வியாழன், 17 பிப்ரவரி, 2022

எக்ஸ்கியூஸ்மீ... எட்டுப்புள்ளி கோல நோட்டு இருக்கா?

 'எட்டு எட்டா மனுஷா வாழ்வை பிரிச்சுக்கோ' என்று ரஜினிக்கு பாட்டு எழுதினார்கள்.   இப்போ 'அஞ்சு அஞ்சா இங்கிலிஷ் வார்தையைப் பிடிச்சுக்கோ' என்று விளையாட்டாக கொடுத்திருக்கிறார்கள்.  அடிக்ஷன் ஆகும் அளவு அல்ல, ஆனால் அடிக்ஷன் எனும் அளவில் இருக்கும் விளையாட்டு!!  தினசரி தோற்கிறோமோ, ஜெயிக்கிறோமோ இதை விளையாடிவிட தோன்றும்.

ஜோஷ் வர்டில் என்பவர் கண்டுபிடித்த விளையாட்டு, கிட்டத்தட்ட அவர் பெயர் வருமாறே அழைக்கப்படுகிறது!  ஓரளவு இதன் ஒரிஜினல் வடிவம் 2013 லேயே தொடங்கப்பட்டுவிட, அதை மேம்படுத்தி, தானும் தன் நண்பரும் விளையாடும் வகையில் அமைத்துக்கொண்டார் ஜோஷ்.  அக்டோபர் 2021 ல் இதை பொதுவில் வைத்தார் ஜோஷ்.  அது சட்டென பிரபலமாகி ட்விட்டரிலும் மற்ற மீடியாக்களில் பரவலாக அதில் ஷேர் செய்யும் வசதிகளை அமைத்து, இன்னும் சில வசதிகளை அமைத்தார்.  நியூஜிலாந்தில் உள்ள ஒரு நண்பர் இதைக் கண்டுபிடித்து ஜோஷ் அமைத்திருந்த எமோஜிக்களுடன் இணையத்தில் இதை ஷேர் செய்ய, சட்டென ஜனவரிக்குள் மூன்று லட்சம் பேர் விளையாடுகிறார்கள் என்று தெரிந்தது.




ஜனவரியில் அதை நியூயார்க் டைம்ஸ் இதை வாங்கிவிட, பிப்ரவரியில் அதை அதன் பெயரிலேயே பொதுவில் விளையாட வைத்திருக்கிறது.  இப்போது அது Wordle- The New York Times என்றுதான் கூகுளில் காட்டுகிறது.  ஒவ்வொருநாளும் கூகுளிலிருந்துதான் அதைத் திறக்கவேண்டும்.  இதிலேயே அன்லிமிட்டட் ஆப்ஷனும் இருக்கிறது.  அதைத் திறப்பதில்லை.  அது போரடித்து விடும்.

கேஜிஜி விளையாடும் பகிரும் ரிஸல்ட்களில் ஒரு ஸ்டார் முத்திரை இருக்கும்.  அவர் செட்டிங்ஸில் சென்று hardmode போட்டு விளையாடுகிறார்.  நானெல்லாம் எளிமையான கேம்தான்!

முன்னால் எல்லாம் ஒரு விளையாட்டு நம்மூரில் உண்டு.  நான் ஒரு பொருளை நினைத்துக் கொள்கிறேன். மூன்று கேள்வியில் அதைக் கண்டுபிடிக்கவேண்டும் என்பது போல...  சுவாரஸ்யமாகவே இருக்கும்.  நினைவிருக்கிறதா?  அந்த கான்செப்ட்.  ஆனால் சற்றே வித்தியாசமாக.

அதுபோல இந்த விளையாட்டு.  முப்பது கட்டங்களில் மூளைக்கு வேலை!  மூளைக்கு வேலை என்று சொன்னாலும் தேவை அதிருஷ்டம்.  ஆயிரக்கணக்கில் இருக்கும் ஐந்தெழுத்து ஆங்கில வார்த்தைகளில் அன்று அவர்கள் தெரிவு செய்திருக்கும் வார்தையைக் கண்டு பிடிக்கும் விளையாட்டு.

கேஜிஜி காலை மூன்று மணிக்குள் அதைப் போட்டு விட்டால்தான் அவருக்கு நிம்மதி! அவரிடமிருந்து ரிசல்ட் காலை மூன்று மணிக்கு க்ரூப்பில் வெளியாகி விடும்!  இது பற்றி அவரிடம் கேட்டபோது அவர் சொன்னதாவது...


நான் மதியம் பனிரெண்டு மணிக்கு மேல்தான் விட்டத்தை வெறித்துக்கொண்டு முயற்சிப்பேன்.

பல நாட்களாக க்ரூப்பில் இது வந்துகொண்டிருக்க, ஒருநாள் அலுவலகத்தில் இதைப்பற்றி பேச்சு வந்தபோது 'அப்படியென்றால் என்ன' என்று கேட்டார்கள் இரண்டு சகாக்கள்.  சொன்னதும் அவர்கள் அன்றைய விடையை இரண்டு நிமிடங்களில் கண்டு பிடித்து அசத்தினார்கள்.  அன்றுதான் எனக்கும் இதை முயன்று பார்க்க ஆவல் தோன்றியது.  

விவேக் ஜோக் ஒன்று நினைவிருக்கிறதா?  வீடியோ தேடினால் கிடைக்கவில்லை.  விவேக் குரலில் டிக்டாக் வீடியோதான் இருக்கிறது.

மிகவும் யோசித்து பயங்கரமாக முயற்சிப்போம்.  சட்டென 'எட்டு புள்ளி கோலநோட்டாக' முடிந்துவிடும்!  மாற்று அனுபவமும் அவ்வப்போது இருக்கும்.  

இரண்டு ஒரே எழுத்தைப் போட்டு வீண் செய்யாமல் வார்த்தை யோசித்து, அப்புறம் இரண்டு வவ்வால்.. சே...  வவல் மூன்று வவல் என்று வார்த்தைகளை பொறுக்கிச் சேர்த்து ஆரம்ப வார்த்தையை அமைப்பேன்.  முதலில் FRANK, CRANK, BLANK என்று மூன்று வார்த்தைகளில்தான் ஆரம்பிப்பேன்.  உதவியாய் இருந்தது.  அப்புறம்தான் இரண்டு வவல் முயற்சியைத் தொடங்கினேன்.  அது சற்று சிரமப்படுத்த, மறுபடி என் வழக்கத்துக்கு வந்து விட்டேன்!  

மஞ்சளை மாற்றிப்போட்டு, பச்சையை நிலைநிறுத்தி  இன்றைய வார்த்தை மிகக்கடினமான இருக்கும் என்று தேடினால் சாதாரண வார்த்தை சட்டென அமைந்துவிடும்.  இரண்டு நாள் அனுபவத்துக்குப் பின் மூன்றாவது நாள் 'இதோ வந்துவிடும், இதெல்லாம் தூசுப்பா' என்று ஆரம்பித்தால் ஒன்றுமில்லாத வார்த்தை நம் ஆறு சான்ஸையும் தட்டிப் பறிக்க காத்திருக்கும்.  

