29.5.25

மேங்கோ ஜூஸ், பைனாப்பிள் ஜூஸ், லெமன் ஜூஸ், பின்னே வாட்டர்மெலான் ஜூஸ்... அப்புறம் கொஞ்சம் காஃபி

 

சென்ற வாரம் உண்ணும் விழா நாட்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.  அது செவ்வனே நிறைவேறியது.  முதல் திருமண வரவேற்பு படா ஆர்ப்பாட்டம்.  

போகும் வழியில் நெல்லையில் கடையில் கருப்பட்டி காஃபி சாப்பிடலாமா என்று யோசித்து, பின் அந்த எண்ணத்தைக் கைவிட்டு நேராக வரவேற்பு நடக்குமிடம் சென்று விட்டோம்.
                                                 
வரவேற்பு ஹால் உள்ளே சென்றதும் முதலில் இருந்த காஃபி சுவைத்து விட்டேன்.  ஆனால் நான் எப்போதுமே எதிர்காலத்தை யோசிப்பவன்!  எனவே காஃபி சுவையை நாக்குக்கு அறிமுகப்படுத்தும் அளவு எடுத்தேனே தவிர, கப் நிறைய எடுக்கவில்லை.  நானே ஒரு கப்பை எடுத்து அதில் ஒரு சிட்டிகை சர்க்கரை போட்டு கப்பில் காஃபி எவ்வளவு இருக்க வேண்டும் என்று விரல்களால் கோடிட்டு வாங்கினேன்.  

நார்மல் காஃபி வித் 'லோ...' சுகர்.  இது நம்ம சுவை.  

சிலர் சர்க்கரை கம்மியா என்றதுமே டிகாக்ஷனை அடித்து விட்டு 'இஷ்ட்ராங்' காஃபியாக கொடுக்க முயல்வார்கள்.  தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அவர்களின் புரிதல் அவ்வளவுதான்.  ஏன், இதற்கு அடுத்த கல்யாணத்தில், என்னோடு பிளேடு போட்டுக்கொண்டிருந்த உறவு ஒன்றே அப்படிதான் கேட்டு வாங்கி பெருமையாகக் குடித்தது!  அவரைப்பற்றியும் சொல்ல இருக்கிறது.  இரண்டு தடவைகளில் காஃபிக்காரர் எனக்கு பழகி விடுவார்.
இந்த முதல் வரவேற்பில் காஃபி சுவைத்து ஐந்து நிமிடம் அங்கேயே நின்று, பின் அருகிலேயே இருந்த வாட்டர்மிலான் ஜூஸுடன் ஒரு இருக்கையை பிடித்தேன்.   கொஞ்ச நேரத்தில் ஒரு பிளேட்டில் அடுக்கப்பட்ட சிறிய கப் வரிசை என்னைத் தேடி வந்தது.  

"என்ன இது?"

"இளநீர் ஜெல்" வென்றார் இறுக்கமாக புடவை அணிந்திருந்த அந்த கான்டராக்ட் பெண்.

'இளநீர் ஜெல்லா...   பார்றா...'  என்று வாங்கி கொண்டேன்.  இளநீரை Freze செய்து ஜெல்லாக்கி கொடுத்திருந்தார்கள்.  ஸ்லாப் ஸ்லாப்ப்பாக எடுத்துச் சுவைக்க முடிந்தது.  எந்த எக்ஸ்டரா சுவையும் சேர்க்காத பியூர் இளநீர். 

வாட்டர்மிலான் ஜூஸ் குடித்தேன் என்று சொன்னேன் இல்லையா, அங்கிருந்து பத்து நிமிடத்துக்கு ஒரு பானம் தேடி வந்து கொண்டே இருந்தது.  மேங்கோ, பப்பாயா, பைனாப்பிள், கிரேப்ஸ்...   அம்மாடி...  நாங்கள் நான்கு பேர் ஒரு ஐடியா செய்து ஒரு கப் வாங்கி எல்லோரும் ஓரொரு வாய் சுவைத்து உவகை கொண்டோம்.  எல்லாம் டெஸ்ட் / டேஸ்ட் பார்க்கணுமில்ல...!  இப்படியே போனால் டின்னர் எப்படி சாப்பிடுவது என்கிற கவலை வேறு!

மகன் என்னை அந்தப் பக்கம் அழைத்தான்.  அங்கு பாவ்பாஜி, பேல்பூரி, பானிபூரி, கட்லெட் ஆகியவை கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
நான் ஒரு கட்லெட்டை எடுத்து பாதி பிய்த்து மருமகளிடம் கொடுத்து விட்டு, பாதியை நான் சுவைத்தேன்.  ஸோ ஹார்ட் யு ஸீ....   பாவ்பாஜி வாங்கி சுவைத்துப் பார்த்து மகனிடம் பாதிக்கு மேல் கொடுத்து விட்டேன்.    அவன் கடுப்பானான்.  பேல் மற்றும் பானி பூரிகள் எங்கைக்கு பிடிக்காது!

டின்னர் சாப்பிட போதிய நேரம் கொடுத்துக் கொண்டிருந்தோம்.  

திடீரென RVS அங்கு ப்ரசன்னமானார்.  மணி எட்டே முக்கால் இருக்கும்.  காரை நிறுத்தி விட்டு உள்ளே வந்தவர், நேராக மொய் கொடுக்குமிடம் சென்று வரிசையில் நிற்கும் முன் வழியின் என்னைப் பார்த்து அவரும் வியப்பாகி கைகாட்டியபடியே சென்று வரிசையில் நின்றார்.  மொய் கொடுத்தார். போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இறங்கி டின்னர் ஹாலுக்கு நடக்கும் வழியில் மீண்டும் 'என்ன, சாப்பிட்டாச்சா?' என்று ஜாடை காட்டியபடியே பதிலை எதிர்பார்க்காமல் சென்றார்.  சாப்பிட்டார்.  காணாமல் போனார்!  நட்பின் விழாவாக இருந்தால் நானும் அவ்வண்ணமே செய்யும் வழக்கம்.  இப்பொதெல்லா ம் இது வழக்கமாகிவிட்டது; பழக்கமாகி விட்டது!  கடமை!  என்ன செய்வேன்..  இது உறவின் விழா!

ஒரு வழியாக நாங்களும் டின்னருக்குச் சென்றோம்.  அவர்களும் ப்ரி டின்னர் சமாச்சாரங்களை எஃபெக்டை  எதிர்பார்த்து ஓரளவுக்கு சிம்பிளாகவே வைத்திருந்தார்கள்.  ​ஐந்தாறு இலைகளை ஒன்றாகச் சேர்த்தது போன்ற தடிமனில் ஒரு ரோல் வைத்தார்கள். நான் இதுபோன்ற வகைகளின் பெயர் அறியாதவன்!   அதற்குள் இனிப்பு.  

பாஸ் அதன் மேல்தோலைக் கழற்றிப்போட்டு விட்டு சாப்பிட்டவர், என்னைப்பார்த்து 'ஓ..  அதையும் சேர்த்தே சாப்பிடவேண்டுமா?' என்று கேட்க, 'விடு போனது போகட்டும்' என்றேன். 

பச்சடி, கறி வகைகள் போன்ற வழக்கமான ஐட்டங்கள் தவிர இரண்டு வகை ஸ்வீட்கள் வைத்தனர்.  குட்டி அடை போட்டு அதன்மேல் இரண்டு ஸ்பூன் அவியல் விட்டார்கள்.  சப்பாத்தி வைத்து பனீர் மசாலா வைத்தார்கள்.  அந்த இனிப்புகளின்  பெயர்களை நான் சாப்பிட்டு முடித்ததும் சமையல் குழுவிடம் சென்று 'ஜாரித்து' தெரிந்து கொண்டேன்.  அதில் ஒன்றை இரண்டு முறை கேட்டும் சரியாக காதில் வாங்காமல் தப்பாகவே FaceBook ல் பகிர, அதை ஆதி வெங்கட் வந்து திருத்தியருளினார்.  ஒன்று பர்வான்ஸ் பனீர்.  இன்னொன்று மால்புவா.  இதை நான் மாங்புவா என்று காதில் வாங்கி அப்படிப் பகிர, திருமதி வெங்கட் திருத்தியதும் திரு(ந்)த்தினேன்.

பக்கத்து இலையில் சாப்பிட ஆரம்பிக்காமல் இருந்ததை நைஸாக ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன்.  முதலில் இருக்கிறது பாருங்கள் நான் சொன்ன இலை ரோல் ஸ்வீட்.

​இவற்றைத்தவிர சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் எல்லாம் கலந்த சாதமாகவே போட்டார்கள்.  ஊறுகாய்தான் வழக்கம்போல ஒரே உப்பாக இருந்தது.  இளநீர் பாயசம்.  ஒரு கரண்டி புலாவ்.  யதேஷ்டம்!

இந்த மாதிரி நிறைய ஐட்டங்கள் அணிவகுக்கும் சாப்பாட்டு சமயங்களில் அவர்கள் பரிமாறும்போதே நான் இலையை சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவேன்.  அப்போதுதான் சரியாக இருக்கும்.  எனவே போட்டோ எடுக்க முடியவில்லை!  ஹிஹிஹி...    
சாப்பிட்டுவிட்டு அங்கே வந்து நின்றபோது இலையை எடுத்தவர்கள் என் இலையைக் காட்டி 'நடுவில் இங்கே யாரும் உட்காரவில்லையா' என்று கேட்டார்கள்.  நான் ஒரு தெய்வீகப் புன்னகை சிந்தினேன்.  என் பெருமையை பாஸ் எடுத்துரைத்தார்.  

