16.4.26

வியாழானுகூலம் கிடைக்கப் பெற வியாழனைப் பாருங்கள்!

 

வியாழன் என்றாலே எனக்கு கோளும் (பள்ளிப் படிப்பு), குருவும் (வீட்டில் அடிக்கடி சொல்லப்பட்டதால்) நினைவுக்கு வருவார்கள். என் தனிப்பட்ட மனதில் காரணம் தெரியாமல் நீலமும் பச்சையும் கலந்த நிறமும் கடலும் மலையுமாய் மனதில் வரும். சின்ன சின்ன ஆசை....விண்வெளியில் போக ஆசை...  வியாழனிலிருந்து பூமியைப் பார்க்க ஆசை....  பூமியிலிருந்து வியாழனைப் பார்க்க ஆசை!!! 

ஜோதிட தத்துவங்களின் படி வியாழன் என்றால் குரு என்று சொல்லப்படுகிறது இல்லையா, அதனால குரு தினம் அன்று இதைச் சொல்லாமல் போகலாமா! ஒரு நல்ல தத்துவத்தோடு தொடங்குவோம்! 

இதற்கு இன்னொரு அர்த்தமும் கொள்ளலாம் என்பதை நான் கீழே சொல்வதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!!!! 


777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

வியாழானுகூலம் கிடைத்திட வியாழனை நல்லா பாருங்க..... திருமணம், தொழில், கல்வி போன்றவற்றில் அனுகூலம் கிடைத்துவிடும்! குறிப்பாகத் திருமணம். சுப காரியங்கள் கைகூடி வரும்!!! - ஜோஸ்ய சிகாமணி ............
(Nellai and Sriram are not eligible! )

77777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

தங்கைகளில் ஒருவர் ரொம்பவே ஜோதிடப் பிரியை. கால் தடுக்கினாலே நேரம் கிரஹம் பார்ப்பவள்.

"குட்டி, அது உன் கால்ல பேலன்ஸ் இல்லையாக்கும். உன் முட்டி மடங்கிருக்கும்" நான் இப்படித் தொடங்குவேன்.

"போடி....நேக்கு இன்னிக்கு சந்திராஷ்டமமாக்கும் அதுவும் கால்ல, சுண்டு விரல்ல நகத்துக்குன்னு, உனக்கும்தான். காலங்கார்த்தால அந்த ஜோஸ்யர் டிவில சொன்னாராக்கும்..."

“அட! டிவில நம்ம பேரெல்லாம் சொல்லி சொல்றாரா? வாவ்!!!"

"போடி நோக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை. அதான் இப்படி என்னை களியாக்கற"

"பின்ன, உன் கல்யாணத்துக்கு ஜாதகம் பாக்கறப்ப என்ன சொன்னார் ஜோஸ்யர்? 7-ஆம் இடத்தில் குரு இருந்தால், நல்ல, குணமுள்ள, அன்பான வாழ்க்கைத் துணை. திருமணம் இனிமையாக இருக்கும், கணவர் நல்ல நிலையில் இருப்பார்….செல்வச் செழிப்பும், சந்தோஷமும் நிறைந்த வாழ்க்கை அமையும்னு சொன்னாரில்லையா? செல்வச் செழிப்பு இருக்கு….பலித்தது. ஆனா மத்தது எல்லாம் நடந்ததா என்ன? இப்பவும் இந்த ஜோஸ்யத்தை போய்..."

"--------"

"அப்புறம், "........" அவளுக்கு ஏழாம் வீட்டோன் பாதகம் அதிபதின்னு சொன்னாரில்லையா? ஆனா அவளுக்கு எதுவும் அப்படி நடக்கலையே"

"......"

"குட்டி, கேளு, உன் மனசைக் கஷ்டப்படுத்தறதுக்காகச் சொல்லலை இதெல்லாம் விட்டுட்டு, மனசை சமநிலைப்படுத்தப் பாரு. அதுதான் உனக்கு எந்தக் காலத்துலயும், எந்த இடத்துலயும் என்ன நடந்தாலும் ஈசியா கடக்க உதவும்.”

“குட்டி நம்ம ரண்டு பேருக்கும் இப்ப 7 1/2 சனிடி. திருவண்ணாமலை போய்ட்டு வந்தா நல்லதுனு ஜோஸ்யர் சொன்னாராக்கும். நீ எப்ப வரமுடியும் சொல்லு? ப்ளான்பண்ணலாம்.”  

