17.5.25

கரையான் அரித்த ஒரு லட்சம் ரூபாய் மற்றும் நான் படிச்ச கதை

 

அரிய ரத்த வகை நோயாளிக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை: உலகில் முதல் முறையாக மியாட் மருத்துவமனை அசத்தல்

புதுச்சேரி: உலகில் முதல் முறையாக அரிய ரத்த வகை நோயாளிக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை சென்னை மியாட்டில் வெற்றிகரமாக செய்யப்பட்டது.  'பி-பாசிடீவ்' ரத்த வகை கொண்ட மாலத்தீவை சேர்ந்த ஒருவருக்கு கல்லீரல் நோய் இருந்தது. மேலும் அவருக்கு மண்ணீரல் விரிவாக்கம், நீரிழிவு, தைராய்டு, கொழுப்பு மற்றும் இதய நோய்களும் இருந்தன.  கல்லீரலில் சிரோசிஸ் இருந்ததால், அவசர கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. நாள்பட்ட கல்லீரல் நோய் காரணமாக உணவுக்குழாயில் உள்ள நரம்புகள் பெரிதாகி மேல் இரைப்பை குடல் ரத்தப்போக்குக்கு வழிவகுத்தது.  இதனால் ரத்த வாந்தி, அடிக்கடி மூக்கில் ரத்த கசிவு என உயிருக்கு ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டன.  அடிக்கடி மூக்கில் ரத்தம் வடிவதை கண்டு வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் கடைசி நம்பிக்கையாக மாலத்தீவில் உள்ள மியாட் மருத்துவமுகாமிற்கு சென்றார். மியாட்டின் இரைப்பை, குடல்பை நிபுணர்கள் அவரை பரிசோதித்து மூக்கில் ரத்தம் வடிதலை நிறுத்தினர்.  உலகளாவிய ரத்த தானம் செய்பவர்களுக்கான ரத்த வகையான 'ஓ-பாசிடீவ்' ரத்த வகை கொண்ட அவரது மகன் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்ய முன் வந்தார். அதையடுத்து சென்னை மியாட்டில் அவருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை செய்ய பரிசோதனை நடந்தது. அங்குதான் புதிய சிக்கலும் உருவானது.  அதாவது அவருக்கு ஆன்டி கிட் ஜே.கே., (பி) எனும் ஆன்டிபாடி பாசிடீவ் இருப்பது கண்டறியப்பட்டது. இது ஆசிய மக்களிடையே அரிதான ரத்த வகை ஆகும். கிட் ஆன்டிஜன்ஸ் ஆர்.பி.சி,க்கள் மற்றும் சிறுநீரகங்களில் சவ்வில் மட்டுமே வெளிப்படுத்தப்படுகின்றன.  அதன் குறைந்த டைட்டர்கள், நிலையற்ற தன்மை காரணமாக வழக்கமான சோதனையில் கண்டறிவது மிகவும் கடினம்.  இந்த ரத்த குழு கண்டறியப்படாமல் பொருந்தாத ஆன்டி கிட் ஜே.கே.,(பி) ஆன்டிபாடி நெகட்டிவ் ரத்தத்துடன் மாற்றப்பட்டால் உடல் முழுவதும் உள்ள சிறிய நாளங்களில் ரத்த உறைவு, ரத்த போக்கு ஏற்படும்.  மேலும் இத்தகை பொருத்தமின்மை ரத்த சிவப்பணுக்களின் அழிவுக்கும் கடுமையான சிறுநீரக காயம் போன்ற கடுமையான சிக்கல்களுக்கும் வழி வகுக்கும். இதன் விளைவாக மரணம் ஏற்படலாம்.  மியாட் மருத்துவ குழுவினர் இதனை சவாலாக எடுத்துக் கொண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிக்கரமாக செய்து, நோயாளியை காப்பாற்றியுள்ளனர்.  இந்த வெற்றிக்கரமான அறுவை சிகிச்சை செய்த மியாட் இன்டர்நேஷனல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்ட இயக்குநர் கார்த்திக் ராஜ், கல்லீரல் மற்றும் பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்ட இயக்குநர் கார்த்திக் மதிவாணன், ரத்தமாற்ற மருத்துவ துறை தலைவர் ஜோசுவா டேனியல் ஆகியோரை மியாட் இன்டர்நேஷனல் தலைவர் மல்லிகா மோகன்தாஸ் பாராட்டினார்.
=============================================================================================

==================================

அசாமில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு. 


=============================================

நான் படிச்ச கதை / வாசிப்பின் மகத்துவங்கள்                --- ஜீவி - 

ரு பத்திரிகையைப் பார்த்ததும் அதில் கதைகள் இருக்கும் பக்கங்களைத் தேடி வாசிப்பவர்கள் மிகக் குறைச்சலே.  தொடர்கதைகளுக்கு வேண்டுமானால் இந்தக் கணிப்பு மாறியிருக்கலாம்.  போன வாரம் அந்தத் தொடரை எந்த இடத்தில் விட்டோம் என்ற நினைவு உந்துதலில் விட்ட இடத்திலிருந்து அதைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.  பத்திரிகைகளில் வெளிவரும் தொடர்கதைகளின் உயிர் நிலையே இந்த ஆர்வம் தான்.  தற்கால தொலைக்காட்சி கதைத் தொடர்கள் அந்த இடத்தை இப்பொழுது கைப்பற்றியிருக்கின்றன.