அவர்கள் மனதுக்குள் லஷ்மிகல்யாணம் டைட்டில் சாங் வரிகள் நினைவுக்கு வந்திருக்கும்! உறவு ஒன்று பிஸ்தா ஐஸ்க்ரீம் சாப்பிட்டு முடித்து, கப்பை குப்பையில் போட்ட கையோடு வெனிலா ஐஸை கையில் எடுத்தது!  நான் பார்ப்பதைப் பார்த்ததும் அ. புன்னகை!  

நாங்கள் ஐஸ்க்ரீமை புறக்கணித்து பீடாவை மென்றபடி *ஏன்தான் பீடாவில் இவ்வளவு ஸ்வீட் வைக்கிறார்களோ) கிளம்பினோம்.

=================================================================================================

இது 1978 ல்.  

டயல்போன் மாடலுக்கே அப்படி...!  இப்போது நிலைமை இன்னும் மோசமுங்க...


==========================================================================================


FaceBook ல் படித்து ரசித்தது.....


தூக்கணாங்குருவி கூடு 🌹🌹
"தூக்கணாங்குருவிக் கூடு,


தூங்கக் கண்டார் மரத்திலே,
சும்மாப் போன மச்சானுக்கு,
என்ன நினைப்பு மனசிலே!"

( வானம்பாடி என்ற படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் காட்சியில் தேவிகா மிக மிக அழகாக... ஏதோ தேர்ந்த பாடகி ( professional Singer) போல ... தானே பாடுவது போன்று.. வெகு அசத்தலாக பிரமாதமாக நடித்திருப்பார்... அதை கண்டிப்பாக இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும் 😊😊..அவருக்கேற்ற வகையில் பாடல்களும் சிறப்பாக அமைந்திருப்பது அவரின் அதிர்ஷ்டம்! ..சுசீலாம்மாவின் குரல் கன கச்சிதமாக பொருந்தும் ஒரு சில நடிகைகளுள் தேவிகாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது )

'தூக்கணாங்குருவி’ என்ற பெயர் , பேச்சு வழக்கு , நாட்டுப்புறப் பாடல்கள், மற்றும் சினிமா பாடல்களிலும் கூட இடம் பெற்றிருக்கிறது...!
இலக்கியங்களில் தூக்கணப் புள், தூக்கணக் குருவி என்றெல்லாம் குறிப்பிடப்படும்...!

’தூக்கணம்’ என்ற பெயர், அந்தக் குருவி கட்டும் வித்தியாசமான கூட்டின் காரணமாக அமைந்திருக்கலாம்... !

இந்தக் குருவியின் கூடு போன்ற வடிவத்தில் பெண்கள் காதில் அணியும் தொங்கல் / ஜிமிக்கி வகைக்கும் ‘தூக்கணம்’ என்ற பெயர் உண்டு..!

பறவைகளின் கூடுகளிலேயே மிக அழகான கலைத் திறனோடு அமைக்கப்படுவது தூக்கணாங்குருவிக் கூடு மட்டுமே!

இந்த குருவி ஒரு இயற்கை இஞ்சினியர்!

நூற்றுக்கணக்கான வைக்கோல், நீளமான புல்கள், தென்னை நார்கள், ஈரக்களிமண்,மாட்டுச்சாணம், மின்மினிப்பூச்சி இவைகளால் சுமார் 3 வாரங்களாக முழு மூச்சுடன் இந்த கூடுகளை தூக்கணாங்குருவிகள் நெய்கின்றன...!

இந்த சேமிப்பிற்காக ஆயிரம் முறைக்கு மேல் பறக்கிறது அது ...!
நாம் நம்முடைய சிறிய வயதில் இதை வைத்து ஒரு கதை கூட
படித்திருப்போம்...

ஒரு காட்டிலே அடர்ந்து வளர்ந்த மரம் ஒன்று இருந்தது. ...!,
அந்த மரத்தின் ஒரு கிளையிலே குருவி ஒன்று கூடு கட்டி குடும்பத்தோடு நீண்ட காலமாக வசித்து வந்தது...!
அந்த மரத்தின் இன்னொரு கிளையில் ஒரு குரங்கும் பல காலமாக இருந்து வந்தது. ...!
ஒரு நாள் இரவு மிகவும் பலத்த மழை பெய்ததில் , மரங்கள் புயல் காற்றிலே பேயாட்டம் ஆடின. ..!

மிருகங்கள் எல்லாம் குகைகளில் பதுங்கிக் கொள்ள... பறவைகள் கூடுகளில் ஒளித்துக் கொள்ள...

அந்தக் குரங்கு மட்டும் தன் கைகளால் மரக்கிளையை இறுக கட்டிக் கொண்டு முழுவதுமாக மழையில் நனைந்து , குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. ..!
மழையோ விட்ட பாடில்லை.!

கூட்டில் இருந்த ஆண் குருவி, குரங்கின் நிலைமை கண்டு மனம் உருகித் தவித்து கவலை தாங்க முடியாமல் ,

" நண்பரே! இப்படி பெரு மழையில் வீணாக நனைந்துகொண்டு இருக்கிறீரே....! உமக்குத் தான் மனிதரைப் போல இரண்டு கைகள் இருக்கின்றனவே....! எங்களைப் போல நீரும் முன்னரே வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்தால் இப்போது மழையில் நனைய வேண்டி வந்திருக்காதல்லவா? "

என்றது நிஜமான வருத்தத்துடன்..! .

தூக்கணத்தின் வார்த்தைகளைக் கேட்ட குரங்கோ , கோபத்தின் உச்சிக்குச் சென்று .. அந்த குருவி இருந்த கிளைக்குத் தாவி , தன் இரண்டு கைகளாலும் அதன் கூட்டை பிய்த்து எறிந்தது...!

விவேகசிந்தாமணி என்ற நீதி நூலிலே இடம் பெற்ற அழகான பாடல் ஒன்று இந்த கருத்தை மிக அழகாக எடுத்துரைக்கிறது ...!

அதாவது, தீயவர்களுக்குப் புத்தி சொல்லப் போனால் , அது சொல்பவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்கிற அர்த்தத்தில் ..!

" வானரம் மழைதனில் நனையத் தூக்கணம் தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும் ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும் ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே"

சற்று ஆழ்ந்து சிந்தித்தால், இந்தப் பாடலில் இன்னொரு உண்மையும் பொதிந்து கிடக்கின்றது என்பதை நாம் அறியலாம் ...!

அதாவது , இறைவன் தந்த உடம்பை கொண்டு, அதை அழகாகப் பேணி, உலகியல் நிலைகளால் தனக்கு துன்பம் வராதபடி காத்துக் கொள்ளுகின்றவர்கள் , அறிவுடைய தூக்கணம் குருவியை போன்றவர்கள்...!

என்றாலும், மனமானது சில நேரங்களில் , அது தன் போக்கில் இஷ்டப்படி செல்வதால் துன்பத்தை அனுபவிக்க நேரும். ..!

அதனால் , குருவியின் கூடு போன்ற உடம்பும்...கூட்டில் உள்ள குருவியைப் போன்ற உடம்பில் உள்ள உயிரும் துன்பத்தை அடையும்...!

நம்முடைய மனம் என்பது ஒரு குரங்கைப் போன்றது. ..!

இறை வழிபாட்டில் ஈடுபட்டு இருக்கும்போது, இறைவன் தன்னோடு உள்ளதாக எண்ணி உருகும்....!

தவறு செய்யும்போது, தன்னோடு இறைவன் உள்ளான்...அவன் நாம் செய்யும் காரியங்களை கண்காணிக்கிறான் என்பதை அறவே மறந்துவிடும். ...!
தவறு செய்து விட்டு , பின்னர் துன்பத்தை அனுபவிக்க நேரும் போது, மீண்டும் மனம் இறைவனை நாடும். ..!

இவ்வாறு , பலவேறு நினைவுகளைக் கொண்டு, ஒன்றை விட்டு ஒன்றை பற்றி சென்று கொண்டே இருக்கும். ..!

ஒரு நிலையில் இல்லாது உழன்று கொண்டேயிருக்கும். ...!

அந்த மனமாகிய குரங்கை அடக்கி வைத்திருந்தால், உயிரானது தீய நெறிகளில் சென்று இடர் படாமல், நல்ல நெறியில் செல்லும்..!

உடம்பும் நெடு நாள் நிலைத்து இருக்கும்...!

ஆக, 'மனம் ' என்னும் குரங்கை, நல்வழி செலுத்துகின்ற ஆசிரியர்,
தனது கையில் 'நன்னெறி'என்கிற ஒரு கோலை வைத்துக் கொண்டு அதட்டிக் கொண்டே இருக்கவேண்டும்...!

அப்போது தான் இந்த மனம் ஒரு வழிக்கு வரும்!
==========================================================================================================


ஸ்வராஜ்பால்...   எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறதே...


=================================================================================================

2013 ல் எழுதியது....


