8.7.26

நல்ல மழைக்காலத்தை நீங்கள் அனுபவிப்பீர்களா இல்லை வெயில் காலத்தையா?+ சரோஜாதேவி கதை பகுதி 06

 

கேள்வி பதில்கள் :

நெல்லைத்தமிழன் : 

1) மறைந்த ஒருவரது  உடலைப் பார்த்து அரசியல் பிரபலம்  உடைந்து போனார்னு செய்திகள்ல எழுதறாங்களே... அப்புறம் அவரை எப்படி திரும்ப ஒட்டியிருப்பாங்க? ஃபெவிகாலா அல்லது வேறு ஏதேனும் புதுப் பசையா?

# நண்பர் காலமானால் உண்டாகும் சோகம் உண்மையானதாகவும் இருக்கலாம்.  அதை விமரிசித்து எதுவும் சொல்வது நன்றாக இராது.

& உடைந்து போவதெல்லாம் நிருபர் சேர்த்த மசாலா ! 

2) நண்பர் காலமானதும் அவரது நண்பர் "இனி நான் எப்படித் தனியாக நம் ஊருக்குப் போவேன்? மலைகள் அருவிகளால் அழுதுகொண்டே கேட்குமே..  என்பது போல எழுதுகிறார்களே  ஜால்ராவுக்கு அளவே கிடையாதா?  மறைந்த அவர் உயிரோடு  ஆஸ்பத்திரியில் இருந்தபோது இவங்களைப்போல நண்பர்கள் என்ன செய்வார்கள்?

# சில கவிஞர்கள் என்ன சொன்னாலும் கவிதைத்தனமாகத்தான் சொல்லவேண்டும் என்று நினைப்பார்கள் போலிருக்கிறது !

& ஊர் பிரபலங்கள் காலமானால் அந்த ஊர் மலைகள், அருவியாக கண்ணீர் சிந்தும் என்றால், அந்தப் பிரபலம் நன்றாக இருந்த காலத்தில் அருவி சினிமா பார்க்கப் போயிருக்குமோ! 

3) வெளியில் ரோட்டோரத்தில் அல்லது பயணம் செய்யும் இடங்களில் மிகச் சாதாரண கடைகளில் பாட்டிம்மா போட்டு விற்கும் பஜ்ஜி வடை போன்றவை அவ்வளவு ருசியாக இருக்கிறதே என்று நினைத்து, அவங்களை நம் வீட்டுக்குக் கூட்டி வந்து, நல்ல பொருட்களைக் கொடுத்து அவற்றை வீட்டில் செய்யச் சொன்னால் அதே ருசி வருமா?

# இருந்தாக வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.

4) நல்ல மழைக்காலத்தை நீங்கள் அனுபவிப்பீர்களா இல்லை வெயில் காலத்தையா?   மழையில் நடக்க இப்போதும் ஆசை உண்டா?  

# கன மழை என்றால் சின்ன வயசில் பயம் !  மழைநடை எனக்கு ஒவ்வாதது. இளவெயில்தான் எனக்கு உற்சாகம்.

& மழையில் நடக்க இப்போது ஆசை இல்லை. 

5)  தீதும் நன்றும் பிறர் தர வாரா - என்று சொல்வது எதை வைத்து? அதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?

# தீது நன்று இரண்டும் செய்த செயற் பயனாகத்தான் இருக்க வேண்டும் என்பதால் அவை பிறர் தந்து வாரா என்பது சரிதான்.

6) மக்களுக்காகவே பார்த்துப் பார்த்து ஒரு அரசியல் தலைவர் செய்தால், அதனை மக்கள் மதிக்கிறார்களா இல்லை அடுத்த தேர்தலில் ஆளை மாற்றி வாக்களித்து அவமதிக்கிறார்களா?

# இதற்கு சரியான பதில் கிடையாது.  தேர்தல் முடிவுகளைப் பார்த்து அதன் பின் அதற்கு ஒரு லாஜிக் காண்பதுதான் கெட்டிக்காரர்களின் வேலை.  ஒருவர் வோட்டுப் போடுவது பல காரணங்களுக்காக ஆனாலும் அது ஆட்சியின் தரம் பற்றிய விமரிசனமாக இருப்பது அபூர்வம்.  அரசு பெரிய தவறுகள் செய்யும்போது கூட எதிர்ப்பு நிச்சயமல்ல.