நான் என்ன சொன்னாலும் விட மாட்டாள்.

“எந்தக் கோயிலுக்குமே போக ஜோஸ்யர் சொல்லணுமா என்ன? நமக்குப் போகணும்னு தோணினா போய்டணும். திருவண்ணாமலைக்குப் போகலாமான்னு கேளு, நான் ரெடி. ஆனா இப்படி ஜோஸ்யர் சொன்னார்னு பலன் எதிர்பார்ப்போடு போறதுல எனக்கு விருப்பம் இல்லை.  7 1/2 எதுவும் செய்யாது.  எல்லா மத தத்துவங்கள்லயும் 7ன்றது ரொம்ப புனிதமான எண் தெரியுமோ? ஆன்மீக ஆழத்தையும், உள் அறிதலையும், உண்மையை நோக்கிய பயணத்தையும் பரிபூரண நிலையையும் குறிக்கும்! அதை அடைய 7 வழிகள், அதை நோக்கி மனசை செலுத்துன்னு வலியுறுத்த ஏழரைன்ற ( இந்த அரை, மனுஷன் நாம இடையில கவனம் சிதறுமே அதை நிரப்பிக்கொள்ளனு வைச்சுக்கலம்!!) கொஞ்சம் பயமுறுத்தல்கள். மனசை திடனா வைச்சுக்கோ! அதுதான் ரொம்ப முக்கியம். Focus on your inner peace!” 

என் வழக்கமான லெக்சர்!!!

“போடீ உங்கிட்ட போய் சொல்றேன் பாரு….சரி ஜோஸ்யரை விடு, நீ வரியா?”

“ரமண மகரிஷி ஆஸ்ரமத்துக்கும் போகலாம். ஆனா எனக்கு டக்குனு ப்ளான் பண்ண முடியாதே. டைம் கொடு. இடைல சனி ஒண்ணும் பண்ணமாட்டார். அவர் ரொம்ப நல்லவர்.”

எனக்கு சந்தர்ப்பம் அமையும் போது அவளுக்கு வர இயலவில்லை. அவளுக்கு முடிந்த போது எனக்குப் போக முடியவில்லை.

“நீ உனக்கு வாய்ப்பு வரும் போது போய்டு. நான் எனக்கு முடியும் போது போய்ட்டு வரேன். ஒரு வேளை ரெண்டு பேரும் சேர்ந்து போகும் வாய்ப்பு கிடைச்சாலும் ஓகே. பார்த்துக்கலாம்” என்று சொன்னேன். 

அவளும் போகவில்லை. நானும் போகவில்லை! 

இதோ வெயில் காலம் வந்தாச்சு. இந்த வெயிலில் என்னால் முடியாது. இருப்பிடம் வேங்கடம் வைகுண்டம்! மழைக்காலம் அல்லது குளிர்காலம்தான் எனக்குப் பிடித்த, ஒத்துக் கொள்ளும் காலங்கள். அப்போது பார்த்துக்கொள்ளலாம் திருவண்ணாமலையாரை!  நண்பர் சனியும் அமைதியாக இருக்கிறார்! என்று நினைக்கிறேன். இல்லை என்றால் இதற்குள் என் தங்கை என்னை ஒரு பிடி பிடித்திருப்பாள்!

7777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

எண் 7 ன் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் மிகவும் அலாதியானது. எல்லா மதங்களிலும் எண் 7 புனிதமாகக் கருதப்படுகிறது என்று மேலே சொன்னேன் இல்லையா? 

நம் வீட்டில் இந்த 7 1/2 அடிக்கடி சொல்லப்படும். பொதுவெளிகளிலும் கூட இது பேசப்படுகிறதே! பயமுறுத்துகிறார்களே! "ஏன் அப்படி" அதைப் பற்றி 'ஹையோ 7 1/2' என்று பேசாமால் அதைப் பற்றி யோசிக்காமல் மனரீதியாகக் கடந்து வர முடியாதா என்று யோசித்து இணையத்தில் தேடிய போது (ஆங்கிலத்தில்) கிடைத்து வாசித்தேன்தெரிந்த போது சற்று ஆச்சரியமாக இருந்தது. கட உள் இதைத்தான் சொல்கின்றன இவை எல்லாமே. பண்டைய சடங்குகள் முதல் நவீன உளவியல் வரை.