ஆனால் இணையப் பதிவுகளில் கதைகள் எழுதுவதும் மற்றும் கதைத் தொகுப்புகளின் வாசிப்பும் பெருமளவில் கூடியிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.  எல்லோரும் எல்லாவற்றையும் செய்யப் பழகிக் கோலோச்சும் காலம் இது.

இருந்தாலும் முக நூல் போன்ற தளங்களில் கதையெல்லாம் வாசிக்கறவர்கள் தாங்கள் வாசித்ததைப் பற்றி நாலு வரி கூட பகிர்ந்து கொள்ளாமலிருப்பது எனக்கு பல சமயங்கள்லே ஆச்சரியமா இருக்கும். இது பற்றி நண்பர்கள் சிலரிடம் பேசியிருக்கிறேன்.  அதுக்கு சிலர் ஏதேதோ காரணங்களெல்லாம் சொல்லியிருக்காங்க.  அதெல்லாம் இங்கே இப்போ வேண்டாம்.

ஒரு கதையை எத்தனை கோணங்கள்லே நம்ம பார்வைலே பாக்கலாம்ன்னு பாக்கலாம்.

[படத்தின் கீழ் இருக்கும் அவர் ;பெயரை க்ளிக் செய்தால் அவர் பற்றிய விவரங்கள் பற்றி படிக்கலாம்!]

இதோ கீழே இருக்கு ஒரு அழகான சிறுகதை.  'கல்கி' பத்திரிகைலே பிரசுரமானது.  ஜெயந்தி சங்கர் அவர்கள் எழுதியது. வாசிப்பது என்பது ஒன்றே ஆனாலும் வாசிப்பனுபவம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி,  சொல்லப் போனால் அது தான் கதைகள் மாதிரியான கற்பனைப் படைப்புகளின் சிறப்பே. இந்த சிறுகதையைப் படிச்சிட்டு 'இந்தளவு  எடுப்பா எழுதிட்டு இவ்வளவு சாதாரணமா முடிச்சிட்டாங்களே, இதை விட இப்படி நல்லா முடிச்சிருல்லாமே'ன்னு நீங்க வேறொரு முடிவைக் கொடுக்கலாம்.  சில எழுத்தாளர்களுக்கோ வாசகர்கள் எதிர்பார்க்காத 'திடுக்' முடிவுகளைக் கொடுத்து அவங்களை திகைக்க வைக்கறதிலே தனி குஷி.  அந்த மாதிரி ஒரு எதிர்பாராத முடிவை இந்தக் கதைக்குக் கொடுக்க உங்களுக்குத் தோணலாம்.

இந்த மாதிரி ஆசைகளை நிறைவேற்றிக்கத்தாங்க இப்ப இந்த சான்ஸ்.

நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதான்.  ஆற அமர இந்தக் கதையை வாசியுங்கள்.  கதாசிரியர் இந்தக் கதைக்குக் கொடுத்திருக்கிற முடிவுக்கு மாற்றாக இன்னும் சுவாரஸ்யமான வாசிக்கிறவர்கள்  எதிர்பார்த்தேயிருக்காத மாதிரி கதை முடிவு ஏதாச்சும் உங்களுக்குத் தோணினா  கதாசிரியர் எழுதியிருக்கிற இந்தக் கதை முடிவிலே நீங்க நினைக்கிற இடத்திலே கட் பண்ணி அதற்கு மேலே கதை தொடர்கிற தொடர்ச்சி மாதிரியே நீங்க எழுதி கதையை முடிக்கணும்.  அவ்வளவு தான்.

நம்ம எழுத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ள தாங்க இந்த மாதிரி முயற்சிகளெல்லாம்.  வழக்கம் போல எபிக்கும் அதிலே தனி சந்தோஷம்.

இதோ கதை:

https://www.sirukathaigal.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/

நன்றி sirukathaigal.com

42 கருத்துகள்:

  1. அழகான சிறுகதைதான். சிங்கப்பூரில் இருந்தவளை மீண்டும் உள்ளூரில் பார்ப்பது, அண்ணணுக்கான பெண்ணாக வருவது என்பதெல்லாம் கொஞ்சம் அதீதம்தான்.

    கதையின் முடிவை வேறு மாதிரி யோசிக்கலாம். கதை படிக்கும்போதே, எனக்கு கார்த்திக்-திவ்யா என முடிவுறுமோ எனத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது மட்டுமல்ல, அண்ணன் பார்க்கப்போவது தீபாவைத்தான் என்பதும் எளிதாக புரிகிறது.

      நீக்கு
    2. நெல்லை, உள்ளூரில் பார்ப்பது எல்லாம் பெரிய விஷயமில்லை. என் தங்கையின் மகள் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்த பிறகு, அவளுக்கு அங்கு பழக்கமானவங்களும் இங்கு ஷிஃப்ட் ஆகியிருப்பது அதுவும் சென்னைக்கே... என்பது 5 வருடங்களுக்குப் பிறகு தெரியவந்து, அதுவும் அவள் இருக்கும் குடியிருப்பிலேயே எஎன்ற ஆச்சரியமும் உலம்க மிகச்சிறியதுன்னு சொல்லறது சரிதான் போலன்னு என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அதிலும் பாருங்க, கதையில் வருவது போன்ற கல்யாண சம்பந்தம் உட்பட.

      நான் க்தையைப் பற்றி அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன். உளவியல் பற்றி அவள் கவுன்சலராச்சே! அப்ப இதையும் சொன்னாள்.

