கோர்ட்டு முத்திரை
ந. பிச்சமூர்த்தி
"இப்பொழுது முன்சீப் கேஸைக் கூப்பிடப் போகி றார். என்ன செய்வோம்?"
"ஏங்க? நெம்பரை நடத்த வேண்டியது தாங்களே. பணம் கொடுத்ததைப் பார்த்தவரு ராமன் வந்திருக்காரு. கிட்ணன் வந்திருக்காரு. அவருகிட்டெத்தான் பணம் கடன் வாங்கிக் கொடுத்தேன். ரசீது தர்றீயா.இல்லை யான்னு கேட்டனுப்பிச்சப்போ தறேன்னு அவரு சொன்னதுக்குச் சாட்சி இருக்கு?"
"அது யாரு?"
"அந்தாலே நிக்கிறாரே வீசைக்காரரு, அவருதான்.'
"அவர் பேரு?"
"ஒரு நல்ல பேருங்க.''
"உனக்கே தெரியாதா?"
"ஏன் தெரியா து?" மறந்து போச்சுங்க. கிருஷ்ணன் ஊர்தானுங்க. அவர் பின்னோடெத்தான் வந்திருக்கிறாரு. ஏன் கிட்ணா. அவர் பேரென்ன?''
"கோவிந்தன்"
"ஆமாங்க, ஆமாங்க. கோவிந்தனுங்க.''
"இவர்களை எல்லாம் விசாரித்தால்?"
''பணம் குடுத்தேனா, இல்லையா இங்கிறது புலப்பட் டுப் போவுது.'
''பணம் கொடுத்தோமா, இல்லையா என்பது நமக்குத் தெரியாதா?"
"அதெப்படித் தெரியும்? ஒலகத்திலே நடக்கிற எல்லா விஷயங்களும் நமக்கெப்படித் தெரியுமுங்க?"
"அது சரி. கேஸ் விசாரணைக்கு வந்து எத்தனை ஈரங்கி ஆச்சு என்று ஞாபகம் இருக்கிறதா?''
"அஞ்சு மாசம் ஆச்சு.''
"உனக்குத்தான் நல்ல ஞாபகம் இருக்கிறதே. நீ கோர்ட்டுச் சம்மனையும், பிராது நகலையும், கிருஷ்ணனை யும் அழைத்துக்கொண்டு வந்தாயே, அது ஞாபகம் இருக்கிறதா?"
"நல்லா இருக்கு! கிட்ணனும் நானும் பாலக்கரை ஆச்சி கிளப்பிலே அரிசி உப்புமாத் தின்னூட்டு நேரே உங்க ஊட்டுக்குத்தானே வந்தோமுங்க. நல்ல படை படைக்கிற வெயில்!"
"வந்து என்னிடம் என்ன சொன்னாய், ஞாபகப் படுத்திப் பாரு."
"சுக்ரமணிய கவுண்டன் தாவா போட்டூட்டானுங்க. சம்பா மகசூல் கைக்கு வந்ததும் பணம் தரேன் இன்னு சொன்னேன். சரீன்னு சொல்லிக்கிட்டிருந்த பயல் தாவா போட்டூட்டானுங்கன்னு சொன்னேன்."
"வேறே ஒண்ணும் சொல்லவில்லையா?"
"கோர்ட்டுலே நாலு மாசம் கெடு வாங்குங்க. சம்பா மகசூலில் கடனைத் தலையைச் சுத்தி எறிஞ்சுடறேன்னு சொன்னேன்.''
''அதற்கு நான் என்ன சொன்னேன்; ஞாபகம் இருக் கிறதா?"
"கச்சேரியிலே ஒரு மாசத்துக்கு மேலேகெடு கொடுக்க மாட்டாங்க இன்னீங்க. ஒரு மாசத்திலே பணம் எப்பிடிக் கிடைக்குமுங்க? சனியனை ஒழிச்சுப் புடறேனுங்க ; அதுக்கு எப்படியாச்சும் ஒரு வழி பண்ணுங்க இன்னேன்.''
"நீ சொன்னபடி வழி செய்தேன். ஒரு கட்சியைச் சொல்லிவை. விசாரணை என்று, இரண்டு, மூணு ஈரங்கி ஒத்திப் போகும். நாலு மாசம் கெடுவும் கிடைச்சுப்போகும் என்று சொல்லிவிட்டு ஒரு கட்சியை எழுதிப் போட்டேன்."
"அதுக்கென்னாங்க, நீங்க சரியாத்தானே எழுதிப் போட்டீங்க."
''பிரதிவாதி கொடுத்த பணம் பத்து ரூபாயைப் பிராதில் வரவு வைக்காமல் வாதி மோசடி செய்திருக்கிறார் என்று நானா எழுதிப் போட்டேன்?''
"ஆமாங்க."
''பணம் கொடுத்தேன்னு நீ சொல்லவில்லையே."
"இல்லிங்க."
"இப்பொழுது வந்து சாட்சி வந்திருக்கு விசாரிக்கணும் என்கிறாயே?
"ஆமாங்க.''
"வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது என்பார்களே. அதுமாதிரி பொய்க் கட்சியை நான் தயார் செய்தேன். என்னிடத்திலேயே, 'சாட்சி இருக்கிறது. நம்பரை நடத்த வேணும்' என்கிறாயே!"
"வாஸ்தவம்தானுங்க, ஒருநாள் ராமனைப் பார்த்து வக்கீல் ஐயா இந்த மாதிரி எழுதிப்போட்டு இருக்காங் கன்னு சொன்னேன். பணம் கொடுத்தது அவருக்கு எப்பிடித் தெரிஞ்சுதுன்னு கேட்டானுங்க. அப்பொத்தான் பணம் கொடுத்திருப்பேன்; மறந்து போச்சு இன்னு தோணித்து.''
''இதைப் பாரு, இந்தக் கதை எல்லாம் கோர்ட்டிலே பலிக்காது. முனிசீப் முழிச்ச ஆள். கட்சியை நடத்தவில்லை என்றால் கௌரவமாக இரண்டு மாசம் கெடுவாவது வாங்கலாம்."
"பணம் குடுத்துதுன்னு எழுதிப் போட்டீங்களே ; அது பொய்யாகிடுமே."