நதியில் ஓடும் நீராய்
காலம்
நீரோடு சென்று விட்டாலும்
சில
நினைவுகள் மட்டும்
நனைந்த மண்ணாய்
மனதில்
ஈரமாகவே எப்போதும்.

================================================================================

FaceBook-ல் கந்தசாமி சார் பதிவு / பகிர்வு  - சுசீலா கனகதுர்க்காவின் ***மாரித்தனம்!

எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய நாவல்களின் தமிழாக்கம் கெளரி கிருபானந்தன் என்றால் அது நம்பத் தகுந்தது. சுசீலா கனகதுர்க்கா என்றால், சற்று எச்சரிக்கை தேவை.
ஏனெனில் ஆரம்பத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்களை தமிழாக்கம் செய்து வந்தவர் சுசீலா கனகதுர்க்காதான். 1980களிலும், 90களிலும் தமிழ் வார இதழ்களில் எண்டமூரியை அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.
அப்போது வேறு தெலுங்கு எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களையும் எண்டமூரி வீரேந்திரநாத் என்று சொல்லியே வெளியிட்டிருக்கிறார். இதற்கு சில தமிழ்ப் பதிப்பகங்களும் துணை போயின. ஒரு கட்டத்தில் தமிழகம் முழுக்க எண்டமூரியின் நாவல்கள். ஆனால், அதில் பெரும்பாலானவை தெலுங்கில் அவர் எழுதியது அல்ல 😉
உதாரணம் ‘முள் பாதை’. பூங்கொடி பதிப்பகம் இந்த நாவலை ஆயிரம் பக்கங்களில் வெளியிட்டது. நடிகர் பொன்வண்ணன் இந்த நாவலை டிடி 2வில் 13 வார தொடராக எடுத்தார். இயக்கமும் அவரே. டைட்டிலில் எண்டமூரி வீரேந்திரநாத் என்றே இருக்கும்.
கடைசியில் பார்த்தால், ‘முள் பாதை’யை எழுதியவர் யத்தனகுடி சுலோச்சனா என்னும் பெண் எழுத்தாளர். அது மட்டுமல்ல, ‘பவித்ர பந்தம்’ என எண்டமூரியின் பெயரில் தமிழில் வெளிவந்த நாவலும் யத்தனகுடி சுலோச்சனா எழுதியதுதான்.
இந்த உண்மை வெளிப்பட்டு சம்பந்தப்பட்ட பதிப்பகம் மேல் வழக்கு போட்டு, சுசீலா கனகதுர்க்காவிடமிருந்து தமிழாக்க உரிமையை எண்டமூரி திரும்ப வாங்கி...
அனைத்தும் ரகசியமாக நடந்து முடிந்துவிட்டது.
இப்போது ‘அல்லயன்ஸ் பதிப்பகம்’ வசம் எண்டமூரியின் நாவல்கள் இருக்கின்றன. கெளரி கிருபாகரன் அவற்றை தமிழாக்கம் செய்கிறார்.
ஸோ, சுசீலா கனகதுர்க்காவின் தமிழாக்கம் என்றால், அது எண்டமூரி வீரேந்திரநாத் அல்லாமல் மற்றவர்களுடையதாகவும் இருக்கலாம் என்பதை அறியவும் 😉
இதற்குத் தொடர்புள்ள இன்னொரு செய்தியும் உண்டு.
அது ‘மீனா’ தெலுங்குப் படம்.
ஆமாம். ‘முள் பாதை’தான் ‘மீனா’ தெலுங்குப் படம்.
தெலுங்கு மொழியின் ‘லட்சுமி’ என கொண்டாடப்படும் யத்தன்னபூடி சுலோசனாராணி எழுதிய 13 நாவல்கள் தெலுங்கில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றி பெற்றிருக்கின்றன.
அவற்றில் ஒன்றுதான் 1973ல் ரிலீசான ‘மீனா’ தெலுங்கு படம்.
வார இதழில் தொடர்கதையாகவும் வெளிவந்து வெற்றி பெற்ற நாவலைதான் அதே பெயரில் படமாக எடுத்திருந்தார்கள்.
‘மீனா’ தெலுங்குப் படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியதுடன் ஹீரோயினாகவும் நடித்திருப்பார் விஜய நிர்மலா.
ஹீரோவாக நடித்தவர் மகேஷ் பாபுவின் அப்பாவான கிருஷ்ணா.
அதுநாள் வரை மாஸ் ஹீரோவாக இருந்த கிருஷ்ணாவை ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் கொண்டு சென்ற முதல் படம் இதுதான்.
மட்டுமல்ல, பின்னாளில் கிருஷ்ணா - விஜய நிர்மலா ஆகியோர் வாழ்க்கையில் இணையவும் இந்தப் படமே பிள்ளையார் சுழி போட்டது.
தன் வாழ்நாளில் 44 படங்களை விஜய நிர்மலா இயக்கியிருக்கிறார். அதன் வழியாக அதிக படங்களை டைரக்ட் செய்த பெண் இயக்குநர் என்ற சிறப்புடன் கின்னஸ் ரிக்கார்டிலும் இடம் பெற்றிருக்கிறார்.
முக்கியமான விஷயம், முதன் முதலில் விஜய நிர்மலா டைரக்ட் செய்தது இந்தப் படத்தைதான். முதல் நாளே ஆறு காட்சிகளை ஷூட் செய்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். ‘ராட்சஷி’ என சக நடிகர்கள் இவரை செல்லமாக அழைக்க இவரது இந்த அசுரவேகம்தான் காரணம்.
டிராலி, Zoom Back / In என அன்றைய தொழில்நுட்பத்தை எல்லாம் கச்சிதமாக ‘மீனா’வில் பயன்படுத்தி குறுகியகாலத்தில் படமாக எடுத்து முடித்திருக்கிறார். வெற்றியும் பெற்றிருக்கிறார்.
ஆயிரம் பக்கங்கள் கொண்ட ‘முள் பாதை’ நாவலை எண்டமூரி வீரேந்திரநாத் பெயரிலும், யத்தன்னபூடி சுலோசனாராணி பெயரிலும் வாசித்திருக்கிறேன். ‘மீனா’ படத்தையும் பார்த்திருக்கிறேன்.
ஆயிரம் பக்க நாவலின் முக்கியமான அனைத்து கட்டங்களும் இரண்டரை மணிநேர ‘மீனா’ படத்தில் இடம்பெற்றிருந்தை பார்த்து வியப்பு ஏற்பட்டது. ஒன்றை கூட இயக்குநர் மிஸ் செய்யவில்லை.
அதனால்தான் ‘என் நாவலை சிதைக்காமல் பிரமாதமாக விஜய நிர்மலா எடுத்திருக்கிறார்...’ என யத்தன்னபூடி சுலோசனாராணி புகழ்ந்திருக்கிறார்.
ரூ.6 லட்சத்தில் உருவான இந்தப் படம், ரூ.45 லட்சம் வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது.
பிறகு இந்த ‘மீனா’ கதை பல்வேறு வடிவங்களில் உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் தெலுங்கு சினிமாவில் தலைகாட்டியிருக்கிறது... தலைகாட்டியும் வருகிறது.

ஆம். Present Tenseதான்.
2016ம் ஆண்டு த்ரிவிக்ரம் ‘கதை திரைக்கதை’ வசனம் எழுதி நிதின் - சமந்தா நடிப்பில் இயக்கியிருந்த ‘அ ஆ’ (அனுசுயா ராமலிங்கம் Vs ஆனந்த் விஹாரி) படம், அப்படியே ‘மீனா’தான். ஒன்றிரண்டு காட்சிகள் அல்லது கட்டங்கள் அல்ல... முழுப்படமும்!
‘அ ஆ’ ரிலீசான பிறகு ரசிகர்கள் ரவுண்ட் கட்டி த்ரிவிக்ரமை அடித்தார்கள். பிறகு அவர் யத்தன்னபூடி சுலோசனாராணியின் ‘மீனா’ நாவலைதான், தான் படமாக இயக்கியதாக ஒப்புக் கொண்டார்.
டைட்டிலில் இதை குறிப்பிட்டதாகவும் ரிலீஸ் நேரத்தில் ‘தவறுதலாக’ அது விடுபட்டுவிட்டதாகவும் வருத்தம் தெரிவித்ததுடன் யத்தன்னபூடி சுலோசனாராணயின் வாரிசுகளிடம் ஒரு தொகையையும் வழங்கினார்...
-கே.என்.சிவராமன்
================================================================================================================================

ரிப் கெர்பி.

வாட்ஸாப்பிலோ FaceBookkiலோ மரண அறிவிப்புகள் வரும்போது நம் மக்கள் கடமையாகப் போடும் 'Rip' மூன்றெழுத்தைப் பார்க்கும்போதெல்லாம் இவர் ஞாபகம் வரும் எனக்கு!

இவரது கதைகள் படித்திருக்கிறீர்களா? முத்து காமிக்ஸில் நான் முதற்கண் மாயாவியின் ரசிகன். அப்புறம் லாரன்ஸ் - டேவிட், ஜானி நீரோ - ஸ்டெல்லா. பிறகுதான் இவர், முகமூடி வேதாளர் Phantom.

