திங்கள், 4 பிப்ரவரி, 2013

கருடா பூந்தி!


               
நம்ம நெற்றியில் நிஜமாகவே எழுதித்தான் ஒட்டியிருக்குமோ ?
           
அம்மா சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.  நம்மைப் பற்றி நம்மை விட நிறைய தெரிந்து வைத்திருப்பாள்.
                 
இரண்டு ரூபாய் நோட்டு ஒன்று கொடுத்து, 'அரை சேர் காராபூந்தி வாங்கி வா' என்றாள்,  ஒரு நாள்.  சுப்பராயன் ஸ்டோருக்கு அடுத்த சேட்டுக் கடையில் பண்டமும் புதிதாக நன்றாக இருப்பதுடன், கையிலும் கொஞ்சம் தூள் பக்கோடா அல்லது உதிர்ந்த மைசூர்ப் பாகு இப்படி ஏதாவது கொசுறு கொடுப்பார்கள். [அடுத்த முறை கடலூர் செல்லும் பொழுது இந்தக் கடைகள் எல்லாம் பாடலி நகைக்கடைக்கு எதிரே இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.]  
              
கடை வீதியில் இரண்டு மூன்று படி உயரமாக ஏறிப் போய், வாங்கிக் கொண்டு,  மீதி ஒரு ரூபாயை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு பின்னர் கொஞ்சம் தூள் பக்கோடாவுடன் படி இறங்கினேன்,  கவனம் பக்கோடாவை சிதறாமல் எப்படி வாயில் போட்டுக் கொள்வது என்பதில் இருக்கும் பொழுது, யாரோ இடது தோளில் ஒரு தட்டு தட்டி விட்டு கையில் இருந்த தாமரை /  புரசை இல்லை பொட்டலத்தை பறித்துப் போய் விட்டனர்.
    
ஒரு முதியவர், 'என்ன கண்ணா, கருடன் கொத்திக்கிட்டு போயிடுச்சா?' என்று அக்கறையுடன் விசாரிக்கத் துவங்க, இன்னொருவர் [வெறும் குரல் மட்டும் தான் நினைவு வருகிறது.  பொட்டலம் போன துக்கத்தில் அக்கம் பக்கம் பார்க்க முனைந்தால் நம்மை எல்லோரும் ஏமாளி என்று சொல்வார்களோ என்ற எண்ணம் வேறு படுத்தியது]  'கருடன் எல்லாம் அப்படி செய்யாது; ஒரு கழுகு தான் இந்தப் பக்கம் அடிக்கடி வட்டம் போட்டுக் கொண்டிருந்தது' என்றார்   எனக்கு ஏனோ ஆழ்வார்க்கடியான் நினைவுக்கு வந்தது - கல்கியில் பொன்னியின் செல்வன் தொடராக வந்து கொண்டிருந்த நேரம்.
    
அம்மாவிடம் போய் சொல்லும் பொழுது இதுவரை வராத ஆத்திரமும் அழுகையுமாக போட்டிபோட்டுக் கொண்டு வந்து, தொண்டையை அடைத்ததில் சப்தமே வரவில்லை.  எதுவும் சொல்ல முடியவில்லை.  அதற்குள் அம்மாவின் கழுகுப் பார்வை கையில் இருந்த இரண்டு கோடுகளைக் கவனித்து " என்னடா கழுகு கொத்திண்டு போய் விட்டதா?" என்று கேட்டதுடன், "சரி பாக்கி ரூபாய் வச்சிருக்கியா?  போய் நடை சிரமம் பார்க்காமல் வாங்கி வந்துடு " என்றதுடன் கையில் ஒரு மஞ்சள் பையையும் (ஆம் - எல் ஜி மிஸ்கீ பெருங்காயம் என்று போட்டிருக்குமே அதே தான்) கொடுத்தாள்.
      