"இல்லாத போனால் ரொம்ப நெஜம்!"
"அப்பொ இவுங்க எல்லாம் பொய் சொல்றாங்களா?"
''கருமாதிக்குச் சாப்பிட்டவன் இருக்கிறான்; செத்தது பொய் என்கிறாயே!"
"என்னங்க! பொய் மெய்யெல்லாம் கோர்ட்டாரு அல்ல சொல்லணும். சும்மா நெம்பரை நடத்துங்க. பணம் கொடுத்தது மெய்யா, பொய்யாங்கறது கோர்ட்டாரு பாடு."
கோர்ட்டு முத்திரை விழுந்தாலொழிய பொய் பொய்யாகாது என்ற புது உண்மையைக் கேட்ட வக்கீலுக்கே ஆச்சரியமாக இருந்தது. வக்கீல் கையில் இருந்த பென்சில் அவரை அறியாமலே வராந்தாத் தூணில் ஒரு ஆவர்த்தம் வாசிக்க ஆரம்பித்துவிட்டது.
"ராக்கப்ப பிள்ளை, ராக்கப்ப பிள்ளை!" என்று கச்சேரி டபேதார் வராந்தாவில் நின்று கத்தினான்.
வக்கீலும் ராக்கப்ப பிள்ளையும் கோர்ட்டுக்குள் விழுந்தடித்து ஓடினர். முன்சீப்தார் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். வாதி, பிரதிவாதி, சாட்சி ராமன், கிருஷ்ணன், கோவிந்தன் அத்தனை பேர்களையும் விசாரித்த கோர்ட்டார் வாதி பக்கம் தீர்ப்பளித்துவிட்டு, அடுத்த கேஸை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். வக்கீலும் ராக்கப்ப பிள்ளையும் வராந்தாவுக்கு வந்தனர்.
"என்ன ராக்கப்ப பிள்ளை! இப்பொழுது திருப்தியாகி விட்டதா? முன்சீப் முத்திரை விழுந்தூட்டுது. சந் தோஷமாப் போச்சா?" என்றார் வக்கீல்.
ராக்கப்ப பிள்ளை உடனே பதில் சொல்லவில்லை. ஊருக்கு அடுத்த பஸ் எப்பொழுது கிளம்பும் என்று வீசைக்காரரை விசாரித்தார். ஒரு மணி நேரத்துக்குள் பஸ் இருப்பதாகவும், போகிற வழியில் பாலக்கரை ஆச்சி கிளப்புக்குப் போய்விட்டு வீட்டுக்குக் கிளம்பப் பொழுது இருப்பதாகவும் பேசிக்கொண்டார்கள்.
"என்ன ராக்கப்ப பிள்ளை! நான் கேட்டது காதுலே விழல்ல போல இருக்கு. இப்பொழுது சந்தோஷமா?''
"விழுந்துதுங்க. கச்சேரிக்கு லீவ் எப்பொங்க?"
"அடுத்த மாசம்.'
"சுக்ரமணியன் என்னை எதுனாச்சும் செய்யணுமின்னா என்ன செய்யணும்?"
"தீர்ப்பு நகல் வாங்கிக்கொண்டு நிறைவேற்ற மனுப் போடவேணும்.'
அந்த நகலு அவனுக்கு இன்னிக்கே கிடைக்குமா?''
''கிடைக்காது. இவன் ஒரு நகல் மனுப் போட வேணும். பிறகு ஒரு மாசத்திலே கிடைச்சுப் போகும்."
"அது வரத்துக்கும் கோர்ட்டுச் சாத்தறதற்கும் சரியாய்ப் போயிடாதுங்களா?"
"போயிடும், போயிடும். நான் கேட்டதற்குப் பதில் சொல்லமாட்டேங்கிறியே?''
"அதைப் போய்ச் சொல்லுவானேன்னு?''
"சும்மாச் சொல்லு.''
சந்தோஷமாத்தான் போச்சுங்க. இப்பொப் போய்க் கெடு வாங்கிக்கிட்டா நல்லாவா இருக்கும்? உங்களை அல்ல பொய்யனாக்கிப் புடும்? எனக்காக ஒரு கட்சி எளுதிப் புட்டீங்க. அதைப்போய் நானே அழிக்கலாம்களா? இப்பொ பாருங்க. யாரும் பொய்யாகிடல்லே. எதோ கோர்ட்டாரு செஞ்சுப்புட்டாங்கன்னூட்டுப் போயிடும். இல்லீங்களா? மூணு நாலு மாசம் இருந்தால் போதுமின்னு நெனைச்சேனுங்க. ஆறு மாசத்துக்கு மேலேயே கெடச்சிப் போச்சு; வரேங்க."
ராக்கப்ப பிள்ளையும், சாட்சிகளும் வக்கீலை வணங்கி வீட்டுப் புறப்பட்டுவிட்டார்கள்.
தான் சொன்ன பொய்யை மெய்யாக்க இவ்வளவு முயற்சியும் செய்தது போல ஒரு தோற்றத்தை அல்லவா உண்டாக்கி விட்டான்! அந்த உண்மை அவர் மனத்தைக் கலக்கிற்று. அவரை அறியாமலே கையிலிருந்த பென்சில் வராந்தாத் தூணில் கெத்து வாசிக்கத் தொடங்கிற்று.

===============================================================================================
ந. பிச்சமூர்த்தி பற்றி தனது 'இந்திய இலக்கியச் சிற்பிகள்' என்கிற நூலில் அசோகமித்திரன் சொல்லி இருப்பது....
நான் பிச்சமூர்த்தியை முதலில் 1958ல் ஜெமினி ஸ்டுடியோவில் சந்தித்தேன் நான் அப்போது ஜெமினி ஸ்டூடியோவில் பணி புரிந்து கொண்டிருந்தேன். சம்பளம் பெரியதில்லையாயினும் தனி அறையும் தொலைபேசியும் உண்டு. உண்மையில் நான் பணி புரிய இரு தனி இடங்கள். என் அறை அமைதியாக இருக்குமாதலால் என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்யும் அளவுக்குப் பரிச்சயம் உள்ளவர்கள் அவர்கள் தொலைபேசியில் யாரிடமாவது பேசவேண்டுமென்றால் என் அறைக்கு வந்து விடுவார்கள். சில சந்தர்ப்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் என் அறைக்கு வந்து விடுவதும் உண்டு. அப்போது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது நட்புத் தோன்றவிருக்காது. ஒருவர் எழுந்து போய்விடுவது கூட உண்டு.