பொதுவாக இந்து மதம் - 7 சக்கரங்கள். 7 முனிவர்கள். 7 புனித நதிகள். திருமணத்தின் போது நடக்கும் 7 அடிகள் (சப்தபதி) கூட.

சைவம் - 7 என்பது ஆன்மீக விழிப்புணர்வு, உள்ளுணர்வு மற்றும் ஞானத்தைக் குறிக்கும் எண்ணாகக் கருதப்படுகிறது. "நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும் எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான்" - திருமூலர். 

வைணவம் - வைணவத்தில் 'எண் 7' என்பது பூரணத்துவம், இறைவடிவம் மற்றும் ஆழ்ந்த ஆன்மீகத் தொடர்பைக் குறிக்கும் ஒரு புனித எண்ணாகக் கருதப்படுகிறது. பூலோக வைகுண்டத்தில் ஏழு திருச்சுற்றுகள், 7 கோபுரங்கள், 7 நிலைகள் + இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு!

கிறித்தவ மதம் - எண் 7 (ஏழு) பூரணத்துவம், நிறைவு மற்றும் தெய்வீகத்தன்மையை குறிக்கும் மிக முக்கியமான குறியீட்டு எண்ணாகும். விவிலியத்தில் (பைபிள்) 700-க்கும் மேற்பட்ட முறை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த எண். இந்த எண். படைப்பின் 7 நாட்கள். 7 கொடிய பாவங்கள். 7 நற்பண்புகள். வெளிப்படுத்தல் புத்தகத்தில் 7 முத்திரைகள்.

யூத மதம் - மெனோராவிற்கு 7 கிளைகள் உள்ளன. ஓய்வு நாள் என்பது 7-வது நாள்.

இஸ்லாம் - எண் 7 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், தெய்வீகக் குறியீடாகவும் கருதப்படுகிறது. இது படைப்பு, வழிபாட்டு முறைகள் மற்றும் வானியல் தொடர்பில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 7 வானங்கள். 7 பூமிகள். ஹஜ்ஜின் போது யாத்ரீகர்கள் கஃபாவை 7 முறை சுற்றி வருகிறார்கள்.

பௌத்தம் - எண் 7 என்பது ஆன்மீக விழிப்புணர்வு, முழுமை மற்றும் பிறப்பு-இறப்பு சுழற்சியைக் குறிக்கும் ஒரு புனிதமான, குறியீட்டு எண்ணாகக் கருதப்படுகிறது. புத்தர் பிறந்த பிறகு, அவர் 7 அடிகள் எடுத்து வைக்கிறார்அவருக்குக் கீழே தாமரை மலர்கள் பூக்கின்றன.

சமண மதம் - எண் 7 சமணத் தத்துவத்தின் (தத்வா) 7 கொள்கைகளை குறிக்கிறது. இவை ஆன்மா மற்றும் கர்மவினை பற்றிய உண்மைகளை விளக்குகின்றன.

எல்லா மதங்களும் ஒன்றைத்தான் சொல்கின்றன. அப்புறம் ஏனுங்க இந்த ஜனங்க இப்படி "மதம்" பிடிச்சு சண்டை போட்டுக்கறாங்க?  

இதற்குமே ரொம்ப நான் உள்ளே செல்லவில்லை. =======> விருப்பம் உள்ளவர்கள் இங்கு வாசித்துக் கொள்ளலாம்.<=========

77777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

கடுகைத் துளைத்து ஏழு கடல் புகட்டி, குறுகத் தரித்த திருக்குறளை இந்த ஏழு என்ற எண்ணை வைத்துதான் ஆராய்ச்சி செய்த நம் டிடி அதை எழுதிவந்தார் என்பதும்  உங்கள் எல்லோருக்கும் தெரியும்! நினைவிருக்கிறதா? அவரைத்தான் காணவில்லை.

7777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

போதும் கீதா, வகுப்பு எடுத்தது! 

ஓகே ஓகே!...இதோ ... Cool...Cool....Relax.... 