உதாரணமாக கடைசி மூன்று எழுத்துகள் NIC.  இதை மூன்றாவது வாய்ப்பில் கிடைக்கப் பெற்றேன்.  அடுத்த வாய்ப்பில் PANIC என்று வார்த்தை கோர்த்தேன்.  புஸ்.....

வாலன்டைன்ஸ் டே என்பதால் ஆரம்பித்த வார்த்தை  LOVER.  எல்லா எழுதும் கருப்பு என்றாலும் அதிலிருந்த எழுத்துகள் எலிமினேட் ஆகிவிட்டதா, எனவே மெதுவாய் யோசித்து அந்த எழுத்துகளை விடுத்து ஐந்தாவதில் சரியான வார்தையைக் கண்டுபிடித்தேன்.  

விளையாட்டு எப்படி என்பதைச் சொல்லவேண்டும் அல்லவா?  எல்லோரும் விளையாடிக் கொண்டுதான் இருப்பீர்கள்.  தப்பித்தவறி ஓரிருவர் இருந்தால் அவர்களுக்காக...!


நாம் ஆரம்பிக்கும் ஐந்தெழுத்து வார்த்தையில் அன்றைய வார்த்தைக்கான எழுத்து அதே இடத்தில இருந்தால் பச்சை நிறமாகக் காட்டும்.  அந்த எழுத்து இருக்கிறது, ஆனால் வேறிடத்தில் என்றால் மஞ்சளாகக் காட்டும்.  மாற்றிப்போட்டு முயற்சித்து விளையாட வேண்டும்.  கருப்பில் வந்த எழுத்துகளை விட்டுவிட வேண்டும்.  மிச்சமிருக்கும் எழுத்துகளை வைத்து வார்தையைக் கண்டுபிடிக்க வேண்டும்.  கீ போர்டிலும் நாம் உபயோகித்த எழுத்துகள், பச்சை எது, மஞ்சள் எது என்று காட்டும்.  பச்சையை அதன் இடத்திலேயே வைத்து, மஞ்சளை இடம் மாற்றிப்போட்டு யோசித்து, கருப்பு எழுத்துகளை கைவிட்டு மாற்றி மாற்றி யோசித்து  கண்டுபிடிக்கவேண்டும்.

முதல் முயற்சியிலோ, இரண்டாவது முயற்சியிலோ விடை வந்து விட்டால் பொதுவில் பகிர்ந்து விடாதீர்கள்.  உலகமே உங்களை சந்தேகப்படும்.  பார்ப்பவர்கள் சட்டென நம்ப மாட்டார்கள்!  ஆனால் அப்படிக் கேட்டு விளையாடுவதில் என்ன பயன்?  யாரும் அப்படி விளையாட மாட்டார்கள்.  ஒரு நாளைக்கு ஒரு வார்த்தைதான்.  முடிந்துவிட்டது என்றால் அடுத்த வார்த்தை மறுநாள்தான்.  அங்கேயே கவுண்ட் டவுன் வேறு வரும்!

முதல் முயற்சியிலேயே விடை வந்து விட்டால் ஜீனியஸ் என்று சொல்லும்.  இது ரொம்ப ரேர்.  நிறைய அதிர்ஷ்டமும், உடம்பு முழுக்க மச்சமும் வேண்டும்!!  இரண்டாவதில் விடை வந்தால் ஸ்ப்ளெண்டிட் என்று வரும்.  மூன்றாவது நான்காவதெற்கெல்லாம் என்ன வார்த்தை வரும் என்று பார்த்திருக்கிறேன்.  இப்போது நினைவில்லை.  இதை விளையாடும் மற்றவர்கள் இந்த விவரம் சொல்லலாம்!  பெரும்பாலும் நான்காவது அல்லது ஐந்தாவது முயற்சியில் எனக்கு அதிருஷ்டம் அடித்துக் கொண்டிருக்கிறது.  நேற்றைக்கு முதல்நாள் இரண்டாவது சான்ஸில் விடை கிடைத்தது.  Robin என்கிற வார்த்தையும் அதற்குமுன் ஒரு வார்த்தையும் மிகவும் படுத்தி விட்டது.  இரண்டு வார்த்தைகள் ஆறாவது வாய்ப்பில்தான் பெற்றேன்.  நேற்று அர்த்தம் தெரியாமலேயே விடையைக் கண்டுபிடித்தேன்!


இரண்டு முயற்சியில் மூன்று முயற்சியில் கண்டுபிடித்து விட்டார்கள் என்று வந்தால் அவர்கள் ஷேர் செய்யும் மஞ்சள் பச்சை கட்டங்களை வைத்து அவர்கள் ஆரம்ப வார்த்தையாக எதைப் போட்டிருப்பார்கள் என்று ஓரிருமுறை கெஸ் செய்து பார்த்திருக்கிறேன். சரியாகவே இருக்கும்.  இது நமக்கு விடை தெரிந்திருந்தால் மட்டும் சாத்தியம்.

=================================================================================================== 

பாலுமகேந்திரா மறைந்த சமயம் ஹிந்து(தமிழ்)வில் வந்த கட்டுரை ஒன்று.  