      கீதா

      நீக்கு
  2. ஏஐ தொகுப்பாளர்.... வழங்கி வருகிறாரா இல்லை வழங்கி வருகிறதா? அஃக்ரிணையாக்கிட்டாரே..

    ஏஐ மூலம் இந்த மாதிரி வேலைக்கு ஆபத்து வருவது நல்லதா கெட்டதா? புதனில் பதிலளிப்பாரா?

    பதிலளிநீக்கு
  3. கரையான் அரித்த ஒரு லட்சம்..... புதைத்து வைத்த என்பதற்கு உபயோகிக்காமல் பாதுகாத்து வைத்த என்று அர்த்தம் என எண்ணியிருந்தேன். நிஜமாகவே புதைத்திருக்கிறாரே.

    பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும் கேடுகெட்ட......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்குத் தெரிந்த பாதுகாப்பான வழி.  இதற்கு லாரன்ஸே தேவை இல்லை.  வங்கிக்கு சென்று இவரே மாற்றிக் கொண்டிருந்திருக்கலாம்.

      நீக்கு
  4. வழக்கமான வாசகர் பின்னூட்டம் போலல்லாமல்
    கதை எழுதுகிற மாதிரியே பின்னூட்டங்கள் அமைந்தால் எதைச் சொல்லி இந்தக் கதையை அறிமுகம் செய்தேனோ அந்த ஆசை நிறைவேறும்.

    பதிலளிநீக்கு
  5. ஒரு குறிப்பிட்ட இடதுக்குப் பிறகு,

    "ஹேய்..  தீபா...  நீயா?"

    "நான் தீபா இல்லை.  ஷோபா.  ஓ..  உங்களுக்கு தீபாவைத் தெரியுமா?"

    "தெரியுமாவா?  என்னோட படிச்சா..  என்ன அப்போ ஒரு வழியாக்கிட்டா..."

    "ஓ..  புரிகிறது.  அவள் குணத்தால் பாதிக்கப்பட்டவர்களில் நீங்களும் ஒருவரா...  நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.  ஆக்சுவல்லி நாங்க ட்வின்ஸ்.  அவளோட குணத்தால் அவளுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும்.  அதனால் அவளை என் சித்தப்பா கூட்டிப்போய் அவர் வளர்த்தார்.  அவருக்கு குழந்தைகள் இல்லை."

    "ஓ..  இப்போ எங்கே இருக்கா தீபா?  எப்படி இருக்கா?"

    "எங்கே இருக்கா அப்படிங்கற கேள்விக்கு பதில் இல்லை.  அவளுக்கு கல்யாணம் ஆனது.  ஜென்மத்தோடு பிறந்த குணம் மாறாதும்பாங்க இல்லையா?  அவளுக்கு அவளோட ஹப்பியோட ஒத்துப்போகலை.  மூணே மாசத்துல சண்டை போட்டுக்கிட்டு பிரிஞ்சு வந்துட்டா.  அப்புறம் டிவோர்ஸும் வாங்கினா.  அடுத்து என்ன, அடுத்து என்னன்னு அப்பா, சித்தப்பால்லாம் கேட்டுகிட்டே இருக்காங்கன்னுட்டு 'என் வாழ்க்கையை நானே அமைச்சுக்கறேன்'னு எழுதி வச்சுட்டு எங்கேயோ போயிட்டா..  வேலைலயும் அப்படிதான்.  எத்தனை கம்பெனி மாறுவா தெரியுமா?  எங்கேயும் ஒத்துப்போகாது அவளுக்கு.  தேடாத இடம் இல்லை..  எங்கே இருக்காளோ?"

    "ஓ..  இந்த வாணி ராணி, சீதா அவுர் கீதா படத்தில் எல்லாம் வர்ற மாதிரி நீங்க ரெண்டு பெரும் எதிரெதிர் துருவங்களா குணத்தில்?  பரவாயில்லை, அண்ணன் கொடுத்து வச்சிருக்கார்"

    ஷோபா தலை குனிந்தாள்.  அவள் முகம் நாணத்தில் சிவந்திருக்கிறதோ என்று கார்த்திக்குக்கு சந்தேகமாக இருந்தது.

    "திவ்யாவும் கொடுத்து வச்சிருக்கா போலிருக்கே.."  - தலைகுனிந்தபடியே மெல்லிய குரலில் சொன்னாள் ஷோபா.

    திவ்யா நிஜமாகவே சிவந்தாள்.  மனதுக்குள் நன்றி சொன்னாள்.

    "இப்போ இங்கே யாரோட இருக்கீங்க ஷோபா?"

    "அப்பா சித்தப்பா எல்லாம் அடுத்தடுத்து போயிட்டாங்க..   இந்தியா வந்து தனியாத்தான் இருக்கேன்"

    கவலை வேண்டாம்.  இனி நீங்கள் தனி இல்லை"

    தீபா மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டாள்!  'கெஜட்டில் உட்பட பெயர் மாற்றியது நல்லதா போச்சு'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! கோடு போடச் சொன்னா, ரோடே போட்டிருவீங்க போல இருக்கே! ஜமாயுங்கள்!

      நீக்கு
    2. எபி எழுத்தாளர்களே!
      ஒன்று கூடுங்கள்!..
      நமது எழுது தளம் இதுவென்றே
      சிந்து பாடுங்கள்!

      நீக்கு
    3. ஸ்ரீராம், நல்லாருக்கு உங்க முயற்சியும். அதுவும் முடிவு!!!!

