவேற்று அமரச் சொன்னார். தத்துவ விசாரம் ஆரம்பமாயிற்று. யாதவப் பிரகாசர் கேட்ட நுண்ணிய கேள்விகளுக்கெல்லாம் சாஸ்திரங்களை மேற்கோளாகக் காட்டி இராமானுஜர் விடையிறுத்தார். தன்னையும் ஒரு சிஷ்யராகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்ட, அவருக்கு பூநூல், காஷாயம் மற்றும் திரிதண்டிகளைக் கொடுத்து சிஷ்யராக்கிக் கொண்டார். இராமானுஜர் யாதவப் பிரகாசருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்துவித்து அவருக்கு ஆச்சார்யரானார்.
யாதவப் பிரகாசர் இராமானுஜரை அடைவது
யாதவப் பிரகாசருக்கு ‘ஸ்ரீ கோவிந்த ஜீயர்’ என்ற தாஸ்ய நாமம் கொடுத்து, அவரை வைணவ யதிகள் (சன்னியாசிகள்) எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான கிரந்தத்தை எழுதுமாறு சொன்னார். கோவிந்த ஜீயரும், வடமொழியில் அந்த நூலை எழுதி அதற்கு ஆச்சார்யன் ஆசிகளைப் பெற்றார். இந்த யதிதர்ம சமுச்சியம் என்ற நூல், சன்னியாசத்துக்கான விதிகள், செய்துகொள்ள வேண்டிய காலம், எப்படி ஆசிரம சுவீகாரம் செய்துகொள்ளவேண்டும், நடந்துகொள்ள வேண்டிய முறைகள், சாதுர்மாஸ்ய விரத முறை, துறவிகள் இறக்கும்போது செய்யவேண்டிய சடங்குகள் போன்ற பதினோரு தலைப்பில் விளக்குகிறது. பிறகு சில காலம் இராமானுஜர் சொல்லியபடி வாழ்க்கையை ஒழுகி, பிறகு பரமபதித்தார்.
சாதுர்மாஸ்ய விரதம் – சன்னியாசிகள், ஆடி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை (ஜூன் - ஜூலை முதல் அக்டோபர்-நவம்பர் வரை) மழைக்காலத்தில் ஒரே இடத்தில் தங்கி மேற்கொள்ள வேண்டிய விரதம். இந்தக் காலத்தில் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டிய உணவு என்றெல்லாம் கட்டுப்பாடுகள் உண்டு. உதாரணமாக, முதல் மாதத்தில் இலை சம்பந்தமான கறிகளை உபயோகிக்க கூடாது, இரண்டாவது மாதம் தயிர் கூடாது, மூன்றாம் மாதம் பால் பொருட்கள் கூடாது, நான்காம் மாதம் பருப்பு வகைகளைத் தவிர்க்கவேண்டும் என்பது போல. தற்காலத்திலும் இது கடைபிடிக்கப்படுகிறது ஆனால் குறைந்த கால அளவுகளில் என்று நினைக்கிறேன் (இரண்டு மாதங்களுக்கும் குறைவு)
பஞ்ச சம்ஸ்காரங்கள்: 1. வலது தோளில் சக்கரம், இடது தோளில் சங்கு முத்திரை தரிப்பது 2. பெருமாளின் பன்னிரண்டு திருநாமங்களை நினைவுகூர்ந்து, பனிரண்டு திருமண் காப்பு அணிவது, 3. சரீர சம்பந்தங்களை விட்டுவிட்டு ஒரு புதிய தாஸ்ய நாமத்தைக் கொள்வது 4. ஆச்சார்யாரிடம் மந்திர உபதேசங்களைப் பெறுவது 5. தினமும் பெருமாளுக்கு திருவாராதனம் செய்வது, அதற்குரிய மந்திரங்களைப் பெறுவது.
இதுவே ஐயங்கார்களாக, அதாவது ஸ்ரீவைஷ்ணவர்களாக ஆகும் தகுதி. ஆனால் காலம் ‘ஐயங்கார்’ என்பதையே ஒரு சமூகமாக மாற்றிவிட்டது. அதற்கு முன்பு, பிராமணர்கள் என்ற சமூகம் இருந்தது.
இதற்கு அடுத்தது, பிரபத்தி எனப்படும் சரணாகதி. இதற்கு இரண்டு முக்கியத் தகுதிகள் உண்டு. ஒன்று, அடியேனுக்கு ஒரு நிறையும் தகுதியும் இல்லை. இரண்டு, எம்பெருமானைத் தவிர வேறு புகலிடம் இல்லை, அவனே நம்மைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பான் என்ற முழு விசுவாசம். இதனால்தான் பிரபத்தி செய்துகொண்டவர்கள், பெருமாள் சுவீகரித்த (கண்டருளிய) பிர சாதத்தைத் தவிர வேறு உண்ணக்கூடாது, அன்னிய தேவதைகளின் கோயில்களுக்குச் செல்லக்கூடாது என்ற காரணம். திருமாலே புகலிடம் என்ற உறுதி உள்ளவர்களுக்கு அன்னிய தேவதைகள் என்ன செய்துவிட முடியும்? என்ற காரணம்.
இனி இன்றைய பாசுரம், திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுஜ நூற்றந்தாதியில் கூரத்தாழ்வான் பற்றி வரும் பாசுரம். இன்றைய பகுதிக்குப் பொருத்தமானது.
##மொழியைக் கடக்கும் பெரும் புகழான்,* வஞ்ச முக்குறும்பாம்-
குழியைக் கடக்கும்* நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்*
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி அல்லா-*
வழியைக் கடத்தல்* எனக்கு இனி யாதும் வருத்தமன்றே.
வாக்குக்கு எட்டாத பெரும் புகழை உடையவர் கூரத்தாழ்வான். தாம் நம்மை வஞ்சிக்கின்ற மூன்று கர்வங்களைக் கொண்டிராது தூய ஆத்ம குணங்களைக் கொண்டிருந்தது போல, அவரை நாம் தஞ்சம் என்று அடைந்த பிறகு, அவரது ஆச்சார்யரான இராமானுஜரின் திருக்கல்யாண குணங்களைப் பாடி, நரகத்தை அடைவிக்கக் கூடிய மற்ற வழிகளை நான் கடந்துவிடுவது எனக்கு இனி ஒரு பொருட்டல்ல. அது எனக்குச் சற்றும் வருத்தம் தராது.
விளக்கம்: மொழியைக் கடக்கும்-வார்த்தைகளால் விவரிக்க முடியாத, வாக்குக்கு எட்டாத, வஞ்ச முக்குறும்பு-கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு மற்றும் குலச் செருக்கு. இந்த மூன்றும் முழுமையாக இல்லாதவர் கூரத்தாழ்வான். அல்லா வழியைக் கடத்தல்-இறைவனைச் சேருவதற்குத் துணை செய்யாத பிற வழிகள்.
கூரத்தாழ்வான் திருமாளிகை இருந்த இடம். கூரம்
கூரம், ஆதிகேசவப் பெருமாள் கோயில். இங்குதான் கூரத்தாழ்வான் சன்னிதி உள்ளது.
