பதின்ம வயது அபத்தங்கள் / அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதின்ம வயது அபத்தங்கள் / அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17.6.14

தற்கொலை (2)..... ( எளிதில் கோபம் வருபவர்கள் இந்தப் பதிவைத் தவிர்க்கவும்....!! )


  முதல் பகுதி.


.......
(தொடர்ச்சி)


அவனைக் கொஞ்சம் காத்திருக்கச் சொல்லி விட்டு, மேலே போய் சட்டை மாற்றிக் கொண்டு வந்தேன். வீட்டில் யாரிடமும் இதைப்பற்றி ஒன்றும் மூச்சு விடவில்லை. நான் இவனுடன் பேசுவது தெரிந்தாலே என்னை உரித்து விடுவார்கள்.

இருவரும் பேசிக் கொண்டே இன்னொரு நண்பனிடம் சென்றோம். அவன் எங்கள் இன்னொரு நண்பனுடன் இருந்தான்!  ஏனோ அவர்களுக்குமே இவனை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும், காப்பாற்ற வேண்டும் என்று தோன்றவில்லை. இது அறிவீனமா, பயமா... ஏதோ ஒன்று!

தனியாகச் சாகப் பயமாக இருந்ததாகச் சொன்ன நண்பனுக்கு மிச்ச இருவரும் அவன் சாகும் வரை துணையாய் இருப்பதாய் முடிவு செய்யப்பட்டது!   அவர்களில் ஒருவன் வீட்டு மொட்டை மாடியில் படுப்பதாய் முடிவு செய்தார்கள்.  நான் முடிந்தவரை அவர்களுடன் இருந்து விட்டுத் திரும்பினேன். அதுவரையிலும் ஒன்றும் நேராதது வேறு எங்களுக்குக் கவலையைத் தந்திருந்தது! 
                                                    


"பார்த்துக்கடா... பாவம்! ரொம்பக் கஷ்டப்படாமப் பார்த்துக்க" என்றேன். 

"நீ போடா... நான் பார்த்துக்கறேன். கடைசி வரை நான் அவன் கூட இருப்பேன்" என்றான் அவன்.

இப்போது எழுதும்போது இந்த இடங்கள் எல்லாம் அபத்தமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய!

"நாளை இவன் Body உன் பக்கத்தில் இருந்தால் உனக்குப் பிரச்னை வராதா? என்ன சொல்வே?" என்று கேட்டேன்!

"ஏய்! நான் உன்னை மாதிரி பயந்தவன் இல்லை! என்ன ஆனாலும் சரி" என்றான் அவன். (நண்பேன்டா!)

"நான் உன்கிட்ட ஏதும் சொல்லாமலேயே உன் கூட வந்து படுத்தேன்னு சொல்லிடுவோம்" என்றான் 'சாக'ப்போகிறவன்.
"ஆமாம்... நீ வந்துதான் சொல்லணும்... சொல்ல நீ எங்கடா இருப்பே?" என்றான் இவன். எல்லோரும் 'நகைச்சுவை'யை உணர்ந்து சிரித்தோம்!  (இப்போது அபத்தமாக இருக்கிறது இல்லை? அப்போது ஏதோ அசட்டு த்ரில்தான்!)

வீடு வந்து லேசில் தூக்கம் வரவில்லை. வீட்டில் யாரிடமும் சொல்லமுடியாத குறுகுறுப்பும் படுத்தியது. நமக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை அடுத்தவரிடம் பகிர முடியாத தருணங்களின் பாக்கு மென்று தண்ணீர் குடித்தது போல் நெஞ்சடைக்கும் தவிப்பு இருக்கிறது பாருங்கள்.... அனுபவித்தால்தான் தெரியும்!