செயற்கை வசனங்கள், குழப்ப வார்த்தைகள் இன்றி கமலஹாசன் நன்றாக எழுதி இருக்கிறார். (ஆங்கிலத்திலிருந்து சங்கர் மொழி பெயர்த்திருக்கிறார்)
மனதிலிருந்து எழுதி இருக்கிறார் 'தி இந்து'வில் பாலு மகேந்திரா பற்றி...
கவலைப்படாதீர்கள் பாலு, உங்கள் படைப்புகள் வாழும்- கமல்ஹாசன்
நமது சினிமாவில் எது நல்ல அம்சம், எது அப்படியல்ல என்பதைத் தெரிந்து வைத்திருந்ததில்தான் பாலுமகேந்திராவின் மேதமை அடங்கியிருந்தது.
புத்திசாலிகள் நிறைந்த ஊரில், அறிவும் ஞானமும் பெற்ற மனிதர் அதிகப் பயனுள்ளவராக இருப்பார். பாலுமகேந்திரா படித்தவர். அதனாலேயே எங்களுக்குச் சினிமா அறிவு இருக்க வில்லை என்று சொல்லிவிட முடியாது. புதிய ஊடகமாக சினிமா வடிவம் இருந்ததால், நாடகம் மற்றும் இலக்கியத்திலிருந்து பெற்றிருந்த முன் அனுபவத்தை சினிமா என்ற முற்றிலுமான புதிய ஊடகத்தில் முயற்சித்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்தப் புதிய ஊடகத்துக்கு வேறு வகையான கவர்ச்சி இருந்தது.
சினிமாவின் இலக்கணத்தை ஒவ்வொருவரும் அவரவர் துணிகரத்தில், இழப்பில்தான் கற்றுக்கொண்டார்கள் - சில நேரங்களில் மற்றவரின் இழப்பிலும். தமிழ் சினிமாவில் சாதனையாளர்களாக அப்போது இருந்தவர்கள் அனைவரும், கடும் உழைப்பின் வழியாகவே தங் களை உருவாக்கிக்கொண்டவர்கள். அப்போது குருகுலம் போன்ற பயிற்சி முறை இருந்தது. நாங்களும் அதை பின்பற்றினோம்.
பாலுவும் அவரது நண்பர்களும் புனே பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பள்ளியில் படித்து வந்தவர்கள். இந்திய சினிமா புதிய காற்றைச் சுவாசித்தது மட்டுமின்றி, அந்தக் காற்று இந்தியச் சினிமாவையே மாற்றியது. அப்போ திருந்த சினிமா தொழில்துறை தங்களுக்குத் தகுதியானதல்ல என்று பாலுவின் தலைமுறை மாண வர்களில் சிலர் நினைத்தார்கள். ஏனெனில், அவர்கள் சர்வதேசத் தரத்திற்குப் பயிற்சிபெற்றவர்கள். அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டார்கள்.
அவர்களில் ஒருவர் அல்ல பாலுமகேந்திரா. அவருக்குத் தமிழராக இருப்பதில் பெருமை இருந்தது. தமிழ் சினிமாவைக் கேலி செய்யாமல், தனது நன்றியறிதலைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
நன்கு படித்த ஒரு மனிதன், கிராமத் துக்குத் திரும்புவதை போல அவர் திரும்பினார். அவருக்கு எந்த அம்சம் வலுவானது, எது தவறானது என்பது முழுமையாகத் தெரிந்திருந்தது. அவரது கணிப்பு சரியாகவும் இருந்தது. அப்படித் தான் நாங்கள் நண்பர்கள் ஆனோம்.
வித்தியாசமான பாணி
நாங்கள் பிரபலமாக ஆவதற்கு முன்பே, மிகுந்த தன்னம்பிக்கை உள்ள இளைஞனாக அவரைப் பார்த்து ஆச்சரியம் கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. "யார் இந்த ஆள்? இவரது எழுத்து நடையே வித்தியாசமாக உள்ளது" என்று கேட்டிருக்கிறேன். அவர் சம்பிரதாயமான முறையில் வேலை செய்யவில்லை.
ஷாட்களுக்கு அவர் ஒளியூட்டும் முறை எனக்கு மிகவும் பிடித்தமானது. புகழ்பெற்ற இயக்குநர் ராமு காரியத்துடன் பணியாற்றப் போகிறார் என்று என்னிடம் கூறப்பட்டது. அத்துடன் சேதுமாதவனோடு சேர்ந்து பணிபுரியலாம் என்றும் சொன்னார்கள்.
இயக்குனர் சுகதேவ் அலுவாலியா போன்றவர்கள், அவரது செட்டுக்கு வருவதைப் பார்த்து நான் ஆச்சரியமடைந் திருக்கிறேன். சுகதேவ் எனக்கு ஹீரோவைப் போன்றவர். அவரது விளம்பரப் படங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். தனிப் பாணி கொண்டவை அவை. பாலுவுக்கு எப்படியான சகாக்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். நானும் அவரது நண்பனாக மாறிவிட்டேன்.
பாலு முதலில் ஒரு படத்தை இயக்க விரும்பியபோது, நான்தான் ஹீரோ என்று சொன்னார். வெறும் நட்பார்ந்த உறுதிமொழியாக அதைச் சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால், கோகிலா படம் எடுத்தபோது அவர் வார்த்தையை நிரூபித்தார்.
நாங்கள் எல்லாம் பேசிக்கொண்டிருந்த கனவு நனவானது. நாங்கள் அணியாகச் சேர்ந்து வேலையும் செய்தோம். நான் நடித்த பல படங்களில் அவர் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார்.
நாங்கள் தொடர்ந்து சந்தித்தோம். சினிமா பற்றிப் பேசினோம். கிசுகிசுவாகக்கூட ஒரு படம் ஏன் கிளாசிக்காக ஆகவில்லை என்பதைத்தான் பேசுவோம். தனிப்பட்ட நபர்களைப் பற்றிப் பேசியதே இல்லை.
நிறைய நினைவுகள்
அவருடன் சேர்ந்து பல நினைவுகள் எனக்கு உண்டு. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி விழும் இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் நீந்திக் குளிப்போம். அருவியின் குறுக்காக யார் நீச்சலடித்துச் செல்ல முடியும் என்று பந்தயம் வைப்போம். நீரோட்டம் உங்களைக் கடுமையாக இழுக்கும். அந்த நூறு மீட்டரை வேகமாகக் கடக்க வேண்டும். நாங்கள் கடந்தோம்.
கேமராக்கள் குறித்தும் நாங்கள் நிறைய பேசியுள்ளோம். அவருக்கு எல்லாவற்றைப் பற்றியும் தெரியும். அப்போது தமிழகத்தில் ஒரே மாதிரியான திரையிடல் முறை இல்லாததால், ஒரு ஒளிப்பதிவாளரின் ப்ரேமிங் எந்த நேரத்திலும் மோசமாகிவிடும் வாய்ப்புண்டு. என்ன ப்ரேமை படத்தில் வைக்கிறோமோ அது தியேட்டரில் இருக்காது. ஒவ்வொரு திரையரங்கிலும் ஒவ்வொரு விதமான திரையிடல் இருந்தது.
உலகளாவிய அளவிலான தரநிலை அப் போது இல்லை. ஒரு அங்குல அளவுள்ள பொருள், திரையில் பெரிதாகத் தெரியும். நெருக்கமான ப்ரேமில், உதடுகளும், மூக்கின் முனையும் வைக்கப்பட்டிருந்தால், கிராமத்துத் திரையரங்கில் நம்மால் உதடுகளைப் பார்க்க முடியாது. அல்லது பாதி உதடுகள் தெரியும்.
பாலுமகேந்திரா அந்தத் திரையிடல் குறைபாடுகளைச் சின்ன ஒரு உத்தியைப் பயன்படுத்திச் சரிசெய்தார். அதை யாரும் செய்வதற்குத் துணியவில்லை. கேமராவின் செவ்வக ஆடியில் ஒரு தடுப்பை (மாஸ்க்கை) பொருத்தினார். கேமராவுக்கு வெளியே உள்ள உலகை அவர் சரிசெய்யாமல், தனது வேலைப் பரப்பைக் குறைத்துக்கொண்டார். அவர் ஏற்படுத்திக்கொண்ட முறையில் தவறே நிகழாது. நீங்கள் அதீதமாகக் குவித்தாலும், கருப்பு ப்ரேம்தான் வரும். அதை அதிகம் சுருக்கவும் முடியாது.
எல்லாரும் பேசிக்கொண்டிருந்தனர். அவர் அதைச் செய்தார். அதனால்தான் அவர் முன்னோடியாக இருந்தார். நாங்கள் சந்திக்கும்போது, உலகச் சினிமா மேதை கள் அனைவரின் படங்களையும் அவர் பார்த் திருந்தார். முக்கியமான திரைப்பட கர்த்தாக் கள் சிலரையும் நேரில் சந்தித்திருந்தார்.
விதிகளை உடைத்தவர்
பாக்ஸ் ஆபீசுக்கும் நல்ல சினிமாவுக்கும் இடையில் முதல் பாலத்தைக் கட்டியவர் பாலுமகேந்திராதான். அவர் எடுத்த மூன்றாம் பிறை வெள்ளி விழா கண்ட படம். தேசிய விருதும் பெற்றது. விருது வாங்கும் படங்கள் ஓடாது என்ற எழுதப்படாத விதியை அவர் உடைத்தார். ஒரு திரைப்பட இயக்குநராக எனது வளர்ச்சியில் பங்குபெற்றவர் அவர்.
ஒரு திரைக் கலைஞனாக எனது வளர்ச்சியில் பாலுமகேந்திராவின் பங்கு முக்கியமானது. எனது வளர்ச்சியில் கே. பாலச்சந்தரின் பங்கு முற்றிலும் மாறுபட்டது, அது தனிக்கதை. பாலுமகேந்திராவிடம் இருக்கும் பெரிய புகார் என்னவெனில் அவர் நிறைய படங்களைச் செய்திருக்கலாம். குறைந்த பட்சம் கூடுதலாக 20 படங்கள். நிறைய படங்களில் ஒளிப்பதிவாளராகவாவது பணியாற்றியிருக்கலாம்.
மூன்றாம் பிறை கதையை முதலில் அவர் என்னிடம் சொன்னபோது, 20 நிமிடம்தான் கேட்டேன். ஒப்புக்கொண்டேன். கிளைமாக்ஸை மட்டும் சரி செய்ய வேண்டும் என்று கூறினேன். மனம் உடைந்த மனிதன் என்னவெல்லாம் செய்வான் என்பதை அதிகபட்சமாக நிகழ்த்து வதற்கு முயற்சித்தோம். மண்ணில் புரண்டு, மழையில் உருளும் அந்தக் காட்சி மறக்க முடியாதது. மூன்றாம் பிறையின் இந்தி வடிவமான சத்மாவின் கிளைமாக்ஸில் மழைக்காகக் காத்திருந்தோம். சரியாக மழையும் பெய்தது. பாலு அதை மந்திரத் தருணம் என்று சொன்னார்.
பாலுவைக் கொண்டாடுவோம்
நாங்கள் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருந் தோம். அவரது மரணத்தால் நான் நிலை குலைந்து போய்விடவில்லை. மரணம் நம் எல்லாருக்கும் வரும் என்று எனக்குத் தெரியும்.
அவர் நிறைய படங்களைச் செய்திருக்கலாம் என்பது மட்டுமே எனது ஒரே குறை. ஆனால், அவரது மாணவர்கள் அதைப் பூர்த்தி செய்துவிட்டார்கள். பாலுமகேந்திராவைப் போன்ற மனிதரை இழப்பதில் உள்ள சோகமான விஷயத்தை, அவருடன் எனக்கு ஏற்பட்ட மகத்தான தருணங்கள் பூர்த்தி செய்யும். அவரது மரணத்துக்காகத் துக்கிப்பதைவிட, அந்தத் தருணங்களைக் கொண்டாட வேண்டும்.
நான் அவரை மரணப் படுக்கையில் பார்த்தி ருந்தாலும், இதைத்தான் சொல்லியிருப்பேன். "கவலைப்படாதீர்கள் பாலு, உங்கள் படைப்புகள் வாழும்."
தி இந்து பிசினஸ் லைன்
தமிழில்: ஷங்கர்