இந்த முறை கடைக்காரர் - நம் சரித்திரம் தெரிந்ததனால்  - காராபூந்தி இருந்த தட்டு சற்று நன்றாகவே கீழே போகும் படி நிறுத்துக் கொடுத்து, ஜாக்கிரதையாய் எடுத்துப் போ தம்பி" என்றார். இப்போது தான் காராபூந்தி ஜாக்கிரதையாய் மஞ்சள் பையில் வைத்து விட்டோமே என்று வலது கை தூள் பக்கோடாவை வாயில் போட்டுக் கொள்ள முயன்ற பொழுது வலது கையில் + வலது கன்னத்தில் ஒரு பெரிய அறை.  கையில் இருந்த பக்கோடா பாதி வாயிலும் பாதி ரோட்டிலும் விழ ...... வேறு என்ன மீண்டும் அழத்தான் தோன்றியது.  
    
முதலில் கேட்டிருந்த இரண்டாம் குரல் இப்பொழுது பேசியது "என்னவோ கருடன் வந்து அடித்துப் போயிற்று என்று சொன்னாயே, சரியாகக் கவனித்தாயா? " என்று நம் முதலாமவரைப் பார்த்து கேட்டிருக்க வேண்டும். அவர் " ஓ, பார்த்தேனே, கருடனும் இல்லை, கழுகும் இல்லை - காக்காய்!"  என சொன்னார்! இப்பொழுது எனக்கு மீண்டும் அழுகை பீறிட்டது.  ஒரு காக்காயிடம் ஏமாந்து போனோமே என்ற ஆற்றாமை தாங்கவில்லை.
     
ஆனால் அம்மாவிடம் போய் சொன்ன பொழுது சிரிப்பு தான் வந்தது.
   
ஆனால் கூடவே ஒரு சந்தேகமும் வர, தலை தெறிக்க ஓடிப் போய் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டேன் - 'ஏ - சோ' என்று எந்த ஓரத்திலாவது எழுதியிருக்கிறதா என்று!             
                              

18 கருத்துகள்:

  1. சே... இப்படி ஆகி விட்டதே... காராபூந்தி தீரும் வரை இதே தானா...?

    பதிலளிநீக்கு
  2. என் தங்கை வீட்டில் சாதம் பருப்பு காய்கறி என்று காகத்துக்குப் படைக்கிறார்கள். கறியை முதலில் பிரித்துத் தின்னும் காகங்களை இப்போது தான் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. குரோம்பேட்டையில் காலையில் நடந்து கொண்டிருந்தபோது காக்கைக்கு சாதம் போட வந்த ஒரு பெண்மணியைக் கண்டவுடன் அடித்துப் பிடித்து அவரை நோக்கிப் பறந்த காக்கைகளைப் பார்த்து நான் பயந்தே போனேன். அந்தப் பெண்மணியும் கரண்டி சாதத்தை தூக்கி எறிந்து எடுத்தார் ஓட்டம். கூடவே 'சனியங்க' என்று அலறிக்கொண்டு போனார். முன்பெல்லாம் காக்கைக்கு சாதம் போடும் பொழுது 'கா கா' என்று கூவி வைத்தது நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  4. ஏ.சோ = ஏமாந்த சோணகிரி.

    அது கன்னத்தில இல்லைங்க, தலைல எழுதியிருக்கும்!

    பதிலளிநீக்கு
  5. அம்மா சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நம்மைப் பற்றி நம்மை விட நிறைய தெரிந்து வைத்திருப்பாள்.//
    நீங்கள் சொல்வது சரிதான். நம்மை நம் அம்மா நன்கு தெரிந்து வைத்து இருப்பார்கள்.
    மஞ்சள் பை, கல்கியின் ஆழவார்க்கடியான் நினைவு அருமை.




    பதிலளிநீக்கு
  6. கடைசில காக்காவா அது? கருடனா இருந்திருந்தா கூட கொஞ்சம் கௌரவமா இருந்திருக்கும்ல..!

