சித்துண்டை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சித்துண்டை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24.11.14

'திங்க'க்கிழமை : சித்துண்டை!


ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு சுவை.

பதினைந்து வயது இருக்கும்போது என்று நினைவு.  வீட்டுக்கு வந்து செல்லும் உறவினர்கள் எல்லாம் 'ஊர்க்காசு' என்று தந்து செல்வார்கள். அதில் அவரவர்கள் பங்கை அவரவர்கள் தனித்தனியே வைத்து செலவு செய்வோம்.  அம்மா வாங்கி ஆளுக்கொரு பர்ஸ் போட்டு உள்ளே வைத்திருப்பார்கள்.

                                  
பெரும்பாலான சமயங்களில் இருபது தேதிக்குமேல் அப்பாவின் பற்றாக்குறை பட்ஜெட்டைச் சமாளிக்க அப்பா ஒருநாள் அம்மாவையும் வைத்துக்கொண்டு எல்லார் பர்சையும் எடுத்துச் சோதித்து, அதிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு கடன் வாங்கியது என்று குறிப்பிட்டு தொகையைக் குறிப்பிட்டு அதன் உள்ளே சீட்டு வைத்துவிட்டு எடுத்துக் கொள்வார். நாங்களும் பெருமையாகவும், பெருந்தன்மையாகவும் ("வேற வழி? அப்பாவுக்கே நாங்க பணம் தர்ரோம்ல...")  அருகில் அமர்ந்து அப்பா சேமிப்புப் பணத்தை எடுத்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டிருப்போம். நாங்கள்லாம் அப்பவே அப்படி.... அப்படிக்  குடும்பப் பொறுப்பைத் தோளில் தூக்கிச் சுமந்தவர்களாக்கும்!

                                             
அப்பா ரெகுலராக தினசரி செய்யும் செலவுகளை எழுதி வைக்கும் வழக்கம் உடையவர்.  யோசித்து யோசித்து, எங்களையும் கேட்டுக் கேட்டு காலைக் கடன்களில் ஒன்றாக எல்லா செலவுகளையும், இதற்கென வைத்திருக்கும் நோட்டில் எழுதி விடுவார். அந்த நோட்டில் சில சமயங்களில் க.தி.த என்று அவர் கணக்கில் எழுதி எங்கள் கடனைத் திருப்பித் தருவதும் உண்டு.
                            
                                                                                
                                                              

("என்ன, சம்பந்தமில்லாமப் பேசிகிட்டு.... சித்துண்டையைப் பற்றிச் சொல்லேம்பா..." என்று குரல் வருவது கேட்கிறது. இதோ இந்த அரட்டையை முடித்து விட்டு கடைசியில் அதைச் சொல்கிறேன்)


எங்கே விட்டேன்.... ஆங்...  க.தி த!
எப்படியோ அப்படி இப்படி பாக்கி இருக்கும் பணத்தை சத்தமில்லாமல் எடுத்து செலவு செய்வேன். அதில் உள்ள சீட்டில் எழுதியும் விடுவேன்.

அப்படி ஒருமுறை கடைத்தெரு சென்றபோது எல்லோரும் சாப்பிட வாழைப்பழம் வாங்கி வந்தேன். வீடு வந்த உடனேயே ஒன்றைச் சாப்பிட்டேன்.

                                    
அன்று ஏனோ அந்தப் பழத்தின் சுவை மிகவும் கவர்ந்து விட்டது. இன்னும் ஒன்று, இன்னும் ஒன்று என்று 12 வாழைப்பழங்களையும் நானே சாப்பிட்டு விட்டேன்.  மறுபடி கடைக்குச் சென்றேன்.   மறுபடி 12 பழங்கள்.  வீடு.  12 பழங்களையும் மறுபடி நானே... மறுபடி கடை.  மறுபடி 12 பழங்கள்.  இம்முறை 6 பழங்கள் மட்டும் சாப்பிட்டேன்! ( 'வயிறு என்ன ஆச்சு? வயிறா இல்லை...?'  என்று யாரும் கேட்க்கக் கூடாது! நடந்ததை அப்படியே சொல்கிறேன். அவ்வளவுதான்!) 

சமயங்களில் வாழைப்பழங்களைச் சிறு துண்டங்களாக்கி, ஒரு டபராவில் போட்டு கொஞ்சம் பால் சேர்த்து, சர்க்கரையும் கொஞ்சம் சேர்த்து இரண்டு பிஸ்கட்டுகளை அதில் பொடி செய்து தூவி, ஸ்பூனால் கலக்கி சாப்பிடும் பழக்கமும் உண்டு! அப்பா பால் பழம் மட்டும் அவ்வப்போது சாப்பிடுவார். நான் பிஸ்கட் போன்ற துணைப் பொருட்கள் அவ்வப்போது சேர்த்துக் கொள்வேன்!
 
இப்படியும் ஒருமுறை நடந்தது!!!   இப்போ சித்துண்டை!


=======================================================
சித்துண்டை :

தேங்காய்த் துருவல் ஒரு மூடி, ஒரு கரண்டி வெல்லத் தூள், ஏலக்காய்த் தூள், இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து, ஐந்து நிமிடங்கள் கிளறி, ஒரு ஸ்பூன் அரிசி மாவு தூவி, கிளறி இறக்கி வைக்கவும்.

   
அரை ஆழாக்கு மைதா மாவு, சிறிது அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் பொடி இவற்றைச் சேர்த்து பஜ்ஜி மாவு போல நீர் விட்டுக் கரைத்து, பூரணத்தை உருட்டி, மாவில் தோய்த்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்!

சித்துண்டை ரெடி!

==============================================================




குறிப்பு : 'சித்துண்டை' படங்கள் இணையத்தில் கிடைக்காததால், சுய்யன் படங்களை இணைத்திருக்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்!





படங்களுக்கு இணையத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!