      கீதா

      நீக்கு
    4. ஸ்ரீராம் உங்களுக்கு டக்கென்று எழுத வருகிறது. அதுக்குப் பாராட்டுகள், ஸ்ரீராம். இப்படி இந்த ரீதியில் எனக்குச் சிந்திக்கவே வரலை, வரமாட்டேங்குது!!!! ஸ்ரீராம்.

      இனி மாலையில் கூட வர முடியுமா தெரியவில்லை....

      கீதா

      நீக்கு
    5. தி. கீதா,
      ஸ்ரீராமிற்கு எபி சரியான பயிற்சிக் களம். கொஞ்சம் கூட சோப்பி விடாமல் எவ்வளவு எழுதறார்? போதாக்குறைக்கு நிறைய வாசிக்கவும் செய்கிறார். வாசிப்பவற்றை எபியில் உபயோகப்படுத்திக்கவும் செய்கிறார். அவர் அப்பா வழி அடுத்த தலைமுறைக்குத் தொடர்ந்திருக்கும் பழக்கம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.

      நீக்கு
  6. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். ஜீவி சார் எ பி வாசகர்கள் எல்லோரையும் சிறுகதை எழுத்தாளர்கள் வட்டத்திற்குள் கொண்டு வந்து விட்டார். ஆனால் நிஜம் அப்படியில்லை. பின்னூட்டம் என்ற முறையில் அவர் கதையைப் பற்றி கருத்துக்கள் கூறாமல் ஒரு பொது அழைப்பு விடுத்திருக்கிறார். அதுவும் நன்றே. ஒரு சிறுகதை ஆராய்ச்சி அரட்டை அரங்கமாக அமையும். ஆனால் அப்படி இங்கு இன்று உண்டாவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.

    கதையைப் பற்றி எனது கணணோட்டம்.

    கதை இரண்டு பெரிய நகரங்களை இணைக்கிறது. இரண்டு வேவேரறு காலகட்டங்களில் நடந்தவை இணைக்கப்படுகின்றன. எல்லாம் சரி.ஆனால் சில நிகழ்ச்சிகள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டு கதையின் போக்கை திடீரென்று மாற்றுவதை பொறுக்க முடியவில்லை.

    நான் நினைத்த மற்றுமொரு முடிவு. ரோஜா அரவிந்த சாமியின் முடிவு. அக்காவை பெண் பார்க்க வந்து தங்கையை மனம் முடிக்கும் முடிவு. அதற்க்கு கதையின் சிங்கப்பூர் நிகழ்ச்சிகளை மாற்ற வேண்டியிருக்கும்.

    மொத்தத்தில் ஆசிரியருக்கு சரளமாக எழுத வருகிறது. எடுத்துக்கொண்ட கருவும் வித்தியாசம் தான். ஆனால் irony of time கொஞ்சம் உதைக்கிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெஸி ஸார்! வழக்கமாகப் போய்க் கொண்டிருக்கும் வண்டிப் பாதையிலிருந்து விலகி சட்டென்று எதிர்பட்ட குறுக்குச் சந்தில் ஒரு பாய்ச்சல். அவ்வளவு தான்.

      நீக்கு
  7. கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை பாராட்ட வேண்டிய விஷயம். மருத்துவர்களுக்குப் பாராட்டுகள்.

    கரையான் அரிச்ச நோட்டுகளை கலெக்டர் மாற்றித் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறாரே, நல்ல விஷயம். அவர்களுக்குத் தெரியவே இல்லை பாவம் பாதுகாக்கும் முறை. வங்கியில் போட்டிருக்கலாம். இனியாச்சும் விழிப்புணர்வு வந்தால் நல்லது.

    லாரன்ஸ் உதவியது எக்ஸ்ட்ராவாக உதவுமாக இருக்கும்.

    ஏ ஐ சில துறைகளில் நன்று. முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாத வளர்ச்சி.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. சிறு கதை அழகான சிறுகதை. எழுதியிருக்கும் விதமும் நன்று.

    முடிவை டக்கென்று யூகிக்க முடிகிறது என்பதோடு, மற்றொரு பெண்ணும் முக்கிய கதாபாத்திரத்தோடு இணைவாள் என்ற ஊகமும் தெரிந்துவிடுகிறது.

    கதையின் கரு வித்தியாசமான ஆனால் ஆழமான ஒன்று. உளவியல் சார்ந்த ஒன்று. நெடுங்கதையாக வர வேண்டிய ஒன்று என்பதால் சிறுகதையாக்கும் போது சில சங்கடங்கள் இருக்கும். அந்த சங்கடம், டக்கென்று முடிவு. ஹெவியாகத் தொடங்கிவிட்டு just like that முடித்துவிட்டார். இது அப்படி முடியும் காரியமல்ல அவர் முதலில் சொல்லியிருக்கும் அந்தக் காரணம். இளம் வயதில் மனதில் பதிபவை அப்படி டக்கென்று மாறுவது சிரமம். நிறைய விஷயங்கள் பேசப்பட வேண்டும்.

    கூடவே இது நம் கலாச்சாரம் சார்ந்த, ஒரு குடும்பத்தில், அதுவும் 2005 ல் நிகழும் கதை என்பதால், அப்போதைய உளவியல் முன்னேற்றங்கள் சார்ந்து கதையை நகர்த்தாமல், கொண்டு சென்றிருந்திருக்கிறார். அதனால்தான் முடிவு இப்படியாகி இருக்கிறது.

