10.5.25

அரிசி அளவுள்ள பேஸ்மேக்கர் மற்றும் நான் படிச்ச கதை

 

சாலையில் கிடந்த ரூ.3 லட்சத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்; குவிகிறது பாராட்டு.

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கொள்ளையடித்த கும்பல் ரோட்டில் தவறவிட்ட ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு மொபைல் போனை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் முத்துகிருஷ்ணனுக்கு பாராட்டுகள் குவிகிறது.  திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு புன்னியவாளன்புரம் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் வள்ளியூரை சேர்ந்த முருகன்(வயது 50) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கான விற்பனை பணம் ரூ.36 லட்சத்து 6 ஆயிரத்தை முருகன் ஒரு பையில் எடுத்துக்கொண்டு மொபட்டில் வங்கி நோக்கி சென்றுள்ளார்.  அப்போது அவரை ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் வழிமறித்து பணத்தை பறித்துவிட்டு தப்பிச்சென்றது. அதில் ரூ.3 லட்சம் பணம் கீழே விழுந்தது. ஆனால் அதிர்ச்சியில் இருந்த முருகன் மொபட்டையும், செல்போனையும் கீழே போட்டுவிட்டு பணத்தை கவனிக்காமல் பெட்ரோல் பங்கிற்கு ஓடினார்.அவர் அளித்த புகாரின்பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனிடையே கீழே விழுந்த பணத்தை அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் முத்துகிருஷ்ணன், விபத்தில் யாரேனும் சிக்கி பணத்தை அங்கேயே விட்டு சென்று விட்டார்களோ என நினைத்து அந்த பணத்தை எடுத்து பணகுடி போலீசில் ஒப்படைத்தார்.  நேர்மையுடன் செயல்பட்ட ஆட்டோ டிரைவர் முத்துகிருஷ்ணனை, போலீசார் பாராட்டினர்.சக ஆட்டோ டிரைவர்கள் அவருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

===========================================================================================

அரிசி அளவுள்ள பேஸ்மேக்கர், உடலுக்குள் கரையுமா?

ஆம், உண்மைதான்.  - மேலும் இது இதயப் பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தக்கூடும். விஞ்ஞானிகள் வயர்லெஸ், அறுவை சிகிச்சை இல்லாத பேஸ்மேக்கரை உருவாக்கியுள்ளனர், இது ஒரு தானிய அரிசியை விடப் பெரியது அல்ல. இதயத்தை குணப்படுத்தியவுடன், அது உடலுக்குள் பாதுகாப்பாகக் கரைகிறது - அகற்ற வேண்டிய அவசியமில்லை. இந்த முன்னேற்றம் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மீட்சியை என்றென்றும் மாற்றக்கூடும். மருத்துவத்தின் எதிர்காலம் மிகவும் சிறியதாகிவிட்டது.

நன்றி JKC Sir

========================================================================================

வயது தடை இல்லை; அடுத்து நான் டிகிரி படிப்பேன்; 70 வயதில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ராணி பேட்டி!

கோவை: 'வயது தடை இல்லை. நான் அடுத்த டிகிரி பண்ணுவேன்' என 70 வயதில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கோவை மாவட்டத்தை சேர்ந்த ராணி தெரிவித்துள்ளார்.  கோவையை சேர்ந்த 70 வயதான ராணி பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி பெற்று சாதிக்க வயது ஒரு தடையே இல்லை என நிரூபித்துள்ளார். இவர், வீட்டில் இருந்த படியே படித்து தேர்ச்சி அடைந்து உள்ளார்.  தமிழில் அதிகபட்சமாக 89 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 50 மதிப்பெண்களும், வரலாறு பாடத்தில் 52 மதிப்பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார். தேர்ச்சி பெற்றது குறித்து, அவர் அளித்த பேட்டி:  2000ம் ஆண்டில் எனது கணவர் இறந்து விட்டார். அதன் பிறகு என்ன செய்ய, என்று எனக்கு தெரியவில்லை. நிறைய நேரம் இருந்தது. சரி படிக்கலாமே என்று நினைத்தேன். எங்கு சென்று கேட்டாலும் 12ம் வகுப்பு பாஸ் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். நான் 1972-1973ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பாஸ் செய்திருக்கிறேன்.  இன்று சிஸ்டத்தை அரசாங்கம் மாற்றி விட்டார்கள். 12ம் வகுப்பு பாஸ் செய்தால் தான் டிகிரி படிக்க முடியும் என்று சொன்னார்கள். சரி இவ்வளவுதானே, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு எழுதி விடும் என்று எழுதினேன். தற்போது 12ம் வகுப்பு தேர்வில் பாஸ் செய்துள்ளேன். நல்ல மதிப்பெண் வந்துள்ளது. அடுத்தது கண்டிப்பாக டிகிரி பண்ணுவேன்.  புத்தகம் வாங்கி வைத்து நானே தான் படித்தேன். யாரிடமும் எந்த சந்தேகமும் கேட்கவில்லை. 51 வருடங்களுக்குப் பிறகு தேர்வு எழுதி உள்ளேன். வீட்டிலிருந்து எழுதி, எழுதி பார்த்தேன். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தான் மிகவும் கடினம். மூன்று மணி நேரமாக, வேகமாக எழுதுவதற்காக பயிற்சி செய்தேன். விரல் நுனியில் பதில் இருந்தால் தான் வேகமாக எழுத முடியும். யோசித்து, யோசித்து எழுதுவதற்கெல்லாம் நேரம் கிடையாது.  படிப்பிற்கும், வயதிற்கும் சம்பந்தமில்லை. நல்லபடியாக படிக்கலாம். படிக்க வேண்டும் என்ற விருப்பம் மட்டும் வர வேண்டும். இஷ்டப்பட்டு படிக்க வேண்டும். எந்த ஒரு வேலையை யார் செய்தாலும், இஷ்டப்பட்டு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
=============================================================================


Thank you JKC Sir...