என் அறைக்குக் கி.ரா. அடிக்கடி வருவார். அவருடைய முழுப் பெயர் ஏ.கே.ராமச்சந்திரன். அவர் ஒரு தமிழ் எழுத்தாளர் என்றும் 'ஒளவையார்' படத்தின் வசனங்களில் பெரும்பான்மை அவருடைய முயற்சி என்றும் எனக்குத் தெரியும். அதற்குப் பத்தாண்டுகள் முன்பு அவர் எழுதிய சிறுகதையொன்றைக் 'கலைமகள்' பத்திரிகையில் படித்து மனம் நெகிழ்ந்திருக்கிறேன். 'மணிக்கொடி' பத்திரிகையின் இயக்கத்தில் அவருக்குண்டான பெரும் பங்கை அன்று நான் அறிந்ததில்லை.
பிச்சமூர்த்தி தவிர இன்னும் பல எழுத்தாளர்கள் கி.ரா.வைப் பார்க்க வருவார்கள். தனி அறையில் என் பாதுகாப்பில் இருந்த தொலைபேசி என் வயதுக்கு மீறிய மரியாதையை எனக்குக் கிடைக்கச் செய்தது. கி.ரா. போன்றவர்கள் என்னைப் பன்மையில் அழைத்து, பேசுவது எனக்குக் கூச்சத்தை அளிக்கும். பி.எஸ்.ராமையா ஒருவர்தான், "இவன் எங்க ஊர்ப் பையன்." என்று உரிமையோடு பேசுவார். ஆனால் அவருடன் வரும் சி.சு.செல்லப்பா என்னை உறவினனாகவோ அவருடைய ஊராகிய வத்தலக்குண்டு என் தாயாரின் ஊர் என்பதாகவோ கருதமாட்டார். என் தாயார் வசித்த வீடுதான் ராஜம் ஐயர் எழுதிய 'கமலாம்பாள் சரித்திரத்தில் காணப்படும் பெரிய வீடு என்பது எனக்குப் பல ஆண்டுகள் கழித்துத் தெரிந்தது.
பிச்சமூர்த்தி என்னுடன் மிகவும் அன்புடன் நடந்து கொண்டதற்கு ஒரு முக்கிய காரணம் அவர் என்னுடைய இரண்டாவது தமிழ்க் கதையாகிய 'விபத்து' படித்திருந்ததுதான். அக்கதையைப் பற்றி அவரும் கி.ரா.வும் விவாதித்திருக்கிறார்கள் என்பது பின்னர் தெரிய வந்தது.
அன்று அவர் படித்திருந்தது என்னுடைய அந்த ஒரே கதையாயினும் என்னைத் தனக்குச் சமமாக நடத்த அவருக்குத் தயக்கமில்லை. அவர் என் அறைக்கு வந்தது கிடையாது. அவர் கி.ரா. அல்லது கொத்தமங்கலம் சுப்பு ஆகியோரின் அறையில்தான் உட்கார்ந்திருப்பார். அவரைப் பார்க்க என்னைக் கி.ரா. அழைத்துச் செல்வார்.
பிச்சமூர்த்தி மிகவும் குறைவாகப் பேசுவார். அவர், கி.ரா. இருவருமே வார்த்தைகளை மிகவும் அளந்துதான் பேசுவார்கள். நானும் பிச்சமூர்த்தியும் பல தருணங்களில் தனியாக இருந்தபோது மௌனமாகவே இருப்போம். அதே நேரத்தில் எவ்விதச் சங்கடமு மில்லாமல் மனம் தளர்ந்து இருப்போம். பிச்சமூர்த்தியின் தாடி அவருடைய வயதுக்கு மீறிய மூப்பை வெளிப்படுத்தினாலும் அவர் அன்றாடச் செய்திகள் பற்றியும் பத்திரிகைகளில் வெளிவரும் கதைகள், அவற்றின் ஆசிரியர்கள் பற்றிப் பேசும்போதும் அவர் தனித்துப் போன முதியவராகத் தோன்றமாட்டார். கி.ரா.. கொத்தமங்கலம் சுப்பு. சாலிவாஹனன், சிட்டி, சி.சு.செல்லப்பா,பி.எஸ். ராமையா இவர்கள் அனைவரும் ஒரளவு சமவயதினர். கி.ரா.வும் கொத்தமங்கலம் சுப்புவும் அன்று ஜெமினி ஸ்டூடியோவில் சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும் அவர்கள் எல்லாரும் கொத்த மங்கலம் சுப்புவின் அறையில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பது ஒரு திருமண வீட்டுத் தோற்றம் தரும். சினிமா ஸ்டூடியோ எனும் திரை அவர்களிடையே சிறிதும் செயல்படவில்லை.
பிச்சமூர்த்தியை நான் சந்தித்த நாட்களில் அவர் அதிகம் எழுதிக்கொண்டிருக்கவில்லை. அவருடைய ஒரு நீண்ட கதை 'கலைமகள்' பத்திரிகையில் வந்தது. பின்னர் செல்லப்பா 'எழுத்து' பத்திரிகை தொடங்கிய பின் அவர் ஆலோசகராக இருந்து பத்திரிகைக்கு ஒரு திசை கொடுத்தது அவர்தான் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. 'எழுத்து' பத்திரிகை ஒரு தாராள மனப்பான்மை கொண்ட உயர்ந்த சிந்தனைப் பத்திரிகையாகவும் விவாத தளமாகவும் அமைந்ததற்குப் பிச்சமூர்த்தியின் செல்வாக்கு முக்கிய காரணமா யிருந்திருக்க வேண்டும்.