    எனக்குத் தோன்றுவதை இப்போது எழுத சிரமம் ஜீவி அண்ணா. அதுவும் இன்று எல்லாம் இங்கு சட்டென்று கொடுப்பது சிரமம்.

    வீட்டில் உரையாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதாக இருக்கும் போது, அவர்களின் வேலைகளுக்கு அதைச் சார்ந்த உரையாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதாக இருக்கும் போது, என் கற்பனைகள், எழுத்துகள் பின்சென்றுவிடுகின்றன. என் ஆர்வங்கள் இரண்டாம் மூன்றாம் பட்சம் எனும் நிலையில், பின் தங்குகின்றன.

    இக்கதையை என் போக்கில் எழுத நேரம் எடுக்கும், ஜீவி அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சிறு உதாரணம்- இரண்டு நாட்களுக்கு முன், பாதியில் இருந்த கதைகளை முடிக்க எழுத எடுத்து வைத்து அதில் ஆழ்ந்திருந்த போது, வீட்டில், இன்று ஃப்ளிப்கார்ட் வரும் Descaler powder வரும்.....என்று சொன்னது என் மனதில் ஏறவே இல்லை. நான் முழித்தேன் குரல் கேட்டு. மீண்டும் சொன்னார். ம்ஹூம் .....எனக்குச் செவி கேட்கலை என்று நினைத்ச்சுட்டாங்க. பேட்டரி மாத்தணுமா, மெஷின் போட்டுக்கலையா இப்படி....போய்.... நான் வேறு சிந்தனைல இருந்தேன்னு சொன்னதும்....நல்ல திட்டு வாங்கிக் கொண்டேன்!!!!! அங்கு அறுந்த நூல் இன்னும் ஒட்டவில்லை!!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    2. ​ரங்கன் திட்டு என்பது இதுதானோ?

      நீக்கு
    3. /அங்கு அறுந்த நூல் இன்னும் ஒட்டவில்லை!!! ஹாஹாஹா/

      நாம் சிந்தனையில் ஒன்றும் போது கேளாத செவி இன்னமும் செயல்படாமல்தான் போகிறது. உங்கள் கருத்தை படிக்கையில் அந்த இடத்தில் நானும் இருந்தேன். இப்படிப்பட்ட நிகழ்வுகளில், என்னிடமும் பல நூல்கள் அறுந்த நிலையில் உள்ளன. ஹா ஹா ஹா.

      நீக்கு
    4. ஜெ கே அண்ணா, சிரித்துவிட்டேன்.

      கமலாக்கா, உண்மையாகச் சொல்லணும்னா உங்களையும் என் செட்டில் சேர்த்துக் கொண்டுதான் சொன்னேன் அக்கருத்தை. ஆனால் வெளிப்படையாக இங்குச் சொல்லவில்லை ....எனக்குப் புரிந்து கொள்ள முடியும்.

      அக்கா செவி இன்னமும் செயல்படாமல்தான் போகிறது என்பதை விட, அங்கு நமக்குச் சத்தம் கேட்குமே....ஆனால் என்ன சொல்லப்படுகிறது என்பதில் கவனம் செல்லாது. அப்ப நம்ம மைண்ட் வேறொரு விஷயத்தில் மூழ்கி வேறு ஒரு உலகில்!!! எனவே சத்தம் கேட்டாலும் இதில் கவனம் செல்லாது....அது தவறாகப் புரிந்து கொள்ளப்படும் காது கேட்கலை அப்படின்னு...மைன்ட் தான் அங்கு ...

      கீதா

      நீக்கு
    5. தினமும் தான் இருக்கு இந்தப் பின்னூட்டம். ஒரு நாளைக்கு மாறுதலா கதையைத் தொட்டு நீங்க முயற்சி செய்வீங்கன்னு எதிர் பார்த்தேன், சகோ.

      நீக்கு
    6. கதையாக எழுதாமல், (எழுதினால் பதிவு போல நீளும்) சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன் ஜீவி அண்ணா, கீழே அது ஒரு முடிவு.

      கீதா

      நீக்கு
  9. கதாசிரியர் சிங்கப்பூர் வாசி என்று தெரிகிறது. பிரமிக்க வைக்கிறார்.

    எல்லாவற்றிற்கும் வீட்டுச் சூழல் துணை நிற்க வேண்டும் அல்லது நம் ஆளுமையை, ஆர்வங்களை, திறமைகளை முன்னிறுத்தத் தெரிய வேண்டும் என்பது பல பெண் எழுத்தாளர்களைப் பற்றி வாசிக்கும் போது நான் அறிகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. இக்கதையில் இரண்டு உளவியல் பிரச்சனைகள் இருக்கின்றன. ஒன்று தீபாவின், தான் தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற அந்தக் குணம்.

    இரண்டாவது, கார்த்திக்கின் மனதில் விதைக்கப்படும் பயம். இரண்டுமே இன்னும் கொஞ்சம் விவரமாகக் கையாளப்பட்டிருக்கலாமோ என்று தோன்றியது. கதை தொடங்குவது அண்ணனுக்குப் பெண் பார்ப்பதில், கார்த்திக்கின் மனதில் விதைக்கப்படும் பயம், இரண்டுமே பருவ வயதில் 6 ஆம் வகுப்பு 12 வயதில் - அப்புறம் ஃப்ளாஷ் பேக், டக்கென்று 12-15 வருடங்களுக்குப் பின் கதை ஷிஃப்ட் ஆகி வருகிறது.