மறுநாள் காலை எழுந்தது முதலே  பரபரப்பை அடக்க முடியவில்லை. அசாதாரணக் காட்சியைக் காண இருக்கும் த்ரில் வேறு படுத்த, வேக வேகமாகக் கிளம்பினேன்.  'நிறைய வேலை இருக்கிறது'
கிளம்பிக் கொண்டே இருக்கும்போதே நண்பன் அழைப்பதாய் என் அண்ணன் சொல்ல, படபடப்புடன் வந்து எட்டிப் பார்த்தேன்.

சாகப் போனவன் கூடப் படுத்த 'அந்த' நண்பன்.
"என்ன ஆச்சுடா? " விளக்கமாகக் கேட்க வாய் வரவில்லை.

"உடனே கிளம்புடா... கைல எவ்வளவு காசு திரட்ட முடியுமோ, எடுத்துகிட்டு உடனே வா..."
"என்னடா ஆச்சு? காசு எதுக்கு?"
"அட, வாடா வேகமான்னா கேள்வியெல்லாம் கேட்டுகிட்டு...வாடா..."  கிட்டத்தட்ட அதட்டலாய்க் கூப்பிட்டான்.

கையில் கிடைத்த காசை எடுத்துக் கொண்டு சைக்கிளை எடுத்தேன். பின்னால் அமர்ந்தவனிடம் "எங்கேடா?" என்றேன் சைக்கிளை அவன் வீட்டுப் பக்கம் திருப்ப முயன்றபடி.
                                                          

"திருப்பாதே... நேரா விடு"  என்றான். "மேனகா காபி பார் போ"

ரயிலடிக்கு அருகில் இருந்தது 'மேனகா காபி பார்'.  நாங்கள் அடிக்கடி கூடும் இடம். அங்கு போன போது கடை வாசலிலிருந்த பெஞ்ச்சில் படுத்திருந்தான் சாகப்போன நண்பன். மிக, மிகச் சோர்வாய்த் தெரிந்தான்.

சைக்கிளை ஸ்டான்ட் போட்டு விட்டுத் திரும்புவதற்குள் வேகமாக எழுந்து கடை ஓரம் சுவரை ஒட்டி நின்று ஒக்காளத்துடன் வாந்தி எடுத்தான்! இல்லை, இல்லை எடுக்க முயற்சி செய்தான்.  திரும்பி பலவீனமாகவும், பரிதாபமாகவும் என்னைப் பார்த்தான்.
                                                      
"என்னடா...." என்று ஏதோ தொடங்கப் போன என்னை, என் கையை அழுத்தி சைகை செய்தான் இங்கு அழைத்து வந்த நண்பன்.
"ஃபுட் பாய்சன்'னு சொல்லி வச்சிருக்கேன். ஏதாவது பேசிக் கெடுத்துடாதே"  என்றான்.
நாங்கள் வழக்கமாகக் கூடும் கடை.

கடைக்காரர் என்னவென்று தெரியாமல் இஞ்சி, சுக்கு கஷாயம் என்று ஏதோ வைத்தியம் சொல்லிக் கொண்டிருந்தார்.

சோர்ந்திருந்த நண்பனைக் கிளப்பிக் கொண்டு ரயிலடிக்கு வந்தோம். கொஞ்சம் காத்திருந்தபிறகு இன்னும் இரண்டு நண்பர்களும் வந்து சேர்ந்தார்கள்.
இடைப்பட்ட நேரத்தில் கூடப் படுத்திருந்த நண்பன் இரவு நடந்த கதையைச் சொன்னான். 
                                                          


"பனிரண்டு ஒரு மணி வரை ஒண்ணுமே நடக்கலைடா... கொஞ்சம் பேசிக்கிட்டு இருந்தோம். அப்புறம் கண்ணசந்துட்டோம்.  திடீர்னு சத்தம் கேட்டு எழுந்து பார்த்தா இவன் துடிச்சிகிட்டு இருக்கான். அழுவறான். வயிறு வலிக்குதுங்கறான். வாந்தி எடுக்கறான். கக்கூஸ் போகணும் மாதிரி இருக்குங்கறான்...வெளியில அழைச்சுட்டுப் போய் ரோட்டோரமா போக விட்டுத் தண்ணீர் கொடுத்தேன். ஒரே அழுகை. காலைல நாலு மணிக்கெல்லாம் இங்கே வந்துட்டோம். இவர்தான் ஏதேதோ கொடுத்து அவன் வாந்தியை நிறுத்தி, குடிக்கவும் கொடுத்தார். எல்லாம் கடன்தான்..."