=============================   ==========================

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம். 

மே 2, 2025 அன்று விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம், கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம், சர்வதேச கப்பல் பாதையில் இருந்து, 10 கடல் மைல் துாரத்தில் அமைந்துள்ளது.

மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் வந்து செல்லும் வகையில், இந்த துறைமுகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதுவரை நம் நாட்டின், 75 சதவீத சரக்கு பரிமாற்ற நடவடிக்கைகள் வெளிநாட்டு துறைமுகங்களில் நடத்தப்பட்டன. இதன் விளைவாக நம் நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

அதாவது நம் நாட்டில் இருந்து, சர்வதேச சரக்கு கப்பல்களில் கன்டெய்னர்களை ஏற்ற, துபாய், கொழும்பு மற்றும் சிங்கப்பூர் அனுப்பி வைக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. விழிஞ்ஞம் துறைமுகத்தால் இந்த நிலை மாற உள்ளது.

இனிமேல், விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து, நேரடியாக சர்வதேச கப்பல்களில் ஏற்றி அனுப்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

வெளிநாடுகளில் செலவிடப்பட்ட நிதி இப்போது உள்நாட்டு வளர்ச்சிக்குச் செலவிடப்படும்.

 ================================================================

 நான் படிச்ச கதை (JKC)

கடிதத்தில் ஒரு கதை!

கதையாசிரியர்: ஆரூர்தாஸ்


ஆரூர் தாஸ்  இயற் பெயர் யேசுதாஸ் (10 செப்டம்பர் 1931 – 20 நவம்பர் 2022) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர் ஆவார். இவர் எழுதியவற்றில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்த திரைப்படங்கள் அதிகம். மொத்தம் 500 திரைப்படங்களுக்கு எழுதியுள்ளார்.

இவரது சுய சரிதை “ஒரு கதை வசனகர்த்தாவின் கதை“.

ஆசிரியரைப் பற்றி மேலும் அறிய ======>ஆரூர்யேசுதாஸ்

முன்னுரை

கதை, சிறுகதை பற்றிய எனது எண்ணங்கள் சிலவற்றை வரும் பாராக்களில் பிதற்றியிருக்கிறேன். எடிட் செய்யாது பிரசுரித்த எ பி ஆசிரியர்களுக்கு நன்றி.

பண்டு பண்டு கதை என்பதும், கதை சொல்லுதல் என்பதும் இயல், இசை, நாடகம் என்ற துறை சார்ந்து இருந்தன. இயல் என்ற இலக்கியத் துறையில் உரைநடை, கவிதைகள், செய்யுள்கள் (உ-ம் சிலப்பதிகாரம்) போன்ற வடிவத்தில் கதைகள் சொல்லப்பட்டன. இசை வடிவத்தில் கதை பாட்டுகளாக இசைக்கருவிகளின் (உ-ம் பாணர்கள்) இசையோடு சொல்லப்பட்டன. நாடகம், உரையாடல், பேச்சு, சில செயல் வெளிப்பாடு,  (உ-ம் தெருக்கூத்து) ஆகியவை மூலமாக சொல்லப்பட்டது. ஆக அன்று கதைகள், சொல்லும் முறையை வைத்து பாகுபடுத்தப்பட்டனவே  அன்றி கதையின் பரிணாமத்தால் அல்ல.

சிறுகதைகள் என்ற தனிப்பிரிவு தோன்றியது ஆங்கிலேயர் வரவுக்கு பின்னரே என்று பெரிய எழுத்தாளர்களும் கூறுகின்றனர்.  சிறுகதை, பெருங்கதை என்ற அளவுகோல் கதையில் வரும் வார்த்தைகளின் எண்ணிக்கை அடிப்படையே அன்றி,  கதையின் தன்மையாலோ, அல்லது சொல்லப்படும் முறையிலோ அல்ல. (ஆசிரியர்களுக்கு வார்த்தைகளின் எண்ணிக்கை அடிப்படையில் சன்மாம் வழங்கப்பட்ட காலம்.)

ஆனால் சுஜாதா இந்த இலக்கணங்களையெல்லாம் உடைத்து வாசகர்களுக்கு பிடித்ததைக் கொடு, அது உரைநடையாக இருந்தால் நல்லது என்று முடித்து விட்டார்.

இரண்டு வார்த்தைகளில் கதை, ஒரு வரிக் கதை, ஒரு பக்கக் கதை (அச்சு புத்தகத்தில் ஒரு பக்கம்), என்றெல்லாம் புதுமை புகுத்தியவர்  சுஜாதா. (“மெக்ஸிகோ சலவைக்காரி, லாண்டிரிக்கணக்கு”) போன்றவை பிரசித்தம்.  