& மக்கள் - குறிப்பாக தமிழ்நாட்டு இளைய தலைமுறை மக்கள் மாற்றங்களை விரும்புபவர்கள், 

= = = = = = = = =

படமும், பதமும் : 

நெல்லைத்தமிழன் : 


இது 2008ல்  நான் என் அண்ணன் வீட்டிற்கு மும்பையில் ஹிராநந்தினி வளாகத்துக்குச் சென்றபோது அவன் வீட்டிலிருந்து எடுத்த படம். அந்த பொவ்வையில் உள்ள ஹீராநந்தினி வளாகமே தனி நகரம் என்று சொல்லும்படி இருக்கும்.அங்கு இல்லாத கடைகள், வணிக வளாகங்கள், உணவுக்கான பெரிய ரெஸ்டாரண்ட், சிறிய கடைகள் என்று இல்லாத வசதிகளே இல்லை. நான் அப்போ சென்றிருந்தபோது, நான்கு படுக்கை அறை கொண்ட பெரிய பெரிய ஃப்ளாட்கள் 1 கோடி ரூபாய் என்று சொன்னார்கள். ஏன் அப்போது வாங்கவில்லை என்று யோசிக்கிறேன். பிறகு அந்த அனுபவத்தில் சென்னையில் ஹீராநந்தினி வளாகம் வந்தபோது அதில் வீடு வாங்கினேன் (ஃப்ளாட்). ஆனால் அங்கு வீட்டின் விலை அப்ரிஷியேட் ஆகவில்லை. அந்த மாதிரி வளாக கல்சருக்கு சென்னை தயாராக இல்லை என்றே எனக்குத் தோன்றியது. ரொம்ப வருடங்கள் கழித்து நான் அந்த வீட்டை (அதாவது 3 பெட் ரூம் குடியிருப்பு) விற்றுவிட்டேன். எத்தனையோ கனவுகளுடன் அதற்கு இண்டீரியர் செய்தேன்.


நான் பார்த்த வரையில் மற்ற எந்த கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனிகளை விடவும், ஹீராநந்தினி கன்ஸ்ட்ரக்‌ஷன் மிக மிக அருமையாகவும், ஒவ்வொரு வீடும் நூற் ஆண்டுகள் ஆனாலும் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். இத்தகைய வளாகங்களின் சிறப்பு, பாதுகாப்பு, எந்தப் பிரச்சனைகளும் வராது-தண்ணீர், மின்சாரம் போன்று, தினமும் நடைப்பயிற்சி செய்யவும், பலருடன் நட்பு கொள்ளவும், வயதானவர்களை நம்பிக்கையாக தனியாக விட ஏற்றதாகவும் இருக்கும்.  ஹீராநந்தினி வளாகத்தின் சிறப்பு, வளாகத்திற்குள்ளேயே பள்ளி வசதி, நல்லா வளர்ந்த பிறகு ஹாஸ்பிடல் வசதிலாம் வந்துவிடும். சூப்பர்மார்க்கெட், வங்கிகள் என்று பல வசதிகளும் ஒவ்வொன்றாக வந்துவிடும். 

= = = = = = = = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி : 

முன்கதை சுருக்: 

பகுதி 01 :  பாபா ஒரு துப்பறியும் நிறுவனத்தில் private detective ஆக வேலையில் சேர்கிறான். நாநா என்பவரிடமிருந்து appointment கேட்டு - சந்திக்க நேரம் கேட்டு வாட்ஸ் ஆப் செய்தி வருகிறது. பாபா சம்மதிக்கின்றான். 

பகுதி 02 :  நாநா வருகிறான். சரோஜா மெமரி கார்ட் பற்றி விளக்குகிறான். பாபாவின் ஜாதகம் கேட்கிறான். பாபா உள்ளே சென்று ஜாதகம் கொண்டுவருகிறான். 

பகுதி 03 :  நாநா பாபாவிற்கான சரோஜா மெமரி கார்ட் உருவாக்கி, அதை இயக்கி ஒரு ஜோதிட முன் நிகழ்வை சொல்கிறான். 

பகுதி 04 : நாநா சொன்னபடியே பாபாவின் நெற்றியில் இரத்தக் காயம் ஏற்படுகிறது. 

பகுதி 05 : நாநா, பாபாவின் நெற்றிக்கு பெரிய கட்டுப் போட்டு, எதிர் வீட்டு விமலாவின் கடைக்கண் பார்வை பெற யோசனை சொல்கிறான். தெருவில் கூடிய கலாட்டா கும்பலை போலீஸ் வேன் ஏற்றிச் செல்கிறது 

பகுதி 06 : பாவனா நீ எந்திரி! 

