மகளிர் இட ஒதுக்கீடு கிட்டத் தட்ட வந்து விட்ட மாதிரி தெரிகிறது. இந்த பிரச்சினை பற்றி ஊடகங்களும் விலாவாரியாக வரவேற்று முரசரைந்து விட்டன.
இதனால் ஆகப் போகிறது என்ன என்று யோசித்தால், சற்று குழப்பமாக இருக்கிறது. நாட்டின் தலையாய பிரச்சினைகளில் மகளிர் கண்ணோட்டம் மாறுபட்டு, கருணை நிறைந்ததாக இருக்குமா? அதனால் காஷ்மீர் பிரச்னை, பயங்கரவாத அபாயம் ஆகியவை குறைந்து விடுமா? அல்லது எப்போதும் போல முரட்டு அரசியல்வாதிகள் அவர் தம் மனைவி, மகள் இத்யாதி உறவினர்களுக்கு சீட் வாங்கிக் கொடுத்து, கெலிக்க வைத்து தம் இஷ்டத்துக்கு எப்போதும் போல் கோலோச்சுவார்களா? கடைசியாகக் குறிப்பிட்டது நடக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. சரியான காரணங்களை தெளிவாகக் குறிப்பிடாமல் துக்ளக் ஆசிரியர் இந்த மகளிர் இட ஒதுக்கீடை எதிர்த்து வருகிறார். அவர் எல்லா பிரச்னைகளிலும் ஒரு நேர்மையான பார்வை கொண்டவர் என்பதால் அவர் அபிப்பிராயத்துக்கு ஒரு மரியாதை கொடுக்க வேண்டியதாகிறது.
மகளிர் காவலர்கள் வந்த பிறகு காவல் துறை ஏதும் புதுப் பிறவி எடுத்துவிடவில்லை. பராபரியாக காதில் விழும் செய்திகளை நம்புவதானால் பல பெண் அதிகாரிகளுக்கு ஒரு சாடிஸ மனப் பான்மை இருக்கிறதோ என்று அச்சமாக இருக்கிறது. இத்தனை நாளாக நான் நசுக்கப் பட்டிருந்தேன். இப்ப பார்டா என் சாதனையை என்று சவால் விட்டு நடந்து கொள்வார் யாருமிலர். ஏதோ ஒரு கிரண் பேடி, ஒரு வைஜயந்தி ஐ.பி.எஸ் - திரைப் படத்தில்தான் - லதிகா சரண் லட்சிய காவலராக இருக்கலாம். மற்ற படி நூற்றோடு நூற்றியொன்று தான்.
இப்படியெல்லாம் ஐயுற்றாலும், பெண் என்பவள் காருண்யம் மிக்கவள். குற்றம் செய்ய இயல்பாக அஞ்சுபவள். இப்படிச் சொல்லும் போதும் படே படே லஞ்ச லாவண்யாக்களை ஒதுக்கிவைத்து விட்டு நம்பிக்கை மேற்கொள்வோம். பெண் வழி வழியாக வீட்டுப்பிரச்னைகளை முதல் நபராக அறிபவள். ஆண்கள் பலபேருக்கு விலைவாசி, பையன் பெண் படிப்பு முதலிய பல விஷயங்கள் தெரியவே தெரியாது. ‘ அவருக்கு கருவாடு குழம்பு இல்லைன்னா சோறு இறங்காது ‘ என்று பார்த்துப் பார்த்து அன்னமிட்ட கைகள் ஆட்சிச் செங்கோல் பிடித்து நல்லாட்சி தந்தால் அதைவிட வேறென்ன வேண்டும்?
சமுதாயத்தில் இப்போது காணப்படும் பல அவலங்கள் சரி செய்யப் பட ஒரு பெரிய புரட்சி தேவைப் படுகிறது. உண்மையான புரட்சித் தலைவிகள் வருவார்கள் என்று நம்பலாமா?