இதற்கு மேலும், குமுதம் போன்ற வெகுஜன பத்திரிக்கைகள், கதைகளின் தன்மையைப் பொறுத்து பாகுபடுத்தி, கிசுகிசு கதைகள், கிளுகிளு கதைகள், கிடுகிடு கதைகள், சிரிசிரி கதைகள், திகில் கதைகள் என்று புதுமையாக வகைப்படுத்தி வாசகர்களை தூண்டில் போட்டன. கிசுகிசு கதைகள் புதிராக எழுதப்பட்டு வாசகர்களின் புதிர் அவிழ்க்கும் ஆர்வத்தைத் தூண்டும். கிளுகிளு கதைகள் படிக்கும்போது பாலியல் சம்பந்தமான உணர்வுகளை தூண்டி ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும். கிடுகிடு கதைகள் வேகமான கதைகள். கதை 100 மீட்டர் ஓட்ட பந்தயம் போல் விறு விறு என்று சென்று முடிந்துவிடும். சிரி சிரி, திகில் கதைகளும் பாகுபாட்டுக்கு ஏற்றவாறே சிரிப்பு, திகில் உணர்வு  உண்டாக்கும் கதைகள் ஆகும்.

இன்றைய இந்தக்கதை தலைப்பு மற்றும் உள்ளடக்கம் காரணமாக ஒரு புது பாகுபாட்டைக் கொண்டு வந்துள்ளது. அது கிசுகிசுவாக கடிதம் மூலம் ஒரூ கதையை சொல்வது. கதை கிசுகிசு வானாலும் வாசகர்கள் கதை மாந்தர்களை சுலபமாக ஊகிக்கலாம். கடிதம் எழுதுவதின் மூலம் உரையாடலை தவிர்க்கிறார்  ஆசிரியர். ஆனால் ஏன், யாருக்கு கடிதம் என்பது புலனாகவில்லை. அன்று இது ஒரு புது பாணி.

கடிதத்தில் ஒரு கதை!

ஒரு நடிகரின் வாழ்க்கையில் நடந்த உண்மைக் கதை இது. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன!

அன்புள்ள சீதாவுக்கு,

உன் பிரியமுள்ள தாய் மாமா பழனிக்குமார் எழுதும் 33-வது கடிதம்.

இது உன்னோட 33-வது நினைவு நாள்! ஒவ்வொரு வருஷமும் உன் நினைவு நாளன்னிக்கு உனக்குக் கடிதம் எழுதுவேன். அந்த மாதிரி இன்னிக்கும் எழுதியிருக்கேன்.

நீ அக்கினிப் பிரவேசம் பண்ணி இது 33-வது வருஷம். அதோ பார், உன் படத்துக்குக் கீழே என் மனைவி சரஸ்வதி படையல் போட்டிருக்கா. அதுல, என் கல்யாணத்துக்காக உனக்கு நான் வாங்கிக் கொடுத்த பட்டுப் பாவாடை, சட்டை, தாவணியை வழக்கம் போல வெச்சிருக்கா.

இன்னமும் அது நேத்து வாங்கினது மாதிரி அப்படியே புத்தம் புதுசா இருக்கு. ஏன் இருக்காது? என் கல்யாணத் தன்னிக்கு மட்டும் ஒரே ஒரு தடவை அதைக் கட்டிக்கிட்டே, அவ்வளவுதான். அதுக்கப்புறம்தான் அநியாயமாப் போயிட்டியே!

சீதா! இப்பவும் சொல்றேன். அறியாப் பருவத்திலேயே அப்பாவை இழந்த என்னை, தன் கண்ணுக்குள்ளே பொத்திவெச்சுக் காப்பாத்தி ஆளாக்கிவிட்ட, என் உயிருக்கு உயிரான எங்கம்மா மேல ஆணையா சொல்றேன்… உன்னை என் கூடப் பிறக்காத தங்கச்சி மாதிரிதான் நினைச்சேனே தவிர, உன்னைக் கட்டிக்கிட்டு குடும்பம் நடத்தப்போற மனைவியா ஒரு நாளும், ஒரு நிமிஷமும் நினைச்சதில்லேம்மா!

நிறைய கனவுகளோட ஊர்லேர்ந்து புறப்பட்டு, சென்னை வந்த எனக்கு சினிமாவில் நிறைய வாய்ப்பு வந்தது. புகழோடு போதுமான பொருளும் கிடைச்சுது. வாடகைக்கு இருந்த வீட்டையே சொந்தமா விலைக்கு வாங்கினேன்.

வீட்டுல விளக்கு இருந்தது. அந்த விளக்கை ஏத்துறதுக்கு அம்மா மட்டும்தான் இருந்தாங்க. ஆனா, ஆறு மணி ஆனதும் முகத்தைக் கழுவிக்கிட்டு, பவுடர் பூசி, துளி குங்குமத்தை நெத்தியிலே இட்டு, ஒரு முழம் மல்லிகைப் பூவைக் கூந்தல்ல வெச்சுகிட்டு, நல்ல விளக்குல நல்லெண்ணெயை ஊத்தித் திரியை நெருடிவிட்டு, அதை எரியவெச்சு, ஊதுவத்தி கொளுத்தி எங்க அப்பா படத்துல பொருத்திக் கை குவிச்சுக் கும்பிடறதுக்கு ஒரு மகாலட்சுமி, என் மனைவிங்கிற பேர்ல அதுவரைக்கும் எங்க வீட்டுக்கு வரலேங்கிற ஒரே ஒரு குறையோட வாழ்ந்துட்டு இருந்தேன்.

அப்பதான் நீ என் வீட்டுக்குள்ள அடி எடுத்துவெச்சே. மனைவியா இல்லே; மனைவி முறையுள்ள ஒரு தங்கச்சியா!

உங்கப்பா, அம்மா எதுக்காக ஒன்னை எங்கிட்டே அனுப்பினாங்களோ? எங்கம்மா எதுக்காக அதை அனுமதிச்சு, உன்னை என் வீட்டுல வெச்சுக்கிட்டாங்களோ? அதுக்குள்ளே புகுந்து புறப்பட நான் விரும்பலே.