மறுநாள் காலை நாநாவின் மைலாப்பூர் வீட்டுக்கு வந்தான் பாபா. 
நாநா கதவைத் திறந்ததும் உள்ளே வந்த பாபாவை திகைக்க வைத்தது ஒரு பெண் குரல். 

" வாங்க பாலச்சந்தர்! விமலா ஜயராமன் சௌக்கியமா இருக்காங்களா?பாஸ் நீங்க பாபா நெத்தியில போட்ட கட்டு சூப்பரா இருக்கு" 

குழம்பிப் போன பாபா, நாநாவிடம் " யார் அது?" என்று கேட்டான். 

" அது என் உதவியாளர் பாவனா" என்றான் நாநா. 

" எங்கே இருக்காங்க?"

" அதோ அந்த மானிட்டரில் ஒரு மூஞ்சி தெரியுதா? அதுதான் பாவனா. " என்று ஒரு கம்ப்யூட்டர் மானிட்டரைக் காட்டினான் நாநா. 


" உங்க பி ஏ பாவனா வெறும் கம்ப்யூட்டர் பிம்பம்தானா? உயிர் கிடையாதா?" 

" கிடையாது. வாசலில் இரண்டு கண்ணு. வீட்டுக்குள் ஒவ்வொரு ரூமுலயும் ஒரு கண்ணு. வீடு முழுவதும் காதுகள். ஒரே ஒரு வாய். அதுவே அதுக்கு அதிகம்.‌ வாயாடி. நிறைய செயற்கை நுண்ணறிவு மூளை. மொத்தத்தில் அது ஒரு எந்திரி. அதாவது எந்திரனின் பெண் வடிவம். அவ்வளவுதான். 

பாவனா என்றால் 
Blu-ray
Audio
Video
Analyser &
Narrator
Assistant" என்றான் நாநா. 

" சரிதானே பாவனா? " 

" எஸ் பாஸ்" 

" சரி பாவனா. நீ கொஞ்ச நேரம் வாயை மூடிக்கொண்டு கண்ணையும் காதையும் மட்டும் திறந்து வெச்சுக்கோ. பாபா நேற்று நான் அங்கிருந்து வந்த பின்னர் என்ன நடந்தது என்று சொல்லட்டும். " 

பாபா சொன்னான். 

" நீங்க சொன்னபடியே நல்ல ஆக்ட் கொடுத்தேன். என் வேலைக்காரப் பெண்மணி மூலம் விஷயம் எதிர் வீட்டுக்கு சென்றது. 

ஜயராமன் ஆபீஸிலிருந்து திரும்பி வந்ததும் நடந்ததைக் கேள்விப்பட்டு என்னைப் பார்த்து நன்றி சொல்ல வந்தார். பேச்சுவாக்கில் தனக்கு இப்போது இருப்பது இரண்டே இரண்டு கவலைகள்தான் - வீணா மற்றும் விமலா. அவங்க ரெண்டு பேர் கல்யாணத்தையும் முடிச்சுட்டேன்னா, வி ஆர் எஸ் வாங்கிக்கிட்டு, கவலை இல்லாம என் வொய்ஃப்&  பையன் கூட போய் செட்டில் ஆயிடுவேன் என்றார்" 

" நீங்க கவலையே படாதீங்க. உங்க பொண்ணுங்க கல்யாணம் ரெண்டும் சீக்கிரமே நடக்கும். வீணாவின் ஃபோட்டோ ஒன்று எனக்கு அனுப்புங்க. என்னுடைய பிசினஸ் பார்ட்னரின் நண்பன் அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கிறார். அவருக்கு வீணாவைப் பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசி இருவருக்கும் பிடித்திருந்தால் கல்யாணத்தை முடிச்சிடலாம். விமலாவுக்கு என்ன மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று நான் பேசி அதன்படி செலக்ட் செய்வோம்னு சொன்னேன்" 

" அப்போ என் கூட பிசினஸ் பார்ட்னரா சேர சம்மதமா"

" ஆமாம். உங்க ஐடியாவாலதான் எதிர் வீட்டுக்காரர்கள் என்னோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது" 

" பிசினஸ் பார்ட்னர் என்றால் நமக்கு இடையே இன்னமே வாங்க போங்க எல்லாம் கிடையாது. வாடா போடா உறவுதான். சம்மதமா பாபா? " 

" சரிடா நாநா" 

இருவரும் கைகுலுக்கிச் சிரித்தார்கள். 

" பாஸ் எனக்கு இந்த பம்ப்ளிமாஸ் பாபாவைப் பிடிச்சிருக்கு. கொஞ்ச நேரம் அவன் கூட பேசட்டுமா?" என்றது பாவனா. 