அப்புறம் எல்லோரும் கைக்காசைத் திரட்டிப்போட்டு கடைக்காரர் கடனை அடைத்து, அப்புறம் அவனுக்கு, அருகிலிருந்த ஊரில் வசித்துவந்த அவன் பாட்டி ஊருக்கு ரயிலில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து, அவன் கையிலும் கொஞ்சம் பணம் கொடுத்தோம். யாராவது கூடப் போக வேண்டாமா என்ற கேள்வி வந்தபோது அவனே வேண்டாம் என்று மறுத்து விட்டான்.

"தனியாப் போய்க்கறேண்டா... அப்பத்தான் நான் மனசில் நினைச்சுருக்கற கதையை பாட்டி கிட்ட சொல்ல முடியும்" என்றான்.

'இனி தற்கொலை என்ற முடிவை இந்த ஜென்மத்தில் நினைக்க மாட்டேன்' என்றான் வேதனையுடன். 

                                     
டிரெய்ன் கிளம்பும்வரை கூட இருந்துவிட்டு வந்தோம்.


வன் மறுபடி எங்களூர் திரும்ப பத்துப் பதினைந்து நாளாகியது. எதுவுமே நடக்காதது போல மறுபடியும் சிவாஜி படம் பார்க்கக் கிளம்பி விட்டோம்!

11.6.14

தற்கொலை..... ( எளிதில் கோபம் வருபவர்கள் இந்தப் பதிவைத் தவிர்க்கவும்...! )



                                                            
                                                                         

"வாங்கிட்டேண்டா.. இந்த சாயந்திரம்தான் எனக்குக் கடைசி.  ராத்திரி குடிச்சுடுவேன்.  உன்னை கடைசியா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்"

கையில் டிக் 20 டப்பாவுடன் சிரித்தான் நண்பன்.

பகீரென்றது.

'மறந்திருப்பான், சரியாகியிருக்கும்' என்று நினைத்தோமே...
ரண்டு நாள் முன்பு...

"வலிக்காம சாகறது எப்படிடா?"

நண்பன் கேட்டபோது கிண்டலாகக் கேட்டேன், "ஏன்? நீ சாகப் போறியா?"

"ஆமாம்... எனக்குத்தான் கேட்கிறேன்"  அவன் குரலின் தீவிரமும், கலங்கிய கண்களும் என்னை பதட்டமடைய வைத்தன. 

"ஏண்டா பாவி?"
                                           
நீளமாக அவன் சோகத்தைச் சொன்னான்.  இப்போது கேட்க வேடிக்கையாக இருக்கும்.  அந்தப் பதின்ம வயதில் அவன் மிகவும்  கஷ்டப்படுதாகவே தோன்றியது, என்றாலும் தற்கொலை என்பது சரியில்லை, அந்த அளவுக்கு ஒன்றும் நடந்து விடவில்லை என்றும் தோன்றியது.  அதை அவனிடமும் சொன்னேன்.

கொஞ்சம் விவாதம் நடந்தது.  பெரும்பாலான நேரங்கள் மௌனம் காத்தான்.  அதுதான் உறுத்தியது.  கிளம்பிச் சென்று விட்டான்.  மறுநாள் காலை அவனைப் பள்ளியில் பார்த்தபோது சாதாரணமாகத்தான் இருந்தான்.

இப்போது இப்படி வந்து நிற்பவனை என்ன செய்ய? 

மீண்டும் கொஞ்ச நேரம் அறிவுரை சொல்லிப் பார்த்தேன்.  அண்டை வீட்டுக்காரர்கள் தாண்டிச் செல்லும் நேரம் மௌனம் காத்தோம்.  விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியர் கவனிக்கும் நேரமும் அமைதி காத்தோம்.

