கனவு என்பது ஆழ்மனதின் எண்ணங்களோ? நிறைவேறாத எண்ணங்கள், அல்லது ஆசைகளா? இல்லை, மனதின் பயங்களா? கனவு கண்டால் தூக்கம் சரியில்லை என்பார்கள்.
சாதாரணமாக கனவு என்பது ஒரு சிறு துணுக்கு போல, அதாவது கீழே விழுவது போலவோ, பஸ்ஸை மிஸ் பண்ணுவது போலவோ (சமீபத்தில் ஒரு மாறுதலுக்கு நான் பஸ்ஸைப் பிடித்து விடுவது போலக் கூட கனவு கண்டேன்!) கனவு காண்போம். அவை நினைவில் இருக்கும். உயரமான இடத்திலிருந்து விழுவது போல கனவு வரும். பாதுகாப்பின்றி உணர்வதாகச் சொல்வார்கள்! பஸ்ஸை மிஸ் செய்வது போலக் கனவு கண்டால் ஏதோ வாய்ப்பு தட்டிப் போவதாய் அர்த்தம் என்பார்கள். சாவைக் கனவில் கண்டால் சாவில் இடம்பிடித்த நபருக்கு தீக்காயுசு என்பார்கள். என்ன லாஜிக்கோ! கல்யாணம் நடப்பதாகக் கனவு கண்டாலோ நேர்மாறாகச் சொல்வார்கள்.
ஆக பெரிய கனவு வருவது அபூர்வம், வந்தாலும் அப்புறம் நினைவில் நிற்பது அதைவிட அபூர்வம்!
பெரிய கனவு என்றால்
முன்பெல்லாம் என்னை ஒரு யானை துரத்துவது போல ஒரு கனவு வரும். சந்து
சந்தாக, தெருத்தெருவாக, வீட்டுக்குளெல்லாம் புகுந்து, புகுந்து யானையால்
வெவ்வேறு லொகேஷன்களில் துரத்தப்படும் அந்தக் கனவு பல நாட்கள், பலமுறை
இடைவெளி விட்டு வந்துள்ளது. ஆனால் கடைசி வரை நான் யானையிடம் மாட்டியதில்லை! யாராலாவது, அல்லது எதனாலாவது துரத்தப்படும் கனவுகளுக்கு பயம் அல்லது ஏதாவது துரோகம் காரணமாயிருக்கலாம்!
பின்னர் நண்பர்கள் பேச்சைக் கேட்டு பிள்ளையாருக்குத் தேங்காய் உடைத்துப்
பார்த்தேன். கோவில் சென்றால் யானை அருகில் செல்லத் தயங்குவேன். "அவனா
நீ?" என்று பிடித்து விடுமோ என்று என் மனதுக்குள் ஒரு பயம்
இருந்திருக்கும்! (ஹிஹிஹி)
"போன பிறவியில் நீ ஏதோ யானைக்கு துரோகம் செய்திருப்பே"
நானா! யானைக்கா!! துரோகமா!!! எப்படி?
அந்தக் கனவு வந்த காலைகளில் விழித்துக்கொண்டு வெகு நேரமாகியும் பீதி,
படபடப்பு குறைய கொஞ்சம் நேரமாகும். என்ன பரிகாரம் நடந்ததோ, யானைக்கு என்ன
ப்ரீத்தி ஆனதோ.. இல்லை, வேறு யாரையாவது கனவில் துரத்தப் போய்விட்டதோ....
இப்போது அந்தக் கனவு வருவதில்லை!
அந்த கனவுக்குப் பிறகு வந்த நீ...ண்ட கனவு இதுதான். நினைவிலிருந்து மறையுமுன் எழுதி விட்டேன்!
தீபாவளிக்கு மறுநாள் வெளியூரிலிருந்து ஒரு உறவு வருகை.
குடும்பத்துடன் வந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் உண்டு. ஒருவயது நிறையாத
இரண்டு மழலைகளும் வீட்டை ரெண்டு படுத்தி வீட்டுக் கிளம்பிச் சென்றன. அதே
நினைவோ என்னவோ.. அதிகாலை ஒரு கனவு.
இந்தக் கனவில் என்ன விசேஷம் என்றால் நிஜங்கள் சம அளவில் கலந்திருந்ததுதான்!
