ராஜேந்திர விண்ணகரம் – மன்னார்கோயில் - திருநெல்வேலி
சென்ற வாரம், ஆரியர்கள் விந்திய மலைக்குத் தெற்கே வந்த பிறகு அவர்களது நாகரீகம் மொழி நம்மிடத்தில் கலந்தது, ஆரியர்களை பாண்டியன் குழு குழுவாக அழைத்து வந்து தமிழகத்தில் பல இடங்களில் அவர்கள் வேரூன்றச் செய்தான் என்பதைப் பார்த்தோம். இது சரியான பார்வை, அப்படி அல்ல என்று இருவேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று இருக்கிறது.
இந்திய அரசர்களை, அவர்களது காலத்தை வைத்தும், இலக்கியச் சான்றுகளை வைத்தும் வரிசைப்படுத்தினால், சேர அரச மரபு, சோழ அரச மரபு, பாண்டிய அரச மரபு ஆகிய மூன்றும் கிமு 30,000 ஆண்டிலிருந்து தொடங்குகிறது.
இமயவரம்பன், வானவரம்பன் காலம் கிமு 30,000க்கு முந்தையது. பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்ற வானவரம்பன், பாரத காலத்தவன் (கிமு 3145-3105) என்று பல்வேறு அரசர்கள் பெயர்கள் வருகின்றன.
சோழர்களில், சூரியச் சோழன் கிமு 30,000க்கும் முற்பட்டவன். சிபி என்ற செம்பியன் கிமு 7700, மனுநீதி கண்ட சோழன் கிமு 2700…. என்று பல்வேறு சோழ அரசர்களின் பெயர்கள் வருகின்றன.
பாண்டியர் குடி வழியில், மதியன் என்ற சந்திரபாண்டியன் கிமு 30,000க்கும் முற்பட்டவன். இவன் மேருமலைத் தொடரிலிருந்து பஃறுளியாற்றை உருவாக்கி, நாட்டை வளப்படுத்தி தென் மதுரை என்ற நகரை ஏற்படுத்தி, தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவி புலவர்களை ஆதரித்தவன். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பரமேசுவர பாண்டியன் கிமு 7500ல் ஆண்டவன். அவனுடைய கிளை சுமார் 600 ஆண்டுகள் ஆண்டன. அந்தச் சமயத்தில்தான் அவனுடைய தலைநகரான கொற்கையில் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.
பாரத காலத்தில் பாண்டியர்களுக்குப் பெண் கொடுத்தல், பெருஞ்சோறு அளித்தல் முதலிய செய்கைகளால், பாண்டியர்களுக்கும் ஆரிய அரசர்களுக்கும் தொடர்பு உண்டு என்று தெரிகிறது. சித்திராங்கதை என்பவள், பாண்டியநாட்டு மணலூர்புரத்தில் இருந்த சித்திரவாகனன் என்ற மலையத்துவச பாண்டியன் மகள் என்றும், அவளை அர்ச்சுனன் மணந்தான் என்றும் பாரதம் கூறும். இதுதவிர, சித்திரவாகன ன் என்பவன் பாண்டவர்க்குத் துணையாக அசுவத்தாமனுடன் போரிட்டான், சித்திராங்கதையின் மகன் பப்ருவாகனன் தமிழ் அரசன் என்பதையெல்லாம் பாரதத்த்தைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம்.
இது தவிர முடத்திருமாறன், பொற்கைப் பாண்டியன் போன்ற பல பெயர்கள் கிமு 1800ம் ஆண்டுகளைச் சேர்ந்தவை.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், தமிழ் மூவேந்தர்களைத் தவிர, மற்ற இந்திய மன்னர்களின் வரலாறு (அதாவது சமஸ்தானங்களின் வரலாறு) ஆயிரம் ஆண்டுகளுக்கும் குறைவானது. மூவேந்தர்கள் மாத்திரமே கிமு 30,000க்கும் முந்தைய வரலாறு உடையவர்கள் என்று துடிசைக்கிழார், பல புத்தகங்களை மேற்கோள் காட்டி எழுதுகிறார்.