பிப்ரவரி 15 2014

===========================================================================================

மேலே கட்டுரை நீண்டு விட்டதால் கவிதை சிறுத்து விட்டது!!!

மனக்கதவைப் பூட்டிவிட்டு 
வெளியேயே நிற்கிறேன் 
உள்ளே இருக்கும் கேள்விகளுக்கு 
விடை தெரியாமல் 
============================================================================================

ரசனையான புகைப்படம்...

"ஸைட்ல இடம் கிடைச்சா வரிசையை மதிக்காம சும்மா முந்திகிட்டு போயிட்டே இருப்பீர்களா? வயசுக்கு ஒரு மரியாதை வேணாம்? இப்போ போங்க பார்க்கலாம்... பிச்சுப்புடுவேன் பிச்சு..."

===========================================================================================

நேத்து வர்டில் கேம்ல விடையைக் கண்டு பிடிச்சுட்டேன்.. ஆனால் அதற்கு என்ன அர்த்தம்னே தெரியல....

சாம்பு எந்த வேலையைச் செய்தாலும் அதில் ஒரு அ(ன)ர்த்தம் இருக்கும்!

தொடர்கதை தெரியும்... சித்திரத்தொடர் தெரியும்....

இது தொடர் விளம்பரம் போல...!

'ஜோக் எங்கே ஜோக் எங்கே' என்று தேடுபவர்களுக்காக..


ஜெமினி : "மதன் ஜோக் எங்கே.. அது இல்லாமல் எதுவும் ரசிக்கவில்லை என்று ஜீவி ஸார் சொல்வார்... இந்த என் படத்தை அவரிடம் காட்டுங்கள் ரசித்து விட்டு சும்மா இருந்து விடுவார்!"


அவ்ளோதான் இந்த வாரம்...
==================================================================================


"என்னவாம் அந்தப் பெண்ணுக்கு...?"

"இந்த வாரம் அவ்ளோதான் என்றதும் மயங்கி விழுந்துட்டாளாம்.."

114 கருத்துகள்:

  1. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை..

    குறள் நெறி வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வையகம்..   வாங்க துரை செல்வராஜூ ஸார்..   வணக்கம்.

      நீக்கு
  3. ஆறு மணியாகி விட்டது..
    எந்த ஒரு ஆரவாரத்தையும் காணோமே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றைய திருவிழா முடிந்து அனைவரும் களைப்பாக இருப்பார்கள்!

      நீக்கு
    2. ஹிஹிஹி   நேற்றைய கேள்விபதில் திருவிழா!

      நீக்கு
    3. உங்கள் வருகை ஒரு திருக்குறள், வாழ்க வையகம் -- இதோடு முடிந்து விடுகிறது.

      வாழ்க வையகத்தை, ஒரு நாளாவது வையகம் வாழ்க என்று மாற்றியாவது எழுதுவீர்கள் என்று பார்த்தால், ஊஹூம்.... :))

      நீக்கு
  4. //மனக்கதவைப் பூட்டிவிட்டு
    வெளியேயே நிற்கிறேன்
    உள்ளே இருக்கும் கேள்விகளுக்கு
    விடை தெரியாமல்..//

    விடை தெரிந்தால் மட்டும் உள்ளே போய் விடப் போகின்றோமா!?...

    சாவியைக் காணவில்லை என்ற வெளியிலேயே நிற்போம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி... நமக்குத் தேவை காரணம்தான்!

      நீக்கு
    2. அந்தக் காலக் காதல் மன்னன் படம் நன்றாகத்தான் இருக்கிறது.

      துப்பறியும் சாம்பு மிக அற்புதமான படங்கள். தேவன்
      மன வண்ணத்தில் கோபுலுவின் கைவண்ணத்தில் இன்ஸ்பெக்டர் கோபாலனும், சாம்புவும், அந்த வாண்டுப்பயலும்'
      என்றும் நினைவில். நன்றி மா ஸ்ரீராம்.