" பேசு. விமலா ஜயராமன், விமலா பாலச்சந்தர் ஆகும் வரைதான் உனக்கு சான்ஸ். அப்புறம் பாபாவை பம்ப்ளிமாஸ் என்று சொன்னா விபா உன்னை பப்படம் பண்ணிடுவா! " 

" அப்புறம் ஒரு விஷயம் பாபா - பிசினஸ் பார்ட்னர் உனக்கு என்ன சம்பளம் தருவது?" 

" பாஸ் எனக்கு ஒரு யோசனை தோணுது" என்றது பாவனா. 

" என்ன?" என்று ஒரே குரலில் கேட்டனர் நாநா & பாபா. 

" முதலில் பாபா, விமலாவிடம் அவங்க எதிர்பார்க்கிற மாப்பிள்ளை என்ன சம்பளம் வாங்குபவராக இருக்கணும்னு கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும். அவங்க எதிர்பார்க்கிறதுக்கு மேலேயே சம்பளம் ஃபிக்ஸ் பண்ணிடலாம். ஓ கே யா பாஸ்?" 

" சூப்பர் ஐடியா பாவனா" என்றான் நாநா. 

அதற்குப் பின்னும் அரட்டை கொஞ்சம் நடந்தது. 

" பாஸ் சரோஜாதேவி மெமரி கார்டு பத்தி பாபாவுக்கு சொல்லணும்னு சொன்னீங்களே. சொல்லலாமா? " என்றது பாவனா. 

" ஓ கே. ஆனா அதுக்கு முன்னாடி பாபா நான் கொடுத்த ஹோம் வொர்க்ல இருந்த புத்தகம் படிக்கும் எக்ஸர்சைஸ் செய்தானா என்று கேள். " 

" ஹி ஹி ஜயராமன் வந்து போன பின்பு கற்பனைகள் கனவுகள் எல்லாத்திலேயும் விமலாதான்" 

" ரொம்ப ரொமான்டிக் ஆக இருக்கு பாஸ். இந்த சிச்சுவேஷனுக்கு ஒரு டூயட் சாங் எழுதி பாடட்டுமா"

" பாடு" 

" அதல புதல விமலா!
கதலி பழ உடலா?
மதன மோகன சிற்பமே
மனம் சொன்னது சொற்பமே" 

" இது ஏதோ எம் கே டி பாகவதர் காலத்துப் பாட்டுப் போல இருக்கு இந்தக் காலத்துக்கு ஒத்து வராது பாவனா" 

" பாவனா. நீயாவது நான் சொன்ன யோகியின் சுயசரிதம் புத்தகம் படிச்சியா?" 

" படிச்சுட்டேன் பாஸ்" 

" அஞ்சாவது அத்தியாயம் கந்த பாபா பத்தி சொல்லு" 

" கந்த பாபா சில அதிர்வுகள் உருவாக்கி அதன் மூலம் பொருட்களை தோன்றச் செய்வார். அவர் உருவாக்கும் பொருட்கள் கையால் தொட முடியும். உண்ண முடியும். " 




"பதினெட்டாவது அத்தியாயத்தில் சொல்லப் பட்டிருக்கும் அஃப்சல் கான்   பற்றி சொல்லு"

" அவர் கைகளால் எந்தப் பொருளைத் தொட்டாலும் சற்று நேரத்தில் அந்தப் பொருள் காணாமல் போகும். ஆனால் அது எப்படியோ அவரிடம் போய்விடும். " 

" நாற்பத்து மூன்றாம் அத்தியாயத்தில் என்ன அதிசய நிகழ்வு?" 

" அந்த அத்தியாயத்தில் உடலைத் துறந்து உயிர் பிரிந்து சமாதியில் அடக்கம் செய்யப்பட்ட குரு யுக்தேஸ்வர் சத்ய லோகத்திலிருந்து சாதாரண வடிவம் கொண்டவராக வந்து யோகியுடன் பேசிக்கொண்டு இருப்பார். யோகியால் அவரைப் பார்க்க முடிகிறது. அவருடன் பேச முடிகிறது. அவரைத் தொட்டுப் பார்க்கவும் முடிகிறது. " 

"நன்றி பாவனா"

நாநா, பாபாவிடம் சொன்னான். " இதிலிருந்து எனக்குத் தெரிய வந்தது, சில அதிர்வுகள் மூலம் பொருட்களை உண்டாக்கலாம், சில அதிர்வுகளை அகற்றி பொருட்களை மறைய வைக்கலாம். இதையே மனிதர்களுக்கு ஏற்ற வகையில் அமைக்க நான் பல ஆராய்ச்சிகள் செய்து கண்டுபிடித்ததுதான் சரோஜாதேவி மெமரி கார்டு. 