அப்படியென்றால் எவ்வளவு நெடிய வரலாறு தமிழ் மன்னர்களுக்கு இருக்கிறது என்று அறிந்துகொள்ளலாம். இவையெல்லாம் போகிற போக்கில் சொல்லப்பட்டவை அல்ல. ஆராய்ச்சியின் மூலம் சொல்லியிருக்கிறார்கள். மொஹஞ்சதாரோ ஹரப்பா போன்ற நாகரீகமும் தமிழர்களின் நாகரீகம் என்ற ஒரு எண்ணவோட்டத்தையும் அதற்கான ஆதாரங்களையும் நீங்கள் படித்திருப்பீர்கள்.
அது சரி.. ஏன் இவர்களைப் பற்றி, அதன் மூலம் தமிழின் தொன்மை பற்றி அரசு மாணவர்களுக்குக் கல்வியில் சொல்லித் தருவதில்லை? சொன்னால், அரக்கர் குலம், ஆரியம், மகாபாரதம், இராமாயணம் மற்றும் புராணங்களை ஒத்துக்கொள்ளவேண்டும். அவர்களைப் பொறுத்த வரையில் தமிழர்களுக்கு கடவுளே கிடையாதே, வெளிநாட்டிலிருந்து வந்தவர்களைத் தவிர. இங்கு வேரூன்றிய சைவ வைணவ மற்றும் அது தொடர்பான பல இலக்கியங்கள், அவற்றை இயற்றிய சமயக்குரவர்கள் என்று பலவற்றைப் பற்றியும் சொல்லித்தர வேண்டுமே.
சரி.. இந்தத் தலைசுற்றும் தமிழர்கள் வரலாற்றைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு சேரர்களின் வரலாற்றைப் பார்ப்போம். காரணம் நாம் இங்கு காணும் ராஜேந்திர விண்ணகரம் என்று அழைக்கப்பட்ட கோயில், குலசேகர ஆழ்வார் கோயிலென்றும் அழைக்கப்பட்டது. சேர மன்னரான குலசேகரன் ஏன் இந்த இடத்திற்கு வரவேண்டும்?
இராமாயண காலத்தில் பரசுராமர், இராமருடன் போரிட்டுத் தோற்ற பிறகு, தன்னுடைய அவதாரகாலம் முடிந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டு, தன்னுடைய மரபைச் சேர்ந்த 64 குடும்பங்களையும் உடன் அழைத்துக்கொண்டு தென் திசை நோக்கி, அதிலும் மேற்குப் பகுதியை நோக்கி சேர நாடு வந்து சேர்ந்தார். சேர அரசன், பரசுராமருக்கு உற்ற நண்பன் என்பதால் அவர்களை எல்லோரும் வரவேற்று, அவர்களுக்கு 64, நல்ல வளமான கிராமப் பகுதிகளைப் பொறுக்கியெடுத்துக் கொடுத்து, சாசனத்துடன் அந்த இடங்களை அவர்களே ஆண்டுவரட்டும் என்று கொடுத்தான். இவர்களே சேரர் நாட்டில் உள்ள நம்பூதிரிகள்.
இந்த 64 கிராமங்களும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு (வருவாய் பகுதிகள்), பெருஞ்செல்லூர், பையனூர், பட்டப்பூர், செங்கனூர் என்று அழைக்கப்பட்டன. 64 கிராம சபைகளும், நான்கு பெரும் சபைகளும் சேர்ந்து ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து, அவனுக்கு அவரோதி நம்பி என்ற பட்டமும் கொடுத்து, அவனுக்கு ஆலோசனை சொல்ல சிறு சபை ஒன்றையும் ஏற்படுத்தினார்கள். இவர்களின் வேலை, வரிவசூல், நகர்க்காவல், குற்ற விசாரணை, கல்வி, விவசாயம், கோயில் மற்றும் சுகாதாரம். இதற்காக மொத்த வரிவசூலில் ஆறில் ஒரு பகுதி அவரோதி நம்பி கையில் ஒப்படைக்கப்பட்ட து (பல்வேறு செலவுகள் போன்றவைகளுக்கு). இந்த நிர்வாகம் போகப் போகச் சீரடைந்துவிட்டது.