கெர்பியின் கதைகள் கொஞ்சம் மாறுபட்டவை. கொஞ்சம் வளர்ந்த வாச்கர்களுக்கானது. கீழே அவரது படத்தில் அவரது கருத்தைப் பாருங்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஒருவித பயத்தில், ஒருவித எச்சரிக்கை உணர்வில் அவன் அங்கு வந்து பார்ப்பான் என்பது என் கணக்கு.


==================================================================================================

ஜோக்ஸ்..

சிரிப்பு வராவிட்டால் நான் பொறுப்பல்ல. 1978 இதயம் பேசுகிறதுதான் பொறுப்பு!






122 கருத்துகள்:

  1. இன்றைய வியாழன் பகுதிகள் அனைத்துமே சிறப்பு. நகைச்சுவைப் பகுதிகூட எரிச்சலை ஏற்படுத்தவில்லை.

    மால்புவா போல இருந்தது என்று எழுதலாமென நினைத்தால் ஜீராவில் மூழ்கிய அப்பம் போன்று இருந்ததால் சாப்பிட்டுப் பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.  நன்றி.  நான் மால்புவா போன்ற பெயர்கள் எல்லாம் அறிந்தவனில்லை.  எனக்கும் ஜீராவில் மூழ்கிய அப்பம் போலதான் தெரிந்தது.

      நீக்கு
    2. நெல்லை ஜீராவில் மூழ்கிய அப்பம்னு சொல்ல முடியாது. கோயாவும் கலந்திருக்கும் அதாவது பால் கோவா ஸ்வீட் இல்லாத கோவா கலந்து செய்து அப்புறம் ஜீராவில் முக்குவது!!

      எல்லாம் இந்த குலாப்ஜாமூன் வகையறாக்கள் வேறு வேறு பெயர்களுடன் கொஞ்சம் வித்தியாசமான உருவங்களில், இரட்டையர் மூவர் போன்று செய்யப்படுபவை!!

      கீதா

      நீக்கு
    3. என்ன என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை, க்ரீம் போல வெள்ளையாக ஒருவித ஸ்வீட் ஒன்றை மேலே ஊற்றி காயவைத்து கொடுப்பார்கள் என்று தோன்றியது.

      நீக்கு
  2. இன்றைய திருமண வரவேற்பு உணவுகள் அனைத்தையும் படித்து எனக்கு எதிலும் ஆசை வரவில்லையென்பது ஆச்சர்யமாக இருந்தது.

    ஆமாம்.. சாப்பிட்டவர்களின் வயிறு, ஒரு நாளைக்கு ஒழி என்றால் ஒழியாய் பாடலை நினைவுகூர்ந்திருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே நினைவு வரப்போகிறது?  ஒருவருக்கு வயிற்றால் போகிறது என்று சொல்லி மாத்திரை சாப்பிட்டுக்கொண்டே இவற்றையும் ஒருகை பார்த்தார்!  நான் டேஸ்ட் பார்ப்பதோடு சரி.  என் அளவு என்னவோ, அதில் நின்று விடுவேன்.

      நீக்கு
  3. தூக்கணாங் குருவிக் கூடு பாடல் மிகவும் பிடித்தமானது. ஆனால் அந்தப் பகுதி ஜவ்வுபோல நெடியதாக இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிதாக இருந்தாலும் நன்றாக எழுதி இருந்தார் த கி .

      நீக்கு
  4. என்டமூரி கதைகளும் பிடித்தமானது. டிமான்ட் அதிகமாகும்போது இருட்டுக்கடை அல்வாக்கள் போலித் தயாரிப்புகள் போல சுசீலா கனகதுர்கா நடந்துகொண்டுவிட்டார் போலிருக்கிறது.

    இது நீ எழுதினதுதானா இல்லை மண்டபத்தில் வேறு யாராவது? வசனம் நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் பெயரை இவர் கெடுத்து விட்டாரே...  துரோகம் அல்லவா அது!

      நீக்கு
    2. அதையும் நம்பி வெளியிட்ட பதிப்பாசிரியர், படித்துச் சிலாகித்த வாசகர்கள் இவர்களில் மிகப் பெரிய முட்டாள் யார் என்ற கேள்வியும் எழுகிறது.

      நீக்கு
    3. முட்டாள் என்கிற பதம் தவறு.  ஏமாளி.  ஏமாற்றப்பட்டவர்கள்.

      யார் எதை எழுதினாலும்  வாட்ஸாப்பில் சுஜாதா பெயரிட்டு பார்வெர்ட்  செய்வது போல.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கமும், பிரார்த்தனைக்கு நன்றியும்.

      நீக்கு
  6. சரோஜாதேவியின் கருத்தைப் படித்தபோது, மனைவி சொல்லே மந்திரம் எனும் ஆண்கள் அதிகமா இல்லை கணவனே கண் கண்ட தெய்வம் பெண்கள் அதிகமா என்று தோன்றுகிறது.

    ஆனால் சிலருக்கு/பலருக்கு, மனைவி, கணவனே கண் கண்ட தெய்வம் என்று சொன்னால், அது மாத்திரம். மனைவி சொல்லே மந்திரம் எனத் தோன்றுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சூத்திரத்தில் இந்தக் கலையை அடக்கி விட முடியாது என்று நினைக்கிறேன்!!!

      நீக்கு
  7. இந்தியா டுடேயின் சுவராஜ்பால் போன்ற செய்திகள்தாம், அரசியல்வியாதிகளை, தங்களுக்கு காரோ வீடோ கிடையாது எனக் காட்டி, கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பல கார்களில் பவனி வரும் வித்தையைக் கற்றுக்கொடுத்திருக்கிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் ஆரம்பமா, முன்னரே இருந்திருக்குமா?

      நீக்கு
  8. மால்புவா என்பது கிட்டத்தட்ட நம் சொஜ்ஜி அப்பம் போல.. சொஜ்ஜி அப்பத்தின் மீது ரபடி என்னும் பாலாடை ஊற்ற வேண்டும். ஒரு முறை திங்கள் பதிவாக எ.பி.யில் பகிர ஆசை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்க அப்படிதான் தெரிகிறது. கொஞ்சம் மில்க் பிகிஸ் க்ரீம் பிஸ்கட்டை போல இருக்கிறது.

      திங்களுக்கு அனுப்பலாமே... காத்திருக்கிறேன்!

      நீக்கு
    2. என்னாது... சொஜ்ஜி அப்பமா? அதாவது உள்ளே ரவை பூரணம் வைத்துப் பண்ணும் சொஜ்ஜி அப்பமா? கர்நாடகாவில் ஃபேமஸாச்சே. அதுக்கும் மால்புவாவுக்கும் ரொம்பவே தொலைவு என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    3. இல்லை நெல்லை, ஆனா சூஜின்னு சொல்லலாம். ரவையும் உண்டு அதில். ரவை கோவா/பனீர், மில்க்மெய்ட் எல்லாம் கலந்து எண்ணைல / நெய்ல பொரிச்சு ஜீரால போட்டு அப்புறம் ராப்டியோடு சாப்பிடறது.

      முன்ன எல்லாம் இந்த மில்க்மெய்ட் வாங்கறப்ப அதோடு கூடவே ஏதாச்சும் ரெசிப்பி வரும். அப்படி அதுல உள்ளபடி செஞ்சென். ஒரு தீபாவளிக்கு. long long ago. ஆனால் அதுலயும் சில வேரியேஷன்ஸ் இருக்கு

      கீதா

      நீக்கு
    4. அது இல்லை நெல்லை.  அப்பம்.  தோசை போல புஸ்ஸென்ற உப்பிய அப்பத்தில் இப்படி ஊற்றி தருவார்கள் போல...

      நீக்கு
    5. ஸ்ரீராம். மால்புவா பார்க்க தட்டையான, பானுக்கா சொன்னது போல சொஜ்ஜி அப்பம் போல தட்டையாக த்தான் இருக்கும் அது ஜீராவில் போட்டு எடுத்த பின் அதில் ரபடி மேலே போட்டோ இல்லை கப்பில் வைச்சிடுவாங்க...நாம அதை மால்புவா மேல் போட்டுக் கொண்டோ இல்லை ஒரு கடி மால்புவா ஒரு ஸ்பூன் ரபடி என்றோ சாப்பிடலாம்

      கீதா

      நீக்கு
    6. ஒரு சிலர் ரவை சேர்க்கறாங்க ஆனா ரவை ஒரிஜினல் செய்முறையில் கிடையாது. மைதா, ஸ்வீட் இல்லாத கோவா அல்லது பனீர், (சிலர் மைதாவைக் குறைத்துக் கொண்டு ரவை சேர்க்கறாங்க) தயிர், ஏலக்காய் பொடி கொஞ்சம் எல்லாம் கலந்து கரண்டியால் நெய்யில் ஊற்றி தட்டையான அப்பம் போல பொரித்து ப்ரெஸ் செய்து நெய்/எண்ணையை நன்றாக வடித்து எடுத்து ஜீராவில் போட்டு எடுத்து அதனுடன் ராப்டி ...

      கீதா

      நீக்கு
    7. ஒரு சிலர் ரவை சேர்க்கறாங்க ஆனா ரவை ஒரிஜினல் செய்முறையில் கிடையாது. மைதா, ஸ்வீட் இல்லாத கோவா அல்லது பனீர், (சிலர் மைதாவைக் குறைத்துக் கொண்டு ரவை சேர்க்கறாங்க) தயிர், ஏலக்காய் பொடி கொஞ்சம் எல்லாம் கலந்து கரண்டியால் நெய்யில் ஊற்றி தட்டையான அப்பம் போல பொரித்து ப்ரெஸ் செய்து நெய்/எண்ணையை நன்றாக வடித்து எடுத்து ஜீராவில் போட்டு எடுத்து அதனுடன் ராப்டி ...