சமீபத்தில் நடந்த நிகழ்விற்குச் சென்றிருந்த போது, நிகழ்வுக்கு வந்திருந்த அப்பாவின் நெருங்கிய உறவுகள், நாங்கள் இருந்த அறைக்கு வந்து அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தனர். கூடவே நிகழ்வுகளுக்கு இடையில் ஓய்வு எடுக்கவும் உடை மாற்றிக் கொள்ளவும்தான். வெயில். மின்விசிறி சூட்டைத்தான் விசிறியது. அப்பாவுக்காக ஏசி போடவில்லை. உறவுகளில் ஒரு இளையவர், எல்லோருக்கும் ஏழு சுவை கரும்பு ஜூஸ் (இஞ்சி, எலுமிச்சை, புதினா, கருப்பு உப்பு, மாங்காய், இளநீர், பழச் சுவைக்கு ஏதேனும் ஒரு பழம்) யாருக்கெல்லாம் வேண்டும் கையைத் தூக்குங்கள். தாத்தா உனக்கு கரும்பு ஜூஸ்? என்று அருகில் சென்று அவருக்குக் கேட்கும்படி பேசிக் கேட்டதும், 

"கரும்பு ஜூஸா? எனக்கு சக்கரை போடாம கொண்டு வா." !!!!!!

அறையில் எழுந்த சிரிப்பு அதிர்ந்து அடங்க ரொம்ப நேரம் ஆகியது.

77777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

ஏழு ஸ்வரங்களுக்குள் கீதம்! ஏழு ஸ்வரங்களின் சங்கமம்!

எந்த ஒரு புகழ் வெளிச்சத்திலும், மீடியாக்களிலும் இல்லாத ஆனால் மிகவும் திறமை வாய்ந்த கலைஞர்கள் நம்மூரில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கும் தெரியும்தான்.

இங்கு, பெரும்பாலும் பூம் பூம் மாட்டுடன் பெண்கள் வருகிறார்கள். சும்மா மாட்டோடு வந்து காசு கேட்பார்கள். ஆனால், ஆண்கள்  நாதஸ்வரம் அல்லது புல்லாங்குழல் வாசித்துக் கொண்டே ஒவ்வொரு வீடாக வருகிறார்கள். மாதத்தில் ஒரு முறை எனலாம். சில வீடுகளில் இந்த மாடுகளுக்குப் பூ வைத்து குங்குமம் சந்தனம் எல்லாம் இட்டு தொட்டுக் கும்பிட்டு, மாட்டிற்குப் பழம், அவருக்குப் பணம். கொடுக்கிறார்கள்! Regular Customers!

அப்படி அவர்கள் வந்த போதெல்லாம் சில்லறை நோட்டுகள் இல்லாததால் அவர்களிடம் வாசிக்கச் சொல்லி காணொளி எடுக்க முடியவில்லை. மறைமுகமாக எடுத்திருக்கிறேன். சில்லறை நோட்டுகள் வைத்திருக்கும் போது அவர் வரமாட்டார்.  அவர் வரும் போது என்னிடம் இருக்காது.

இந்த வீட்டிற்கு வந்த பிறகு. நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த போது ஒரு தெருவில் காணொளியில் இருக்கும் கலைஞர் வாசித்துக் கொண்டே வந்தார். பையில் சில்லறை நோட்டு இருந்தது. நீட்டினேன். அவர் அதை எதிர்பார்த்திருந்திருந்தார் போலும். கொடுக்கும் போதே ஒரு பாட்டு வாசிக்க முடியுமா, நான் வீடியோ எடுத்துக் கொள்ளட்டுமா என்றதும், வாசித்தார்.

என்னடா நம்ம எசமான் வாசிச்சுக்கிட்டே நடக்கறவரு இப்படி இங்கயே நிக்கிறாரே என்று மாடு யோசித்தது போலும். மாட்டிற்குப் பழக்கமில்லாத ஒன்று. அதன் கண்களில் மற்றொரு வீட்டில் தட்டில் பழங்களுடன் ஒரு பெண்மணி நிற்பது தெரிந்துவிட்டது. கண்ணில் பட்டது வாய்க்குக் கிடைக்காம போய்டுமோன்னு பொறுமையை இழந்து கால்களை மாற்றி மாற்றி வைக்கத் தொடங்கியது. எஜமானருக்கும் அடுத்த வரும்படி ரெடி! ஒரு சரணத்துடன் முடித்துக் கொண்டு அவ்வளவுதான் என்று தலையை ஆட்டிவிட்டு நடையைக் கட்டினார்! முடிந்தால், விருப்பமிருந்தால் கேட்டுப் பாருங்க. 

முதலில் இருக்கும் காணொளியும், இரண்டாவது இருக்கும் காணொளியும் இரண்டுமே இசைதான்!

