தேனம்மை லக்ஷ்மணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேனம்மை லக்ஷ்மணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24.11.15

பெண் பூக்கள்



முள்ளும் மலரும் என்கிற தலைப்புக்கு முள் மற்றும் மலர் என்று ஒரு அர்த்தம், மற்றும் முள் கூட மலரும் என்று விளக்கம் சொல்வார்கள் அந்தக் காலத்தில்.


அதுபோலவே இந்தப் புத்தகத்தின் தலைப்பு.  பூக்களில் ஆண், பெண் உண்டா என்ற கேள்வி.  பூக்களாகிய பெண்கள் என்று ஒரு அர்த்தம்.  பெண்கள் எல்லாம் பூப் போன்றவர்கள் என்று சொல்வது..

 
தலைப்பை ஆராய்வதை விட்டு விடுவோம்.  புத்தகம் ஒவ்வொரு பூவைப் பற்றியும் ஒரு கவிதை சொல்கிறது.  இது இந்தப் பதிப்பகத்தின் ஆறாவது புத்தகம்.  தேனம்மைக்கு இது நாலாவது புத்தகம் என்கிறது புள்ளிவிவரம்.
பரவசப்பூ, வெட்கப்பூ, காதல் பூ, எமாற்றப்பூ, ஏமாற்றும் பூ என்று என பல்வேறு உணர்வுகளில் கவிதைகள்.



கவிதைகள் எளிமையாய் இருக்க வேண்டுமா?  புரியக் கஷ்டமாய் வார்த்தைகள் இடம்பெற வேண்டுமா?


சூரியகாந்திக் கவிதையை ஆண் ஏமாற்றுவதை உணராத பெண்ணின் காதல் பற்றிய கவிதை என்று சொல்லலாமோ..


தாழம்பூ - "பூஜைக்கு மறுக்கப்பட்டாலென்ன?"  - தாழம்பூவைப் பூஜையிலும் வைக்கிறோமே என்று தோன்றியது.  எங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜைகளில் தாழம்பூ உண்டு.  


பிறைசடையில்
இருந்து நழுவி
ஜடை நாகங்களில்
குடியேறி
சுவாசினிகளின்
மருதாணிக் கரங்களின்
வருடல்களில்
வெட்கத்துடன் நான்...


புரியவில்லை!

கவிதை வரிசையில் முல்லைக் கவிதை டாப்.

பூக்களே பேசுவது போல சில கவிதைகள், பூக்களைப் பற்றிப் பேசுவது போல சில கவிதைகள்.


அரளிவிதை -சயனைடு குப்பி - புன்னகைக்க வைத்த, ரசிக்கத்தக்க ஒப்பீடு!  நல்ல உவமை.


விதைகளில் எல்லாம்
சயனைடு குப்பி
மாட்டியே பிறந்தாய்...
குமரி முனையில்
அம்மன் சூடிக்
கடலில் வீசிய செவ்வரளி
செந்தீயாய்..


சூரியன்!


சில பூக்களின் பெயர்கள் படிக்கும்போது அந்தப் பூக்கள் எப்படி இருக்கும் என்கிற கற்பனையில் மனம் லயித்து விடுகிறது!  மகிழம்பூ, கொடிச் சம்பங்கி.. அந்தந்த பூக்களின் படம் அந்தந்த பக்கங்களில் தந்திருந்தாலும்!  நிறையப் பூக்களை நான் இதுதான் அந்தப்பூ என்று அறிந்து பார்த்ததில்லை!


சப்பாத்திக் கள்ளியின் வழி சொல்லும் சோகம், அதிலேயே தன்னம்பிக்கை - அழகு!


ஆமாம், ஐயங்கார்ப் பெண்களின் மூக்கில் அப்படி என்ன விசேஷம் தேனம்மை?!!


பூசணிப் பூவுடன் விழித்துக் காத்திருக்கும் உழைப்பாளியின் இரவு சுவாரஸ்யம்.


துணையின் மனதறியாத ஆக்கிரமிப்பு அண்மை டேபிள் ரோஸில்!  அதில்,


என் கண் எனும் ரிமோட்டில் உன்
மனத்தை எனக்கேற்றதாக மாற்றுகிறேன்
என் கண்ணுக்கு விருந்தாய்..
எப்படி உணர்கிறாய் உன்னை நீ..
அறிய விழைந்ததில்லை..  


எப்படி உணர்கிறாய் 'உன்னை' நீ யா?  'என்னை' நீயா?


ஸ்கோர், பல்ஸ் போன்ற ஆங்கில வார்த்தைகளும், ஹிஜரப், ஹாசல்நட் போன்ற அந்நிய வார்த்தைகளும் சில சமயம் கவிதையை சற்றுத் தள்ளி நிறுத்துகின்றன!


அனிச்ச மலருக்கு அடுத்தடுத்து இரண்டு பக்கங்கள்.  உணர்ச்சி வெள்ளம்!
அந்திமந்தாரையில் கல்கியின் பொன்னியின் செல்வப் பாத்திரங்கள்.
எப்படித்தான் எழுதுகிறீர்களோ இப்படி எல்லாம் கவிதை!  படிக்க மட்டுமே தெரிகிறது எனக்கு!


பாராட்டுகள் சகோதரி தேனம்மை.




பெண் பூக்கள்
தேனம்மை லக்ஷ்மணன்
புதிய தரிசனம் பதிப்பகம்,
64 பக்கங்கள் - 60 ரூபாய்.