ஹாலில் உட்கார்ந்திருக்கிற எனக்கு ஒரு குழந்தையின் சலங்கை ஒலியும்,
தத்தக்கா பித்தக்கா என்று அது நடக்கும் சத்தமும் கேட்டு ஆச்சர்யம்
வருகிறது. 'ஏது நம் வீட்டில் அவ்வளவு சிறு குழந்தை? வாய்ப்பே இல்லையே!
வந்த குழந்தைகளில் ஒன்றை விட்டு விட்டுப் போய்விட்டார்களா? (இந்த இடம் நிஜ
வாழ்வுடன் ஒத்துப்போகும் சிந்தனை! இடம் இப்போது குடியிருக்கும் வீடு.)
பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு குழந்தை ரூமுக்குள்ளிருந்து தத்தக்கா பித்தக்கா தளர் நடையில் நடந்து செல்கிறது. நான்
எழுந்து அருகில் போகும்போது டைனிங் ஹாலில் உள்ள மேஜைக்கு அடியில் (சற்று பெரிய மேஜையாக்கும்) சென்று மறைந்து விடுகிறது குழந்தை. அந்த இடத்தில் கொலு பொம்மைகள் போல சில பொம்மைகள் (நிஜத்தில் அங்கு பொம்மைகள் கிடையாது - எங்கள் வீட்டில் கொலு வைக்கும் பழக்கமும் கிடையாது). அதில் இது மறைந்த பொம்மை லேசாக ஒளிர்ந்து நின்றது போல பிரமை!
"யார் வந்திருக்கா நம் வீட்டுக்கு?" என்று மனைவியிடம் கேட்டு, ரூமுக்குள் சென்று பார்க்கிறேன். உள்ளே குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும் என்னைத் தவிர வேறு ஒருவருமில்லை.
வெளியில் வந்து ஐந்து நிமிடங்களுக்குள் மனைவியின் அத்தை கணவர்
ரூமுக்குள்ளிருந்து வெளியில் வருகிறார்!!
நாங்களெல்லோருமே அவரை
'அத்திம்பேர்' என்றுதான் கூப்பிடுவோம்! "அத்திம்பேர் நீங்க எப்போ
வந்தீங்க?" என்கிறேன் ஆச்சர்யத்துடன்.
"காலை 5.50க்கு" என்கிறார் அவர். கிட்டத்தட்ட நிஜம். அது காலை நேரம் (ஆனால் காலை 3.30 மணி - கனவு காணும் நேரம்)
"அடடே... படுத்துக்க வேண்டியதுதானே? ஏன் வெளில வாசலுக்கு வர்றீங்க? வெளியில ஒரே பனி!"
என்கிறேன் (வயதானவர்.
அவரின் சதாபிஷேகம் இப்போதுதான் நடந்து, நாங்கள் அவர் ஊர் சென்று திரும்பி இருந்தோம். ஸோ, இதுவும் நிஜத்தோடு ஒட்டி வருகிறது.)
அவரின் சதாபிஷேகம் இப்போதுதான் நடந்து, நாங்கள் அவர் ஊர் சென்று திரும்பி இருந்தோம். ஸோ, இதுவும் நிஜத்தோடு ஒட்டி வருகிறது.)
"இருக்கட்டும் மாப்பிளே... உள்ள அவங்க இருக்காங்க" என்கிறார் அவர்.
"யார்"
"அவளோட சித்தி" (என் 'பாஸி'ன் சித்தியைச் சொல்கிறார். அவர் உள்ளூர். ஆனால் அவர் வந்து போனது முதல் நாள், தீபாவளி அன்று காலை பதினோரு மணி போல..!)
"ஓ... சரி.. சரி..." என்று பால்கனியிலிருந்து வெளியில் எட்டிப்பாக்கிறேன்.
மாடியிலிருந்து பார்க்கும்போது டேங்க் தண்ணீர் வழிந்து வாசலைத்தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. (இது வழக்கமான, நிஜப் பிரச்னை. நாங்கள் இருக்கும்
இடத்திலிருந்து 100 அடியில் இருக்கும் மெயின் பில்டிங்கில் இருந்து
மோட்டார் 'ஆன்' செய்வார்கள். இங்கு எங்கள் பிளாக்கில் தண்ணீர் வழிந்ததும்
ஒரு 'மிஸ்ட் கால்' கொடுத்தால், வால்வைத் திருப்பி அடுத்த இடத்துக்குத்
தண்ணீர் போடுவார்கள். ஆனால் அந்த வால்வ் பழுதாகி நீண்ட நாட்களாகிறது.