நான் கட்டிக்க வேண்டிய முறைப் பொண்ணு நீ. என்னைக் கைப்பிடிச்சு, என் கையால தாலி வாங்கிக்க சகல உரிமையும் உள்ள பொண்ணுதான் நீ. அதுல எந்தச் சந்தேகமும் இல்லே. ஆனா, தங்கச்சி கழுத்துல தாலி கட்டுறது மாதிரி ஆயிடும்கிற அந்த எண்ணத்தை மட்டும் என் மனசுலேர்ந்து எடுத்தெறிய என்னால முடியலேம்மா!

உன்கிட்டே இருந்த சிறந்த குணம் என்ன தெரியுமா? ஒரு நாள், ஒரு தடவைகூட, தப்பித்தவறி, ‘மாமா! என்னைக் கட்டிக்கிறீங்களா?’ன்னு நீ என்கிட்ட கேட்டதே இல்லே. நானும், ‘சீதா! நான் உன்னைத்தான் கட்டிக்குவேன்’னு சொன்னதில்லை. ஆனா, எங்கம்மா மனசுல மட்டும் நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா, சௌகரியமா வாழணுங்கிற எண்ணம் இருந்தது.

உன் மனசுலேயும் அப்படி ஒரு எண்ணம் இருந்தது ஜாடை மாடையா எனக்கும் தெரியும். ஆனா, அதைப் பொருட்படுத்தாம சகஜமா பழகினேன்.

ஒரு அன்பான மனைவி, தன் கணவனுக்குச் செய்கிற அன்றாடப் பணிவிடைகளை எல்லாம் நீ எனக்குச் செய்தே. விடியக்காலை என்னை எழுப்பிவிடுறதுலேர்ந்து, வெந்நீர் கலந்து குளிக்கவைக்கிறது, கள்ளங்கபடமில்லாம எனக்கு முதுகு தேச்சுவிடுறது, என் துணிமணிகளை எடுத்துக் குடுக்குறது, என்னை டிபன் சாப்பிடவெச்சு ஷூட்டிங்குக்கு அனுப்புறதுன்னு அத்தனை வேலைகளையும் நாள் தவறாம செய்துட்டிருந்தே. மொத்தத்துல, மனைவிங்கிற அந்தஸ்து இல்லாமலே, ஒரு மனைவியோட கடமைகள் அத்தனையும் எனக்கு நீ செய்தே… தாம்பத்ய உறவுங்கிற ஒரு தவறைத் தவிர!

அப்படி இப்படின்னு முப்பது வயசை நெருங்கிட்டேன். அதுவரைக்கும் நான் உன்னைத் தாரமா இல்லே, தங்கச்சியாதான் பார்க்கிறேன், பழகுறேன், நினைக்கிறேன்கிற உண்மையை அம்மா உறுதிப்படுத்திக்கிட்டாங்க. அப்புறம் தன் மனசை மாத்திக்கிட்டு, எனக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாங்க.

எங்கெங்கிருந்தோ எத்தனையோ போட்டோக்கள் வந்தன. அதுல ஒரு பொண்ணு போட்டோ என் மனசுக்குப் பிடிச்சிருந்தது. அவ பேரு சரஸ்வதி. என் வீட்டுக்கு விளக்கேத்த வந்த லட்சுமி.

இந்த விவரமெல்லாம் உனக்கும் தெரியும். இதுக்கப்புறம்தான் நீ, நான், எங்கம்மா, உங்கப்பா, அம்மா எல்லாருமே ஒரு தப்பு பண்ணினோம். அது என்னன்னா, என் கல்யாணத்துக்கு முந்தியே ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து உன்னைக் கட்டிக் கொடுத்து, சீரும் சிறப்புமா புருஷன் வீட்டுக்கு அனுப்பிவெச்சிருக்கணும். அல்லது, ‘இன்னொரு பொண்ணு இந்த வீட்டுக்கு வரப்போறா. அதனால நீ உங்க அப்பா, அம்மாவோட போயிடு’ன்னு எங்கம்மா சொல்லி இருக்கணும். சொல்லலே. அல்லது, உங்கப்பா அம்மாவாவது, ‘நீ இனிமே அங்கே இருக்கிறது அவ்வளவு நல்லதில்லேம்மா. பேசாம நம்ம வீட்டுக்கே வந்துடு’ன்னு சொல்லியிருக்கலாம். அவங்களும் சொல்லலே.

அட! நீயாவது சொல்லி இருக்கலாமில்லே அம்மணி… ‘மாமா! எங்கனவு கலைஞ்சிருச்சு. இந்த வீட்டு முத்தத்துல நான் புள்ளி வெச்சுப் போட்டிருந்த கோலம் அழிஞ்சிருச்சு. ஒங்களை எழுப்பிவிட்டு, குளிக்க வெச்சு, துணி எடுத்துக் குடுத்து, டிபன் சாப்பிட வெச்சு, ஷூட்டிங்குக்கு அனுப்புறதுக்கு இன்னொரு பொண்ணு வரப்போகுது. நான் போயிட்டு வரேன் மாமா! எம் புருசனோட இங்கே மறுபடியும் வருவேன்’னு சொல்லிட்டு நீ ரயில் ஏறி இருக்கணும். சொல்லலே; செய்யலே!