சரோஜா கார்டு மூலம் உணரப்பட்ட அதிர்வுகளை செலுத்தி சரோஜாDevi ( here Devi is short form for de-vibrate) செய்து உருவமாக இருப்பவர்களை அருவமாக மாற்றுவது. உருவாய் அருவாய் உளதாய் இலதாய்...என கந்தரனுபூதியில் வருவது போன்று" 

" என்னால் நம்ப முடியவில்லை " என்றான் பாபா.‌

" பாவனா,  நம்ம பாபாவுக்கு ஒரு டெமோ செய்து காட்டலாமா?" 

" எஸ் பாஸ் " என்று பாவனா சொன்னபோது பாபாவின் செல்ஃபோனிலிருந்து செய்தி வந்த சிறு ஒலி கேட்டது. 

எடுத்துப் பார்த்த பாபா, " ஏதோ தெரியாத எண்ணிலிருந்து யாரோ ஃபோட்டோ ஒன்று அனுப்பியிருக்கிறார்கள் போலிருக்கு" என்றான். 
" என்ன நம்பர் என்று படி" என்றான் நாநா. 

பாபா படித்தான். 

பாவனா, " பாஸ் - ட்ரூ காலர் ஸேஸ் திஸ்  காலர் ஈஸ் விமலா ஜயராமன் " என்றது. 

" ஆ! அப்படியா " என்று ஆச்சரியமாக சொல்லியபடி செய்தியை க்ளிக் செய்தான் பாபா. 

'அப்பா சொன்னபடி அக்கா வீணாவின் ஃபோட்டோ அனுப்பியுள்ளேன். விமலா' என்று இருந்தது. வீணாவின் ஃபோட்டோவும் இருந்தது.‌

(தொடரும்) 

42 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களின் முதலிரண்டு கேள்விகளும், அதற்குத் தகுந்த பதில்களும் நன்று.

    /வெளியில் ரோட்டோரத்தில் அல்லது பயணம் செய்யும் இடங்களில் மிகச் சாதாரண கடைகளில் பாட்டிம்மா போட்டு விற்கும் பஜ்ஜி வடை...... அவங்களை நம் வீட்டுக்குக் கூட்டி வந்து, நல்ல பொருட்களைக் கொடுத்து அவற்றை வீட்டில் செய்யச் சொன்னால் அதே ருசி வருமா?/

    ஹா ஹா ஹா. இதற்கு பயந்துதான் இந்த வம்பே வேண்டாமென அந்தக்காலத்திலேயே பாட்டியம்மா நிலவுக்குள் சென்று வடைச்சுட போய் விட்டார் போலும்.. :)) .பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நகைச்சுவையுடன் கூடிய கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    "தீதும் நன்றும் பிறர் தர வாரா "உண்மைதான். நாமும் இன்ப, துன்பங்கள் என வரும் போது வார்த்தைகளினால் "என்ன பாவம் செய்தோமோ ," ஏதாகிலும் இப்படி அமைய "நல்ல புண்ணியம் செய்திருக்கிறேன்" என்றுதான் சொல்கிறோம். பதில்கள் அருமையாக உள்ளது.

    முன்பு மழையில் நனைய மிகவும் பிடிக்கும். ஆனால் வீட்டில் பெரியவர்கள் கண்டித்து அதற்கு தடை போட்டு விடுவார்கள். இப்போது மழையில் நனைவது நமக்கே ஒத்து வராத செயல் எனத் தோன்றுகிறது. அதுவும் மேடு, பள்ளமான ரோடில் மழையில் செல்வது பெரும் அவஸ்தை. .மழையை பால்கனியிலிருந்து பார்த்து ரசிக்கலாமென்றால், அதற்கும் இப்போது வீட்டில் தடை வருகிறது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. மழையில் நனைவது, பால்கனியிலிருந்து மழையைப் பார்ப்பது, அனுபவிப்பது (நனைந்து) எனக்கு மிகவும் பிடிக்கும். அதீத காற்று இருந்தால்தான் போக மாட்டேன்.

      சில வாரங்களுக்கு முன்பு மழை பெய்தபோது மனைவி ரொம்பச் சொன்னாளே என்று அழகிய குடை எடுத்துச் சென்றிருந்தேன். (பார்க்கிறவர்கள் பயித்தியக்காரன் என்று நினைப்பார்களோ என்ற எண்ணம் வந்தால்தான் குடையை உபயோகிப்பேன்). அன்றுஆலங்கட்டியுன் மழை என்பதால் குடை விரித்தேன். சட் என்று பயங்கரக் காற்றுடன் கூடிய பெரும் மழை. குடை பிய்ந்துபோய்விட்டது. மழையில் நனைவது சுகம்.