"விளையாடறீங்களா.... விளையாடுங்க... விளையாடுங்க... இதைப் பார்க்க இன்னிக்கி நான் இருக்கேன்.." என்றான் பூடகமான புன்னகையுடன், அந்தக் குழந்தைகளிடம்.

"ஏய்" என்று அதட்டினேன்.  பின்னே?   நாளை இந்தக் குழந்தைகள் சாட்சி சொல்ல மாட்டார்களா?  அப்புறம் என் நிலை?!!

ஒரு சொம்பு தண்ணீர் கொண்டு வர்றியா" 

"சரி... ஆனால் இவங்க கிட்ட ஏதும் உளறாமல் வெய்ட் பண்ணு"

மேலே போய் தண்ணீர் கொண்டு வந்தபோது கழுத்தையும், நெஞ்சையும் தடவிக் கொண்டிருந்தான். 

"எரியுதுடா"  அவன் கையில் பார்த்தேன்.  டப்பா காலியாக இருந்தது. 

"அடப்பாவி!" சுற்றுமுற்றும் பார்த்தேன்.  கீழே எங்காவது கொட்டிவிட்டு சும்மா பயமுறுத்துகிறானோ?  

என் சந்தேகம் புரிந்தது போல அருகில் வந்து வாயை ஊதினான்.  மூட்டைப்பூச்சி மருந்து வாசனை அடித்தது. 

                                                        
தண்ணீரை வாங்கிக் குடித்தான்.  நான் அவன் தூக்கிப்போட்ட டப்பாவைக் கைகளால் தொடப் போனவன், முடிவை மாற்றிக் கொண்டு (கைரேகை பதியக் கூடாதாம்) செருப்புக் காலால் அதை உதைத்துத் தள்ளிக் கொண்டுபோய் தூரத்தில் ரோடுக்கு அந்தப்பக்கம் தள்ளி விட்டேன். 

இப்போது நினைத்துப் பார்த்தாலும் உடனே நான் ஏன் அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகவில்லை என்று புரியவில்லை.

அவன் வீட்டுப் பெரியவர்களிடம் சொல்ல மாட்டேன்.  அது நிச்சயம்!  முன் அனுபவம் இருக்கிறது.  வேறு எதாவதுதான் செய்ய வேண்டும். 

அவன் அப்பா நீதித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.  இந்த என் நண்பன் இதற்குமுன் ஆறேழு முறை வீட்டை விட்டு ஓடியிருக்கிறான்!  முதல்முறை ஓடும்போதுதான் எங்களுக்கு அது அதிர்ச்சி.  அப்புறமப்புறம் அது சாதாரண செய்தியாகி விட்டிருந்தது.

முதல்முறை அவன் வீட்டை விட்டு ஓடிய மறுநாள் என்னைத்தான் சந்தித்தான்.  உறவினரை பஸ்ஸ்டாண்டில் பஸ் ஏற்றிவிட்டுத் திரும்பியபோது திருவள்ளுவர் தியேட்டரிலிருந்து வெளிவந்த கும்பலில் இவனும் இருந்தான். என்னைப் பார்த்து விட்டு சைக்கிளுடன் வேகமாக மறைய முயன்றவனை நானும் சைக்கிளில் வந்திருந்ததால் பின்னாலேயே விரட்டி மேம்பாலம் அருகில் மடக்கிப் பிடித்தேன்.  ஏதோ காரணம் சொன்னான். அந்த நேரம் பார்த்து என் அண்ணனின் நண்பர் ஒருவர் எதிர்ப்பட, அவருடன் கலந்து பேசி அவனைச் சமாதானப்படுத்தி, அவனைக் கொண்டுபோய் அவன் வீட்டில் விட்டோம்.