A Busker - வீதி இசைக்கலைஞர் எந்தவித பக்க வாத்தியமும் இல்லாமல் திறந்தவெளி இசை. 



Orchestral music - சேர்ந்திசை. ஓர் அறைக்குள் பல வாத்தியங்களுடன் இசைக்கோர்வைகளுடன், இசைக்குறியீடுகளுடன் உருவாகும் இசை.

https://www.youtube.com/watch?v=0UQCBQzm2DE

படத்தின் பெயர் - கொஞ்சிப் பேசலாம்; இயக்குநர் - ஆர் காளீஸ்வரன்; கதாநாயகன் - வம்சி; கதாநாயகி - ஸ்ரீஜா; ராஜ்கிரண், விஜயகுமார், அவினாஷ் இவர்களும் இப்படத்தில் கதாபாத்திரங்கள்; இசை - இளையராஜா; பாடலாசிரியர் - முத்துலிங்கம்; பாடியவர்கள் - கார்த்திக், சாதனா சர்கம். படம் வெளிவந்த வருடம் - 2003 இப்பாடல் ஓகே என்றுதான் சொல்வேன். ஆஹா ஓஹோ என்று சொல்லிப் பிரித்து மேயும்படி இல்லை.

இப்படி ஒரு படம் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. (இல்லைனா மட்டும் உனக்கு அப்படியே எல்லா சினிமா பத்தியும் தெரிஞ்சுரும் பாரு!!! ஹிஹிஹி) 

"ஏழு கடல் நாட்டிலொரு ராணி இருந்தாள்" இப்பாடல் சங்கிலி எனும் திரைப்படத்தில், எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் இசையில், எஸ் பி ஷைலஜா, பி எஸ் சசிரேகா பாடியா பாடல். இப்பாடல் கேட்பதற்கு சுகம். கொஞ்சம் பழையபாடல் என்பதால்.

மற்றொரு பாடல் "ஏழு வண்ணத்தில்" என்று கே எஸ் ரவிகுமார் இயக்கிய ஜக்குபாய் திரைப்படத்தில், ரஃபி எனும் இசையமைப்பாளரின் இசையில் ஹரிஹரன் பாடிய பாடல். இசை மிகவும் சுமார் என்பதால் பகிரவில்லை.

இங்கு பகிர்ந்திருக்கும் பாடல்கள் எதுவுமே நான் இதுவரை கேட்டதில்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். பதிவிற்காகத் தேடிய போது கிடைத்துக் கேட்டவைதான். 

777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

ஏழாவது மனிதன்

தமிழில், இயக்குனர் ஹரிஹரன் இயக்கிய "ஏழாவது மனிதன்" என்ற ஒரு திரைப்படம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். பல விருதுகள் வாங்கிய படம். கலைப்படமோ? அதில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் அனைத்தும் பாரதியார் பாடல்கள். 

அதே தலைப்பில் ஒரு பிரபலமான ஜப்பானிய சிறுகதை. கீழே சொல்லியிருக்கும் அக்கதை பற்றிய விவரங்களுக்கும் இப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தலைப்பைத் தவிர! 

ஹருகி முரகாமி எனும் புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் எழுதிய "ஏழாவது மனிதன்" (The Seventh Man) ஒரு பிரபலமான அருமையான ஜப்பானிய சிறுகதை. 1996 ல் ஜப்பானிய மொழியில் முதன் முதலாக வெளியானது. அதன் பின் 1998ல் Granta எனும் ஆங்கில Journal சஞ்சிகையில்/ஆய்விதழில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. இது பின்னர் 2005-ஆம் ஆண்டு வெளியான "Blind Willow (ப்ளைன்ட் வில்லோ), Sleeping woman (ஸ்லீப்பிங் வுமன்)" என்ற தொகுப்பில் இடம்பெற்றது.

இக்கதையின் கருப்பொருள் - குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட மன அதிர்ச்சி மற்றும் உயிர் பிழைத்தவரின் குற்றவுணர்வு இவற்றை ஆராய்கிறது என்பதால் என் கவனத்தைப் பெற்று ஈர்த்த கதை.