கி.ரா. என்னைப் この முறை பிச்சமூர்த்தியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது பிச்சமூர்த்தி ஆழ்வார் பேட்டையில் ஒரு வீட்டின் ஒரு பகுதியில் வசித்து வந்தார். கி.ரா.வின் ஓர் உறவினர் மிருதங்கம் வாசிப்பவர். அவர் ஜெமினி ஸ்டூடியோவின் இசைப்பிரிவில் மாதச் சம்பளத்திற்கு இருந்தார். அப்போது பிச்சமூர்த்தியின் மகள்கள் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்று வந்தார்கள். மேடைக் கச்சேரி புரியுமளவிற்குத் தேர்ச்சி பெற்றிருந் தார்கள் என்று கூட எனக்குத் தோன்றியது. "இன்று மிருதங்கத்தோடு பாடப் போகிறார்கள்." என்று கி.ரா. என்னைப் பிச்சமூர்த்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இன்று நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. மாலை ஆறுமணிக்கு ஸ்டூடியோவிலிருந்து கிளம்பி சுமார் ஆறரை மணியளவில் பிச்சமூர்த்தி வீட்டையடைந்து சுமார் ஒரு மணி நேரம் அவருடைய மகள்கள் பாட்டுப் பாடுவதைக் கேட்டு விட்டு வீடு திரும்ப முடிந்தது. சென்னையில் அறுபதுகள் (1960கள்) வரை கூட வாழ்க்கை பல ஈடுபாடுகளுக்கு இடம் கொடுப்பதாக இருந்தது.
பிச்சமூர்த்தி அந்த நாட்களில் ஓர் எழுத்தாளர், நவீனத் தமிழ்ச் சிறுகதைக்கு ஒரு முன்னோடி என்றெல்லாம் நான் உணர்ந்து கொள்ளவில்லை. அதற்குத் தேவையும் ஏற்படவில்லை. என் மீது மட்டும் என்றில்லாமல் அவரறித்த அனைவர் மீதும் அன்பும் அக்கறையும் காட்டும் ஒரு மூத்த சகோதரன் போல அவர் நடந்து கொண்டார். நானறிந்தவரை அவரோ கி.ரா.வோ எழுத்தாளர் பற்றியோ படைப்புகள் பற்றியோ அதிகம் பரிமாற்றம் கொண்டதில்லை.
தாடி வளர்த்து ஒரு துறவி போன்ற தோற்றத்தைப் பிச்சமூர்த்தி கொண்டிருந்தாலும் அவர் ஆன்மிக விஷயங்களில் மிக உறுதியாக இருந்தார் என்பது அப்போது எங்கள் வாழ்க்கையில் வந்த காரை சித்தர் என்பவர் பிரவேசித்த போது தெரிந்தது அன்று பிச்சமூர்த்தியின் நண்பர் குழாம். அதிலும் மிக முக்கியமாகக் கி.ரா. காரை சித்தரால் கவரப்பட்டுச் சீடர் போலச் செயல்பட்டபோது பிச்சமூர்த்தி அப்படி காரை சித்தர் அலையில் தன்னை இழந்து விடவில்லை. அதே நேரத்தில் அவர் உதாசீனமாகவும் நடந்து கொள்ளவில்லை. காரை சித்தர் யாரையும் எதற்கும் நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் அவரைப் பயன்படுத்திக்கொள்ள வந்தவர்களுக்குத் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படுத்திவிடுவதில் மிகுந்த தேர்ச்சியுடையவராக இருந்தார். மிக இயல்பாகப் பெரிய அதிகாரிகளையும் பெருந்தனக்காரர்களையும் சங்கடமான சந்தர்ப்பங்களில் சிக்க வைத்துவிடுவார். அது அவர் போதனையின் ஒரு பகுதியாகச் சிலர் கருதினார்கள்.
தாகூர் பெயரில் ஓர் அமைப்பு நடத்திச் சிறப்பு மலர் வெளியிடுபவர் ஒருவர் ஒரு முறை என்னை அவருடைய மலரின் தமிழ்ப் பகுதியைத் தயாரித்துத் தருவதற்கு வாக்கு வாங்கிவிட்டார். நான் எழுதிய சிறுகதையுடன் குறைந்தது இரு கட்டுரைகளாவது சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம். அப்போது பிச்சமூர்த்தி நவ இந்தியா என்றொரு பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். அவருடைய அலுவலகத்திற்குச் சென்று அவரிடம் ஒரு கட்டுரை கேட்டேன். ‘நவ இந்தியா ' பத்திரிகையில் அப்போது தேவைக்கு மிகவும் குறைவாகவே பணியாளர்கள் இருந்தார்கள். நான் பிச்சமூர்த்தியைப் பார்க்கப் போன போது அவர் டெலிபிரிண்டர் செய்திகளைத் தமிழில் வெகு வேகமாக மொழிபெயர்ப்புச் செய்து வந்தார். அவர் அந்த வயதில் அவ்வளவு நெருக்கடியில் இயங்க வேண்டியிருந்ததைப் பார்க்க வருத்தமாக இருந்தது. அவர் இரு நாட்கள் கழித்து வரச் சொன்னார்.அவர் சொன்ன நாளன்று சென்ற போதும் அவர் வேலைச் சுமை அதிகமாகத்தான் இருந்தது. ஆனால் மிக நேர்த்தியாக அவருடைய கையெழுத்தில் அவர் கட்டுரையொன்று எழுதித் தயாராக வைத்திருந்தார். கட்டுரை தாகூர் பற்றியது. துரதிர்ஷ்டமாக அந்த மலரின் பிரதி ஏதும் என் கைவசமில்லை.
இதற்குப் பிறகு எனக்கு அவரை அதிகம் சந்திக்க வாய்ப் பில்லாமல் போய் விட்டது. அவர் ஆழ்வார்ப்பேட்டை வீட்டைக் காலி செய்துவிட்டு வேறிடத்திற்குச் சென்றுவிட்டார். ஆனால் 'எழுத்து' வெளி வந்துகொண்டிருந்தபோது அவரை ஒரு முறை செல்லப்பாவின் வீட்டில் பார்த்தேன். அப்போதும் அதே மாறாத அன்புடன் பேச்சு.