    பதிலளிநீக்கு
  7. அடடா.... காராபூந்தி படம் விஜயவாடா நினைவுகளைக் கொண்டு வந்தது! 50 பைசாவிற்கு ஒரு பொட்டலத்தில் நிறைய மடித்துத் தருவார் கடைக்காரர். காராபூந்தி, மிக்சர், காராசேவ் என வகை வகையாக ஐம்பது ஐமபது பைசாவிற்கு வாங்கி வருவோம் நானும் பெரியப்பாவும்!

    கடைசில காக்காய் இப்படி பண்ணிடுச்சே! நல்ல வேளை பக்கோடாவை எடுத்துட்டுப் போகல!

    பதிலளிநீக்கு
  8. காக்காய் கடிக்காமல் அடித்திருக்கிறதே..

    பதிலளிநீக்கு
  9. சில நேரங்களில் காக்காய் இப்படி துரத்திய அனுபவம் எங்கள் மாடியிலும் நிகழ்ந்தது.

    பதிலளிநீக்கு
  10. அதுக்கும் பட்சணம்ன்னா ரொம்பப் பிடிக்கும் போலிருக்கு :-)

    பதிலளிநீக்கு
  11. அட பாவமே!! அன்னைக்கு காரபூந்தி சாப்பிட்டீங்களா??

    பதிலளிநீக்கு
  12. / கவனம் பக்கோடாவை சிதறாமல் எப்படி வாயில் போட்டுக் கொள்வது என்பதில் இருக்கும் பொழுது,/

    தப்பு உங்கள் மேல் இல்லவே இல்லை. காக்கா தட்டிவிடுமென எதிர்பார்த்தீர்களா என்ன? அனுபவங்களே வாழ்க்கைப் பாடங்களாகின்றன:)! சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. அப்ப ரெண்டாவது மு(அ)றையில் காராபூந்திக்கு ஆபத்திலேதானே? ஆக, ரெண்டு தடவையும் தூள் பகோடா கிடைக்கலைன்னுதான் வருத்தமா!! :-)))

    பதிலளிநீக்கு
  14. காராபூந்தி அனுபவம் அருமை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  15. அப்போதிலிருந்தே உங்களுக்கு கருணை உள்ளம்.
    காக்கா கருடன் எல்லாம் சாப்பிடணும் என்றே தூக்கிக் ஒண்டு வைத்துருக்கிறீர்கள்.:)
    ஏமாந்த பையனுக்கு என் அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  16. //கல்கியில் பொன்னியின் செல்வன் தொடராக வந்து கொண்டிருந்த நேரம்.//

    எத்தனாம் முறையாக வந்தப்போ?? அறுபதுகளின் கடைசியில் இரண்டாம் முறை(?)யாக வந்தப்போவா?

    உங்க படத்திலே இது கருடன். இன்னிக்கு வேறொருத்தர் போட்டிருந்ததில் சிறகுகள் கறுப்பாக இருந்தது. பருந்து போலிருக்கு அது!

    கடைசியில் காக்காய் கிட்டே ஏமாந்தீங்களா? ஹிஹிஹி, அது சரி, பக்கோடாவை முதல்லேயே கொஞ்சம் காக்காய்க்குக் கொடுத்திருக்கலாம் இல்ல? எங்க வீட்டில் காக்காய்க்குச் சாதம் வைத்தால் அணிலும், தவிட்டுக்க் குருவிகளும் தான் வந்து சாப்பிடுகின்றன. அம்பத்தூரில் தான் சரியாப் பத்து மணி ஆச்சுன்னா தோய்க்கிற கல்லில் வந்து உட்கார்ந்து கொண்டு கத்திக் கொண்டே இருக்கும். :)))))) இங்கே ஈ,காக்கை வருவதில்லை.

    பதிலளிநீக்கு
  17. இந்தப் பதிவு எனக்கு இன்னிக்குத் தான் அப்டேட் ஆகி இருக்கு. ஏன் இப்படி?

    பதிலளிநீக்கு
  18. காரா பூந்தி போச்சே!
    முதலிலேயே மஞ்சள் பை கொண்டு போயிருக்கலாம் இல்லையா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!