ஒரு சின்ன, சிக்கலான இங்கிதம். இது எந்த மண்டையிலேயுமே எட்டலே. நீ எப்பவும் போல இங்கேயே இருந்து, என் கல்யாணத்தையும் பார்த்தே. பார்த்து சந்தோஷப்பட்டியோ, சஞ்சலப்பட்டியோ எனக்குத் தெரியாது.

அதுக்கப்புறமாவது உனக்குக் கல்யாணம் முடிச்சு உன்னை அனுப்பி வெச்சிருக்கணும் நாங்க. நீ கேக்காமலே நாங்களா செஞ்சிருக்கணும். செய்யலே. அதுதான் போகட்டும். என் புதுப் பெண்டாட்டியாவது ஒரு வார்த்தை எங்கிட்டே சொல்லி இருக்கலாம்… ‘இதோ பாருங்க, உங்க அக்கா பொண்ணு இங்கே இருக்கிறது எனக்கு என்னமோ போல இருக்கு. தயவுசெஞ்சு அதை அவங்க வீட்டுக்கு அனுப்பிவெச்சுடுங்க’ன்னு. அவளும் சொல்லலே. ஏன்னா, அவ பண்புள்ளவ. இங்கிதம் தெரிஞ்சவ.

இப்படி ஒரு பொண்ணுக்காகத்தானே இத்தனை வருஷமா நான் கல்யாணம் பண்ணிக்காம காத்திருந்தேன். இல்லேன்னா என்னிக்கோ, எவளையாவது ஒருத்தியைப் புடிச்சுக் கொண்டாந்து எங்கம்மா முன்னால நிறுத்தி, ‘அம்மா! இவதான் உன் மருமகப்பொண்ணு. ஆசீர்வதி!’ன்னு சொல்லி, அவங்க கால்ல விழுந்திருப்பேனே. ஆனா, நான் அப்படிச் செய்யலே. செய்ய விரும்பலே. எந்தாலியைக் கட்டிக்கிறதுக்கு எவளாவது ஒருத்தி எங்கேயாவது பொறந்திருப்பா. அவ வந்தா வரட்டும், வரலேன்னா போகட்டும்னு பதவிசா இருந்துட்டேன்.

வர வேண்டிய நாள்ல, வர வேண்டிய மகாலட்சுமி என் வீட்டுக்கு வந்தா. ஆனா, சந்தோஷமா பூவும் பொட்டுமா புருஷனோடு போக வேண்டிய நீ, பொணமாப் போவேன்னு முந்தியே எனக்குத் தெரிஞ்சிருந்துதுன்னா, எப்பாடுபட்டாவது உன் கல்யாணத்தை முடிச்சு அனுப்பிவெச்சிருப்பேன். இல்லேன்னா, எனக்குக் கல்யாணமே வேண்டாம்னு சொல்லி, வைராக்கியமா இருந்திருப்பேன்.

தினமும் விடிகாலைல எனக்கு முந்தியே எழுந்திரிச்சு, ஜில்லுனு பச்சைத் தண்ணியிலே குளிரக் குளிரக் குளிச்சுப் பழக்கப்பட்ட நீ, அன்னிக்கு ஏம்மா தீயிலே குளிச்சே? அப்படி என்னம்மா அவசியம் வந்துச்சு? கெரஸினை ஊத்தி, நெருப்புவெச்சுக் கொளுத்திக்கிட்டுச் சாகிறதுக்காகவா நீ எங்க வீட்டுக்கு வந்தே? அநியாயம் சீதா, ரொம்ப அநியாயம்!

சீதா, உனக்குத் தெரியுமா… என் பெரிய பிள்ளை சந்திரன் இப்போ பெரிய நடிகனாகிட்டான். குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்துவெச்சு லட்சாதிபதியா இருந்த என்னை கோடீஸ்வரனாக்கிட்டான். அவன் என்னைப் போல, காலத்துக்காகவோ, சாதிசனத்துக்காகவோ காத்திருக்கலே. அவனுக்குப் பிரியமான பெண்ணை அவனே தேர்ந்தெடுத்துக்கிட்டு, எங்ககிட்டே வந்து சொன்னான். அவன் விரும்பின பெண்ணையே அவனுக்குக் கட்டிவெச்சோம். சின்ன வயசுல அவன் ஆசைப்பட்ட பொருளை எல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்துட்டு, பெரியவனானதும், வாழ்நாள் பூராவும் அவனோடு இருக்க வேண்டிய மனைவிங்கிற வாழ்க்கைத் துணைவியை அங்கீகரிக்க மறுக்கிறது அப்பா, அம்மாவுக்கு அழகில்லை. எல்லாம் சுபமா நடந்திடுச்சு. நல்லாருக்கட்டும்.

அண்ணனைத் தொடர்ந்து, தம்பி மூர்த்தியும் நடிக்கத் தொடங்கியிருக்கான். இதெல்லாம் நான் எதிர்பாராதது. நம்மளை மீறி ஏதோ ஒண்ணு இருக்குல்லியா… அது இயக்கிவைக்குது.

வாழ்க்கையில எனக்குக் குறைன்னு எதுவும் இல்லே… குடும்பத்துல நீ இல்லியேங்குற ஒண்ணைத் தவிர! நீ உயிரோட இருந்து ரெண்டு, மூணு குழந்தைங்களைப் பெத்தெடுத்து, என் வீட்டுக்கு வந்திருந்தேன்னா, உனக்கு நான் முறைமாமன் ஆனது மாதிரி உன் குழந்தைகளுக்கும் தாய்மாமன் ஆகியிருப்பேன். எப்படின்னா, நீ என் கூடப் பிறக்காத தங்கச்சி இல்லியா?