ஆலோசனைக் குழுவைக் கைக்குள் போட்டுக்கொண்டு ஊழலாகிப் போனதால், நம்பூதிரிகள் குழு, திருநாவாய் என்ற ஊரில் கூடி, தங்களைச் சுற்றியிருந்த சேர, சோழ, பாண்டிய, துளு, கொங்கு, வாண மண்டலங்களிலிருந்து அரச குடும்பத்தில் இருந்தவர்களையோ அரசர்களையோ தேர்ந்தெடுத்து, பன்னிரண்டு வருடம் அவர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கவேண்டியது. அதற்காக ஆறில் ஒரு பகுதி வரிவசூல் அவர்களுக்குக் கொடுக்கவேண்டியது. அப்படி தலைவராக இருப்பவர்களுக்கு ‘பெருமாள்’ என்ற பட்டம் உண்டு, என்று முடிவெடுத்தனர். இப்படி கிபி 216லிருந்து கிபி 798வரை சுமார் 25 பெருமாள்கள் தலைமைப் பொறுப்பில் இருந்திருக்கின்றனர். இந்த வரிவசூல், அரசியல் நிர்வாகத்திற்காக அந்தத் தலைவர்கள் செலவு செய்துகொள்வார்கள்.
ஆரம்பத்தில் இப்படி இருந்தது (அதாவது முதலில் கொங்குப் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் பொறுப்பில் இருந்தார். இதே வரிசையில் சிரக்கல் பகுதியைச் சேர்ந்த எலிப்பெருமாள் என்று ஒருவர் இருந்தார். இதுபோலப் பலர்)
இதனை எழுதும்போது, என் அம்மா சொல்லும் ஒரு வசனம் நினைவுக்கு வந்தது. எங்களுக்கு ‘நாங்கள் இன்ன வம்சம்’ என்று சொல்லும் பட்டம் உண்டு. என் அம்மா சொல்வது ‘எலி தட்டை மாடபூசி ஏற்றமுள்ள சேட்டலூர்…’ என்று சொல்வார். என் அம்மாவின் வம்சம் ‘எலி வம்சம்’. நாங்கள் ‘நடாதூர்’. இந்த வம்சம் என்பது நம் முன்னோர்களின் கிராமமாக இருக்கும் அல்லது இயல்பான பட்டப்பெயராக இருக்கும். உதாரணமாக ‘மாடபூசி’ என்பவர்கள் கோயில் மாடவீதிகளில் இருந்து கோயில் கைங்கர்யங்கள் செய்துவந்தவர்கள் என்பர். நடாதூர் என்பது காஞ்சீபுரத்தில் ஒரு காலத்தில் இருந்த தெரு (அக்ரஹாரம்) என்பார்கள். சேட்டலூர் என்பது ஆந்திரா பகுதியில் இருந்த கிராமம் என்பர். அதுபோல ஈச்சம்பாடி என்பதும். என் அம்மா வழிக்கு ஏதோ ஒரு விதத்தில் கேரளத் தொடர்பு இருந்திருக்கும் என்பது என் எண்ணம். ‘எலிப்பெருமாள்’ என்பவர், குளத்து நாட்டின் சிரக்கல் அரச குடும்பத்தினர். அங்கு உள்ள மலை Mount Ely என்று அழைக்கப்படுகிறது. அதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த வம்சமாகத்தான் என் அம்மாவின் வம்சம் இருந்திருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது (நடாதூர் கிராமம்/அக்ரஹாரம் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு காஞ்சீபுரம் பகுதியில் இருந்தது)
216-798ல், இடையில் 300 ஆண்டுகள் யார் ‘பெருமாள்’ பட்டம் வகித்தார் என்பது தெரியவில்லை. அதுபோல பலர் 12 ஆண்டுகளுக்கும் குறைவாகவே பதவி வகித்தனர். இதன் காரணம் அவர்களின் நிர்வாகம் சரியில்லை என்று மாற்றியிருக்கலாம். பொதுவாக சேரர்கள், இமயமலையையும் தாண்டி திபெத்திற்கும் சென்றிருந்தனர் (வானவர்) என்று சொல்லியிருந்தேன். அப்படிச் சென்றபோது அவர்கள் வம்சமும் அங்கேயே தங்கிவிட்டது. நேபாள வரலாற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், அங்குள்ள நியூவார் குழுக்கள் (Race) மற்றும் கேரளாவின் நாயர் சமூகத்திற்கும் பலவித ஒற்றுமைகள் இருக்கின்றன என்று சொல்லியிருக்கின்றனர். சோழர் வரலாறு படித்தபோதே, வங்காளப் பகுதியில் தங்கிவிட்ட சோழப் படைத்தலைவன் ஒருவன், அவன் வம்சம் பிற்காலத்தில் அந்தப் பகுதியில் ஒரு அரச மரபை உருவாக்கியது என்று படித்திருக்கிறேன்.