                                                             
                                                 

இரண்டாவது முறை அவன் ஓடிய காலையில் அவன் அப்பா என் வீடு தேடி வந்து விட்டார்.  "இதோ பார்! நீதான் அவன் க்ளோஸ் ஃபிரெண்ட். என்ன செய்வியோ எது செய்வியோ தெரியாது...  இன்று மாலைக்குள் அவனை எங்கிருந்தாவது தேடிக் கண்டுபிடித்து வீட்டில் ஒப்படைக்காவிட்டால் உன்னைப் பிடித்து உள்ளே போட்டு விடுவேன்" என்று அவர் பயமுறுத்தியதில், நான் பீதி + பேதியாகி பள்ளி செல்லாமல் அவனைத் தேடியலைந்தேன்.

அவன் எங்கெங்கு செல்வான் என்று தெரியும்.  ஒவ்வொரு இடமாகத் தேடினேன்.  அவனின் தனிப்பட்ட நண்பர்களை விசாரித்தேன்.  முக்கால் நாள் செலவழிந்திருந்தபோது அகப்பட்டு விட்டான்.  அவனே வீடு திரும்பும் எண்ணத்தில் இருந்ததால்,  அவனைக் கொண்டு விட்டு வந்து விட்டேன்! 

"இனிமேல் ஏதாவது ஆச்சுன்னா (அதாவது இவன் மறுபடி ஓடினான்னா என்று அர்த்தம்!) நான் பொறுப்பில்லை.  எனக்குத் தெரியாது.  உங்கள் பையனை அவன் எதிர்பார்க்கும்படி வைத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு"  என்று சொல்லி விட்டுத்தான் வந்தேன்.  அப்புறம் கொஞ்ச நாள் எதிரில் அவன் தெரு முனையில் கண்ணில் பட்டால் நான் உடனே பக்கத்து சந்தில் மறைந்து விடுவேன். 

நானும் அவனும் இப்போதெல்லாம் சந்தித்துக் கொள்வதில்லை என்பதை அவன் சகோதர, சகோதரிகள் உணரும்படி செய்தும் விட்டேன்!

அவன் அடுத்த சில நாட்களிலேயே மறுபடி ஓடிப் போனான்.  இந்த முறை எங்கள் இன்னொரு நண்பன் மிரட்டப் பட்டு,  தேடிக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாய் அப்புறம் தெரிந்து கொண்டேன்! 

அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் அவனை வளைக்கும் கலையை நாங்கள் கற்றிருந்தோம்.  இடையில் ஓடிய ஒரு சந்தர்ப்பத்தில் அவன் தனது சைக்கிளை கிடைத்த விலைக்கு விற்று விட்டு சாப்பாட்டுச் செலவுக்கு வழி செய்துகொண்டு மூன்று நாட்களுக்கும் மேலாக எல்லோருக்கும் 'தண்ணி' காட்டினான்!

இந்தமுறை அவன் 'கண்டுபிடிக்கப்பட்ட'தும்,  அவன் அப்பா அவனுக்கு அவன் விற்ற நபரிடமிருந்தே அந்த சைக்கிளை மிரட்டியே திரும்ப வாங்கிக் கொடுத்து விட்டார்.
அப்புறம் நீண்ட நாட்கள் அவன் வீட்டை விட்டு ஓட முடியாதபடி அவனுக்கு அவன் வீட்டாரிடமிருந்து காவல் பலமாயிருந்தது.  அதுவே அவனை இன்னும் விரக்தியடைய வைத்திருந்தது.  போதாக்குறைக்கு அவன் 'கண்' வைத்திருந்த அவன் தூரத்து உறவுப் பெண்ணொருத்தி வீட்டுக்கு வந்திருந்தபோது அவளெதிரில் இவன் பெல்ட்டால் விளாரப்பட்டது இவன் மனதை திப்பிலி ஆயிரமாய்....  அதாங்க சுக்கு நூறாய் உடைத்திருந்தது!


இதெல்லாம்தான் அவன் இந்த முடிவை எடுத்ததற்குக் காரணம்.
                                                                                                                                        [ தொடரும் ]
இதன் தொடர்ச்சி இங்கே!