அவ்வளவுதான்… எழுத்தைக் கண்ணீர் மறைக்குது. மத்ததையெல்லாம் அடுத்த வருஷ நினைவு நாள்ல எழுதுறேன்.

இப்படிக்கு,

உன் தாய் மாமன் என்கிற, பாசமுள்ள அண்ணன் சிவசாமி என்கிற பழனிக்குமார்.

– 14th நவம்பர் 2007

பின்னுரை

கதையில் குறை காண முடியவில்லை. கடிதம் என்றாலும் கடிதம் எழுதிய முறை சிறப்பாக உள்ளது. கதை உண்மையா பொய்யா என்பது எனக்கு தெரியாது. ஆனாலும் நடிகர் மீதிருந்த மதிப்பு குறையவில்லை.  

//உன் தாய் மாமன் என்கிற, பாசமுள்ள அண்ணன் சிவசாமி என்கிற பழனிக்குமார்// சிவகுமார் என்ற பழனிச் சாமியோ?

ஊசிக்குறிப்பு.:

கில்லெர்ஜீ பெயர்த்திக்கு எழுதிய கடிதம் நினைவில் வருகிறது. உண்டு ஆனால் என்ன  என்பது தெரியாது.

கதையின் சுட்டி

கடிதக்கதை

 

24 கருத்துகள்:

  1. சில பேருக்கு பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு பழியை மட்டும் பிறர் மேலே போடத் தெரிஞ்சிருக்கு. மனசாட்சின்னு ஒண்ணு இல்லையா என்ன?
    தக்கச்சியாம் தங்கச்சி! வயசு வந்த பொண்ணை குளியலறைக்கு அழைச்சு முதுகு தேச்சு விடச் சொல்லி உசுப்பேத்த மட்டும் முடியுது. ஆனா அவ தானா 'என்னைக் கட்டிகங்க மாமா'ன்னு மட்டும் சொல்லலையாம்
    அப்படிக் கேட்டிருந்தா இவரை கட்டிக்கிட்டிருப்பாராம். அம்மாக்கு மட்டும் அந்த ஆசை இருந்துச்சாம்! அப்பாவி மாதிரி அதையும் சொல்லும் பொழுது தான் எரிச்சல் பத்திண்டு வர்றது.. இன்னொருத்தியைக் கட்டிண்டு வந்தது மட்டுமில்லாம அதே வீட்டிலே வேலைக்காரி மாதிரி இந்தக் கன்னிப் பொண்ணு வேறே! 'அந்த ஆளை எனக்குக் கட்டி வை'ன்னுஅவளாக்கேட்டிருந்தா, இந்த மாமன் முறை தட்டி வைச்சிருப்பாராம்.
    பாவம்! கடைசிலே அந்தப் பொண்ணு எரிஞ்சே போயிருக்கா! அல்லாத்தையும் விலாவரியா விவரிச்சு கதை வேறே!கதைங்கற பேர்லே வாசிக்கறவை எரிச்சலூட்ட சிலருக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார் அப்போ பாலகுமாரனோ?

      நீக்கு
    2. ஆங்கிலத்தில் ஓபன் சீக்ரெட் என்பார்கள் அது போல இதுவும் ரகசியம் ஆனால் ரகசியமில்லைங்கற ரகம். சூர்யா கல்கியில் தன்னுடைய நினைவுகளைப் பகிரும்போது இதுவும் வந்த நினைவு. பல வருடங்கள் முன்னர். ஏனெனில் அப்போ சூர்யாவுக்குக் கல்யாணமெல்லாம் ஆகலை. தன் திரை வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலிருந்து கொஞ்சம் முன்னேறி இருந்த நினைவு. என்னிடம் கல்கி பைன்டிங்கில் சேமித்த நினைவும் இருக்கு. என்ன இருந்தாலும் சிவகுமார் செய்தது மிகப் பெரிய தவறு. எப்படி மனசாட்சியே இல்லாமல் இருந்திருக்கார்?

      நீக்கு
    3. //ஜீவி சார் அப்போ பாலகுமாரனோ?// சிவகுமார் என்பது சொல்லாமலே தெரிஞ்சிருக்கணுமே!

      நீக்கு
    4. ​சிவகுமார் என்பதை பின்னுரையிலேயே கூறிவிட்டேன்.

      ஜீவி சார் ஒழுக்கத்தைப் பற்றி போதித்தவர் எல்லாம் ஒழுக்கமுள்ளவர் இல்லை என்று பொங்கி எழுந்துவிட்டார். சந்தடி சாக்கில் ஏக பத்தினி என்ற ஒழுக்கத்தை மீறிய பாலகுமாரன் பற்றி அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டேன். அம்புட்டுதான்

      Jayakumar

      நீக்கு
    5. ஜீவி சார்... ஒழுங்கீனமான ஒருவன், தான் செய்த குற்றத்தை மறைக்க தான் நல்லவன்னு எல்லார்ட்டயும் சொல்லிட்டிருப்பான். தாவூத் இப்ராஹிமிடமிருந்து மிரட்டல் அவருக்கு வந்ததாகவும் அதனால் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டதாகவும் செய்திகளில் அடிபட்டது. எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்கிற கதையாக, சிவகுமாரே அப்படி இல்ஙை என்று விளக்கமளித்தார்.

      தாம்பத்தியத்தைத் தவிர மனைவி செய்யவேண்டிய அத்தனையும் செய்தாளாம். ஆனாலும் தங்கச்சியாம். நல்ல விளக்கம்.