ஞாயிறு, படங்கள் காணலாம், கூடவே ஏதேனும் இறைவன் தரிசனம் கிடைக்கும் என்று வந்தால், சரித்திரமாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? சரி.. இனி படப்பகுதிதான்.
பாளையங்கோட்டையில் இராஜகோபாலஸ்வாமி கோயில் உண்டு (அங்குதான் நான் சில வருடங்கள் வாழ்ந்தேன்). அந்தக் கோயிலுக்கும் மன்னார்கோயில் வேதநாராயணப் பெருமாள் கோயிலுக்கும் பல விதங்களில் ஒற்றுமை உண்டு. கோயில் அமைப்பு, சிலைகள், மூன்றடுக்கு கோபுரம் போன்று பல விதங்கள். அதனால் இங்கு பாளையக்கோட்டை வேதநாராயணப் பெருமாள், வேதவல்லித் தாயார், குமுதவல்லித் தாயார் சமேத மூலவர் படங்களை இங்கு கொடுத்துள்ளேன். மன்னார்கோயில் மூலவர் வர்ணகலாபரா இல்லை இதே போன்று காட்சியளித்தாரா என்று நினைவில்லை. இந்தப் படம் இணையத்திலிருந்து.
பெருமாள் பட்டத்தைப் பற்றி இந்த வாரம் பார்த்தோம்.
அடுத்த வாரம் சேரமான் பெருமாள் பற்றிப் பார்க்கப்போகிறோம். அந்த வரிசையில்தான் குலசேகர
ஆழ்வாரும், ரசனையான வரலாறும் வருகிறது. அடுத்த
வாரம் சந்திப்போம்.
குறிஞ்சிக் கடவுள் முருகன் என்று தமிழ் இலக்கியங்களில் இருக்கிறதே அப்புறம் ஏன் தமிழ்ப்பாடங்களில் சொல்லித் தரலை?
பதிலளிநீக்குநாமதான் கம்பராமாயணம், சில பாசுரங்கள் கூடப் படித்திருக்கிறோமே....இப்ப உள்ள தமிழ்பாடங்களைச் சொல்றீங்களோ? நெல்லை?
ஊழல் அப்பவே தொடங்கிடுச்சு போல...
என் நெருங்கிய குடும்பங்களில் நடாதூர், மாடபூசி என்று உண்டு. ஆனால் என் அம்மா, அப்பா வழிகளில் இப்படியான பெயர் எதுவும் இல்லை.
படங்கள், விவரங்கள் எல்லாம் மிக நன்று நெல்லை,.
அதிகம் கருத்துகள் அடிக்க முடியலை.
கீதா
வாங்க கீதா ரங்கன். இன்றைய பகுதிக்கான உங்கள் கருத்துக்கு நன்றி.
நீக்குபொதுவா திருமணப் பத்திரிகையில்தான் நாம் வம்சப் பெயரைத் தெரிந்துகொள்ள முடியும்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
பதிலளிநீக்குவாங்க வெங்கட் நாகராஜ். காலை வணக்கம்.
நீக்குஎத்தனை தகவல்கள்.... வரலாறு சொல்லித் தருகிறேன் என்று நாம் பெருமைகளைச் சொல்லாமல் எதை எதையோ சொல்லி கொடுக்கின்றனர். பல காலமாக இப்படியான அரசியல் தான்.
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் நன்று. தொடரட்டும் உங்கள் உலா.
மிக்க நன்றி. இந்தத் தகவல்களில் பல, இலக்கிய, கல்வெட்டுகளை அடிப்படையாக வைத்து வரலாற்றாசிரியர்கள் எழுதியிருக்கின்றனர்.