தீபாவளியடுத்து 1970ல் மழை கொட்டிக் கொண்டிருக்கும் போது சிதம்பரத்திலிருந்து எழுத்தாளர் மௌனி சென்னை வந்தார். தமிழ்ச்சிறுகதை பற்றி ஓராண்டு ஆராய்ச்சிக்கு இந்தியா வந்திருந்த அமெரிக்கர் ஆல்பர்ட் ஃபிராங்களினை அவர் சந்திக்க வந்திருந்தார். ஃபிராங்க்ளினுக்கு மௌனி மீது மிகுந்த மதிப்பு. பின்னர் ஒரு முறை சிதம்பரம் சென்று நேரில் மௌனியை அவர் வீட்டில் சந்தித்தார். நான் மௌனியை அழைத்துக் கொண்டு சி.சு.செல்லப்பா மற்றும் பிச்சமூர்த்தி ஆகியோரைப் பார்க்க அழைத்துச் சென்றேன்.
பிச்சமூர்த்திக்கு அப்போது உடல் நலமில்லை. மௌனியின் துடிப்புக்கும் உற்சாகத்துக்கும் அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை.
ஈடுகொடுக்க விருப்பமின்மையும் காரணமாயிருக்கக்கூடும். நான் அதற்குப் பிறகு பிச்சமூர்த்தியைப் பார்க்கவில்லை.
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் பிச்சமூர்த்தியின் இலக்கியப் பங்கு பற்றிக் குறிக்கையில் அவரை நேரில் சந்தித்துப் பழகிய அனுபவங்களுக்கும் ஓரிடம் உண்டு என்று நம்புகிறேன். எனக்கு அடுத்த தலைமுறையினர் அவருடைய வரலாறை எழுத முற்படும்போது அவருடைய படைப்புகள் மட்டுமே அவர்கள் ஆய்வுக்கும் கணிப்புக்கும் உட்படும். இருவித அணுகுமுறைக்கும் இலக்கிய ஆசிரியர்களின் வாழ்க்கை வரலாறு எழுதுவதற்கு முற்படுபவர்களிடம் இசைவு இருக்கும்.
- அசோகமித்திரன் -
அசோக மித்திரனின் குறிப்பில் சய புராணம் தான் முழுக்க முழுக்க. மற்றவர்கள் பற்றி அவர் மூலம் தெரிந்து கொள்வதற்கு ஒன்றும் அதிகம் இல்லை. அதனால் அந்தப் பகுதிக்கு நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பு பொருந்தவில்லை.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்.. அசோகமித்திரன் எழுதி இருக்கும் 'இந்திய இலக்கிய சிற்பி ந பி என்னும் 89 பக்க புத்தகத்தில் இது ஆரம்பம்தான். நிறைய இருக்கிறது அப்புறம்!
நீக்குபுதுக்கவிதையின் பிதாமகர் ந. பிச்சமூர்ர்தி அவர்களே. அவர் எதேச்சையாக எழுதிய 'பெட்டிக்கடை நாராணன்' என்ற கவிதையை தாந்
பதிலளிநீக்குதமிழின் முதல் புதுக்கவிதையாக இலக்கிய வட்டத்தில் குறிப்பிடுகிறார்கள். பெட்டிக்கடை நாராணன் போற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் அந்தக் கவிதையின் உள்ளடக்கமான சமூக நோக்கமே.
சொல்லப்போனால் சி.சு. செல்லப்பா அவர்களின் அயராத தன்னலமற்ற முயற்சிகள் தான் அக்காலத்தில் தமிழுக்கு நிறைய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
கும்பகோணம் கொடுத்து வைத்த ஊர். தமிழிக்கு விதவிதமான எழுத்துச் சிற்பிகளைத் தந்த ஊர். ந.பி. அவர்களில் மூத்தவர். வேங்கட மஹாலிங்கம் என்பது இவரது இயற்பெயர்.
குடந்தையில் பெரிய எழுத்தாளர்கள் உலா வந்த நாட்களில் என் தந்தையும் அங்கு பணிபுரிந்து வசித்துக் கொண்டிருந்தார். ஒரு பிரபல எழுத்தாளர் வீடு பக்கத்து வீடு. அவர் மனைவியும் எங்க அம்மாவும் தோழிகள். கரிச்சான் குஞ்சு என்று நினைக்கிறேன்.
நீக்குஒண்ணுமே புரியலை. வாதி யார், பிரதி வாதி யார் என்பதே குழப்பம். கேசே பணம் கொடுக்கல் வாங்கல் பற்றியது என்பது மட்டும் புரிகிறது. பொய் சாட்சிகள் உருவாக்கமும் புரிகிறது. மற்றவை புரியவில்லை.
பதிலளிநீக்குகட்சி வக்கீலுக்கு பாடம் சொல்லித் தருகிறார் என்பதும் தெரிகிறது.
அசோகமித்ரன் எழுதியதும்அவ்வாறே. குழப்பம். .
ஒரு தடவைக்கு மூன்று தடவை படித்து பார்க்கிறேன். ஏதாவது மனடையில் ஓட்டுதா என்று.
Jayakumar
வக்கீல் கொண்டுவந்த பொய்சாட்சிகளை காட்டிக் கொடுக்காமல், அதேசமயம் எதிரிக்கு க்கொடுக்கவே இந்திய பணத்தை ஏமாற்றாமல் தருவதற்கு டைம் கேட்கிறார். அதை கோர்ட் விடுமுறையையும், தீர்ப்பு ஆணையாகும் நேர வித்தியாசத்தையும் உபயோகப்படுத்திக் கொள்கிறார். அது, அவருக்கு கோர்ட் கொடுக்க வேண்டிய நேரத்தை விட அதிகமாகவே கிடைக்கிறது. அப்பாவி பொதுஜனம் என்று நினைக்கும் நபர் வக்கீலையும் மிஞ்சுகிறார்.
நீக்குகோர்ட், வக்கீல் மற்றும் வழக்கு சம்பந்தமானவர்களைப் பற்றி, ந பிச்சமூர்த்தி அவர்கள் உரையாடல்கள் மூலம் தெரிவிக்கிறார். நியாயமாக எதுவுமே நடப்பதில்லை என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது சிறுகதை.
பதிலளிநீக்குஇந்த உரையாடல்களின் நீட்சியாகத்தான் சமீபத்தில் வந்த கடைசி விவசாயி படம் இருக்குமோ என்பதை அதன் சிறு காணொளிகளில் எஓர்ட் நடவடிக்கையைப் பற்றிப் பார்த்ததில் தோணுகிறது.