கூரம் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் மூலவர்
கூரத்தாழ்வான் சன்னிதி, கூரம் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில்
இன்றைக்கு பதிவு ரொம்பவே நீளமாகிவிட்டது என்று தோன்றுகிறது. அடுத்த வாரம் தொடர்வோமா?...
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நான் படிச்ச கதை - J K C
பதிப்பாசிரியரின் முகவுரை – செப்டம்பர் 2006
மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன
வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை.
இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச்
சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது.
இப்பொழுது, இங்கு இராயர் – அப்பாஜி கதைகள் ‘இராயர் அப்பாச்சி கதைகள்’
என்னும் தலைப்பில் பதிப்பிக்கப்பெற்று நூலுருப் பெற்றுள்ளது. இப்பதிப்பு தொடர்பான செய்திகளை
இனிக் காணலாம்.
பதிப்புக்கு அடிப்படையான மூல ஓலைச்சுவடி குறித்து :
சரசுவதி மகால் தமிழ்த்துறையைச் சேர்ந்த 1830-ஆம் எண்ணிடப் பெற்ற ஓலைச்சுவடியில்
மரியாதைராமன் கதைகள், இராயர் -அப்பாச்சி கதைகள் ஆகிய இரண்டும் முழுமையும் எழுதப்பெற்றும்,
தெனாலிராமன் கதைகள் தொடக்கம் மட்டும் (ஓருகதை மட்டும்) எழுதப்பெற்றுப் பின் தொடர்ந்து
எழுதப்படாமல் நின்றுபோயும் உள்ளது. இவ்வோலைச் சுவடியே இப்பதிப்புக்கு அடிப்படையாக அமைந்த
சுவடியாகும்.
இவ்வோலைச்சுவடி, கரூர் வட்டம் தாளியாபட்டியைச் சேர்ந்த திரு. வை. பாலார்
கவுண்டர் இந்நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியதாகும். இவ்வோலைச் சுவடியில் 38 ஏடுகளில்
கதைகள் எழுதப்பெற்றுள்ளன.
இராயர், அப்பாஜி
இராயர், அப்பாஜி என்னும் பெயர்கள் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரையும்,
அவருடைய அமைச்சர் சாளுவ திம்மராசு அப்பாஜியையும் குறிப்பன. அப்பாஜியின் காலம் 16-ஆம்
நூற்றாண்டு ஆகும்.
இராயர் – அப்பாஜி கதைகள்
நுட்பமான மதிநலங்கொண்ட அமைச்சர் அப்பாஜியின் தீரச் செயல்களை விவரிக்கும்
கதைகள் தெலுங்கு மொழியிலும் தமிழ் மொழியிலும் (தலைமுறை தலைமுறையாகப் பரவி வழங்கி) எழுதப்
பெற்றுள்ளன.
இக்கதைகள் முதலில் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப் பெற்றிருக்கலாம்.
அல்லது கர்ணபரம்பரைக் கதையாகத் தெலுங்கு மொழி பேசுவோரிடமிருந்து தமிழர்களிடத்தில் இக்கதைகள்
பரவியிருக்கலாம்.
மொழி பெயர்க்கப்பட்ட அல்லது கர்ணபரம்பரையாகப் பரவிய இக்கதைகள் ஓரிரு
தலைமுறைகளுக்கு முன் ஓலைச்சுவடியில் பதிவு செய்யப்பெற்றிருக்கக்கூடும். அவற்றிலிருந்து
பிரதி செய்யப் பெற்றவற்றுள் ஒன்றாக இந்நூலகத்திற்குக் கிடைத்துள்ள இப்பிரதி இருக்கக்கூடும்.
இராயர் அப்பாஜி கதைகள் என்னும் தலைப்பில் தமிழில் இதற்கு முன்பே பல
நூல்கள் வெளிவந்துள்ளன.
நமது நூலகப் பதிப்பான இப்பதிப்பின் தேவை
இராயர் அப்பாஜி கதைகளைக் கூறும் பல நூல்கள் வெளிவந்திருக்கின்ற போதிலும்,
இவற்றில் எதுவும் ஓலைச்சுவடியில் இருந்து பதிப்பிக்கப் பெற்றதாக இல்லை. ஆகவே, இக்கதைகளுக்குச்
சுவடிப் பதிப்பு நூல் ஒன்று இன்றியமையாததாகின்றது.
நமது நூலக ஓலைச்சுவடியில் இடம்பெற்றுள்ள கதைகளின் மொழிநடை, பிற பதிப்புகளின்
கதைகளின் மொழி நடையிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றது. கதைப்போக்கில் மெல்லிய மாறுதல்களைக்
கொண்டிருக்கின்றது. இத்தன்மை வாய்மொழி இலக்கிய ஆராய்ச்சிக்கும், கடந்த நூற்றாண்டு மொழிநடை
குறித்த ஆராய்ச்சிக்கும் பெரிதும் பயன்படும் என்னும் நோக்கத்தில் இப்பதிப்பு வெளிவருகின்றது.
இப்பதிப்பில் இடம்பெற்றுள்ள கதைகளின் மொழிநடை
இராயர்-அப்பாஜி கதைகளின் மொழிநடை, பேச்சு வழக்குச் சொற்களால் ஆனது.
வடமொழிச் சொற்களின் ஆட்சி அதிக அளவில் காணப்படுகின்றது.
ஆயினும், அப்பாஜி, பாதுஷா என்னும் இரு சொற்கள் மட்டும் அப்பாச்சி, பாச்சா
என்று தமிழ்மொழியின் இயல்புக்கேற்ப மருவி வடிவங்களுடனேயே சுவடியில் தொடக்கம் முதல்
இறுதிவரை அமைந்துள்ளன.
இராயர் – அப்பாச்சி கதைகள் என்னும் இப்பதிப்பு நூலின் தலைப்பு குறித்து
இக்கதைகளைக் கொண்ட பிறபதிப்புகள் தம் நூல் தலைப்பில் ‘அப்பாஜி’ என்னும்
சொல் வடிவினைப் பயன்படுத்த, இப்பதிப்பு நூலின் தலைப்பு மட்டும் ‘அப்பாச்சி’ என்னும்
சொல்வடிவையே பயன்படுத்துவதாக அமைந்துள்ளது. சுவடியில் தலைப்பிலும், கதைகளுக்குள்ளும்
‘அப்பாச்சி’ என்னும் சொல்வடிவமே இடம் பெற்றுள்ளது. கதைகளைப் புனைந்தவர் அல்லது ஏடு
எழுதியவர் கதைகளுக்குள் ‘வேஷம்’, ‘புருஷன்’ முதலிய வடமொழிச் சொற்களை வடவெழுத்துடனேயே
எழுதியுள்ளார். ஆனால் ‘அப்பாஜி’, ‘பாதுஷா’ ஆகிய இரு சொற்களை மட்டும் அப்பாச்சி, பாச்சா
என்றே தமிழியல்பிற்கேற்ப எல்லா இடங்களிலும் ஆண்டுள்ளார்.
