முதல் பகுதி.
.......
(தொடர்ச்சி)
அவனைக் கொஞ்சம் காத்திருக்கச் சொல்லி விட்டு, மேலே போய் சட்டை
மாற்றிக் கொண்டு வந்தேன். வீட்டில் யாரிடமும் இதைப்பற்றி ஒன்றும் மூச்சு
விடவில்லை. நான் இவனுடன் பேசுவது தெரிந்தாலே என்னை உரித்து விடுவார்கள்.
இருவரும் பேசிக் கொண்டே இன்னொரு நண்பனிடம்
சென்றோம். அவன் எங்கள் இன்னொரு நண்பனுடன் இருந்தான்! ஏனோ அவர்களுக்குமே
இவனை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும், காப்பாற்ற வேண்டும் என்று
தோன்றவில்லை. இது அறிவீனமா, பயமா... ஏதோ ஒன்று!
தனியாகச் சாகப் பயமாக இருந்ததாகச் சொன்ன
நண்பனுக்கு மிச்ச இருவரும் அவன் சாகும் வரை துணையாய் இருப்பதாய் முடிவு
செய்யப்பட்டது! அவர்களில் ஒருவன் வீட்டு மொட்டை மாடியில் படுப்பதாய்
முடிவு செய்தார்கள். நான் முடிந்தவரை அவர்களுடன் இருந்து விட்டுத்
திரும்பினேன். அதுவரையிலும் ஒன்றும் நேராதது வேறு எங்களுக்குக் கவலையைத்
தந்திருந்தது!
"பார்த்துக்கடா... பாவம்! ரொம்பக் கஷ்டப்படாமப் பார்த்துக்க" என்றேன்.
"நீ போடா... நான் பார்த்துக்கறேன். கடைசி வரை நான் அவன் கூட இருப்பேன்" என்றான் அவன்.
இப்போது எழுதும்போது இந்த இடங்கள் எல்லாம் அபத்தமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய!
"நாளை இவன் Body உன் பக்கத்தில் இருந்தால் உனக்குப் பிரச்னை வராதா? என்ன சொல்வே?" என்று கேட்டேன்!
"ஏய்! நான் உன்னை மாதிரி பயந்தவன் இல்லை! என்ன ஆனாலும் சரி" என்றான் அவன். (நண்பேன்டா!)
"நான் உன்கிட்ட ஏதும் சொல்லாமலேயே உன் கூட வந்து படுத்தேன்னு சொல்லிடுவோம்" என்றான் 'சாக'ப்போகிறவன்.
"ஆமாம்...
நீ வந்துதான் சொல்லணும்... சொல்ல நீ எங்கடா இருப்பே?" என்றான் இவன்.
எல்லோரும் 'நகைச்சுவை'யை உணர்ந்து சிரித்தோம்! (இப்போது அபத்தமாக
இருக்கிறது இல்லை? அப்போது ஏதோ அசட்டு த்ரில்தான்!)
வீடு வந்து லேசில் தூக்கம் வரவில்லை. வீட்டில்
யாரிடமும் சொல்லமுடியாத குறுகுறுப்பும் படுத்தியது. நமக்குத் தெரிந்த ஒரு
விஷயத்தை அடுத்தவரிடம் பகிர முடியாத தருணங்களின் பாக்கு மென்று தண்ணீர்
குடித்தது போல் நெஞ்சடைக்கும் தவிப்பு இருக்கிறது பாருங்கள்....
அனுபவித்தால்தான் தெரியும்!
மறுநாள் காலை எழுந்தது முதலே பரபரப்பை அடக்க
முடியவில்லை. அசாதாரணக் காட்சியைக் காண இருக்கும் த்ரில் வேறு படுத்த, வேக
வேகமாகக் கிளம்பினேன். 'நிறைய வேலை இருக்கிறது'
கிளம்பிக் கொண்டே இருக்கும்போதே நண்பன் அழைப்பதாய் என் அண்ணன் சொல்ல, படபடப்புடன் வந்து எட்டிப் பார்த்தேன்.
சாகப் போனவன் கூடப் படுத்த 'அந்த' நண்பன்.
சாகப் போனவன் கூடப் படுத்த 'அந்த' நண்பன்.
"என்ன ஆச்சுடா? " விளக்கமாகக் கேட்க வாய் வரவில்லை.
"உடனே கிளம்புடா... கைல எவ்வளவு காசு திரட்ட முடியுமோ, எடுத்துகிட்டு உடனே வா..."
"என்னடா ஆச்சு? காசு எதுக்கு?"
"அட, வாடா வேகமான்னா கேள்வியெல்லாம் கேட்டுகிட்டு...வாடா..." கிட்டத்தட்ட அதட்டலாய்க் கூப்பிட்டான்.