ஒரு பேரலைக்கு (Tsunami) நண்பன் பலியானதால், வாழ்நாள் முழுவதும் பயத்துடனும் குற்ற உணர்ச்சியுடனும் வாழும் ஒருவரின் கதையை விவரிக்கிறது. பயத்தை எதிர்கொள்வதையும், அதிர்ச்சியிலிருந்து மீள்வதையும் இக்கதை மிகவும் ஆழமாகப் பேசுகிறது. ஏன் குற்ற உணர்ச்சி, பயம்?

ஏழாவது மனிதன் தலைப்பின் காரணம் - கதை சொல்லிக்குப் பெயர் இல்லை. ஏழாவது மனிதன் என்றே குறிப்பிடுகிறார் ஆசிரியர். காரணம், ஒரு குழுவாக அமர்ந்து ஆட்கள் சிலர் தங்களது வாழ்க்கையில் நடந்த விசித்திரமான அல்லது பயமுறுத்தும் சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வதாக இக்கதை தொடங்குகிறது. அந்த வரிசையில், ஏழாவது நபராக எழுந்து நின்று தனது கதையைச் சொல்பவர் இவர். எனவே, அந்த சபையில் அவர் எத்தனையாவது நபர் என்பதைக் குறிக்கவே இப்படி ஆசிரியர் பயன்படுத்துகிறார். 

மேலும் பெயர் என்று வைத்து ஒரு குறிப்பிட்ட தனிமனிதராகத் தெரியாமல், அதிர்ச்சிகரமான நிகழ்வின் நினைவுகளால் பாதிக்கப்பட்ட எவரோ ஒருவராக இருக்க வேண்டும் என்றும், ஒரு பொதுவான அடையாளமாக, வாசிப்பவர்களுக்கு, இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உணர்வைத் தரலாம் என்பதற்காகவும் இப்படிச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர் என்றும் தெரியவருகிறது. மேலும் அவர் தன் அடையாளத்தை இழந்து ஓர் அதிர்ச்சியான சம்பவத்தின் நிலழிலிலேயே வாழ்ந்துவருவதாலும் பெயர் முக்கியமில்லாமல் போகிறது என்றும் சொல்லலாம்.

ஒரு செப்டம்பர் மாதம். மதியம். ஜப்பானின் கடலோர கிராமத்தில் கடலில் பேரலை (Tsunami) வருகிறது.  தன் நண்பன் 'K' என்பவனை அலையிடமிருந்து காப்பாற்ற முடியாமல், பயந்து ஓடித் தப்பிக்கிறான். அந்தக் காட்சியின் பயங்கரம் அவனை, அவன் வாழ்க்கையை வாழவிடாமல் நீண்ட காலத்திற்குத் துரத்துகிறது, வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றி முடக்கிவைத்துவிடுகிறது. பல வருடங்களுக்குப் பிறகு, தன் கடந்த காலத்தை எதிர்கொண்டு, பயத்தை வென்று, அந்த கடற்கரைக்குத் திரும்பிச் சென்று மன அமைதி அடைகிறான் என்பதுதான் கதை.

பயம் என்பது நம்மை நாமே சிறைக்குள் தள்ளிக் கொள்ளும் அபாயமான விஷயம் என்பதையும், அதை தைரியமாக எதிர்கொள்வதே விடுதலை என்பதையும் உணர்த்துகிறது இக்கதை. கதையின் முக்கிய அம்சம் பயம், குற்ற உணர்வு, அவற்றிலிருந்து மீளல். கொஞ்சம் உளவியல் ரீதியான தத்துவார்த்தமான கதை எனலாம்.

ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்தில் இக்கதை இடம் பெற்றுள்ளது என்றும் அறிய முடிகிறது. எனவே, உளவியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியிலும் அலசுகிறார்கள் இக்கதையை. கதை ஆங்கிலத்தில் இருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் வாசிக்கலாம் ========> இங்கு <========

77777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

பொய்மை கொண்ட கலி

காலையில் எழுந்த ரவிக்கு, காஃபி கைக்கு வரவில்லை.   

அப்போதுதான் உரைத்தது, தான் ஒரு முட்டாள்தனமான விஷயத்திற்காக சந்தோஷியிடம் தாறுமாறாக அநாகரீகமான வார்த்தைகளை வீசியதும், அவள், தன் அம்மா வீட்டிற்குச் சென்றதும்.

இப்படி நடப்பது ஒரு முறையா இரு முறையா? ஆனால் இம்முறை கொஞ்சம் தீவிரமாகிவிட்டதோ என்ற குற்ற உணர்ச்சியில் அவளை அழைக்கவில்லை.