தமிழ்நலஞ் சான்ற சொல் வடிவங்கள் என்னும் நோக்கிலும், இப்பதிப்பு நூலின்
தனித்தன்மைகள் என்னும் நோக்கிலும், ஆய்வாளர்களுக்குப் பயன்படவேண்டும் என்னும் கருத்திலும்
இச்சொற்களே இப்பதிப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நோக்குகளின் அடிப்படையில், இப்பதிப்பு
நூலின் தலைப்பும் ‘அப்பாச்சி’ என்னும் சொல்வடிவையே கொண்டிலங்குகிறது.
வரலாற்றுப் புகழ்பெற்ற இவ்விருவரைப் பற்றியும் வழங்கப்படும் கதைகளில்
வரலாற்றுக்குப் புறம்பான சில கதைகளும் அடங்கியுள்ளன.
உதாரணமாக, இந்நூலின் பழைய பதிப்புகளில் வரும் முதல் கதையில் அப்பாஜி
வேறு ஓர் அரசரிடம் அமைச்சராக இருந்ததாகவும், இராயர் அவருடைய அறிவுத்திறனை வியந்து அவரைத்
தம்முடைய மந்திரியாக ள்ளன. வழங்குகின்றது.
இது வரலாற்றுக் குறிப்புகளுக்குப் பொருந்தாத கதை.
உண்மையில், கிருஷ்ணதேவராயரைச் சிறுவயதிலிருந்து வளர்த்துவந்தவர் அப்பாஜி.
சிறு வயதில் இராயருக்குப் பகைவர்களால் ஆபத்து நேரிடும்போது, அந்த ஆபத்துகளினின்றும்
அவரைக் காத்தவர் அப்பாஜி.
கிருஷ்ணதேவராயர் இந்த நன்றியை மறக்காமல் அவரைத் தம்முடைய முதன்மந்திரியாக
நியமித்துக்கொண்டார்.
ய.மணிகண்டன், எம். ஏ., எம். ஃபில்.,
தமிழ்ப்பண்டிதர்,
சரசுவதி மகால் நூலகம்.
தஞ்சாவூர், 1-3-92.
என் குறிப்பு: இந்நூலில் இருந்து
5 கதைகள் இங்கு தரப்பட்டுள்ளது.
விபசாரி மோசத்தைக் கண்டுபிடித்தது
ஒருவன் ஸ்த்ரீகளைக் கலியாணம் செய்தால் விபசாரம் பண்ணுவானென்று வெகுநாள்
வரைக்கும் கலியாணம் பண்ணாமல் இருந்தான்.
ஒருநாள் ஒரு விபசாரி அவனைக்கண்டு, மற்ற ஸ்த்ரீகளைப் போல என்னை நினைக்காதே.
நான் கற்புடையவளாயிருப்பேன்” என்று தன்னிடத்தில் நம்பிக்கை வரும்படி சொன்னாள்.
அவள் வாய்மொழிகளை நம்பி அவளைக் கலியாணம் பண்ணிக்கொண்டான். சிலநாள் பொறுத்துத்
தன் புருசனுடனே, “நீ வெளியிலே போய்வருகிற வரைக்கும் கதவைத் திறவாமல் தாள்பூட்டி இருப்பதற்கும்,
நீ வருகிற குறிப்பை அறிந்து கதவைத் திறந்துவைப்பதற்கும் நீ இருக்கிற ஏற்றத்தில் ஒரு
மணிகட்டி வைத்தால் நலமாயிருக்கும்” என்று சொன்னாள்.
அது நல்ல யோசனையென்று அப்படியே செய்தான். அவன் மணி அசைக்கிறவரைக்கும்
எதிர்வீட்டிலிருக்கும் ஒருவனை உள்ளே அழைத்து ஏகபோகமாக இருந்து கொண்டு, மணி நின்றால்
அவனை வெளியிலே அனுப்பிவைத்துக்கொண்டிருந்தாள்.
ஒருநாள் இராயரும் அப்பாச்சியும் அந்த வழியாக வரும்பொழுது “ஏற்றத்தில்
மணி கட்டியிருக்கிறது என்ன ஆச்சரியம்?” என்று அப்பாச்சியைக் கேட்க, அப்பாச்சி “இதோ
தெரியப்படுத்துகிறேன். அந்த விசித்திரத்தைப் பாருங்கள்” என்று ஏற்றத்தின் மேலே மிதிக்கிறவனை அழைத்து, “இவ்வேற்றத்தில் மணி கட்டுதற்குக்
காரணமென்ன?” என்று கேட்க, அதற்கு அவன், என் பெண்சாதி தன் கற்புக்குக் குறைவராமல் நான்
வீட்டுக்கு வருவதை அறிந்து கதவைத் திறக்கவும் மற்ற வேளை மூடிவைக்கவும் செய்யச் சொன்னது
என்றான்.
அதுகேட்டு அப்பாச்சி, “என் எசமானுக்குத் தாகமாயிருக்கிறது. உங்கள் வீட்டுக்குப்போய்
ஒரு சொம்பு மோர்கொண்டுவா” என்றான்.
“அந்தமட்டுக்கும் ஏற்றம் நிற்குமே எப்படி?” என்றான். அந்தமட்டும் நான்
ஏறி மிதிக்கின்றேன். நீ போய்க் கொண்டுவா” என்றான். அப்படியே அப்பாச்சியை ஏற்றத்தின்மேலே
ஏற்றிவிட்டுத் தான் வீட்டண்டையிலே போய்க் கதவைத் தட்டும்போது தன் பெண்சாதியும் எதிர்வீட்டுக்காரனும்
சரசம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
கதவைத் திறந்தால் விபசாரம் தெரிந்துபோமென்று சீக்கிரத்தில் அந்த சோர
புருஷனை அங்கிருந்த பாயில் சுருட்டிவைத்து மோர் பானையண்டையிலே வைத்துவிட்டுக் கதவைத்
திறந்தாள்.
இவன் சீக்கிரமாக மோர் கொண்டுவரவேண்டுமென்ற அவசரத்தில் செம்பையெடுத்துக்
கொண்டு மோர்ப் பானையண்டையிலேபோய் அதன்மேலே சாத்தியிருக்கும் பாயைத் தள்ளிவிட்டு மோர்
மொண்டான்.
அந்தப் பாய்க்குள்ளிருக்கும் மனிதன் திடீரென்று கீழே விழும்பொழுது,
அவன் தலை அம்மிக் கல்லிலே பட்டு உடைந்தது. அவன் மிகவும் கூச்சலிட்டான். அப்புறம் விசாரிக்கும்போது,
தன் பெண்சாதிக்கு வேஷக்காரனென்றும் நெடுநாளாக இருவரும் கலப்பாக இருக்கிறார்களென்றும்
அறிந்து விசனப்பட்டுக் கொண்டே மோர் கொண்டு போனான்.
அந்த மோரைச் சாப்பிட்டு, இராயர் “ஏனப்பா இந்நேரம்?” என்று கேட்டார்.
