புத்தர் என்ன சொல்லியிருக்கிறார் எனும் திசையில் விவாதம் திரும்புகிறது. அப்போது ஜே கே சொல்கிறார்:
ஐயா நான் புத்தரை உதாசீனப் படுத்துவதாகவோ விமர்சிப்பதாகவோ நீங்கள் நினைக்க வேண்டாம். உண்மையில் நான் புத்தர் என்ன சொன்னார் என்று படித்ததில்லை. இந்த பிரச்னைகள் குறித்து எதையும் படிக்கவும் நான் விரும்பவில்லை. அப்படிப் படிக்க முனைந்தால், அங்கு காணப்படுவது உண்மையாக இருக்கலாம். பிரமை ஆகவும் இருக்கலாம். அவை புத்தர் சொன்னதாக அவருடைய சீடர்கள் எழுதி வைத்ததாக இருக்கலாம். (சீடர்கள் குருவை என்ன பாடு படுத்துகிறார்கள் எப்படி ஒருவரது வார்த்தைகள் சின்னா பின்னம் ஆகின்றன என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.) எனவே நான் இப்படிச் சொல்கிறேன். எதைப் பற்றியும் எவர் என்ன சொன்னார் என்பது குறித்து எனக்கு அக்கறை இல்லை. வேதனையில் ஆழ்ந்திருக்கும் ஒருவரை நான் பார்க்கிறேன். கஷ்டங்கள், பால் உணர்வுத் தூண்டுதல்கள் பிறர் இழைக்கும் அக்கிரமங்கள், பயமுறுத்தல்கள் இப்படியான பல பிரச்னைகளால் மனிதன் துவண்டு போவதைப் பார்க்கிறேன். இதற்கு மூல காரணம் "எண்ணங்களே" என்பதைப் பார்க்கிறேன். இதைக கண்டு கொள்ள உலக இலக்கியங்களை நான் படித்து வைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அப்படிப் படிக்க முற்பட்டால். எண்ணக குழப்பங்கள் இன்னும் தீவிரம் ஆவது தவிர வேறு விளைவு ஏதுமில்லை.
எனவே நான் இப்படிச் சொல்வதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். அவர் சொன்னது, இவர் சொன்னது எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு நாம் கவனிக்கத் தொடங்கலாம். நான் பல தரப்பட்ட மத குருமார்களையும் பண்டிதர்களையும் சந்தித்திருக்கிறேன். அவர் சொன்னது, இவர் சொன்னது, இந்த நூலில் காணப படுவது அந்த சாஸ்திரத்தில் சொல்லி இருப்பது இப்படியாக சொல்லிக் கொண்டு போவது தவிர நேரடி தொடர்பு கொண்டு யாரும் விவாதிப்பது இல்லை. விடாமல் மேற்கோள் காட்டுவது மட்டுமே நடை பெறுகிறது. நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? நான் அலட்சியம் அல்லது அவமரியதையுடன் நடந்து கொள்வதாக நினைக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.