      நீக்கு
    3. ஆஹா கவிதையான வர்ணனை

      நீக்கு
  4. சரோஜாதேவி கதையை பத்திரிகை எதற்காவது அனுப்பிப் பார்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவசரப்பட்டு விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    தாங்கள் எழுதி வரும் கதை மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. யோகியின் சரித்திரம் புத்தகத்தின் பக்கங்கள், எழுத்துகளை விவரித்தது அருமை. படங்கள் அருமை. அழகான பாவனாவை உருவாக்கிய விதமும் அருமை. வீணா வின் அழகான போட்டோ வந்து, பாபா (நாங்களும்) இன்று தெரிந்து கொள்ள வேண்டிய ச. தே. மெ. கார்டு பற்றிய டெமோவை நிறுத்தி விட்டது. இனி வரும் வியாழன் வரை காத்திருக்க வேண்டும். சுவாரஸ்யமான கதை பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியாழன் வரையிலா! ஏன்? புதன் போதும். பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
    2. அவர் சொல்வதைப் பார்த்து எனக்குத் தோன்றியது, புதனில் அவர் பிசி என்று

      நீக்கு
    3. அப்படியும் இருக்கலாம்

      நீக்கு
  6. யோகிகள் அல்லது மந்திரவித்தை தெரிந்தவர்கள் செய்யும் செயல்கள் ஆச்சர்யமூட்டும். காற்றில் பொருட்களை வரவழைப்பது, உயிரைப் போக்கி திரும்ப வரச் செய்வது போன்று.

    பொதுவா இந்த மாதிரி வித்தைகள் தெரிந்தால் என்ன வரச் செய்வ? என்று கேட்டால் அதற்கு பெரும்பாலானோர், தங்கம் வரவழைப்பேன் என்பார்கள். எனக்கு ஒரு சந்தேகம். தங்கத்தினால் பயன் என்ன?

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் யோக வித்தையின் மூலம் கொண்டு வரும் பெண்ணின் படங்கள் ஒவ்வொன்றும் ஒரு மாதிரியா இருக்கே. ஒரே பெண்ணை வெவ்வேறு உடைகள், சூழ்நிலைல படம் கொண்டுவரும் அளவு யோகாப்பியாசத்தில் தேர்ச்சி இல்லையா?

    பதிலளிநீக்கு
  8. இந்த வாரம் பானுமதி பிசி என்றதால் கேள்விகள் அனுப்பலை போல. நான் எழுதி வைச்சுட்டு அனுப்ப மறந்துட்டேன். கேள்வி பதில்கள் ஓகே ரகம் தான். சமீபத்தில் பாக்யராஜின் இறுதி ஊர்வலத்தின்போது நடந்தவை தான் இன்னும் பேசும் பொருளாய் இருக்கிறது. இங்கேயும் கிட்டத்தட்ட அதை நினைவூட்டுவது போல் நெல்லையின் கேள்விகள். இழப்பின் அருமை இழந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், புரியும். மத்தவங்க அதில் தலையிடவே முடியாது. ஆனால் காட்சிப் பொருளாக ஆக்க வேண்டாம். இந்த விஷயத்தில் தமிழ்நாட்டில் வியவஸ்தையே இல்லாத ஜென்மங்கள். எதை எப்படிக் காசு பண்ணலாம் என்னூம் எண்ணம் மட்டுமே.

    பதிலளிநீக்கு
  9. இன்னிக்கு என்ன போணியே ஆகலை பதிவு? அதோடு வழக்கமான புதன் பதிவுகளில் இடம் பெறும் செய்திகளும் இல்லை. நெல்லை அனுப்பி இருக்கும் ஹீராநந்தினி பற்றி இப்போத் தான் முதல் தரமாக் கேள்விப் படுகிறேன். அந்தக் காலமாகவே இருந்திருந்தால் கூட எங்களால் எல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாத ஒரு இடம். மும்பையில் இருக்கும் எங்க உறவினரெல்லாம் ஒரு கோடி போட்டு வீடு வாங்கி இருந்தாலும் அதெல்லாம் அந்தேரி, விலிபார்லே, மாதுங்கா, செம்பூர் போன்ற இடங்களில் தான். இது பற்றி யாருமே சொன்னதில்லை. சென்னையில் இருப்பதும் ஆச்சரியமே. நெல்லை வாங்கிட்டு "பெண்"களூர் போய் செட்டில் ஆவதற்காக விற்று விட்டார் போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வாங்கிய எந்த இடமும் எங்க இருக்கு, பிற்காலத்தில் என்ன பண்ணுவோம், அங்க இருக்க முடியுமா? பசங்க எங்க இருப்பாங்க என்று எதையும் யோசித்து வாங்கவில்லை. வீட்டை வாங்கி, இன்டீரியர் செய்து வாடகைக்கு விட்டேன். மனைவிக்கு புது வீட்டில்தான் இருக்கணும் என்று ஆசை இந்திய வாழ்க்கையை நம்ம புது வீட்டில் துவங்கணும் என்றாள். பையன் பெங்களூரில் படித்துக்கொண்டிருந்ததால் இங்க செட்டிலானோம்.