அதைச் சொல்லுகிறதற்கு வாய் எழாமல் மரம் போலே நின்றான்.
“நீ ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம். உள்ளதைச் சொல்” என்றார். அப்புறம், தான்
கலியாணம் பண்ணாமலிருந்த விதமும் மறுபடியும் பண்ணிக்கொண்ட சங்கதியும், தன் பெண்சாதி
தன்னை மோசம் செய்ய யோசித்துத் தன்னை ஏற்றத்தில் மணிகட்டச் சொன்ன உபாயத்தையும் தான்
மோருக்குப் போகும்போது பிரத்தியச்சமாகத் தான் கண்ட சாட்சியும் சொன்னான். அதைக் கேட்டு,
“லோகத்திலே ஸ்த்ரீகளை” நம்பக்கூடாது. ஆகையால் விசனப்படாதே” என்று சொல்லிவிட்டு, இராயரும்
அப்பாச்சியும் அப்புறம் அவ்விடம் தாண்டின பிற்பாடு, இராயர் மெச்சினேன் உன்னை என்று
அப்பாச்சியை கட்டிக்கொண்டார்.
– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்:
முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
தனக்குள்ளது
உலகத்திற்குமுண்டு
தனக்குள்ளது உலகத்திற்குமுண்டு தனக்கில்லாதது உலகத்திற்குமில்லை என்றது
ஒருநாள் இராயர் தனக்கு கேஷளாகச் செய்துகொண்டிருக்கும் அம்பட்டனைப் பார்த்து
“இந்தப் பட்டணத்தில் எல்லோரும் சவுக்கியமாய் இருக்கிறார்களா?” என்று கேட்க, அதற்கு
அவன், “எவ்வளவு எளியவராய் இருக்கிறவர்களுக்குள்ளேயும் எலுமிச்சங்காயளவு பொன்னுக்குக்
குறைச்சலுள்ளவர் ஒருவருமில்லை” என்றான்.
சமீபத்திலிருந்த அப்பாச்சியைப் பார்க்க, அப்பாச்சி சற்று நேரம் யோசித்துப்
பார்த்து இராயருக்கு அம்பட்டன் மறவிலக்கால் கேஷளாகச் செய்யப்போனபோது தன்னுடைய ஊழியக்காரன்
ஒருவனைவிட்டு அடப்பத்தைச் சோதித்து அதிலிருந்த எலுமிச்சங்காயளவு பொன்னை எடுத்து அம்பட்டன்போன
பின்பு இராயருக்குக் காண்பித்து, அதனாலேதான் அவன் தனக்குள்ளது உலகத்திற்குமுண்டு; தனக்கில்லாதது
உலகத்திற்கும் இல்லை என்று நினைத்து அப்படிச் சொன்னான் என்று தெரிவித்து அதைத் பத்திரப்படுத்தி
வைத்து, இன்றே கேஷளாகத்துக்கு அவனை இப்போது கேட்டதுபோலே கேட்டால் அப்போது அவன் சொல்லுகிற
சங்கதியும் தெரியலாம்” என்றான்.
இராயர் அப்படியே அவனை மறு கூட்டி வந்து கேட்ட பொழுது, “அப்படி மகாராசாக்களுக்குள்ளேயும்
மெவடம்பமே யல்லாமல் எலுமிச்சங்காயளவு பொன் உடையவர் யாருமில்லை” என்றான்.
பின்பு இராயர் அப்பாச்சியைப் பார்த்து, உன்னைப் போலவும் விவேகமுள்ள
மந்திரி எந்தத் தேசத்திலும் கிடைப்பது மிகவும் அரிதென்று மெச்சி அம்பட்டனுக்கு அவன்பொன்னைக்
கொடுத்துவிட்டார்.
கற்றறி மோழை முதலான பொருள்களைச் சம்பாதித்தது
ஒருநாள் இராயர் தமது மந்திரியாகிய அப்பாச்சியை அழைத்து, “கற்றறி மோழை,
கைநட்புச் சேவகன், தாசியிற் சாதி, சாதியிற்றாசி, ஊர்திரிகின்ற நாய், மனிதரிற் கழுதை,
சிம்மாசன மேறுகின்ற கடா இவ்வேழும் உன்னாலே சம்பாதிக்கக் கூடுமா?” என்று கேட்டார்.
அதற்கு அப்பாச்சி சம்மதித்து உத்தரவு ஏற்றுக்கொண்டு வேறொரு இராசாவின்
பட்டணத்தில் ஒரு பண்டிதரிடத்திலே போய் நாலாயிரம் வராகன் கொடுத்து நான் கேட்கும் சமயத்தில்
கொடுவென்று சொல்லிப் பின்பு ஒரு தாசியினிடத்திற்குப்போய், ஒரு இராத்திரிப் படுக்கைக்கு
நீ என்ன கேட்பாயென்று கேட்கத் தாசி “ஒரு இராத்திரிக்கு ஆயிரம் வராகன் கொடுக்கவேணும்”
என்றாள்.
அதற்கு அப்பாச்சி சம்மதித்துக் கொடுத்துப் படுக்க வீட்டுக்குப் போகும்போது
அவளுடனே “நானுன்னைக் கூடினவுடனே இந்தக் கட்டாரியினாலே உன்னைக் குத்திக் கொன்னுபோடுவேன்”
என்று சொன்னான்.
அதற்குத் தாசியும் ஆயிரம் வராகனை வாங்கிக் கொண்டு, “என்னுடைய தேகத்தை
இந்த இராத்திரியிலே உம்முடைய இஷ்டப்படி செய்யலாம்” என்றாள்.
அப்பாச்சி “எனக்கு இஷ்டமான நாளில் வருவேன்” என்று சொல்லி, அவளிடத்திலேயிருக்கும்
நாய்க்குத் தன் கையிலிருந்த பலகாரத்திலே கொஞ்சம் போட்டு, அப்புறம் இராசவீதியிலே போகும்பொழுது,
அப்ப இராசாவின் குமாரத்தி அப்பாச்சியைக் கண்டு அவன் அதிரூபவானாக இருக்கையில் அப்பொழுதே
தகப்பனிடத்தில்போய், “எனக்கு இஷ்டமான புருஷனை நான் கலியாணம் பண்ணிக்கொள்ள நீர் சம்மதித்தபடி
இப்பொழுது நான் கண்ட புருஷனுக்கு என்னைக் கலியாணம் பண்ணிக் கொடும்” என்று சொல்லத் தகப்பன்,
அப்படியே அப்பாச்சிக்குத் தன் குமாரத்தியைக் கலியாணம் பண்ணிக்கொடுத்தான்.
இராத்திரி படுக்கைக்குப் போனபோது பெண்சாதியொடு, “உன்னோடு கூடினவுடனே
இந்தக் கட்டாரியால் குத்திப்போடுவேன்” என்று சொல்ல, அவள் “கூகூ” என்று பயந்து கூவினாள்.