      கீதா

      நீக்கு
    8. எனக்கு இதில் இவ்வளவு விவரம் தெரியாது என்று சொல்லிக்கொண்டு, 

      கூடவே சாப்பிட மட்டும்தான் தெரியும் என்றும் சொல்லிக்கொண்டு....

      ஹிஹிஹி...

      நீக்கு
  9. விஜய நிர்மலா..?? பாபு படத்தில் 'வரதப்பா,வரதப்பா கஞ்சிவரதப்பா..' பாடலுக்கு ஆடியவர்தானே?(இதிலும் சாப்பாட்டு விஷயம் வந்து விடுகிறதே..!!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த விஜயுநிர்மலாவாக இருக்கலாம்.  நான் என்ன கண்டேன்?  எனக்கு அனுஷ் தான் தெரியும்!

      நீக்கு
    2. அவர் இல்லை "கஞ்சி வரதப்பா" பாட்டுக்கு ஆடியவர் விஜயஸ்ரீ

      இவர் "இலந்தபழம், இலந்தபழம்" பாடலுக்கு ஆடியவர்

      நீக்கு
    3. அடடே...  கோமதி அக்காவும் இதுபோல தகவல்களை சொல்கிறாரே....  நன்றி அக்கா.

      நீக்கு
  10. கௌரி கிருபானந்தன் மொழி பெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தரமான மொழிபெயர்ப்பாளர், சுசீலா போல இல்லை என்று சொல்லுங்கள்.

      நீக்கு
  11. உணவுத் திருவிழா!!!

    ஆ! காஃபி ஒரு வாய் முடிச்சதுமே ஜூஸா!? ஹாட் அண்ட் கூல்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​வரிசையாக நிறைய கொடுத்தால் நான் என்ன செய்ய கீதா... விடவா முடியும்!

      நீக்கு
  12. சாப்பிட்டதை வக்கணையாக ஐட்டம் ஐட்டமாக விவரிக்க வேண்டுமா? வாசிப்பவர்களுக்கு ரொம்ப திகட்டுது.

    புளுடூத் இயர் போன் எப்போதும் மாட்டிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒன்றும் ஆகாதா? சிலருக்கு காது மந்தம் ஆவதை கவனித்திருக்கிறேன்.

    தூக்கணாங் குருவி கதை ஒரு படிப்பினை. ஆனாலும் கதையாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லா பறவைகளும் கூடு கட்டுவது முட்டை இட்டு குஞ்சு பொறிக்க மட்டுமே. கூரை இல்லாமல் மழையில் நனையும் பறவை கூடுகள் பல உண்டு.

    யசப்பாட்டு
    ஈர மண்ணும் உலருமே
    வயது என்ற சூட்டினால்
    இறுதியில் மண்ணின்
    ஈரம் என்ற நினைவுகள் நீங்க
    உலர்ந்த மண்ணாய் மனம் மட்டுமே
    எஞ்சி நிற்கும் எழுபது வயதிலே.

    காமிக்ஸ் என்றால் முகமூடி (phantom) தவிர வேறு ஒன்றும் எனக்கு பரிச்சயமில்லை. ரிப் கேர்பி குமுதத்தில் வந்ததா?

    ஜோக்ஸ் என்றால் முதலில் நினைவில் வருவது விகடன் மட்டுமே. இதய ஜோக்ஸ் ஜஸ்ட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வாசிப்பவர்களுக்கு ரொம்ப திகட்டுது.
      //

      ச்சோ...    என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்!
      ப்ளூடூத், இயர்பொன்னுக்கும் கட்டாயம் பிரச்சனை ஏற்படும்.  இதில்.
        
      தூக்கணாங்குருவிக் கூடு அப்படி கூடு கட்டுவது பாம்பை ஏமாற்ற என்று நினைக்கிறேன்.

      எசப்பாட்டு ஒருவித வெறுமையைச் சொல்கிறது.  ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?  நினைவுகள் காயாது.

      குமுதத்தில் அல்லது விகடன் போன்ற பத்திரிகைகளில் இவை வராது.  தனியாக காமிக்ஸ் புத்தகங்கள்.  முக்கியமாக முத்து காமிக்ஸ், மற்றும் ராணி காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ்...

      இதய ஜோக்ஸ் இன்னும் வரும்.  நிறைய இருக்கிறது.

      நீக்கு
    2. //தூக்கணாங்குருவிக் கூடு//

      முன் அறை (வரவேற்பு அறை) படுக்கை அறை என்று படுக்கை அறையில் தான் முட்டையிடும். முட்டை உடையாமல் இருக்க களிமண் வைக்கும், குஞ்சு பொரித்தபின் உணவை களிமண்ணில் ஒட்டி வைக்கும், அப்புறம் களிமண்ணில் மின் மினி பூச்சியை ஒட்டி வைத்து விளக்கு போடும் கூட்டுக்கு.

      மரத்தின் நுனி கிளையில் உயரத்தில் கூடு கட்டும் பாம்பு வராது.
      இயற்கை அறிவை நிறைய அள்ளி கொடுத்த பறவை
      தூக்காணாங்குருவி

      அணைக்கரை பக்கம் அதன் கூடை படம் எடுத்து வந்து பதிவு போட்டது நினைவுகளில் வந்து போகிறது.

      நீக்கு
    3. ஆமாம். நீங்கள் மற்றும் ராமலக்ஷ்மி இவற்றைப் பற்றி எல்லாம் பகிர்ந்திருக்கிறீர்கள் என்று நினைவு.

      நீக்கு
  13. Bharwan Paneer நல்லாருக்குமே...டோஸ்ட் செஞ்சு ஸ்டார்ட்டர் வகையில் கொடுக்கப்படுவது. சாப்பிட்டுப் பார்த்தீங்களா?

    இடது பக்கத்துல இருக்கும் பதார்த்தம் பார்த்து எதுவும் சொல்ல மாட்டேனே!!!! படத்தைப் பார்த்தே தூரத்தில் நிற்கிறேன்!!!! ஆனா ரொம்பப் பிடிக்கும் கேட்டேளா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மால்புவாவா?  எனக்கு இவை இரண்டும் புதுசு. Bharwan Paneer என்று சொல்ல வேண்டுமா? Parvaan என்று சொல்லக்கூடாதா?

      நீக்கு
    2. ஆமாம் மால்புவாவைத்தான் சொன்னேன். ஸ்வீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டாச்சே!!

      கீதா

      நீக்கு
  14. அடையைப் பார்த்ததும் நீங்க சொல்லித்தான் அடைன்னு தெரிந்தது. தட்டையா இருக்குமோன்னு நினைச்சேன். தட்டை எல்லாம் கூட கல்யாணத்தில் போடத் தொடங்கிட்டாங்களான்னும் நினைத்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அவியல் மேலே போட்டதும்தான் தெரிந்தது, அது அடையென்று!

      நீக்கு
  15. ஐந்தாறு இலைகளை ஒன்றாகச் சேர்த்தது போன்ற தடிமனில் ஒரு ரோல் வைத்தார்கள்.//

    bhakarwadi? வேறு என்ன?ன்னு யோசிக்கிறேன். படம் இல்லையே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அதை சரியாக படம் எடுக்கவில்லை. எடுத்திருக்கலாம்.

      நீக்கு
  16. அடுத்த லைன் பார்த்துவிட்டேன். //முதலில் இருக்கிறது பாருங்கள் நான் சொன்ன இலை ரோல் ஸ்வீட்.//

    Chena roll இல்லைனா ப்ரெட் ரோல், பார்த்தா ப்ரெட் வெளிப்புறம் போலத் தெரியுது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அதுதானா என்று சந்தேகமாக இருக்கிறது!

      நீக்கு
  17. இந்த மாதிரி நிறைய ஐட்டங்கள் அணிவகுக்கும் சாப்பாட்டு சமயங்களில் அவர்கள் பரிமாறும்போதே நான் இலையை சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவேன். //

    ஹாஹாஹா ஹைஃபைவ்!

    வேணும்ன்றது மட்டும் போட்டுக் கொண்டு....எல்லாம் ஒரு ஸ்பூன் தான். அதுவே 7 மணிக்குள்ளன்னா மட்டும் தான் இல்லைனா நோ வே....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இதுபோல பார்ட்டி, கல்யாண விருந்துகளுக்கு செல்லும்போது ஒரு மாத்திரை ஒன்று வைத்திருக்கிறேன், அதைச் சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவேன். சிரமமே தெரியாது!!

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமையாக உள்ளது . கல்யாண உணவு திருவிழா (க. க. தி. வி) சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்களைப் போல சுவையில் அளவுடன் சுற்றி வந்தது சரிதான். சுவையில் அளவு மீறினால்,, மறுநாள் பெட்ரூமில் அடைக்கலமாகிவிட வேண்டியதிருக்கும்.