கடைசி விவசாயி படம் எல்லாம் பொறுமையாக பார்த்தீர்களா? போகவில்லை. ஆனால் எனக்கு கோர்ட் காட்சிகள் சம்பந்தப்பட்ட படங்கள் பிடிக்கும். சமீபத்தில் கூட ஒன்று பார்த்தேன்.
நீக்குஸ்ரீராம் பதிவை வெளியிட்டால் நிச்சயம் கருத்துக்கு மறுமொழி இருக்கும். இதுபோலவே பலரும். இந்த responsibility க்குப் பாராட்டுக்கள்
நீக்குஆமாம் நெல்லை. ஸ்ரீராம் பதில் கொடுத்துவிடுவார். கொடுக்க முடியாத பட்சத்தில் காரணமும் வந்துவிடும்.
நீக்குகீதா
நெல்லை, பொதுவாகவே வக்கீல்கள் நிறைய ஜோடிப்புகள் செய்யறாங்கதான். தங்கள் பக்கம் தங்கள் கட்சிக்கு கேஸை ஜெயித்துக் கொடுக்க...ஆனால் இந்த ஜோடிப்புகள், கேஸைப் பொறுத்து நியாயமா அநியாயமான்னு
நீக்குஒரு விவாகரத்துகேஸ்...கணவனுக்கும் மனைவிக்கும் கருத்துவேறுபாடு...மனைவி பக்கத்திலிருந்து டிவோர்ஸ் மனு. கணவன் போட்டா நிறைய இழப்பு வரும். எனவே கணவன் சாமர்த்தியசாலியாக இருந்தால், அவன் வக்கீல் ஸ்மார்ட்டாக இருந்தால்....strategic movements ல மனைவியையே மனு போடறா மாதிரி வைச்சிருவாங்க. மனைவி மனு போட்டா அவங்க சைடும், ஸ்மார்ட்னெஸ் வேண்டும், கணவன் தரப்பிலிருந்து தொகை கிடைக்க. இதெல்லாம் வக்கீல்களின் சாமர்த்தியம்.
கணவன் உண்மையாகவெ physical abuses பண்ணலைன்னு வைச்சுக்கோங்க, மனைவி சைட்ல வக்கீல் சொல்லிக் கொடுப்பார் அடித்தார், மூஞ்சில அதைத் தூக்கி எறிந்தார் இதை தூக்கி எறிந்தார் அப்படினு...என்னா கோர்ட்ல இப்படியானவை செல்லுபடியாகும் என்பதால்.
ஆனால் மற்ற தரப்பு வக்கீல் மற்றும் கணவன் ஸ்மார்ட்டாக இருந்தால் சரியாக சாட்சி கொடுத்து முறியடிச்சிடுவாங்க.
நிஜமாகவே மனைவிக்கு உணர்வு ரீதியாகக் கொடுமைகள் விளைவிக்கப் பட்டிருந்தாலும், கோர்ட்டில் சட்டத்தில் உணர்வுகளுக்கு இடமில்லை. அப்படியான கொடுமைகள் செல்லுபடியாவதில்லை தகுந்த சாட்சிகள் இல்லைனா. எனவே மனைவிக்கு அமையும் வக்கீல் ரொம்ப ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும் அதாவது எதிர்த்தரப்பு வக்கிலின் மூவ்மென்ட்ஸை முறியடிக்கும் அளவுக்கு.
அதனாலதான் பெரும்பாலும் ம்யூச்சுவல் டைவேர்ஸ் போயிடறாங்க.
கீதா
ந பிச்சமூர்த்திக்கு பதிலாக பினான் பதில் சொல்ல முடியாது. ஆனால் பொதுவாக பதில் அளிக்கலாம்!
நீக்குஇப்படி கலந்து பேசினால்தான் நமக்கும் கிட்னி வளரும்!! புதிய ஐடியாக்கள் கிடைக்கும்!
நாம் ஏற்றுக்கொண்ட துறையில் அறமில்லாமல் இருந்தால், இன்றைக்கு வெல்வது போல இருக்கலாம், ஆனால் அது குடும்பத்தை நாசம் செய்யும். பொதுவாக பெரும்பாலான வக்கீல்களுக்கு அறம் கிடையாது. அறமுள்ள ஒருவரை நான் சந்தித்திருக்கிறேன். ஊரோடு ஒத்துவாழ் என்ன வசனத்தை வைத்து அறமில்லாத்தை யார் செய்தாலும் அவருடைய வாழ்வின் இறுதியில் வருந்தவேண்டியிருக்கும். கபில் சிபல் போன்ற பலரும் இந்த நியாயத்திலிருந்து தப்ப முடியாது
நீக்குகஷ்டம் என்னவென்றால், அறமுள்ள ஒருவரைதான் நம்மால் சந்திக்க முடிகிறது. அவ்வளவு அருகி விட்டார்கள்!
நீக்குஅசோகமித்திரன் அவர்கள் எழுதியதிலிருந்து, ந பிச்சமூர்த்தி பற்றி ஒரு சித்திரமும் புலப்படவில்லை. மேலே இருக்கும் சிறுகதை போலவே அவர் விவரிப்பும் இருக்கிறது.
பதிலளிநீக்குமேலே ஜீவி ஸாருக்கு சொல்லி இருக்கிறேன் பாருங்கள். அந்தப் புத்தகத்தின் ஆரம்ப அறிமுகம் மட்டும்தான் இது.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குசிறப்பு
பதிலளிநீக்குவாழ்க நலம்...
நன்றி. உங்கள் தள சிறுகதையும் சிறப்பு.
நீக்குமனிதர்களால்
பதிலளிநீக்குநியாயமாக எதுவும் நடப்பதில்லை என்பது தான்
நிதர்சனம்..
ஆம் சந்தர்ப்ப சூழ்நிலை, வாதத்திறமை, சாட்சியங்களை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம். சட்டம் ஒரு கழுதை!
நீக்குகவியரசர் அர்த்தமுள்ள இந்து மதத்தில் சொல்லியிருப்பார்
பதிலளிநீக்குசட்டம் வேறு.. தர்மம் வேறு என்று...