      நீக்கு
    3. தேவனின் மனவண்ணமும் கோபுலுவின் கைவண்ணமும் ஒரே அலைவரிசையில் இருந்தது விசேஷம், இல்லையா அம்மா?

      நீக்கு
    4. இந்தச் சித்திரத்தொடர் தேவன் மறைந்ததும் ஆனந்த விகடன் வெளியிட்டது. அதற்குச் சில ஆண்டுகள் முன்னர் இது தொடராக வந்தப்போப் படங்கள் ராஜூ! சித்தப்பா வீட்டில் தான் முதல் முதலாக அதைப் படித்தேன். அப்போத்தான் தேவனின் பல புத்தகங்களும் சிஐடி சந்துரு, கல்யாணி, ஜானகி, மைதிலி, மிஸ்டர் வேதாந்தம், லக்ஷ்மி கடாக்ஷம், எனப் பல.

      நீக்கு
    5. இதில் சில புத்தகங்கள் என் கலெக்ஷனில் இருக்கின்றன. முதலில் வந்த தொடர் ராஜாஜி எழுதினாரோ...

      நீக்கு
    6. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ராஜாஜி இப்படி எல்லாம் ஜனரஞ்சகமாக எழுதவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் "குறையொன்றுமில்லை கோவிந்தா!" பாடலை அவர் பிரபலமாக்கினாரே தவிர்த்து எழுதவில்லை என்பார்கள். (அடி கிடைக்குமோ?) மேலே சொன்னவை எல்லாமே தேவனின் புத்தகங்கள். பல என்னிடம் இருந்தன. இப்போது சில பொடிப்பொடியாய். அப்படியும் எடுத்துச் சேகரித்துப் படிப்பேன். மதுரை போனப்போ கோமதி அரசு ஒரு தேவன் புத்தகம் கொடுத்தார். என்னோட ஒரு பிறந்த நாளைக்கு முகநூல் சிநேகிதி லக்ஷ்மி ஶ்ரீராம் தேவன் புத்தகத்தைப் பரிசளித்தார். அதுக்கப்புறமா அவரை ஆளையே பார்க்கவில்லை. :))))))

      நீக்கு
    7. ஓ.. நான் சொன்னது இலக்கிய பக்கம். கதைகள் தேவன் என்று தெரியாதா என்ன எனக்கு? மூன்று வருடங்களுக்கு முன் வல்லிம்மா எனக்கு இரண்டு தேவன் புத்தகங்கள் கொடுத்தார்.

      நீக்கு
    8. குறையொன்றுமில்லை பாடலை ராஜாஜி அவர்கள் எழுதவில்லை என்று சொல்லக்கூடாது. அப்படிச் சொம்னால் அம்தப் பாடலை யார் எழுதினது என்ற
      கேள்விக்கு பதிலும் யெரிஞ்சிருக்கணும்... எங்கே நெல்லையைக் காணோம்?...

      நீக்கு
    9. மீ.ப.சோமசுந்தரம் உதவி செய்ய ராஜாஜி எழுதினார் எனக் கேள்விப் பட்டிருக்கேன். அந்தக் காலத்திலேயே கல்கியில் வந்தது.

      நீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    அனைவரும் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன் அருளவேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை/மதிய வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள். பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும் மன மகிழ்ச்சியும் மேலோங்கப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. சித்ரலேகாவின் படங்களோடு அந்தக் காலத்து ஆனந்தவிகடனின் "சிலம்புச் செல்வம்" ஆஹா! அது ஒரு காலம். மணிமேகலையோ? அல்லது சிலப்பதிகாரத்து மாதவியோ? மாதவியின் பெண் தானே மணிமேகலை. முதலில் சிலம்பு வந்த பின்னர் மணிமேகலையும் வந்தது விகடனில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகக் கண்டு பிடித்தீர்கள் கீதா அக்கா.  அதேதான்.  கி வா ஜகந்நாதன் கைவண்ணத்தில் வந்த தொடர்.

      நீக்கு
    2. சிலம்புச்செல்வம் அல்ல, சித்திரச் சிலம்பு என்று நினைவு.  பின்னர் கன்பர்ம் செய்கிறேன்.

      நீக்கு
    3. இருக்கலாம் ஶ்ரீராம். ஆனால் சிலப்பதிகாரத் தொடர் தான். ஐம்பெரும் காப்பியங்கள் பற்றியும் விகடனில் வந்து கொண்டிருந்தது, முதலில் சிலப்பதிகாரமும், பின்னர் மணிமேகலையும் வந்தது.

      நீக்கு
    4. எனக்கும் பார்த்த ஞாபகமாய் இருக்கிறது.  எங்கள் வீட்டிலேயே இருக்கிறதோ என்று சந்தேகம்.

      நீக்கு
  8. எனக்கு இந்த விளையாட்டைப் பற்றி எ.பி.குழும வாயிலாகத் தெரிந்திருந்தாலும் மேலும் தெரிஞ்சுக்க முயற்சி பண்ணலை. அதோடு நான் தூங்கறதே அபூர்வமா இருக்கிறச்சே இதுக்காக ராத்திரி 3 மணிக்கெல்லாம் முழிச்சுண்டு போட முடியாது. ஆகவே இதை எல்லாம் என்னனே பார்க்கிறதில்லை. :))))))) புத்திசாலிகளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராத்திரி மூன்று மணி என்றெல்லாம் கணக்கு கிடையாது. ஒரு நாளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். சுலபமான வார்த்தை விளையாட்டு. பயனுள்ள பொழுதுபோக்கு.

      நீக்கு
    2. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! அவ்வளவுக்குப் பொறுமை எனக்கு உண்டானு தெரியலை. குறுக்கெழுத்துப் போட்டி முன்னர் இலவசக் கொத்தனார் போட்டுவிட்டு என்னைத் தொந்திரவு பண்ணி விடைகளைக் கண்டுபிடிக்கச் சொல்லுவார். கண்டும் பிடிச்சிருக்கேன். இப்போது அவ்வளவெல்லாம் முடியுமானு தெரியலை. அதிலும் எனக்கு இங்கிலீஷே இழுவை! தமிழ் தடவல். :)))))

      நீக்கு
    3. நான் சொல்ல நினைத்ததை கேஜிஜி சொல்லி விட்டார்.  இது குறுக்கெழுத்து புதிர் மாதிரி இல்லை கீதா அக்கா..   வார்த்தை விளையாட்டு.  உபயோகித்த எழுத்துகளை அதுவே காட்டும்.  அதை மறுபடி உபயோகிக்காமல் மீதமுள்ள எழுத்துகளைக் கொண்டு வார்த்தை அமைக்க வேண்டும்.

      நீக்கு
  9. கமலஹாசன் சரியாச் சொன்னாரோ இல்லையோ, அதை மொழிபெயர்த்தவர் நன்றாகத் தெளிவாக மொழி பெயர்த்துள்ளார். ஆகவே பாராட்டுகள் அவருக்கே.