    /பாஸ் அதன் மேல்தோலைக் கழற்றிப்போட்டு விட்டு சாப்பிட்டவர், என்னைப்பார்த்து 'ஓ.. அதையும் சேர்த்தே சாப்பிடவேண்டுமா?' என்று கேட்க, 'விடு போனது போகட்டும்' என்றேன். /

    ஹா ஹா ஹா. "போனால் போகட்டும் போடா" பாடல் நினைவுக்கு வந்தது.

    பக்கத்து இலை எனக்கு சோமாசி, கர்ஜிகாயை நினைவுக்கு வருகிறது. இப்போது எல்லாவற்றிற்கும் புதுப் பெயர்கள்தான்.

    /சாப்பிட்டுவிட்டு அங்கே வந்து நின்றபோது இலையை எடுத்தவர்கள் என் இலையைக் காட்டி 'நடுவில் இங்கே யாரும் உட்காரவில்லையா' என்று கேட்டார்கள். நான் ஒரு தெய்வீகப் புன்னகை சிந்தினேன். என் பெருமையை பாஸ் எடுத்துரைத்தார்/

    ஹா ஹா ஹா. சிரித்து விட்டேன். நான் அதற்காகவே போடுவதில் கொஞ்சம் மிச்சம் வைத்து எழுவேன். ஆனால், இப்போதெல்லாம் பரிமாறும் போதே அளவாகவுந்தான் பரிமாறுகிறார்கள். நம் இடது கைகளை (சமயத்தில் வலதும்) இலைக்கு முன் குறுக்கும் நெடுக்குமாக ஆட்டாமல் இருக்க வேண்டியுள்ளது. தவறிப் போய் கைகளை ஆட்டினால், பரிமாறுபவர் மாயமாக அடுத்த இலைக்குப் போய் விடுகிறார். மறுபடி அவரை நிமிர்ந்து நோக்கி கேட்க எனக்குள் ஒரு கூச்சம் எப்போதுமே வரும். தாங்கள் எடுத்த படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. புகைப்படம் எடுக்க விட்ட அந்த பக்கத்து இலைக்காரர் பின் எப்போதுதான் சாப்பிட ஆரம்பித்தார்? :)) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு முதன் முதலில் (வேலைக்குச் சென்ற பிறகு) கேடர்ர் உணவை, அதிலும் காய் கூட்டை ஸ்பூனால் பரிமாறுவது வியப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது. இன்னும் வேணும் என்று பிறகு கேட்டால் ஆளே வரமாட்டாங்க. பெண் திருமணத்துக்கு, அந்தக் காலம் போல கரண்டி கரண்டியாத்தான் பரிமாறணும் என நினைத்தேன். பிறகுதான், அதிகம் போடுவதால் நிறைய வீணாகிறது எனப் புரிந்தது.

      நீக்கு
    2. சோமாசி டைப்பெல்லாம் இல்லை கமலா அக்கா.  இரண்டு வாழை இலைகளை சின்னதாக கட்செய்து அதனுள்ளே கொஞ்சம் ஸ்வீட் வைத்து நீளமாக சுருட்டினால் எப்படி இருக்கும்?  அப்படி இருந்தது..

      சிலபேர், இலையில் கொஞ்சமாவது மிச்சம் வைக்க வேண்டும் என்றும் சொல்வார்கள்.அதை நம்பி சில ஜீவன்கள் இருக்கின்றன என்பார்கள்.

      நீக்கு
    3. இப்போது யாரும் ஸ்பூனால் எல்லாம் பரிமாறுவதில்லை நெல்லை.  கரண்டிதான்.  ஏனென்றால் அவைதான் கடைசியில் நிறைய மிஞ்சும்.  தயிர்பச்சடிக்கு ரசிகன்  பார்த்திருக்கிறீர்களா?  என் இளையவன் பரம ரசிகன்.  தயிர்பச்சடியை மீண்டும் மீண்டும் பரிமாறக் கேட்கும் ஒரே ஆள் எனக்குத் தெரிந்து அவன்தான்!

      நீக்கு
    4. ஆனாலும், தயிர் பச்சடி வேணுமான்னு வந்து வந்து கேட்டு மீண்டும் பரிமாறுபவர்கள் இருக்கிறார்களா? ஒரு வேளை சென்ற இடம் ரொம்ப நெருங்கிய சொந்தமாக இருந்து, கேட்டால் கொண்டு வந்து பரிமாறுவார்களோ என்னவோ?

      நீக்கு
    5. இப்போது நல்ல பளிச்சென்று இருக்கும் வாழை இலையை வைத்தே புதிதான ஸ்வீட்டெல்லாம் பண்ணுகிறார்கள்.

      நீக்கு
    6. // ஆனாலும், தயிர் பச்சடி வேணுமான்னு வந்து வந்து கேட்டு மீண்டும் பரிமாறுபவர்கள் இருக்கிறார்களா?//

      செலவாகாமல் உள்ளே நிறைய இருந்தால் எத்தனை தரம் வேண்டுமானாலும் வந்து பரிமாறுவார்கள்!

      நீக்கு
    7. // இப்போது நல்ல பளிச்சென்று இருக்கும் வாழை இலையை வைத்தே புதிதான ஸ்வீட்டெல்லாம் பண்ணுகிறார்கள் //

      அப்படியா?  வாழை இலையை வைத்து ஸ்வீட் செய்கிறார்களா நிஜமாகவே?

      நீக்கு
    8. எனக்கும் தயிர்ப்பச்சிடி ரொம்பப் பிடிக்கும். ஆனால் காயைக் குறைவாக (தேடும்படியாக) போட்டு, தயிரை அதிகமாக்கும் வித்தையைத்தான் இப்போல்லாம் பண்ணறாங்க

      நீக்கு
    9. ஸ்ரீராம் எனக்கும் தயிர்ப்பச்சடி ரொம்பப் பிடிக்கும். ஆனால் வீட்டில் செய்வது. பந்தியில் எல்லாம் நெல்லை சொல்வது போல காயைத் தேட வேண்டும்.

      கீதா

      நீக்கு
    10. அப்படி இருக்காது நெல்லை.  பரிமாறுபவர்கள் அவ்வளவு விவரமானவர்கள் அல்ல.  மேலாக பரிமாறுவார்கள் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
    11. நானும் அவ்வப்போது வீட்டில் தயிர்ப்பச்சடி செய்து மகனை சந்தோஷப்படுத்தி இருக்கிறேன்!

      நீக்கு
  19. வட இந்திய பெண்ணோ? பெண் வீட்டார் வட இந்தியர் கல்யாணம் என்று தெரிகிறது. சரியா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லை.  ஆனால் உணவை வைத்துக் கொண்டு ஆளை எடைபோட முடியாது.  இப்போது எல்லோரும் எல்லாமும் செய்கிறார்கள்!

      நீக்கு
    2. ஆமாம் இதையும் சொல்ல நினைத்தேன்...ஈஸ்ட் ஆர் வெஸ்ட், நார்த் ஆர் சவுத் கல்யாணம் இஸ் மிக்ஸ்ட்!!!!

      கீதா

      நீக்கு
    3. ஆமாம்.  கொஞ்சம் படுத்தலும் கூட...    சுவைக்கவும் தயக்கம்;  கடக்கவும் மனம் வராது!

      நீக்கு
  20. 'நடுவில் இங்கே யாரும் உட்காரவில்லையா' என்று கேட்டார்கள். நான் ஒரு தெய்வீகப் புன்னகை சிந்தினேன். என் பெருமையை பாஸ் எடுத்துரைத்தார். //

    ஹாஹாஹா இதற்கும் ஹைஃபைவ்! நானும் இப்ப தெய்வீகப் புன்னகையை சிந்திக் கொள்கிறேன். நான் வேஸ்ட் பண்ண மாட்டேன். தேவையில்லாததை போட்டுக் கொள்வதும் இல்லையா.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நானும் அப்பளம், வடகம், பிரைட் ரைஸ் போன்றவற்றை வேண்டாம் என்று சொல்லி விடுவேன்.  ஊறுகாய் வழக்கமான கடை ஊறுகாய் போல உப்பு ஊறுகாயாக இருந்தால் வேண்டாம் என்று சொல்லி விடுவேன்,

      நீக்கு
  21. ஹாங்க் சொல்ல மறந்துவிட்டேனேன்...மகனும் என்னை மாதிரியே. கணவரும் வேஸ்ட் செய்ய மாட்டார் ஆனால் சாப்பிட்ட தடம் தெரியும். நானும் மகனும் இருக்கோம் பாருங்க!!!!!!! ஹோட்டல்லுக்குப் போனா...... (மைன்ட் வாய்ஸ் கீதா சில்லு சில்லாய்ல எழுதி வைச்சிருக்க....!!)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...   ஹோட்டலில் அல்லது திருமணத்தில் பரிமாறுபவர் நினைத்துக் கொள்வார்.  'இப்படி வழிச்சு நக்கறானே..  ப்சின்னா இன்னொன்று புதிதாகவே போட்டுக்கொள்ளலாமே'

      நீக்கு
  22. டெலிஃபோன் இயர்.....ஹிஹிஹி...