கையில் கிடைத்த காசை எடுத்துக் கொண்டு சைக்கிளை
எடுத்தேன். பின்னால் அமர்ந்தவனிடம் "எங்கேடா?" என்றேன் சைக்கிளை அவன்
வீட்டுப் பக்கம் திருப்ப முயன்றபடி.
"திருப்பாதே... நேரா விடு" என்றான். "மேனகா காபி பார் போ"
ரயிலடிக்கு அருகில் இருந்தது 'மேனகா காபி பார்'.
நாங்கள் அடிக்கடி கூடும் இடம். அங்கு போன போது கடை வாசலிலிருந்த
பெஞ்ச்சில் படுத்திருந்தான் சாகப்போன நண்பன். மிக, மிகச் சோர்வாய்த்
தெரிந்தான்.
சைக்கிளை ஸ்டான்ட் போட்டு விட்டுத் திரும்புவதற்குள் வேகமாக
எழுந்து கடை ஓரம் சுவரை ஒட்டி நின்று ஒக்காளத்துடன் வாந்தி எடுத்தான்!
இல்லை, இல்லை எடுக்க முயற்சி செய்தான். திரும்பி பலவீனமாகவும்,
பரிதாபமாகவும் என்னைப் பார்த்தான்.
"என்னடா...." என்று ஏதோ தொடங்கப் போன என்னை, என் கையை அழுத்தி சைகை செய்தான் இங்கு அழைத்து வந்த நண்பன்.
"ஃபுட் பாய்சன்'னு சொல்லி வச்சிருக்கேன். ஏதாவது பேசிக் கெடுத்துடாதே" என்றான்.
நாங்கள் வழக்கமாகக் கூடும் கடை.
கடைக்காரர் என்னவென்று தெரியாமல் இஞ்சி, சுக்கு கஷாயம் என்று ஏதோ வைத்தியம் சொல்லிக் கொண்டிருந்தார்.
சோர்ந்திருந்த நண்பனைக் கிளப்பிக் கொண்டு
ரயிலடிக்கு வந்தோம். கொஞ்சம் காத்திருந்தபிறகு இன்னும் இரண்டு நண்பர்களும்
வந்து சேர்ந்தார்கள்.
இடைப்பட்ட நேரத்தில் கூடப் படுத்திருந்த நண்பன் இரவு நடந்த கதையைச் சொன்னான்.
"பனிரண்டு ஒரு மணி வரை ஒண்ணுமே நடக்கலைடா...
கொஞ்சம் பேசிக்கிட்டு இருந்தோம். அப்புறம் கண்ணசந்துட்டோம். திடீர்னு
சத்தம் கேட்டு எழுந்து பார்த்தா இவன் துடிச்சிகிட்டு இருக்கான். அழுவறான்.
வயிறு வலிக்குதுங்கறான். வாந்தி எடுக்கறான். கக்கூஸ் போகணும் மாதிரி
இருக்குங்கறான்...வெளியில அழைச்சுட்டுப் போய் ரோட்டோரமா போக விட்டுத்
தண்ணீர் கொடுத்தேன். ஒரே அழுகை. காலைல நாலு மணிக்கெல்லாம் இங்கே
வந்துட்டோம். இவர்தான் ஏதேதோ கொடுத்து அவன் வாந்தியை நிறுத்தி, குடிக்கவும்
கொடுத்தார். எல்லாம் கடன்தான்..."
அப்புறம் எல்லோரும் கைக்காசைத் திரட்டிப்போட்டு
கடைக்காரர் கடனை அடைத்து, அப்புறம் அவனுக்கு, அருகிலிருந்த ஊரில்
வசித்துவந்த அவன் பாட்டி ஊருக்கு ரயிலில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து,
அவன் கையிலும் கொஞ்சம் பணம் கொடுத்தோம். யாராவது கூடப் போக வேண்டாமா என்ற
கேள்வி வந்தபோது அவனே வேண்டாம் என்று மறுத்து விட்டான்.
"தனியாப் போய்க்கறேண்டா... அப்பத்தான் நான் மனசில் நினைச்சுருக்கற கதையை பாட்டி கிட்ட சொல்ல முடியும்" என்றான்.
'இனி தற்கொலை என்ற முடிவை இந்த ஜென்மத்தில் நினைக்க மாட்டேன்' என்றான் வேதனையுடன்.
'இனி தற்கொலை என்ற முடிவை இந்த ஜென்மத்தில் நினைக்க மாட்டேன்' என்றான் வேதனையுடன்.
டிரெய்ன் கிளம்பும்வரை கூட இருந்துவிட்டு வந்தோம்.
அவன் மறுபடி எங்களூர் திரும்ப பத்துப் பதினைந்து நாளாகியது. எதுவுமே நடக்காதது போல மறுபடியும் சிவாஜி படம் பார்க்கக் கிளம்பி விட்டோம்!