அவள் தகப்பனாகிய இராசா அந்தக் கூச்சலைக் கேட்டுத் தன் குமாரத்தியிடத்திற்கு
விசாரிக்க அவள், தன் புருசனாகிய அப்பாச்சி சொன்னதைச் சொல்லினாள். அப்போது இராசா மந்திரியுடனே,
“இதற்கென்ன செய்யலாம்?” என்றான்.
அரசன் அப்படியே கொலைசெய்ய அவனுக்கு உத்தரவு கொடுத்தான். அவன் கட்டியிழுத்துக்கொண்டு
போகையில் அந்தச் சேவுகர்க்கு அனேக உபசாரம் சொல்லி, “இந்த ராசாவுடனே ஒரு பேச்சு ருசுவிலே
பேசவேணும். அதற்குச் சாவகாசம் கொடுங்கள்” என்று கேட்டான். “கூடாது” என்று இழுத்துக்கொண்டு
போனார்கள்.
பண்டிதன் வீடண்டையிலே போம்பொழுது அவனை அழைத்து, “என் நாலாயிரம் வராகனையும்
கொடு” என்று கேட்க, இவனுக்குச் சிரசாக்கினை வந்ததை அறிந்து அவன், “உன்னைக் கண்டவனார்?
உன் வராகனை கண்டவனார்? போ” என்றான்.
அப்பால் தாசி வீட்டண்டையிலே போகும்போது அங்கிருந்த நாய் அப்பாச்சியைப்
பார்த்து வீட்டுக்குள்ளே நுழைந்து தாசி காலைச் சுற்றிக் கூவித் தெருவிலே அழைத்துக்கொண்டுவந்தது.
அந்தத் தாசி அப்பாச்சியைப் பார்த்து நடந்த வர்த்தமானங்களை விசாரித்து அந்தச் சேவுகர்க்கு
இரண்டு நாழிகை வரைக்கும் சொல்லாமல் வைத்திருக்கும்படியாகப் பேர்க்கு நூறு நூறு வராகன்
கொடுத்து இராசாவிடத்திற்குப் போய்ச் சொல்லி, “நீங்கள் உத்தரவு கொடுத்தவனை அழைப்பித்து
அவன் வாய்ப்பிறப்பு விசாரித்துச் செய்தால் நல்லது” என்றாள்.
அப்படியே இராசா அவனை அழைப்பித்து விசாரிக்குமளவில், “இராயர் அருமையான
சில பதார்த்தங்களைச் சம்பாதிக்கும்படி அனுப்பினார். என் அதிர்ஷ்ட்ட வசத்தினாலே உமது
பட்டணத்திலே தானே அவைகளெல்லாம் கிடைத்ததுகள். ஆகையால் அந்தச் சமாசாரத்தை இராயரவர்களுக்கு
அறிவிக்க உத்தரவு கொடும்” என்று கேட்டான்.
அவ்வரசன், இராயரால் அனுப்பப்பட்டவ னென்றபடியால் அஞ்சி அப்பாச்சிக்கு
வெகுமரியாதை செய்து அனுப்பினான். அப்பாச்சி இராயரிடத்துக்குப்போய் நடந்த சேதியெல்லாம்
ஆதி அந்தமாகச் சொல்லி, அவ்வரசன் முதலாகிய ஏழுபேரையும் அழைப்பித்து, “இப்பட்டணத்தில்
சகலமும் கற்றறிந்தும் என் கையில் வாங்கின பணத்தைச் சமயம் பார்த்து மோசம் செய்தபடியால்
கற்றறி மோழையாகும். இந்தத் தாசி வீட்டு நாய் என் கையிலிருந்து ஒரு தரம் கொடுத்த பலகாரம்
தின்ற நட்பு மறவாமல் உதவிசெய்தபடியால் கைநட்புச் சேவகனாகும்.
இந்தத் தாசி குலஸ்த்ரீஅல்லாதிருந்தும் ஆபத்திலே என் தலையைக் காத்தபடியினாலே தாசியிற் சாதியாகும். இவ்வரசன் மகள் குலஸ்த்ரீயாக இருந்தும் தலைக்கு ஆக்கினை நேரிடும்படியாகச் செய்தபடியால் சாதியிறாசியாகும். இச்சேவுகர் நான் என்ன சொல்லியும் கேளாமல் லஞ்சம் வாங்கிக்கொண்டு கேட்டபடியால் ஊர் திரிகின்ற நாயாவார். இம்மந்திரி மனுசனாய் இருந்தும் என் வாய்ப்பிறப்பைக் கேளாமல் கொல்லச் சொன்னபடியால் மனிதரிற் கழுதையாகும். இவ்வரசன் பகுத்தறிவில்லாமல் சிம்மாசனத்தின் பேரிலே ஏறியிருக்கிற படியால் சிம்மாசனமேறுகிற கடாவாகும்” என்று சொன்னான். இதுகளைக்கேட்டு இராயர் அதிக சந்தோஷத்தை அடைந்தார்.
பாச்சா
அனுப்பிய தாசியை வென்றது
டில்லி பாச்சாவானவன் திரும்பியும் அப்பாச்சி சாமர்த்தியத்தைப் பரீக்ஷிக்கும்
பொருட்டாகப் பரத சங்கீதங்களிலே கெட்டிக்காரியாகிய ஒரு தாசியை அழைத்து, அவளுக்கு வேண்டிய
பணங்களைக் கொடுத்து “நீ இராச சபைக்குப் போய் இன்னவிதமாக அவனை மானஞ்செய்துவா’ என்று
அனுப்பினான்.
அவள் அப்படியே சம்மதித்து இராயர் சபைக்கு வந்து சபையாருக்கும் இராயருக்கும்
அனேகவிதமான நாட்டியங்களைச் செய்து அனேகவிதமான கீர்த்தனைகளைப் பாடினாள். ராயருக்கு அவள்மேலே
அதிக விசுவாசம் பிறந்தது. ‘உனக்கு வேண்டுவதைக் கேளு, யாதொரு தடையுமில்லாமல் கொடுப்பேன்”
என்றார்.
அதைக்கேடடு, “சத்திய சுரூபியாகிய என் ஆண்டவரீர் எனக்கு மற்றொன்றும்
வேண்டுவதில்லை. உங்கள் சிங்காசனத்தின் மேலே ஒருதரம் மலபாதை செய்யும்படியாக ஒருவரம்
மாத்திரம் அனுக்கிரகம் செய்யவேணும்” என்று கேட்டாள்.
இராயர் அந்தச் சொல்லைக் கேட்டு மிகவும் விசனத்தை அடைந்து, சற்று நேரம்
ஆலோசித்து, தான் சொல்லிவிட்ட சொல்லைக் காப்பாற்ற வேணுமென்று தீர்மானித்து, “நீ கேட்ட
வரத்தைக் கொடுத்தேன். நாளைக்கு வந்து அப்படியே செய்” என்று அவளை அனுப்பிவிட்டு, அப்பாச்சியை
அழைப்பித்து நடந்த சங்கதியைச் சொன்னார்.