அவளும் அழைக்கவில்லை. ஒரே  கட்டிடத்தில்தால் இருவரின் அலுவலகமும் என்றாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் பேசிக் கொள்ளாமல் ஒருவாரம் ஆகியிருந்தது. (7 தினங்கள்).  

மாலை அவள் வீட்டிற்கு நேரே போய்விடலாம் என்று நினைத்து அலுவலகத்துக்குச் சென்றவனிடம், நண்பன், ஷார்ட்ஸ் ஒன்றைக் காட்டினான்.

“வீட்டில், பல அவதாரங்கள் எடுக்கும் பெண்களை, பாரதி சக்திவடிவமாகக் கொண்டாடியதை, மேடை தோறும்  முழங்கியும், பெண்ளைப் போற்றி கவிதையும் எழுதித் தள்ளும்  ஹிப்போக்ரைட்ஸ் ஆண்களே, பாரதி போற்றிய சக்தி வடிவப் பெண்களில் உங்கள் மனைவியும் ஒருத்தி என்பதை நினைவில் கொள்ளுங்கள்"

சந்தோஷி முழங்கிக் கொண்டிருந்தாள்.

ஒரு புகைப்படத்தைக் காட்டி அதைப் பற்றி extempore போட்டியில் சந்தோஷி முதல் பரிசு பெற்றிருப்பதையும் சொன்னான், நண்பன்.

"ஹிப்போக்ரைட்ஸ்"! நெற்றிப் பொட்டில் சுட்டது அவள் வார்த்தை. ரவியின் போலிமுகமூடி உறுத்தியது.

பெண்களை சக்தி என்று போற்றி தான் எழுதிய கவிதை பிரபல பத்திரிகையில் வெளிவந்ததும், கிடைத்த பாராட்டுகளும் அவனுக்கு நினைவுக்கு வந்து அவன் மனதை உறுத்திட, பதில் சொல்லாமல் சென்றவனை நண்பன் புரியாமல் பார்த்தான்.

(விருட்சம் திரு அழகியசிங்கர், 20 வரிக் கதை எழுதச் சொல்லி அவ்வப்போது நிறைய படங்கள் கொடுத்துப் பயிற்சி கொடுக்கிறார். அவை அனைத்தையும் தொகுத்துப் புத்தகமாகவும் கொண்டு வருகிறார். ஸ்ரீராம் அங்கு நிறைய எழுதியிருக்கிறார். நான் அக்குழுவில் இல்லை. எனவே ஸ்ரீராம் என்னிடம் பகிர்ந்த சில படங்களுக்கு நானும் பயிற்சியாக எழுதிப் பார்த்ததில் ஒன்று இது.)

-----------------------------------------------------------------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------------------------------------------------------------

Pond Heron - குளத்துக் கொக்கு. 



ஸ்ஸ்ஸ்பா....ஒரு வழியா முடிச்சாச்....

11 கருத்துகள்:

  1. கடைசி வரியே சொல்கிறது, வியாழனுக்கு பதிவு எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று. இருந்தாலும் நல்லா செய்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. குட்டி... என்ற வார்த்தை வந்த பிறகுதான் இது ஶ்ரீராம் வியாழன் அல்ல, கீதா ரங்கனுடையது என்று புரிந்தது. உங்களை வியாழன் பதிவு எழுதச் சொல்லி ஏழரையை இழுத்துவிட்டாரே என்று தோன்றியதால்தான் இன்று அதைப் பற்றியும் ஏழு பற்றியும் விசாரமா?

    பதிலளிநீக்கு
  3. ஜோதிடச் செய்திகளை தினமும் கேட்பவர்களையும், அவர்கள் சொல்லுவதை நம்பி அதே நிற உடைகளை அணிவது, பிரயாணம் போன்றவற்றைக் கடைபிடிப்பது என பலர் நடந்துகொள்கின்றனர்.

    மேட்டூரில் ஒருவர் தெரிந்தவரின் இன்ஸ்ட்டிடியூட்டுக்கு வந்து எழுதிக் கொடுத்து (தினபலன்), தட்டச்சு செய்யச் சொல்லி, பிறகு பத்திரிகைக்கு அனுப்புவாராம். சில நாட்கள் வர முடியலைனா, அவரிடம் நீங்களே பலன்களை மாத்திப்கோட்டு தட்டச்சு செய்து அனுப்பிடுங்க என்பாராம். இப்படி இருக்கிறது ஜோஸ்யம்.