இன்னும் மாற்றவில்லை. எனவே அங்கு வால்வைத் திருப்பினாலும் இங்கும் தண்ணீர்
தொடர்ந்து ஓரளவுக்கு நிரம்பி வழிந்து வீணாகும்)
இந்த நேரம் பேப்பர்க்காரர்
காம்பவுண்டுக்கு வெளியிலிருந்து பேப்பர் போட முயல்கிறார். 'நாங்கள்தான்
பேப்பரை நிறுத்தி விட்டோமே (இது நிஜம்) ஏன் போடுகிறார்' என்று
பார்க்கும்போதே பின்னாலிருந்து ஒரு குரல் (அதுவும் அந்த பேப்பர் போடுபவர் குரல்தான்) அவரை "போடவேண்டாம்... அவர்கள்
வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்" என்று சொல்லியும், இவர் உள்ளே தூக்கி
எறிந்து விடுகிறார்! அது உள்ளே தேங்கி இருக்கும் மழைத் தண்ணீரில் வந்து விழுந்து (வழக்கம்போல) ஊறத் தொடங்குகிறது!
கீழே இறங்கி வந்தால் பக்கத்து வீட்டுக் காரர்கள் எல்லாம் தண்ணீர் வீணாகி
ஓடி, அவர்கள் வாசலைப் பாழ்படுத்துவதாகச் சொல்லிக் கோபப்படுகிறார்கள்.
(எங்களுக்குப் பக்கத்தில் வீடே கிடையாது)
இரண்டு மூன்று பேர்கள் என் "பங்களா"வுக்குள் (நிஜத்தில்
நான் இருப்பது பங்களா இல்லை. சிறு வீடுதான்) வந்து கீழே இருக்கும் என்
மின்சார மீட்டர் பாக்ஸை செக் செய்கிறார்கள். நான் மறுக்க மறுக்க
அங்கிருக்கும் சுவிட்ச் ஒன்றை அவர்கள் போட, "புஷ்...." என்று ஒரு சத்தம்
வருகிறது.
"ம்ம்ம்... 'Air' சரி செய்து விட்டேன். இனி இப்படி வராது" என்கிறார் ஒரு கைலி.
"நமக்கும் இனி ஒழுங்காய்த் தண்ணீர் ரொம்பும்" என்கிறார் ஒரு மடித்த வேஷ்டி!
"என்னங்க சம்பந்தம்? இங்கே தண்ணீர் மோட்டார் ஒன்றும் இல்லை. அங்.... க இருக்கு... அதாவது எங்கள்
மோட்டார் இந்தத் தெரு முனையில் ஒரு சர்ச் இருக்கே... அங்க இருக்கு...
அதுக்கு எதிர்த்த பில்டிங்" என்கிறேன் நான்! (தெருவே கிடையாது. இந்த
அடையாளங்கள் என் சகோதரியின் வீட்டு அடையாளத்துடன் ஒத்துப் போகிறது)
அவர்கள் வெளியில் செல்ல, சைக்கிளில் என்னைத் தாண்டிச் செல்கிறாள் என்
காதலி (இது சுமார் முப்பது வருடங்களுக்கு முந்தைய நிஜம்.) நான்
நிமிர்ந்து புன்னகைத்து சைகை காட்டுமுன் வீட்டுக்குள்ளிருந்து என் மகன்
(இது இப்போதைய நிஜம்) வருவதை பார்த்து ஒன்றும் தெரியாதது மாதிரி
நின்று விடுகிறேன். சற்று தூரத்தில் மறையும் அவள் (இதில் ட்விஸ்ட் என்ன
என்றால் இவள்தான் இப்போது என் மனைவி) முகத்தில் கோபம் தெரிவதைக்
கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே ஒரு நாய் மூன்று குட்டிகளுடன்
உள்ளே ஓடிவந்து, என் காலை மூன்று முறைச் சுற்றி விட்டு விழுந்து
விடுகிறது. மூன்று குட்டிகளில் ஒன்றும் விழுந்து விடுகிறது. "என்ன
ஆச்சு?" என்று அருகில் சென்று பார்க்கிறேன்.
கனவு முடிந்து விட்டது. மணியைப் பார்க்கிறேன். காலை மணி மூன்றரை. என்ன அர்த்தம் மேடம்? என்ன அர்த்தம் ஸார்? என்னவாக இருக்கும்? பதில் சொல்லிவிட்டுப் போங்களேன் ப்ளீஸ்...
படங்கள் :: மிக்க நன்றியுடன் இணையத்திலிருந்து....