      நீக்கு
    6. சிவகுமாரின் எண்ணப்படி மனைவியின் கடமைகள் என்ன என்னவாயிருக்கும்?

      நீக்கு
    7. ஜெஸி ஸார்! ஆரூர்தாஸ் அவர்களின் இன்றைய வெளியீடான இந்தக் கதையை வழக்கமாக ஒரு கதையை வாசித்ததின் பிரதிபலிப்பாய் மனதில் தைத்ததைச் சொன்னேனே தவிர தனிப்பட்ட
      யாருடைய சொந்த வாழ்க்கை குறித்த சுக துக்கங்கள் பற்றி அல்ல.
      தனி நபர்களின் வாழ்க்கை என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உணர்ந்த உணர்வுகளின் நியாயங்களின் அடிப்படையில் அமைந்தது. அதனால் அப்படியான தனி நபர்களின் உணர்வுகளுக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் கொடுப்பவன் என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

      நீக்கு
  2. கதையோடு ரொம்ப ஒன்றிவிட்டார் ஜீவி ஸார் என்று நினைக்கிறேன். 

    'உண்மை சம்பவத்தின் அடிப்படையில்' என்கிற கொக்கியை எடுத்து விட்டு பார்த்தால் இது ஒரு நல்ல கதை அமைப்பு. 

    பதிலுக்கு பதில் கடிதங்கள் என்கிற வகையில் அமைந்திருக்கும் கதைகளை படித்திருக்கிறேன்.  கடிதமே கதையாய் இப்போதுதான் பார்க்கிறேன். 

    ஆரூர்தாஸ் போன்றவர்கள் எழுதினால் எப்படி இருக்கும், வாசகரை எப்படி சென்று அடையும் என்பதற்கு ஜீவி ஸாரின் பின்னூட்டம் ஒரு சான்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையோடு ஒன்றிப் போவது என்பது இதுதான் ஸ்ரீராம். வாசிப்பவர்களுக்கு அக்கதாபாத்திரங்களின் மீது கோபம் வெறுப்பு எரிச்சல், இப்படியா செய்வான் ச்சே என்றெல்லாம் தோன்றினால் அதுவே கதாசிரியரின் வெற்றி இல்லையோ?

      கீதா

      நீக்கு
  3. ​காரசாரமான எதிர் வினைகள். கருத்துக் கூறலில் ஸ்ரீராம் கலந்து கொண்டது என்ற சிறப்புகளை பெற்றது இன்றைய கடிதக் கதை. ஜீவி சாருக்கும், ஸ்ரீராமிற்கும் நன்றி.

    உண்மையில் இந்த வார நான் படிச்ச கதைக்கு தேர்ந்தெடுத்த கதைகள் எஸ் ராவின் 100 சிறந்த கதைகள் பட்டியலில் உட்பட்ட ஜே.பி.சாணக்கியாவின் "ஆண்களின் படித்துறை" மற்றும் சில்வியாவின் "மைத்ரேயி". இரண்டுமே அப்பட்டமான பாலியல் கதைகள். வாசிப்பவர்களை வெறுப்படைய செய்யும் விதம் எழுதப்பட்டவை. ஆகவே அவற்றை தவிர்த்தேன். ஆர்வம் உள்ளவர் அவற்றை இணையத்தில் படிக்கலாம். கதையைப் பற்றிய விவாதம் தொடரும் என்று எதிர் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. கணித ஆசிரியர் அப்துல் மாலிக் டாப் பாசிட்டிவ் செய்தி. அவரைப் பாராட்டி அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டியே ஆக வேண்டும்.

    வயதானாலும் கல்விக்குத் த்டை இல்லை என்று நிரூபித்திருக்கும் பெண்மணிக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள். அவர் மேலும் படிக்க ஆர்வத்துடன் சொல்லியிருப்பதும் கவர்கிறது. இதை வாசித்த போது, 25/26 வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் 70 வயதாக இருந்த ரோஸ்மேரி எனும் பெண் தான் எப்படியேனும் தன் வாழ்நாளில் ஒரு டிகிரி வாங்கிவிட வேண்டும் என்று அங்கிருக்கும் community கல்லூரியில் சேர்ந்து பட்டம் வாங்கியது பற்றி வாசித்தது நினைவுக்கு வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. மாலிக், கணித ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீச்சல் பயிற்சி எல்லாம் கற்றுக் கொடுப்பதும் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று,

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கதை அமைப்பு அதுவும் கடித வகையில்....நன்றாகவே சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

    இதை ஒரு டைரிக் குறிப்பு என்றும் சொல்லலாமோ? டைரியில்தானே நாம் பொதுவாக மகிழ்வான தருணங்கள், இல்லை வருத்தமான தருணங்கள், இவற்றையும் விட செய்த தவறுகள் நம் மன உணர்வுகளை எழுதுவதுதானே பொதுவான வழக்கம். அப்படியும் கொள்ளலாமோ இந்த வகையை?

    கடிதம் பதில் கடிதம் என்று கதைகள் நகர்த்தும் விதம் உண்டு. டைரிக் குறிப்பாகச் சொல்லி நகர்த்தும் கதைகளும் உண்டு என்றே தோன்றுகிறது. (இங்கு இதைப் பற்றி ஒன்று சொல்லாமல் தவிர்க்கிறேன். ஸ்ரீராமுக்குப் புரிந்துவிடும்!!!!!)