    பதிலளிநீக்கு
  4. துவக்கத்திலேயே வித்தியாசம் புலப்பட்டது, Sriram & Nellai are not eligible என்னும் வாசகம் யோசிக்க வைத்தது, தொடர்ந்து படித்ததும், கீதா ரெங்கன் என்பது புரிந்து விட்டது. ரொம்ப நாட்களுக்கு முன்னரே எதிர்பார்த்தேன். வித்தியாசமாக கொண்டு வந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. //மேலும் அவர் தன் அடையாளத்தை இழந்து ஓர் அதிர்ச்சியான சம்பவத்தின் நிலழிலிலேயே வாழ்ந்துவருவதாலும்// நிழலிலேயே என்று வந்திருக்க வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
  6. ஏழு என்னும் எண்ணை குறிப்பிட்டு எடுக்க என்ன காரணம்?
    ஏழாம் எண்ணைப் பற்றி என்னுடைய அப்சர்வேஷன். பெரும்பாலும் மூத்த குழந்தைகள் ஏழாம் தேதி அல்லது மூன்றாம் தேதியில் பிறந்தவர்களாக இருப்பார்கள். பெண்களாக இருந்தால் நடுவிலோ, கடைசியாகவோ பிறந்திருந்தாலும் மூத்த மருமகளாக போவார்கள்(இப்போது பெரும்பாலும் ஒரே குழந்தையாக போய் விட்டதால் இது எப்படி சரியாகும்? என்ற கேள்வி வரலாம். *ஏழாம் தேதியில் பிறந்தவர்கள் பெற்றோர்களை வைத்து பராமரிப்பார்கள் என்றுதான் கூற முடியும்) மண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்காது. எம்.எஸ்., ஏ.ஆர்.ரஹ்மான், பாலமுரளி கிருஷ்ணா, கமல்ஹாசன் போன்றவர்கள் ஏழாம் எண்ணைச் சேர்ந்தவர்கள்.
    *7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் ஏழாம் எண்ணைச் சேர்ந்தவர்கள்.

    பதிலளிநீக்கு
  7. பெண் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் குரு இருந்தால் அந்தப் பெண் அம்மாவைப் பிரியவே மாட்டாள். அம்மா வீட்டோடு இருப்பாள் என்றும் சொல்வார்கள். பெண்கள் பிறந்த வீட்டோடு இருப்பது நல்ல விஷயம் கிடையாதே? அதனால் இதை தோஷம் என்றும் சொல்வார்கள். இதற்கு நேர் மாறாக ஆண்களுக்கு ஏழாம் வீட்டில் குரு இருந்தாலோ, அல்லது ஏழாம் வீட்டை குரு பார்த்தாலோ அவன் கர்ஜமாயாக அதாவது வேட்டகத்து மாப்பிள்ளையாகி விடுவான். அல்லது நெருங்கிய உறவில் திருமணம் நடக்கும்.

    பதிலளிநீக்கு
  8. ஏழாவது மனிதன் படத்தை இயக்கிய ஹரிஹரன் ஜி.எம்.பி. சாருக்கு மாமா மகன். ஒரு தொலைகாட்சி பேட்டியில் ஏழாவது மனிதன் என்று பெயர் வைத்ததற்கு காரணம் கூறினார், மறந்து விட்டது. நடிப்பு கல்லூரி ஆரம்பித்தார்.

    பதிலளிநீக்கு
  9. கடைசிப் படம் பிரமாதம்! மகன் அனுப்பியதா? நேற்று வெளியே சென்ற பொழுது இதே போன்ற காட்சியைப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  10. 20 வரிக் கதைகளை என்னால் ரசிக்க முடிவதில்லை. ஒரு பக்க கதையே சிறுகதையின் சிதைவு என்பார்கள், இந்த 20 வரி, 10 வரிக் கதைகளெல்லாம் சின்னாபின்னம். இந்தக் கதைகள் எனக்கு போன்சாய் மரத்தை நினைவூட்டும். நண்பர் ஒருவர் வீட்டில் அரச மரத்தையும், ஆல மரத்தையும் போன்சாய் வடிவில் பார்த்தபொழுது மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்படித்தான் இருக்கும் 20 வரிக் கதைகளை படிக்கும்பொழுதும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!