நீக்குஅதென்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள்? தந்தை பெரியார் ரஷ்யா போனதும் அதற்கு முன் நிர்வாணமாகக் காசியில் சுற்றியதும், முத்தமிழ் வித்தகர் கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்ததும்தான் தமிழர்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு என்று ஆகிவிட்டது இன்று. அதைத் தவிர வேறு ஏதாவது தெரிந்து கொள்ளவேண்டுமென்றால் "நீ சங்கி" என்று சொல்லி விடுவார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
பதிலளிநீக்குஉண்மை.. உண்மை..
நீக்குவாங்க சூர்யா சார். இந்த அறுபது ஆண்டுகாலத் தாக்கம் இன்னும் பல தசாப்தங்களுக்குத் தொடரும்.
நீக்குபெரியார் கடவுள் இல்லை என்று சொன்னார். (அனைத்து மத).அவர்்சொன்ன பல கருத்துகள், அம்பேத்கார் சொன்ன பல கருத்துகள் மறைக்கப்பட்டு, வாக்கு வங்கிக்காக இந்துமத்த்திற்கு எதிராகவே பல்வேறு கட்சிகள் இயங்குகின்றன. நாமும் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, மற்ற குழுக்களுக்கு எதிராக அரசு இயங்கும்போது, நாம பாதிக்கப்படலை என்று கடந்துபோய்விடுகிறோம்.
இன்றையப் பதிவில் 90 சதம் நான் இது வரை அறியாதது. வரலாற்றுத் தகவல்களுக்கு நன்றி நெல்லை. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதொடர்ந்து வருவதற்கு மிக்க நன்றி.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் வடிவேலா. இந்தப் பயணத்தின்போது தினமும் சிவபுராணம் கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஒரு நாற் நற்றுணையாவது நமச்சிவாயமே என்ற பதிகங்களும். உங்கள் நினைவும் கோமதி அரசு மேடம் நினைவும் வந்தது.
நீக்குநலமே வாழ்க
பதிலளிநீக்குவாழிய நலம்.
நீக்குஇதிகாசங்களில் இருந்தும்
பதிலளிநீக்குஇலக்கியங்களில் இருந்தும் குறிப்புகள்..
படங்கள், விவரங்கள் எல்லாம் மிக சிறப்பு..
நல்லதொரு பதிவு..
மிக்க நன்றி.
நீக்குவரலாறோ சரித்திரமோ எதுவானாலும் ஆராய்ந்து உண்மையைக் கண்டறியமுடியாது. அதுவும் தக்க காலண்டர் முறை இல்லாத காலத்தில் நடந்தவை பற்றி. உங்களுடைய சரித்திரப்பெருமை குழப்பத்தைத்தான் உண்டாக்குகிறது. அதனால் அதை சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்களும் வாசித்ததைத் தான் கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்த ஆசிரியர் பெயரையாவது குறிப்பிட்டிருக்கலாம். படங்கள் துல்லியம்.
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஜெயகுமார் சார். உலகத்தில் நம்மிடமும் (பாரத நாடு), நம்மிடமிருந்து சென்ற மனிதர்களான மயன்களால் உண்டான மெக்சிகோவிலும்தான் காலண்டர் முறை இருந்தது. நம் கல்வெட்டுகளிலும் ஆண்டு குறிப்பிடப்படுகிறது.
நீக்கு1940களில் நடந்த பாரதியார் காந்தி சந்திப்பு பற்றி நமக்குக் குழப்பம் உள்ளது. வீர சாவர்கர் வரலாறையும் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. நிலைமை இப்படியிருக்க கல்வெட்டு, இலக்கிய வரஙாறுகள் குழப்புவது இயற்கை.
ஆசிரியர் துடிசைக்கிழார் (கண்ணதாசன் எழுதிய சேரமான் காதலி இந்தப் புத்தக வரலாற்றுச் செய்திகள் அடிப்படையில் எழுதப்பட்டது) இதனைப் பற்றி விவரமாக வரும். இங்கும் குறிப்பிட்டிருக்கிறேன்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி
நீக்குகுலசேகர ஆழ்வார் திருச்சூரில் பிறந்து மன்னார் கோயிலில் முக்தி அடைந்தவர் இல்லையா? பதிவு நன்றாகப் பல தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. அதிலும் சேரர் சரித்திரம் மிகவும் புதிது. பரசுராமர் 64 கிராமங்களைப் பெற்றுக் கொண்டார் என்பது தெரியும். மற்ற விஷயங்கள் இப்போ உங்க பதிவிலிருந்து தெரிந்து கொண்டேன். மற்றபடி அஸ்வத்தாமாவுடன் பாண்டியன் போரிட்டதும், பாரத யுத்தத்தில் பாண்டியர்கள், சேரர்களின் பங்கும் முன்னரே தெரியும். உ.வே.சா கூட எழுதி இருக்கார்னு நினைவு.