அப்பாச்சி, “நீங்கள் இதற்கு அஞ்சவேண்டுவதில்லை. நான் ஒரு உபாயஞ் செய்து
அந்தத் தாசியைத் துரத்திவிடுகிறேன்” என்று மறுநாள் உதையத்துக்கு அந்தத் தாசி வந்த உடனே
அவளைப் பார்த்து, நீ இந்தச் சிங்காசனத்தின் மேலே இராயரவர்கள் உத்தரவு கொடுத்தபடி மலபாதை
மட்டுமே செய்யவேணுமேயல்லாமல் சலபாதை முதலானதுகள் செய்வாயேயானால் அச்சணமே சிரச்சேதம்
என்று சொன்னான்.
அப்பாச்சி சொன்னபடி செய்வது முடியாத காரியமாயிருந்த படியாலே அவள் வெட்கி,
அவமானப்பட்டுப் போய்விட்டாள். இராயர் அதுகண்டு அளவற்ற சந்தோஷத்தை அடைந்தார்.
குடப்பூசணிக்காயும்
நடக்கீரையும் குழிக்கிணறும் அனுப்பியது
டில்லி பாச்சாவானவன் இராயரிடத்திலிருக்கிற அப்பாச்சி யினுடைய உயரிய
தந்திரங்களையும் உத்தி விசேஷங்களையும், புத்தியினுடையத்தையும் கேள்விப்பட்டு அதைப்
பரிசோதிக்கும் படியாகக் “குடப்பூசணிக்காயும், நடக்கீரையும் குழிக்கிணறும் சீக்கிரத்தில்
அனுப்பவேணும்” என்று இராயருக்கு எழுதி அனுப்பினான்.
அந்த நிருபம் இராயரிடத்திற்கு வந்தது. அவர் படித்துப் பார்த்து அப்பாச்சிக்குக்
காண்பித்தார்.
அப்பாச்சி அப்படியே செய்வோமென்று சொல்லிவிட்டுப் போய் ஒரு பூசணிப் பிஞ்சைக்
குடத்துக்குள்ளே விட்டு வளர்த்து அது குடத்துக்குள்ளே தானே பருக்கும்படி செய்து, ஒரு
வண்டியின் மேலே முழ உயரம் மணல் பரப்பிப் பாத்தி கட்டிக் கீரை விதைத்து, அந்தக் குடத்தையும்,
வண்டியையும் இராயரிடத்தில் கொண்டுபோய்க் காட்டி, இதுகளைப் பாச்சாவுக்கு அனுப்பி “இத்தேசத்திலிருக்கிற
குழிக்கிணறு அத்தேசத்திற்குப் புதிதென்பதால் அத்தேசத்துக் கிணறுகளிலேயே ஒன்றை அனுப்பினால்
பிணைபோட்டு அனுப்புகிறோம்” என்று எழுதி அனுப்பச் சொல்லிச் சொன்னான்.
இராயர் சந்தோஷப்பட்டு அப்படியே செய்தார்.
பாச்சா இந்த ஓலையையும், பூசணிக்காய்க் குடத்தையும், கீரை வண்டியையும்
பார்த்து மிகவும் அப்பாச்சியின் வல்லமையை மெச்சிக் கொண்டான்.
விக்கிரகங்களைப்
பரீக்ஷித்தது
டில்லி பாச்சா மறுபடியும் அப்பாச்சி வல்லமையை அறிதற் பொருட்டு ஒரேவிதமான
மூன்று விக்கிரகங்களையும் இதுகளில் எதைப்போல இருக்கிறவன் உத்தமன், எதைப்போல இருக்கிறவன்
மத்திமன், எதைப்போல இருக்கிறவன் அதமன். பரீக்ஷித்து அந்தந்த விக்கிரகத்தின் மேலே எழுதி
அனுப்புகிறது என்று எழுதி ஒரு தாக்கீதையும் இராயருக்கு அனுப்பினான். இராயர் நிரூபத்தை
வாசித்துப் பார்த்துச் சபையார்க்கெல்லாம் அந்த விக்கிரகங்களைக் காண்பித்துக் குணாகுணங்களைச்
சோதிக்கச் சொன்னார்.
மூன்றும் ஒரே மாதிரியாயிருக்கிறபடியால் அதுகளவபேதம் கண்டுபிடிக்கமாட்டாமல்
மயங்கினார்கள். அப்பாச்சி அந்த விக்கிரகங்களுடைய கரசரணாதி அவயவங்களை எல்லாம் உற்றுப்
பார்த்துக் காதுகளிலே சிறு துளைகள் இருக்கின்றதை அறிந்து மெல்லியிறத்தை* அத்துளைகளிலே
நுழைத்துப் பார்த்தான்.
நுழைத்துப் பார்க்கும் அளவில் அளித்தது வாய் வழியாகப் புறப்பட்டது.
மற்றொன்றற்கு மற்றொரு காதில் வழியாகப் புறப்பட்டது. மற்றொன்றற்கு வழிப்படாமல் உள்ளே
போய்விட்டது. உள்ளே போய்விட்டதைப் போலக் கேட்ட சமாசாரத்தை உள்ளடக்குகிறவன் உத்தமன்
என்றும்,
*ஓலைச்சுவடியில் உள்ள இச்சொல் கொண்டுள்ள பொருள் புலப்படவில்லை. மெல்லிய
இறகு அல்லது ஈர்க்கு என்பதைக் குறிக்கலாம்.
மற்றொரு காதின் வழியாகச் சென்றதைப் போல் தான் கேட்ட சேதியை மற்றொருவன்
காதின் வழியாகச் செலுத்துகிறவன் மத்திமன் என்றும், வாயின் வழியாகப் புறப்பட்டதைப் போலத்
தான் கேட்ட சங்கதியை அடக்காமல் வெளியே கொட்டிவிடுகிறவன் அதமனென்றும் நிச்சயித்து அந்தப்படியே
அந்தந்தப் பதுமைகளுக்கு மேல் எழுதி அனுப்பிவிடச்சொன்னான்.
இராயர் அதிக சந்தோஷத்துடன் பாச்சா இடத்துக்கு அனுப்பிவிட்டார்.
கதைகள் sirukathaigal.com இல் இருந்து பெறப்பட்டது.
ஸ்ரீ இராமனுஜர் வரலாற்றில் கூரத்தாழ்வார் மிக மிக முக்கியத்துவம் பெற்றவராச்சே!
பதிலளிநீக்குஸ்ரீவத்ஸசிந்ஹர் - முதலில் டக்குனு உரைக்கலை உடனே பிடிகிட்டிவிட்டது கூரத்தாழ்வார் என்றே மனதில் பதிந்து போனதால்.
கீதா
வாங்க கீதா ரங்கன். எனக்கும் படிக்கும்போது பல புதிய விஷயங்கள் தெரிகின்றன
நீக்குஇந்த நிகழ்வும் இப்போதுதான் அறிகிறேன் அல்லது நினைவில் இல்லையோ?
பதிலளிநீக்குகீதா
மறந்திருக்கும். எனக்கு இந்த நிகழ்வு படித்த நினைவில்லை.