தர்மம் வெல்லும்..
அதுதான் நம் எதிர்பார்ப்பு. நம் காலத்திலேயே வென்றால் நல்லது!!
நீக்குஅன்பின் ஸ்ரீராம்
பதிலளிநீக்குநேரிடையான புலால் உணவு செய்முறைக் குறிப்புகளை வெளியிடுவீர்களா?..
நேற்று ஏன் இப்படி மாய்மாலம் பிரியாணிக் கடை விளம்பரம் மாதிரி?.
மிகவும் வருந்தினேன்.
எனக்கும் அந்த எண்ணம்தான். பதிவு பக்கமே போகலை. இதற்குமுன் அப்பாதுரை அவர்கள் எப்போதோ அசைவக் குறிப்பு அனுப்பி ஸ்ரீராம் பதிப்பிக்கவில்லை என அப்பாதுரை அவர்கள் எழுதிப் படித்த நினைவு
நீக்குபுலால் உணவா அது! ஹா.. ஹா... ஹா... நெல்லை.. நீங்களுமா? நீங்களுமா படிக்கவில்லை? அடக் கடவுளே....
நீக்குஉங்களது தளம்
பதிலளிநீக்குஉங்களது விருப்பம்!..
ஆயினும்
சிவம் / சைவம் எனும் சொல்லை மாசுபடுத்த வேண்டாம்..
கொண்டைக்கடலையும், பனீரும் அசைவமா? ஆச்சர்யமாய் இருக்கிறது!
நீக்குபோலிகளை நம்பி ஏமாறாதீர்கள்..
பதிலளிநீக்குபுரியவில்லை.
நீக்குந.பிச்சமூர்த்தியின் கதை அருமை. இரண்டாவது முறை படித்த பொழுதுதான் கதை புரிந்தது. முதல் முறையாக படித்த பொழுது நடை கவர்ந்தது. அந்தக்கால சொற்றொடர்கள் இருந்தாலும் கதை out dated என்று தோன்றவில்லை. எளிய மனிதரான ராக்கப்ப பிள்ளையின் நேர்மைதான் கதையின் ஜீவன். இப்படிப்படீட கதைகளை இப்பொதெல்லாம் படிகிக முடியவில்லையே என்று ஏக்கமாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஆமாம் பானு அக்கா.. எக்காலத்துக்கும் பொருந்தும் கதை. நடைதான் ரசிக்க வைப்பது. உரையாடல்களிலேயே கதையை நகர்த்தி இருக்கிறார் முன்னாள் அறநிலையத்துறை அதிகாரி!
நீக்குகதை பல இடங்களில் கொஞ்சம் சிரிப்பை வர வழைத்தது. ராக்கப் பிள்ளை குண்டக்க மண்டக்கன்னு பேசினாலும் நல்ல விவரமான ஆள்தான். வக்கீலுக்கே அல்வா கொடுத்திட்டார்!!!
பதிலளிநீக்குஏனோ எனக்குப் பார்த்திபன் வடிவேலு காட்சிகள் நினைவுக்கு வந்தன.
கீதா
கிராமத்து அப்பாவித்தனத்தை கொண்டு வந்திருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா?
நீக்குயெஸ்,அதேதான்....ஸ்ரீராம், ரசித்து வாசித்தேன்
நீக்குகீதா
வக்கீல் தலையைப் பிச்சுகினுன்னு இப்ப நாம சொல்றத அப்போ பிச்சமூர்த்தி,
பதிலளிநீக்கு// வக்கீல் கையில் இருந்த பென்சில் அவரை அறியாமலே வராந்தாத் தூணில் ஒரு ஆவர்த்தம் வாசிக்க ஆரம்பித்துவிட்டது.//
// அவரை அறியாமலே கையிலிருந்த பென்சில் வராந்தாத் தூணில் கெத்து வாசிக்கத் தொடங்கிற்று.//
கீதா
துணை தக்கினிக்கிகள் !!
நீக்குஅந்த வரிகளையும் ரசித்தேன்...அதான் கோட் பண்ணினேன்...மனசுக்குள்ள அந்தக் காட்சியை ஓட்டியபடியே!
நீக்குகீதா
''கருமாதிக்குச் சாப்பிட்டவன் இருக்கிறான்; செத்தது பொய் என்கிறாயே!"
பதிலளிநீக்கு"என்னங்க! பொய் மெய்யெல்லாம் கோர்ட்டாரு அல்ல சொல்லணும். சும்மா நெம்பரை நடத்துங்க. பணம் கொடுத்தது மெய்யா, பொய்யாங்கறது கோர்ட்டாரு பாடு."//
//கோர்ட்டு முத்திரை விழுந்தாலொழியன். பொய் பொய்யாகாது என்ற புது உண்மையைக் கேட்ட வக்கீலுக்கே ஆச்சரியமாக இருந்தது.//
சிரித்துவிட்டேன்!.
எனக்குக் கோர்ட் சீன் போன்ற காட்சிகள் ரொம்பப் பிடிக்கும். படம் பார்க்க பிடிக்கலைனாலும் அந்தப் படத்தில் கோர்ட் சீன் இருந்தா அதை ரசித்துப் பார்ப்பேன்.
இதுல உரையாடல்கள் குறிப்பா ராக்கா பிள்ளை புன்சிரிக்க வைத்தன.
கீதா
கோர்ட் ஸீன் படங்களை நானும் விரும்பிப் பார்ப்பேன். குறுக்கு விசாரணை செய்வது எனக்குப் பிடிக்கும்!
நீக்கு"நல்லா இருக்கு! கிட்ணனும் நானும் பாலக்கரை ஆச்சி கிளப்பிலே அரிசி உப்புமாத் தின்னூட்டு நேரே உங்க ஊட்டுக்குத்தானே வந்தோமுங்க. நல்ல படை படைக்கிற வெயில்!"//
பதிலளிநீக்குஹாஹாஹாஹா
கீதா
ஒரு விஷயத்துக்கு கேள்வி கேட்பீர்கள் யாராவது என்று பார்த்தேன்... ஊ ஹூம்!