    என்னதான் திவ்யா // உன்னோட பேசின ஒங்கண்ணாவும் ஒங்கம்மாவும் உன் மனசுல பயம் மட்டுமே வரும்படி பேசியிருக்கா. இதப் பத்தி உனக்கு சரியா யாரும் சொல்லல்லன்னு நா நெனக்கறேன்,”//

    என்று சொல்வதிலும், தீபா இப்போது அப்படி இல்லை என்று சொல்வதாகவும் சொல்லும் காரணங்கள் எல்லாம், சிறுகதைக்காகச் சுருக்கிவிட்டார் என்றே தோன்றுகிறது.

    இப்படி மாறுவது இயல்பானதாக இருந்தாலும், கதையை, ஜீவி அண்னா சொல்லியிருப்பது போல் வேறு கோணத்தில் பார்க்கும் போது வித்தியாசப்படும். முடிவு இப்படி இல்லாமல் வேறாகிவிடும். குடும்ப ரீதியில் பார்த்தாலும் சரி உளவியல் ரீதியில் பார்த்தாலும் சரி,

    கீதா

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பாராட்டப்பட வேண்டிய விஷயம். குணமான நோயாளிக்கும், குணப்படுத்திய மருத்துவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    நடிகர் லாரன்ஸ் மூலம் உதவித்தொகை பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    இன்றைய கதை பகிர்வும் நன்றாக உள்ளது. காலையிலேயே சுட்டி மூலம் சென்று படித்து வந்தேன். தலைப்பும் கதைக்கேற்ற மாதிரி நன்றாக உள்ளது. இதற்கேற்றாற் போல உடனடி மாற்று கதை ஒன்றை சட்டென எழுதிய சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. மாலையில் வர முடியாது. இப்ப ஒருசின்ன இடைவெளி அடுத்து மதியம் சாப்பாடு...அப்புறம் வீடியோ மேக்கிங்க்....கிடைத்த இடைவெளியில் கருத்துகள் போட்டுவிட்டு ஓடுகிறேன்.

    இக்கதையில் எனக்கு 3, 4 விதமாக எழுதலாம் என்று மனதில் வந்தது. அதில் ஒன்றை சுருக்கமாகக் கதை அம்சத்தைச் சொல்லிவிடுகிறேன். கதையை எழுதுவது போன்று இல்லாமல். ஏனென்றால் கதை நீண்டுவிடும்.

    கார்த்தி தன் அம்மாவிடம் வந்து தீபா மிரட்டியதைச் சொல்கிறான். அவன் அம்மாவுக்குப் புரிகிறது. கார்த்தியிடம் பயப்பட வேண்டாம் என்று அவனுக்குப் பக்குவமாகச் சொல்லிவிட்டு தீபாவின் அம்மாவிடம் பேசலாம் என்று நினைக்கிறாள். தீபாவின் அம்மாவிடம் சொன்னதும் (இந்த இடத்தில் எனக்கு வேறு வேறு கோணங்கள் மனதில் வந்தன அதை ஒட்டி கதை நகரும். அப்பா இல்லாத பெண்/ செல்லம் கொடுக்கப்பட்ட பெண்/ அப்பா செல்லம் கூடுதல் தவறுகள் கண்ணை மறைக்கும் அளவுக்கு/ அப்பா ஓகே ஆனால் அம்மா பெண்ணியவாதி/ அப்பா அம்மாவுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள்/ இப்படி ஒவ்வொரு வகையில் தீபா எப்படி பாதிக்கப்படுகிறாள் என்பதை வைத்து)
    தீபாவின் கேட்டுக் கொள்கிறாள் தீபா ஒரே பெண் செல்லம் கூடுதலாகிவிட்டது தெரிகிறது....கவனிக்கிறேன் என்று சொல்கிறாள். போட்டி நல்லது ஆனால் அது வன்முறையாகக் கூடாது.......அதன் பின் கார்த்தி குடும்பம் இந்தியாவுக்கு வந்துவிடுகிறார்கள். அவளைப் பற்றி மறந்துவிடுகிறான் கார்த்தி. இயல்பாக எல்லா பையன்களைப் போன்றும் இருக்கிறான்.

    இப்ப அவன் அண்ணாவுக்குப் பார்க்கப்பட்ட பெண் தீபா தான் என்று திவ்யா மூலம் தெரிந்ததும் திவ்யாவிடம் கேட்கிறான்...பக்குவமாகக் கேட்கிறான். திவ்யாவிடம் இருந்து அவன் அறிவது, ஸ்கூல் ஃபைனல் இயரில் தீபா இரண்டாம் இடம் வந்ததை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...என்பதையும் திவ்யா சொல்கிறாள்...அதன் பின் திவ்யாவிற்கு அதிகம் தெரியாது ஆனால் அவளுக்கு கவுசலிங்க் செய்தார்கள் என்றும் அது தொடரப்பட்டதா என்பதெல்லாம் தெரியவில்லை என்றதும் கார்த்தி தன் அம்மாவை அழைத்து தீபாதான் அப்பெண் என்று சொல்கிறான். அவன் அம்மா, அவனிடம், பரவாயில்லை அது ஸ்கூல் ஃபைனலில் தானே...10 வருடம் மேல் ஆயாச்சு அவள் வேலையும் பார்க்கிறாள்... நாம் ஓபன் மைண்டோடு போவோம்....தீபா அப்படித்தான் இருப்பாள் என்ற எண்ணத்தோடு வேண்டாம்...என்று சொல்லி ஏற்பாட்டின் படி பார்க்கிறார்கள். கார்த்தி அங்கு வந்து அறிமுகம் ஆகிப் பார்த்ததுமே தீபாவுக்கு தெரிந்துவிடுகிறது. அதிர்ச்சி.. .கார்த்தியின் அண்ணனாகவே இருந்தாலும் , அவள் தன் பெற்றோரிடம் இந்த பையனைப் பிடிக்கலை வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள்...தீபாவுக்குக் குற்ற உணர்வா இல்லை அவள் மன நிலை மாறவில்லையா!?