    இக்கதையின் மாமா பழனிக்குமாருக்குக் குற்ற உணர்வு. அதுவும் சீதா தன்னை எரித்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அவன் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு வருடமும் நினைவுநாளில் இப்படி எழுதுகிறான் என்று தோன்றுகிறது. அப்படி என்றால் மற்ற நாளில் அது உறுத்தாதோ? உறுத்தலாம் ஆனால் நினைவு நாளில் இப்படி எழுதி படையலின் முன் வைத்து கும்பிடுவது அந்த ஆத்மாவுக்குச் சொல்லிக் கொள்வது போன்ற ஒரு நம்பிக்கையில் எழுதுகிறான் போலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பாசிடிவ் செய்திகள் 70 வயதுப் பாட்டி, மற்றும் ஆசிரியல் அப்துல் மாலிக் செய்திகள் அருமை. ஆரூர்தாஸ் எழுதியே கல்கியில் படிச்ச நினைவும் இருக்கு. சூர்யா சும்மா போகிற போக்கில் அவர் தன்னைத் தானே எரித்துக் கொண்டதை மட்டும் குறிப்பிட்டிருந்தார்னு நினைக்கிறேன். வீட்டில் இத்தனை பேர் இருக்கையில் அந்தப் பெண் எரிந்தது மட்டும் யாருக்குமே தெரியாமல் போயிருக்கு. அந்த அறை பற்றியும் வர்ணனை இருக்கும். இதன் பின்னர் சிவகுமாருக்கும் அவர் அக்கா குடும்பத்திற்கும் பேச்சு வார்த்தை இல்லை என்ச் சொல்லி இருப்பதாக நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. /உன் தாய் மாமன் என்கிற, பாசமுள்ள அண்ணன் சிவசாமி என்கிற பழனிக்குமார்// சிவகுமார் என்ற பழனிச் சாமியோ?

    கதையை படித்து முடித்தவுடன் இவர் தான் நினைவுக்கு வந்தார்.

    பதிலளிநீக்கு
  9. பெண்ணின் உணர்வுகள் தெரிந்த பின்னும் பணிவிடையை ஏற்றுக் கொண்டு இருக்க கூடாது, தான் தங்கையாய் நினைத்தை சொல்லி இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. அப்துல் மாலிக் அவர்களின் சேவையை பாராட்ட வேண்டும்.
    டியூப் மாஸ்டரின் அன்புக்கு மாணவர்கள் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. //ஒரு தானிய அரிசியை விடப் பெரியது அல்ல. இதயத்தை குணப்படுத்தியவுடன், அது உடலுக்குள் பாதுகாப்பாகக் கரைகிறது - அகற்ற வேண்டிய அவசியமில்லை. இந்த முன்னேற்றம் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மீட்சியை என்றென்றும் மாற்றக்கூடும்//

    நல்ல செய்தி. மிகவும் அவசியமான செய்தி.

    பதிலளிநீக்கு
  12. படிக்க வது இல்லை என்று 12 ம் வகுப்பை 70 வயதில் பூர்த்தி செய்த ராணி அவர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  13. அதற்குப் பெயர் என்ன?
    பாஸிடிவ் செய்திகளா? அவற்றை முதலில் இந்த சனிக்கிழமை பகுதியிலிருந்து மாற்றி வேறு கிழமைக்குக் கொண்டு போங்கள்.
    செவ்வாயையும் சனிக்கிழமையையும் இலக்கியம், எழுத்து, எழுத்து
    சம்பந்தமான பயிற்சிகள், அல்சல்கள் என்றே ஒதுக்கி விடுங்கள். வியாழன்
    இவையெல்லாவறையுமே கலந்து கட்டிய கதம்பமாக இருக்கட்டும்.

    பல ஆண்டுகளாக எபியுடன் தொடர்பு கொண்டிருக்கும் எனக்கு எபியின்
    ஆதார சுருதி வாசகர்களின் எழுத்துத் திறமைகளை ஊக்குவிப்பது என்பதே என்பதை மனதாரப் புரிந்து கொண்டிருக்கிறேன். மற்றவையெல்லாம் தொங்கு சதைகளாக பிற்காலத்தில் வந்து ஒட்டிக் கொண்டவை.

    தொடர்ந்து முழு மூச்சுடன் தளராமல் அந்தப் பணியில் முழுமூச்சுடன் செயல்பட்டால் பதிவுலகில் பழம்பெருமைகளை மீட்டெடுக்கும் ஒரே தளமாக எபி திகழும் என்பது உறுதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயவு செய்து தொங்கு சதைகள் என்ற வார்த்தையை உபயோகிக்காதீர்கள். அது கம்யூனிஸ்ட் ஊடகவியலாளர் மணி, திருமா, தமிழக கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளைப் பற்றி விவரிக்க உபயோகித்த சொற்கள்.

      நீக்கு
    2. எனக்குமே பாசிடிவ் செய்திகளின் மீது ஈர்ப்பு வரவில்லை. எல்லா வாரமும் பணப்பையைக் கண்டுபிடித்து ஒப்படைத்த ஆட்டோக்கார்ர் வருகிறார். ஒரே ஆள் வெவ்வேறு பெயரா என்பது சந்தேகமாஇருக்கு.

      நீக்கு
  14. தினமும் குளம் கடந்து செல்லும் ஆசிரியர் பாராட்டு க்கள் என்று சொல்லமுடியாது முதல் வணக்கம் அவருக்கு.

    கடித மூலம் கதை நகர்வது நன்றாக இருக்கிறது.ஆனால் பணிவிடை செய்வித்து தங்கையாக நினைப்பதை ஜீரணிப்பது சிரமம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!