நீக்குகூரத்தாழ்வார் திருமண விவரம் எவ்வளவு ஆழமான பொருள்...இது நம்மை சாதாரண மனிதர்களை ரொம்ப யோசிக்க வைத்து பக்குவப்படுத்தவும் உதவும். முழுவதையும் அவனிடத்தில் விட்டுவிட்டால் எந்தவித மன சஞ்சலும் வராது..
பதிலளிநீக்குகீதா
அது சுலபமல்ல கீதா ரங்கன்.
நீக்குகதவு சாத்தும் நிகழ்வும் அதன் பின்னான கூரத்தாழ்வாரின் சிந்தனைகளும் செயல்களும் வியக்க வைக்கும் அது போல திருக்கச்சி நம்பியும் பேரருளாளப் பெருமாளும் உரையாடிக் கொள்வதும்...
பதிலளிநீக்குகீதா
இத்தகைய பெரியோர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதே வியப்பு அல்லவா? இப்போதெல்லாம் சௌகரியமே பிரதானம் என்றாகிவிட்டது.
நீக்குயாதவப்பிரகாசரின் தாயார் நிகழ்வு, யாதவப்பிரகாசர் இராமானுஜரைச் சேர்ந்த நிகழ்வும் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குபாசுரம் விளக்கம், படங்கள் எல்லாமே நல்லாருக்கு நெல்லை.
கூரத்தாழ்வான் சன்னதி எல்லாம் ரொம்ப ரொம்ப வருஷங்களுக்கு முன் பார்த்தது.
கீதா
நான் இப்போதுதான் முதல் முறை சென்றேன். நீங்கள் ஏற்கனவே தரிசித்திருக்கிறீர்களா? அதான் உங்களை 'அக்கா' என்று அழைக்கிறேன்.
நீக்குஅப்பாஜி கதைகளில் முதல் கதை சொல்லும் பொருள் சரியாக இல்லை. ரசிக்கவில்லை
பதிலளிநீக்குகீதா
இரண்டாவது கதை தனக்குள்ளது உலகத்திலுமுண்டு, சில வார்த்தைகல் புரியவில்லையே...கதை என்ன சொல்கிறது என்று புரியவில்லை
பதிலளிநீக்குகீதா
மூன்றாவது கதை - புரிந்தது என்றாலும் மொழி நடை கொஞ்சம் சிரமப்படுத்தியது. அந்தக்காலத் தமிழ் என்பதாலோ?
பதிலளிநீக்குநான்காவது கதை அப்பாச்சியின் ஐடியா நல்ல சமயோசிதமானது.
கீதா
குடபூசணிக்காய் - இதுவும் ஓகே
பதிலளிநீக்குகடைசி - நல்ல விஷயம் சொல்கிறது. எல்லோருக்குமே எல்லாக்காலத்திற்கும் பொருந்தும் ஒன்று.
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய குரு பரம்பரையில், கூரத்தாழ்வார் பற்றிய நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். அடியவராக இருந்து இறையடியார்களுக்கு அவர் செய்து வந்த தொண்டு அவரின் நல்ல குணத்தை காட்டுகிறது. அவரின் நல்ல பண்புகளை இறைவனே ஆமோதித்து தன்னருளை வழங்கியதை கண்டு பக்திப் பரவசமானேன்.இறைவனே தன் அடியார்களை தொழுவதே சாலச்சிறந்தது என்பதை எல்லா புராண கதைகளிலும், தெளிவாக்கியுள்ளானே..! நாமும் காலத்தால் அழியாத இறையருளைப் பெற்றிருக்கும் அடியார்களை வணங்கி நன்மை பெறுவோமாக.!
இன்றைய பாசுரமும், அதன் விளக்கமும் தெரிந்து கொண்டேன். பஞ்ச சமஸ்காரங்கள் பற்றி அழகாக சொல்லியுள்ளீர்கள். கூரத்தாழ்வார் சன்னதி, மற்றும், கூரம் ஆதிகேசவ பெருமாள் தரிசனங்கள் கிடைத்தது. பதிவு மனதிற்கு மகிழ்வைத் தருகிறது. தொடரட்டும் உங்களது இறை சேவைகள். நாங்களும் இறையருளால் தொடர்ந்து வருகிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் விளக்கமான கருத்துக்கு நன்றி கமலா ஹரிஹரன் மேடம். தொடர்வதற்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதை பகிர்வும் அருமை. தெனாலிராமன் தொலைக்காட்சி தொடரில், இக்கதைகளைப் பற்றி, பார்த்து தெரிந்து கொண்டேன். இன்றும் வாசித்து தெரிந்து கொண்டேன். தொ. காட்சி தொடரில், தெனாலிராமரின் மதியூகத்தைப் பற்றி சிறப்பாக இக்கதைகளை சொல்லியிருப்பார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா... வாங்க துரை செல்வராஜ் சார். நலமா இருக்கீங்களா?
நீக்குநலமே வாழ்க..
பதிலளிநீக்குவாழிய நலம்
நீக்குஅப்பாஜியை ஏன் காரைக்குடி வழக்கில் அப்பாச்சி என்று சொல்கிறார்களோ... முதல் கதையில் வரும் ஒரு வசனம்
பதிலளிநீக்கு// “லோகத்திலே ஸ்த்ரீகளை” நம்பக்கூடாது. ஆகையால் விசனப்படாதே” என்று சொல்லிவிட்டு, //
இந்தக் காலத்தில் எழுதினால் மகளிர் அமைப்புகள் கொதித்தெழுந்து விடும்!
அதான் நான் கொதித்தெழுந்துவிட்டேனே!!!! அப்ப சொன்னதுக்கே ஹாஹாஹா
நீக்குகீதா
அப்பச்சியை அப்பாச்சி என்று சொல்லிட்டீங்களே ஸ்ரீராம். அதற்கு நகரத்தார்கள் கொதித்து எழுந்துவிடப்போகிறார்கள்.
நீக்குபொதுவாக பெண்களுக்கு அலைபாயும் மனது. இதுவா அதுவா என்று அவர்கள் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். சாஸ்திரங்களும் அப்படித்தான் சொல்கின்றன.
நீக்குசாஸ்திரங்கள் டச் பண்ணவே விரும்பாத மனம், ஆண் மனம்....
நீக்குகேஷளாக? கேசம் சம்பந்தப்பட்டது என்றாலும் வார்த்தை சரியாக வரவில்லையோ... இந்த இரண்டாவது கதை அக்பர் பீர்பால் கதையிலும் படித்திருக்கிறேன். மெவடம்பமே என்றால் என்ன?!
பதிலளிநீக்குடில்லி பாச்சாவுக்கும் வேறு வேலையில்லை போல... கிருஷ்ண தேவராயருக்கும் அது போல விளையாட்டு மடல்களில் இன்பம் கண்டிருந்திருக்கின்றனர்!
பதிலளிநீக்குகூரத்தாழ்வாருக்கு தரிசனம் செய்ய கொடுத்து வைக்கவில்லையே என்று வடநாட்டு வைணவர்கள் வருந்தியது அப்படி கோபப்படும் அளவு குற்றமா என்ன!