    இப்பலாம் பசங்க ஹெட் செட் மைக் மாலை போட்டு அலையறாங்க...எனக்கும் பொறாமையாக இருக்கு. ஆனா எனக்குப் பயன்படுத்த முடியாதே!!! பெரிய ஹெட் செட் வேணும். ஹியரின் எய்ட் மேலே வைத்துக் கொள்வது போன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /ஹெட் செட் மைக் மாலை போட்டு அலையறாங்க/

      மாலையெல்லாம் போய் இப்போதெல்லாம் விஞ்ஞான யுகம் "காதோடுதான் நான் பேசுவேன்" என்றாகி விட்டதே..! எல்லோருமே இப்போது காதில் அது இல்லாமல் வெளியில் நடப்பதில்லை. (வீட்டிலும் அப்படித்தானோ என்னவோ..!) எந்நேரமும் இப்படியென்றால், காதுகள் வம்பாகி விடாதா என எண்ணும் போது, காது கேட்கும் திறன் இவர்களுக்கு எப்படி என நான் அதிசயக்கிறேன். ஆனால், ஒன்றை இழக்கும் போதுதானே அதன் அருமை தெரியுமென்ற தத்துவத்தையும் உணர்கிறேன். (இது நம் மன சமாதானம்.)

      நீக்கு
    2. ஆமாம் ப்ளூ டூத், கமலாக்கா...ஆனால் பாட்டு கேக்கறதுக்கும் கூட அப்படி வந்திருகச்சு இப்ப. நான் மெட்ரோவில் மாலையாகத்தான் அலைவதைப் பார்க்கிறென். ப்ளூ டூத் பேசறதுக்கு.

      கண்டிப்பாகக் காதுகள் வம்பாகிப் போகும்!

      கீதா

      நீக்கு
    3. இதனால் நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், நான் புளூடூத், ஹேடஸ்ட் எதுவுமே உபயோகிப்பதில்லை.

      நீக்கு
    4. ஸ்ரீராம்...ஐயையோ... எனக்கு ஆல் இண்டியா ரேடியோ மாதிரி, மொபைலில் பாட்டுப் போட்டு பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நடக்கிறவர்களைக் கண்டால் அலர்ஜி. அதுபோல, இரயில் பயணத்தில் உலகத்துக்கே கேட்கும்படி எதையாவது கேட்டுக்கொண்டிருப்பாங்க, கூட வர்றவங்களுக்கு தலைவலியா இருக்குமே என்று யோசிக்க மாட்டாங்க. ஏசி இரயில் டிக்கட் வாங்கத் தெரியுது, 60-100 ரூபாய் கொடுத்து ஹெட் செட் வாங்கக்கூடத் தெரியலையா என்று நினைப்பேன்.

      நீக்கு
    5. பயப்படாதீங்க நெல்லை! நான் சத்தமாக பாட்டு கேட்பவன் எல்லாம் இல்லை. அதாவது பொதுவெளியில். வீட்டிலும் அளவான சவுண்ட் வைத்து பாடல்கள் கேட்பேன். நான் பாடல்கள் கேட்கும் போது கூடுமானவரை வேறு தொந்தரவுகள் இருக்கக் கூடாது. ஒரு முறை கண் ஆஸ்பத்திரியில் நான் ஹெட்செட் கேட்ட விவரத்தை எழுதியிருந்தேன்.... நினைவு இருக்கிறதோ இல்லையோ...!

      நீக்கு
    6. வீட்டில் இங்கு ஹெட் செட் போட்டுத்தான் பாடல்கள் கேட்க வேண்டும் அதாவது கச்சேரிகள், சினிமா பாடல்கள் போன்ற பாடலள். காலையில் மிகவும் மெலிதாக கவசங்கள் ஒலிக்கும் அவ்வளவே. மற்றபடி எல்லாம் ப்ரைவெட் பாலிசி. சத்தம் கேட்கக் கூடாது வீட்டில். வெளியில் பயன்படுத்தும் வழக்கம் இல்லை. நோ ப்ளூடூத்! இல்லாட்டாலும் எனக்கு அது வொர்க்கவுட் ஆகாதே.

      ஆமாம், நெல்லை, ரயிலில் இரவில் கூட மொபைலை வைத்துக் கொண்டு டிக்டாக் எல்லாம் போட்டு சத்தமாக வைக்கறாங்க....

      கீதா

      நீக்கு
    7. பாட்டு வைப்பவர்கள், டிக்டாக் மற்றும் ரீல்ஸ் சத்த........த்தமாக வைத்துக் கேட்பவர்கள் தொல்லை ஒருபுறம் என்றால்,

      பொது இடம் என்று பார்க்காமல் ஃபோனில் த்தமாக பேசுவார்கள் பாருங்கள்...

      நீக்கு
    8. திருத்தம்  :

      பாட்டு வைப்பவர்கள், டிக்டாக் மற்றும் ரீல்ஸ் சத்த........த்தமாக வைத்துக் கேட்பவர்கள் தொல்லை ஒருபுறம் என்றால்,

      பொது இடம் என்று பார்க்காமல் ஃபோனில் சத்தத்த..... தமாக பேசுவார்கள் பாருங்கள்...

      நீக்கு
  23. தூக்கணாங்குருவிக் கூடு - தூக்கணம் - பற்றிய விளக்கம் ரசித்து வாசித்தேன், ஸ்ரீராம் நிஜமாகவே இயற்கை எஞ்சினீர் தான்...

    கிராமத்தில் ஒரு மூதாட்டி ஒரு பலூனை பெரிதாக்கிச் சுற்றி நார், பட்டைகள் எல்லாம் கட்டி தொங்கவிடும் அளவு மிக அழகாகச் செய்கிறார். அதை பந்துபோன்றும் துக்கிப் போட்டுக் காட்டுகிறார் அதன் நடுவில் ஓட்டை போட்டு மரத்தில் தொங்கவிடுகிறார்கள்....அட என்று தோன்றியது ஓட்டை போட்டதும் பலூன் அப்படியே இருப்பது ஆச்சரியமாக இருந்தது. மிகத் திறமையாகப் பின்னுகிறார் அசத்தலாக இருந்தது நம் கிராமப்புறப் பெண்களின் திறன்களைப் பார்க்கறப்ப. எத்தனை திறமை மிக்கவர்கள் என்று, அசந்துவிட்டேன். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தும் ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலூனை ஊதி இதுமாதிரி கூடைகள் செய்யும் சில வேலைகள் நானும் ரீல்ஸில் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  24. உணவை வீணாக்காத உங்கள் குணம் நன்று. நானும் தட்டை, அலம்பாமல் திரும்பச் சாப்பிடும் அளவில், இலையும் அப்படியே, வைப்பேன். ஆனால் சிலர், கொஞ்சம்கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடறானே என நினைக்கவும் வாய்ப்பிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை சொன்னா சொல்லிட்டுப் போறாங்க. நாம பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டும். நம் நாட்டின் ஒரு நாளைய உணவு வேஸ்ட் டேட்டாவில் இல்லாமல் இருக்கிறோம் என்று.

      கீதா

      நீக்கு
    2. யார் வேண்டுமானால் என்ன வேண்டுமானால் சொல்லிவிட்டுப் போகட்டும் என்று நான் இப்படிதான் சுத்தம் செய்கிறேன். எதிரில் அமர்ந்திருப்பவர்கள் எல்லாம் கூட வேடிக்கை பார்ப்பார்கள்!

      நீக்கு
  25. அதாவது, தீயவர்களுக்குப் புத்தி சொல்லப் போனால் , அது சொல்பவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்கிற அர்த்தத்தில் ..!//

    இது ரொம்ப உண்மை. டிட்டோ செய்கிறேன்.

    ஆனால் உதாரணக் கதையைத்தான் மனதிற்கு ஏற்க முடியலை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன், பாவமாக இருக்கிறதா?  அது ஏதோ உட்டாலக்கடி!

      நீக்கு
    2. ஆமா.....உட்டாலக்கடிதான் இப்படி நிறைய இருக்கே.

      கீதா

      நீக்கு
  26. கவிதை சூப்பர், ஸ்ரீராம். நல்லாருக்கு...பொ எ கொ!

    கீதா

    பதிலளிநீக்கு
  27. கெளரி கிருபானந்தன் என்றால் அது நம்பத் தகுந்தது. //

    என் கணிப்பு சரி என்றால் கௌரி அவங்க குவிகம் கிருபானந்தன் அவர்களின் மனைவி. அவங்க நிறைய மொழிபெயர்ப்பு செய்திருக்காங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் நினைத்தேன் கீதா. சொல்லவில்லை.

      நீக்கு
  28. கடைசியில் பார்த்தால், ‘முள் பாதை’யை எழுதியவர் யத்தனகுடி சுலோச்சனா என்னும் பெண் எழுத்தாளர். அது மட்டுமல்ல, ‘பவித்ர பந்தம்’ என எண்டமூரியின் பெயரில் தமிழில் வெளிவந்த நாவலும் யத்தனகுடி சுலோச்சனா எழுதியதுதான்.//

    அடக்கடவுளே!

    எண்டேரி பற்றி தொடங்கி சுலோசனா வரை தகவல்கள் சுவாரசியம்.

    இந்தக் கதைத் திருட்டு பாருங்க, படங்கள்ல சொல்றேன்...திருடிட்டு பெயர் போடாம - பார்ப்போம் மக்களுக்குத் தெரியுதா இல்லையா நைசா விட்டிருவோம்னு போட்டுட்டு அப்புறம் மக்கள் ரவுண்டு கட்டி மீடியாவில் விளாசிய பிறகு, ஆமா அவங்க கதையைத்தான் எடுத்தேன்னு சொல்லி....ம்ம்ம் இதெல்லாம் சர்வசகஜமப்பா...இது உள்ளூர். வெளியூர்லருந்து இப்படி எடுத்ததுக்கு வெளில தெரிஞ்சதும் என்ன ஈட்டுத் தொகை கொடுப்பாங்களோ?