    பதிலளிநீக்கு
  10. wordle இது வரை செய்ததில்லை. இதை தமிழ்ப்படுத்தி யாரேனும் புதிய விளையாட்டு (தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்கும்) கண்டு பிடித்திருக்கிறார்களா? 

    2014 இல் வெளிவந்த பாலு மஹேந்திரா பற்றிய கட்டுரையை தற்போது வெளியிட்டத்தில் உள்ள நோக்கம் என்ன? 

    பாட்டுக்கு பாட்டு.

    கேள்விகள் இல்லாமல் 
    வாழ்க்கை இல்லை
    ஏன் எனில் 
    வாழ்க்கையே ஒரு பரீட்சை தானே!
    கேள்விகளை ஒதுக்கினால் 
    பாஸாக மாட்டீர்கள். 

    சாம்புவின் கதை புரியவில்லை. பாதிக்கதை தான் என்ன கேஸ்.

    தொடர் சித்திர விளம்பரம் தகழியின் கயறு நாவல் பற்றியதா? 

    ஜெமினி எந்த வயதிலும் கவர்ச்சி கண்ணன் தான்.
     

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழில் இலவசக்கொத்தனார் முகநூலில் தருகிறார். நான் அங்கேயும் போய்ப் பார்த்ததே இல்லை. :) சாம்பு கதை முன்னால் சித்திரத்தொடராக வந்தது. அதிலிருந்து ஒரு சிறு பாகம் இங்கே!

      நீக்கு
    2. வாங்க JC ஸார்...   பாலுமகேந்திரா பற்றிய கமல் கட்டுரை கண்ணில் பட்டது, பகிர்ந்தேன்.  ஒருவேளை அவர் பிப்ரவரி வாக்கில் மறைந்திருக்கலாம்.  வேறு தனி நோக்கமெல்லாம் ஒன்றும் கிடையாது.
      பாட்டுக்குப் பாட்டு அருமை.

      சாம்பு சித்திரக்கதையாக வந்தது என்பதற்கு ஒரு சிறு சாம்பிள்.  அஷ்டே!

      விளம்பரம் குடிசைத்தொழில் பற்றிய அரசு விளம்பரமாகக் கூட இருக்கலாம்.  அதன் முடிவு அந்த பைண்டிங்கில் இல்லை!!!

      நீக்கு
  11. மனக்கதவைப் பூட்டினதுக்கு அப்புறம் உள்ளே கேள்விகள் இருப்பது எப்படித் தெரியும்?????????? இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளே கேள்விகள் வந்து பயமுறுத்தியதால்தான், ஓடி வெளியே வந்து மனக்கதவைப் பூட்டினார்.

      நீக்கு
    2. ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

      நீக்கு
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுக்குக் கொடுத்த பதில் எங்கே? ஓஹோ! என்பதைச் சுருக்கி ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ என்று கொடுத்திருந்தேன்.

      நீக்கு
    4. மறுபடியும் நான் சொல்லவேண்டிய பதிலை கேஜிஜி சொல்லி இருக்கிறார்!  உங்கள் ஓ.. ஓ... வேறு எங்கோ ஓரிடத்தில் வெளியாகி இருக்கிறது!

      நீக்கு
  12. நேற்றையத் திருவிழாவா???? எங்கே யாருக்கு>
    எனக்குத் தெரியாதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே சொல்லி இருக்கிறேனே...  புதன் கேள்வி பதில் திருவிழா, கருத்துகள் திருவிழா..!

      நீக்கு
  13. "என்னவாம் அந்தப் பெண்ணுக்கு...?"''

    எத்தனை அழகான ஓவியம். ஸிம்ஹாவா, சித்ரலேகாவா.

    எந்தக் காவியத்துக்கான படம் இது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சித்ரலேகா! அந்தப் பெண்ணைப் பார்த்தால் மாதவி (கோவலனைப் பிரிந்த பின்னர்) மாதிரியும் இருக்கு. விதவைக்கோலம் என்பதால் மாதவியாகத் தான் இருக்கும். மணிமேகலை மாதிரியும் இருக்கு. இது சிலம்புச் செல்வம் என விகடனில் வந்த ஒருபக்க இலக்கியக்கட்டுரைக்காக வரையப்பட்ட படம்.

      நீக்கு
    2. நன்றி அன்பு கீதாமா.

      மணிமேகலை என்று நினைக்கிறேன். படத்தில் இருப்பது
      மாதவியாகத் தான் இருக்க வேண்டும்.
      நீங்கள் சொன்ன பிறகு தான் சிலம்புச் செல்வம்
      நினைவுக்கு வருகிறது!!!!எத்தனை அழகான ஓவியம்!!!!

      நீக்கு
    3. ஆம். சரியாக ஊகித்து பேசி இருக்கிறீர்கள் இருவரும்!!!

      நீக்கு
  14. ரசனையான புகைப்படம் உண்மையிலேயே ரசனைக்குரியது தான். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா... ஹா...  இல்லை?   அந்த பாட்டியின் முகத்தில் தெரியும் BHAAவம்...

      நீக்கு
  15. விஸ்வரூபமெடுத்த வியாழன்.. !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ...   அது கமல் எடுத்த படம் ஜேவி ஸார்..   காதல் இளவரசன்!  ஒருவேளை காதல் மன்னன், காதல் இளவரசன் இருவரும் இணைந்து இன்றைய பதிவில் இருப்பதால் விஸ்வரூபம் என்கிறீர்களா!

      நீக்கு
    2. இந்த வியாழன் content பிர்மாண்டம் பார்த்துச் சொன்னேன்.

      நீக்கு
    3. நன்றி ஜீவி ஸார்...   வலியுறுத்தி கேட்டு வாங்கி கொள்வது ஒரு சுகம்!!

      நீக்கு
  16. Wordle அருமையான வார்த்தை விளையாட்டு.
    ஒரு நாள் கண்டுபிடித்த பிறகு, பழைய வேர்டில் களையும்
    போட்டுப் பார்க்கிறேன்.

    அறிமுகப் படுத்திய மகனுக்கு நன்றி.
    கௌதமன் ஜி அளவு இரவு எழுந்து போடுவதில்லை. எங்களுக்கு காலை நாலு மணி அளவில் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நீங்களும் அப்பாதுரையும் குழுமத்தில் பகிர்ந்து கொள்வதைப் பார்த்திருக்கேன்.

      நீக்கு
    2. நானும் சமீபமாகத்தான் போடுகிறேன்.  அந்த விளையாட்டு ஆரம்பித்ததே ஐந்து மாதங்கள் தான் ஆகிறது.  பிரபலமானது இந்த ஜனவரியில்தான்!

      நீக்கு
  17. ஜெமினியைக் காட்டி மயக்குகிறீர்களா?

    ஆண்களைக் கண்டு ஆண்களே காமுறுவர்.. அறிவு, ஆற்றல் சம்பந்தப்பட்ட விஷயங்களில்..
    உங்கள் எழுத்தில் எனக்கும் மயக்கம் உண்டு, ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..   நன்றி ஜீவி சர்..   அந்த ஜெமினி படம் கண்ணில் பட்டபோது என்னால் அதைப் பகிராமல் இருக்க முடியவில்லை.  அவர் இருக்கும் அந்த விளம்பரம் கே டி ஆர் வாசனை ஜவ்வாது..  அது என் அப்பாவின் நண்பர் கவிஞர் மா வரதராஜன் அவர்களின் நிறுவனம்.