நீக்குஎன்ன விஷயம்? யோசிக்கிறேன். கதை நடை உள்ளே இழுத்து விட்டதால் வேறு எதுவும் எழவே இல்லை
நீக்குகீதா
உரையாடல்களிலேயே அழகாக நகர்த்திச் சென்றது ரொம்ப நல்லாருக்கு. சில வார்த்தைகள் அந்தக்காலத்து வார்த்தைகள் என்பதால் மற்றொரு முறை வாசிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவரே சொல்லியிருப்பது போல் இப்போதுக்கும் பொருந்தும்தான்.
பதிலளிநீக்குகீதா
உண்மை. மக்களிற்கு ஒரு வகையில் கோர்ட் தீர்வு கொடுக்கும். பலவகையில் தொல்லை கொடுக்கும்! தொல்லை தாங்காமல் சமயங்களில் ஜனாதிபதியே கேள்வி கேட்கும் நிலை வரும்!
நீக்குஆயிரத்தில் ஒருவர் மாத்திரமா நூறு கோடிக்குமேல் நீதி சொல்ல லஞ்சம் வாங்கியிருப்பார்கள்? சில நேரங்களில் அநீதியாக பல தீர்ப்புகள் வருகின்றன. மொலெஸ்ட் பண்ணுவது குற்றமில்லை,, பெண்கள் அதனைத் தவறாக எண்ணி வழக்குத் தொடுக்கக் கூடாது, பொன்முடி வழக்கில் சிறை இல்லை, ஜவாகருக்கு ரமதான் என்பதால் சிறையில் போட வேண்டாம், செந்தில் பாலாஜிக்கு பலப் பல சலுகைகள் என உயர் நீதி மன்றம் உச்ச நீதி மன்றம் போன்றவை சமூக அக்கறையுடன் தீர்ப்புகள் கொடுக்கின்றன. இதனை நம்பி நீங்களோ அல்லது நானோ பத்து ரூபாய் லஞ்சம் வாங்கினால் ஆயுள் தண்டனைதான், சட்டம் சாதாரணர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும். நமக்கு சமூக அக்கறையுடன் சலுகை கிடைக்காது.
நீக்குகலாச்சாரத்துக்கு எதிராகவும் கருத்துகள், தீர்ப்புகள் வந்துள்ளன. நீதிமன்றங்கள் ஜனநாயக ஆட்சியை ஓவர்டேக் செய்ய நினைக்கின்றன. மத்திய அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் ஒரு கோபிநாத் போட்டி நடக்கிறது.
நீக்குநெல்லை, ஸ்ரீராம், பலசமயங்களில் எனக்குத் தோன்றும் கோர்ட் எதுக்கு இருக்குன்னு? அங்கும் விலை போகும் நீதிபதிகள் இருக்காங்களே. கோர்ட்டின் சட்டங்களுக்கும் வாழ்வியல் அறங்களுக்கும் சம்பந்தமே இல்லை. அது போன்று கோர்ட் தீர்ப்புக்கும், மன உணர்வுகளுக்கும் சம்பந்தமே இல்லை.
நீக்குஒரு வேளை அதனாலதான், நம்ம டைரக்டர்ஸ் சட்டம் ஓர் இருட்டறை, சட்டம் என் கையில்னு எல்லாம் படம் எடுத்தாங்களோ!!!!!!!!!!!ஹாஹாஹாஹா
கீதா
M R ராதா சொல்லியிருக்கார்... "இத்தனை நாளா பொய் பொய்யா சொல்லி வாதாடிக்கிட்டிருந்த வக்கீல்தானே நீதிபசதி ஆறான்? உடனே உத்தமன் ஆயிடுவானா?"
நீக்குராக்கரா பிள்ளை சாதாரண மனிதர் ஆனால் என்ன ஒரு நல்ல எண்ணத்தோடு நடந்துகொள்கிறார். வக்கீல் பொய் சாட்சிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறேன் கெடு வாங்கலாம்னு சொன்னாலும்...
பதிலளிநீக்குராக்கரா பிள்லை நல்ல வெவரமானவராக இருக்கிறார் வெள்ளந்தி!!!
கதையின் நடையை ரசித்தேன்...
கீதா
ஒரு உண்மையான மனமுள்ள மனிதரைப் பற்றி நாம் அறியும் வண்ணம் எழுதியுள்ளார்.
நீக்குகதை பத்தியே போனதுல, அடுத்தாப்ல உள்ளது சொல்ல விட்டுப் போச்சு.
பதிலளிநீக்குஅசோகமித்திரன் அவர்களின் அனுபவங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. எவ்வளவு நல்ல காலங்கள் என்று.
பிச்சமூர்த்தி பற்றி அதிகம் இல்லையே என்று தோன்றிய போது நீங்க மேலே சொல்லியிருப்பதைப் பார்த்துவிட்டேன், ஸ்ரீராம்
கீதா
அப்பப்போ தேவையானப்போ கொஞ்சம் கொஞ்சமா எடுத்து விடலாம்!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குபிச்சமூர்த்தி அவர்களின் கதை பகிர்வு கிராமத்து மனிதர்களை சொல்கிறது. அவர்களுக்கு எல்லாம் தெரியும். வக்கீல்களை விட அவர்களுக்கு நிறைய விவரங்கள் தெரியும்.
பதிலளிநீக்குஉரையாடல் நன்றாக இருக்கிறது.
//வக்கீல் கையில் இருந்த பென்சில் அவரை அறியாமலே வராந்தாத் தூணில் ஒரு ஆவர்த்தம் வாசிக்க ஆரம்பித்துவிட்டது.//
//அவரை அறியாமலே கையிலிருந்த பென்சில் வராந்தாத் தூணில் கெத்து வாசிக்கத் தொடங்கிற்று.//
வக்கீல் தன்னிடம் வருபவர்கள் புத்திக்கூர்மையை நினைக்கும் போது பாராட்டும் விதமாக வாசிக்க (தாளம் போட ) ஆரம்பித்து விடுவார் போலும்.
பாராட்டும் படியாகவோ, அல்லது வேறு வழியில்லாமலோ!
நீக்குவக்கீலைவிட கட்சிக்காரர் புத்திசாலியாயிருந்தால் அவர்தான் என்ன செய்வார்!
நன்றி கோமதி அக்கா.