பதிலளிநீக்குவைணவத்தில் பாகவத அபசாரம், அடியவர்கள் மீது குற்றம் சொல்லுவதால் ஏற்படும் பிழை, கடவுளைக் குற்றம் சொல்வதினால் ஏற்படும் பிழையை விடப் பன்மடங்கு பெரிமு. இதில் அந்த வைணவர்கள், பெருமாளின் கருடசேவையை தரிசிக்காமல் வைணவர்களுக்கு அன்னதானம் செய்துகொண்டிருக்கிறாரே.. என்ன அறியாமை... கொடுப்பினை இல்லாதவர் என நினைத்ததினால் ஏற்பட்ட குற்றம்.
நீக்குநெல்லை, ஸ்ரீராம், கிட்டத்தட்ட இதே கருத்து கொஞ்சம் வித்தியாச புராணக் கதையா வருமே, நாரதர், விஷ்ணுவிடம் யார் பக்தி பெரியது என்று கேட்கும் போது இறைவனின் திருநாமத்தை விட, குடும்பப் பொறுப்புகளுக்கு நடுவிலும் இறைவனை நினைக்கும் ஒரு ஏழை விவசாயி, நாரதரை விடச் சிறந்த பக்தன் என்பதாகக் கதை...
நீக்குஇதை மேலெ சொல்ல நினைச்ச்ன் இப்ப இங்கு கருத்தைப் பார்த்த்டதும் இங்கு...
கீதா
அந்தக் கதையின் கருத்து வேறு கீதா. இங்கு கூரத்தாழ்வாரால் தரிசனம் செய்ய முடியவில்லையே என்று வ வை வருந்தியதற்கே பெருமாள் கொதித்தெழுந்து விட்டார்!
நீக்குநான் கொஞ்சம் மைல்டாக எழுதினேன் ஸ்ரீராம். அதுதான் உங்களுக்கு குழப்பமாகிவிட்டது.
நீக்குபொதுவாக கவனிக்கத்தக்கது அப்பாஜி கதைகளின் பாஷை!
பதிலளிநீக்குஅப்பாஜி கதைகளின் மொழி நடை 16 ஆம் நூற்றாண்டு என்பதால் அப்போதைய மொழி நடை. பல வார்த்தைகள் என்ன என்று யோசிக்க வைக்கிறது கதையோடு சேர்த்து வாசிக்கும் போது ஓரளவு அர்த்தம் புரிபடுகிறது என்றாலும் மீண்டும் வாசிக்க வைக்கிறது அந்த வரிகளை
பதிலளிநீக்குகீதா
ஒரு மாதிரி சில நீதிக்கதைகளை எடுத்துக்கொண்டு அவற்றை அப்பாஜி, தெனாலிராமன், பீர்பால் என்று சுண்டல் மாதிரி விநியோகம் செய்து விடுவார்கள் போல!
பதிலளிநீக்குஅப்பாஜி - அப்பாச்சி?
பதிலளிநீக்கு//இராயர்-அப்பாஜி கதைகளின் மொழிநடை, பேச்சு வழக்குச் சொற்களால் ஆனது. வடமொழிச் சொற்களின் ஆட்சி அதிக அளவில் காணப்படுகின்றது.//
ஒருவேளை தெலுங்கு வழக்கும் கலந்திருக்குமோ அப்போதைய தெலுங்கு மொழியின் வழக்கு?
அப்பாச்சி, பாச்சா என்று தமிழ்மொழியின் இயல்புக்கேற்ப மருவி வடிவங்களுடனேயே சுவடியில் தொடக்கம் முதல் இறுதிவரை அமைந்துள்ளன.//
அப்ப சுவடியில் எழுதியவர் தமிழ் மொழி விற்பன்னர்?
//சுவடியில் தலைப்பிலும், கதைகளுக்குள்ளும் ‘அப்பாச்சி’ என்னும் சொல்வடிவமே இடம் பெற்றுள்ளது. கதைகளைப் புனைந்தவர் அல்லது ஏடு எழுதியவர் கதைகளுக்குள் ‘வேஷம்’, ‘புருஷன்’ முதலிய வடமொழிச் சொற்களை வடவெழுத்துடனேயே எழுதியுள்ளார். ஆனால் ‘அப்பாஜி’, ‘பாதுஷா’ ஆகிய இரு சொற்களை மட்டும் அப்பாச்சி, பாச்சா என்றே தமிழியல்பிற்கேற்ப எல்லா இடங்களிலும் ஆண்டுள்ளார்.//
நூல்பதிப்பு பற்றிய விஷ்யங்களும் சுவாரசியமாக இருக்கின்றன.
சுவடியிலிருந்து தொகுப்பதே பெரிய விஷயமாச்சே
கீதா
தெலுங்கு அரசர் காலத்து கதைகளை மராட்டிய மன்னர் காலத்தில் சுவடியில் எழுதியதால் பல மொழி வார்த்தைகளும், நடையும் தானே புகுந்து வித்தியாசமான சொல்லல் பாணி அமைந்து விட்டது,
நீக்குJayakumar
//அப்ப சுவடியில் எழுதியவர் தமிழ் மொழி விற்பன்னர்?// அப்படி இருக்கவேண்டிய அவசியம் இல்லை. தெலுங்கு மொழி பேசுபவர்களும் தமிழ் மொழி பேசுபவர்களும் கலந்திருந்தனர், அந்தக் காலகட்டத்தில். இந்தச் சுவடியை எழுதியவரே தெலுங்கு மொழி பேசுபவராக இருக்க அதிக வாய்ப்பு உண்டு. நானும் ஒரு தெலுங்கு மொழி பேசும் வைணவர் (பெண்) எழுதிய சுவடியிலிருந்து சரஸ்வதி மஹால் பதிப்பித்திருந்த புத்தகத்தை வாங்கியிருக்கிறேன், அருமையான வைணவ நூல்.
நீக்குஎல்லாமே புனைவுகள் என்று தெரிகின்றன. தெனாலிராமன், பீர்பால், அப்பாஜி என்று பெயர்களை மட்டும் மாற்றிக் கொண்டு, தெனாலிராமனும், அப்பாஜியும் தெலுங்கு தேசத்தவர், பீர்பால் வடக்கு தேசம்..அப்ப ஒன்றுக்கொன்று எப்படித் தொடர்பானவை என்று சும்மா நெட்டில் ஆராய்ந்தேன் அப்ப கூகுள் சொல்லும் தகவல், தெனாலிராமன், அப்பாஜி ஒரே அரசவை 16 ஆம் நூற்றாண்டு1509–1529) கதைகள் அப்பால அக்பரின் அவையில் (1556-1586) வடக்கிற்குப் போய் வந்தன என்று தெரிகிறது.வரலாற்று ரீதியில்
பதிலளிநீக்குகீதா
கூத்தாழ்வார் வரலாறு பற்றி இன்றைய பகிர்வில் முழுதாக படித்து அறிந்துகொண்டோம். நல்ல விபரமாக தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குகிருஷ்ண தேவராயரும் அப்பாஜியும் கதை படித்ததில்லை. கதைப் பகிர்வு கண்டோம்..