      அதுக்காக காவிரில நீர் விடச் சொல்லாதீங்க. இங்க குடிக்கறதுக்கு தண்ணீர் வேணும். ஹா ஹா ஹா

      நீக்கு
    2. grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

      நீக்கு
    3. இதுக்காகவே நான் "பெண்"களூர்க் குடித்தனத்தை ஒத்துக்கலை. மாமா கிட்டத்தட்ட ஒரு வீட்டை சர் சி.வி.ராமன் நகரில் பேசி முடிச்சிருந்தார். ஆனால் நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். :(

      நீக்கு
  10. கருத்துரைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. மழை ஆசை எல்லாம் சின்ன வயசோடு போய்விட்டது. பின்னர் வேலைக்குப் போகும் நாட்களில் ரெயின் கோட் வாங்கணும்னு ஆசை. ஆனால் நம்மவர் சாங்க்ஷன் பண்ணினது குடைக்குத் தான். :( அந்தக் குடையை விரித்தால் அப்படியே மேலே தூக்கிக் கொண்டு போய்விடும். மழையில் நனையாமல் முடியாது. சின்ன வயசில் தொட்டால் ஜூரம் வரும். நல்லவேளையா வேலைக்குப் போன நாட்களில் மழையினால் ஜுரமெல்லாம் வரலையோ பிழைச்சேன். பேருந்தில் ஏறினால் தான் மூச்சு முட்டும். அதுவும் நான் ஏறும் பேசின் பிரிட்ஜ் நிறுத்தத்தில் நல்ல கூட்டம் இருக்கும். அங்கிருந்து தண்டையார்ப்பேட்டை போவதற்குள்ளாகப் பேருந்திலிருந்து குதிக்கலாமானு இருக்கும். அவ்வளவு மோசமான பயணம்.

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீராமுக்கு அனுஷ்கா, அனுஷ் போல கௌதமன் சாருக்கு பாவனா! அன்றும், இன்றும், என்றும். :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))) ஆஹா - படத்தைப் பாருங்க ! இது வேறு பாவனா - பாவனை!

      நீக்கு
  13. சில இழப்புகள் வருடங்கள் ஆனாலும் அதன் தாக்கம் மறையாது.

    நல்ல மழைக்காலம் மற்றும் குளிர்காலம் மிகவும் பிடித்தவை.

    நெல்லை, ஹிராநந்தினி வளாகங்கள் இங்கு பன்னேருகட்டா சாலையில், ஹெப்பலில், அப்புறம் தேவனஹல்லியில் இருக்கின்றன. இப்படியான வளாகங்கள் நல்லாருக்கு ஆனா கூடவே பராமரிப்பும் முக்கியம் அதனால் பராமரிப்புச் செலவும் அங்கிருப்பவர்கள் நிறைய கட்ட வேண்டும்.

    படங்கள் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
    2. இதைப்பற்றி அந்தக் காலத்தில் முதல் முறை கேள்விப்பட்டபோது... என்னாது.. சொந்த வீட்டுக்கு வாடகை மாதிரி மாசாமாசம் பராமரிப்புக்குக் கட்டணுமா எனத் தோன்றியது. ஆனால் வளாகங்களில் அதுதான் நிதர்சனம்.