    ஒரிஜினலுக்கு மதிப்பே இல்லாமப் போகுது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொய்யர்கள்!  யார் திறமையையோ உபயோகித்து இவர்கள் காசு பார்க்கிறார்கள்!  ஒருவேளை பைத்தியமோ என்னவோ!

      நீக்கு
  29. ஸ்ரீராம் குற்றம் இழைத்தவன் தப்பிச்சு எங்கயாச்சும் ஒளிவது நடக்கிறதே...ஆனால் கூட்டாளிகள் இருந்தால், அல்லது ஏவியவன் வந்து பார்த்து என்ன நடக்குதுன்னு விஷயம் பாஸ் ஆகும்....நீ வெளிய வராதே, டைம் சொன்னபிறகு வெளிய வான்னு அப்படித்தானே...

    நீங்க சொல்லியிருப்பது, குற்றமும் நானே ஏவியவனும் நானேன்னு சிங்கிள் ஹாண்டடா செய்யறவன் வேணா வந்து பார்க்கலாம். அதுவும் டயம் பார்த்து. சிலப்போ தடயம் விட்டுப் போச்சோன்னு பார்த்து அப்புறப்படுத்தவும் கூட...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குற்றமும் நானே - குற்றம் புரிபவனும் நானே

      கீதா

      நீக்கு
    2. அங்கு என்ன நடக்கிறது, மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதா என்று பார்க்க ஓரிரு முறையாவது அவன் அங்கு வருவான் என்பதுதான் என் எண்ணம்!

      நீக்கு
  30. அந்தக் கதவைத் திறந்து - வலப்பக்கம் உள்ள கதவில்தான் ஓட்டை இருக்கு....என்ன ஜோக்? அந்த ஆள் பேக்குன்னா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு கதவுமே ஒன்றையொன்று கைகாட்டுகிறதே என்பதுதான் அவன் முழிப்பதற்கு காரணம்.

      நீக்கு
    2. அதுக்குத்தான் சொன்னேன் அந்த வலப்பக்கம் உள்ள கதவில் ஒரு ஓட்டை மாதிரி ஒன்று வரையப்பட்டிருக்கே என்று

      கீதா

      நீக்கு
  31. தனி ஒருஅனுக்கு, சீட்டு - கொஞ்சமே கொஞ்ச்ம பரவாயில்லை ரகம்

    கீதா

    பதிலளிநீக்கு
  32. சரோஜா தேவியின் கூற்று.....

    தொழில் வேறு வீடு வேறு இல்லையோ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் ஒரு ஃபார்முலாவை கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.  இன்னும் வெற்றிகரமான தம்பதிகள் நிறைய இருக்கிறார்களே...  சமீபத்தில தேவிகாவின் கணவர் ஒரு டைரக்க்டர், தேவிகா பற்றி சொன்னதை எல்லாம் கேட்டேன்.  நல்லாயில்லை கேட்டேளா....

      நீக்கு
  33. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  34. இன்று அனைத்து பகுதிகளும் நன்றாக இருக்கிறது.
    இளநீர் ஜெல் ருசியாக இளநீர் சுவை கொடுத்தால் சரிதான்.

    நீங்கள் நல்ல ரசிகர் என தெரிகிறது, வேண்டும் மென்பதை கேட்டு வாங்கி உணவை வீணாக்காமல் சாப்பிட்டதை பாராட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா.. நமக்குதான் நாக்கு நாலு முழம் ஆச்சே...

      நீக்கு
  35. டெலிபோன் என்று இல்லை எல்லாம் அளவாக பயன்படுத்தினால் எல்லாம் நலமே . இதற்கு மாத்திரை போட்டு அது வேறு பக்கவிளைவை கொடுத்தால் என்ன செய்வது?

    "தூக்கணாங்குருவிக் கூடு" பாடலை வைத்து நன்னெறி கதை சொன்னது அருமை.
    உங்கள் பழைய கவிதை சொல்வது உண்மை, சில நினைவுகள் என்றும் ஈரபதமாகதான் நெஞ்சில் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள். நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  36. விஜய நிர்மலா இயக்கிய "மீனா' திரைபடம் பார்க்க ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது செய்திகள்.

    முத்து காமிக்ஸ் கதை புத்தகம் சார் தெருவெண்காட்டில் இருக்கும் போது மாயவரம் போய் வாங்கி வருவார்கள் அவர்கள் படித்தபின் எனக்கு தருவார்கள். மாயவர்ம் வந்த பின் பிள்ளைகளும் படிக்க ஆர்ம்பித்து விட்டார்கள் .

    நீங்கள் மதுரை வந்த போது சாருடன்பேசி கொண்டு இருந்து விட்டு, உங்களுக்கும் முத்து காமிக்ஸ் கதைகள் பிடிக்கும் என்றதும் சில பழைய முத்து காமிக்ஸ் கதை புத்தகங்கள் கொடுத்தார்கள் சார் உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ஜோக்ஸ் நன்றாக இருக்கிறது, சிரிப்பு வருகிறது.
    சரோஜாதேவி சொன்னது சரிதான், ஆனால் இறைவன் அவர் கணவரை சீக்கீரம் அழைத்து கொண்டாரே!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். //

      ஆம். நினைவிருக்கிறது. எவ்வளவு வருஷங்கள் ஆச்சு? கிட்டத்தட்ட பத்து வருடங்கள், இல்லையா?

      நீக்கு
  37. நன்றி மாதேவி. (எப்படியும் வருவார் இல்லையா?!!!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)))) கண்டிப்பாக வந்து விடுவார். சகோதரி மாதேவி அவர்கள் சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் பதிவில் (சென்ற வார ஏதோவொரு பதிவில்.) தனக்கு சற்று உடல் நலமில்லை எனக் கூறியிருந்ததை படித்ததாக நினைவு. தற்சமயம் அவர் பூரண நலம் பெற்றிருப்பார் என நம்புகிறேன். அவர் உடல்நிலை பூரண நலமாகிட இறைவனை நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
    2. என்னையும் விசாரித்து நலமடைய வேண்டிய அன்புள்ளங்களுக்கு நன்றிகள் பல...பல....

      நீக்கு
  38. வணக்கம் சகோதரரே

    மீண்டும் உணவு தி. வி. வை படித்தேன். இளநீர் ஜெல்லி, இளநீர் பாயாசம் என்றால் அங்கு எத்தனை இளநீர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்ற யோசனை வந்தது.

    கவிதை அருமை. நினைவுகள் நம் நினைவு தப்பும் வரை நம்மோடிருப்பவை. நல்ல அர்த்தத்துடன் நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    தூக்கணாங்குருவி பாடல் மறக்க முடியாதது. தேவிகா மிக அழகானவர். எல்லா படங்களிலும், அவர் பாடும் பாடல்களை அவரே பாடுவது போல ரசித்து பாடி நடிப்பவர். அந்த கதையும் அதன் பொருளை உணர்த்தும் விளக்கமும் படித்து ரசித்தேன்.

    இந்த வார ஜோக்ஸ் அனைத்தும் நன்றாக உள்ளது. உ. தி. வி தவிர மற்ற பகுதிகளுக்கு கருத்துரைத் தர காலையில் நிறைய வேலைகளினால் உடனே முடியாமல் போய் விட்டது. அதனால் தாமதமாக வந்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  39. கலியாணச்சாப்பாடு எமக்கும் பரிமாறிவிட்டீர்கள் .:)

    கவிதை பிடித்தது.
    சிரிப்பு .... பானை, சோறு , குருவிக்கூடு, என ரசனையாக இருந்தது.
    தூக்கணாம் குருவி படப்பாடல் சிறுவயதில் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்..

    பதிலளிநீக்கு
  40. விருந்து அப்டேட் ர(ரு)சித்தேன். சமீபத்தில் சென்றிருந்த திருமண விருந்தில் வட இந்திய இனிப்புகள் சில புதிய அறிமுகம். சில பதார்த்தங்களை எப்படி சாப்பிடுவதென்பது கூடத் தெரியாமல் பிட்டு பிட்டு சாப்பிடுகையில் பரிமாறுகிறவர் விரைந்து வந்து ‘இப்படி சாப்பிடக் கூடாது. அப்படியே எடுத்து மொத்தமாகக் கடித்துச் சுவைக்க வேண்டும்’ என சொல்லிக் கொடுத்தார் :).

    கவிதை நெகிழ்வு.

    ரிப் கெர்பி என நான் விடை சொல்லும் முன்னரே பலர் சொல்லி விட்டிருந்தார்கள் உங்கள் ஃபேஸ்புக் பதிவில். நானும் அந்நாளில் தீவிர காமிக்ஸ் ரசிகை. அது குறித்து ஒரு பதிவும் உண்டு.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி சாப்பிடவேண்டும் என்று சொல்லியாவது கொடுக்கிறார்களே..

      நீங்களும் காமிக்ஸ் ரசிகை என்பது எனக்குத் தெரியுமே....என்னையும் எழுத சொன்னீர்களே...

      நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!