பதிலளிநீக்குகேரளம் என்ற சேரநாட்டு பகுதி பரசுராமர் தன் மழுவை கடலில் எறிந்து உண்டாக்கியது என்று நாங்கள் "God's own country' தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்க பரசுராமர் 64 கிராமங்களைத் தானமாகப் பெற்றார் என்று சொல்கிறீர்களே இது நியாயமா? பரசுராமர் அவதாரம் இல்லையா?
நீக்குJayakumar
பரசுராமர் அவதாரம் இல்லைனு யார் சொன்னது? மானுடனாகப் பிறந்ததொரு அவதாரம் அவரும். பல ராஜகுமாரர்களுக்கும் குருவாக இருந்தவர் க்ஷத்திரிய வம்சப் பகையின் காரணமாக திசை மாறிப் போனார். க்ஷத்திரியர்களைக் கொன்று பழி வாங்க ஆரம்பித்தார். அவர் மழுவை எறிந்து கடலை உள்வாங்கச் சொல்லி நிலத்தைப் பெற்றார் என்று சொல்லப்பட்டாலும் புராண ரீதியாகக் காஷ்யபரிடமிருந்து தானமாகப் பெற்றார் என்றும் சொல்லுவார்கள்.
நீக்குகேரளம் முழுதுமானு தெரியாது. ஆனால் கேரளப்பகுதியைப் பரசுராமக்ஷேத்திரம் என்றே அழைப்பார்கள். என்றாலும் அவர் தாய் ரேணுகா தேவிக்குத் தமிழகத்தில் தான் கோயில்கள், பக்தர்கள் அதிகம்.
நீக்குநெல்லை கூறியவற்றை நான் நீண்ட காலமாகப் படித்து வரும் ஜெயஸ்ரீ சாரநாதனின் வலைப்பக்கங்களிலும் படிச்சிருக்கேன். சேரர்களுக்கு வடக்கே உள்ள தொடர்பு மற்றும் சித்திராங்கதை மணலூர் பற்றி எல்லாம் நானும் படித்துத் தெரிந்து கொண்டிருக்கேன். பாண்டியர்களுக்குச் சேரர்கள், சோழர்களை விட நீண்ட நெடிய வரலாறு உண்டு. எல்லாத்தையும் கெடுத்துக் கொண்டு தான் பிற்காலப் பாண்டியர்கள் தொல்லையை வலுவில் தேடிக் கொண்டு வந்து விட்டார்கள். இது மன்னிக்கவே முடியாத குற்றம். அதோடு நம் சரித்திரம் நீண்ட நெடிய வரலாறு கொண்டது என்பதால் தோண்டத் தோண்டப் புது விஷயங்கள் வரும்.
பதிலளிநீக்குபடங்கள் வழக்கம் போல் உங்கள் திறமையைக் காட்டுகின்றன. பெருமாள் தரிசனத்துக்கு மிக்க நன்றி, பாளையங்கோட்டையில் ராஜகோபாலசாமி கோயில் இருப்பதே இப்போத் தான் தெரியும். நாங்க போனப்போ முற்றிலும் வேற்று நாட்டு மக்களுடைய இடத்துக்கு வந்துட்டாற்போல் எண்ணம். இங்கே திருச்சியில் கோட்டைக்கு அந்தப்பக்கம் இருக்கிறாப்போல். நம் மக்கள் அங்கே அதிகம் காண முடியவில்லை.
பதிலளிநீக்குதிருநெல்வேலி எத்தனையோ முறை
பதிலளிநீக்குசென்றிருக்கின்றேன்... பாளையங்கோட்டையில் ராஜகோபாலஸ்வாமி கோயில் இருப்பது இப்போது தான் தெரியும்.