      நீக்கு
  14. ஹீராநந்தானி என்றுதானேசொல்வார்கள்? நெல்லை நந்தினி எங்கிறாரே? நந்தானியோ, நந்தினியோ நெல்லை அவசரப்பட்டு விற்று விட்டாரோ என்று தோன்றுகிறது.அங்கு நல்ல வாடகை கிடைக்குமே?
    ஹீரா நந்தானி கட்டிய புதிதில் என் கணவரின் நண்பர் அங்கு வீடு வாங்கியிருந்தார். நாங்கள் சென்றிருந்தோம். அப்போது அதற்கு எதிரே இருக்கும் பட்டர்ஃப்ளை ஃபேக்டரியோ அலுவலகமோ அடையாளம் சொல்லலாம், மூன்று வருடங்கள் முன்பு என் அக்கா பெண் அங்கு குடியிருந்தாள். நான் சென்றிருக்கிறேன். எக்கச்சக்க முன்னேற்றம், பட்டர்ஃப்ளை இருக்குமிடம் தெரியவில்லை.
    கணவரின் நண்பர் குடி போன புதிதில் ஒவ்வொரு ஞாயிறன்றும் அடையாறு சென்று தேவையான பொருட்கள் மற்றும் கறிகாய்கள் வாங்கி வருவதாகச் சொன்னார். இப்போது அதற்கு அவசியம் இல்லை. ஆனால் பாம்பு உண்டாம். நண்பரின் மனைவி காலையில் வாக்கிங் போகும் சமயத்தில் அதுவும் கூட வருமாம்.
    நான் ஒரு முறை அங்கு வாக்கிங் செல்ல கிளம்பி விட்டு, தொலைந்து போய் விட்டேன். திரும்பி வரத் தெரியவில்லை. பார்க்கில் உட்கார்ந்து கொண்டிருந்த பெண்களிடம் என் அக்கா பெண் இருக்கும் பிளாக் எங்கிருக்கிறது என்று விசாரித்துக் கொண்டு வந்தேன்.
    அங்கு திரைப்பட நடிகை ரேவதி உட்பட நிறைய பிரபலங்கள் வசிக்கிறார்கள். அந்த குடியிருப்பே சில திரைப்படங்களிலும் வந்திருக்கிறதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. அப்படியா? எனக்குமே ஹீரா நந்தினி என்றதும் கொஞ்சம் சந்தேகம். நந்தானியைத் தான் நெல்லை நந்தினினு சொல்லி இருக்காரா? இஃகி,இஃகி, இஃகி, இஃகி

      நீக்கு
    3. அக்கா Hiranandani ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் ஹிராநந்தினி என்றுதான் சொல்றாங்க.

      கீதா

      நீக்கு
  15. மழை பிடிக்கும். நனைவது..? ஒத்துக் கொள்ளாதே. சிறு வயதில் மழியில் ந்னைந்தால் ஜூரம் வந்து விடும். டூ வீலர் ஓட்டும் பொழுது மழை வந்தால் ஒதுங்க மாட்டேன், ஏனென்ரால் ரோடு காலியாக இருக்கும் ஸ்ல்லென்று வந்து விடலாம். வெய்யிலை சமாளிப்பேன், குளிர் பிடிக்காது.

    பதிலளிநீக்கு
  16. ஹைடெக் கதையாகப் போகுதே கௌ அண்ணா...ஏ ஐ எல்லாம் கொண்டுவந்து..
    எந்திரி// ஹாஹாஹா நல்ல கற்பனை கௌ அண்ணா...

    ஏ ஐ யின் ரவுசு தாங்கலைப்பா சாமி!!!!

    ஆ! ஜாலிக்கதை ஆன்மீகம் பக்கம் திரும்புதே...ஆனால் ஹை டெக்குடன்! அட! பிரகாமிய சித்தியை அறிவியலாகக் கொண்டு வருவது சிறப்பு, கௌ அண்ணா. நான் ஒரு அறிவியல் புனைவுக் கதைக்கு (முன்பு இங்கு எபியில் வந்த கதையின் தொடர்ச்சியாக எழுத நினைத்து சேகரித்த தகவல்கள் ) இப்படிச் சிலது எடுத்து வைத்திருந்தேன்.

    இப்ப கதை சூடு பிடிக்குது! அண்ணா இதையே ஏதேனும் க்ரைம்....த்ரில்லர் கண்டுபிடிப்பு என்று நகர்த்துங்களேன்....இப்படியான படங்களில் இடையில் வரும் காதல் காட்சிகள் போல இந்த விமலா எல்லாமுமா!!!

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து படிக்கவும்.

      நீக்கு
  17. சிறுவயதில் மழையில் நனையப் பிடிக்கும். இப்பொழுது சிறு தூறல் என்றால் பிடிக்கும்.

    நெல்லையின் படங்கள் நன்று.

    கதை சுவாரசியம் பாவனாவுடன் புதிதாக வீணாவும் வந்தாகிவிட்டது. இருவரின் படங்களும் அழகாக உள்ளன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!