    இது சுருக்கமாக....உரையாடல்கள் நிகழ்வுகள் என்று போகும் போது கதையின் அமைப்பில் வரும் போது அது வேறுபடும்.. நிறைய வெர்ஷன்ஸ் ப்ராக்கட்டில் கொடுத்திருப்பதன் அடிப்படையில் ஒவ்வொன்றின் அடிப்படையிலும் கதை நகரும் போது வேறாக வரும் முடிவுகள்....என் மனதில் எழுந்தன....ஆனால் எல்லாம் இங்கு எழுத முடியலை

    கீதா

    பதிலளிநீக்கு
  13. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வைத்தியர்களுக்கு பாராட்டுகள்.

    பணத்தை பாதுகாப்பு என கருதி புதைத்துவைத்த பெண் உதவும்கரங்களால் காப்பாற்றப்படுகிறார்.

    பதிலளிநீக்கு
  14. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்தத் தளத்திற்கு வரும் அத்தனை
    பேரும் எழுத்தாளர்கள் தான்.
    சமீபத்தில் தான் கமலா ஹரிஹரன், தி. கீதா, நெல்லைத்தமிழன் ஆகியோரின் கதைகளை வாசித்த நினைவும் இருக்கிறது.
    அதனாலேயே இப்படி ஒரு முயற்சி.
    பின்னூட்டங்கள் போடுவது தான் எப்பவும் இருக்கிறது.
    ஒரே விஷயத்தை வழக்கத்திற்கு மாறாகச் செய்தால் மற்றவர்களின் கவனத்தை அது கவரும் பாங்கே அலாதி தான்.
    'குமுதம்' பத்திரிகையின் வெற்றியும் இந்த மாதிரி மாறுபட்ட விதவிதமான முயற்சிகளாலேயே என்பதும் உங்களுக்குத் தெரிந்தது தான்.
    ஆக வித்தியாசமான எந்த முயற்சியும் வரவேற்பைப் பெறும் தான்.
    வருங்காலத்தின் வயிற்றில் இருப்பதை யாரே அறிவார்?
    பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  15. ஸ்ரீராம்... ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. உங்கள் பகுதியோடு சேர்ந்து கதை நிறைவைத் தருகிறது (நல்ல திருப்பத்தோடு கதை படித்த நிறைவு). பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீராம் எழுதியிருக்கும் பகுதியைச் சேர்க்காமலேயே ஜெயந்தி சங்கர் அவர்கள் எழுதியிருக்கிற கதை நிறைவாகத் தான் இருக்கிறது, நெல்லை.

    பதிலளிநீக்கு
  17. ஜெயந்தி சங்கர் எழுதியிருக்கிற கதையை அடி நாதமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவர் எழுதியிருப்பதற்கு மாற்றுக் கதையல்ல நாம் எழுதுவது. இந்த அடிப்படை உண்மையில் நாம் தெளிவாய் இருக்க வேண்டும். மின்னல் கீற்று வெட்டி விட்டுப் போவது போல வாசிப்புக்கு நேர்த்தியாய் மூலக்கதைக்கு ஒட்டி வருகிற மாதிரி இன்னொரு பார்வையாய் நாலே வரிகள். அதை கதை ரூபத்தில் எழுதினால் அது சிறுகதைகள் எழுத முயற்சிக்கும் நமக்கெல்லாம் ஒரு பயிற்சியாக இருக்குமே என்ற ஆதங்கத்தில் தான் இந்த முயற்சி.
    இதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையின் தலைப்பு 'பின் ஸிட்' இல்லையா? அதற்கு பொறுத்தமாகவே கதைத் தொடர்ச்சியைப் பார்க்கலாம்.

      நீக்கு
    2. "ம்.. திவ்யா, வா போகலாம். சொல்லு, ஒன்னை எங்க ட்ராப் பண்ணட்டும்?" என்ற கார்த்திக்கை நிமிர்ந்து பார்த்தாள் திவ்யா,

      "இப்பத்தான் கோபி ஃபோன் பண்ணினான், கார்த்திக்!. ரெண்டு பேருக்கும் டிக்கெட் ரிசர்வ் பண்ணியிருக்கானாம். சினிமாக்குப் போலாம்ன்னு சொன்னான்.." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே டெவலப்மெண்ட் செக்ஷன் கோபி ஸ்டைலாக வந்து அவளுக்கு நெருக்கமாக தன் ஜாவாவை நிறுத்தினான். செக்கச் சிவந்த உயரமான அரும்பு மீசை கோபி.