      நீக்கு
    2. ஆ.வி.யில் சிறுகதைகள் எழுதிய திரு. வரதராஜனா?

      நீக்கு
    3. இல்லை. இவர் பட்டிமன்றக் கவிஞர். எப்போதும் வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பாவில் இருப்பார்.

      நீக்கு
  18. அருமையான எலிவேட்டர் பாட்டி!!!
    ஆஹா என்ன எக்ஸ்ப்ரஷன்:)
    தலைப்பு மிகப் பொருத்தம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இப்போதும் இந்த எலிவேட்டர் என்றால் பயம் தான். அதிலே போகவே மாட்டேன். லிஃப்ட் தான்.

      நீக்கு
    2. ஆமாம் மா. ஒரு மாதிரி ,சின்னதாக இருந்தால் பரவாயில்லை.
      Zurich இல் விழுந்ததிலிருந்து ,
      மிக உயரமான எஸ்கலேட்டர் பயம் தான்.
      இரண்டு வருடங்களாக அதுவும் இல்லை.

      நீக்கு
    3. ஆமாம்.. அருமையான பாட்டி! எலிவேட்டர் பற்றிய ஒரு பதிவு நானு முன்னர் பகிர்ந்திருக்கிறேன். நான், விசு மாமா, என் அக்கா சம்பந்தப்பட்டது!

      நீக்கு
    4. அப்படியா? படிச்ச நினைவு இல்லை.

      நீக்கு
  19. விவேக்கின் குரலை மீண்டும் கேட்க நெகிழ்வு. பாவம் ஏன் மறைந்தார்
    இப்படி!!!

    பதிலளிநீக்கு
  20. மனக் கதவு கவிதை அருமை .
    சிந்தை எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல்
    சில சமயம் பூட்டியே வைக்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில் தெரியும்.  ஆனால் அல்லது அதனால் அந்தக் கேள்விகளை சந்திக்க மனமில்லை!

      நீக்கு
  21. கமல ஹாசன், அருமையாக எழுதி இருக்கிறார். ஆத்மார்த்தமான
    எழுத்து. பாலு மஹேந்த்ராவை அருகில் இருந்து ரசித்தவர்களில் இவரும்,
    எழுத்தாளர் சுகா வும் முக்கியமானவர்கள்.

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  22. கயிற்றின் கதையும்,
    பொடி போட்ட துப்பறியும் நண்பனும் சூப்பர்.
    அனைத்துப் பகுதிகளும் மிகவும் அருமை . நல் வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  23. இந்த வார்த்தை விளையாட்டு எனக்கு முகநூலில் வந்தது. அது என்ன என்று பார்க்கவேயில்லை. விவரங்கள் தந்ததற்கு நன்றி ஸ்ரீராம்.
    துப்பறியும் சாம்பு முழுமையாக பகிர்ந்திருக்கிறார். அடுத்த வாரம் மீதியை போடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அடுத்த வாரம் மீதியை போடுங்கள்.//

      அது பல வாரத் தொடர் ஆச்சே...  அதை எப்படி இங்கே பகிர்வது...   சும்மா சாம்பிள்தான் காட்டினேன்!  நன்றி பானு அக்கா.

      நீக்கு
    2. ஐந்து பாகங்களும் புத்தக வடிவில் அலையன்ஸ் வெளியீட்டில் வந்திருந்தது. அதற்கு முன்னர் மங்கள நூலகம் வெளியீடு. இப்போ வேறே யாரோ வெளியிடுவதாகக் கேள்வி. மொத்தம் ஐம்பது அத்தியாயங்கள்னு நினைக்கிறேன்.

      நீக்கு
  24. நான் இதுவரை இதனுள் சென்றதில்லை.

    பதிலளிநீக்கு
  25. தொடர் சித்திர விளம்பரம் கயறு நாவல் பற்றியதுதான். ஏன் எனில் படங்களில் கேரளத்து வள்ளமும், கேரளத்து பெண்களும் தான் உள்ளனர். இந்த கயறு கொஞ்சம் நாள் DD யில் தொடராக ஒளிபரப்பப்பட்டது.

      Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கயறு என்று நாவல் வந்ததே தெரியாது ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்..  யார் எழுதியது?

      நீக்கு
    2. செம்மீன் புகழ் தகழி சிவசங்கர பிள்ளை எழுதிய  நாவல் தான் கயறு.

      நீக்கு
  26. வார்த்தை விளையாட்டு குறித்து பலரும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். எங்கள் கல்லூரி குழுவிலும் இதே தான் பேச்சு.

    பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் சிறப்பு. கடைசி ஓவியம் அட்டகாசம்.

    பதிலளிநீக்கு
  27. வார்த்தை விளையாட்டு என்று புதுசா அட! வொர்ட் பில்டிங்க் எல்லாம் விளையாடியதுண்டு. இது எப்படி விளையாட வேண்டும்? இது போன்றவை ரொம்பப் பிடிக்கும். குழுக்களில் இல்லாததால் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

    கொஞ்சம் புரிபடவில்லை. நான் கூகுள் சென்று தட்டிப் பார்த்தேன் நியூயார்க் டைம்ஸ் போட்டு வந்தது Wordle என்று வந்தது. டக்கென்று புரியவில்லை. ஆராய்ந்து பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. You can download " wordle new york times" app through google play and play it.

      நீக்கு
    2. விளையாடிப் பார்த்துவிட்டேன் கௌ அண்ணா கணினியில்

      கீதா

      நீக்கு
    3. மொபைலில் விளையாடினால் லெவல் ஷேர் செய்யலாம்.

      நீக்கு
  28. விவேக் குரலில் டிக்டாக் - ஹாஹாஹா...நல்லா இமிட்டேட் செய்கிறார் அந்த இளைஞர்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் இதை நான் இங்கு ஷேர் செய்தது நாம் ஏதோ பயங்கரமாய் வார்த்தைகள் கடுமையாய் யோசித்து தேடிக்கொண்டிருந்தால் வார்த்தை படு ஈசியாக இருக்கும் என்பதைச் சொல்ல.

      நீக்கு
  29. விளையாடிப் பார்த்துவிட்டேன் ஸ்ரீராம். எப்படி விளையாட வேண்டும் என்று புரிந்துவிட்டது

    கீதா

    பதிலளிநீக்கு
  30. ஆமாம் கவுண்டவுன் வருகிறது...அவங்க ஊர் டைம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  31. கமல் கட்டுரை நல்லாவே இருக்கு. புரிந்ததே அதைச் சொல்லணும்!!!!!!!

    கவிதை அட்டகாசம்!