      "பாக்கலாம், கார்த்திக்.." என்று சகஜமாக அவனுக்கு கையசைத்து வண்டி பின் ஸீட்டில் கோபி முதுகுப் பக்கம் மார்பு உரச அமர்ந்த திவ்யாவின் முகத்தில் திடுதிப்பென்று அலாதியான களை வந்து உட்கார்ந்த மாதிரி இருந்தது அவனுக்கு. கோபியும் இவளும் இப்படிப் பழகுவது தனக்குத் தெரியாமலே போச்சே என்ற வருத்தம் லவலேசமும் இல்லாத வெறுமை அவன் மனசை ஆக்கிரமித்திருந்தது. அவனைப் போலவே அம்மாவுக்குப் பிறகு ஆள் அமர்ந்த சுமை அற்ற வெறுமையாய் அவன் பைக் பின் ஸிட்டும்.

      இன்னொருத்தரும் சம்பந்தப்பட்டிருக்கிற எந்த விஷயத்தையும் அந்த பிரக்ஞை இல்லாமல் தன் போக்கிலியே சிந்திக்கும் வழக்கத்தை இனிமேலாவது மாற்றிக் கொள்ள வேண்டுமென்று வைராக்கியம் பூண்டான் அவன்.

      நீக்கு
    3. ஆமாம்.  தலைப்பை வைத்து வேறு மாதிரி பின்னியும் இருக்கலாம்.  ஆனால் கார்த்திக்குக்கு எதிர்பார்ப்பு இல்லை என்று என் மனதில் படவில்லை.  எதிர்பார்ப்பு இருப்பதாகவே கணக்கிட்டேன்.  அவனை ஏமாற்ற விரும்பவில்லை!  
      நம் கதையை எடுத்துக் கொண்டு ஆளாளுக்கு கதையை மாற்றுகிறார்கள் என்றால் படைத்த எழுத்தாளருக்கு எப்படி இருக்கும் என்கிற சிந்தனையும் மனதில் ஓடுகிறது...

      நீக்கு
    4. ஜீவி அண்ணா, //இந்தக் கதை முடிவிலே நீங்க நினைக்கிற இடத்திலே கட் பண்ணி அதற்கு மேலே கதை தொடர்கிற தொடர்ச்சி மாதிரியே நீங்க எழுதி கதையை முடிக்கணும். அவ்வளவு தான்.//

      நான் இதை சரியாக அதாவது "இந்தக் கதை முடிவிலே" என்பதை மனதில் கொள்ளாமல், "நீங்க நினைக்கிற இடத்திலே கட் பண்ணி அதற்கு மேலே கதை தொடர்கிற தொடர்ச்சி.....இதை மனதில் கொண்டுவிட்டேன் அதான் அப்படி கொஞ்சம் முன்னரே கதையை கட் பண்ணி சொல்லியிருகிகிறேன்....

      நான், கதையின் அடி நாதமாகிய அந்த மனம் சம்பந்தப்பட்ட விஷயத்துக்குப் போய்விட்டேன். மாற்றி சிந்திக்க வேண்டும் என்று ஒரு பாடம்.

      ஆனால் அதே சமயம், ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல்

      // நம் கதையை எடுத்துக் கொண்டு ஆளாளுக்கு கதையை மாற்றுகிறார்கள் என்றால் படைத்த எழுத்தாளருக்கு எப்படி இருக்கும் என்கிற சிந்தனையும் மனதில் ஓடுகிறது...//

      இது என் மனதிலும் ஓடியது.... கதையை வாசிக்கும் போது ஒரு ஒன் லைன் நம் மனதில் தோன்றலாம். அதை வேறு வெர்ஷனாக....அல்லது தனிக் கதையாக எழுதலாம் என்றும் தோன்றியது.

      அப்படி ஒரு கதைக்கான கருத்தை இங்கு போட்ட போது நானும் ஸ்ரீராமும் பேசிக் கொண்டோம். அதே கதையை வேறு வெர்ஷனில் ஆனால் கருவை, பெயர்களை மாற்றாமல் எழுத முயற்சிக்கலாம் என்று ...என்னிடம் சொல்லி நானும் அதை ஒரு பக்கம் எழுதியும் வைத்தேன். தொடராமல் இருக்கின்றது.

      கீதா

      நீக்கு
    5. ஜீ வி அண்ணா, உங்கள் முடிவும் அதாவது அவரது முடிவை வைத்துக் கொண்டே தொடர்ச்சியாக எழுதியது நன்றாக உள்ளது. ஆனால் இங்கும் ஸ்ரீராம் சொன்னது போல் கார்த்தியின் மனதிலும் திவ்யாவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது என்றே தோன்றியது.

      கீதா

      நீக்கு
  18. ஆமாம்.. ஈர்ப்பு ஏற்பட்டது தான். அவன், திவ்யா என்று இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவன் மட்டுமே (வண்டி பின்சீட்டைக் கூட பகிர்ந்து கொள்ளத் தயங்கி) கொண்ட ஈர்ப்பு அது!

    அதனால் அவனுக்கேற்பட்ட ஞானோதயம் தான் கடைசி வரிகள்!

    பதிலளிநீக்கு
  19. இந்த புது மாதிரி யோசித்த பகுதியில் பின்னூட்டமிட்டு கலந்து கொண்ட எல்லோருக்கும் என் நன்றி. அடுத்து வேறு மாதிரியான ஒரு பயிற்சிப் பகுதியில் கலந்து கொள்ளலாம் நண்பர்களே! நன்றி.

    பதிலளிநீக்கு
  20. சிறுகதை பகிர்வு நன்றாக இருக்கிறது.
    ஸ்ரீராம் கதையும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!