    உள்ள போனா கேள்விகள் பயமுறுத்தும் பதில் சொல்லணும்னா!!!! மனக் கதவை பூட்டினாலும் கேள்விகள் இடித்து தள்ளுமே!! கதவை உடைத்தேனும் திறந்துதானே ஆகணும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  32. புகைப்படம் - பாட்டி சொல்றாப்ல வரிகள் - ஹாஹாஹா...அதானே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  33. நேத்து வர்டில் கேம்ல விடையைக் கண்டு பிடிச்சுட்டேன்.. ஆனால் அதற்கு என்ன அர்த்தம்னே தெரியல....//

    ஹாஹாஹா அந்த பொண்ணு அதான் இம்புட்டு சோகமா..படம் பொருத்தமா போட்டு டைட்டிலும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் வாச்சிக்கறதுதான் அமைஞ்சிக்கறதுதான்!

      நீக்கு
  34. சாம்புவை கதைகள் ரசிக்கும்படி இருக்கும்.

    சீரியலாகக் கூட வந்ததோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  வொய் ஜி மகேந்திரன் செயற்கையான மூக்குடன் நடித்த ஞாபகம்.  நான் பார்க்கவில்லை.  எப்போதுமே மன பிம்பங்கள் திரையில் பார்க்க ஒத்துவராது.

      நீக்கு
    2. சொதப்பி இருப்பார் ஒய்.ஜி. அதுக்கு தேவனின் ஶ்ரீமான் சுதர்சனம் பரவாயில்லை ரகம். காத்தாடி ராமமூர்த்தி சுதர்சனமாக நடித்திருப்பார். வேதாந்தமும் வந்தது. அதுவும் சொதப்பலோ சொதப்பல். வாஷிங்க்டனில் திருமணம் மஹா மட்டம். எல்லாமே டிடி/சென்னைத் தொலைக்காட்சியில் வந்தவை தான்.

      நீக்கு
  35. ஜோக் சிரித்துவிட்டேன்

    கடைசி ஓவியம் செம!! பொருத்தமான வரிகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  36. ஆகா..

    நூறும் நாங்களே..
    நூற்று ஒன்றும் நாங்களே!..

    பதிலளிநீக்கு
  37. @ ஜூவி அண்ணா..

    // உங்கள் வருகை ஒரு திருக்குறள், வாழ்க வையகம் -- இதோடு முடிந்து விடுகிறது.. //

    பல பதிவுகளில் ஸ்ரீராம் அவர்களது கவிதைகளுக்கு எடக்கு மடக்காக எழுதி வைத்திருக்கின்றேன்.. சமயங்களில் ஸ்ரீராம் அவர்களது கவிதை வரிகளில் இருந்து வேறு கவிதைகளையே கொடுத்திருக்கின்றேன்..

    சென்ற வருடத்துக்கு முன்பு ஸ்ரீராம் அவர்கள் வெளியிட்ட காதலன் காதலி ஓவியத்துக்கு அகத்துறையைப் பொதிந்து கொடுத்திருக்கின்றேன்..

    ஒரு செல்லத்தின் படத்துக்கு கதை ஒன்றை (சாம்பலீஷ்) கொடுத்திருக்கின்றேன்.

    அவர் வெளியிட்ட கதை ஒன்றுக்கு வேறு கோணத்தில் இருந்து ஒரு கதையை இரண்டு பகுதிகளாகக் கொடுத்திருக்கின்றேன்..

    //அம்மா காத்திருக்கின்றாள் (1&2)..//

    ஸ்ரீராம் அவர்களைக் கேட்டால் சொல்வார்..

    மற்றபடிக்கு இந்த இலக்கிய ஆய்வுக்கும் எனக்கும் வெகுதூரம்...

    நாவல்கள் வாசிப்பு என்பது இப்போது இல்லை...

    தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  38. வாழ்க வையகம் - என்னும் போதும்,
    வையகம் வாழ்க - என்னும் போதும் உண்மையும் நேர்மையும் வாழ்ந்திருக்க வேண்டுமே!..

    கோவை RTO அலுவலகத்தில் அள்ளிக் கட்ட முடியாத அளவுக்கு கல்லா கட்டி இருக்கின்றார்கள்..

    திரு அண்ணாமலை அருகில் ஆக்ஸீலியம் என்னும் பள்ளியில் ஆசிரியர்கள் /பணிபுரிபவர்களே வினாத்தாளை OUT செய்து இருக்கின்றார்கள்..

    எங்கே இருக்கின்றன வளமும்
    வாழ்வும்?..

    கொடுப்பவனிடமும்
    கொள்ளையடிப்பவனிடமும்!..

    உழைப்பவனிடத்தில்!?..

    பதிலளிநீக்கு
  39. ஈன்றாள் பசி காண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை..

    என்று திருக்குறளை சொல்லிக் கொடுத்தவர்கள் ஆசிரியர்கள்..

    ஆனால் - இன்றைக்கு?..

    பள்ளியிலேயே களவாணித் தனம்.. இன்னும் என்னவெல்லாமோ!..

    காற்றினிலே!.. பகுதி ஐந்தில்
    தன்னைக் காமத்துடன் நோக்கிய மூர்க்கனை - குடல், கும்பி, குறி - என, கட்டாரியால் குத்திக் கிழித்து எறிவாள் - அவந்திகா ஸ்ரீஷாந்தினி..

    அவள் வரவேண்டும்..
    அவள் வருவாள்!..

    பதிலளிநீக்கு
  40. அன்பின் ஜீவி அண்ணா..

    மேலே உள்ள - மூன்று கருத்துகளும் இந்தப் பதிவுக்குச் சம்பந்தம் இல்லாதவை..

    இப்படித்தான் பல சமயங்களில் நிகழ்ந்து விடுகின்றது..

    அதிகப் பிரசங்கித்தனம் எனில் ஒதுக்கி விடவும்..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  41. வாரத்தை விளையாட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறேன்... ஆனால் அது இதுவல்ல... திருக்குறள்...!

    முதலில் எழுத்து... அதன்பின் சொற்கள் விளையாட்டு...

    பதிலளிநீக்கு
  42. துப்பறியும் சாமு ரசனை. கயிறு நாவலின் விளம்பரம் என அறிந்து கொண்டேன் நாவல் படித்திருக்கிறேன்.
    வேட் விளையாட்டு மகள் மருமகன் போடுவார்கள் எனக்கு காலில் சக்கரம் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  43. Wordle எனக்கு வாட்சப்பில் வந்தது. முயற்சி செய்ய நினைத்துள்ளேன்.

    கயிறு - மலையாள எழுத்தாளர் தகழியின் நாவலின் விளம்பரம் போன்று தெரிகிறது

    பாலுமகேந்திரா மிக நல்ல டைரக்டர். அவரது படத்தின் கோணங்களை, ஷாட்ஸை ரொம்ப ரசித்ததுண்டு. அவரைப் பற்றி கமலஹாசனின் கட்டுரை சுவாரசியம்

    ஜோக்ஸ் ரசித்தேன்.

    உங்கள் கவிதை ரசிக்க வைக்கிறது. ஆழமான கருத்து. உங்கள் கற்பனை வியப்பு. யதார்த்தத்தை எதிர்நோக்க முடியாமல் பயப்படும் மனதின் வெளிப்பாடோ?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!